Saturday, June 11, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 11, 2011

முக்கியச் செய்திகள் :

tn_assembly1.jpg

*சமச்சீர் கல்வியை நிறுத்த உயர்நீதிமன்றம் தடை

சென்னை, ஜூன் 10- தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

* மும்பை தாக்குதல் வழக்கில் ராணா விடுதலை: அமெரிக்க ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு 

மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி ராணாவை விடுதலை செய்து அமெ‌ரி‌க்க ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு வழங்கியு‌ள்ளது.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆ‌ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக டேவிட் கோல்மேன் ஹெட்லி, தகாவுர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிகாகோ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி ராணாவை விடுதலை செய்து ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று தீர்ப்பு வழங்கியது.

ஆனால், டென்மார்க் பத்திரிகை அலுவலகம் தாக்குதல், லஷ்கர் இ தை‌ய்பா தீவிரவாதிகளுக்கு உதவி செய்தது ஆகிய 2 குற்றச்சா‌ற்றுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களுக்கான தண்டனை விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :
* ஹிலாரி கிளிண்டனுக்கு உலக வங்கி தலைவர் பதவி? 

உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

தற்போது உலக வங்கியின் தலைவராக இருக்கும் ராபர்ட் சோலிக்கின் பதவி காலம் வருகிற 2012 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.

பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே வழங்கப்பட்டு வரும் இந்த பதவிக்கு தற்போது அமெரிக்காவின் அயலுறவுத் துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அயலுறவுத் துறை அமைச்ச்ராக அவரது செயல்பாடுகள் வெள்ளை மாளிகைக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும் நிலையில், உலக வங்கி தலைவர் பதவிக்கு அவரது பெயர் அடிபடுகிறது.

ஆனால் இந்த தகவல் முற்றிலும் ஆதரமற்றது என்று ஹிலாரியின் செயலாளரான பிலிப் ரீன்ஸ் மறுத்துள்ளார்.

* இந்திய உயர்மட்ட குழு இலங்கை வருகை 
இந்திய உயர்மட்டக் குழு ஒன்று இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை வர உள்ளது.

இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு வரும் இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அதிகாரிகளை சந்திக்கும் இந்த குழுவினர் வடக்கின் புனரமைப்பு, ஐ.நா அறிக்கை, இருதரப்பு உறவுகள் ஆகிய விடயங்கள் குறித்து பேசுவார்கள் என்றும், அதிபர் மகிந்த ராஜபக்ச, அயலுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல். பீரீஸ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சந்திப்பார்கள் என்றும் இலங்கை அயலுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* எம்.எப்.ஹுசேன் உடல் லண்டனில் அடக்கம்-நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்பு

10-mf-hussain-300.jpg

டெல்லி: பிரபல ஓவியர் எம்.எப். ஹுசேனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தபோதும் அவரது கடைசி விருப்பப்படி லண்டனிலேயே அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.

இந்துக் கடவுள்கள் குறித்த ஹுசேனின் சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. ஹுசேனின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

மீண்டும் இந்தியாவுக்கு வந்து வாழ ஆசைப்பட்ட அவர் லண்டனிலேயே இறந்தார். இந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.

இருப்பினும் நான் எங்கு இறக்கிறேனோ, அங்கேயே எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று ஹுசேன் முன்பு தனது குடும்பத்தாரிடம் கூறியிருந்தார். இதனால் அவரது கடைசி ஆசைப்படி லண்டனிலேயே உடல் அடக்கத்தை நடத்த குடும்பத்தினர் தீர்மானித்தனர்

அதன்படி லண்டன், ப்ரூக்வுட் சிமெட்டரி எனப்படும் கல்லறைத் தோட்டத்தில் ஹுசேனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

உடல் அடக்க நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்கின்றனர். கலையுலகைச் சேர்ந்த பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.

தேசியச் செய்தி மலர் :

* அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ராஜ்காட்டிற்கு மாற்றம்
 

புதுதில்லி, ஜூன்.8: யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக போலீஸ் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து சமூக சேவகர் அண்ணா ஹசாரே ராஜ்காட்டில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

காலை 10 மணியளவில் அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

பொதுநல அமைப்பின் உறுப்பினர்களான சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி உள்ளிட்டோரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து அருகில் உள்ளனர்.

உண்ணாவிரதம் அமைதியாக நடைபெற தில்லி போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

முன்னதாக தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருந்தார். ஆனால் தில்லி போலீசார் அதற்கு அனுமதி மறுத்ததால் போராட்டத்தை ராஜ்காட்டுக்கு மாற்றிக் கொண்டார்.

அமைதிப் போராட்டம் நடத்துவது குடிமகனின் அடிப்படை அரசியல் சாசன உரிமை. அதற்கு அனுமதி மறுப்பதற்கு பல்வேறு பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

உண்ணாவிரதத்தில் பங்கேற்க ராஜ்காட்டில் காலை முதலே ஹசாரே ஆதரவாளர்கள் குழுமத் தொடங்கினர்.

ஏராளமான இளைஞர்கள் காந்தி குல்லாவுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். வயதான முதியவர்களும் தேசியக் கொடியுடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர்.

ஒருவர் மகாத்மா காந்தியைப் போன்று உடை அணிந்து வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

உண்ணாவிரதத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி போலீஸ் தலைவர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

* விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
ஆலந்தூர், ஜூன் 10: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போனில் வந்த மிரட்டலையடுத்து 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 தில்லியில் உள்ள வெளிறவுத்துறை அமைச்சகத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது 1 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறி இணைப்பை துண்டித்தார்.

 இந்த தகவலைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் விமானநிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே சென்னை விமானநிலையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து இப்போது 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 விமானநிலையத்தில் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கபடுகின்றன. அதேபோல பயணிகளின் உடமைகளும் சோதிக்கப்படுகின்றன.

 மேலும் விமானநிலையத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

* பண பலத்துக்கு நீதி அடிபணியாது: நீதிபதி ஓ.பி. சைனி

புது தில்லி, ஜூன் 10: நீதிமன்ற நிர்வாகத்தை பணபலத்தால் அடி பணிய வைக்க முடியாது என்று தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி கூறினார்.

 சிறப்பு நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை (ஜூன் 11) தொடங்கி, ஜூலை 4 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதைக் காரணம் காட்டி, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிறையில் உள்ள ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.

 நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குவதால், இந்த விடுமுறை காலத்தில் தங்களது நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் வகையில் மும்பை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களையும் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.

 அவர்களது மனுவை நிராகரித்த நீதிபதி சைனி, நீதி நிர்வாகத்தைப் பணபலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்று கூறினார்.

 நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவர்கள் அனைவரும் தலா ரூ.15,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.


* தீவிர சிகிச்சைப் பிரிவில் பாபா ராம்தேவ் அனுமதி

babauramdev.jpg

ஹரித்வார், ஜூன் 10: யோகா குரு பாபா ராம்தேவின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து டேராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 ஊழல், கறுப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, கடந்த 4-ம் தேதி தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கிய அவர், போலீஸôரால் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள அவரது பதஞ்சலி ஆஸ்ரமத்தில் போராட்டத்தை ராம்தேவ் தொடர்ந்து வந்தார்.

 உண்ணாவிரத போராட்டத்தின் 7-வது நாளான வெள்ளிக்கிழமை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெத்தானி, தேவையான பரிசோதனைகளை மருத்துவர்கள் துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக அவருக்கு குளுகோஸ் ஏற்றப்படுகிறது என்றார்.

 உத்தராகண்ட் மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆஷா மாத்தூர் கூறுகையில், ராம்தேவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவை சீராக இல்லை. சிறுநீரில் நோய்த்தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.

 மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெத்தானி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராம்தேவின் கல்லீரல் இயக்கத்தில் சிறிய மாறுபாடு காணப்படுகிறது. சிறுநீரக இயக்கம் நன்றாக உள்ளது. அவர் சுயநினைவுடன் உள்ளார். இப்போதைய நிலவரப்படி அவர் நலமாக உள்ளார் என்றார்.

இதற்கிடையே, ராம்தேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அவரது சீடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீஸôருடன் மோதல் ஏற்பட்டது. ஆசிரம நிர்வாகிகளின் தலையீட்டை அடுத்து நிலைமை சீரடைந்தது.

 ஸ்ரீ ரவிசங்கர்: இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மறைந்த தனது தந்தையின் அஸ்தியை கரைப்பதற்காக ஹரித்வார் சென்ற வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மருத்துவமனையில் ராம்தேவை சந்தித்துப் பேசினார்.

 பின்னர் அவர் கூறுகையில், ராம்தேவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இப்போது சற்று சீராக உள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரை கேட்டுக்கொண்டேன் என்றார்.

 முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நடவடிக்கை: பதஞ்சலி பீடத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பாபா ராம்தேவை மருத்துவமனைக்கு மாற்றும் முடிவு முதல்வரால் எடுக்கப்பட்டது. அவர்தான் மாவட்ட நிர்வாகத்துக்கு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். சிறப்பு கவனம் எடுத்து பாபாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களையும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி பாபா ராதேவையும் முதல்வர் கேட்டுக்கொண்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.


* பயங்கரவாதிகளின் பிடியில் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் போகும் அபாயம்: ஏ.கே. அந்தோனி

aka.jpg

புதுதில்லி, ஜூன் 10 : பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் பிடியில் செல்லும் அபாயம் உள்ளது அச்சமளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

 தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணு ஆயுதங்களை பாதுகாக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிகிறது. எனினும், அவை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் பிடியில் சிக்கும் வாய்ப்புகள் இருப்பது மிகவும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். " இதுகுறித்து கவனமாக உள்ளோம். தேவையில்லாமல் நாங்கள் கவலைப்படவில்லை. எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் இந்தியா வகையில் தயாராக உள்ளது ‘' என்றார் அவர்.

 முன்னதாக, எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறிய 11 இந்திய விமானப்படையின் பெண் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்

* கொல்கத்தா, ஜூன் 10:இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

 மேற்கு வங்க மாநிலத்தில் "யுனிசெஃப்' மற்றும் "மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டி' ஆகிய அமைப்புகள் இணைந்து எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கை கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடத்தின. கருத்தரங்கில் பேசியவர்கள் "தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின்' ஆய்வில் 70,000 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வந்ததைக் குறிப்பிட்டுப் பேசினர். மேலும் அந்த ஆய்வில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரிடமிருந்தே இந்த நோய் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கில் பேசிய இந்தியாவுக்கான யுனிசெஃப் அமைப்பின் தலைவர் இவோன் காமரோனி தெரிவித்ததாவது:

 யுனிசெஃப் அமைப்பு எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு உதவும். குறிப்பாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவதைத் தடுக்க உதவும். வருடத்துக்கு 21,000 குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெறுகின்றனர். இந்நோயைத் தடுக்கத் தேவையான மருந்துகள், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், கண்காணிப்பை முறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான காரணம், தாயிடமிருந்து தொற்றுதல், இரத்தம் செலுத்தும்போது தொற்றுதல், நோய்க்கிருமி பாதிப்புள்ள தாய் கர்ப்ப காலத்தில் உரிய தடுப்பு முறைகளை கடைபிடிக்காதது ஆகியவையாகும். இந்நோய் பற்றிய கள ஆய்வின் மூலம், சமூகப் பொருளாதார அடிப்படையில் பாதிப்படைந்தவர்களுக்கான உதவிகள், முந்தைய நடவடிக்கைகளில் மேம்படுத்த வேண்டியவை மற்றும் உரிய மருத்துவ வசதிகளைத் தருதல் ஆகியவற்றில் செய்ய வேண்டிய முன்னேற்றம் பற்றிய புதிய பார்வை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

 யுனிசெஃப் அமைப்பு மேற்கு வங்கத்தில் "எச்ஐவி/எய்ட்ஸ் நோயுள்ளவர்களுக்கான வங்காள அமைப்பு' என்ற அமைப்புடன் இணைந்து, எய்ட்ஸ் நோய் பாதிப்படைந்த 995 குடும்பங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் எய்ட்ஸ் பாதித்தவர்களில் பெரும்பாலோனோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலோனோர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, கிழக்கு மிதுனபுரி, ஜல்பைகுரி, டார்ஜிலிங், 24 தெற்கு பர்கானா மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* விவேகானந்தர் சிறப்பு கண்காட்சி ரயில் இன்று சென்னை வருகை

 விவேகானந்தர் சிறப்பு கண்காட்சி ரயில் மக்கள் பார்வைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வருகிறது.

 சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

 இதன் ஒரு பகுதியாக விவேகானந்தர் சிறப்பு கண்காட்சி ரயிலை இந்திய ரயில்வேத் துறை சார்பில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

 இந்த சிறப்புக் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, சிகாகோ பயணத்தின் போது உலக மக்களை ஈர்க்கும் வகையில் விவேகானந்தர் பேசிய அறிய குறிப்புகள், விவேகானந்தரின் அறிய புகைப்படங்கள், அவரது சிந்தனை நூல்கள், பொன்மொழிகள் ஆகியன இந்த ரயில் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

 கடந்த ஜனவரி 12-ம் தேதி மேற்குவங்க மாநிலம் ஹெüராவில் இருந்து இந்தச் சிறப்பு கண்காட்சி ரயிலை அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்த இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தடைகிறது.

 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த ரயில் மக்களின் பார்வைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

 மதுரையில் 4 நாள்கள்: இதைத் தொடர்ந்து ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலும், ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை 3 நாள்கள் காட்பாடியிலும், ஜூன் 26 முதல் 28-ம் தேதி வரை புதுச்சேரியிலும் இந்த ரயில் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்படும்.

 மதுரையில் ஜூன் 29 முதல் ஜூலை 2-ம் தேதி வரை 4 நாள்களும், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரையிலும், கொல்லத்தில் ஜூலை 6, 7 ஆகிய நாள்களும், எர்ணாகுளத்தில் ஜூலை 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

* கல்வி பரிமாற்ற ஒப்பந்தங்கள் இரு நாட்டு உறவை மேம்படுத்தும்: சிம்கின்

simsan.jpg

சென்னை, ஜூன் 9: கல்வி நிறுவனங்கள் இடையே மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஆண்ட்ரூ சிம்கின் கூறினார்.

 அமெரிக்க நிதி உதவியுடன் உணவுத் திட்டக் கல்வி நிதியுதவித் திட்ட தொடக்க விழா சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்ட்ரூ சிம்கின் பேசியது:

 இந்தியாவிலிருந்து இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பரிமாற்ற திட்டங்களின் கீழ், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்று நாடு திரும்பியுள்ளனர். இதுபோல் அமெரிக்க கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

 இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகச் சிறப்பாக உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய வேளாண் உதவித் திட்டங்களை அமெரிக்க வேளாண் துறை, இந்தியாவில் நிறைவேற்றி வருகிறது என்றார்.

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். பிரபாகரன்: அமெரிக்க நிதி உதவியுடன் கூடிய மூன்று ஆண்டு உணவுத் திட்டக் கல்வி நிதியுதவித் திட்டத்தின் கீழ், முதல் தவணையாக ரூ. 67.5 லட்சத்தை அமெரிக்க வேளாண் துறை அளித்துள்ளது.

 இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உள்ள மிட்சிகன் நகரப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 6 பேரும், இரண்டு ஆசிரியர்களும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு பயிற்சிக்காகவும், கல்வி கற்பிக்கவும் வந்துள்ளனர்.

 இதுபோல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு விரைவில் செல்ல உள்ளனர்.முட்டை உற்பத்தியில் இந்தியா (ஆண்டுக்கு 5,890 கோடி முட்டை) உலக அளவில் 3-வது இடத்திலும், கறிக்கோழி உற்பத்தியில் (ஆண்டுக்கு 200 கோடி) உலக அளவில் 4-வது இடத்திலும் உள்ளது.

 இருந்தபோதும், இந்தியாவில் கால்நடை உற்பத்தி முறை, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது மாறுபட்டு காணப்படுகிறது. பல்வேறு காரணங்களால் இந்தியாவில் மூன்று வகையான கால்நடை உற்பத்தி முறைகள் கையாளப்படுகின்றன. எனவே, இந்தியா வந்துள்ள அமெரிக்க மாணவர்கள் இங்குள்ள மூன்று வகையான கால்நடை உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ முறைகளையும் கற்றுக்கொள்ள முடியும்.

 இதுபோல் அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள், அங்குள்ள அமைப்பு சார்ந்த கால்நடை உற்பத்தி முறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.

* சென்னையில் வாகன தொழில்நுட்பக் கண்காட்சி: 125 நிறுவனங்கள் பங்கேற்பு

சென்னை, ஜூன் 9: சென்னையில் போகஸ்டு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் வாகன தொழில்நுட்பக் கண்காட்சி ஜூன் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

 இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் கட்கேர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

 "ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயரிங் ஷோ' என்ற இந்தக் கண்காட்சியை சென்னையில் இரண்டாவது முறையாக நடத்துகிறோம். நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் இக் கண்காட்சி இம் மாதம் 10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

 125 நிறுவனங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கண்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியாக 7 சிறந்த தொழில்நுட்ப சிந்தனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. கண்காட்சியில் வாகன தொழில்நுட்ப தயாரிப்பாளர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிக்கு வைக்கின்றனர். மேலும் இதில் அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., ராயல் என்ஃபீல்டு, ஃபோர்டு, எஸ்கார்ட்ஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றார் அவர்.

* தூர்ந்து கிடக்கும் கெடிலம் ஆற்று அணைகள்: மணல் குவாரி அமைக்கப்படுமா?

cdr.jpg

கடலூர், ஜூன் 10: காமராஜர் ஆட்சி காலத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை, 40 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கிறது. அணையைத் தூர்வாரி அங்கு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 கெடிலம் ஆறு கல்வராயன் மலைப் பகுதியில் கருடன் பாறை என்ற இடத்தில் உற்பத்தியாகி விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி, கடலூர் உப்பனாற்றில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது. கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம், திருவதிகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு உள்ளன. காமராஜர் ஆட்சி காலத்தில் இவைகள் கட்டப் பட்டவை. இந்த அணைகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் வரை பாசன நிலங்களைக் கொண்டது.

 திருவந்திபுரம், திருவதிகை அணைகள் கடந்த 40 ஆண்டுகளாகத் தூர்ந்து கிடக்கின்றன. கெடிலம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள நிலங்களில், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீóர் தாரளமாகக் கிடைப்பதால், இந்த அணைகளில் இருந்து கிடைக்கும் நீரை விவசாயிகள் எதிர்பார்ப்பது இல்லை. இதனால் தூர்ந்து கிடக்கும் அணைகள் பற்றி பொதுப் பணித்துறை கவலை கொள்வது இல்லை.

 கடலூர், பண்ருட்டி தாலுகாக்களில் மலைப் பாங்கான புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில், நீர் வடி முகடுகள் அமைக்கும் திட்டத்தில், பல கோடி ரூபாய் கடந்த காலங்களில் செலவிடப்பட்டு இருக்கிறது. மழை காலத்தில் வழிந்தோடி வீணாகும் நீரை, ஆங்காங்கே தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

 இதற்கெல்லாம் கோடிக் கணக்கில் செலவிடும் பொதுப்பணித் துறை, தூர்ந்து கிடக்கும் கெடிலம் அணைகளைத் தூர்வாரி, அவற்றில் மழைநீரைச் சேமிப்பது குறித்தோ, ஆண்டு தோறும் மழை காலத்தில் கெடிலம் ஆற்றில் பல டி.எம்.சி. தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலப்பது குறித்தோ, சற்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேட்டதற்கு, அணை தூர்ந்து கிடப்பது உண்மை. அணையைத் தூர்வாரினால் நல்லதுதான். ஆனால் ஆறுகளைத் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறையில் திட்டம் எதுவும் இல்லை. கெடிலம் ஆறு நீர்வள நீலவள ஆதாரத் திட்டத்தில், கெடிலம் ஆற்றின் கரைகளை பலப் படுத்தும் திட்டம் தற்போது, ரூ. 30 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அணையைச் சீரமைக்க நிதி பெறலாம். ஆனால் அணையத் தூர்வார நிதி கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கான திட்டமும் இல்லை. அணையில் குவாரி அமைத்து மணலை அப்புறப் படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

 திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணை, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. 132 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், அதிக பட்சம்  7.9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகக்

 கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது ஒருமீட்டர் உயரத்துக்குகூட தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு, தூர்ந்து கிடப்பதுதான் அணையின் பரிதாப நிலை.

* சீரற்ற இதயத்துடிப்பு: அலட்சியம் வேண்டாம்: இதய மின்சீரமைப்பு நிபுணர் உல்ஹாஸ் பாண்டுரங்கி

சென்னை, ஜூன் 10: சீரற்ற இதயத்துடிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதய மின்சீரமைப்பு நிபுணர் உல்ஹாஸ் பாண்டுரங்கி தெரிவித்தார்.

 இது குறித்து டாக்டர் உல்ஹாஸ் பாண்டுரங்கி, இதய மருத்துவ நிபுணர் முல்லாசாரி அஜித் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அனைத்து வயது பிரிவிலும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 சீரற்ற இதயத்துடிப்பின் மூலம் மூளை, இதயம், சிறுநீரகங்கள் மற்றும் முக்கிய உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக திடீர் மரணங்கள் கூட நிகழ்கிறது.

 சென்னையைப் பொறுத்தவரை 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேருக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருக்க வாய்ப்புள்ளது.

 படபடப்பு, தலைசுற்றல், வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 எனவே இந்த அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 சீரற்ற இதயத்துடிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 5.30 மணிக்கு நடை பயணம் நடைபெறவுள்ளது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் 

புற்றுநோய் பரவுவதை தடுக்கும்...

மலச்சிக்கலைப் போக்கும்...

பித்தத்தைக் குறைக்கும்...

அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்...

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 1.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மேலு‌ம், கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும், இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10 மில்லிகிராமும், வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படுபவர்களும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் (Cancer) துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமையு‌ம் படைத்தது பீட்ரூட் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


வர்த்த்கச் செய்தி மலர் :

* மும்பை பங்குச் சந்தையில் 116 புள்ளிகள் சரிவு

10bse.jpg

மும்பை, ஜூன் 10: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று கடுமையான சரிவு காணப்பட்டது. 116 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,268 புள்ளிகளாகக் குறைந்தது.

 ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடுமையாக சரிந்தது தொடர்பான விவரம் வெளியானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் முக்கியமான பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் சரிவைச் சந்தித்தன.

 தேசிய பங்குச் சந்தையில் 35 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,485 புள்ளிகளானது.

 தொழில்துறை உற்பத்தி சரிந்தது தொடர்பான அறிக்கை வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் சரிவு மளமளவென ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 6.3 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தொழில்துறை உற்பத்தி 13.1 சதவீதமாக இருந்தது. அத்துடன் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது ஆகியனவும் பங்குச் சந்தையை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன.

 ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக் கொள்கையில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பது உறுதியாக தெரியவந்ததால் பங்குகளின் விலைகள் சரிந்தன.

 ஆசிய சந்தையில் சீனா, ஜப்பான் பங்குச் சந்தைகள் கணிசமான முன்னேற்றம் கண்டன. ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

"ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் மூன்றாவது மோதல்

ஆன்டிகுவா: ஆன்டிகுவாவில் இன்று நடக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த இரு போட்டியில் வென்ற இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இந்திய அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இந்திய அணியில் சச்சின், தோனி போன்ற சீனியர்கள் இல்லாத குறையே தெரியவில்லை. இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். சிகர் தவான், பார்த்திவ் படேல் நல்ல துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, கேப்டன் ரெய்னா, பத்ரிநாத் மீண்டும் அசத்துவார்கள் என்று நம்பலாம். பின்வரிசையில் யூசுப் பதான், ஹர்பஜன் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.
மிஸ்ரா அபாரம்:
வேகப்பந்து வீச்சில் பிரவீண் குமார், முனாப் படேல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி தான். சுழலில் ஹர்பஜன் சிங்குடன் சேர்த்து, அமித் மிஸ்ரா, யூசுப் பதானும் மிரட்டுகின்றனர். இன்று தங்களது அசத்தலை தொடரும் பட்சத்தில், இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை கைப்பற்றலாம்.
பிராவோ ஓய்வு:
 தொடர்ந்து இரண்டு தோல்விகளால் துவண்டு கிடக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் "மிடில் ஆர்டரில்' டுவைன் பிராவோவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது மேலும் சிக்கலைக் கொடுப்பது உறுதி. துவக்க வீரர் சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ், சீனியர் சர்வான், சாமுவேல்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தருவது உறுதி. கேப்டன் சமியும் பேட்டிங்கில் சற்று ஜொலிக்க முயற்சித்தால் நல்லது.
ரோச் வருகை:
பவுலிங்கை பொறுத்தவரையில் எதிர்வரும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு வருகிறது. இதனால் முதல் இரண்டு போட்டியில் இடம் பெறாத கீமர் ரோச், ஆன்ட்ரூ ரசல் இன்று அணிக்கு திரும்புகின்றனர். ராம்பால் நீக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆன்டிகுவா ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்கள் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றனர். இந்நிலையில் பவுலர்கள் மாற்றம் எந்தளவுக்கு பலன் தரும் என்பது இன்று தான் தெரியும்.
வெற்றி யாருக்கு?
முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இன்று வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று வென்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இதனால் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
----
சோதனை "களம்'
இன்று போட்டி நடக்கும் ஆன்டிகுவா மைதானம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எப்போதும் சோதனையாகவே அமைந்துள்ளது. இங்கு 2009ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி, 10 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மோசமான ஆடுகளம் காரணமாக ரத்துசெய்யப்பட்டது.
* தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு பங்கேற்ற 4 ஒருநாள், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் என, அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.
--
மழை வாய்ப்பு
ஆன்டிகுவாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக காணப்படும். இருப்பினும் மழை வரும் வாய்ப்பு இல்லை.
--
தொடர்கிறது கெய்ல் புறக்கணிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான அணியில், கெய்ல் புறக்கணிக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது போட்டிக்கான அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோவில்
மூலவர்    :    நரசிம்ம ஆஞ்சநேயர்

பழமை    :    500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    -
ஊர்    :    வரதராஜபுரம்
மாவட்டம்    :    சென்னை
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு

முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

 தலபெருமை:


முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு.

 திருவிழா:

நரசிம்ம ஜெயந்தி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

தான் தானாயிருத்தலே பரமானந்தம் - ரமணர்

வெளிமுக நாட்டம் நீங்கி மூல சொரூபத்தை உணர்தல் வேண்டும் என்பதே சாஸ்திரங்கள் அனைத்தின் உட்கருத்து. புதிதாய் எதனையும் அடைய வேண்டியதில்லை. அஞ்ஞானம் அகல வேண்டும். விபரீதப் பிரமைகளே ஒழியவேண்டும். அமைதியும் ஆனந்தமும் தன்னைவிட்டு வேறெங்கோ இருப்பதாக எண்ணி அலையாமல், அயலேதுமில்லாத தன் பரிபூரண நிலையில் அமரவேண்டும். தான் தானாயிருத்தலே பரமானந்தம். அவ்வமைதியே ஆனந்தமயம்.

'முக்தி அடைவதற்கு மனத்தை அடக்க வேண்டும்' என்றே எந்த நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், மனோ சிக்ரமே சாஸ்திரங்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்டபின் நூல்களை அளவின்றி படிப்பதால் பயனில்லை. மனத்தை அடக்குவதற்குத் தன்னை யாரென்று விசாரிக்க வேண்டுமே அல்லாமல் எப்படி நூல்களை விசாரிப்பது.

தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால் தானே அறிய வேண்டும். ராமன் என்பவன் தன்னை ராமன் என்று அறிய நிலைக்கண்ணாடி வேண்டுமா? 'தான்' என்பது பஞ்சகோசங்களுக்குள் இருப்பது. நூல்களோ அவற்றிற்கு வெளியே இருப்பவை. ஆகவே, பஞ்சகோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை, நூல்களில் விசாரிப்பது வீணே. பந்தத்தில் இருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி. சதா காலமும் மனத்தை ஆன்மாவில் வைத்திருப்பதற்குத்தான் 'ஆன்ம விசாரம்' என்று பெயர். தியானமோ தன்னை சத்-சித்-ஆனந்த பிரும்மமாகப் பாவிப்பது. கற்றவை அனைத்தையும் ஒரு காலத்தில் மறக்க வேண்டிவரும்.

சுருதிகள் இயம்பும் இலக்கணங்களுக்கெல்லாம் இலக்கியப் பொருளாக விளங்கும் ஞானியர்களுக்கு, அச்சுருதிகளால் யாதொரு பிரயோஜனமும் இல்லை.

வினாடி வினா :

வினா - உலகின் அதிக வருவாயைத் தரும் நகரம் எது ?

விடை - வாடிகன் நகரம்.

இதையும் படிங்க :
நம்பினார் கெடுவதில்லை!

E_1307073098.jpeg

நம்பிக்கையே மனிதனின் வெற்றிக்கு ஆதாரம். இறைவன் மீது, யாரொருவர் ஆழமாக நம்பிக்கை வைக்கிறாரோ, அவர், தன் மீதே நம்பிக்கை வைக்கிறார். நம்பிக்கை உள்ளவனுக்கு, தெய்வம் பக்க பலமாக இருந்து, அவனது செயல்கள் வெற்றி பெற உதவும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருக்கு, வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படுகிறது.
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ளது திருநாரையூர். இங்குள்ள சவுந்தரேஸ்வரர் கோவில், பொள்ளாப் பிள்ளையார் சன்னிதியில் அனந்தேசர் என்பவர் பூஜை செய்து வந்தார்.

சுவாமிக்குப் படைத்த நைவேத்யத்தை, அவர் பக்தர்களுக்கு கொடுப்பார்; மீதி இருந்தால், வீட்டுக்கு கொண்டு செல்வார். அதை, அவரது ஐந்து வயதான மகன், நம்பியாண்டார் நம்பி விரும்பி சாப்பிடுவான்.

பிரசாதம் காலியாகி விடும் சமயங்களில், "அப்பா... பிள்ளையாருக்கு படைத்த நைவேத்யத்தில், எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்...' என்று கேட்பான். அனந்தேசர் மகனைச் சமாதானப்படுத்துவதற்காக, "எல்லாவற்றையும் விநாயகர் சாப்பிட்டு விட்டாரே...' என்பார்; இது, சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

ஒருசமயம், அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகன் நம்பியாண்டார் நம்பியை பூஜை செய்ய அனுப்பினார். விநாயகருக்கு நைவேத்யம் படைத்தார் நம்பி. தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தார்; ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்; நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால், சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டார். அவருக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை எடுத்துக் கொண்டார் விநாயகர்.

வெளியே பிரசாதத்துக்காக காத்திருந்த பக்தர்களிடம், "பிள்ளையார் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்...' என்றான்; அவர்கள் நம்பவில்லை. எல்லாவற்றையும் பையனே சாப்பிட்டு விட்டான் என்று முடிவெடுத்து, அவரது தந்தையிடம் முறையிட்டனர்.

பிள்ளையார் தான் சாப்பிட்டார் என பையன் திடமாகச் சொல்லவே, மறுநாளும் அவனையே விநாயகருக்கு நைவேத்யம் படைக்க கூறினர். விநாயகரும் நேரில் வந்து சாப்பிட்டதைக் கண்டு, அதிர்ந்தனர் பக்தர்கள். நம்பிக்கையுள்ள பக்தி, நம்பிக்கு, கை கொடுத்தது.

பொள்ளாப் பிள்ளையாரைப் போற்றி, "விநாயகர் இரட்டை மணிமாலை' பாடினார் நம்பி. இவருக்கு, சவுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியில் சன்னிதி உள்ளது. இவரது குருபூஜையன்று இரவில் தேவார பதிகங்களை பாராயணம் செய்வர். இதை, "திருமுறை விழா' என்பர்.

மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க, ராஜராஜசோழன் முயற்சித்தான். அவனுக்கு, பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், தனக்கு உதவும்படி கேட்டான். விநாயகரிடம் முறையிட்டார் நம்பி; அப்போது, அசரீரி ஒலித்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக் கூறியது. மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தனர். அவை, 11 திருமுறைகளாக நம்பியால் தொகுக்கப்பட்டது.

பக்தி செலுத்தியதுடன், தமிழுக்கும் தொண்டு செய்த நம்பியாண்டார் நம்பி, நம் நினைவில் என்றும் நிற்பார்.
***

- தி. செல்லப்பா

* "குழந்தைகளுக்காக உழைத்தேன்!'

large_255383.jpg

பார்க்கிங் வேலை பார்த்து தன் பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி உள்ள ராணி: விழுப்புரம் மாவட்டம் தான் என் சொந்த ஊர். ஆசைபட்டு காதலித்து, ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்தேன். எங்களை இழிவுபடுத்தியவர்கள் முன் கவுரவமாக காப்பாற்றுவார் என நம்பினேன். ஆனால், என் கனவு பொய்யானது.என் மாமனார், மிலிட்டரியில் வேலை பார்த்தவர் என்பதால், வாரிசு அடிப்படையில், அண்ணா சாலையில், காதிபவன் வளாகத்தில், பார்க்கிங் வேலை கொடுக்கப்பட்டது. அவர் சம்பாதித்து எங்களை காப்பாற்றுவார் என நினைத்தேன். மாறாக, குடிபழக்கத்திற்கு ஆளாகி, ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்தார்.எனக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அப்போது தான், வாழ்க்கையின் மீது பயம் ஏற்பட்டது. தோட்ட வேலைக்கு போனேன். குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருக்கும். அதன்பின், ஒரு யோசனை வந்தது... கார்ப்பரேஷனில், என் கணவர் வேலையை கேட்டேன். முதலில் மறுத்த அதிகாரி, என் மீது நம்பிக்கை வைத்து வேலை கொடுத்தார்.வெயில், மழை பாராமல் வேலை செய்தேன். 350 ரூபாயில் ஆரம்பித்த என் சம்பளம் தற்போது, 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலேயே, என் குழந்தைகளையும் படிக்க வைத்து விட்டேன். இந்த வேலையில் பல கஷ்டங்கள் இருந்தாலும், என் குழந்தைகளுக்காக அதை செய்தேன்.இப்போது என் மகன், மகள் வேலை செய்தாலும், என்னால் இந்த வேலையை விட முடியாது. காரணம், ஆரம்ப காலத்தில், இந்த வேலை என் குடும்பத்தை காப்பாற்றியது. இந்த வேலை எனக்கு, வாழ்க்கை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது.




நன்றி - கூகில் செய்திகள்,வெப்துனியா, தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment