Wednesday, April 27, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 27 , 2011.


முக்கியச் செயதிகள் :

pmsony.jpg

புட்டபர்த்தியில் * இன்று இறுதிச் சடங்கு

புட்டபர்த்தி, ஏப். 26: முக்தியடைந்த ஸ்ரீ சத்யசாய் பாபாவின் பூதவுடல் புதன்கிழமை காலை 9 மணிக்கு புட்டபர்த்தியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

 இறுதிச் சடங்கின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.

 லட்சக்கணக்கானோர் அஞ்சலி:

 கடந்த ஞாயிறன்று பாபா முக்தியடைந்தார். பக்தர்கள் தரிசிப்பதற்கு வசதியாக அவது உடல் குல்வந்ந் அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. பாபாவை ஒருமுறை தரிசித்து விடவேண்டும் என்கிற ஆவலில் உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர்.

 தரிசனத்துக்கு இறுதிநாளான செவ்வாய்க்கிழமை மாலை வரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாபாவின் உடலை தரிசித்திருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர்.

 தரிசன நேரம் நீட்டிப்பு:
 பல கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் பல மணிநேரம் பொறுமையாகக் காத்திருந்து அவர்கள் பாபாவை தரிசித்துச் சென்றனர். முதலில் 2 வரிசைகளில் நிற்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காத்திருக்கும் நேரம் அதிகமாவதைக் கருத்தில் கொண்டு 4 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டன.

 மக்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த தரிசன நேரம், நள்ளிரவுவரை நீட்டிக்கப்பட்டது.

ஏற்பாடுகள் தயார்:

 இறுதிச் சடங்கை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. பாபாவின் மறைவுக்குப் பிறகு அதன் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது உரிய மரியாதையுடன் பாபாவின் இறுதிச் சடங்கை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் தெரிவித்தார்.

 இறுதிச் சடங்கின்போது பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக குருக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்மோகன், சோனியா:

 பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சாய்பாவுக்கு இறுதி மரியாதை செய்தனர். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வந்த அவர்கள், அங்கிருந்து காரில் பிரசாந்தி நிலையம் வந்தனர்.

 அவர்கள் இருவரும், பாபாவின் உடலருகே சிறிது நேரம் மெüனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். அவரது பாதங்களில் மலர்தூவி மரியாதை செய்த பின்னர் அங்கேயே 10 நிமிடங்கள் அமர்ந்திருந்து, பல்வேறு பக்திப் பாடல்களைக் கேட்டனர்.

 ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் அவர்களுடன் வந்திருந்தனர்.

 குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவ கெüடா, அவரது மகன் குமாரசாமி, இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பசில் ராஜபட்ச, விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

 கடந்த 30 ஆண்டுகளாக பாபாவின் பக்தராக இருப்பதாகத் தெரிவித்த மோடி, அவரது மறைவு தமக்கும் குஜராத்துக்கும் பேரிழப்பு என்றார்.
 பாதுகாப்பு காரணங்களுக்காக பாபாவின் உடலருகே செல்வதற்கு சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சுமார் 30 அடி தூரத்தில் இருந்தபடி தரிசிக்கவே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 அதிலும் உடலுக்கு நேராக நின்றபடி விடியோகிராஃபர் படம் பிடித்துக் கொண்டிருந்ததால், பாபாவின் முகத்தை பார்க்க முடியவில்லை என்று பலர் கூறக் கேட்க முடிந்தது. பிரதமரும் சோனியாவும் வந்த நேரத்தில் கெடுபிடி இன்னமும் அதிகமாக இருந்தது.


* இறுதிப் போர் குறித்து பொய் தகவல்களைச் சொன்னது... 40000 தமிழரைக் கொன்றது இலங்கை! - ஐநா

26-tamils-bodies1200.jpg

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான ன விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

முன்பு வெளிவந்த அத்தனை தகவல்களுமே உறுதியாகியுள்ளது, இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்க்கும்போது. 

இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடககப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர். 

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம். 

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. 

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு 

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம். 

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.


தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே. 

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

-இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

உலகச் செய்தி மலர் :

* கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்தியா மெத்தனம்!-விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே

26-julian-assange9-200.jpg

டெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என்றும், அதுகுறித்து தகவல் தெரிந்தும் பணத்தை மீட்க இந்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது. இதனை மீட்க வேண்டும் என பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன

இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள், கணக்குகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இதுகுறித்து கூறிய ஜூலியன் அசாஞ்ஜே, "நாங்கள் வெளியிட்டு வரும் கறுப்பு பணம் விவகாரம் குறித்த தகவல்களில் இந்திய அரசு மட்டும்தான் மெத்தனப் போக்கை பின்பற்றிவருது. 

இதே போலே சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை வைத்திருக்கும் ஜெர்மனி மிக வேகமாக சுவிஸ் வங்கியிலிருந்து அப் பணத்தை மீட்டு வருகிறது.

ஆனால் இந்திய அரசு இந்த விசயத்தில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் இன்னும் பலரது கணக்கு விவரங்களை வெளியிடவிருக்கிறோம். எனவே இந்திய மக்கள் நம்பிக்கையோடு காத்திருங்கள். கறுப்புப் பணம் பதுக்கியிருப்போர் பற்றி விவரங்கள் உங்களுக்குத் தெரிய வரும்," என்று அசாஞ்ஜே தெரிவித்தார்.

* இந்தோனேஷியா தீவுகளில் நிலநடுக்கம் 

இந்தோனேஷியா ஜாவா தீவுகளில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் குலுங்கின. 

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.அதே சமயம் சேத விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

* மும்பை தாக்குதல்: அமெரிக்க குற்றப்பத்திரிகையில் மேலும் 4 பாகிஸ்தானியர்

சிகாகோ, ஏப்.26: மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் 2-வது குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தாக்கல் செய்தார்.

 அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் 4 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேஜர் இக்பால், சாஜித் மிர், மஜர் இக்பால், அபு குஹாபா ஆகிய 4 பேரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இதில் சாஜித் மிர், மஜர் இக்பால், அபு குஹாபா ஆகிய 4 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆனால் மேஜர் இக்பாலை பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. ஆனால் அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் மும்பை தாக்குதலை நிகழ்த்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக இந்தியா குற்றம்சுமத்தியது.

 இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் பிப்ரவரி 2010-ல் ஒப்படைத்தது. இந்தியா அளித்த ஆவணத்தில் மேஜர் இக்பால், மேஜர் சமிர் அலி என்ற இரு ராணுவ அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தியிருந்தது.

இந்நிலையில் சிகாகோ நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் மேஜர் இக்பால் பெயர் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. அவருக்கு எதிராகப் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 2008-ல் மும்பையின் பல்வேறு இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.

 இந்தச் சம்பவத்தில் அமெரிக்கர்களும் உயிரிழந்ததால் இதை அந்நாடு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இத்தாக்குதலுடன் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறது.

 இவர்கள் இருவரும் மும்பை தாக்குதல் குறித்து அவ்வப்போது புதிய தகவல்களை அளித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை அளித்த தகவல் மூலம் மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது.

 இப்போது டேவிட் கோல்மன் ஹெட்லி அளித்த தகவலின் பேரிலேயே மேஜர் இக்பால் பெயரும் 2-வது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

* நாசா போட்டி: 4 இந்திய மாணவர்களுக்கு முதல் பரிசு

ரூர்கேலா, ஏப். 25: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறவனமான நாசா நடத்திய "விண்வெளி குடியேற்ற ஆய்வுக் கட்டுரைப் போட்டிகள் - 2011'-ல் இந்திய மாணவர்கள் 4 பேர் முதல் பரிசு பெற்றுள்ளனர்.

 தில்லி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த சித்தார்த்த திரிபாதி, அக்ஷாத் தத், நிசார்க் பெஹ்ரா, மிருணாள் சௌத்ரி ஆகியோர் பரிசை தட்டிச் சென்றுள்ளனர். இவர்களில் மிருணாள் சௌத்திரி மட்டும் 8-ம் வகுப்பு மாணவர். மற்ற அனைவரும் 12-ம் வகுப்பு மாணவர்கள்.

 இதில் "சங்க்ரிலா' என்ற தலைப்பில் தங்களது ஆய்வுக் கட்டுரையை சித்தார்த், அக்ஷாத், நிசார்க் ஆகிய மூவரும் இணைந்து சமர்ப்பித்தனர். இவர்களுக்கு 9 -12 ம் வகுப்பு மாணவரிகளுக்கான பிரிவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

 இவர்கள் தங்களது கட்டுரையில், சுமார் 20 ஆயிரம் பேர் விண்வெளியில் நிரந்தரமாக தங்குவதற்கான வழிமுறைகள், அதற்கான ஏற்பாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

 விண்வெளியில் தொழில் நிறுவனங்கள், அரசு இயந்திர செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு, உயிரி மறு சுழற்சி முறை, பணப்பரிமாற்ற முறை போன்றவை பற்றி அவர்கள் தங்களது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் பூமியில் அல்லாத வேறு பல வசதிகளுடன் விண்வளியில் சொகுசு வாழ்க்கை வாழ்வது பற்றியும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

 8-ம் வகுப்பு மாணவி மிருணாள் சௌத்ரிக்கு ஓவியப் பிரிவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. விண்வெளியில் குடியிருப்புகள், பொழுபோக்கு நிலையங்கள், ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், உணவு, உடை, சுற்றுச் சூழல் குறித்த அம்சங்கள், கழிவுகள் மேலாண்மை போன்றவை குறித்து தெளிவாகவும் திறம்படவும் விளக்கும் வகையில் படங்கள் வரைந்திருந்தார்.

 மே மாதம் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச விண்வெளி மேம்பாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இந்த 4 மாணவர்களுக்கும், அவர்களை வழி நடத்திய பள்ளியின் அறிவியல் ஆசிரியர் பிஜய் பகதூர் மாத்தூருக்கும் நாசா அழைப்பு விடுத்திருப்பதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

*குண்டுவீச்சில் கடாஃபி மாளிகை சேதம்

திரிபோலி, ஏப்.25: லிபிய தலைநகர் திரிபோலியில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் அதிபர் மம்மர் கடாஃபியின் மாளிகை கடுமையாக சேதமடைந்தது.

 விமானம் மூலம் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் காயமடைந்ததாகவும் இதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனத்தின் நிருபர் தெரிவித்துள்ளார். கட்டட இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாஃபியை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கடாஃபியின் அலுவலகம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

 நேட்டோ படை விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு பாப்-அல்-அஸிஸியா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தின. இப்பகுதியில்தான் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. தலைநகரை சுற்றி வட்டமடித்த விமானங்கள், அங்கிருந்து குண்டுகளை வீசி தாக்கின. இந்தத் தாக்குதலில் திரிபோலியில் உள்ள பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லிபிய அதிபர் மம்மர் கடாஃபியின் 41 ஆண்டுக்கால ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது.
தேசியச் செய்தி மலர் :

* கல்மாடி மீது செருப்பு வீச்சு-8 நாள் சிபிஐ காவல்!

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த பெரும் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை, டெல்லி நீதிமன்றத்தில் கல்மாடியை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தியபோது, இச்சம்பவம் நடைபெற்றது. செருப்பு வீசிய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கபில் தாகூர் என்று தெரியவந்தது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கல்மாடியை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது.

ஜாமீன் மறுப்பு:

இதையடுத்து கல்மாடி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நடந்தபோது, கல்மாடியின் வக்கீல், அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் மீது குற்றம் சாட்டிப் பேசினார்.

அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்து டெண்டர்களையும் கில்தான் முடிவு செய்தார். எனவே இதில் கல்மாடிக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதாடினார்.

பின்னர் கல்மாடியை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட கோர்ட், கல்மாடிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரை 8 நாள் சிபிஐ காவலில் அனுமதித்து உத்தரவிட்டது.

கல்மாடி காங்கிரசிலிருந்து நீக்கம்:

இந் நிலையில் கல்மாடி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

* சாய்பாபா உதவியாளர் உயிருக்கு அச்சுறுத்தல்

மறைந்த சத்ய சாய்பாபாவின் உதவியாளர் சத்யஜித்தின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவுத் துறை எச்சரித்ததையடுத்து, அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சத்யஜித், பல ஆண்டுகளாக சாய்பாபாவின் உதவியாளராக இருந்து வந்தார்.

சாய்பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 

சாய்பாபாவுக்கு முறையாக உணவு அளிக்கவில்லை.நிறைய வலி நிவாரண மருந்துகளை அளித்துள்ளார்.அதனால்தான் சாய்பாபாவின் உடல் மோசமானது என்பது உள்பட சத்யஜித் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சாய்பாபாவுக்கு வலி நிவாரண மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை சாய்பாபா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

சாய் அறக்கட்டளை காசோலைகளில் சத்யஜித் கையெழுத்திட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.மேலும் ஆசிரம விவகாரங்களை தீர்மானிப்பதில் மிகவும் அதிகாரம் மிக்க நபராக சத்யஜித் கருதப்பட்டு வருகிறார்.

சத்யஜித்துக்கு ஆசிரமத்திலும், வெளியிலும் எதிர்ப்பாளர்கள் உள்ளனர்.இந்நிலையில் சாய் பாபா மறைவின் எதிரொலியாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல்ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* கடற்கொள்ளைகளை தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்கு: பிரதிபா பாட்டீல் 

இந்தியப் பெருடங்கடலில் கடற்கொள்ளைகளை தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது என்று குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.

ஐந்து நாள் பயணமாக மொரீசியஸ் நாட்டிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைகளை தடுப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது என்றும், இந்தியப் பெருடங்கடலில் கடற்கொள்ளைகளை தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது என்றும் தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு மொரீசியஸ் ஒத்துழைப்பு தந்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெற மொரீசியஸ் தெரிவித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

* ஜெய்தாபூர் பிரச்சனை: பிரதமருடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு  

ஜெய்தாபூர் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவாண், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் ஜெய்தாபூரில் மின் உற்பத்திக்காக அணு உலை அமைக்கும் திட்டத்துக்கு உள்ளூர் மக்களும், சிவசேனா கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், பிரதமர் மன்மோகன் சிங்கை சவாண் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*3-வது கட்டம்: மேற்கு வங்கத்தில் இன்று 75 தொகுதிகளில் வாக்குப் பதிவு

கொல்கத்தா, ஏப்.26: மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு புதன்கிழமை (ஏப்ரல் 27) மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 கொல்கத்தா, வடக்கு 24 பர்கானா, தெற்கு 24 பர்கானா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 75 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. களத்தில் 479 வேட்பாளர்கள் உள்ளனர். மொத்தம் 1.44 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.

 இதில் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி, நிதி அமைச்சர் அசிம் தாஸ்குப்தா, வீட்டு வசதித் துறை அமைச்சர் கெüதம் தேவ், போக்குவரத்துத் துறை அமைச்சர் ரஞ்சித் குந்து, கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் முக்கியமானவர்கள்.

 முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலர் மனீஷ் குப்தா போட்டியிடுகிறார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி முன்னணி கூட்டணிக்கும், திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

 மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 17,792 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றம், மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

 வாக்குச் சாவடிகளைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை 6 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதியும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 23-ம் தேதியும் நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 27-ம் தேதி நடக்கிறது.

 நான்காம் கட்டம் மே 3, ஐந்தாம் கட்டம் மே-7, ஆறாம் கட்டத் தேர்தல் மே 10-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

* கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க பொதுமன்னிப்புத் திட்டத்தை அமலாக்க வேண்டும்: தொழிலக கூட்டமைப்புத் தலைவர் வேண்டுகோள்

புதுதில்லி, ஏப்.26: நமது நாடு 10 சதவிகித வளர்ச்சியை பெற தொழிவ்துறையினர் கூறும் 5 அம்ச தொழில்கொள்கையை பின்பற்ற வேண்டும்.கறுப்புப்பணத்தை வெளிக்கொணர ஒரே ஒரு முறை பொது மன்னிப்புத்திட்டத்தை அமலாக்கலாம் என இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு (சிஐஐ)புதிய தலைவர் பி.முத்துராமன் தெரிவித்தார்.

 அவர் தில்லியில் திங்கள்கிழமை தனது புதிய பதவிப்பொறுப்பை ஏற்ற பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் அதை தாங்களே முன்வந்து அறிவித்து வரிசெலுத்த ஒரு முறைமட்டும் பொது மன்னிப்புத்திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கலாம். அந்த திட்ட அமலாக்கம் முடிந்த பின்னர் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஒரே ஒரு முறை மட்டும்தான் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற நிபந்தனையைக்கூட அரசு விதித்துக்கொள்ளலாம். இது எனது தனிப்பட்ட கருத்துமட்டுமல்ல. தொழில்நிறுவனங்களின் கருத்தும் இதுதான்.

 நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 10 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமானால் நாங்கள் (தொழில்துறையினர்) சொல்லும் 5 அம்சத் திட்டத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.

 அரசிடமிருந்து தொழில்நிறுவனங்கள் பெற வேண்டிய அனுமதிகளைப் பெறுவதும் இன்னும் சவாலான விஷயமாகவே இருக்கிறது. அரசின் உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தரப்பட்டுள்ள சுயமாக முடிவெடுக்கும் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் இவை தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன.
 ரூ.1 கோடி போலி முத்திரைத்தாள் பறிமுதல்: 4 பேர் கைது*

பாட்னா, ஏப்.26: பாட்னாவில் ரூ.1 கோடி மதிப்பிலான போலி நீதிமன்ற முத்திரைத்தாள்கள் போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 பாட்னா நகரக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி.ராவ் லா ண்டே இது பற்றிக் கூறுகையில், தனது தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த தேடுதல் வேட்டையின் போது இந்தப் போலி முத்திரைத் தாள்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தார். அங்கிருந்து அச்சு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் குற்றத்தில் சம்பந்தமுடைய 4 பேர் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணை நடந்து வருவதாகவும் ராவ் தெரிவித்தார்.

மாநிலச் செய்தி மலர் :

large_231299.jpg

* குறையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்: பாலின விகித ஏற்றத்தாழ்வால் விபரீதம்

கோவை : இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிகக்குறைந்து விட்டது. ஆண், பெண் பாலின விகிதம் மிகுந்த வேறுபாடுகளுடன் இருக்கும் நிலையில் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கவலையை அதிகரிப்பதாக உள்ளது. இதே நிலை தொடருமானால், சமூக உறவுகளில் விரும்பத்தகாத மாற்றங்களை வருங்கால தலைமுறை சந்திக்க நேரிடும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1872ல் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இக்கணக்கெடுப்பின், அடிப்படையிலேயே பல்வேறு திட்டங்களும் தீட்டப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், கணக்கெடுப்பில் திரட்டப்படும் தகவல்களே, அனைத்துத் திட்டமிடல்களுக்கும் முதுகெலும்பு. கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகை 121 கோடி என, தெரியவந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 18 கோடி 

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1872ல் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இக்கணக்கெடுப்பின், அடிப்படையிலேயே பல்வேறு திட்டங்களும் தீட்டப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், கணக்கெடுப்பில் திரட்டப்படும் தகவல்களே, அனைத்துத் திட்டமிடல்களுக்கும் முதுகெலும்பு. கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகை 121 கோடி என, தெரியவந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 18 கோடி அதிகரித்திருக்கிறது.மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது. அதேசமயம் புள்ளிவரங்களின் மற்றொரு பகுதி ஜீரணிக்க முடியாத கசப்பைத் தருகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஆண், பெண் பாலின விகிதம் 1000:940 ஆக இருக்கிறது. இந்த விகிதம் கடந்த 2001ல் 1000:933 ஆக இருந்தது.

ஆனால், ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, அதே வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகப்பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த 1961ம் ஆண்டில் 1000:978 என்ற விகிதத்திலும்; 2001ல் 1000:927 ஆக இருந்த சிறுவர், சிறுமியரின் பாலின விகிதம் தற்போது 1000:914 என்ற அளவை எட்டி இருக்கிறது. ஆறுவயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையே 15.88 கோடிதான். இது 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 50 லட்சம் குறைவு.சிறுமிகளின் எண்ணிக்கை இந்த அளவு குறைந்திருப்பது, எதிர்காலத் தலைமுறைக்கு சமூக உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். திருமண உறவுகளில் இந்த விகிதாச்சாரம் எதிரொலிப்பதால், வருங்கால தலைமுறை சமூக உறவுகளில் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் ஏற்படும்."பாலின விகிதம் இப்படிச் சரிந்தால், ஒரு தலைமுறையே ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் அபாயம் இருக்கிறது' என்ற மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவின் கருத்து, முகத்தைச் சுளிக்க வைப்பதாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

இளம் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, அவர்களின் திருமணத்துக்காக செலவிடப்படும் தொகை, ஆண் குழந்தை வாரிசுரிமை மோகம் போன்றவை பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டதற்கு காரணம். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தானாக குறையவில்லை; குறைக்கப்பட்டிருக்கிறது.பெண் சிசுக்கொலை குறைந்திருக்கிறது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை நகரங்களில் இன்னும் தாரளமாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.ஆண், பெண் பாலின விகிதத்தில் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு துரித நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பெண் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்க, கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டும். பெண் சிசுக்கொலை மீதான கண்காணிப்பை மேலும் இறுக்க வேண்டும். கலாசாரத்தில் சிறந்த நாடு, நதிகளுக்கும், நிலத்துக்கும் பெண் பெயரைச் சூட்டி பெருமிதம் கொள்ளும் நாடு என வெற்றுப் பரப்புரைகள் இனி உதவாது. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் அதிகரிக்கப்பட்டு, பெண் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். இல்லையெனில் எப்போதும் இல்லாத கலாச்சார சீரழிவை அடுத்த தலைமுறை எதிர்கொள்ள நேரிடும்

* ஒவ்வொரு வீட்டுக்கும் 4 சி.எப்.எல்., பல்புகள் இலவசம்: மின்சாரம் சேமிக்க ஏற்பாடு

large_231295.jpg

தமிழகம் முழுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும், மத்திய அரசு திட்டத்தில், நான்கு சி.எப்.எல்., பல்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, மாநிலம் முழுவதும், 2 முதல், 5 மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில், குண்டு பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதில், 60 வாட்ஸ் குண்டு பல்பு, தினமும் ஒரு மணிநேரம் எரிந்தால், 65 கிராம் கரியமிலவாயு வெளியேறுவதுடன், மாதத்தில், 1.8 யூனிட் செலவாகும்.அதேநேரம், 15 வாட் சி.எப்.எல்., பல்பு, தினம் ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதம் எரிந்தால், 0.45 யூனிட் மட்டுமே செலவாவதுடன், 16 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியேற்றுகிறது.தமிழகத்தில் ஒன்றரை கோடி, வீட்டு மின் இணைப்பு உள்ள நிலையில், அனைவரும் சி.எப்.எல்., பல்பு பயன்படுத்தினால், 1,000 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் மிச்சப்படுத்தலாம். மேலும், குண்டு பல்புகளை விட, சி.எப்.எல்., பல்புகளில் கரியமிலவாயு வெளியேற்றம் குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

இதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சி.எப்.எல்., பல்புகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் உபயோகத்தை அதிகரித்து, மின் உபயோகத்தை குறைக்க, மத்திய அரசு, நாடு முழுவதும் ஒவ்வொரு வீடுகளுக்கும், சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்பது மண்டலங்களை, இரண்டாக பிரித்து, முதல்கட்டமாக, விழுப்புரம் மின் மண்டலத்தின் சில பகுதியில், சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், மற்ற மண்டலங்களிலும், இலவச சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஈரோடு மண்டலத்தில் முதல்கட்டமாக, சேலம், கோபி, நாமக்கல், மேட்டூர் மின் வினியோக வட்டங்களில் உள்ள வீடுகளிலும், அடுத்த கட்டமாக, ஈரோடு வட்டத்திலும், சி.எப்.எல்., பல்புகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. ஒரு வீட்டுக்கும், நான்கு, 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படவுள்ளன.நான்கு சி.எப்.எல்., பல்புகளுக்கு மாற்றாக, வீட்டு உரிமையாளர் நான்கு குண்டு பல்புகளை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், மக்களிடம், சி.எப்.எல்., பல்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படும். மின்சாரம் சேமிக்கப்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குண்டு பல்புகளுக்கு தடை? குண்டு பல்பை விட, சி.எப்.எல்., பல்புகளின் விலை, பல மடங்கு அதிகம். ஒரு, 60 வாட்ஸ் குண்டு பல்பு, 10 ரூபாய்க்கும், அதே வெளிச்சத்தை தரும், 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு, 110 முதல், 140 ரூபாய் வரை விற்கிறது. விலை குறைவாக இருக்கும் குண்டு பல்புகளை, ஏழை மக்களே அதிகம் பயன்படுத்துவதால், தடை விதிக்க அரசு தயங்குகிறது.ஆனால், சி.எப்.எல்., பல்புகள் விலை அதிகமாக இருந்தாலும், மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்குவதன் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, அதை வாங்க துவங்கினால், நாளடைவில் குண்டு பல்புகள் உபயோகம், முற்றிலும் நின்று விட வாய்ப்புள்ளது.

* உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை உயர வேண்டும்: இ.பாலகுருசாமி

large_231305.jpg

மாணவர்களுக்கு அளிக்கும் தரமான கல்வி தான் சமுதாய முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது என்பதால், புதிதாக அமையவுள்ள அரசு, கல்வியின் தரத்தை உயர்த்த என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியலிடுகிறார், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையக் குழு முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி.

கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என, நம் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பள்ளிக் கல்வியானாலும், உயர் கல்வியானாலும் கல்வியின் தரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு, தரமில்லாத பாடத்திட்டம், தேர்வில் முறைகேடு என, குறைகள் பல உள்ளதால், கற்பிக்கும் கல்வியில் தரம் இல்லை.தனி மனிதனின் வளர்ச்சி தான் சமூக வளர்ச்சி; சமூக வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுவோர், 40-50 சதவீதம். நம் நாட்டில் இது, 10 சதவீதம் மட்டுமே. இதை அடுத்த ஐந்தாண்டுகளில், 15 சதவீதமாக உயர்த்த நிறைய கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தேவை.பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர் சதவீதத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்தால் தான், உயர்கல்வியில் சேருபவர் எண்ணிக்கை உயரும். அதற்கேற்ப ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் நடத்த வேண்டும். ஆழமாக கற்பிக்க வேண்டும்; நுனிப்புல் மேயக் கூடாது.

தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம்; அதிக பொறுப்புகள்; இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளில் அதிக சம்பளம் பெறும் ஆசிரியர்களில் பலர், தங்கள் பொறுப்பை உணர்வதே இல்லை. இன்று கல்வித் தரம் வீழ்ச்சி அடைய, அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத ஆசிரியர்களே காரணம்.பள்ளியானாலும், கல்லூரியானாலும், ஆசிரியர்களுக்கு திறமைக்கேற்ப சம்பளம், ஊக்க ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். மதிப்பெண்ணை இலக்காக கொண்ட தேர்வு முறைகள் மாற்றப்பட வேண்டும். நல்ல பண்புகள் இல்லாத கல்வி, வாழ்க்கைக்கு உதவாது. கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை செலவாக கருதாமல், முதலீடாக கருதி, உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.தமிழக பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மொத்த மாணவர்களில், 15 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். இலவசங்களை அளிப்பதற்கு பதிலாக, கல்வி, மருத்துவ மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.வேலை தரும் நிறுவனங்களால் நிராகரிக்கப்படும், பி.இ., பட்டதாரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக சேரும் அவலம் உள்ளது.

இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கும்? பள்ளி, கல்லூரி படிப்பின் போதே, ஆங்கிலத்தில் பேசும் திறன், குழு கலந்தாய்வு,மேடைப் பேச்சு, தலைமை பண்பு ஆகிய திறன்களை வளர்க்க பயிற்சி அளித்தால், படித்து முடிக்கும் அனைவராலும் வேலை பெற முடியும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நியமனத்துக்கு நீண்டகால திட்டம் வகுத்து, முதலில் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்.தமிழில் பொறியியல் படிப்பு கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.அதற்கான பாடத் திட்டம், புத்தகங்களை முதலில் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் படிப்பை முடிப்பவர்கள் அனைவருக்கும் இங்கேயே வேலை கிடைப்பதில்லை. தேசிய அளவிலும், உலகளவிலும் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், மாணவர்களின் இலக்காக இருக்கும் போது, தமிழில் மட்டுமே பொறியியல் பாடங்களை படிப்பது, வேலை பெற எந்த வகையிலும் உதவாது.

தொழில் துறையினரின் தேவைகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் பாடங்களை வடிவமைப்பது வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும்.நம் கல்லூரி, பல்கலைகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்த பல்கலையும் தீர்வு காண முன்வராததே காரணம்.பல்கலை துணைவேந்தர்கள் மக்கள் பணத்தில் அடிக்கடி வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும். காரணம், வெளிநாடு சென்று திரும்புபவர்கள், ஆராய்ச்சியை மேம்படுத்தவோ பாடத்திட்டங்களில் புதுமையைபுகுத்தவோ முயற்சிப்பதில்லை.பல்கலை துறைகளின் புதிய கண்டுபிடிப்பு, பதிவு செய்துள்ள காப்புரிமை எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் துணைவேந்தர்களை அரசு கேள்வி எழுப்ப வேண்டும். சிறப்பாக செயல்பட்ட துணைவேந்தர்களுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் வழங்கலாம்.அரசுக்கு நெருக்கமான யார் வேண்டுமானாலும் துணைவேந்தராகும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு, பாடத்திட்டம் வடிவமைப்பு, விடைத்தாள் மதிப்பீடு, நிதி நிர்வாகம் ஆகியவை வெளிப்படையாக இருக்க வேண்டும். இது அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கும்.

* உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதும் மனித உரிமையே: நீதிபதி ஜோதிமணி

சென்னை, ஏப். 26: உயிர் காக்கும் மருந்துகள் சாதாரண மக்களும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்க வேண்டியதும் மனித உரிமையே என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி கூறினார்.

 சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உலக அறிவுசார் சொத்துரிமை தினக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்த நீதிபதி ஜோதிமணி பேசியது:

 மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அறிவுசார் சொத்துரிமை துறையில் பணிபுரிய வழக்கறிஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இத்துறையில் வழக்கறிஞர்களிடையே ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. இளம் வழக்கறிஞர்கள் அறிவுசார் சொத்துரிமைத் துறையில் பணிபுரிய அதிக அளவில் முன்வர வேண்டும்.

 ஏனெனில் அறிவுசார் சொத்துரிமைக்கும், மனித உரிமைக்கும் அதிக தொடர்புகள் உள்ளன. பூமியில் மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவர்களுக்கான உரிமைகள் சென்று சேர்ந்தாக வேண்டும்.

 மனித உரிமைகளில் சுகாதார உரிமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை சுகாதாரத் துறை மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

 2003-ம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் 300 பெரிய நிறுவனங்களும், 1800 நடுத்தர நிறுவனங்களும், 8 ஆயிரம் சிறிய நிறுவனங்களும் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்தன. இந்த எண்ணிக்கை இப்போது மேலும் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தரமான, சாதாரண மக்களும் வாங்கக் கூடிய விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து தரும் வகையில், அவற்றை அரசு முறைப்படுத்தி வழிநடத்த வேண்டும். ஏனெனில் உயிர் காக்கும் மருந்துகள் சாதாரண மக்களும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்க வேண்டியதும் மனித உரிமையே என்றார்

* குரூப் 1, குரூப் 2 தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்

 சென்னை, ஏப். 26: குரூப் 1, குரூப் 2 தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பங்களை பரிசீலிக்க போதுமான அதிகாரிகள் நியமிக்கப்படாத காரணத்தால் குறித்த காலத்துக்குள் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது.

 துணை ஆட்சியர் போன்ற உயர் பதவிகள் குரூப் 1 பிரிவிலும், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பதவிகள் குரூப் 2 பிரிவிலும் வருகின்றன. குரூப் 1 பிரிவு, ஜூலை மாத மத்தியிலும், குரூப் 2 பிரிவு ஜூன் 5ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த இரு தேர்வுகளிலும் பங்கேற்பதற்காக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிக்க போதுமான அதிகாரிகளும், ஊழியர்களும் இல்லை.

 பிரிவுகள் ஏற்படுத்த வேண்டும்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்க பிரிவுகள் ஏற்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதிவிக்கான தேர்வுகளை நடத்த கடந்த ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சார்புச் செயலாளர் அல்லது பிரிவு அலுவலர் நிலையிலான அதிகாரிகளும், அவர்களுக்கு உதவியாக ஒருவரும் நியமிக்கப்படுவர்.

 ஊழியர்கள், பணியாளர்களில் பெரும்பாலானோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதன்மூலம் அவர்கள் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பிரிவுகளில் நியமிக்கப்படுவர். அண்மையில் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க 20-க்கும் குறைவான பிரிவுகளே ஏற்படுத்தப்பட்டன.

 இந்த நிலையில், குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க தனியாக எந்தப் பிரிவுகளும் ஏற்படுத்தப்படவில்லை.

அரசுத் துறைகளுக்கு பணியாளர்களையும், அதிகாரிகளையும் தேர்வு செய்யும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாமல் இருக்கின்ற பணியாளர்களை வைத்துக் கொண்டு பல முக்கிய தேர்வுகளை நடத்துவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனவே, அரசுத் துறைகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு முன்பாக, அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு ஊழியர்களை தேர்வு செய்வதே இப்போதைய தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


* தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்? சாகித்ய அகாதெமி கருத்தரங்கில் விவாதம்

sirukathai.jpg

சென்னை, ஏப் 26: "தமிழ்ச் சிறுகதையின் தந்தை பாரதியாரா? வ.வே.சு. ஐயரா? அல்லது திருமணம் செல்வக் கேசவராய முதலியாரா?' என சாகித்ய அகாதெமி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டது.

 "தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு நூற்றாண்டு' என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி சார்பில் நடைபெறும் இரு நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில் நூற்றாண்டு கால தமிழ்ச் சிறுகதையின் பயணத்தைப் பற்றியும் போக்குகளைப் பற்றியும் ஒருபுறம் விவாதித்த அதேவேளையில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்பது பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.

 தலைமையுரை ஆற்றிய சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான சிற்பி பாலசுப்பிரமணியம், காட்சி ஊடகங்களாலும், குறும்படங்களாலும் தமிழ்ச் சிறுகதைகள் சந்திக்கக்கூடிய சவால்களையும், தமிழ்ச் சிறுகதைகள் மீண்டும் யதார்த்த பாதைக்குத் திரும்பி வருவதை பற்றியும் பேசியதுடன், "சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதத்திற்குள்ளும் நுழைந்து வந்தார்.

 தொடர்ந்து சிற்பி பேசும்போது: ""இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தவர் மாலன்தானஇதுபோன்ற விவாதத்தில் ஈடுபட்டு ஒரு படைப்பாளியின் படைப்பைக் குறை கூறும்போது அவர் எழுதிய படைப்பு எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என்பதையும் அவசியம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

இவரைத் தொடர்ந்து மைய உரையாற்றிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் "சிறுகதையின் தந்தை' என்று வ.வே.சு ஐயர் தவறாக முன்னிறுத்தப் படுகிறார் என்று பேசினார்.
 ""புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களைப் போல என்று பாரதி ஓரிடத்தில் எழுதுகிறார். அதைப்போல சாரத்தை விட்டுவிட்டு வடிவத்தைக் கொண்டு சிறுகதைகளை மதிப்பிடும் விமர்சகர்களின் காரணமாக பாரதி புறக்கணிக்கப்பட்டு வ.வே.சு.ஐயர் நவீனச் சிறுகதைகளின் தந்தையாக வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறார்.

தமிழின் முதல் சிறுகதை? ஆனால் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் என்னவென்றால் தமிழின் முதல் நவீன சிறுகதை என வகுப்பறைகளில் போதிக்கப்படும் வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் ஒரு தழுவல் கதை. தாகூர் எழுதிய காட்டேர் கதா என்ற வங்கக் கதையின் தழுவல்.

 இரண்டாவது அதிர்ச்சிகரமான விஷயம், ஐயர் தமிழ்ச் சிறுகதைகளைச் செழுமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக எழுதவில்லை. பிற்காலத்தில் பெரிய சரித்திரக் கதைகள் எழுதுவதற்காக கை பழகும் நோக்கத்தோடுதான் எழுதினார் என்பதே உண்மை. இதை ஐயர் இறந்து போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவரது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்துள்ளார்'' என்று மாலன் பேசினார்.

கருத்தரங்கில் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, நாஞ்சில்நாடன், பாவண்ணன்,இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார், பேராசிரியர் அ.இராமசாமி, உள்பட பலர் கலந்துகொண்டு சிறுகதைச் சிற்பிகள் என்ற தலைப்பில் பேசினார்கள்.

 கருத்தரங்கத்துக்கு வந்த பார்வையாளர்கள் மத்தியிலும் "சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் தொடர்ந்தது


வர்த்தகச் செய்தி மலர் :

* பங்குச் சந்தையில் தொடர் சரிவு

மும்பை, ஏப்.26: பங்குச் சந்தையில் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையும் சரிவு 
காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 39 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 19,545 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 6 புள்ளிகள் குறைந்தது. இதனால் குறியீட்டெண் 5,868 புள்ளிகளாகக் குறைந்தது.

 பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்ததக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே காணப்பட்டது. இதனால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவத்தனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரிசர்வ் வங்கி கடன் ஆய்வுக் கொள்கை வெளியாக உள்ளது. அப்போது மேலும் வட்டி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆசிய பிராந்தியத்தில் அனைத்து பங்குகளும் சரிவைச் சந்தித்தன. சீனா, ஹாங்காங், ஜப்பன், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 0.03 சதவீதம் முதல் 1.17 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ் பங்கு விலை 0.83 சதவீதம் சரிந்து ரூ. 1,000.75-க்கும், இன்ஃபோசிஸ் பங்கு விலை 0.13 சதவீதம் சரிந்து ரூ. 2,938.45-க்கும் விற்பனையாயின. இவ்விரு நிறுவனங்களும் பங்குச் சந்தை சரிவில் 23 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்ின. முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 20 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஹெச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனி லீவர், டிசிஎஸ், எல் & டி, ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், மாருி சுஸýகி நிறுவன பங்குகளும் சரிவைச் சந்தித்தன. ஏசிசி, அல்ட்ராடெக் ஆகிய நறுவனங்களின் லாபம் கணிசமாக உயர்ந்ததால் இந்நிறுவனப் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

 ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஐடிசி, டாடா ோட்டார்ஸ், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவிலிருந்து தப்பவில்லை.

 அன்னியமுதலீட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் கடந்த மூன்று தின வர்த்தகத்ில் முதலீடு செய்த தொகை ரூ. 3,149.4 கோடியாகும். திங்களன்று மட்டும் ரூ. 1,270.40 கோடி முதலீடு செய்தன. இருப்பினும் இது சரிவைத் தடுக்க போதுமானதாக அமையவில்லை.

 ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.99%, மாருதி சுஸகி 1.91%, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 1.56%, ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்ஸர் 1.55%, டிஎல்எப் 1.28%, ஹெச்டிஎப்சி வங்கி 1.24%, டிசிஎஸ்0.78%, எல் & டி 0.52% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

 பார்தி ஏர்டெல் பங்கு விலை 1.65 சதவீதம் உயர்ந்தது. இதேபோல ஹிண்டால்கோ 1.55%, டாடா மோட்டார்ஸ் 1.50%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.29%, ஜிண்டால் ஸ்டீல் 1.10%, ஐடிசி 0.79%, ஐசிஐசிஐ வங்கி 0.71% அளவுக்கு ஏற்றம் பெற்றன.

 மொத்தத்தில் 1,570 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,286 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 3,114 கோடியாகும்.

* பவுனுக்கு ரூ.152 உயரவு

சென்னை, ஏப். 25: ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 472 என்ற விலையில் விற்பனை ஆனது. இது சனிக்கிழமை விலையைவிட ரூ.152 அதிகமாகும்.

 ஒரு கிராம் ரூ.2,059.
 சனிக்கிழமை விலை:
 ஒரு பவுன்: ரூ.16,320.
 ஒரு கிராம்: ரூ.2,040.

விளையாட்டுச் செய்தி மலர் :

* பெங்களூரிடம் வீழ்ந்தது டெல்லி

புது தில்லி, ஏப்.26: தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த டெல்லி அணியில் வார்னரும், சேவாக்கும் களமிறங்கினர். சேவாக் சற்று வேகம் காட்டினார். இதனால் 3 ஓவர்களில் 29 ரன்களை எட்டியது டெல்லி.

4-வது ஓவரை ஜாகீர்கான் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வார்னர், அடுத்த பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்தார். 11 பந்துகளைச் சந்தித்த அவர் 7 ரன்களை மட்டுமே எடுத்தார். இதையடுத்து சேவாக்குடன் ஜோடி சேர்ந்தார் ஹோப்ஸ்.

சேவாக் 18 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். பின்னர் வந்த வடே 8 ரன்களில் வெளியேறினார். ஹோப்ஸ் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து 
வேணுகோபால் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து வெட்டோரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டுபின்வரிசையில் ஓஜா, இர்பா.ன் பதான் ஆகியோர் தலா இரு சிக்ஸர்களை விளாச 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது டெல்லி.

அதிர்ச்சித் தொடக்கம்
பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் தில்ஷான், ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரன் ஏதுமின்றி நடையைக் கட்டினார். இதையடுத்து வந்த கோலி, அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
பதான் வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் கெயில், 4 பவுண்டரிகளை விரட்டி விருந்து படைத்தார். மோர்கல் வீசிய 4-வது ஓவரில் 5-வது பந்தில் பவுண்டரியையும், 6-வது பந்தில் சிக்ஸரையும் விளாசினார் கெயில். இதனால் 4 ஓவர்களில் 45 ரன்களை எட்டியது பெங்களூர்.

அடுத்த ஓவரில் கெயில் இரண்டு பவுண்டரிகளையும், கோலி ஒரு சிக்ஸரையும் விரட்டினர். யாதவ் வீசிய 7-வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட 7 ஓவர்களில் 78 ரன்களை எட்டியது பெங்களூர். ஆனால் அடுத்த ஓவரில் கெயில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரனனை எடுத்தார்.
கோலி 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்

மூலவர் : உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்
  உற்சவர் : பேரகத்தான்
  அம்மன்/தாயார் : அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி
  -
  தீர்த்தம் : நாக தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு 
ஊர் : திரு ஊரகம்
  மாவட்டம் : காஞ்சிபுரம்
  மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:
   
  மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார் 

கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும்
மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று
துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே.

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
   
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.  
   
இத்தல இறைவன் மேற்கு நோக்கி உலகளந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஸாகர ஸ்ரீகர விமானம் எனப்படும்.  இத்தல இறைவனை ஆதிசேஷன், மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர்.

தலபெருமை:
   
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருஊரகம்எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே  உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே  திருநீரகம், திருக்காரகம்,திருகார்வனம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.
ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் மிகவும் பிரம்மாண்டமானவர். 108 திருப்பதிகளில் இந்த அளவு பிரமாண்ட தரிசனத்தை எங்கும் காணமுடியாது. இதே போல் இங்கு ஆதி சேஷனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நடக்கிறது. இவருக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

 தல வரலாறு:
   
  மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன். இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்க மிகுந்த கர்வம் ஏற்பட்டது. நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால், பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். இதைக்கண்ட மகாபலி,""தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான்.

பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து, இதோ என் தலை. இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை, என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பனார். பாதாளம் சென்ற மகாபலிக்கு, பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான்.
எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார். இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.  
   
சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: :பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். 
திருவிழா:
   
  வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:
   
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* புத்தர் - நல்ல மனமே சிறந்த வழிகாட்டி!

* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை. 

* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

வினாடி வினா :

வினா - சுதந்திர இந்தியாவின் முதல் வான்படை தளபதி (இந்தியர்)யார் ?

விடை - எஸ்.முகர்ஜி (1954-1960)

இதையும் படிங்க :

தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்

டி.என்.பாளையம்:தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.

குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.

அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.

இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
 




நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment