Wednesday, June 8, 2011

இன்றைய செய்திகள் - ஜீன், 08 , 2011

முக்கியச் செய்தி :

ஹஸாரே உண்ணாவிரதம் இன்று காலை 10 மணிக்கு துவக்கம்

annahazare.jpg

புது தில்லி, ஜூன் 7: யோகா குரு பாபா ராம்தேவ் மீது அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காந்தியவாதி அண்ணா ஹஸாரே நடத்தும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு தில்லி ராஜ்காட்டில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த உண்ணாவிரதத்தை தில்லி ஜந்தர் மந்தரில் துவக்க அண்ணா ஹஸாரே திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு போராட்டம் நடத்த தில்லி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதோடு தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் ராஜ்காட்டுக்கு மாற்றப்பட்டதாக அண்ணா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு பக்கபலமாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

உலகச் செய்தி மலர் :

* ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி

07-rwandan-army-chief300.jpg

அருஷா (தான்சானியா): ருவாண்டாவில் நடந்த வரலாறு காணாத இனப்படுகொலைக்குக் காரணமான முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை விதித்தவர் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வா.

ருவாண்டாவில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை சம்பவம் தொடர்பாக ஐ.நா. சர்வதேச போர்க்குற்ற டிரிப்யூனல் விசாரித்து வந்தது. இந்த கோர்ட்டுக்கு இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வா தலைவராக இருந்தார். இந்த நீதிமன்றம் தற்போது ருவாண்டா ராணுவத்தின் மாஜி தலைமைத் தளபதி அகஸ்டின் பிஸிமுங்குவுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவர் தவிர பிரான்காய்ஸ் சேவியர் சுவானமயி மற்றும் இன்னொசன்ட் சகாஹுடு ஆகியோருக்கு தலா 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தலைவர் அகஸ்டின் டின்டிலியிமனா என்பவரும் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. இருப்பினும் அவர் ஏற்கனவே சிறையில் நீண்ட காலம் இருந்ததால் அவரை விடுவிக்க சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.

1994ம் ஆண்டு ருவாண்டாவில் பெரும் இனக் கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அது நீடித்தது. இந்த கால கட்டத்தில் ருவாண்டாவே ரத்தக்களறியானது. கிட்டத்தட்ட 8 லட்சம் டுட்சி இனத்தவரும், நடுநிலையுடன் கூடிய ஹூடு இனத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ருவாண்டாவை ஆட்சி செய்து வந்தது ஹூடு இனத்தவர்கள் ஆவர். இதனால் டுட்சி இனத்தவர்களை அழிக்கும் நோக்கில் கொலை வெறியாட்டம் ஆடியது ராணுவம். இந்த இனப்படுகொலையை தலைமையேற்று நடத்தினார் பிஸிமுங்கு.

1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தலைநகர் கிகாலி அருகே ருவாண்டா முன்னாள் அதிபர் ஜூவினல் ஹபியாரிமானா பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அதிபர் கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் வெடித்தது.

100 நாள் நடந்த ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கை விசாரிக்க தான்சானியாவில் சர்வதேச கோர்ட் நிறுவப்பட்டது. முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அசோக டிசில்வாவைத் தலைவராக கொண்ட கோர்ட் அமைக்கப்பட்டது.

இந்தக் கோர்ட்டில், அசோக டிசில்வா தவிர தக்ரிட் ஹிக்மத் மற்றும் சியோன் கி பார்க் ஆகியோரும் நீதிபதிகளாக செயல்பட்டனர்.

கிட்டத்தட்ட 250 சாட்சியங்களை விசாரித்த இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது.

2002ம் ஆண்டு அங்கோலாவில் வைத்து பிஸிமுங்கு கைது செய்யப்பட்டார். வீடு வீடாக போய் டுட்சி இனத்தவரை கும்பல் கும்பலாக கொலை செய்யுமாறு அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹூடு இனத்தவர்களுக்கு உத்தரவிட்டது இந்த பிஸிமுங்குதான். குறிப்பாக ஒரு கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டுட்சி இனத்தவரை நிற்க வைத்து அத்தனை பேரையும் ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தான் இந்த பிஸிமுங்கு.

மேலும் ருவாண்டா பிரதமர் அகாதே விலிங்கியிமானாவையும் கொல்ல பிஸிமுங்கு உத்தரவிட்டான். அப்போது பிரதமரைப் பாதுகாக்க ஐ.நா. அனுப்பியிருந்த படையில் இடம் பெற்றிருந்த ஏழு பெல்ஜியம் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ருவாண்டாவிலிருந்து ஐ.நா. அமைதி காக்கும் படை வெளியேறியது.

ராஜபக்சே கும்பலுக்கு எப்போது தண்டனை?

இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை குறித்து உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் தமிழர்களை வேட்டையாடிய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக அப்போது இருந்த சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும், அவர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கடும் தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இதே நிலைமை ராஜபக்சே கும்பலுக்கும், பொன்சேகாவுக்கும் வர வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

* ராம்தேவ் வெளியேற்றம் நியாயமா?-கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு!
டெல்லி: டெல்லியில் தனது ஆதரவாளர்களோடு உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை டெல்லி போலீஸார் வெளியேற்றிய விதம் சரியா என்பது குறித்து பதிலளிக்க அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

பாபா ராம்தேவ் உண்ணாவிரத இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, உண்ணாவிரதம் இருந்தவர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை பிரயோகித்து விரட்டியடித்தது உள்ளிட்டவற்றுக்காக டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் கடும் கணடனங்களை சம்பாதித்துள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது அமெரிக்கா வரை சென்றுள்ளது. அங்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டனர். ராம்தேவ் விவகாரத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட நடைமுறைகள் நியாயமானவையா, இதில் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு டோனரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் இது இந்தியாவின் உள் விவகாரம். கருத்து தெரிவிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

* பான் கீ முனுக்கு இந்தியா ஆதரவு

வாஷிங்டன்: ஐ.நா.,சபையின்பொதுசெயலாளராக இருப்பவர் பான்கி மூன். இவர் ஐ.நாவின் பொதுச்செயலாளராக கடந்த 2007-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதா பான்கிமூன் தெரிவித்துள்ளார்.பான்கிமூனை ஆதரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநியாக உள்ள மன்ஜீவ்சிங்பூரி இதனை தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே போல் சீனாவும் பான்கிமூனே மீண்டும் ஐநாவின் பொதுசெயலாளராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

* சீனாவில் வெள்ளப்பெருக்கு 14 பேர் பலி.

பீஜிங்: சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 14 பேர் வரை பலியாகியுள்ளனர். 35 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். 45 ஆயிரம் பேர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தது குயிஸ் காவ் மாகாணம்.இம் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சுமார் 27 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளனர்.மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டுவருவதாகவும் மாகாணத்தில் நøடெபற்று வரும் பள்ளி தேர்வுக்கு செல்லும் மாணவர்களை பாதுகாக்கவும் போலீசார் விரைந்து செயல்பட்டு வருவாதகவும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓடும் ரயிலில் சீக்கியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்குள்ள சீக்கியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவான் சிங் என்ற சீக்கியர்,(59) கடந்த 30 ஆண்டுகளாக அமெரி்க்காவில் வசித்து வருவதோடு,பெருநகர போக்குவரத்து ஆணையத்திலும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் அவர் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, அருகே நின்றிருந்த ஒரு நபர் திடீரென ஜிவான் சிங்கை பார்த்து, "நீ பின்லேடனின் சகோதரனா?" என்று கேட்டுக் கொண்டே அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இத்தகவல் தற்போதுதான் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

* சிவசங்கர், நிருபமா இலங்கை செல்கின்றனர்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை உள்ளடக்கியக் குழு கொழும்பு செல்கிறது.

வரும் 16,17ஆம் தேதிகளில் இக்குழு கொழும்புவில் இருக்கும் என்றும், அப்போது ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் கடந்த மாதம் 15,16,17ஆம் தேதிகளில் டெல்லி வந்திருந்தபோது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ஆகியன குறித்து சிறிலங்க அரசுடன் அவர்கள் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.

இக்குழுவில் இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாரும் இருப்பார் என்று கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இந்த குழுவின் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்றாலும், அயலுறவு அமைச்சர் பெய்ரீஸின் வருகையினால் தள்ளிப்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* சுதந்திரமாக நடமாட அனுமதி கோரி பாகிஸ்தான் அணு விஞ்ஞானி வழக்கு
இஸ்லாமாபாத், ஜூன். 7-

பாகிஸ்தானின் அணு விஞ்ஞானியை பாகிஸ்தான் அரசு காண்காணித்து வருவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அணு விஞ்ஞானியான அப்துல்காதிர்கான். இவர் அணு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வீட்டுகாவலில் வைக்கப்பட்டார். அப்போதைய முசரப் அதிபர் ஆட்சியின் இவர் வீட்டுக்காவலில் இருந்தார். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு புதிய அரசு இவருக்கு சில நிபந்தனைகள் விதித்து விடுதலை செய்தது. எனினும் இவரது நடவடிக்கைகளை கண்காணித்தது.

இந்நிலையில் காதிர் கானின் பாதுகாவலர், முகமது பாஹிம் என்பவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அணு விஞ்ஞானி காதிர்கானை பாகிஸ்தான் அரசு கடந்த இரு ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது. லாகூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவாளி ரேமண்ட் டேவிசுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறது. இது இவருக்கு புகழுக்கு களங்கள் விளைவிப்பதாக உள்ளது. ஆகவே பாகிஸ்தான் அரசு இவரை கண்காணிப்பதை விலக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். நீதிபதி இக்பால்-ஹமீத்-ரக்மான் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக கூறினார்.

* ஜெர்மனியில் 2022ல் அணுசக்தி நிலையங்களை மூட அனுமதி

பெர்லின், ஜூன். 7-

ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களை மூடும் மசோதாவுக்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால், புகுசிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இதனால், தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை மூட, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முடிவு செய்தார். இதற்கான மசோதாவுக்கு, ஜெர்மன் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ஜெர்மனியில் ஏற்கனவே ஏழு பழமையான அணு மின் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சமீபத்தில் ஒரு அணுமின் நிலையம் தொழில்நுட்பக் கோளாறால் மூடப்பட்டது. 2022ம் ஆண்டுக்குள் ஒன்பது அணுமின் நிலையங்களையும் மூடி விடுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதாக, ஜெர்மன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்பர்ட் ராட்ஜன் தெரிவித்துள்ளார்.

வரும் 2030ம் ஆண்டு வரை 17 அணு உலைகள் பயன்பாட்டில் இருக்கும். அணு உலைகள் மூடப்படுவதால் ஏற்படும் மின் பற்றாக்குறையைப் போக்க, நிலக்கரி, எரிவாயு மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை அதிகரிக்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர்:

pm.jpg

* சொத்து விவரங்களை அறிவிக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
புது தில்லி, ஜூன் 7: வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதுபோல் மத்திய அமைச்சர்களின் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சரவைச் செயலாளர் கே.எம். சந்திரசேகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: மத்திய அமைச்சர்கள் ஆண்டுதோறும் அவர்களது சொத்து விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில் எல்லா அமைச்சர்களும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூன் 2-ம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பிரதமரின் உத்தரவுப்படி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அமைச்சர்கள், அவர்களது மனைவிகள், மற்றும் அமைச்சரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் அமைச்சரும், அவரது மனைவி, அவரைச் சார்ந்தவர்கள் வர்த்தகம் செய்கிறார்களா அல்லது வெளிநாட்டு அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலோ அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்களிலோ பணிபுரிகிறார்களா என்று தெரிவிக்க வேண்டும் என கேட்டக் கொள்ளப்பட்டுள்ளனர். நடத்தை விதிமுறை பத்தி 1 (ஏ), 2 (ஏ), 2 (இ), மற்றும் 3.2 ஆகியவற்றின்படி சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

* கனிமொழி ஜாமீன் மனு: தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

kanimozhli.jpg

புது தில்லி, ஜூன் 7: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிறுவன இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அளிக்க உள்ளது.

இது குறித்து மனுதாரர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி அஜீத் பாரிகோக், மனு மீதான தீர்ப்பை கடந்த மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேர், ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தனர். சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று கூறி, அவர்கள் அனைவரது மனுக்களையும் நீதிபதி அஜீத் பாரிகோக் சமீபத்தில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

* ஜே.பி.சி. முன் ஆஜராக தயாநிதி, ஆ. ராசா, பிரதாப் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
புது தில்லி, ஜூன் 7: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன் ஆஜராகுமாறு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை ஜேபிசி குழுவின் தலைவர் பி.சி சாக்கோ தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக ஜே.பி.சி. முன்பு சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

சிபிஐ இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும், விசாரணை நிலவரத்தையும் ஜேபிசி குழுவிடம் அவர் தெரிவித்தார். ஜூன் 30ஆம் தேதிக்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, விசாரணைக்காக 85 பேரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நாடாளுமன்றக் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாக சாக்கோ தெரிவித்தார். 1998 முதல் 2008 வரையிலான தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள், தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர்கள், டிராய் தலைவர்கள், சட்ட அமைச்சகத்தின் செயலாளர்கள், நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குறிப்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள ஆ. ராசா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும், இப்போதைய ஜவுளித் துறையின் அமைச்சருமான தயாநிதி மாறன் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

07-dayanidhi-maran8-300.jpg

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை அனுமதி வழங்க இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு கை மாறிய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஜேபிசி குழுவின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

* பிடி இறுகுகிறது; மாஜி ஏர்செல் ஓனரிடம் சி.பி.ஐ., விசாரணை

புதுடில்லி: பிரபல டிஸ்னெட் வயர்லஸ் ( தற்போது ஏர்செல்) மாஜி ஓனரான சிவசங்கரனிடம் சி.பி.ஐ., இன்று விசாரணை நடத்தியது. இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் முக்கிய விஷயங்களை தெரிவித்திருப்பதாகவும், இது முக்கிய தன்மை கொண்டதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு தொலை தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தவர் சிவசங்கரன். அவர் 2ஜி அலைக்கற்றை உரிமை கேட்டு தொலைத் தொடர்பு துறையிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு உரிமம் எதுவும் கொடுக்கப்படவில்லை. பல முறை கேட்டும் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனால் சிவசங்கரன் தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு விற்று விட்டார். அவர் டிஸ்னெட் வயர்லஸ் என்ற பெயரை ஏர்செல் என்று மாற்றினார். அதன் பிறகு ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் உடனடியாக கிடைத்தன. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தொழில் அதிபர் சிவசங்கரனை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. அதை ஏற்று இன்று (திங்கட்கிழமை) சிவசங்கரன் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்.

2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அவரிடம் சி.பி.ஐ. பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்தது. தான் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் வரை தள்ளப்பட்டேன் என்றும், இதற்கு ஒரு சிலர் காரணமாக இருந்தனர் என்றும் கூறியுள்ளார். அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. சிவசங்கரனின் வாக்குமூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் பலருக்கு நெருக்கடி வர வாய்ப்பு இருக்கிறது.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன், இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

* காஷ்மீரில் 250 பயங்கரவாதிகள் செயல்பாடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது 250 பயங்ரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக போலீஸ் டிஜிபி குல்தீப் கோடா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது. மாநிலத்தில் பயங்கரவாதகளின் செயல்பாடு குறைந்து விட்டதாக கூற முடியாது இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ராணுவத்தினரின் உதவியோடுகட்டுப்படுத்தப்பட்டுள்
ளது. மேலும் கடந்த 90-களில் மாநிலத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்துள்ளனர். இருப்பினும் ஸ்ரீநகர், பத்காம், கந்தர்பால்,போன்ற மாவட்டங்களில் 15 பயங்கரவதா குழுக்கள் செய ல்பட்டு வருகின்றன . பெரும்பாலான பயங்கரவாத குழுக்கள் பிர் பஞ்சால் மலைப்பகுதியை கொண்டுள்ள பத்காம் மாவட்டத்தில் செயல்பட்டு வருதாகவும், தலைநகர் ஸ்ரீநகரில் எந்தவித பயங்கரவாத குழுக்களும் செயல்பட வில்லை என்றும் அவர் கூறினார்.

* தேர்தல் செலவு கணக்கு விவரங்களை 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

large_253054.jpg

சென்னை : "சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் செலவு தொடர்பான இறுதி கணக்கு விவரங்களை, வரும் 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும், தேர்தல் செலவு குறித்த இறுதி கணக்கு விவரங்களை, தேர்தல் முடிவு வெளியிட்ட தேதியில் இருந்து, ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, வரும் 13ம் தேதிக்குள், வேட்பாளர்கள் அனைவரும், இறுதி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

* சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை, சேலம், திருவாரூர் உள்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் செயலை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த தமிழக அரசு காலம் தாழ்த்தினால், கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


இதேபோல் திருவாரூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.

* 6 நாள் முன்னதாக நாளை 'நல்ல நேரத்தில்' மேட்டூர் அணை திறப்பு!
மேட்டூர்: வழக்கத்துக்கு மாறாக, ஜூன் 12ம் தேதிக்குப் பதிலாக, நாளையே மேட்டூர் அணை காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக திறந்துவிடப்படவுள்ளது.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

பல ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் மாத கடைசியிலும், ஜூலை மாதத்தி்லும் அணை திறக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறந்துவிடப்படும் என்று புதிதாக பதவிக்கு வந்த அதிமுக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 115.81 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,534 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இந் நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாலும் அணை முன்னதாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 17லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

நாளை காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதற்கான விழா ஏற்பாடு மிக எளிமையாக செய்யப்பட்டுள்ளது.

நல்ல நேரமான காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 90 நாள் குறுவை பயிருக்கு போதுமானதாக உள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட சாகுபடியான சம்பா பயிருக்கு தேவையான நீர் தென் மேற்கு பருவ மழையைப் பொறுத்தே பூர்த்தியாகும்.

இல்லாவிட்டால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே சம்பா சாகுபடி முழு அளவில் நடக்கும்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!
உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.

இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.

அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த தகவலை 'த டெய்லி மெயில்' என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண்ணில் 75 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று காலை வர்த்தகம் 18,545.95 புள்ளிகளில் தொடங்கியது. இன்றைய நாளில் 75.51 பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 18,495.62 புள்ளிகளில் முடிவடைந்தது.

தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 15.3 பு‌ள்‌ளிக‌ள்‌ உயர்ந்து 5532.05 பு‌ள்‌ளிகளில் நிலைப்பெற்றது.

ஜிண்டல் ஸ்டீல்ஸ், ஆர்ஐஎல், மாருதி, சிப்லா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின.

புளூ சிப் பங்குகளான ரிலையன்ஸ், இன்போஸிஸ் போன்றவற்றின் பங்குகள் இன்று முதலீட்டாளர்களால் அதிகம் வாங்கப்பட்டன.

ஏர்டெல், எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, டாட்டா பவர், ஹீரோஹோண்டா டி.எல்.எப். ,பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று நஷ்டத்தைத் தந்தன.

இதர ஆசிய சந்தைகளிலும் இன்று ஏறுமுகம் காணப்பட்டது.

* தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.64 உயர்வு

சென்னை: தங்கத்தின் விலை லேசாக குறைவதும், எக்கச்சக்கமாக உயர்வதுமாக உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ 64 உயர்ந்துள்ளது தங்கம் விலை.

கடந்த சனிக்கிழமை அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.40 அதிகரித்திருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 111-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 888-க்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலையில் உயர்வு ஏற்பட்டது.

ஒரு சவரன் தங்கம் ரூ. 16 ஆயிரத்து 952-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 119-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.64 அதிகரித்தது.

இன்றும் தங்கத்தின் விலையில் இறங்குமுகம் தெரியவில்லை. காலையிலிருந்தே விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.

விளையாட்டுச் செய்தி ம்லர் :

* டிராவை நோக்கி இலங்கை-இங்கிலாந்து டெஸ்ட்
லார்ட்ஸ், ஜூன் 7: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது.

முன்னதாக இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

5-வது நாளான செவ்வாய்க்கிழமை 45 ஓவர்களே மீதமிருந்த நிலையில், இலங்கை அணி 311 ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 486 ரன்கள் குவித்தது. அதன்பிறகு பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 479 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய இங்கிலாந்து 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. குக் 61 ரன்களுடனும், பீட்டர்சன் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

5-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் குக் சதமடித்தார். அவர் 106 ரன்கள் எடுத்தார். பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். அந்த அணி 335 ரன்களை எட்டியபோது டிக்ளேர் செய்தது. அப்போது இயன் பெல் 57 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

343 ரன்கள் இலக்கு: 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. 45 ஓவர்களில் அந்த அணி 311 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

* முதல் ஒருநாள் போட்டி: மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌தீவை ‌வீ‌ழ்‌த்‌தியது இ‌ந்‌தியா
ரோ‌‌கி‌த் ச‌ர்மா‌வி‌ன் அபார ஆ‌ட்ட‌த்தா‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு‌க்கு எ‌திரான ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் இந்தியா 4 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றது.

போர்ட்ஆப்ஸ்பெயினில் நே‌ற்‌றிரவு நட‌ந்த முத‌ல் ஒருநா‌ள் போ‌ட்டி‌‌யி‌ல் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சர்வான் 56 ரன்களும், சாமுவேல்ஸ் 55 ரன்களும் எடுத்தனர். ம‌ற்ற ‌வீர‌ர்க‌ள் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களும், பிரண்வீன் குமார், முனாப் பட்டேல், ரெய்னா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

215 ‌ர‌ன் எடு‌த்தா‌‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் கள‌ம் இற‌ங்‌கிய இ‌ந்‌திய அ‌ணி 44.5 ஓவ‌ர்க‌ளி‌ல் 6 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 217 ர‌ன்கள‌் எடு‌த்து 4 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் வெ‌ற்ற‌ி பெ‌ற்றது.

தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் பா‌ட்டீ‌ல் (13), தவா‌ன் ( 51) ர‌ன்‌னி‌ல் வெ‌‌‌ளியே‌றின‌ர். ‌‌வீர‌ட் கோ‌லி 2 ர‌ன்‌னிலு‌ம், ப‌த்‌‌ரிநா‌த் 17 ர‌ன்‌னிலு‌ம் ‌ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

ரோ‌கி‌த் ச‌‌ர்மா - ர‌ெ‌ய்னா இணை அபாரமாக ‌விளையாடி ‌இ‌ந்‌திய அ‌ணியை வெ‌ற்‌றி பாதை‌க்கு அழை‌த்து செ‌ன்றது. அ‌ணி‌யி‌ன் எ‌ண்‌‌ணி‌க்கை 184 ஆக இரு‌ந்தபோது ரெ‌ய்னா 43 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

இதை‌‌த் தொட‌ர்‌ந்து வ‌ந்த யூசு‌ப் ப‌த்தா‌ன் 10 ர‌ன்‌‌னி‌ல் வெ‌‌ளியேற இ‌ந்‌திய அ‌ணி‌க்கு ச‌ற்று நெரு‌க்கடி ஏ‌ற்ப‌ட்டது. ‌‌பி‌ன்ன‌ர் ரோ‌கி‌த்துட‌ன் இணை சே‌ர்‌ந்த ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் இ‌ந்‌தியாவ‌ி‌ன் வெ‌ற்‌றி‌க்கு உத‌வின‌ர்.

44.5 ஓவ‌‌ரி‌ல் இ‌ந்‌‌தியா வெ‌ற்ற‌ி இல‌‌க்கை எ‌ட்டியது. ரோ‌கி‌த் ச‌‌ர்மா 68 ர‌ன்‌னிலு‌ம், ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் 6 ர‌ன்‌னி‌லு‌ம் ஆ‌‌ட்ட‌‌ம் இழ‌க்காம‌ல் இரு‌ந்தன‌ர்.

ப‌ந்து‌வீ‌ச்‌சி‌ல் ரா‌ம்பா‌ல், மா‌ர்டீ‌ன் ஆ‌கியோ‌ர் தலா 2 ‌வி‌க்கெ‌ட்டுகளை எடு‌த்தன‌ர். ‌தேவே‌‌ந்‌திரா ‌பி‌ஷூ 1 ‌வி‌க்கெ‌ட்டை கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.

68 ர‌ன்க‌ள் கு‌வி‌‌த்த ரோ‌கி‌த் ச‌ர்மா ஆ‌ட்ட நாயகனாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

5 போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட ஒரு நா‌ள் தொடரை 1-0 எ‌ன்ற க‌ண‌க்‌கி‌ல் இ‌ந்‌தியா மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது.

ஆன்மீகச் செய்தி மலர் :

T_500_573.jpg


* அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோவில்
மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
உற்சவர் : மாயக் கூத்தர்
அம்மன்/தாயார் : அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.
தல விருட்சம் : -
தீர்த்தம் : பெருங்குளத்தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்குளந்தை
ஊர் : பெருங்குளம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:


மங்களாசாஸனம்

நம்மாழ்வார்

கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.

-நம்மாழ்வார்

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம்.

இத்தலத்தில் வேங்கட வாணன் பெருமாள் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டல நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்

தலபெருமை:

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலவில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி


சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில திரும்பிவிடலாம்.

தல வரலாறு:

வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

எப்பொழுதும் நேர்மையாயிரு - அ‌ன்னை

பாதையில் முன்னேற இது இன்றியமையாதது!

இந்தப் பாதையில் நடப்பதற்கு உனக்கு எதற்கும் தயங்காத அஞ்சாமை வேண்டும். அற்பமான, இழிவான, பலவீனமான, அருவருப்பான இயக்கமாகிய அச்சத்துடன் ஒருபோதும் உன்னைப் பற்றியே எண்ணக் கூடாது.

அசைக்க முடியாத துணிச்சல், பூரணமான நேர்மை வேண்டும், கணக்குப் பார்க்காது அல்லது பேரம் பேசாது தன்னை முழுவதுமாகக் கொடுக்க வேண்டும், ஒன்றைப் பெறும் நோக்கத்துடன் கொடுக்கக்கூடாது, பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் உன்னை அர்ப்பணிக்கக் கூடாது, உன்னுடைய நம்பிக்கைக்கு நிரூபணம் தேவைப்படக்கூடாது - பாதையில் முன்னேற இது இன்றியமையாதது - இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலுமிருந்தும் பாதூக்க முடியும்.

எப்பொழுதும் நேர்மையாயிரு!

நேர்மையாயிரு,
எப்பொழுதும் நேர்மையாயிரு,
மேன்மேலும் நேர்மையாயிரு.

நேர்மையாயிருப்பதென்றால்
சிந்தனைகளில்,
மனவெழுச்சிகளில்,
புலுனுணர்ச்சிகளில்,
செயல்களில்
தனது ஜீவனின் மைய உண்மையைத் தவிர வேறு எதையும் வெளியிடாதிருத்தலாகும்.

வினாடி வினா :

வினா - போர் தொடுத்தல் மற்றும் அமைதி உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுதல் யாருடைய பணி ?

விடை
- ஜனாதிபதி.

இதையும் படிங்க :

கொஞ்சம் தண்ணீர்... கொஞ்சம் சாப்பாடு...

large_253933.jpg

சென்னை : சென்னை, எக்மோர் ரயில் நிலைய வெளிவாசலில் நெருங்கவே முடியாத அளவிற்கு நெடி வீசிய சகதி கிடங்கில் ஒரு உருவம் அனத்தியபடி நெளிந்தது.

அது ஏதோ ஓரு இரண்டு கால்,நான்கு கால் பிராணி அல்ல உயிரும்,உணர்வும் கொண்ட ஒரு மனிதன்வயது 70ற்கு மேல் இருக்கும். இதற்கு மேல் ஒல்லியாக முடியாத என்ற உடல் வாகு. கண்ணில்மட்டுமே உயிர் தேங்கி நின்றது.
பார்த்த உடனேயே யாருக்கும் பரிதாபம் வரக்கூடிய தோற்றம் ஆனால் யாருக்குமே பரிதாபம் வரவில்லையா அல்லது நின்று பார்க்க,என்னாச்சு என்று கேட்க நேரமில்லையா தெரியவில்லை.ஆளாளுக்கு மூக்கை பிடித்துக்கொண்டு பறந்தனர், ஒரே ஒருவர் மட்டும் நெருங்கிவந்தார்.ஆகா... ஒரு மனித நேயம் உள்ளவர் வந்துவிட்டார் என்று நினைத்த போது இந்த வயதானவரின் காலைபிடித்து இழுத்து சென்று கொஞ்ச தூரத்தில் கொண்டு போய் குப்பையை போடுவது போல போட்டுவிட்டு வந்தார். கேட்டபோது, அவர் ரோட்டோர பழக்கடை போடும் இடம் அதுவாம்.

இருந்த நிழலும்,நிலையும் போய் தன்னை இன்னும் சுருக்கிக்கொண்டு கிடந்த அந்த வயோதிகரின் நிலையை பொறுக்கமுடியாமல் 108 க்கு போன்செய்தபோது விபத்தில் அடிபட்டால் மட்டும் சொல்லுங்கள் "கிழே கிடப்பதை' எல்லாம் எடுத்துச் செல்ல வரமுடியாது என்று சொல்லிவிட்டனர்.தொடர்ந்து பல இடங்களுக்கு போன் போட்டபோதும் முறையான பதில் இல்லை. கடைசியில் காவல் நிலையம் சார்பில் வந்து பார்த்துவிட்டு இதில் நாங்கள் செய்வதற்கு ஏதும் இல்லை என்று கூறியவர்கள் ஒரு லுங்கி மட்டும் உபயமாக வழங்கிவிட்டு சென்றனர்.

பிறகு அக்கம்,பக்கம் உள்ளவர்களை அழைத்து அவரிடம் பேச்சு கொடுத்த போது பேச்சு வரவில்லை. கொஞ்சம் பிஸ்கெட்டும், தண்ணீரும் கொடுத்ததும்,பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து ஆசையுடன் சாப்பிட்டார்.இவரது தேவை உணவுதான் என்பது தெரிந்ததும் இன்னும் கொஞ்சம்பிஸ்கெட்டும், தண்ணீரும் வழங்கப்பட்டது. பெரியவர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.அவரது பேச்சு யாருக்கும் புரியவில்லை.இவரை சுமையாக கருதியவர்கள் யாரோ இப்படி மனிதாபிமானமில்லாமல் ரோட்டில் வீசிச்சென்று உள்ளனர் என்பது மட்டும் புரிந்ததுபின்னிரவில் போகும் போதும் ஒரு பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து சாப்பிட்டபடி ரோட்டோரமாய் பெரியவர் சாய்ந்து கிடந்தார்.



நன்றி - கூகிள் செய்திகள், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment