Tuesday, April 26, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 26 , 2011.


முக்கியச் செய்தி :

25-saibaba-200-1.jpg

புதன்கிழமை சாய்பாபா உடல் அடக்கம்-5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்

புட்டபர்த்தி: மறைந்த ஆன்மீகத் தலைவர் சத்ய சாய்பாபாவின் உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசன் முதல் ஆண்டி வரை அத்தனை தரப்பினராலும் வணங்கப்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவர் சாய்பாபா. அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். 

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சாய்பாபா நேற்று காலை 7. 40 மணிக்கு மரணமடைந்தார். அவரது மறைவு சாய்பாபாவின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள சாய் பாபா மையங்களில் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புட்டபர்த்தியிலும் சோக அலை வீசுகிறது.

85 வயதான சாய்பாபாவின் மரணச் செய்தி நேற்று காலை பத்தேகால் மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டது. 

பாபாவின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரஷாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹால் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை வரை உடல் வைக்கப்பட்டிருக்கும். 

அவரது உடலை செவ்வாய்க்கிழமை வரை அனைவரும் கண்டு இறுதி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சாய்பாபாவின் இல்லம் உள்ள யஜூர் மந்திர் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்து ஆன்மீகத் தலைவர்கள் உடல் அடக்க நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். 

உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ள ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சவீதா ரெட்டி, அடக்கம் நடைபெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதற்கான விரிவான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பக்தர்கள் புட்டபர்த்தி வருகின்றனர்.

பாபாவின் உடல் ஆரஞ்சு நிற உடையால் மூடப்பட்டிருந்தது. அவரது கண்கள் வரையிலும் துணியைப் போர்த்தியிருந்ததாக உடலை நேரில் பார்த்த சாய் குமார் என்ற உள்ளூர் வர்த்தகர் தெரிவித்தார். பாபாவின் உடலுக்கு அருகே இருந்த யாருமே பேசவில்லை. மாறாக அவர்களது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது என்றார் அவர்.

நேற்று மாலை 3 மணியளவில் சாய் குல்வந்த் ஹாலுக்கு சாய்பாபாவின் உடல் மாற்றப்பட்டது. அங்குதான் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார் சாய்பாபா. பக்தர்களையும் இங்குதான் அவர் சந்தித்து தரிசனம் தருவார்.

உலகச் செய்தி மலர் :

* பின்லேடன் பிடிபட்டாலோ, கொல்லப்பட்டாலோ, அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம்-அல் கொய்தா

25-osama-bin-laden200.jpg

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ ஐரோப்பாவில் நாங்கள் மறைத்து வைத்துள்ள அணு குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அல் கொய்தா அமைப்பு எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஐரோப்பாவில் நாங்கள் ஒரு அணுகுண்டை மறைத்து வைத்துள்ளோம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது பிடிக்கப்பட்டாலோ, உடனடியாக அந்த குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளம் இதுதொடர்பான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. கியூபாவின் குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள கொடுங்கோல் சித்திரவதைச் சிறை தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பல பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றில், அல் கொய்தாவின் இந்த எச்சரிக்கை செய்தியும் இடம் பெற்றுள்ளது.

இந்த ரகசிய ஆவணங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் சிலவற்றுக்கு விக்கிலீக்ஸ் கொடுத்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியத் தகவல்கள் விவரம் வருமாறு:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதலை அல் கொய்தா தொடுத்த சமயத்தில், கராச்சி நகரில் முக்கிய அல் கொய்தா தலைவர்கள் ஒரே இடத்தில் குவிந்து அந்த தாக்குதலைக் பார்த்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு தி்ட்டமிட்ட முக்கிய்த தலைவர் விமானங்கள் இரட்டைக் கோபுரத்தை தாக்கி சிதைத்த காட்சிகளை நேரடியாக பார்த்து ரசித்தார். கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிக மிக பாதுகாப்பான முறையில் இவர்கள் அந்தக் காட்சிகளை டிவி ஒளிபரப்பின் மூலம் பார்த்துள்ளனர்.

இந்த வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில்தான், ஏமன் நாட்டில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். கோல் கப்பல் மீது தாக்குதல்  நடத்திய குற்றவாளிகளில் முக்கியமான நபர், டான்சில் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

நியூயார்க் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அத்தனை அல் கொய்தா தலைவர்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஓடி விட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு முக்கியக் காரணமான பின்லேடனும், அவனது துணைத் தளபதியான அய்மான் அல் ஜவாஹிரியும் சம்பவத்தன்று கராச்சியில் இருந்தது இந்த ஆவணம் மூலம் தெரிய வருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்னர், நான்கு நாட்கள் கழித்து காந்தஹாருக்கு பின்லேடன் போயுள்ளார். அங்கு அல் கொய்தா தீவிரவாதிகள்  கூடியுள்ளனர். அப்போது, ஆப்கானிஸ்தானை நாசகார அமெரிக்க கும்பலிடமிருந்து காப்போம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர்.

மேலும் இந்தக் கூட்டத்தின்போது அல் கொய்தா அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தலிபான் அமைப்பின் உயர் பீடமான சுரா கவுன்சிலுக்கு மாற்றியுள்ளான் பின் லேடன். அமெரிக்கப் படைகளிடம் தான் சிக்கலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதை யூகித்தே இந்த முடிவுக்கு லேடன் வந்ததாக தெரிகிறது.

* சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை பக்தர்களுக்காக சிறப்பு விமானங்கள்

கொழும்பு: இலங்கையில் உள்ள பக்தர்கள், சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த வசதியாக அங்கிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

26ம் தேதியிலிருந்து பெங்களூர் செல்லும் விமானங்கள் கூடுதல் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர சிறப்பு விமானங்களும் இயக்கப்படுமாம்.

இலங்கையிலும் சாய்பாபாவுக்கு கணிசமான பக்தர்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் சாய்பாபா பக்தர்தான். சாய்பாபா மறைவுக்கு ரணில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அப்பாவிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் அமெரிக்கா-குவான்டனாமோ மர்மம் அம்பலம்

வாஷிங்டன்: குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் என்பது விக்கிலிகீஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சின்னச் சின்னக் காரணங்களுக்காக அங்கு பலர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 89 வயது முதியவரையும் கூட அடைத்துப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. சிறையை அடைக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டும் கூட இன்னும் 172 பேர் அங்கு எதிர்காலம் என்னாகுமோ என்ற பெரும் கேள்விக்குறியுடன் தவித்துக் கொண்டுள்ளனர் என்று அந்த ஆவணத் தகவல் தெரிவிக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என சகல தரப்பினரும் தவறான காரணங்களுக்காக இங்கு அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 759 ஆவணங்களை விக்கிலீக்ஸ் மூலம் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும், கார்டியனும் வெளியிட்டுள்ளன.

உலக அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய குவான்டானாமோ சித்திரவதைக் கூடத்தின் மர்மங்களை அம்பலப்படுத்தும் வகையில் இந்த ஆவணங்கள் உள்ளன. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பலர் பல வருடங்களாக விசாரணையே இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடத் தெரியவில்லை. மேலும் பலரை கட்டாயப்படுத்தி, சித்திரவதை செய்து வாக்குமூ்லம் வாங்கியுள்ளது அமெரிக்கா.

கிட்டத்தட்ட அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த, அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் ஆவணத்தை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். கடந்த 2002ம் ஆண்டு இந்த சிறைக் கூடம் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த சிறையில் நடப்பது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. இன்னும் 172 பேர் அங்கு வாடி வருகின்றனர்.

உண்மையில் இந்தக் கூடத்தில் பயங்கரமான தீவிரவாதிகளோ அல்லது எதிரி நாட்டு வீரர்களோ அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அப்பாவிகள்தான் அதிகம் உள்ளனர். அவர்களில் 89 வயதான ஆப்கானிஸ்தான் கிராமவாசியும் ஒருவர். 14 வயதான சிறுவனும் ஒருவன். 

இந்த முதியவரை ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த சிறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அவரது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான போன் எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான் இந்த முதியவரை விசாரணைக்காக கொண்டு வந்து அடைத்துள்ளதற்கான காரணம். மற்றபடி இவருக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல உள்ளூர் தலிபான் தலைவர்கள் பற்றித் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவனைக் கூட்டி வந்து அடைத்து வைத்துள்ளனர்.

விக்கிலீக்ஸ், குவான்டனாமோ குறித்து வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது.

* இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்:

இந் நிலையில் இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

* லிபியா: குண்டு வீச்சில் கடாபியின் அலுவலகம் சேதம்  

லிபியா அதிபர் கடாபியின் அலுவலகம் மீது நடந்த குண்டுவீச்சு தாக்குதலில், அக்கட்டடம் சேதமடைந்தது.

லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர். 

அவற்றை மீட்க கடாபியின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தும் கடாபிக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள், டிரிபோலியில் உள்ள கடாபியின் அலுவலகம் மீது விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. 

இதில் அந்த கட்டிடம் இடிந்து சேதம்டைந்தது.இதில், சுமார் 45 பேர் காயம் அடைந்ததாகவும், அவர்களில்ம் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

* பாகிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதி: இந்தியா விருப்பம்  

பாகிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இந்தியா ஏற்றுமதி செய்ய விரும்புகிறது என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இதனை தெரிவித்த பெட்ரோலிய துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர், பெட்ரோலியப் பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் 2005 ம் ஆண்டு முதலே இந்தியா கோரி வருவதாக கூறினார். 

இந்த வார இறுதியில், இஸ்லாமாபாத்தில் இருநாட்டு வர்த்தகத்துறை செயலர்களும் சந்தித்துப் பேசும்போது, இதுகுறித்து விரிவாக பேசப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

* நடுவானில் இத்தாலி விமானத்தை கடத்த முயற்சி: கஜகஸ்தானை சேர்ந்தவர் கைது 

நடுவானில் இத்தாலி விமானத்தை கடத்த முயன்ற கஜகஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டார்.

இத்தாலியை சேர்ந்த அலிடாலியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டது. 

இந்த விமானம் நடுவானில் பறந்தபோது, பயணி ஒருவர் திடீரென விமான பணிப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து, விமானத்தை லிபியா தலைநகர் டிரிபோலிக்கு திருப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பணிப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். 

இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.இதற்கிடையே விமான சிப்பந்திகள் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தபடி அவரை மடக்கி பிடித்தனர்.

விமானம் ரோம் நகரில் தரை இறங்கியவுடன், அங்கு தயாராக நின்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

விசாரணையில் அவர் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

* ஆப்கான் சிறையில் இருந்து 500 தாலிபான் தீவிரவாதிகள் தப்பினர்  

ஆப்கானிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் தாலிபான் தீவிரவாதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டு அரசாங்கத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், 360 மீட்டர் சுரங்கம் தோண்டி தப்பி உள்ளனர். 

தாலிபான் தீவிரவாதிகள் தப்பியதை உறுதிபடுத்தியுள்ள கந்தஹார் காவல்துறை தலைமை அதிகாரி, 476 கைதிகள் தப்பி சென்றுள்ளதாகவும், அவர்களை தேடி பிடிப்பதற்கா பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கையெழுத்து பிரசாரம்

கொழும்பு, ஏப்.25- ஐநா சபை அறிக்கையின் அடிப்படையில், இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கையெழுத்து பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகெங்கும் கையெழுத்துகள் பெறப்பட்டு, ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்படும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், ஐநா அறிக்கைக்கு எதிரான இலங்கையின் முயற்சிகளை முறியடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இடம்பெற்றுள்ளவர்கள் பல்வேறு நாடுகளின் அரசு தரப்பினரை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியச் செய்தி மலர் :

*கல்மாடி கைது

புதுதில்லி, ஏப்.25: காமன்வெல்த் போட்டிகளில் நிகழ்ந்த் முறைகேடுகள் தொடர்பாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடியை சிபிஐ இன்று கைது செய்தது.

ரூ 141 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணியை சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆதரவாக சதிசெய்த குற்றச்சாட்டுகளின்கீழ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

* பிரதமர் நாளை புட்டபர்த்தி வருகிறார்

manmohan.jpg

புதுதில்லி, ஏப்.25:  மறைந்த சாய்பாபாவுக்கு அஞ்சலி பிரதமர் மன்மோகன் சிங் நாளை புட்டபர்த்திக்கு வருகைதர உள்ளார்.

காலையில் தில்லியில் இருந்து புறப்படும் மன்மோகன் சிங், புட்டபர்த்தியில் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அன்றைய தினமே தில்லி திரும்ப உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: 5.0 ரிக்டர் அளவிலான மிதமான பூகம்பம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இன்று தாக்கியது. இதன் மையம் பாகிஸ்தானில் இருந்தது.

இன்று காலை ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் மையப் பகுதி பாகிஸ்தானில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பூகம்பத்தை உணர்ந்த மக்கள் பீதியடைந்தனர்.

கடந்த 2 மாதங்களாகவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது சிறிய அளவிலான பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 12 முறை பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் சிக்கி 40,000 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.9 ரிக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழி மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்-6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.

25-kanimozhi34-200.jpg

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர்  கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார்  ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

இதையடுத்து வரும் மே 6ம் தேதி ஆஜராகுமாறு கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்  களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்  ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.

சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.

கனிமொழி, சரத் குமார் தவிர சினியுக் நிறுவனத்தின் கரிம் மொரானி மற்றும் குசேகாவ் நிறுவனத்தின் ராஜிவ் அகர்வால் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பி ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

* சாய்பாபா அறக்கட்டளையின் ரூ 1.5 லட்சம் கோடி சொத்துக்களுக்கு புதிய பொறுப்பாளர் யார்?

25-chairman200.jpg

புட்டபர்த்தி: பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கொண்ட சத்ய சாய் பாபாவின் 'ஸ்ரீ சத்ய சாய் மைய அறக்கட்டளை' அமைப்பின் அடுத்த தலைவர்  யார் என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சாய்பாபா தனக்கு வாரிசு என்று யாரையும் அடையாளம் காட்டவில்லை.

பாபா இருந்தவரை இந்த அறக்கட்டளைக்கு அவர் வழிகாட்டல் இருந்தது என்பதால் அவருக்கு அடுத்து யார் என்று கேட்க யாருக்குமே தோன்றவில்லை. மேலும், 96 வயதுவரை நான் உயிர் வாழ்வேன் என்று பாபா கூறியிருந்ததால் இந்த எண்ணமே எவருக்கும் வரவில்லை.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து...

அடுத்ததாக இந்த அறக்கட்டளைக்கு உள்ள சொத்துகளின் மதிப்பு ரூபாய் ஒன்றரை லட்சம் கோடி வரையில் என்கிறார்கள். 

இந்த அறக்கட்டளையை நடத்திவரும் பல்வேறு நிறுவனங்களிடம் ஏராளமான ரொக்க கையிருப்பும் உள்ளது.

1964-ல் சத்யசாய் மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவர். இதன் நிர்வாகக்குழு 2010-ல் திருத்தியமைக்கப்பட்டது.

165 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட நேரடி பக்தர்கள் பாபாவுக்கு இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வருவாயில் சிறு பகுதியை பாபாவின் அறக்கட்டளைக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம், உறைவிடப் பள்ளிகள், தொழில் பயிற்சி மையங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தியான மண்டபங்கள் என்று ஏராளமான நிரந்தர சொத்துகள் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உருவாகியிருக்கின்றன.

அனந்தப்பூர் மாவட்ட மக்களுக்கும் சென்னை  மாநகர மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இந்த அறக்கட்டளையைத்தான் பாபா பயன்படுத்தினார். எனவே இந்த அறக்கட்டளைக்கு அடுத்த தலைவர் யார் என்பதை அறிவதில் பாபாவின் ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மட்டும் அல்ல மத்திய - மாநில அரசு  களுக்கும் ஆர்வம் இருக்கிறது.

* என்டோசல்ஃபானுக்கு தடை கோரி கேரள முதல்வர் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம், ஏப்.25: இந்தியா முழுவதும் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்த தடைவிதிக்க வலியுறுத்தி கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.
கேரளத்தில் இன்று என்டோசல்பான் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதன் ஒருபகுதியாக இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

உண்ணாவிரதத்தின்போது பேசிய அச்சுதானந்தன், என்டோசல்பானுக்கு தடைகோரும் விவகாரத்தில் மத்திய அரசும், பிரதமரும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது பொதுமக்களுக்கு சவாலான ஒன்றாகும். அது சரிசெய்யப்பட வேண்டும் என்றார்.

என்டோசல்பான் உயிரில்லாத ரசாயானம் என்று மத்திய அரசும், மாநில அரசும் அமைத்த வல்லுநர்கள் குழுவின் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பூச்சிக்கொல்லியின் மோசமான விளைவுகள் குறித்து பிரதமரின் சகாக்கள் அவரிடம் சரியாக எடுத்துக்கூறவில்லை என்றார். 

என்டோசல்பானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என அச்சுதானந்தன் விருப்பம் தெரிவித்தார்.

அச்சுதானந்தனின் உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் பேபி, திவாகரன், கவிஞரும், சமூக சேவகருமான சுகந்தகுமாரி, கம்யூனிஸ்ட் தலைவர் சி.கே.சந்திரப்பன், எல்டிஎஃப் அமைப்பாளர் வைக்கம் விஸ்வன் மற்றும் பாஜக தலைவர் ஓ.ராஜகோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கேரளத்தில் என்டோசல்பான் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த 2005-ம் ஆண்டே தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலச் செய்தி மலர் :

* காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறுந்துவிட கோரிக்கை

சென்னை, ஏப்.25- காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் பொதுச் செயலர் பெ.சண்முகம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன்-12 தேதி தண்ணீர் திறப்பது என்பது நிறைவேற்றப்பட முடியாத ஒன்றாகவே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இதனால் காவிரி பாசன பகுதியில் குறுவை சாகுபடி என்பதே அறவே போய், ஒரு போக சாகுபடி மட்டும் தான் என்ற நிலை 
ஏற்பட்டுவிட்டது.

இதன் விளைவாக லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உற்பத்தி இழப்பும், விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் வற்புறுத்திய போதும் நிவாரணம் வழங்க மறுத்து விவசாயிகளை வஞ்சித்தது தி.மு.க அரசு என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 109 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கடும் மழை மற்றும் இப்போது எதிர்பாராத வகையில் பெய்து வரும் மழையின் காரணமாக மேலும் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதை கண்டு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜுன் 12ந் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

* வீரப்பன் மனைவி பெங்களூர் சிறையில் இருந்து தமிழகம் அழைத்துவரப்பட்டார்

25muthulakmi.jpg

பெங்களூர், ஏப்.25:  சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பெங்களூர் சிறையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு போலீசாரால் அழைத்துவரப்பட்டார். அங்கு அவருக்கு எதிராக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசாரும், சிறைத்துறையினரும் தெரிவித்தனர்.

4 பேர் கொண்ட தமிழக போலீஸ் குழு ஒன்று இன்று காலை அவரை சிறையில் இருந்து அழைத்துச் சென்றதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

2008 நவம்பரில் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு எதிராக அம்மாநிலத்தில் 5 வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கடைசி வழக்கு 1993-ம் ஆண்டு வீரப்பனால் 6 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பானது. அதிலும் போதிய ஆதாரம் இல்லாததால் முத்துலட்சுமி விடுவிக்கப்பட்டார். எனினும் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் முத்துலட்சுமிக்கு எதிராக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்ததால் 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் மத்திய சிறைக்கு முத்துலட்சுமி மாற்றப்பட்டிருந்தார்.

* நாய் நரியானது; இளைஞர் கைது

dog.jpg

திருச்செங்கோடு, ஏப். 25: நாய்க்குட்டி என நினைத்து பிடித்து வந்து, 9 மாதங்களாக நரியை வளர்த்து வந்த இளைஞரை வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். நரி மீட்கப்பட்டது.

 திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம், கீழமுகத்தைச் சேர்ந்தவர் மாதேஸ் (28). விசைத்தறி தொழிலாளி. இவர் தனது வீட்டில் நரி வளர்ப்பதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆஸிஸ்குமார் ஸ்ரீவத்சவாவுக்கு தகவல் கிடைத்தது.

 அவரது உத்தரவின்பேரில், ராசிபுரம் வனச்சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் மற்றும் வனக் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை மாதேஸ் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவர் நரி வளர்த்து வந்தது தெரியவந்தது.

 வனப்பாதுகாப்புச் சட்டம் அட்டவணை 2-ன் படி அரசு அனுமதி இன்றி வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்பதால் மாதேûஸ வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வளர்த்து வந்த நரி மீட்கப்பட்டு, திங்கள்கிழமை திருச்செங்கோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆபிரஹாம் லிங்கன் முன் ஆஜர்படுத்தப்பட்டது.
 கைது செய்யப்பட்ட மாதேஸ் தரப்பில் கூறப்படுவது:

 9 மாதங்களுக்கு முன் ஏரிக்கரையோரம் சென்ற மாதேஸ், குட்டியாக இருந்த நரியை நாய்க்குட்டி என நினைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதற்கு பால், பழம், பிஸ்கட் கொடுத்து வளர்த்தார்.

 சில மாதங்களுக்குப் பிறகு அதன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அது நாயல்ல, நரி என்பதைத் தெரிந்து கொண்டார். பின்னர் நரியை வீட்டில் இருந்து பலமுறை ஏரிக்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினார். ஆனால் அது மீண்டும் மீண்டும் மாதேஸ் வீட்டுக்கே வந்து விட்டது.

வீட்டில் உள்ள குழந்தைகள், மற்றவர்களுக்கு அது எந்தத் தொந்தரவையும் தரவில்லை. பிஸ்கட், பால், நண்டு, கருவாடு ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தது. அது வளர்ந்த பின்பும்கூட அது நாய்க்குட்டி போலவே இருந்தது என்றனர்.

 வனத்துறையினர் காயம்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாருதி ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட நரி வனத்துறையினர் சிலரைக் கடித்துக் காயப்படுத்தியது. இது சாதாரண காட்டு நரிதான். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், நரி கொல்லிமலை காட்டில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்

* தமிழர்கள் வல்லவர்களாக இருக்க விரும்பியவர் மு.வ.: துணைவேந்தர் கல்யாணி புகழாரம்

vc.jpg

சென்னை, ஏப். 25: தமிழர்கள் நல்லவர்களாக இருப்பதோடு, பல்வேறு துறைகளில் வல்லவர்களாகவும் இருக்க விரும்பியவர் தமிழறிஞர் மு. வரதராசனார் என்று தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார்.
 மு. வரதராசனார் நூற்றாண்டு - தொடக்க விழாவையொட்டி பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டு புலம் சார்பில் மு.வ.வின் இலக்கிய ஆளுமை என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் துணைவேந்தர் கல்யாணி பேசியதாவது:

 பள்ளியில் தமிழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, துணைவேந்தராகவும் பணியாற்றிய மு. வரதராசனார், சமுதாயப் பேராசிரியராகவும் திகழ்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளரான அவரை மாணவர் சமுதாயம் பெருமதிப்புடன் பின்பற்றியது. அதனால்தான் அவரை தங்களது முதல் வழிகாட்டி என்று பொருள்படும் வகையில் மு.வ. என்று மாணவர் சமுதாயம் அழைத்தது.

 தமிழியம் சார்ந்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தனது தமிழ்ப் பணியை அமைத்துக் கொண்டதால் தமிழ் உள்ளங்களை மு.வ. கவர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழியம் குறித்து ஆய்வுரை வழங்கி அதன் அடிப்படையில் முதன்முதலாக டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.

 மரபு சார்ந்த சங்க இலக்கியங்களை ஆய்வு செய்து நூல்களை வழங்கிய அவர் சிறுகதை, நாவல்களையும் எழுதியுள்ளார். தொலைநிலைக் கல்வியைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில் முன்னோடியாக அவர் விளங்கினார். 62 வயது வரை வாழ்ந்த மு.வ., 85 நூல்களை படைத்துள்ளார். அவர் எழுதிய திருக்குறள் தெளிவுரை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 அவரது புத்தகங்கள் திருமண வீடுகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவர் எழுதிய அகல்விளக்கு என்ற நாவல் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது. இல்லத்தரசிகளுக்கு அவரது நாவல்கள் கை விளக்காக விளங்கின.

தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மாணவர்கள் பலர் உயிரிழந்ததை அடுத்து மத்திய அரசு 1967-ல் வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை மு.வ. ஏற்க மறுத்தார்.

 எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் தமிழக மக்களிடம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற ஒரே எழுத்தாளரான மு.வ. முத்திரை பதிக்காத துறைகளே இல்லை என்றார் துணைவேந்தர் கல்யாணி.

 இந்தக் கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழகத்தின் இக்கால இலக்கியத் துறையின் முன்னாள் பேராசிரியர் மா. செல்வராசன், பேராசிரியர் வீ. ஞானசிகாமணி, மு.வ.வின் பேரனும், மருத்துவருமான வ.தி. புகழேந்தி, பேராசிரியர் சு. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ச. சண்முகையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* பொள்ளாச்சியில் 110 மி.மீ. மழை

சென்னை, ஏப். 25: தமிழகம் முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 110 மி.மீ. மழை பதிவானது.

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியே தற்போதைய மழைக்கு காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 110 மி.மீ. மழை பெய்தது.
 கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் 90 மி.மீ, தஞ்சாவூர், முசிறி ஆகிய ஊர்களில் 80 மி.மீ. மழையும், துறையூரில் 70 மி.மீ. மழையும் பதிவானது.

 இதேபோல் தாராபுரம், பாடலூர், தாத்தையங்கார்பேட்டை, மதுரை மாநகரம், சிவகங்கை ஆகிய பகுதிகளில் தலா 60 மி.மீ., புதுச்சேரி விமான நிலையம், ஒகேனக்கல், பாலக்கோடு, ஈரோடு, புள்ளம்பாடி, திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் தலா 50 மி.மீ., திருக்காட்டுப்பள்ளி, சீர்காழி, ராமேஸ்வரம், ஆம்பூர், இளையான்குடி, திருபுவனம், காரைக்குடி ஆகிய ஊர்களில் தலா 40 மி.மீ. என மழை பதிவானது.

 வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி தொடர்வதால், மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தொழில்நுட்பச் செய்தி மலர் :

* ஐடி பணியாளர்களுக்கு மீண்டும் திரும்புகிறது வசந்த காலம்!  

ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை மீண்டும் புத்துயிர் பெற தொடங்கி உள்ள நிலையில், ஐடி பணியாளர்கள் சேர்க்கை மீண்டும் உச்சம் ஏற் தொடங்கி இருப்பதை பார்க்கும் இத்துறை நிபுணர்கள், மீண்டும் 2007 திரும்புவதாக கூறத் தொடங்கி உள்ளனர். 

உலகாளவிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட 2008 க்கு முந்தைய ஆணடான 2007 ல் ஐடி துறை உச்சத்தில் இருந்தபோது, அத்துறை பணியாளர்களுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. 

அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, ஐடி துறையை புரட்டி போட, அதன் பணியாளர்கள் வேலை இழப்பு, சம்பள குறைப்பு என கடும் சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. 

தற்போது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலக நாடுகள் ஓரளவு மீண்டு வந்துவிட்ட நிலையில், ஐடி துறையும் பழைய தெம்பை பெறத் தொடங்கியுள்ளது.

சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மீண்டும் அவுட்சோர்சிங் பணிகள் மற்றும் ப்ராஜக்ட்டுகள் ஏராளமாக வரத் தொடங்கி இருப்பதால், அதற்கேற்ற பணியாளர்களை தேர்ந்தெடுப்பதிலும், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் ஐடி நிறுவனங்கள் மும்முரமாக களமிறங்கி உள்ளன. 

இதனால் இந்த ஆண்டு ஐடி பணியாளர்கள் சேர்ப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 முதல் 70 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று பணியாளர்கள் தேர்வு செய்து கொடுக்கும் மனிதவள மேம்பாட்டு நிறுவன நிபுணர்கள் கூறுகின்றனர். 

கடந்த ஆண்டின் பணியாளர்கள் சேர்க்கை விகிதம்,அதன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 விழுக்காடு அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு அது மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படித்து முடித்தவுடன் வெளியேறும் சுமார் 2 லட்சம் புதிய என்ஜினியரிங் பட்டதாரிகள், இந்த ஆண்டு ஐடி வேலை சந்தையில் நுழையலாம் என்றும், இத்துறையில் ஏற்கனவே பணியில் இருக்கும் மேலும் 3 லட்சம் பேர்,தங்கள் துறைக்குள்ளாகவே வேலையை மாற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர நாடு முழுவதுமிருந்து பிஎஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்,எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற படிப்புகளை முடிக்கும் இளநிலை பட்டதாரிகளும் இந்த ஐடி வேலை சந்தையில் நுழையலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இது தவிர ஐடி துறையில் திறமை வாய்ந்த மூத்த நிலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், பாரம்பரிய தயாரிப்பு துறை, ஆட்டோ, ஆயில், தொலைதொடர்பு போன்ற துறைகளில் பணியாற்றும் திறமை வாய்ந்த நடுத்தரம் முதல் மூத்த நிலை வரையிலான அதிகாரிகளும், இந்த ஆண்டு ஐடி துறறையில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இத்துறை வல்லுனர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.

ஐடி/ஐடி சேவை துறை பணியாளர்கள் நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் உள்ளனர். இதில் குறைந்தது 25 விழுக்காட்டினர், இந்த ஆண்டு தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்காக மற்ற நிறுவனத்திற்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 3 ஆண்டுகளாக சரியான வாய்பை எதிர் நோக்கி காததிருப்பவர்கள்.இந்த ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்களின் தேவையும் அதிகரித்திருப்பதால்,இந்த வாய்ப்பை இவர்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிறார் ஐடி நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான விநாயகம். 

ஆக மொத்தத்தில் ஐடி பணியாளர்களுக்கு இந்த ஆண்டு அவர்களது 2007 ஆம் ஆண்டின் வசந்த காலம் மீண்டும் திரும்புகிறது என்றே கூறலாம்.

வர்த்தகச் செய்தி மலர் :

* பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரே போய் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இதை தள்ளிப்போடும்படி மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக, நிறுவனங்கள், முடிவை தள்ளிப்போட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.

மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.

* இந்தியாவின் அந்நியச் செலாவணி 286 மில்லியன் டாலர் குறைந்தது!

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு இன்றைய நிலவரப்படி 307.92 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 286 மில்லியன் டாலர் குறைவாகும்.

இதில் வெளிநாட்டு நாணய இருப்பு மட்டும் 277.37 பில்லியன் டாலர் (முந்தைய ஆண்டை விட 377 மில்லியன் டாலர் குறைவு) ஆகும். தங்க இருப்பு 22.97 பில்லியன் டாலர் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஐஎம்எப்பில் இந்தியாவுக்கு உள்ள எஸ்டிஆர் எனப்படும் சிறப்பு எடுப்பு உரிமையின் அளவு 15 மில்லியன் டாலர் அதிகரித்து, 4.605 பில்லியன் டாலராக உள்ளது. 

இந்தத் தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கி சனிக்கிழமை அறிவித்தது. ஏற்கெனவே இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அளவும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

* விண்ணைத் தொடும் பொன் விலை: பவுன் ரூ. 16, 440-மக்கள் கவலை

25-gold-jewellery-200.jpg

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 120 அதிகரித்து பவுன் ரூ. 16 ஆயிரத்து 440-ஆக உள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏழைகளுக்கு எட்டாகனியாக தங்கம் மாறியுள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ. 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 320க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரே நாளில் ரூ.120 அதிகரித்து ரூ.16 ஆயிரத்து 440-க உள்ளது. ஒரு கிராம் ரூ.2055-க்கு விற்கிறது. 

ஏற்கனவே தங்கத்தின் விலை ஏறுமுகமாத்தான் உள்ளது. இந்நிலையில் திருமண சீசன், அட்சய திரிதியை போன்றவை வரவிருப்பதால் விலை குறைய வாய்ப்பே இல்லை. ஒரு பவுன் தங்கம் ரூ. 17 ஆயிரத்தை தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.72 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம், ரூ.77.90 ஆகவும் உள்ளது.

* பங்குச்சந்தையில் தடுமாற்றம்

மும்பை, ஏப்.25- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று தடுமாற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் புள்ளிகள் உயர்வதும் சரிவதுமாக இருந்தது. பின்னர், இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் சரிந்து 19,584 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஹெச்டிஎப்ஸி வங்கி, ஹீரோ ஹோண்டா, டிஎல்எப், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி, மாருதி சுஸுகி, இன்ஃபோசிஸ், எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையிலும் தடுமாற்றம் காணப்பட்டது. பின்னர், இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 5,874 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
 
சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி *புனே அணி "ஹாட்ரிக்' தோல்வி

சென்னை: ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய புனே வாரியர்ஸ் அணி, இத்தொடரில் "ஹாட்ரிக்' தோல்வியை பதிவு செய்தது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின், லீக் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னையில் நடந்த போட்டியில், தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், யுவராஜ் சிங்கின் புனே வாரியர்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற புனே கேப்டன் யுவராஜ் சிங், பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஜொகிந்தர் சர்மா நீக்கப்பட்டு, சதாப் ஜகாதி இடம் பெற்றார்.
நல்ல துவக்கம்:

சென்னை அணிக்கு மைக்கேல் ஹசியுடன் இணைந்து, தமிழக வீரர் முரளி விஜய் துவக்கம் கொடுத்தார். முதல் இரண்டு முறை "ரன் அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்த முரளி விஜய், பின் சுதாரித்துக் கொண்டார். டெய்லர், தாமஸ் பந்துகளில் பவுண்டரி அடித்து அசத்திய இவர், முரளி கார்த்திக் பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் (31), தாமஸ் பந்தில் அவுட்டானார். இதே ஓவரின் கடைசி பந்தில், இத்தொடரில் "பார்ம்' இல்லாமல் தவித்து வரும் ரெய்னாவும் (2) போல்டானார்.

ஹசி அரைசதம்:

மற்றொரு துவக்க வீரர் ஹசி, நேற்று மீண்டும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெக்கலம் பந்தில் சிக்சர் விளாசிய இவர், கார்த்திக் ஓவரில் அடுத்தடுத்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். 28 ரன் எடுத்த போது "அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பிய ஹசி, தாமஸ் பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார்.

தோனி ஏமாற்றம்:
ராகுல் சர்மாவின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த, கேப்டன் தோனி (26) தேவையில்லாமல் "ஸ்டம்டு' ஆனார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹசியும், 61 ரன்களில் வெளியேற, அணியின் ஸ்கோர் உயர வழியில்லாமல் போனது. பின் வந்த மார்கல், "டக்' அவுட்டானார். அனிருதாவும் (7) சொதப்ப, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்தது. 

பத்ரி நாத் (11) அவுட்டாகாமல் இருந்தார். புனே அணியின் டெய்லர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மோசமான துவக்கம்:

எளிய இலக்கை விரட்டிய புனே அணிக்கு மோனிஷ் மிஸ்ரா (9) சுமாரான துவக்கம் கொடுத்தார். அஷ்வின் பந்தில் சிக்சர் அடித்து மிரட்டிய ரைடர் (15), அடுத்த பந்தில் போல்டானார். முதல் நான்கு போட்டிகளில் தடை காரணமாக பங்கேற்காத மனிஷ் பாண்டே, மார்கல் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசினார். 
ஆனால் இவரும் (12) அடுத்த பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே சொதப்பி வரும் அதிரடி உத்தப்பாவும், அஷ்வின் சுழலில் சிக்கி "டக்' அவுட்டாக, புனே அணி 40 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
வீணான போராட்டம்:
இதன் பின் இணைந்த கேப்டன் யுவராஜ் சிங், மிதுன் மன்ஹாஸ் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மன்ஹாஸ் (20), போலிஞ்சர் வேகத்தில் சிக்கினார். 
சென்னை வீரர்களின் துடிப்பான பவுலிங், அசத்தலான பீல்டிங் முன்னால், இவர்கள் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதே பெரும்பாடாக இருந்தது. நீண்ட நேரம் களத்தில் போராடிய யுவராஜ், 43 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து, ஜகாதியின் "சூப்பர்' கேட்சில் வெளியேறினார். ராகுல் சர்மா (1) ரன் அவுட்டானார். 
அடுத்து போலிஞ்சர் ஓவரில் டெய்லர் (2), நாதன் மெக்கலம் (15) அவுட்டாக, புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டும் எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தாமஸ் (1), கார்த்திக் (1) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் மார்கல் 3, போலிஞ்சர், அஷ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பீல்டிங் அபாரம்
புனே அணிக்கு குறைவான இலக்கை நிர்ணயித்த சென்னை வீரர்கள், நேற்று பீல்டிங்கில் அசத்தினர். ரெய்னா, அபினவ் முகுந்த், ஜகாதி, அனிருதா ஆகியோரது அபாரமான பீல்டிங்கினால், புனே வீரர்கள் ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக 14.1 வது ஓவரில் யுவராஜ் அடித்த பவுண்டரிக்குப் பின், வேறு யாரும் கடைசி வரைக்கும் பவுண்டரியும் அடிக்க முடியவில்லை.

ஆன்மிகச் செய்தி மலர் :

* அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோவில்

மூலவர் : காயத்ரி-
  பழமை : 500 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : சிதம்பரம்
  மாவட்டம் : கடலூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  மூலவர் காயத்ரி மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். இவள் மூன்று அம்ச அம்பிகையாக காட்சி அளிக்கிறாள்.

சிவனுக்குரிய நந்தியை இவளது சன்னதிக்குள் பிரதிஷ்டை செய்துள்ளனர். கோஷ்டத்தில் அஷ்டபுஜ துர்க்கை, அமிர்த கலசம் ஏந்திய மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.

தலபெருமை:
     
மூன்று அம்ச அம்பிகை: விஸ்வாமித்திர மகரிஷி காயத்ரி மந்திரம் சொல்லி, பிரம்மரிஷி பட்டம் பெற்றார். இந்த மந்திரத்தைச் சொல்லும் போது தோன்றிய உருவத்தை காயத்ரியாக வடித்தனர். இவள் மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். பாதம் அருகில் ஸ்ரீசக்ரம் உள்ளது. இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரஸ்வதியாக அருளுவதாக ஐதீகம். இவளே மும்மூர்த்திகள் மற்றும் முத்தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.

பவுர்ணமி பூஜை: காயத்ரி, சூரியனுக்கு சக்தி தருபவள் என்பதால், சூரியனுக்கு உகந்த சிம்ம (ஆவணி) மாத பவுர்ணமியை ஒட்டி இவளுக்கு விழா நடக்கும். பவுர்ணமி நாட்களில் 1008 முறை காயத்ரி மந்திரம் சொல்லி, ஹோமத்துடன் விசேஷ பூஜையும் நடக்கிறது. குழந்தைகளின் கல்வி சிறக்க, இவளுக்கு சிவப்பு நிற மலர் மாலை அணிவித்து, வடை, பாயசம் படைத்து வணங்குகின்றனர். நவராத்திரியில் லட்சார்ச்சனையும், விஜயதசமியன்று பரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கும்.

தல வரலாறு:
     
  மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக, தல யாத்திரை சென்றான். வழியில் அவனைச் சந்தித்த அந்தணர் ஒருவர், காயத்ரி மந்திரத்தால் தான் பெற்ற புண்ணியத்தை மன்னனுக்கு கொடுத்தார். இதனால் அவனது தோஷம் நீங்கியது. மகிழ்ந்த மன்னன், அந்தணருக்கு பொருள் கொடுத்தான். அதை வாங்க மறுத்தவர், காயத்ரிக்கு கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன் இங்கு காயத்ரியை மூலவராகக் கொண்டு தனிக்கோயில் கட்டினான்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் காயத்ரி மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். இவள் மூன்று அம்ச அம்பிகையாக காட்சி அளிக்கிறாள். 
 
திருவிழா:
     
   நவராத்திரியில் லட்சார்ச்சனையும், விஜயதசமியன்று பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திறக்கும் நேரம்:
     
  காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 7.30 இரவு மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பகவத் கீதை - மனப்புயலை அடக்கிவிடு.

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் கமாண்டர்-இன் சீப் யார்?

விடை - K.M.கரியப்பா (1949-1953)

இதையும் படிங்க :

large_230655.jpg

சாய்பாபாவின் சரித்திரம்

பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.

இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.

சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். 

 இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றது.

* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது. 

* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். 

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். 
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. 
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை. 
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.

""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.



நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, சமச்சார், தின மலர்.

--

                                                               

No comments:

Post a Comment