Saturday, December 18, 2010

இன்றைய செய்திகள்.- டிசம்பர் - 18 - 2010



உலச் செய்தி மலர் :

இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்: விக்கிலீக்ஸ் ஆவணம்

வாஷிங்டன்,டிச.17: உலகில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த முயலும் வேளையில் பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் இந்தியாவிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 அந்நாட்டு அரசுக்கு தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் அனுப்பிய கடிதத்தில் இவ்விதம் தெரிவித்துள்ளதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

 இந்தியாவில் பல்வேறு மதம், மொழி, இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் சகிப்புதன்மையுடனும்,
ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர். இந்திய மக்கள் தங்களது விருப்பப்படி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம். ஒவ்வொரு மதத்தினரும் பிற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றனர். இதனால் இந்தியாவில் பயங்கரவாதிகளின் சித்தாந்தங்கள் எடுபடுவதில்லை என்று தூதரகம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 இந்தியாவில் கணிசமான முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் இந்து மக்களுடன் சகோதரத்துவத்துடனையே பழகுகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் குறித்து இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தூதரகம் கூறியுள்ளது.

புலிகள் அச்சுறுத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவத் தயார்: இலங்கை

கொழும்பு, டிச.17: விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து ரம்புக்வெலவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்

* பிரதமர் பதவி ஏற்காததன் மர்மம் என்ன?: புத்தகத்தில் எழுத சோனியா முடிவு



லண்டன், டிச.17: 2004 மக்களவை பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பெரும்பான்மை வலு கிடைத்த பிறகும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது ஏன் என்பதை தன்னுடைய சுயசரிதையில் எழுதப் போவதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

இதை "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

2006-ம் ஆண்டு கலிபோர்னியா மாநில கவர்னர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நிகரின் மனைவி மரியா சிரீவர் புதுதில்லிக்கு வந்திருந்தார். அவரைக் கெளரவிக்க அமெரிக்கத் தூதரகம் சார்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் சோனியா கலந்துகொண்டார்.

பொது நிகழ்ச்சிகளுக்கு வந்தால் அளவோடு பேசுவது, அதிகம் யாருடனும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருப்பது என்றே இருக்கும் சோனியா காந்தி அன்று அந்த விருந்தில் அனைவரிடமும் சற்று தாராளமாகவே பேசிப்பழகினார்

பல விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துகளை மனம் திறந்து பேசினார். சில வேளைகளில் நகைச்சுவையாகக் கூட கருத்துகளைத் தெரிவித்தார்.

""உங்கள் கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரு வெற்றி கிடைத்த நிலையில் பிரதமர் பதவியை ஏன் ஏற்கவில்லை?'' என்று மரியா கேட்டார்.

""பல சந்தர்ப்பங்களில் பலரும் என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள், உரிய காலம் வரும்போது இதற்கான பதிலை நான் சொல்வேன்; என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை குறித்து புத்தகம் எழுதுவேன் அப்போது இதைப்பற்றி நிச்சயம் தெரிவிப்பேன், இந்த முடிவுக்காக நான் வருந்தவில்லை'' என்று சோனியா அவருக்குப் பதில் அளித்தார்

மரியா சிரீவர் பாராட்டு: தன்னுடைய கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரும்பான்மை வலு கிடைத்திருந்த நிலையிலும் கூட பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்ததற்காகவும் நெருக்கடியான காலத்தில் காங்கிரஸýக்குத் தûமை ஏற்று அதை வலுப்படுத்தியதற்காகவும் சோனியாவின் துணிச்சலைப் பாராட்டுவதாக மரியா சிரீவர் தெரிவித்தார்.

* லியூ ஜியாபோவை சிறையில் சந்திக்க குடும்பத்தாருக்கு அனுமதி மறுப்பு

பெய்ஜிங்,டிச.17: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற லியூ ஜியாபோவை சிறையில் அவரது குடும்பத்தார் சந்திக்க சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.

 கடந்த சில தினங்களுக்கு முன் லியூ ஜியாபோவை சந்திப்பதற்கு அவரது சகோதரர் லியூ  ஜியாகுவாங் உள்பட குடும்பத்தார் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சிறை அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
 இத்தகவலை லியூ ஜியாபோவின் குடும்பத்தார் தெரிவிக்கவில்லை. அவர்களது சார்பில் அந்நாட்டு மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்பு கூறியுள்ளது.

 சீன அரசின் இத்தகைய போக்கு சீனாவில் உள்ள லியூ ஜியாபோவின் ஆதரவாளர்களுக்கும், ஜனநாயக போராளிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 10-ம் தேதி நார்வேயின் ஆஸ்லோவில் வழங்கப்பட்டது. ஆனால் லியூ ஜியாபோ விடுவிக்கப்படாததால் அவரால் விருது விழாவில் பங்கேற்க முடியவில்லை. அவரது மனைவி லியூ ஜியாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அவராலும் விருது விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
 லியூ ஜியாபோ சார்பில் யாருமே கலந்து கொள்ளாததால் விழா அரங்கில் அவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலியில் நோபல் விருதை வைத்து கெüரவித்தனர். இந்த நிகழ்வு பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது.

 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த லியூ ஜியாபோவின் ஆதரவாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். விருது வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்குகூட லியூ ஜியாபோவின் ஆதரவாளர்களை சீன அரசு அனுமதிக்கவில்லை. அந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

* அமெரிக்க தாக்குதலில் 20 தீவிரவாதிகள் சாவு

பெஷாவர்,டிச.17: பாகிஸ்தான் நாட்டின் கைபர் பழங்குடிகள் பகுதி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 20 தீவிரவாதிகள் இறந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர்.
கைபர்-பக்டூன் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பகலில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலுக்கு "டுரோன்' என்று அழைக்கப்படும் ஆள் இல்லாத உளவு விமானத்தை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது.

ஒரு மணி நேரத்துக்குள் இருமுறை தாக்குதல் நடத்தி இந்தத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தேசியச் செய்தி மலர் :

* லஷ்கரைவிட இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி

புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.

* 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் ரஷிய அதிபர்

புது தில்லி, டிச.17: இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு டிசம்பர் 20-ம் தேதி ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வருகை தரவுள்ளார்.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் எம். கடாகின் கூறியதாவது: மெத்வதேவின் வருகையின்போது இந்தியாவுடன் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகறது. மேலும் 2 அணு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

2 நாள் பயணத்தின்போது ஆக்ரா, மும்பைக்கு மெத்வதேவ் செல்வார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்காக மெத்வதேவ் அப்போது இரங்கல் தெரிவிப்பார் என்றார் அவர்

* தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதில் புதிய விதிகள் அறிமுகம்

புது தில்லி, டிச. 17: தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதில் புதிய விதிகளை அமல்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் பேரவைத் தேர்தலின்போது புதிய விதிகள் அமலாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பாளர்கள் தங்கள் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்யும்போது வருமானத் வரித் துறையின் புலனாய்வு பிரிவின் உதவியோடு அந்த ஆவணங்களின் தகவல்கள் குறித்து ஆராயப்படும்.
தேர்தல் நேரத்தில் வருமான வரித் துறையினர் விமான நிலையங்களில் சோதனையில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் வான்வழியாக பணம் கைமாறுவது தடுக்கப்படும்.

ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தனித்தனி செலவுக் கணக்கு பதிவேடு பராமரிக்கப்படும்.
மாநிலத்தின் தலைமை அலுவலகம், மாவட்ட தலைநகரங்களில்  24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.

பிகார் பேரவைத் தேர்தலின்போது இந்த விதிகள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டதால் முறைகேடுகள் பெருமளவில் குறைந்தன. எனவே, இனிவரும் தேர்தல்களில் புதிய விதிகளை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

* இந்திய ஊடகங்கள்: சீனப் பிரதமர் அதிருப்தி

புது தில்லி, டிச.17: இந்திய ஊடகங்கள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார் சீன பிரதமர் வென்ஜியாபோ.

இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி மிகுந்த அதிருப்தி அளிக்கின்றன. இருதரப்பு உறவையே பாதிக்கும் வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் செல்லும்முன் பத்திரிகை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் வென்ஜியாபோ பேசினார். அப்போது இக்கருத்தை அவர் வெளியிட்டார். இந்தியாவில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி இரு நாடுகளிடையே நட்பை வளர்க்க வேண்டும்.

இந்திய-சீன எல்லையில் இது வரை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடித்தது கிடையாது, ஆனாலும் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதாக ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் இரு நாடுகளிடையே ஏற்பட்ட விரிசலை நிவர்த்தி செய்ய இரு தலைவர்களும் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்றார் வென்ஜியாபோ.

வெள்ள அபாய ஒப்பந்தம்: சட்லஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்கள் குறித்த தகவலை இந்தியாவுக்கு அளிக்க சீனா முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு திபெத் பகுதியில் பெய்யும் மழையளவைக் கண்காணிக்கும் மையத்தை சீனா அமைக்கும். இதன் மூலம் சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்த தகவலை முன்கூட்டியே சீனா அளிக்கும்

இந்த ஒப்பந்தத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு திபெத் பகுதியில் பெய்யும் மழையளவைக் கண்காணிக்கும் மையத்தை சீனா அமைக்கும். இதன் மூலம் சட்லஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்த தகவலை முன்கூட்டியே சீனா அளிக்கும்.

இதற்காக ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் தொகையை இந்தியா, சீனாவுக்கு அளிக்கும். இந்தத் தொகை மூலம் மழை கண்காணிப்பு மையத்தை சீனா நிர்வகிக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் வரையான காலத்தில் தினசரி இரண்டு முறை சட்லஜ் ஆற்றில் வெள்ள நிலைமை குறித்த தகவலை சீனா அளிக்கும்.

சட்லஜ் நதிநீரை பிரதானமாகக் கொண்டு 6 நீர்மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தத் தகவல் மூலம் அவற்றை பாதுகாப்பாக செயல்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல பிரம்மபுத்திரா நதியின் வெள்ள அபாயம் குறித்த தகவலை அளிப்பதற்கும் சீனாவுடன் இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்தை இந்தியா அளிக்கும்.

நல்லெண்ண நடவடிக்கையாக இதுபோன்ற வெள்ள அபாய தகவலை பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு இந்தியா இலவசமாக அளிக்கிறது

* தமிழக அரசு நிர்ணயித்த பள்ளி கல்விக் கட்டணம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, டிச. 17: தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக அரசு நியமித்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கல்விக் கட்டண நிர்ணயத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்சு, இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்தது. நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டுமுதலே நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சதாசிவம், சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணம் செல்லும் என்று கூறி தனியார் பள்ளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மாநிலச் செய்தி மலர் :

தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு தனியார் வசம்


சென்னை, டிச. 17: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களுக்கு உரிய நேரத்தில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தொடர்கதையாகி வரும் இந்தப் பிரச்னைக்கு தேர்வாணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளும், துறைகள் ரீதியான தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் போன்ற தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் சேரும். அதுபோன்ற தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட உடன் விண்ணப்பங்களை பிரிக்கவும், அவற்றைச் சரிபார்க்கவும் தேர்வாணையத்தின் சார்பில் அதிகாரிகள் கொண்ட பிரிவுகள் உருவாக்கப்படும். இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கோர வேண்டும். அரசு எத்தனை பிரிவுகளை அனுமதிக்கிறதோ அந்த அளவுக்கு பிரிவுகள் அமைக்கப்படும்.

* எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலவச மின் இணைப்பு: மின் வாரியம் பதில்

சென்னை, டிச.17: எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (டிசம்பர் 31) இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு கோரி பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் 2 லட்சம் விவசாயிகளுக்கு நான்கு கட்டமாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

முதல் கட்டமாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி டிசம்பர் 16-ம் தேதி வரையில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின் இணைப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தினமணியில் டிசம்பர் 17-ம் தேதி செய்தி வெளியானது

* மழை, வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க ரூ. 230 கோடி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் அழுகிய நெற்பயிரை மத்தியக் குழுவிடம் வெள்ளிக்கிழமை காண்பிக்கும்

சென்னை, டிச. 17: கடலூர், நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க சுமார் ரூ. 230 கோடி தேவை என்று மத்தியக் குழுவினரிடம் மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் மத்திய குழுவினர் தங்களது ஆய்வை வெள்ளிக்கிழமை தொடங்கினர். மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராயச்சி அலுவலர் ஏ.முரளீதரன், மத்திய நிதி அமைச்சக உதவி இயக்குநர் ஜிதேந்திரகுமார், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்புச் செயலர் எஸ்.எஸ். பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலூர் மாவட்டத்தில் தங்களது ஆய்வை மேற்கொண்டனர்.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு அவர்கள் நெய்வேலி வந்தனர். வெள்ளிக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு கடலூர் சென்றனர்.

குறிஞ்சிப்பாடியை அடுத்த கல்குணம், மருவாய், மருதூர், பூங்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத் தோப்பு, லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெள்ளப் பெருக்குக்குக் காரணமான வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளச் சேதப்பகுதிகளையும், நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்கள், வெற்றிலை, மஞ்சள், கருணை உள்ளிட்ட பணப்பயிர்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

57 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: கடலூர் மாவட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தால் 57 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து, மத்தியக் குழு தலைவர் விஸ்வநாதன், உறுப்பினர் முரளீதரன் ஆகியோர் கூறியது

வர்த்தகச் செய்தி மலர் :

* ஹீரோ - ஹோண்டா நிறுவனங்களின் கூட்டணி முறிந்தது

சென்னை : கடந்த 26 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வந்த, ஹீரோ-ஹோண்டா நிறுவனங்களின் கூட்டணி முடிவடைந்தது. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக, ஹீரோ-ஹோண்டா இருந்து வருகிறது. இதில், 'ஹீரோ' இந்திய கம்பெனி; 'ஹோண்டா' ஜப்பான் நாட்டு கம்பெனி. இரு நிறுவனங்களும், 1986ல் ஒன்றாக இணைந்து செயல்பட துவங்கியது.

இந்நிறுவனத்தின், 'ஸ்பெலண்டர்' மோட்டார் சைக்கிள், விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. 'டூவீலர்' தயாரிப்பில் நீண்ட காலமாக இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், இரு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிவது என முடிவெடுத்துள்ளன. அதனால், 26 ஆண்டுகளாக நீடித்து வந்த கூட்டணி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த 26 ஆண்டுகளாக, 'ஹீரோ' நிறுவனத்துடன் ஒன்றாக செயல்பட்டு வந்த, 'ஹோண்டா' நிறுவனம், தன் வசமுள்ள 26 சதவீத பங்குகளை, 'ஹீரோ' நிறுவனத்திற்கு இன்றைய பங்கின் விலையில், விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனால், நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் எந்த பிரச்னையும் இருக்காது.
பங்குகள், எதிர்காலத்தின் அடிப்படையில், அதாவது கடன் பத்திரங்கள் வாங்குவது போல் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, 'சுசுகி, எஸ்கார்ட்ஸ்' போன்ற நிறுவனங்கள் பிரிந்துள்ளன. இந்திய டூவீலர் வாகனச் சந்தையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதால், நிறுவனங்கள் தங்களது சொந்த பிராண்டில், வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய விரும்புகின்றன. ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், வாகன உற்பத்தி செய்வதில் எந்த சிக்கலும், 'ஹோண்டா' நிறுவனத்திற்கு இல்லை.

வரும் 2014 வரை, ஹீரோ ஹோண்டா பிராண்டில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த இரு நாட்களாக பங்குகளின் விலையில் மாற்றமில்லை. ஆனால், எதிர் காலத்தில், 'ஹீரோ' நிறுவனம் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். 'ஹோண்டா' நிறுவனம், ஏற்கனவே தனது பிராண்டில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், இத்துறையில் முதலீடு செய்து வருகின்றன. இதனால், உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.


விளையாட்டுச் செய்தி மலர் :

* வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா (366/2)

செஞ்சுரியன், டிச.17: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர்கள் காலிஸ் 102 ரன்களுடனும், ஆம்லா 116 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை தனது முதல் இன்னிங்ûஸத் தொடர்ந்தது இந்திய அணி. மோர்கல் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் கேப்டன் தோனி ஆட்டமிழந்தார். இதையடுத்து இரண்டாவது நாளில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
வலுவான தொடக்கம்:

பின்னர் தனது முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஸ்மித், பீட்டர்சன் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 111 ரன்களை எட்டியபோது ஸ்மித் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பீட்டர்சனுடன் ஆம்லா ஜோடி சேர்ந்தார்.

பீட்டர்சன் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் காலிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் அரைசதமடித்தார் ஆம்லா. அவரைத் தொடர்ந்து காலிஸýம் 73 பந்துகளில் அரைசதமடித்தார்.
இதனால் அணியின் ஸ்கோர் 60 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய காலிஸ் 130 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்லாவும் 165 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. காலிஸ் 102 ரன்களுடனும், ஆம்லா 116 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்

மூலவர் : ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்)
  உற்சவர் : பொன்னப்பன்
  அம்மன்/தாயார் : பூமாதேவி
   -
  தீர்த்தம் :  அஹோத்ரபுஷ்கரணி
  ஆகமம்/பூஜை :  வைகானஸம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருவிண்ணகரம்
  ஊர் :  திருநாகேஸ்வரம்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல் வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.

-பேயாழ்வார்


 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. தாயார் அவதரித்த தலம்
 
இத்தலத்திற்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது.

108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம். திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.

தலபெருமை:

 திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதயகருடசேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

பஞ்சகோல சுவாமி: இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்கு  திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.

மனைவியை பிரியாத பெருமாள்: பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

தல வரலாறு:

மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், ""எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், ""நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், ""சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

திருவிழா:
 
  புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.
 

திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

எப்போதும் நிதானமாக இருங்கள் - புத்தர்.

* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும்.
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.

* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.

வினாடி வினா :

வினா - உலகிலேயே அதிகமான வருட மழை பொழிவைப் பெறும் பகுதி எது ?

விடை - சிரபுஞ்சி.


இதையும் படிங்க ;



மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா; சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு

திருப்புவனம்: மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்குதலைமுறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்துகுடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப்போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், இந்துக்குடும்பங்களை சேர்ந்தோர் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலை கோவிலாக வழிபடுகின்றனர்.

கிராம காவல்தெய்வமாகவும், வேண்டுதல் நிறைவேற்றும் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். இதற்காக இந்துக்கள் முறைப்படி மொகரம்பண்டிகையையொட்டி, காப்புக்கட்டி 10நாள் விரதமிருந்து தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.அமாவாசை முடிந்து மூன்றாம்நாளில் பிறைதெரிந்தவுடன் காப்புக்கட்டுதலுடன் தீமிதி திருவிழா துவங்குகிறது. 9நாள் முடிவில் அதிகாலையில் மொகரம்பண்டிகையன்று தீமிதிக்கின்றனர்.

எடுத்து உடலில் கொட்டுகின்றனர்: வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் செலுத்தும் பெண்கள், "பூமொழுகுதல்' என தீக்கங்குகளை, ஈரத்துணியால் உடல் முழுவதும் போர்த்தி உட்காருகின்றனர். அவர்கள்மீது குழியில் கிடக்கும் "நெருப்பாய்' இருக்கும் தீக்கங்குகளை "பாத்திமா, பாத்திமா' என்ற கோஷத்துடன் மண்வெட்டியில் எடுத்து உடலில் கொட்டுகின்றனர்.

"பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை : இக்கிராமத்தினரின் காவல்தெய்வமான பாத்திமாநாச்சியாருக்கு முதல்காணிக்கை செலுத்துவதும், எந்த விளைபொருள் விளைந்தாலும் முதலில் படைப்பதும் இன்றளவும் தொடர்கிறது. இங்குள்ள கபாடி, கிரிக்கெட், வாலிபால் குழு, மகளிர் குழுக்கள் பெயரையும் "பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை சூடுகின்றனர். இந்து,முஸ்லீம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் இந்த தீமிதி திருவிழாவைக்காண வெளிநாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து வருகின்றனர்.




நன்றி - தின மணி, தின மலர்.

Friday, December 17, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 17 - 2010.




உலகச் செய்தி மலர் :



* இந்திய-சீனக் கூட்டுறவு: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

புது தில்லி, டிச.16: இந்தியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. எல்லைப் பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் வென் ஜியாபோவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்  தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு, முக்கிய விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து  ஆலோசித்தனர். இரு நாடுகளிடையே மொத்தம் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

ஹாட்லைன்: பிரதமர் அலுவலகத்திலிருந்து சீன பிரதமருக்கு நேரடி தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்துவது. இரு நாடுகளும் இணைந்து ஆண்டுதோறும் மாநாடு நடத்துவது ஆகியன இதில் குறிப்பிடத்தக்கவையாகும்

இரு தலைவர்களும் 10 அம்ச கோரிக்கைக்கு உடன்பட்டுள்ளனர். இதில் எல்லை பிரச்னையும் அடங்கும். எல்லைப் பகுதியில் அமைதி நிலவ இரு நாடுகளும் பாடுபடுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஆதரவு அளிப்பது என்றும் சீனா உறுதியளித்துள்ளது.

இரு நாடுகளிடையிலான ஏற்றுமதி, இறக்குமதியில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், எதிர்கால வளர்ச்சிக்கு இணைந்து பாடுபடவும் முடிவு செய்யப்பட்டது.

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சீன பிரதமர் வென்ஜியாபோவை வரவேற்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

* நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகிறார் அசாஞ்சே

லண்டன், டிச. 16: விக்கி லீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். அவரது விடுதலையை எடுத்து ஸ்வீடன் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

பிறநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் தலைமைக்கு அனுப்பிய பல ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளிப்படுத்தி அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினார் அசாஞ்சே.

இந்தநிலையில் ஸ்வீடனில் இருந்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதான வழக்கில் லண்டனில் கடந்த சில நாள்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்த போதிலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவரை ஸ்வீடனிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த நாடு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, ஸ்வீடனின் கோரிக்கையை நிராகரித்தார். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும், பிரிட்டனிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஜாமீன் நிபந்தனைகள் அசாஞ்சேக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட இருக்கிறார்.

* அமெரிக்க உதவியை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்

புதுதில்லி, டிச.16: அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவியை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் திருப்பிவிடும் பிரச்னைக்கு இறுதித் தீர்வுகிடைக்க வேண்டும் என்றும் அதுவரை அமெரிக்காவிடம் இதுகுறித்து கூறிக்கொண்டே இருப்போம் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.

அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களை தலிபானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இது மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டிய விவகாரம். இதுகுறித்து அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதில் இறுதித்தீர்வு காணப்படும்வரை அமெரிக்காவிடம் இதுகுறித்து தெரிவித்துக் கொண்டே இருப்போம் என அந்தோனி கூறினார்

* ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

புது தில்லி, டிச.16: ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள், அலுவலகங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளின் மிரட்டலையடுத்து இந்த பாதுகாப்பை வழங்குமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காபூரிலுள்ள இந்தியத் தூதரகம், ஜலாலாபாத், காந்தகாரிலுள்ள தூதரக அலுவலகம், மஜார்-இ-ஷரீப், ஹெராத் பகுதியில் இந்தியர்கள் செயல்படுத்தும் திட்ட அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூதரகங்களுக்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பை அளித்து வருகின்றனர்.

தேசியச் செய்தி மலர் :

* உச்ச நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் விசாரணை!



புதுதில்லி, டிச. 16: 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டனர்.

மேலும் பாஜக ஆட்சி நடைபெற்ற 2001-ம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை முடித்து, வரும் பிப்ரவரி 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை துல்லியமாகத் தெரிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2001-ம் ஆண்டிலிருந்து (பாஜக ஆட்சியிலிருந்து) 2008 வரை விசாரிக்க வேண்டும்.

பிப்ரவரி 10-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல்  செய்ய வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும்.

தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது எப்படி என்பதை விசாரிக்க வேண்டும்.

இரட்டை தொழில்நுட்ப அனுமதி குறித்த அறிவிப்பு 2007 அக்டோபர் 19-ல் வெளியான நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும்.

அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெரும் அளவில் கடன் வழங்கி உள்ளது குறித்து விசாரிக்க வேண்டும்.

தனி நபர் அல்லது அமைப்பின் தலையீட்டுக்கு சிபிஐ இடம் கொடுக்க கூடாது.
நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

* கடிதத்தில் ராசா பெயர் குறிப்பிடப்படவில்லை: மொய்லி

புதுதில்லி, டிச.16: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2009 ஆகஸ்டில் தனக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.

அப்போதைய தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதினேன். அவரும் பதில் எழுதினார். அதில் எந்த அமைச்சர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதில் சர்ச்சை எதுவும் இல்லை. இதுதான் உண்மை என வீரப்பமொய்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது குடும்ப நண்பர்களுக்கு ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ராசா பேசியதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எம்பிக்கள் குழுவினர் புகார் மனு அளித்தனர். அந்த மனு சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அவர் பாலகிருஷ்ணனின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து மொய்லியிடம் கேட்டபோது, பாலகிருஷ்ணன் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை என பதிலளித்தார்.

* ரிசர்வ் வங்கி பவள விழா : புதிய நாணயம் வெளியீடு

சென்னை : ரிசர்வ் வங்கி பவள விழாவை முன்னிட்டு, புதிய ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது. இந்த, புதிய ஒரு ரூபாய் நாணயத்தின் முன் புறத்தில் அசோகா தூணின் சிங்கமும், மேற்புற இடப்பக்கம் இந்தியிலும், வலப்பக்கம் ஆங்கிலத்திலும், இந்தியா என்று எழுதப்பட்டிருக்கும். மையப்பகுதியில் சிங்கமுகத்தின் கீழ் மதிப்பு இலக்கம், சர்வதேச எண் அளவில் ஒன்று என்று பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் பின் புறத்தில் ரிசர்வ் வங்கியின், "லோகோ' பொறிக்கப்பட்டிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி என்று இடப்பக்கம் இந்தியிலும், வலப்பக்கம் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். கீழே பவள விழா என்றும், "1935-2010' என்று ஆண்டும் குறிக்கப்பட்டிருக்கும்.


மாநிலச் செய்தி மலர் ;

* ஸ்ரீரங்கம், ரங்கா, கோவிந்தா...முழங்க சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை 4.10 மணியளவில் நடந்தது. பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்த பக்தர்கள், ஸ்ரீரங்கத்தில் குவிந்து இருந்தனர்.

பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில், டிச., 6 ல் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. நேற்று நடந்த பகல் பத்து நிறைவு நாளில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை 4.10 மணிக்கு ரங்கா, கோவிந்தா கோஷம் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது . முன்னதாக அதிகாலை 3.15 க்கு, நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி, பிரசித்தி பெற்ற மூலவர் முத்தங்கி சேவை, இன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. திருச்சி மற்றும் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 3,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


* உலக வங்கி குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை, டிச.16: தமிழகத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து வரும் அந்த வங்கி அதிகாரிகள் குழுவின் தலைவர் நடாஷா ஹேவர்ட் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது 2-ம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச்செயலர் அலாவுதீன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் தீரஜ்குமார், உலக வங்கி அதிகாரிகள் கெவின் கிராக்ஃபோர்டு, வரலட்சுமி விமுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

உடுமலை: அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிகள் தண்ணீர் தேவையில்லை என கூறியுள்ளதால் தண்ணீர் திறக்கும் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தின் மூலம் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், அணை நீர் மட்டம் உயரவில்லை. இதனால், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.  புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை கணக்கிட்டு, அவ்வப்போது உயிர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, கடந்த மாதம்  24ம் தேதி அணை நிரம்பியது.  தொடந்து கடந்த 24 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு டிசம்பர் 15 முதல் 31 வரை 15 நாட்கள் தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். ஆனால், பாசன பகுதிகளில் கன மழை காரணமாக நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தேவை குறைவாக உள்ளதாலும் விவசாயிகள் தரப்பில் தற்போது தண்ணீர் தேவையில்லை என கூறி வருகின்றனர். ஆனால், கடை மடை விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  விவசாயிகளின் தேவை அடிப்படையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டு. பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவை அடிப்படையில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கேரளாவில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழில் எழுத அனுமதியில்லை

பொள்ளாச்சி: கேரளாவில் பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழ் மொழியில் எழுத கடந்தாண்டு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தாண்டு தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழியில் எழுத எவ்வித உத்தரவும் வெளியிடாததால் கேரளா வாழ் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளா மாநில தமிழ் வளர்ச்சிப்பணி இயக்க தலைவர் விக்டர் சார்லி நமது நிருபரிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்த பகுதிகள் கேரளா மாநிலத்துடன் சேர்க்கப்பட்ட போது, அங்கு வசிக்கும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மொழிச்சிறுபான்மை சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் மொழிச்சிறுபான்மை சட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் மொழிச்சிறுபான்மை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக போராட வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களுக்காக உயர்கல்வி வரையிலும் தமிழ்மொழியில் தேர்வு எழுதும் முறை உள்ளது.
 மேல்நிலைக்கல்வியிலும் தமிழ் மொழியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கேரளா அரசை வலியுறுத்தி போராடியதால், பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழில் எழுத அனுமதித்து உத்தரவிடப்பட்டது. கடந்தாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் தோற்றவர்கள் இம்ரூவ்மெண்ட் தேர்வை தமிழ் மொழியில் எழுதினர். ஆனால் இம்ரூவ்மெண்ட் தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பில் பிளஸ் 2 தேர்வை ஆங்கிலம், மலையாளத்தில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழில் எழுத கேரளா அரசு வெளியிட்ட உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. தமிழ் மொழியில் உள்ள விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் இல்லை என்று பொய்யான காரணத்தை கூறி இம்ரூவ்மெண்ட் தேர்வு முடிவை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை  வெளியிடாமல் உள்ளது.  இதனால் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் கேரளா முதல்வர் உடனடியாக தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, விக்டர் சார்லி தெரிவித்தார்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்வு

மும்பை, டிச.16: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து 19,864.85 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 56.45 புள்ளிகள் உயர்ந்து 5948.75 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ ஹோண்டா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டிஎல்எஃப், பார்தி ஏர்டெல், ஜிந்தால் ஸ்டீல், ஐடிசி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபம் அடைந்தன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா பவர், இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, பிஎச்ஈஎல், எல் அண்ட் டி, ஜெய்ப்ரகாஷ் அசோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன

விளையாட்டுச் செய்தி மலர் :

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா மோசமான துவக்கம்



செஞ்சுரியன், டிச.16: தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் இன்று தொடங்கவிருந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து பெய்துவரும் மழையால் டெஸ்ட் போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தீர்மானித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீரும், சேவக்கும் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு கம்பீர் 5 ரன்களுடனும், டிராவிட் 14 ரன்களுடனும் மோர்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. தெண்டுல்கர் 22 ரன்களுடனும் லட்சுமண் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

* ஆசிய செஸ் போட்டி: அன்னூர் மாணவிக்கு தங்கம்

அன்னூர்: ஆசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியில் அன்னூர் மாணவி, குழு போட்டியில் தங்கப்பதக்கமும், தனி நபர் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.ஆசிய செஸ் கழகம் மற்றும் எப்.ஐ. டி.இ., அமைப்புகளுக்காக, இலங்கை செஸ் கழகம் "ஆறாவது ஆசியன் பள்ளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியை கொழும்புவில் நடத்தியது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி டிச., 6ல் துவங்கி 13ல் முடிந்தது.  ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாணவியர் பிரிவில், குழு போட்டியில், அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி பிரியங்கா, திருத்துறைப்பூண்டி மாணவி ஹர்சினியுடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார்.  ஒன்பது வயதுக்கு உட் பட்ட மாணவியருக்கான தனி நபர் போட்டியில் அன் னூர் மாணவி பிரியங்கா இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென் றார்.  இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்திலிருந்து மூவர் பதக்கம் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவி பிரியங்கா மற்றும் அவரது பெற்றோர் காளிதாஸ், மருதாம்பாள் ஆகியோருக்கு, பள்ளி அறங்காவலர்கள் மற்றும் முதல்வர் ஸ்டீபன்சன் பாராட்டு தெரிவித்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு துவராகாநாதர் திருக்கோயில்

மூலவர் : துவராகாநாதர்(துவாரகீஷ்)

பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன் 
 
  புராண பெயர் :  சுதாமபுரி

  ஊர் :  துவாரகை

  மாவட்டம் :  அகமதாபாத்

  மாநிலம் :  குஜராத்

தல சிறப்பு:
   
  இவ்வூர் ஒரு காலத்தில் "சுதாமபுரி' எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும், மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.  
   
துவாரகையில் இருந்து 12 கி.மீ., தொலைவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான நாகேஸ்வரம் மகாதேவர் கோயில் உள்ளது.
 
 தலபெருமை:
பகவத்கீதை, ஸ்கந்தபுராணம், விஷ்ணு புராணம், ஹரிவன்ஷ் ஆகிய நூல்களில் இந்நகரம் தங்கத்தால் வடிக்கப்பட்ட தகவல் கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலில் மூழ்கிய துவாரகையின் அழிந்து போன சில பகுதிகளை கண்டெடுத்துள்ளனர்.இந்தியாவின் ஏழு தொன்மை மிக்க நகரங்களில் இதுவும் ஒன்று.

மூலவர் துவாரகீஷ் (துவராகாநாதர்) சிலை ஒரு மீட்டர் உயரமுள்ளது. இவர் நான்கு கரங்களுடன் உள்ளார். கற்சிலையாகும்.கோமதி நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. 

பேட் துவாரகை : துவாரகையில் இருந்து 32 கி.மீ., தொலைவில் பேட் துவாரகை, முல் துவாரகை என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரிஜினல் துவாரகை அமைந்துள்ளது. இதை படகுகளில் சென்று அடையலாம்.இது தனித்தீவாக காட்சியளிக்கிறது. ராமந்த்விப் தீவு என இதை அழைக்கின்றனர். கிருஷ்ணன் தன் குடும்பத்துடன் இங்கு தங்கியிருந்தார் என சொல்கிறார்கள்.பாமா, ருக்மணி, ராதா ஆகியோருக்கு தனித்தனி அறைகள் இங்கு இருந்தன.

அருகிலுள்ள தலங்கள் : கோபிதூலாப் என்ற இடத்தில் புண்ணியதீர்த்தமாடும் படித்துறை உள்ளது. இங்கே கிருஷ்ணன் பல கோபிகைகளை நீரில் மூழ்க வைத்து மோட்சம் அளித்தார். இங்கு மண் கோபி சந்தனம் என்ற பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை நெற்றி, மார்பு, கைகளில் நாமமாக இட்டுக் கொள்கின்றனர். சிலர் பூசுகின்றனர்.கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி கோயில் இங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. இது 1600 ஆண்டுகபழமையானது.கண்ணனைப் பெற்ற தாய் தேவகி, அண்ணன் பலராமன் ஆகியோருக்கும் கோயில்கள் உள்ளன. கோயில் வாசலில் அம்பாஜி (குஜராத்தின் காவல் தெய்வமான அம்பிகை) சன்னதியும், உள்ளே துளசி மாதா சன்னதியும் இருக்கிறது. துளசிக்கு சன்னதி இருப்பது அநேகமாக இங்கு மட்டுமே. பாரதயுத்தம் முடிந்த பிறகு குந்திதேவி இங்கு வந்து கண்ணனைச் சந்தித்தாள். "" உன்னை இனி எப்படி தரிசிப்பேன்?'' எனக் கேட்டு அழுத அவளிடம், ""உனக்கு எந்தக்கஷ்டம் வந்தாலும் நானே உன்னைக் காப்பாற்ற வந்து விடுவேன்,'' என்றாராம். உடனே குந்தி சொன்னாளாம் ""கண்ணா! அப்படியானால், தினமும் எனக்கு ஒரு கஷ்டத்தைக் கொடு,"" என்றாளாம்.எவ்வளவு இனிய பக்தி பாருங்கள். 

காந்தி பிறந்த இடம் : போர்ப்பந்தர் துவாரகைக்கு, பேட் துவாரகைக்கும் இடையில் உள்ளது. இவ்வூர் ஒரு காலத்தில் "சுதாமபுரி' எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர்.கண்ணனுக்கு அவல் கொடுத்த காட்சி அழகிய ஓவியமாக இங்கு வடித்துள்ளனர். இறைவனுக்கு 16 ஆரத்தி என்ற தீபாராதனை தினமும் நடத்தப்படும். இதுவே முக்கிய தீபாராதனை . பெருமாளின் விஸ்வரூபமான திரிவிக்கிரமனை தரிசித்த பலன் இப்பூஜையைக் கண்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்

தல வரலாறு:
ஜராசந்தன் கம்சனின் மைத்துனன். இவனது தங்கையைத்தான் கம்சன் திருமணம் செய்திருந்தான் கண்ணன்.

கண்ணன் கம்சனைக் கொன்றதால் தங்கை பூவிழந்ததைப் பொறுக்காத ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் படையை தோற்கடித்து அனைவரையும் கொன்ற கண்ணன், பிற்காலத்தில் நடக்கவிருந்த மகாபாரத யுத்தத்தைக் கணக்கில் கொண்டு ஜராசந்தனை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான். உயிர்தப்பிய ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க காத்திருந்தான். இவர்களைத் தவிர காலயவணன் என்ற மன்னனும் கண்ணனைக் கொல்ல திட்டம் வைத்தி ருந்தான்.தன்னால் யாதவ குலத்துக்கு தீங்கு வரக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தன் குலத்தாருடன் மதுராவில் இருந்து இடம் பெயர்ந்து,சவுராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கு வந்து விட்டார். அங்கே அவர்களுக்கு விஸ்வகர்மா பாதுகாப்பான ஒரு நகரத்தை அமைத்துக் கொடுத்தார்.கலையழகு மிக்க இந்நகரை கடலுக்கு நடுவே அமைக்க சமுத்திரராஜன் இடம் கொடுத்து உதவினான். 12 யோஜனை பரப்புள்ள இடம் தரப்பட்டது.துவாரகையை தங்கத்தாலேயே இழைத்தார் விஸ்வகர்மா. இதனால் இது "தங்க நகரம்' எனப்பட்டது. கண்ணன் தனது அவதாரம் முடிந்து மரணமடையும் வேளையில், வேடன் ஒருவன் அவன் மீது அம்பெய்தான். அப்போது துவாரகை கடலில் மூழ்கி விட்டது. பின்னர், இப்போதைய புதிய துவாரகை அரபிக்கடலில் கட்ச் வளைகுடா பகுதியில் எழுந்தது.

திருவிழா:
   
  கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று "பாவன் பேடா' என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு ஆடும் இந்த நடனம் பார்க்க அருமையாக இருக்கும்.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.  
   

ஆன்மீகச் சிந்தனை மலர் :

மனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

வினாடி வினா :

வினா - சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதலில் குடியேறியவர்கள் யார் ?

விடை - பில்ஹெப்பர்ட் - அமெரிக்கா
        கிட்பொங்கோ - ரஷ்யா
        ஜெர்ஜிய் சிரிகாலேவ் - ரஷ்யா
 
 
இதையும் படிங்க :

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு

அன்னூர்: அன்னூர் அருகே நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சை கிராம மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.  கஞ்சப்பள்ளி, முடக்குத் தோட் டத்தை சேர்ந்த விவசாயி குருசாமி. இவர் தோட் டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.  பல்லடம் சாந்தி பார்ச்சூன் நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்படும் கோழிக்குஞ்சுகளை ஒப்பந்த அடிப்படையில் 45 நாட்கள் வளர்த்து மீண்டும் அந்த நிறுவனத்துக்கு விற்று வருகிறார். 15 நாட்களுக்கு முன் அந்த நிறுவனத்திலிருந்து பண்ணைக்கு கோழிக் குஞ்சுகள் சப்ளை செய்யப்பட்டன. அதில் ஒரு குஞ்சுக்கு நான்கு கால்களும், இரண்டு மல துவாரங்களும் உள்ளன. இது குறித்து குருசாமி கூறியதாவது: குஞ்சாக இருந்தபோது நான்கு கால்களில் நடந்தது. 20 நாட்களில் நன்கு தீவனம் சாப்பிட்டு 800 கிராம் எடையுடன் உள்ளது. இப்போது முன்னங்கால்களை அழுத்தமாக பதித்தும், பின்னங்கால்களை லேசாக வைத்தும் நடக்கிறது. பின்னங்கால்களை அடிக்கடி மேலே தூக்கிக் கொள்கிறது. நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு இருக்கும் தகவல் தெரிந்து அல்லப்பாளையம், ருத்திரியம்பாளையம், கஞ்சப்பள்ளி கிராமங்களை சேர்ந்த பலரும் வந்து வியப்புடன் பார்த்துச் சென்றனர்.  இதுகுறித்து அன்னூர் கால்நடை மருத்துவமனை டாக்டர் தங்கவேல் கூறுகையில்,""நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறப்பது அரிதானது. "ஜீன்' மாறுபாட்டால் இப்படி நடக்கிறது. கோழி வளரத்துவங்கும்போது பின்னங்கால்கள் தானாக சுருங்கி விடும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.'' என்றார்.




நன்றி - தின மணி, தின மலர் 

Thursday, December 16, 2010

இன்றைய செய்திகள். - டிசம்பர் - 16 - 2010.







உலகச் செய்தி மலர் :

* இந்தியா - சீனா வளர்ச்சிக்கு உலகில் போதுமான இடம் உள்ளது: வென்ஜியாபோ  

இந்தியா, சீனாவின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு உலகில் போதுமான இடம் உள்ளதாக சீன பிரதமர் வென்ஜியாபோ கூறியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்த ஜியாபோ, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருநாட்டு தொழில்துறை தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்புக்கான கூட்டாளிகளாக உள்ளதாகவும், போட்டியில் எதிரிகளாக இல்லை என்றும், இருநாடுகளும் வளர்ச்சியடைய உலகில் போதுமான இடம் உள்ளதாகவும் கூறினார்.

"பொருளாதார போட்டியில் சீனா ட்ராகனாகவும், இந்தியா யானையாகவும் உள்ளதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். அந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேப்போன்று தொழிலதிபர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் கருதவில்லை" என்று ஜியாபோ மேலும் தெரிவித்தார்

* 2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனரை தேர்வு செய்தது "டைம்"

நியூயார்க், டிச.15- உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இவ்வாறு "டைம்" பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் அடிப்படையில் மார்க் ஜுக்கர்பெர்க் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* பணியாளர்கள் வேலைநிறுத்தம்: மூடப்பட்டது ஈஃபில் டவர்

பாரீஸ், டிச.15- பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக புகழ்பெற்ற ஈஃபில் டவர் மூடப்பட்டுள்ளது.

ஈஃபில் டவர் பராமரிப்பு பணியில் உள்ள ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துப் பணியாளர்களும் திடீரென இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, ஈஃபில் டவர் மூடப்படுவதாக அதை நிர்வகிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்கள் ஈஃபில் டவருக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கான உந்துதல் குறைந்துவிட்டது: ஓஇசிடி

இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) 9 விழுக்காடு வளரும் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கான உந்துதல் குறைந்து வருவதாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) கூறியுள்ளது.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து இயங்கிவரும் ஓஇசிடி (Organization for Economic Cooperation and Development), “முதலீட்டை பலப்படுத்தியதாலும், சில்லரை விற்பனை அதிகரிப்பினாலும் சீனா வளர்ச்சிக்கான உந்துதலைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தியா பொருளாதார மீட்சிக்காண உந்துதலை இழந்து வருகிறது” என்று ஆசிய நாடுகள் தொடர்பான தனது பொருளாதார மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

ஆசிய வர்த்தக சுழல் குறியீடு (Asian Business Cycle Indicator - ABCI) என்றழைக்கப்படும் குறுகிய கால பொருளாதார நிலைகளை கணக்கில் கொண்டும், சிஎல்ஐ (Composite Leading Indicators) என்றழைக்கப்படும் குறியீட்டின் அடிப்படையிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துவருவதை குறிப்பிடுகிறது.

சிஎல்ஐ குறியீட்டின் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 100.9 ஆக இருந்த அந்தக் குறியீடு, செப்டம்பரில் 100.8 ஆகவும், அக்டோபரில் 100.6 ஆகவும் குறைந்துள்ளதென ஓஇசிடி கூறியுள்ளது.

பொருளாதார சரிவின் அடையாளம் கனடா, இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளில் நன்கு தெரிகிறது எனவும், பிரேசில் நாட்டில் அது தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.75 முதல் 9 விழுக்காடாக இருக்கும் என்று கூறினாலும், அது உலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை பொறுத்தே உள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். காரணம், இந்தியாவின் ஏற்றுமதியில் 36 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே செல்கிறது.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளை ஆக்கிரமித்த நிலையில், இப்போது அயர்லாந்திலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவைப் பாதிக்கலாம் என்கிற அச்சம் பல மாதங்களாக நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* அயல் நாடுகளில் இயற்கை சொத்துக்கள் வாங்கல் தொடர்பாக புதிய கொள்கை: பிரதமர் அறிவிப்பு  

அயல் நாடுகளில் கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தித் தேவைகளுக்கான இதர கனிம வள சொத்துக்களை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய கொள்கை ஒன்றை அரசு விரைவில் உருவாக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நமது நாட்டின் எரிசக்தி தேவையை நிறைவு செய்ய நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை பெருமளவிற்கு அயல் நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பெருமளவிற்கு அந்நிய செலாவணி வெளியேறுவது மட்டுமின்றி, பன்னாட்டு சந்தையில் ஏற்படும் விலையேற்ற, இறக்கங்கள் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க அயல் நாடுகளில் நிலக்கரி சுரங்கங்கள், கச்சா எண்ணெய் கிணறுகள், அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளைப் பெற யுரேனியச் சுரங்கங்கள் ஆகியவற்றை அந்தந்த நாடுகளிடமிருந்து சொத்தாக வாங்கி, அவற்றை நிர்வகித்து இந்தியாவின் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான கொள்கை வகுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சி்ங், தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் மாநாட்டில் பேசியுள்ளார்.

“நமது நாட்டின் தேவைகளை நிறைவு செய்ய இப்படிப்பட்ட இயற்கை வளங்களை உலக அளவில் சென்று சொத்தாக வாங்கிப் பயன்படுத்தும் வாய்ப்பை பொதுத் துறை நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தித் தரவேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, கச்சா பொருட்களை பெறுவதற்கு இது முக்கியமாகும். பொதுத் துறை நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட உதவும் வகையில் தனித்த கொள்கை உருவாக்கப்படும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு வாரத்தில் இதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலிற்கு வைக்கப்படும் என்று மத்திய அரசு பொதுத் துறை அமைச்சகத்தின் செயலர் பாஸ்கர் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
அயல் நாடுகளில் இப்படிப்பட்ட கனிம சொத்துக்களை நமது நாட்டின் தனியார் நிறுவனங்கள் வாங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

* ராசா, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை

2ஜி அலைக்கற்றையை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்தார். இதையடுத்து இந்த ஊழல் புகார் தொடர்பான விசாரணையை முடுக்கிவிடுமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பதவி விலகிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள், நண்பர்களின் இல்லங்களில் சிபிஐ குழுவினர் கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த 8-ம் தேதி பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் அவருடைய வீட்டிலும், பெரம்பலூர், சென்னை ஆகிய இடங்களில் அவருடைய உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன. அதே நாளில் தில்லியிலும் ராசாவின் வீடு உள்பட பல இடங்களில் சோதனைகள் நடந்தன.

தில்லியில் ராசாவின் வீட்டில் இருந்து 3 டைரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலும், ஏற்கெனவே கிடைத்த வேறு சில தகவல்களின் அடிப்படையிலும் இரண்டாவது கட்டமாக புதன்கிழமை நாடு முழுவதும் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் ராசாவின் வீட்டில் புதன்கிழமையும் சோதனை நடந்தது. பெரம்பலூரில் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் பங்குதாரர் சுப்பிரமணி வீட்டிலும் சோதனைகள் நடந்தன. இரு வீடுகளிலும் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது

தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இந்த அமைப்பின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சங்கமம் என்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சோதனைக்குப் பிறகு ஜெகத் கஸ்பரை அதிகாரிகள் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
சென்னை அடையாறு பகுதியில் பத்திரிகையாளர் வீட்டில் சோதனை முடிந்தபிறகு, அவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள வங்கிக் கணக்குகள் பற்றி அதிகாரிகள் விசாரித்தனர்.

* நீரா ராடியா அலுவலகங்களில் சோதனை




அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே தரகராகச் செயல்பட்டதாக கூறப்படும் வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவின் அலுவலகங்கள், பண்ணை வீடு, அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதுபோல் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா தரகர்கள் என்று கூறப்படும் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதோடு அவர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

தில்லியில் சிபிஐ அதிகாரிகள் மட்டுமன்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்

ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் இருவரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்

தில்லியில் செüரி பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா, தொலைத்தொடர்பு ஆணைய உறுப்பினர் கே.ஸ்ரீதர், தொலைத்தொடர்புத் துறை துணை இயக்குநர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்

* பெட்ரோல் விலையை ரூ.2.96 உயர்த்தியது ஐஓசி


புது தில்லி, டிச.15: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96-க்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) புதன்கிழமை உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 உயர்த்தியது பாரத் பெட்ரோலியம் நிறுவனம்.
இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 உயர்த்தியது ஐஓசி. இதுகுறித்து ஐஓசி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐஓசி விநியோகிக்கும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.55.87 ஆக இருக்கும்.

இதில் தில்லி நகரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் விலையாகும் என்றார் அவர்.

* ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் நலன் கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்க பிரிவின் கருத்துக்கள் மற்றும் ஆவணங்களை, சுப்ரீம் கோர்ட் கோரியிருந்தது. அதன்படி அவைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் விசாரித்தனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை கண்காணிப்பது பற்றிய தீர்ப்பை, நீதிபதிகள் இன்று வெளியிட உள்ளனர்.

* மன்மோகன், கருணாநிதி, சிதம்பரம் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்



சென்னை, டிச. 15: பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

இந்திய அறிவியல் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரது வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது

மாநிலச் செய்தி மலர் :

* மழை பாதிப்பு: மத்தியக் குழு இன்று சென்னை வருகை

சென்னை, டிச. 15: தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு வியாழக்கிழமை சென்னை வருகிறது. 7 மாவட்டங்களில் 3 நாள்கள் அந்தக் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையால் மாநிலத்தில் 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியுள்ளன.

இந்த மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இரண்டு கட்டங்களாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு நடத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் ககன்தீப் சிங் பேடி, தஞ்சாவூரில் வி.கே.சுப்புராஜ், திருவாரூரில் கோ.சந்தானம், கன்னியாகுமரியில் சுனில் பாலிவால், திருநெல்வேலியில் சுர்ஜித் கே.சௌத்ரி, தூத்துக்குடியில் ஸ்வரண் சிங், விழுப்புரத்தில் ஜவஹர், புதுக்கோட்டையில் டேவிதார், ராமநாதபுரத்தில் ஹன்ஸ்ராஜ் வர்மா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிவதாஸ் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். அனைவரும் தங்களது அறிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளனர்.

அவர்களது அறிக்கையின் அடிப்படையில் நிவாரணப் பணிகளுக்கென |500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

* கழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறிவரும் சுகநதி



வந்தவாசி : கழிவுநீர் கலப்பதால் வந்தவாசி சுகநதி கூவமாக மாறிவருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  வந்தவாசி நகரை ஒட்டிச் செல்லும் சுகநதி சுமார் 67 கி.மீ. நீளம் கொண்டதாகும். மேல்பாதி கிராம ஏரியின் முடிவிலிருந்து தொடங்குவதாக கூறப்படும் இந்த ஆறு மதுராந்தகம் ஏரியில் சென்று முடிவடைகிறது. இந்த ஆறு பழங்காலத்தில் சூக்க ஆறு என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் நிலம் பயன்பெற்று வருகிறது.

 இதுதவிர÷குளிப்பது, சலவை செய்வது உள்பட வந்தவாசி மக்களுக்கு இந்த ஆறு பல்வேறு வழிகளில் மிகவும் பயன்பட்டு வந்தது.

கழிவுநீர் ஆற்றில் கலப்பது தொடர்கதையாகியது. இதனால் ஆற்று நீர் மேலும் மாசடைந்து தற்போது ஆற்று நீரில் கால் வைக்கவே அஞ்சும் அளவுக்கு உள்ளது. எனவே கலைமகள் சபா திருமண மண்டபம் அருகிலிருந்து யாதவர் தெரு வரை உள்ள சுமார் 200 அடி தூரத்துக்கு கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுவிடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  சுகநதியில் ரூ.50 லட்சம் செலவில் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் கூறிக் கொள்கிறது. ஆனால் அந்த சுகநதி கூவமாக மாறிவருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

தொழில் நுட்பச் செய்தி மலர் :

* நாற்றங்காலை முறையாக பராமரித்தால் கூடுதல் மகசூல்

சிதம்பரம்: தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:

கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.

இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர். விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும்.

புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது. மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிவு

மும்பை, டிச.15- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 19,647 புள்ளிகளில் முடிவடைந்தது.
ஹீரோ ஹோண்டா, டிஎல்எப், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்ஸி வங்கி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

டிசிஎஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 5,892 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

* முரளிதரனின் 800 விக்கெட்டுகளும் ரன் அவுட்களே: பிஷன் சிங் பேடி

புதுதில்லி, டிச.15- இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்டுகளும் ரன் அவுட் போன்றவையே என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

"முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், அவரை பந்து எறியும் வீரர் (ஷாட் புட்டர்) என்றுதான் நான் அழைப்பேன். அவர் வீழ்த்தியதாக கூறும் விக்கெட்டுகள் அனைத்தும் ரன் அவுட் போன்றவையே என்பது எனது கருத்து. இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் முரளிதரன் வரிசையில்தான் உள்ளார்." என்று பேடி விமர்சித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை முரளிதரனுக்கு உண்டு. இந்நிலையில், முரளிதரன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்து பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்: சாதிக்குமா இந்தியா?

செஞ்சுரியன், டிச.15: இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும்,இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த சில நாள்களாக மழை இல்லை என்றாலும் வியாழக்கிழமை மழைபெய்யக்கூடும் என்று தெரிகிறது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சை பால் ஹாரிஸ் மட்டுமே கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தில் உள்ள புற்கள் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் வான்ஸில் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இதுவரை 4 முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தான் விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி பெரிய அளவில் சாதித்ததில்லை என்ற குறை நீண்ட நாளாக இருந்து வருகிறது.

சமீப காலமாக இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

இந்திய அணி:

மகேந்திரசிங் தோனி (கேப்டன்), கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், முரளி விஜய், சேதேஸ்வர் புஜாரா, ரித்திமான் சாஹா, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட், பிரக்யான் ஓஜா

தென்னாப்பிரிக்க அணி:

கிரீம் ஸ்மித் (கேப்டன்), அல்விரோ பீட்டர்சன், ஹசிம் ஆம்லா, ஜேக்ஸ் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், ஆஸ்வெல் பிரின்ஸ், மார்க் பவுச்சர், ரியான் மெக்லேரன், டேல் ஸ்டெயின், பால் ஹாரிஸ், மோர்னே மோர்கல், லான்வாபோ சோட்சோபி.
போட்டி நேரம்: பிற்பகல் 2 மணி.
ஒளிபரப்பு: நியோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
  -
  அம்மன்/தாயார் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்

  தல விருட்சம் : தர்ப்பை

  தீர்த்தம் :  நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
 -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர் :  திருநள்ளாறு

  ஊர் :  திருநள்ளாறு

  மாவட்டம் :  புதுச்சேரி

  மாநிலம் :  புதுசேரி

பாடியவர்கள்:
 
 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

தேவாரபதிகம்

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
 பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
 நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.


 தல சிறப்பு:
 
  இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
 
இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன.

தலபெருமை:
சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார்.

இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான்.

ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான்.

அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள் : திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்

சனி- அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

தல வரலாறு:
நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர்.

சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான்.

கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.

திருவிழா:
 
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* திருப்தி விலைக்கு கிடைக்காது - குரு நானக்

* அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.

* இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம்,வாக்கு,காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.


வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் இலக்கண நூலாசிரியர் யார் ?

விடை - பாணினி - கி.மு.6 ஆம் நூற்றாண்டு.  

இதையும் படிங்க :

இணைய தளத்தின் விஸ்வரூபம்!

உலகின் ஒரே மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதையும், அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதையும் தெரிந்துகொள்வதற்கான சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் "விக்கிலீக்ஸ்" !

உலக போலீஸாகவும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவின் பிடறியை பிடித்து உலுக்குவது போல, அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பிவைத்த ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்டதை பார்த்தபோது, இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந்தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலுமாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்!

என்னதான் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

கூடவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சியில் காட்டி வாசித்தோ மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடைமுறையில் அத்தனை எளிதில் சாத்தியமான விடயம் அல்ல.

மாறாக இப்படி வேண்டியவர்கள், வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க, ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொட்டி வைத்து அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்கும் தகவல்களை அள்ளிக்கொள்ள வைத்துள்ளது "விக்கிலீக்ஸ்" !

இதன் மூலம் உலகையே புரட்டி போட வைத்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, தெரிந்த மற்றும் தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்குகிறது.



நன்றி - சமாச்சார், தின மலர், தின மணி.