Wednesday, June 22, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 22 , 2011

முக்கியச் செய்தி :

* தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு

ananahe.jpg

புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

 அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

 லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரைக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் அரசுத் தரப்புக்கும் அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.

 இந்த நிலையில் இந்த வரைவுக் குழுவின் ஒன்பதாவது மற்றும் கடைசிக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. வரைவுக் குழுவின் 10 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் 8 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

 இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பிலான அதிகாரப்பூர்வமான வரைவு மசோதா வெளியிடப்பட்டது. லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்பிலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கப்படும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதாக அண்ணா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

 பிரதமர் மற்றும் உயர்நிலை நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது, நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களுக்கு நடத்தை விதிகளை வகுப்பது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அவர்களை நீக்கும் நடைமுறையை வகுப்பது ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

 இது தொடர்பாக அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "அவர்கள் அவர்களது வரைவு மசோதாவைக் கொடுத்தார்கள். நாங்கள் எங்களது மசோதாவைக் கொடுத்தோம். இரண்டின் மீதும் குறுகிய விவாதம் நடந்தது. 6 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும் இரு பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன' என்றார்.

  அரசு தரப்பில் தரப்பட்டிருக்கும் மசோதா தொடர்பாக ஹசாரே குழுவினர் கருத்துத் தெரிவிக்க இன்னும் இரண்டு மூன்று நாள்கள் அவகாசம் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 ஹசாரே குழு அதிருப்தி:

 இதனிடையே, அரசு அளித்திருக்கும் வரைவு மசோதா குறித்து ஹசாரே குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இருக்கும் வகையில் அரசின் மசோதா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் பிரசாந்த் பூஷண்.

 இதற்கு முந்தைய வரைவிலாவது, பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போதைய வரைவில் அதுவும் இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் குறைகூறியிருக்கிறார்.

  அரசுக்குப் பாடம் புகட்டுவோம் - ஹசாரே: லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதால் திட்டமிட்டபடி, "அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில்' ஆகஸ்ட் 16-ம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருக்கிறார்.

உலகச் செய்தி மலர் :
* நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு
பெர்லின், ஜூன் 21: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.

 ஐரோப்பிய நாடுகளின் ஸ்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த நிதியத்துக்குத் தேவைப்படும் தொகை 2013-ம் ஆண்டுக்குள் திரட்டப்பட்டுவிடும்.

 ஓராண்டுக்கு முன்பு கிரேக்கத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் நிதி நெடுக்கடிக்கு உள்ளாயின. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இந்த நாடுகள் எதிர்கொண்ட நிதி நெருக்கடியால் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளமான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவானது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார தேக்க நிலை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆலோசித்து முதல் கட்டமாக கிரேக்கத்துக்கு 10,000 கோடி யூரோக்களை அளிக்க ஒப்புக் கொண்டனர். ஐரோப்பிய யூனியனும், அன்னியச் செலாவணி நிதியமும் (ஐஎம்எஃப்) இணைந்து இந்தத் தொகையை கடந்த ஆண்டு மே மாதம் அளித்தன.

 இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நிதி உதவி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 12,000 கோடி யூரோ தேவை என மதிப்பிடப்பட்டது. நிதியத்தில் மொத்தம் 44,000 கோடி யூரோக்கள் அளவுக்கு சேர்ந்துள்ள நிலையில் கிரேக்கத்துக்குத் தேவையான 12 ஆயிரம் கோடி யூரோக்களை அளிப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது என கூறப்படுகிறது. எஞ்சிய தொகையை அயர்லாந்து, போர்சுக்கலுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 மீட்பு நிதியத்தில் 620 கோடி யூரோ கடன் உத்தரவாதத்தின் பேரிலும் 80,000 கோடி யூரோ ரொக்கமாகவும் இருக்கும். இந்த நிதி 2013-ல் திரட்டப்பட்டு 2017-க்குள் அளிக்கப்பட்டு விடும்.

 திரட்டப்படும் நிதித் தொகையில் அன்னியச் செலாவணி நிதியத்தின் பங்கு 25,000 கோடி யூரோவாக இருக்கும். ஐரோப்பிய பிராந்தியத்தில் ஸ்திரமான நிதி நிலை, பொருளாதார சூழல் நிலவுவதற்காக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படுவதாக 17 நாடுகளின் தலைவர் ஜீன் கிளாட் ஜுன்கர் தெரிவித்தார்.

 முதல் முறையாக இந்த நிதியத்தில் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி தன் பங்காக 16,800 கோடி யூரோவை அளிக்கும். இதில் 2,200 கோடி யூரோக்கள் ரொக்கமாக இருக்கும்.

*  ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியது: 44 பேர் கருகி சாவு
மாஸ்கோ,ஜூன் 21: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ரஷிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி எரிந்ததில் அதில் பயணம் செய்த 8 ஊழியர்கள் உள்பட 44 பேர் உடல் கருகி இறந்தனர்.

 வட மேற்கு ரஷியாவின் கரேலியா குடியரசில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.

 ரஷியாவின் ரஷ்-ஏர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான டியு-134 ரக விமானம் 52 பேருடன் மாஸ்கோவில் இருந்து கரேலியா குடியரசின் தலைநகர் பெர்ரோஜவாத்ஸ்க் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. கரேலியா விமான நிலையத்தில் தரையிறங்கும் நிலையில் அது சாலையில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக அவசர கால அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரியானோவா தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விமானத்தில் 9 விமான சிப்பந்திகளுடன் 52 பேர் பயணம் செய்தனர். இதில் 44 பேர் விபத்தில் சிக்கி இறந்தனர். 8 பேர் பலத்த காயங்களுடன் தப்பினர். அவர்களில் ஒருவர் விமானப் பணிப்பெண் ஆவார் என்றார்.

 விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், விமானம் தரையிறங்கும்போது வானிலை மிக மோசமாக இருந்தது.

 விமான நிலையம் பனியால் சூழப்பட்டிருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது என்றார்.

 ரஷியா விசாரணை குழுவின் செய்தித் தொடர்பாளர் விலாடிமிர் மார்க்கின் கூறுகையில்,

 இந்த விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதத் தவறு நடந்துள்ளதா என்றும் விசாரணைக்குழு விசாரிக்கும். விமானம் விழுந்து நொறுங்கியதும் உடனடியாக மீட்புப்படை சென்று ஒரு குழந்தை உள்பட 8 பேரை மீட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவைப்பட்டால் அவர்களை மாஸ்கோவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

 கடந்த ஆண்டு டியு 154 ரக விமானம் ஒன்று ரஷியாவின் ஸ்மோலெஸ்க் நகரில் விழுந்து நொறுங்கியதில் அப்போதைய போலந்து அதிபர் லெசிகசிஸôய்ங்ஸ்கி உள்பட 96 பேர் இறந்தனர். டியு 134 விமானம் இரட்டை என்ஜின் கொண்ட விமானமாகும். இந்த ரக விமானம் 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


* இராக்கில் கார் குண்டு வெடிப்பு: 25 போலீஸôர் சாவு


பாக்தாத், ஜூன் 21: இராக்கில் கார் குண்டு வெடித்து 25போலீஸôர் இறந்தனர்.

 ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திவானியா நகர். இங்குள்ள கவர்னர் சலாம் ஹூசைன் வீட்டு முன்பு 30 மீட்டர் தூரத்தில் போலீஸôர் சோதனைச் சாவடி அமைத்து காவலுக்கு இருந்தனர். ÷செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப்படையினர் போலீஸ் சோதனைச் சாவடி மீது மோதினர்.

 இதில் காரில் இருந்த குண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதில் கவர்னர் வீட்டுக்கு முன்பு காவலுக்கு இருந்த 25 போலீஸôர் இறந்தனர். 30 போலீஸôர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.

* சீனாவில் நிலநடுக்கம்: 10 ஆயிரம் வீடுகள் சேதம்
பெய்ஜிங், ஜூன் 21: சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.

 சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள மாங்பாங் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.

 நிலநடுக்கத்தால் ரோடுகள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலநடுக்கத்தால் 94 வீடுகள் இடிந்து விழுந்தன. 9741 வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன அரசு 405 கூடாரங்களையும்,400 படுக்கை மெத்தைகளையும் அளித்துள்ளது.

 சாலமன் தீவில்... அமெரிக்கா அருகில் உள்ள சாலமன் தீவில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 7.34 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தன. இதனால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 கடந்த 2007-ம் ஆண்டு சாலமன் தீவில் 8.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமியும் உருவானது. இதில் 52 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.

* துனிசியா முன்னாள் அதிபர், மனைவிக்கு 35 ஆண்டு சிறை

தூனிஷ், ஜூன் 21: துனிசியா நாட்டு முன்னாள் அதிபர் ஜினே அல்அபிதின் பென் அலி மற்றும் அவரது மனைவி லைலா தரபெல்சி ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 துனிசியா நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவி வகித்த அவர் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி அவரை விரட்டியடித்தனர். இதனால் பதவியை ராஜிநாமா செய்து சவூதி அரேபிய நாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். தற்போது ஜினே அல்அபிதின் அந்நாட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் மீது

 துனிசியா நாட்டு நீதிமன்றத்தில் ஊழல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தல், போதை மருந்து கடத்தல், கருப்புப்பணத்தை பதுக்கிவைத்தல் என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ராணுவ நீதிமன்றத்தில் பொதுமக்களை கொலைசெய்த வழக்கு உள்பட 182 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுபோல் லைலா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இந்நிலையில் ஜினே மீதும் அவரது மனைவி மீதும் துனிசியா நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இருவருக்கும் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.170 கோடி அபராதமும் விதித்து திங்கள்கிழûமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

 தண்டனை அடைந்துள்ள ஜினேயையும் லைலாவையும் துனிசியாவுக்கு அனுப்பிவைக்கும்படி சவூதி அரேபியாவுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு நீதிமன்ற பேச்சாளர் தெரிவித்தார்.

* இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழக பேரவைத் தீர்மானத்துக்கு அமெரிக்க தமிழர் அமைப்பு வரவேற்பு

வாஷிங்டன், ஜூன் 21: இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அமைத்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபைக் குழுவின் இந்த அறிக்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இந்த தீர்மானத்தை அமெரிக்காவில் செயல்படும் தமிழ் அரசியல் செயல் கவுன்சில் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் இலியாஸ் ஜெயராஜா கூறுகையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அந்தத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிய தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

 இலங்கை வன்னிப்பகுதியில் நடந்த சண்டையின்போது அந்நாட்டு விமானங்கள் மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த பள்ளிகள் மீதும், அவர்கள் தங்கியிருந்த முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி அப்பாவி மக்களை அழித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவேதான் இங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. எனவே இலங்கையை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

* அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்தியருக்கு உயர் பதவி
பாஸ்டன், ஜூன் 21: அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் உயர்பதவிக்கு இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 சென்னை ஐஐடி பட்டதாரியான ஆனந்த் அகர்வால் என்பவரைத் தனது "கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத் திறன் (ரோபாட்டிக்ஸ்) ஆய்வுக்கூடத்துக்கு' இயக்குநராகத் தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் பிரபலமான மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்(எம்ஐடி). அவர் இந்தப் பதவியை ஜூலை 1-ம் தேதி ஏற்றுக்கொள்கிறார்.

 ஆனந்தின் தொலைநோக்குப் பார்வையும், ஆர்வமுமே அவர் இந்த முக்கியப் பதவியை அடையக் காரணமாகும் என்று இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை முதல்வர் இயான் வெயிட்ஸ் தெரிவித்தார். ஆனந்த் இப்போது "மல்டிகோர் பிராசசர்" எனப்படும் பல்நோக்குத் தொழில்நுட்பத் திறனுடைய கணினிப் பயன்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

 "எலக்டிரிகல் மற்றும் கணினி அறிவியல்'துறைக்கு மற்றொரு இந்தியரான ஆனந்த சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அமெரிக்காவின் நாசா, சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை நிதியுதவி செய்து வருகின்றன.

* இந்திய தூதரக அதிகாரி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார்
 நியூயார்க், ஜூன் 21: நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அலுவலகப் பணியாளர் சந்தோஷ் பரத்வாஜ், தூதரக அதிகாரி பிரபு தயாள் மீது நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.

 இந்தியாவுக்கான தூதரக அலுவலகம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ளது. தூதரக அதிகாரியின் அலுவலகம் மற்றும் வீடும் ஒரே இடத்தில் உள்ளது.

 இதில் வீட்டு பணியாளராக கடந்த ஆண்டு வரை பணி புரிந்த சந்தோஷ் பரத்வாஜ் என்ற பெண்மணி, தனக்கு ஊதியம் குறைவாக அளித்ததாகவும், தன்னை மிக மோசமான அறையில் அடைத்து வைத்ததாகவும் புகார் கூறியுள்ளார்.

 மேலும் தன்னை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்த முயன்றபோது அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான சந்தோஷ் பரத்வாஜ் (45), தனது புகார் மனுவில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு டாலர் அளிப்பதாகக் கூறி இந்தியாவிலிருந்து அழைத்து வந்ததாகவும், ஆனால் அதைவிடக் குறைவாக அளித்ததாகவும் கூறியுள்ளார். தனது பாஸ்போர்ட்டை பிரபு தயாள் வைத்திருப்பதாகவும் அதை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 தங்குவதற்கு இடமளிப்பதாகக் கூறி அழைத்துவந்த தம்மை மிகக் குறுகிய அறையில் தங்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சமயம் தன்னிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்றபோது அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 சந்தோஷ் பரத்வாஜுக்கு ஆதரவாக சட்ட உதவி ஆலோசனை மையம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பிரபு தயாள் விளக்கம் அளிக்குமாறு அச்சங்கம் கூறியுள்ளது. ஆனால் இந்த புகார் அனைத்தும் தவறானவை என்று குறிப்பிட்ட பிரபு தயாள், வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர், வேறு எங்கும் பணி புரியக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனால் அவரை வேறிட பணிகளுக்கு அனுமதிக்கவில்லை. இங்கு பணியாற்றுவதற்கு சம்பளம் அளித்தது தவிர, அவருக்கு அலுவலகத்தின் ஐந்தாவது தளத்தில் தங்குமிட வசதி அளிக்கப்பட்டது.

 அங்கு டி.வி, தொலைபேசி வசதிகள் உள்ளன. இந்தியாவில் அவரது குடும்பத்தாருக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் தொகை அனுப்பப்பட்டது என்றும் தயாள் குறிப்பிட்டார்.

 2010-ம் ஆண்டு வெளியேறிய அவர் இவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிகிறது என்றால் அதற்கு இங்கு பெற்ற தாராளமான ஊதியமும் ஒரு காரணம். பாஸ்போர்ட்டை குடியேற்றத்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக தயாள் கூறினார் 

தேசியச் செய்தி மலர் :

* மத்திய அமைச்சரவை மாற்றம்: பிரதமருடன் சோனியா ஆலோசனை

புதுதில்லி, ஜூன் 21 : மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்டில் கூட்டப்படவுள்ளது. அதற்கு முன் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, அமைச்சரவை மாற்றம் பற்றிய முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

 ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.

* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1- ல் தொடக்கம்

புது தில்லி, ஜூன் 21: நாடாளுமன்றத்தின் மழைக் காலத் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கி மூன்று வாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜூலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பன்சால் மேலும் கூறினார்.

 2ஜி விவகாரத்தில் ஜே.பி.சி. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னையால் கடந்த குளிர்கால கூட்டத் தொடர் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடங்கியது நினைவு கூரத்தக்கது

* காஷ்மீர்: சமரசம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-மெஹபூபா

ஸ்ரீநகர், ஜூன் 21: ஜம்மு-காஷ்மீரில் சமரச சூழ்நிலை ஏற்பட கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

 மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மெஹபூபா

 கூறியது: காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கு கொண்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநில நிலைமையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உன்னிப்பாக கவனித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மாநிலத்தில் சுமுக சூழ்நிலை ஏற்பட கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இதன்மூலம் மாநிலத்தில் சுமுக சூழ்நிலை ஏற்பட மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை.

 மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை.

 மாநிலத்தில் இப்போது அமைதி நிலவுவதை வைத்துக் கொண்டு தவறாக கணக்கிட்டுவிடக்கூடாது. இதே நிலை நீடித்தால் பெரும் சூறாவளி ஏற்படும் என மாநில அரசை எச்சரிக்க விரும்புகிறேன் என்றார்.
 
* இந்தியாவுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு மிரட்டல்
புது தில்லி, ஜூன் 21: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

 பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்- தவா என்ற தீவிரவாத அமைப்பு சார்பில் அந்நாட்டில் திங்கள்கிழமை மாநாடு நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஸ்திர தன்மை என்ற பெயரில் மாநாட்டில் விவாதம் நடத்தப்பட்டது. ஜமாத்-உத் தலைவர் அப்துர் ரெஹ்மான் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பேசினர். அப்துர் ரெஹ்மான் பேசுகையில், வெளிநாடுகளும், தொலைக்காட்சிகளும் சித்திரிப்பதுபோல் பாகிஸ்தான் நிலைமை மோசமாக இல்லை என்றார். அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய ஒசமா பின்லேடனை அவர் புகழ்ந்தார்.

 அமெரிக்க நமது எதிரி நாடு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 மேலும் 2007-ம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

* பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?

microphone300_21062011.jpg

 புது தில்லி, ஜூன் 21: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 இது தொடர்பாக 2010 செப்டம்பர் 7-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

thumb_261924.jpg

 நிதியமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று பிரணாப் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தில்லி நார்த் பிளாக்கில் உள்ளது. அவரது அலுவலகத்திலும், அவரது தனி உதவியாளரின் அறை, அவரது செயலரின் அறை, இரு கருத்தரங்க அறைகள் ஆகியவற்றில் உளவு முயற்சி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 ஆனால், 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ, கேமராக்களோ சிக்கவில்லை. அவற்றைப் பொருத்த பசை தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தனது கடிதத்தில் பிரணாப் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் உளவுப் பார்க்கும் முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டபோதுதான் உளவு முயற்சி குறித்து தெரியவந்தது. இதையடுத்தே பிரதமருக்கு பிரணாப் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.

 இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரணாப் முகர்ஜி, இப் பிரச்னை குறித்து, மத்திய உளவுத் துறையான ஐ.பி., முழு அளவில் சோதனை நடத்திவிட்டு, அலுவலகம் எந்த வகையிலும் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.

 ஆனால், பசை ஒட்டப்பட்ட இடங்களில் சிறிய துளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, அந்த இடங்களில் கேமராக்களோ, ரகசிய மைக்ரோபோன்களோ வைக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டிருக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் துறையினர் கூறினர்.

 பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிதியமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு நிகழ்வதாக நிதியமைச்சரே கடிதம் எழுதியிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.

 மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் பிரணாப்.

 அவரது அலுவலகத்திற்குள் ஒட்டு கேட்கப்படுவதாகக் கூறப்படுவது மிக முக்கியமான பிரச்னையாகும். பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில் இந்த பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


* கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்: நானாவதி கமிஷன் பதவிக் காலம் 16-வது முறையாக நீட்டிப்பு

ஆமதாபாத்,ஜூன் 21: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நானாவதி கமிஷனின் பதவிக் காலம் 16-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

 குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ். 6-வது பெட்டி சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டது.

 இதில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். ரயில் பெட்டி எரிந்ததில் 25 பெண்கள், 15 குழந்தைகள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். ÷

 இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 1263 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 298 தர்காக்கள், 290 மசூதிகள், 17 கோயில்கள், 3 கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டன.

 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் கலவரம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் நானாவதி, அக்ஷய் மேத்தா ஆகியோரை கொண்ட நானாவதி கமிஷனை குஜராத் அரசு 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் அமைத்தது. இந்த கமிஷன் 4145 சாட்சிகளை விசாரித்துள்ளது. இப்போது ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் தத்தின் சாட்சியத்தைப் பதிவு செய்து வருகிறது.

 இது வரை நானாவதி கமிஷனின் பதவிக் காலம் 15 முறை நீடிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த கமிஷனின் பதவிக் காலம் 16-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

* ராசா மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்த உத்தரவு
புது தில்லி, ஜூன் 21: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 ராசா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில் அவரை மத்திய அமைச்சரவையில் நீடிக்க விட்டது ஏன் என்பது போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அளிக்கும்படி தகவல் உரிமை ஆணையத்திடம் ஒருவர் மனு செய்திருந்தார். அந்த மனுவை தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருந்தது.

 இதற்குப் பதில் அனுப்பிய பிரதமர் அலுவலகம் ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவித கோப்பும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்துவிட்டது.இதையடுத்து அந்த நபர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் மனு செய்திருந்தார். இதையடுத்து ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அளிக்கும்படி மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி பிரதமர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக சைலேஷ் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் ராசா மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களின் உத்தரவாத நகல்களை ஜூலை 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

* மகளிர் மசோதா: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இந்நிலையில்,இந்த கூட்டத்தொடரிலாவது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மீராகுமார் விரும்புகிறார்.

இதனையடுத்து இது குறித்து விவாதிப்பதற்காக மீரா குமார் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார்.
   
மாநிலச் செய்தி மலர் :

* பிரான்ஸில் 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

21-chateaude-chantilly-france3.jpg

பாரிஸ்: 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு பிரான்ஸில் நடக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடத்தும் இந்த மாநாடு செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடக்கிறது.

இது தொடர்பாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளருமான துரை கணேசலிங்கம், செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, பிரான்ஸ் கிளை செயலரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இந்தாண்டு செப்டம்பர் 24, 25 சனி, ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸின் எவ்ரி (Evry) நகரில் நடைபெற உள்ளது.

இந்த இயக்கம் தென் ஆப்பிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1977ல் சென்னையிலும், 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்,1989ல் மலேசியாவிலும்,1992ல் ஆஸ்திரேலியாவிலும், 1996ல் கனடாவிலும, 1999ல் சென்னையிலும், 2001ல் தென் ஆபிரிக்காவிலும், 2004ல் புதுவையிலும், 2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு, வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதுவரை இந்த இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு, தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர் ஒற்றுமை பேணல்,முதலான விஷயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.

இந்த நோக்கங்களுடன் தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க் கலை மீட்பு,

தமிழ்க் கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.

மாநாட்டில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு, தொடர்பான ஆவணக்காட்சியும், தமிழர் வாழ்வியல் வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள், இறுவெட்டுக்கள், ஒலி இழை நாடாகள், நிழற்படங்கள் முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மாநாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவையும் இடம்பெற உள்ளன.

இவற்றில் சிறந்தவற்றை உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.

எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர், மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத் தர விரும்புவோர், கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர் அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்," என்று கூறப்பட்டுள்ளது.

* எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வருகிற ஜூன் 30 ஆம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்குகிறது.

இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் இன்று வெளியிட்டார்.

இதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்னும் மாணவி ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாமக்கல்லைச் சேர்ந்த தட்ஷிணி என்னும் மாணவி இரண்டாவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்னும் மாணவி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

* சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக்கம்
சென்னை: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீர் நில அதிர்ச்சி ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.

சேலம், கிருஷ்ணகிரி, ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு வரை இந்த நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தனர்.

காலை 5.21 மணிக்கு ஏற்பட்ட ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நில அதிர்ச்சியால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. வாழப்பாடி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், ராசிபுரம் போன்ற பகுதிகளில் நில அதிர்ச்சி சற்று பலமாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான அதிர்வு காணப்பட்டது. வேலூர்- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளி்ல் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் எதும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் மையம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருந்தது. அதே போல பனைமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உமையாள்புரம், உத்திரகவுன்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த நிலநடுக்கம் தீவிரமாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களிலும் தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 8.35 மணியளவில் நில அதி்ர்வு ஏற்பட்டது. வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்தன.

அடுத்த சில நிமிடங்களில் 8.40 மணி்க்கும் 2வது முறையாக மீண்டும் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.

மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், இந்த சிறு பூகம்பத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* ஜூலை 8 முதல் பி.இ கவுன்சிலிங்-எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு
சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்ந்து 35 நாட்களுக்கு நடைபெறும். சென்னையில் மட்டுமே இந்த கவுன்சிலிங் நடக்கும்.

தமிழகத்தில் உள்ள 494 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்துகிறது.

இதில் 1.42 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் நேற்று வழங்கப்பட்டன.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்களை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,

மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை www.annauniv.edu/tnea2011 என்ற முகவரியில் பார்க்கலாம். இந்த ஆண்டு கவுன்சிலிங் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் நடக்கும்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. அதில் பொது கவுன்சிலிங்குக்கு உரியவர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 பேர். அவர்களில் 83 ஆயிரத்து 950 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 825 பேர் மாணவிகள். பிளஸ்-2 தொழில்கல்வி படித்து விண்ணப்பித்தவர்கள் 5578 பேர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 348 பேர். 230 பேர் மாணவிகள்.

விளையாட்டு இடஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 457 பேரும், மாற்றுத்திறனாளிகள் 464 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 2 ஆயிரத்து 193 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு தான். காரணம் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருவதற்கு முன்னதாக என்ஜினீயரிங் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் தேர்வு முடிவு வெளி வந்து மாணவர்களுக்கு அவர்களின் மார்க் தெரிந்து விட்டது. இதனால் குறைந்த மார்க் எடுத்த பலர் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கவில்லை.

என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மார்க்குகளின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயார் செய்யப்படும்.

பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெற்றிருக்கும்போது முதலில் கணிதம், பின்னர் இயற்பியல், அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியியல் பாடத்தில் உள்ள மார்க்கை கொண்டு யார் அதிகம் எடுத்தார்களோ அவர்களை முதலில் கவுன்சிலிங்குக்கு அழைப்பார்கள்.

இதிலும் ஒரே மாதிரி வந்தால் பிறந்த தேதியில் யார் சீனியரோ அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிலும் ஒரே நாளில் பிறந்திருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். ரேண்டம் நம்பரில் யாருக்கு அதிக நம்பர் இருக்கிறதோ அவர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை வழங்கப்படும். ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும். இதை www.annauniv.edu/tnea2011 இணையத்தளத்தில் பார்க்கலாம்.

அடுத்த கட்டமாக விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம் தேதி அன்று நடக்கிறது. முன்னதாக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 29 மற்றும் 29 தேதிகளில் நடைபெறுகிறது.

தொழில்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 6ம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.

ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 மாணவ- மாணவிகள் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் 35 நாட்கள் நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு அதற்கான நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுப்பார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் 64 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 63 பேர் மாணவர்கள். 24 ஆயிரத்து 347 பேர் மாணவிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சலுகை தொடரும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக கிடந்தது. அந்த இடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதற்கான பணிநடைபெற்று வருகிறது.

துணைவேந்தர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் நேர்மையான முறையில் நியமிக்கப்படுவார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

* வேளாண் பல்கலை., : தேதி நீட்டிப்பு

 கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை., டீன் உதயசூரியன் தெரிவித்தார். மேலும் வரும் ஜூலை 13ம் தேதி இப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

* பார்வை குறைபாடு உடையவர் கல்லூரி முதல்வராக நியமனம்
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வராக, பார்வை குறைபாடுடைய பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கிலத்துறை முதுகலை பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சிக்கண்ணா கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வை குறைபாடு உடையவர்; தமிழக அரசு கல்லூரிகளில் பார்வை குறைபாடு உடைய ஒருவர், முதல்வராக பதவி வகிப்பது இதுவே முதல்முறை. இவர், ஹரியான பி.பி.எஸ்., பெண்கள் பல்கலையில் ஆங்கில விரிவுரையாளர் மற்றும் துறை முதன்மையராக பணியாற்றி உள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருந்து வருகிறார். சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :
மன அழுத்தம் நீக்கும் ஜாதிக்காய்

21-myristica-fragrans300.jpg

தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு.

இது ஜாதிக்காய் பற்றி எழுதப்பட்டுள்ள பழம் பாடல்.

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல்.

ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது.

ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்

அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும் , காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவறல் பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம்,குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

வர்த்த்கச் செய்தி மலர் :

* சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

மும்பை, ஜூன் 21: கடந்த நான்கு நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சிறிது முன்னேற்றத்தை சந்தித்தது. தொடர்ந்து 7 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை லேசாக முன்னேறியதும் பங்குச் சந்தை மீட்சிக்குப் பிரதான காரணமாக அமைந்தது. 54 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 17,560 புள்ளிகளானது.

 தேசிய பங்குச் சந்தையில் 18 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,275 புள்ளிகளானது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.67 சதவீதம் உயர்ந்து ரூ. 848.50-க்கு விற்பனையானது.

 இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை 0.67 சதவீதம் உயர்ந்து ரூ. 2,742.45-க்கு விற்பனையானது.

 கடந்த சில நாள்களாக ஏற்பட்ட சரிவு தாற்காலிகமானது என்று முதலீட்டாளர்கள் கருதியதால், செவ்வாய்க்கிழமை துணிந்து முதலீடுகள் செய்தனர். இதனால் சரிவிலிருந்து பங்குச் சந்தை மீண்டது.

 பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த விலையில் பங்குகளை வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் முதலீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் புள்ளிகள் கணிசமாக உயர்ந்தது.

 ஆசிய சந்தையில் ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரேக்கத்துக்கு உதவுவது என்று ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கென தனி நிதியத்தை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது.

 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த 7 நாள்களில் ரூ. 2,379 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

 மோரீஷஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்துக்கு வரி விதிக்கப்படும் என தகவல் வெளியானதால் திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. ஆனால் அத்தகவல் தவறானது என அரசு விளக்கியதையடுத்து செவ்வாய்க்கிழமை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இதுவும் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.

 டிசிஎஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக 3.24 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக ஹெச்டிஎப்சி 1.78%, ஹீரோ ஹோண்டா 1.39%, ஹெச்டிஎப்சி வங்கி 1.15% அளவுக்கு உயர்ந்தன.

 ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவன பங்கு விலை அதிகபட்சமாக 3.92 சதவீதம் சரிந்தது. இதற்கு அடுத்தபடியாக டிஎல்எப் 2.92%, ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் 2.56%, எஸ்பிஐ 1.38%, ஐசிஐசிஐ 1.06%, மாருதி சுஸýகி 0.99% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

 பங்குச் சந்தையில் கட்டுமான நிறுவனப் பங்குகள் 1.78 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இரண்டாம் நிலை நிறுவனப் பங்குகள் பெருமளவு சரிவைச் சந்தித்தன. செவ்வாயன்று 1,667 நிறுவனப் பங்குகள் நஷ்டமடைந்தன. 1,125 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,351.32 கோடி.

விளையாட்டுச் செய்தி மலர் :

* நியூஸீலாந்து கேப்டனாக ராஸ் டெய்லர் தேர்வு  

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை தோல்விக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து டேனியல் வெட்டோரி விலகியதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ராஸ் டெய்லரும், பிரண்டன் மெக்கலமும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

ராஸ் டெய்லரின் பெயரை நியுஸிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ஜான் பச்னன், தேசிய பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் தேசிய தேர்வுக் குழு மேலாளர் மார்க் கிரீட்பேட்ச் ஆகியோர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அவரை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில்

மூலவர்    :    தெய்வநாயகேஸ்வரர்
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    கனககுசாம்பிகை
தல விருட்சம்    :    மரமல்லிகை
தீர்த்தம்    :    மல்லிகா புஷ்கரணி
ஆகமம்/பூஜை     :    காமீகம்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர்
ஊர்    :    எலுமியன்கோட்டூர்
மாவட்டம்    :    காஞ்சிபுரம்
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:


திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுஉரை தனதுஉரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் கலையினார் மடப்பினை துணையொடும் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயில் ஆலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.

 தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.

இங்குள்ள தலவிநாயகர் ,குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

 தலபெருமை:


தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், "தெய்வநாயகேஸ்வரர்' என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், "அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் "எலும்பியங்கோட்டூர்' என்று மருவியது.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

  தல வரலாறு:


தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார்.

தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.

ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் "இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு!' என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.

தேவகன்னியர்கள் வழிபாடு: அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன், "யோக தெட்சிணாமூர்த்தி'யாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார்.

இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.

கோயில் நுழைவுவாயில் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன், "ரம்பாபுரிநாதராக' 16 பேறுகளை அழிக்கும் படி, 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

 திருவிழா:

குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆன்மா - அன்னை

ஆன்மா இறைவனிடமிருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் அவனைவிட்டுப் பிரிவதில்லை, அவனிடம் திரும்பச் செல்கிறது, ஆனால் சிருஷ்டியை விட்டு மறைந்துவிடுவதில்லை.

தனித்தன்மையை ஏற்றுக்கொண்ட, ஆனால் தெய்வத்தன்மையை இழந்துவிடாத, இறைவனே ஆன்மா. ஆன்மாவில் தனித்தன்மை பெற்ற ஜீவனும் இறைவனும் எல்லையில்லாக் காலத்திற்கும் ஒன்றாக உள்ளனர். ஆகவே உன்னுடைய ஆன்மாவை அறிவது என்பது இறைவனுடன் ஐக்கியப்படுவதாகும். ஆகவே ஆன்மா செய்ய வேண்டிய வேலை மனிதனை உண்மையான ஜீவனாக ஆக்குதல் என்று சொல்லலாம்.

ஆன்மா நித்யமானது, எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. இந்த திறமையின்மைகள், இயலாமைகளெல்லாம் அது சம்பந்தப்பட்டவரை உண்மையான இருப்புடையவை அல்ல.

வினாடி வினா :

வினா - சுரங்க இரயில் பாதை கொண்ட ஒரே இந்திய மாநிலம் எது ?

விடை - மேற்கு வங்காளம்.

இதையும் படிங்க :

பராமரிப்பு இல்லாததால் காணாமல் போகும் ஏரிகள்

large_261872.jpg

நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாய் இருக்கும் கண்மாய்கள், மெல்ல மெல்ல காணாமல் போகும் நிலை தொடர்வதால் கிராம வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அவற்றின் கட்டமைப்பே சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்பரப்பு நீர்வள ஆதாரம், 853 டி.எம்.சி.,யாகும். இதில் அண்டை மாநிலங்கள் நமக்கும் அளிப்பது 261 டி.எம்.சி., தமிழகத்தில் 75 பெரிய அணைகள், ஏழு சிறிய அணைகள் மூலம் 233.2 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இதில், 13 ஆயிரத்து 710 ஏரிகள், நீர்வளத்துறையினரால் பராமரிக்கப்படுகிறது. கடந்த 2008 -09ம் ஆண்டு கணக்கின் படி, 72.43 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், 18.93 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆற்று கால்வாய் மூலமும், 13.34 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏரிகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மீதம், அதாவது பாதி அளவிற்கு மேல், 39.89 ஏக்கர் நிலம் நிலத்தடி நீர்மட்டத்தையும், இதர நீர் ஆதாரத்தையும் நம்பியே உள்ளன. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் 85 சதவீதம் பயன்படுவதால், அது வேகமாக குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 145 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாப்பு இருக்கிறது. எட்டு ஒன்றியங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்øமையை அடைந்துள்ளது. 57 ஒன்றியங்கள் மிக அபாயகரமாகவும், 33 ஒன்றியங்கள் அபாயகரமான அளவிலும் நீர்மட்டம் உள்ளது. 142 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட காரணம், மழை நீரின் அடிப்படை ஆதாரங்களான ஆறு, குளம், கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததே ஆகும்.

அத்துடன், கடந்த 50 ஆண்டுகளாக அதிக அளவு ஆழ்குழாயை நம்பி நடத்தப்படும் விவசாயம் முக்கியத்துவம் பெற்றது காரணமாகும். தடுப்பணை அல்லது சிற்றாறுகளை இணைத்து நீர் விரயத்தைத் தவிர்க்கும் புதிய திட்டங்கள் பெரும் அளவில் இல்லை. இதில், ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவை அங்குள்ள கண்மாய்களே. வடமாவட்டங்களில் இவற்றை ஏரிகள் என்றும், தென் மாவட்டங்களில் இவற்றை கண்மாய் என்றும் அழைக்கின்றனர். முன்பு இவற்றை பராமரிக்கும் பணி, அந்தந்த பகுதி மக்களிடமே இருந்தது. ஆனால் இப்போது நடைமுறை சாத்தியம் அல்ல. மேலும், செங்கல்பட்டு ஏரிகள் வளம் மூலம் ஏராளமாக பாசனப் பரப்பும், நெல்விளைச்சலும் இருந்ததாக பிரிட்டிஷார் ஆவணங்கள், சாட்சியம் கூறுகின்றன.

ஏரிகளை பாதுகாக்க தற்போது பல்வேறு மாநிலங்களில், "பாசனத் தலைவர் சபை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் பாசன வசதி பெறும் நில உரிமையாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இச் சபைக்கு முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தூர் வாருதல், மராமத்து செய்தல், பாசன முறைகள் ஆகியவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகளை பொதுப்பணித்துறையே பராமரித்து வருகிறது. அரசின் வசம் இருந்தும் ஏராளமான கண்மாய்கள், ஆக்கிரப்பாளர்கள் கையில் சிக்கி உருத்தெரியாமல் சிதைந்து வருகின்றன. இதில் அரசியல் தலையீடு அதிகரித்ததால் சீர்குலைவு ஏற்பட்டது. ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை ஏரிகளை பராமரிக்கவும், தூர் வாரவும் கணிசமான தொகை ஒதுக்குகிறது. இருப்பினும், இப்போதும் பெரும்பாலான ஏரிகள் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத் தாமரை போன்ற நீர் உறிஞ்சும் தாவரங்களால் நிறைந்து காணப்படுகின்றன. அவை, சீரமைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

இது குறித்து, விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூறியதாவது: முன்பு கண்மாய்களை பாதுகாக்க, "லஸ்கர்' என்பவர்கள் இருந்தனர். இப்போது அது போன்ற முறை இல்லை. இதனால், தண்ணீர் திறப்பு, ஷட்டர் பராமரிப்பு, கரைகள் சீரமைப்பு போன்றவை சரிவர நடப்பதில்லை. சென்னையில் மட்டும் முன்பு நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. 1960, 62ம் ஆண்டுகளில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏரி, ஆற்று பாசனத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஏரிகளில் கொண்டு வரப்பட்ட காடு வளர்ப்பு திட்டம், ஏரிகளில் தூர் வாரப்படாமல் செய்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில், நீர், நில வள மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில், உலக வங்கியிடம் 2,400 கோடி ரூபாய் கடன் பெற்று ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

குடிநீர் வசதி, பாசன வசதி, இவைகளை கருத்திற்கொண்டு நீர்நிலைகள் அமைப்பது பற்றி இனி ஒரு ஒட்டுமொத்த அணுகுமுறை தேவை. தடுப்பணைகள், தற்போது இருக்கும் நிர்நிலைகளில் சேரும் மாசு முற்றிலும் தடுக்க அடிப்படை அணுகுமுறை, அதற்கான செயல் திட்டம் தேவை. மேலும், உலக வங்கி போன்ற அமைப்புகளில் இருந்து பெறப்படும் திட்டம் என்றால், அதன் பயன் முற்றிலும் மக்களுக்கு செல்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தினால் ஒழிய, இனி எதிர்வரும் காலங்களில் நீர்நிலைகள் முற்றிலும் மாசற்றதாக காப்பது என்பது சுலபம் அல்ல. நீர்நிலைகள், தேசிய சொத்து என்ற கருத்துடன் அரசு மேற்கொள்ளும் திட்டப்பணிகள் அமைய வேண்டுமே ஒழிய, ஐந்தாண்டுகள் ஆட்சிபுரியும் கட்சிகளின் செயல்திட்டம் அல்ல என்பதும் வெளிப்படையாக அமைய வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது.

வி. கோபாலகிருஷ்ணன்.


* நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

large_261929.jpg

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே, நான்கு தலைமுறையைச் சேர்ந்த, 90 குடும்பங்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊராட்சி, கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி, சுப்பராய செட்டியார். இவருடைய வாரிசுகள், ஐந்து தலைமுறையை எட்டி விட்டனர். இதில், நான்கு தலைமுறை உறவினர்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குருக்கம்பாளையம், ராயர் பெருமாள் கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரங்கசாமி தலைமையில், இந்த சந்திப்பு நடந்தது. நான்கு தலைமுறையை சேர்ந்த, 90 குடும்பங்களில், 323 பேர் பங்கேற்றனர். கோவை, வாராஹி மணிகண்ட சாமிகள் ஆசி வழங்கி பேசுகையில், "பெரியோரை மதித்தல், அனைவரிடமும் அன்பு செலுத்துதல் ஆகியவை, குடும்பம் சிறக்க உதவும். நாம், நம் குடும்பம் என்ற வட்டத்துக்கு வெளியே வந்து, சமுதாயம், ஊர் என்ற அளவில், முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பல தலைமுறையினர், ஒரே சமயத்தில் சந்திக்கும் இந்நிகழ்ச்சியில், ஆதரவற்றவர்களுக்கு உதவ, மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: எங்கள் மூதாதையர், 120 ஆண்டுகளுக்கு முன், தேக்கம்பட்டியிலிருந்து பிழைப்புக்காக,கேரள மாநிலம் மண்ணார்க்காடு, கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் அன்னூர் பகுதிக்கு வந்தனர். இதுவரை பெரும்பாலும், வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய தலைமுறையினர், ஆசிரியர் உள்ளிட்ட அரசு பணியிலும், கம்ப்யூட்டர் துறையிலும் நுழைந்து சாதித்து வருகின்றனர். இனி, ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, ஆதரவற்றோருக்கும், வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கும் உதவ, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மூன்று மாநிலங்களிலிருந்து, ஒரு வயது குழந்தை முதல், 90 வயது பாட்டி வரை, பங்கேற்ற இந்த சந்திப்பு, புதிய தலைமுறையினருக்கு, குடும்பம், உறவு குறித்து, புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

 

Tuesday, June 21, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 21 , 2011

முக்கியச் செய்தி :

கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

20-kanimozhi1-300.jpg

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. இதனால் கனிமொழியால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்ததால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் நிலவியது.

ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.

கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும் கனிமொழிக்கும் தொடர்பே இல்லை. கலைஞர் டிவியின் அன்றாட செயல்பாடுகளில் அவர் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் சேர்த்தது தவறு.

மேலும் கனிமொழி அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அதில் கனிமொழி மற்றும்ச ரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே ஜாமீன் கோரி அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

இதனால் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் நீதிபதி சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

உலகச் செய்தி மலர் :

* ஒரு ஆப்பிளும் டைனோசரும்...!

31-apple-200.jpg

ஏ.கே.கான்

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.

* அமெரிக்க நீதிமன்றம் சம்மன்: நிராகரித்தார் ராஜபக்சே!

கொழும்பு: தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதை ராஜபக்சே நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராகியர் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவர் என்ற முறையில் ராஜபக்சே நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை விதிகளின்படி அதிபர் விதிவிலக்கு பெற்றவர் என நீதித்துறை அமைச்சகச் செயலர் சுகதா காம்லத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்மன்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். எங்களது சட்ட நிலைப்பாடு குறித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த வாரமே தெரிவித்துவிட்டேன் என காம்லத் குறிப்பிட்டார்.

ஐநா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராஜபக்சே செப்டம்பரில் நியுயார்க் வரவிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ராஜபக்சே அமெரி்க்கா செல்வதை தடுக்க முடியாது:

இந் நிலையில் ராஜபக்சே அமெரிக்கா செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரசு பதவியில் உள்ள தலைவர்களுக்கு விதிவிலக்கு உள்ளதாகவும், இதனால் அவரது பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

 இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம்!

20-internet4-300.jpg

சிங்கப்பூர்: .காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.

இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன. இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.

இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம். இதற்கான செலவும் அதிகமாகும்.

அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

* தரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை: சீனா அட்டூழியம்

large_260561.jpg

இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.

சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.

* இந்தியாவுடனான பிரச்னைக்கு போரால் தீர்வு காண முடியாது: சொல்கிறார் பாக்., கிலானி

large_261281.jpg

இஸ்லாமாபாத்: ""இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். எந்த ஒரு பிரச்னைக்கும் போரால் தீர்வு காண முடியாது,'' என, பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார்.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி மேலும் பேசியதாவது: இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும், நட்புடன் இருக்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதில், காஷ்மீர் பிரச்னையும் அடக்கம். பிரதமர் மன்மோகன் சிங்கை, பல முறை சந்தித்துள்ளேன். அனைத்து பிரச்னைகளையும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என, அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். காஷ்மீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் வரவுள்ளார். பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பசீருடன், முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சு நடத்துவார். காஷ்மீர் பிரச்னைக்கு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தீர்வு காண வேண்டும் என, சர்வதேச சமுதாயத்திடம், பாகிஸ்தான் வலியுறுத்தும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்கும். இதன் மூலம், சர்வதேச சமுதாயத்தின் நன் மதிப்பு, பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இவ்வாறு கிலானி கூறினார்.

* பிரிட்டன் பல்கலை வேந்தர் பதவிக்கு மளிகை கடை நடத்தும் இந்தியர் போட்டி
கேம்பிரிட்ஜ் : பிரிட்டனில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையின் வேந்தர் பதவிக்கு நடக்கும் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மளிகை வர்த்தகம் செய்து வருபவருமான அப்துல் அராய்ன் என்பவர் போட்டியிடுகிறார்.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் நகரில், உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இதன் வேந்தராக, பிரிட்டன் இளவரசர் பிலிப், 1976ல் இருந்து பதவி வகித்து வருகிறார். இம்மாத இறுதியில், இந்த பதவியில் இருந்து, அவர் ஓய்வு பெறவுள்ளதால், புதிய வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

மிகவும் கவுரவம் வாய்ந்த இந்த பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் அராய்ன் என்பவர் போட்டியிடுகிறார். இவர், பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற அப்துல் அராய்ன், ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இதன்பின், பெரியளவிலான மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்திய உணவு மற்றும் சமையல் பொருட்கள், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேந்தர் பதவிக்கான தேர்தலில், அப்துல் அராய்னை தவிர, சய்ன்ஸ்புரி, பிரயன், மைக்கேல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து அப்துல் அராய்ன் கூறுகையில், "பிரிட்டனில் உள்ள எங்கள் கடையில், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், அடிக்கடி வந்து பொருட்களை வாங்குவார். அவர் எங்களின் வாடிக்கையாளர். கேம்பிரிட்ஜில் படிக்கும் இந்திய மாணவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்' என்றார்.

* அணுமின் நிலைய பாதுகாப்பு துவங்கியது ஐ.ஏ.இ.ஏ., கூட

large_261534.jpg

டெஹரான் : அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு குறித்து பேச, உலகளவில் 150 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,), ஐந்து நாள் கூட்டம் நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது.

ஜப்பானில், மார்ச் 11ம் தேதி சுனாமி தாக்கியதில், அந்நாட்டின் புக்குஷிமா அணுமின் உலை வெடித்து, அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, உலக நாடுகள் அனைத்தும் அணுமின் உற்பத்தியின் அவசியம் குறித்து பரிசீலிக்க துவங்கியுள்ளன.

ஜெர்மனியில் உள்ள அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களையும் 2022ல், இழுத்து மூட, அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இத்தாலியில், அணுமின் நிலையங்களை புதுப்பிக்க, அந்நாட்டு பார்லிமென்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது, அணுமின் நிலையங்களை பாதுகாப்பது தொடர்பாக, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், ஜப்பானில் சுனாமியால் ஏற்பட்ட அணுமின் உலை வெடிப்பு குறித்தும், எதிர் காலத்தில் உலகளவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பேசவும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஐந்து நாள் கூட்டம், நேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் துவங்கியது. இக்கூட்டத்தில், 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், குறிப்பாக ஜப்பானில், புக்குஷிமா அணுமின் உலை வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு குறித்து பேசப்பட்டது. இந்த அணு உலை வெடிப்பு தொடர்பான அறிக்கையும், ஐந்து நாட்கள் நடைபெறும் தொடர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அமைதி பேச்சுக்கு திரும்பும்படி சிரியா மக்களுக்கு அதிபர் அழைப்பு


large_261519.jpg

டமாஸ்காஸ் : "சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே, பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

சிரியா அரசுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக, நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத், தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: சிரியா மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்கள் இதை நிறைவேற்ற விடாமல், சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவிலான பேச்சுவார்த்தை சிரியா நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்கும். வன்முறையைத் தொடர்ந்து, துருக்கி நாட்டில் அடைக்கலமானவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். வன்முறையில் பலியானவர்களுக்காக வருந்துகிறேன். இவர்களது பலி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசவேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஸ்திரத்தன்மை இல்லாமல் வளர்ச்சி இல்லை. வன்முறையால் சீர்திருத்தம் ஏற்படாது.

சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வர தேசிய அளவில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மற்றொரு குழு ஏற்படுத்தப்படும். ஊழலை ஒழிப்பதில் மூத்த குடிமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்தில் குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளேன். குறிப்பாக, ஜிசிர் அல் சுகுர் பகுதி மக்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையால், இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில், ஆயிரத்து 300க்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்ய அதிபர் எதிர்ப்பு: லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா ஓட்டளித்தது. இதேபோல், சிரியா மீது ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஆதரித்து ரஷ்யா ஓட்டளிக்காது என, அந்நாட்டு அதிபர் டிமித்ரி மேத்வெதேவ் தெரிவித்தார்.

* துனீசிய மாஜி அதிபருக்கு 35 ஆண்டு சிறை
துனீஸ்: வருமானத்திற்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் துனீ்ஸ் நாட்டின் மாஜி அதிபருக்கும், அவரது மனைவிக்கும் துனீஸ் கோர்ட் 35 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. துனீஸியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அந்நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவியில் இருந்த ஜி‌னி-அல்-அபிதின் பென்அலி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளர். ‌எனினும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், வரும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் சொத்து சேர்த்து என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று துனீஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அதிபர் பென்அலி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவருக்கும் 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், 90 மில்லியன் துனீசியன் தினார் (65.5 மில்லியன் டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டது. வரும் 30-ம் தேதியன்று இந்த தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* லோக்பால் ஆலோசனையில் நீடிக்கிறது முட்டுக்கட்டை

large_261231.jpg

லோக்பால் மசோதா தொடர்பாக நடைபெற்ற மிக முக்கிய கூட்டம் குறித்து, அரசு ஒரு கருத்தையும், அன்னா ஹசாரே தரப்பு வேறொரு கருத்தையும் கூறியுள்ளது. மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக அரசு கூறியுள்ள அதே வேளையில், முக்கிய பிரச்னைகள் அனைத்தும் அப்படியே உள்ளதாக ஹசாரே தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பிரதமரை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வருவதா, வேண்டாமா என்ற பிரச்னையை தவிர, புதிதாக வேறு இரு பிரச்னைகளும், இரு தரப்புக்கும் முளைத்துள்ளதால் முட்டுக்கட்டை நீடிக்கிறது. லோக்பால் சட்டத்தை விரைவாக தயாரித்திட அன்னா ஹசாரே தரப்பு தீவிரம் காட்டுகிறது. ஆனால், ஹசாரே தரப்பு வைக்கும் முக்கிய ஷரத்துக்களை, அரசு தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். அதில், மிக முக்கியமான ஒன்று, லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரலாமா, வேண்டாமா என்பதே. பிரதமரை கொண்டு வந்தாக வேண்டுமென ஹசாரே தரப்பு வலியுறுத்துகிறது. ஆனால், பதவியில் இருந்து இறங்கிய பின், முன்னாள் பிரதமர் என்ற நிலையில் வேண்டுமானால், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரலாம் என, அரசு தரப்பு சொல்கிறது.

இந்நிலையில், மத்திய அரசுக்கும், ஹசாரே குழுவுக்கும் இடையேயான மிக முக்கிய ஆலோசனை நேற்று நிதியமைச்சரும், லோக்பால் வரைவு மசோதா கூட்டுக்குழு தலைவரான பிரணாப் முகர்ஜியின் நார்த் பிளாக் அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சமூக பிரதிநிதிகள் தரப்பில், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தவிர ஹசாரே, சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர். அரசு தரப்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

"சிக்கல் தீருவதற்கு வாய்ப்பு இல்லை': "நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய திருப்பு முனை' என, அரசு தரப்பில் அமைச்சர் கபில் சிபல் கூறிவிட்டு சென்ற சில நிமிடங்களில், "பிரச்னைகள் எதுவும் தீரவில்லை. அப்படியே உள்ளன ' என ஹசாரே தரப்பில், பிரசாந்த் பூஷன் அதிரடியாக தெரிவித்தார். மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் பிரதமரை, லோக்பாலுக்குள் கொண்டு வருவதா, வேண்டாமா என்பது குறித்து, இக்கூட்டத்தில் பேசப்படவே இல்லை. இந்த விஷயம் தான் இரு தரப்புக்கும் உள்ள பிரச்னையின் ஆணிவேராக கருதப்படுகிறது. இந்நிலையில், லோக்பால் உறுப்பினர் நியமனம் மற்றும் நீக்கம் குறித்த நடைமுறைகளிலும் புதிதாக முட்டல், மோதல் எழுந்துள்ளது. இன்றைய கூட்டத்திலும் கூட சுமூக முடிவு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அனைத்து கட்சி கூட்டமோ அல்லது பார்லிமென்டில் லோக்பால் குறித்து அனைத்து கட்சிகளும் நடத்த போகும் விவாதத்தை தான் இப்போதைக்கு அரசு பெரிதும் நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

* மகளிர் மசோதா: 22-ல் அனைத்து கட்சி கூட்டம்

புது தில்லி, ஜூன் 20: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் 22-ம் தேதி கூட்டியுள்ளார்.

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் விதமாக இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சி தலைவர்களுக்கு மீரா குமார் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த மசோதா, கடந்த 2010 மார்ச் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* தில்லியில் இன்று மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு
 புது தில்லி, ஜூன் 21: மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கிறார்.

 இந்த மாநாட்டில் மாநில நிதி அமைச்சர்கள், மத்திய நிதித்துறை செயலாளர்கள், மாநில நிதித்துறை செயலாளர்கள், முக்கியத் துறைகளின் நிதி ஆலோசகர்கள், மாநில அக்கவுன்டன்ட் ஜெனரல்கள் பங்கு கொள்கிறார்கள். ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி துவக்கிவைத்து உரையாற்றுகிறார்.

 இந்தியா தற்போது ரொக்கம் அடிப்படையிலான கணக்கு முறையை கடைப்பிடித்து வருகிறது. இதைத் தவிர்த்து தொகை ஏற்றல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 12-வது மற்றும் 13-வது நிதிக்குழு பரிந்துரை அளித்திருந்தது. இது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

* ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை, ஜூன் 20: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு திங்கள்கிழமை சரிவைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 45 தரவேண்டியிருந்தது.

 பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவும் டாலரின் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

 மோரீஷஸ் நாட்டுடனான இரட்டை வரிவிதிப்பு குறித்து அரசு பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது. மோரீஷஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் லாபத்துக்கு வரி விதிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடுகளில் பெரும்பகுதி மோரீஷஸிலிருந்துதான் வருகிறது. கடந்த 10-ம் தேதியிலிருந்து அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 41 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.

 வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் ஒரு டாலருக்கு ரூ. 44.87 என்ற நிலையில் இருந்த ரூபாயின் மதிப்பு திங்களன்று வர்த்தகம் முடிவில் 13 காசுகள் சரிந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 45 தரவேண்டியதாயிற்று.

 டாலருக்கு நிகரான யூரோவின் மாற்று மதிப்பும் சரிவைச் சந்தித்தது. கிரேக்க நிதி நெருக்கடிக்கு நிதி உதவி அளிப்பதில் ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டபோதிலும், நிதி அளிப்பது தாமதமாகும் என்பதால் மதிப்பு சரிந்தது.

 வங்கிகளில் எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர்களை வாங்கினர். இதுவும் சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

 செவ்வாய்க்கிழமை ஒரு டாலருக்கு ரூ. 45.30 வரை தரவேண்டியிருக்கும் என்று இறக்குமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 இதனிடையே நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலராக சரிந்தது.

 பங்குச் சந்தையில் ஜிடிஎல் நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இந்நிறுவன மேம்பாட்டாளர்கள் தங்கள் வசம் இருந்த 50 சதவீத பங்குகளை விற்பனை செய்துவிட்டதாக வெளியான தகவலால் இந்நிறுவன பங்கு விலைகள் சரிந்தன.

 வர்த்தகம் முடிவில் யூரோவின் மாற்று மதிப்பு ரூ. 64.01 ஆக இருந்தது.

 பவுன்ட் ஸ்டெர்லிங்குக்கு ரூ. 72.73-ம், ஜப்பானிய யென்னுக்கு ரூ. 56.05-ம் தர வேண்டியிருந்தது.

* வடகிழக்கு மாநிலங்கள் மின் தேவை: உலக வங்கியிடம் 2.5 பில்லியன் டாலர் கடன் கோரிக்கை 

வட கிழக்கு மாநிலங்களின் மின் தேவையை நிவர்த்தி செய்ய அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள நீர்வளத்தை ஆதாரமாகக் கொண்டு நீர் மின் நிலையங்கள் அமைத்து 63 ஆயிரம் மெகா வாட் மின்சார உற்பத்தி செய்ய உலக வங்கியிடம் மத்திய எரிசக்தித் துறை 2.5 பில்லியன் டாலர் (ரூ.11,348.5 கோடி) கடன் கோரியுள்ளது.
இத்தகவல் வட கிழக்கு பேரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“வட கிழக்கு மாநிங்களில், குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் 5=63,257 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அளவி்ற்கு நீர் வளம் உள்ளது. தற்போது 2,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சுபான்சிறீ நீர் மின் திட்டம் வரும் 2013-15ஆம் ஆண்டிற்குள் நிறைவேறிவிடும்” என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்ற வடகிழக்கு பேரவைக் கூட்டம், இவ்வமைப்பின் தலைவரும், வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான பி.கே.ஹண்டிக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உலக வங்கியிடம் கடன் கேட்கும் முடிவு எடுக்கப்பட்டது.

* அமர்நாத் யாத்திரைக்கு 2 லட்சம் பேர் பதிவு 
அமர்நாத் குகைக் கோயில் புனித யாத்திரை செல்வதற்காக இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பதிவு மையங்கள் மூலமாக, இதுவரை 2,19,190 பேர் பதிவு செய்துள்ளனர்.

பல்டல் பாதை வழியாக புனிதப் பயணம் செல்ல 1,09,018 பேரும், பஹல்கம் பாதை வழியாக செல்ல 1,10,172 பேரும் பதிவு செய்துள்ளதாக அமர்நாத் பயணத்துக்கான பதிவு அதிகாரி அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

வருகிற 29 ஆம் தேதியன்று தொடங்கும் அமர்நாத் புனிதப் பயணம், ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* போஸ்கோ பிரச்சனை: நிலம் கையகப்படுத்துவது நிறுத்தம்
ஒரிஸ்ஸாவில் போஸ்கோ இரும்புத் தொழிற்சாலை அமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூரில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் இத்திட்டத்துக்கு பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போஸ்கோ தொழிற்சாலைக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணி ஒப்பந்தம் வெளியூர் நபர்களிடம் வழங்கப்படும் என்ற தகவலால், கூட்டுக் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கூட்டுக் நடவடிக்கைக் குழு தலைவர் அனடி ரெளட் தனது மகன் மூலம் வெளியூர் ஒப்பந்ததாரரை ஏற்பாடு செய்ததாக கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, அதன் தலைவராக இருந்து வந்த அனடி ரெளட், திடீரென தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.

* சென்னையில் சுழற்சி முறை மின் தடை அறிவிப்பு ரத்து
 சென்னை, ஜூன் 20: வடசென்னையில் புதிய மின்நிலையங்கள் அமைக்கும் பணிக்கு, சென்னைக்கு வரும் மின்சாரம் பயன்படுத்தவிருப்பதால் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

 ÷வடசென்னையில் உள்ள வல்லூரில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 யூனிட்டுகள் அமைய உள்ளன. இந்தப் பணிகளுக்காக நெல்லூரில் இருந்து அலமாதிக்கு செல்லும் பாதையில் செல்லும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய காரணத்தினால் சென்னையில் பற்றாக்குறை ஏற்படும்.

 இதனால் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 4 மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வட சென்னை வல்லூருக்கு அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான 400 கிலோ வாட் மின் தொடர் இணைப்பு பணிகள் தொழில்நுட்ப காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

 மேலூர், மணலி, சிப்காட் 1 மற்றும் 2, திருத்தணி, பாலசீவரம், திருவள்ளூர், மோசூர், பல்லூர் ஓரிக்கை, ஓரகடம், பெருங்குடி, ஈ.டி.எல்., கடப்பேரி, கோடம்பாக்கம், திருமங்கலம், போரூர், புழல், மாத்தூர், திருமுல்லைவாயல், துரைநல்லூர், ராஜ்பவன், திருவான்மியூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பாடி, முகப்பேர், பெரியார் நகர், மேனாம்பேடு, சிட்கோ, அண்ணா நகர், ஆவடி, அலமாதி, பஞ்செட்டி, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம், கடப்பேரி, அரும்பாக்கம், மதுரவாயல், எஸ்.ஏ.எப். கேம்ஸ், வள்ளுவர் கோட்டம், உஸ்மான் சாலை, டைடல் பார்க், டி.சி.எஸ்., நொளம்பூர், செம்பரம்பாக்கம், கே.கே. நகர், ராமாபுரம், எஸ்.ஆர்.எம்.சி., ஆலந்தூர், நங்கநல்லூர், மேற்கு மாம்பலம், தில்லை கங்கா நகர், கிண்டி, பல்லாவரம், மாம்பலம், ஆர்.ஏ. புரம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது.

 மேலும் புதிய மின்நிலையப் பணிகள் தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :
* மனநலம் பாதித்தோருக்கு சிகிச்சை: களமிறங்கும் திருப்பூர் போலீசார் :

திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் திருப்பூர் மாவட்ட போலீசார் களமிறங்கியுள்ளனர். அவர்களை பற்றிய தகவலை பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குதெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:கவனிக்க ஆளில்லாமல், ஆதரவற்ற நிலையில் ரோடுகளில் சுற்றித்திரிபவர்கள்; மற்றவர்களை கண்டால் அடிப்பது, துரத்துவது, கற்களால் அடிப்பது என பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் என இரு வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன், மூலனூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கல்லால் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்ட அளவில் ஒரு கமிட்டி உருவாக்கப்படும். போலீசுடன், பொதுநல அமைப்புகளும் இணைந்து பணியாற்றும். தங்கள் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு திரியும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது "மென்டல் ஹெல்த் ஆக்ட்' சட்டத்தின் படி ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும்; இது, அவர்கள் குற்றவாளி என்ற நோக்கத்தில் அல்ல; அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினால், அவர் மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்ல உத்தரவிடுவார்; அவர் கொடுக்கும் சான்றிதழுடன், மீண்டும் அந்நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்து சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். மூலனூரில் கொலை செய்த மனநலம் குன்றிய பெண், இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட உள்ளார். பொதுமக்களுக்கு தொல்லை தரும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துவக்க நிலையிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம், சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்பை துவக்கத்திலேயே தடுக்க முடியும்; மற்றவர்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படும், என்றார். லாட்ஜ், ஓட்டல்களில் சோதனை நடத்த முடிவு ""திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை, "பார்ம் சி' மூலம் தெரிவிக்க, ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; இதுவரை யாரும் "பார்ம் சி' தரவில்லை. லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்படும். அப்போது, வெளிநாட்டினர் தங்கியிருப்பது தெரியவரும் பட்சத்தில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி., தெரிவித்தார்.

* அதிகாரிகளின் தொடரும் அலட்சியத்தால் பராமரிப்பின்றி முத்துக்குமாரசுவாமி கோவில்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் உடைந்துள்ள கோவில் பிரகார சிமென்ட் தரை சீரமைக்கப்படாமல் உள்ளது. பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹாரா திருசதி பூஜைகள், பிரதோஷம், கிருத்திகை, தை மாதம் பூசம் உற்சவம் என நடப்பதால் உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமாக சந்தைதோப்பு, கடைகள், கோவில் இடத்தில் வீடுகட்டியுள்ளவர்கள் வாடகை மற்றும் நிலத்திற்கான குத்தகை என ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இக்கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. கோவில் முழுவதும் பிரகார பகுதிகளில் பல இடங்களில் குப்பைகொட்டி கிடப்பதால் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. சிமென்ட் தரை சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றிவர சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் கோவில் பிரகார பகுதியில் மின்விளக்கு எரிவதில்லை. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை வருவதே அரிதாக இருப்பதால் பக்தர்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற நிலை உள்ளது. கோவிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்

விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம்.

இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

வர்த்தகச் செய்தி மலர் :
* சென்செக்ஸ் 364 புள்ளிகள் சரிவு  

மும்பைப் பங்குச் சந்தையில் இன்றும் சரிவு நிலையே காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 363.90 புள்ளிகள் சரிந்து 17,506.63 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு அதிகபட்சமாக 108.50 புள்ளிகள் சரிவடைந்து முடிவில் 5,257.90 ஆக உள்ளது.

ஆக்சிஸ் பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் பங்கு விலைகள் சற்றே ஏற்றம் கண்டன.

ஆர்.காம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நிறுத்தப்படவுள்ளதால் அதன் விலைகள் சரிவு கண்டன.

பெரும்பாலான துறைகளின் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன.

* பவுன்: ரூ. 56 உயர்வு

சென்னை, ஜூன் 20: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது.

 சனிக்கிழமை ஒரு பவுன் ரூ. 16,920-ஆக இருந்தது. திங்கள்கிழமை பவுன் ரூ. 16, 976-க்கு விற்பனையானது.

 திங்கள்கிழமை விலை:

 ஒரு பவுன்: ரூ. 16,976.

 ஒரு கிராம்: ரூ. 2,122.


விளையாட்டுச் செய்தி மலர் :

* கிங்ஸ்டன் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 34/1

கிங்ஸ்டன்:இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 34 ரன்னிற்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியா‌வை விட 212 ரன்கள் பின்தங்கி உள்ளது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், கிங்ஸ்டன் ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது. சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் மீண்டும் அணிக்கு திரும்பினர். தமிழக வீரர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் ஆகிய மூவரும், அறிமுக வீரர்களாக களமிறங்கினர். "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரெய்னா 82, ஹர்பஜன் 70, டிராவிட் 40 ரன் சேர்த்தனர்.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எட்வர்டு 4 விக்கெட்டுகளையும் ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஆட்டம் முடிவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது.

* விம்பிள்டன் டென்னிஸ்: நடால் வெற்றி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் "நம்பர்-1' வீரர் ஸ்பெயினின் நடால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில், 125வது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் மைக்கேல் ரசலை சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-4 என நடால் வென்றார். தொடர்ந்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், அடுத்த இரு செட் களையும் 6-2, 6-2 என கைப்பற்றினார். முடிவில் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற நடால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :
* அருள்மிகு விஜயாஸனர் திருக்கோவில்

மூலவர்    :    விஜயாஸனர் ( பரமபத நாதன்)
உற்சவர்    :    எம்மடர் கடிவான்
அம்மன்/தாயார்    :    வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
தல விருட்சம்    :    -
தீர்த்தம்    :    அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    வரகுணமங்கை
ஊர்    :    நத்தம்
மாவட்டம்    :    தூத்துக்குடி
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாஸனம்

நம்மாழ்வார்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.

-நம்மாழ்வார்

 தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.

இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

 தலபெருமை:

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்களம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

சோழநாட்டில் அ‌மைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். ‌சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.

  தல வரலாறு:

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயõஸனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

 திருவிழா:

வைகுண்ட ஏகாதசி
 
திறக்கும் நேரம்

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

சலனத்தை வெல்லும் வழி - ரமணர்

வெளி விஷயங்களையெல்லாம் நிலையற்று நசிப்பதை உணர்ந்தால் அதனால் விஷய விரக்தி உண்டாகும். அதுவே (ஆன்ம) விசாரணையே மிக முக்கியமான முதற்படி. அவ்விசாரணையால் உலக இன்பங்கள், செல்வம், பெயர், புகழ் முதலியவற்றில் துச்ச புத்தி உண்டாகும். இவ்விதம் விரக்தியுற்ற புத்திக்கு 'நான் யார்' என்னும் விசாரணை வழி தெளிவாய் விளங்கும்.

'அஹம்' விருத்தியின் உற்பத்தி ஸ்தானம் இதயமே. அதுவே அடைவதற்குரிய இடம். சாதகனது அமைப்பு விசாரத்திற்கு இடங்கொடாவிடில் பக்தி மார்க்கத்தை அனுசரிக்கலாம். ஈசனிடமோ, குருவினிடமோ அல்லது தர்மம், பரோபகாரம், அன்பு, அழகு என்னும் லட்சியங்களிலோ முழு மனமும் ஈடுபட்டால் பிற பற்றுதல்கள் குன்றி ஏகாக்கிரதை உண்டாகும்.

வினாடி வினா :

வினா - 100 சதவிகித மின் வசதி பெற்ற வட கிழக்கு எல்லைபுற இந்திய மாநிலம் எது ?

விடை - நாகலாந்து

இதையும் படிங்க :

* சிறுவனை பாடாய்படுத்தும் தோல் எரிச்சல் : மேல்சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

large_261358.jpg

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டே வாழும் வினோத நோயால் தாக்கப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன், மேல்சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கிறார். முத்துப்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரது மகன்கள் பாரதி, 8, கீர்த்திவாசன், 7. கீர்த்திவாசன் முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரது உடல் தோலில் இருக்க வேண்டிய ஆறு அடுக்கில், நான்கு அடுக்குகள் குறைவாக உள்ளன. இதனால், இவருக்கு வியர்ப்பதில்லை. வெப்பம் அதிகமாகும் போது, உடலில் கொப்புளத்துடன் எரிச்சல் ஏற்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உடலில் தண்ணீர் ஊற்றும் நிலை உள்ளது. மழை, குளிர் காலங்களில் கூட மாற்றமில்லை.

தந்தை குமார் கூறியதாவது: பிறந்ததிலிருந்து இந்த நோய் இருந்தது. அடிக்கடி காய்ச்சல் வரும். பல டாக்டர்களிடம் காண்பித்தோம். இறுதியில் திண்டுக்கல் மருத்துவமனையில் காண்பித்த போது, அங்கிருந்த கனடா டாக்டர் ஒருவர், "தோல் பிரச்னை' என கண்டுபிடித்தார். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். குளிர் பிரதேசத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறார். பண பற்றாக்குறையால் எங்கும் செல்லவில்லை. யாராவது எனது மகனுக்காக உதவ வேண்டும். இதற்காக, கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு குமார் கூறினார். இவருக்கு உதவ விரும்புவோர் 97889 91417ல் தொடர்பு கொள்ளலாம்.

* இசைய வைக்கும் இசை: இன்று சர்வதேச இசை தினம்

large_261238.jpg

இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.

அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது, தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம், இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.

தோன்றிய விதம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது.

இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள், உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை.

இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாசாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசைக்கும் பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது. இசை மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல இசைக்கலைஞர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

அறிஞர்களின் பார்வையில்...

* இசை ஒரு அன்பின் உணவு; விளையாடுங்கள் - ஷேக்ஸ்பியர்
* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்
* இசை, உன் மனதை வெளிக்கொண்டு வரவேண்டும் - மிஸி எலியாட்
* இசை, உணர்ச்சியின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய்
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ
* இசை, உலகை மாற்றும். ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ.

இசையில் வசமாகா இதயம் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்காத பெரும் செல்வம் இசை. இசையில் வசமாகாத ஜீவராசிகள் உண்டோ. நம்மை மகிழ்விப்பதும், மயங்க வைப்பதும் இசை. பல வடிவங்களில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இசைக் கலையில் சாதித்தவர்கள் பலர்.

இசைப்பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த இசைவித்தகர்கள் பலர். உலக இசை தினமான இன்று, இசையை மூச்சாக சுவாசித்து, சாதித்துக்கொண்டிருக்கும் சிறுவனை பற்றி அறிந்து கொள்வோம். மதுரை திருப்பரங்குன்றத்தில், தவில் வாசிப்பதில் திறமையை காட்டி வருகிறார் 11 வயது சிறுவன் சிவராம கணேசன். இவரது தந்தை தவில் வித்வான் ஆலடி அருணா. தாய் கிருஷ்ணவேணி நாதஸ்வர கலைஞர். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரவேண்டுமா என்பது போன்று, சிவராம கணேசன் மூன்றரை வயதில் தவில் வாசிக்க துவங்கினார். ஆலடி அருணா, கச்சேரி இல்லாத நாட்களில் வீட்டில் தினம் மாலையில் தவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். அவர் வாசிப்பதை அருகில் அமர்ந்து கூர்மையாக கவனித்த மூன்றரை வயது சிவராம கணேசன், ஒருநாள் தந்தையின் தவிலில் வாசித்தார். தாளம் தப்பாமல் வாசிப்பதை கவனித்த தந்தை, ஆச்சரியம் அடைந்தார். சில நாட்கள் மகனுக்கு தவில் வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். ஒரே மாதத்தில் தேர்ந்த கலைஞன் போன்று வாசித்த சிவராம கணேசனின் தவில் கச்சேரி அரங்கேற்றம், மதுரையில் 2003ல் நடந்தது. கும்பாபிஷேகங்கள் உட்பட இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் 10க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றார். 2006ல் கன்னியாகுமரியில் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவராம கணேசனின் வாசிப்பை ரசித்த, அப்துல்கலாம் அவரை பாராட்டினார்.

சிவராம கணேசன் கூறுகையில், ""தவில் இசையில் புதுமைகள் செய்ய வேண்டும். தவில் இசையில் ஆராய்ச்சிகள் செய்து, அதன் பெருமையை உலககெங்கும் பரப்ப வேண்டும். சென்னை இசை விழாக்களில் பங்கேற்க வேண்டும். இசைப்பள்ளி துவங்கி, இசையில் ஆர்வமுள்ள ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினருக்கு இலவசமாக இசையை கற்பிக்க வேண்டும். வலையபட்டி சுப்பிரமணியன், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், தஞ்சாவூர் கோவிந்தராஜ், திருவாவழத்தூர் சூரியமூர்த்தி ஆகியோர்களைப் போன்று தவிலில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக வர வேண்டும். படிப்பில் கம்ப்யூட்டர் பொறியாளராக வேண்டும்,'' என்றார். 20க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களும், பல கேடயங்களும் பரிசாக பெற்றுள்ள சிவராம கணேசனின் இசைப் பயணம் தொடர் சாதனைப் பயணமாக அமையட்டும்.





நன்றி - சமாச்சார், வெப்துனியா, தின மலர், தின மணி.