Tuesday, June 14, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 14, 2011

முக்கியச் செய்தி :

காந்தியின் மூக்குக்கண்ணாடிகள் மாயம் 

eyeglass.jpg

தேசப்பிதா மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடிகள் காணாமல் போய்விட்டதாக தெரிவிகப்பட்டுள்ளது.

வர்தா (மகாராஷ்டிரம்), ஜூன் 13: மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி மாயமாகியுள்ளது.

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் யாரும் இதுகுறித்து வாய் திறக்காததால், கண்ணாடி மாயமான விவரம் தெரியாமல் போனதாக ஆசிரமத் தலைவர் எம்.எம்.கட்கரி கூறினார்.

 மகாத்மா காந்தி பயன்படுத்தி வந்த பொருட்களின் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் மூக்கு கண்ணாடி மட்டும் எப்படியோ விடுபட்டு விட்டது. காந்தியடிகள் பயன்படுத்தி வந்த பொருள்கள் அனைத்தும், அவர் தங்கியிருந்த குடிசையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. குடிசையை சில தினங்களுக்கு முன் சுத்தம் செய்த ஊழியர் ஒருவர், அங்கு மூக்கு கண்ணாடி இல்லாததைக் கண்டுபிடித்ததாக கட்கரி மேலும் குறிப்பிட்டார்.

 வர்தா காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.ஜி.நலே கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஆசிரம நிர்வாகிகள் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதனால் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார். போலீஸôரிடம் புகார் தராதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆசிரம நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படிதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் மகாத்மாவின் மற்ற உடைமைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்று கட்கரி தெரிவித்தார்.

 நாக்பூரில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வர்தா ஆசிரமத்தில் 1936-ம் ஆண்டு மகாத்மா காந்தி வந்து தங்கினார். அங்கு அவர் பயன்படுத்தி வந்த அவரது உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

* கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?

raviraja.jpg

சென்னை, ஜூன் 13: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிகிறது.

 மேல்முறையீடு செய்த 6,400 தனியார் பள்ளிகளுக்கான திருத்திய கட்டண நிர்ணயப் பணிகளை முடித்தவுடன், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ராஜிநாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அவர் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண திருத்திய நிர்ணய அறிவிப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, கட்டண நிர்ணயக் குழு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் திங்கள்கிழமை சென்றனர். அங்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் அறைக்கு முன் இருந்த பெயர்ப் பலகை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எதையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். நீதிபதி ராஜிநாமா குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என கல்வித் துறை அதிகாரிளும் மறுத்துவிட்டனர்.

 கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவருக்கு அரசு வழங்கியிருந்த வாகனத்தையும் அவர் திருப்பி வழங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 இரண்டாவது தலைவர் ராஜிநாமா: தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் 07.12.2009-ம் தேதி அமைத்து அரசு உத்தரவிட்டது.

 இந்தக் குழு, தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயத்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து ஏறத்தாழ 6,400 பள்ளிகள் நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்தன.

 ஏறத்தாழ 10 மாதங்கள் பணியாற்றிய பிறகு, நீதிபதி கோவிந்தராஜன் தனது உடல் நலன் கருதி, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். அதன்பிறகு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை இந்தக் குழுத் தலைவராக நியமித்து தமிழக அரசு 30.10.2010-ம் தேதி உத்தரவிட்டது.

 அந்தப் பதவியில் அவர் நியமிக்கப்பட்டபோது அவருக்கு 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4 வரை மேல்முறையீடு செய்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் இவர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

 பள்ளிகள் திறக்கும் தேதியான ஜூன் 15-ம் தேதிக்குள் மறுகட்டண நிர்ணய அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பதற்காக இந்தக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், ஜூன் 13-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்விக் கட்டண மறுநிர்ணய உத்தரவுகள் அனுப்பப்பட்டன.

 இந்தப் பணிகள் முடிவடைந்த நேரத்தில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

 காரணம் என்ன? நீதிபதி ரவிராஜபாண்டியனுக்கு மேலும் ஓர் ஆண்டுக்கு மேல் பதவிக் காலம் உள்ள நிலையில் அவரது ராஜிநாமாவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

 தி.மு.க. அரசால் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.

 இப்போது அ.தி.மு.க. அரசு பதவியேற்றிருப்பதால், தனது பணிகள் முடிந்ததும் பதவியிலிருந்து அவர் விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகச் செய்தி மலர் :

* செவ்வாய் கிரகத்தில் காந்திஜி உருவில் பாறை!

லண்டன், ஜூன் 13: செவ்வாய் கிரகத்தில் மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுள்ள பாறை ஒன்று இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

 ஐரோப்பிய விண்வெளிக் கழகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்பிட்டர் எனும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது தொடர்ந்து விண்வெளியிலிருந்து படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்தபோது, அங்கு மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுடைய ஒரு பெரும் பாறையைக் கண்டதாக மட்டியோ லானியோ என்பவர் தெரிவித்துள்ளார்.

 மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் வழுக்கைத் தலை, கனத்த புருவம், மீசை ஆகியவற்றைக் கொண்ட தோற்றமுள்ள பாறையைக் கண்டதாக, படங்களை ஆய்வு செய்த அவர் கூறியுள்ளார். இச்செய்தியை இங்கிலாந்து நாளேடான டெய்லி மெய்ல் வெளியிட்டுள்ளது.

* இராக்கில் குண்டு வெடிப்பு: 4 போலீஸார் உள்பட 7 பேர் சாவு
பாக்தாத், ஜூன் 13: இராக் தலைநகர் பாக்தாதின் தெற்கே உள்ள ஜிகாத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள் சிலர் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் இறந்தனர். 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 அதேபோல, பாக்தாதின் மத்திய நகரான பாகுபாவில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 3 போலீஸôர் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

 மற்றொரு சம்பவத்தில், நினேவியா மாகாணத்தில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொய்யரா பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து, ஒரு போலீஸ்காரர் இறந்துள்ளார், மற்றொருவர் காயமடைந்தார். தற்கொலைப் படை தாக்குதல்: ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான பஸ்ராவில், திங்கள்கிழமை காரில் வந்த மர்ம நபர், அங்குள்ள காவல் நிலையம் எதிரே குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 3 போலீஸôர் உள்பட நான்கு பேர் அதே இடத்தில் இறந்தனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.

 காலை 7.50 மணிக்கு அரசின் மாகாண அலுவலகம் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவசரகால நடவடிக்கை குழு அலுவலக கட்டடத்தின் முன்பகுதியும், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்களும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அமெரிக்க படைகள் இராக்கில் இருந்து முற்றிலுமாக வாபஸ் பெற உள்ள நிலையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் மட்டும் இதுபோன்ற சம்பவங்களில் 177 பேர் இறந்திருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* சைபீரியாவில் 37,500 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரை
சைபீரியா, ஜூன் 13: சைபீரியாவின் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயினால் 37,512 ஹெக்டேர் வனப்பகுதி நாசமாகியுள்ளது.

 அந்நாட்டின் ராஸ்னோயார்க், இர்குட்ஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள வனப்பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

 சுமார் 206 முறை ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தின் காரணமாக கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் அப்பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் இடார்-டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 தீயை கட்டுப்படுத்தும் பணியில் 6,515 தீயணைப்பு வீரர்களும், 636 தீயணைப்பு இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆளில்லாத விமானங்கள் நான்கை இப்பணியில் ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* நியூஸிலாந்தில் கடும் நில நடுக்கம்

வெலிங்டன், ஜூன் 13: நியூஸிலாந்தின் பெரும்பாலான நகரங்களில் திங்கள்கிழமை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. கிறைஸ்ட் சர்ச் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிறு சிறு அதிர்வுகளால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள புறநகர்ப்பகுதியில் 10 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கத்தால் இப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் இந்நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது.

 இந்நகரின் 80 சதவீத கட்டடங்கள் பூகம்ப தாக்குதலுக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்விதம் கண்டறியப்பட்ட கட்டடங்களில் 700 வீடுகள் முற்றிலுமாக இடிந்துவிட்டன. நிலநடுக்கத்தோடு ஏற்பட்ட புழுதிக்காற்றும் மீட்புப் பணிகளை தாமதப்படுத்தியது. புழுதி வீசியதால் மக்கள் மேலும் பீதியடைந்ததாக கிறைஸ்ட்சர்ச் மேயர் பாப் பார்க்கர் தெரிவித்தார். நிலநடுக்கத்தால் களிமண் படிவங்கள் பெரும்பாலான இடங்களில் காணப்பட்டன.

 நகரின் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. விமான ஓடு பாதைகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் கீழே விழுந்ததில் இவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 5.2 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க நிலவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.3 அலகுகள் பதிவானது. இதில் 181 பேர் உயிரிழந்தனர்.

 ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஏற்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

* சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்ட தமிழர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி

சிங்கப்பூர், ஜூன் 13: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, வழிப்பறி தகராறில், உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

 சென்னையைச் சேர்ந்த தில்லித்துரை கட்டட வேலைக்காக சிங்கப்பூர் சென்றார். கடந்த ஆண்டு மே மாதம், பணி முடிந்து சக தொழிலாளர்களுடன் திரும்பிக் கொண்டு இருந்த போது, மலேசியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்துள்ளனர். அவர்களிடமிருந்த பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். தகராறின் போது, கத்தியால் குத்தப்பட்டு தில்லித்துரை உயிரிழந்தார். வெல்டர் கருப்பையாவுக்கு கை மற்றும் கண்களிலும், பஞ்சாபைச் சேர்ந்த சந்தீப் சிங்குக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. கருப்பையாவுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது.

 இந்நிலையில், சிங்கப்பூர் மக்கள் அளித்த நன்கொடையிலிருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் தில்லித்துரை குடும்பத்தினரிடம் அளிக்கப்பட்டது. இதே போன்று, கருப்பையாவுக்கு கொடுக்கப்பட்ட ரு 32 லட்சத்தை அவரது இரு குழந்தைகளின் கல்வி செலவுக்கும்,குடும்ப செலவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தீப் சிங்குக்கு இருமுறை கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு ரூ.22 லட்சம் அளிக்கப்பட்டது. கொலை மற்றும் வழிப்பறி வழக்கு தொடர்பாக, 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஒருவர் தலைமறைவாக உள்ளார். மீதமுள்ள 6 பேரில், 4 பேருக்கு 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைத்துள்ளது. கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

* மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தானில் நீதிபதி மாற்றம்

இஸ்லாமாபாத், ஜூன் 13: மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் பாகிஸ்தான் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.

 இந்த வழக்கில் தொடர்புடையதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ராணா நிசார் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

 இதுவரையில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் செய்யப்படுவது இது நான்காவது முறையாகும். கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதியாக ராணா நிசார் அகமது நியமிக்கப்பட்டார். இவர் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மீது 2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை வழக்கையும் ராணாதான் விசாரிக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பணி மாற்றல் உத்தரவை லாகூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷகர்காரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக ராணா நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு நிரந்தர கைது வாரண்டை பிறப்பித்த சில மணி நேரங்களில் ராணா நிசார் அகமதின் பணி மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேநசீர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பர்வேஸ் முஷாரபுக்கு நிரந்தர கைது வாரண்டை ராணா பிறப்பித்திருந்தார். அத்துடன் முஷாரபின் சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, அதுபற்றிய விவரங்களை அளிக்குமாறு கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஜூன் 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. முஷாரபுக்கு முதலில் தலைமறைவு குற்றவாளி என அறிவித்து அறிவிக்க உத்தரவிட்டவர் ராணா நிசார் அகமது. அதேபோல பர்வேஸ் முஷாரப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞரை நிர்பந்தித்து வந்தார்.

 ராண நிசார் அகமது மாற்றம் செய்யப்பட்டதால், மும்பை தாக்குதல் சம்பவ விசாரணையில் தேக்க நிலை ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2009-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியபோதிலும், பல்வேறு காரணங்களால் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

 இதற்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகளுக்கும், பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததால் மாற்றப்பட்டனர். ஆனால் இப்போது பர்வேஸ் முஷாரபுக்கு நிரந்தர கைது வாரண்ட் பிறப்பித்ததற்காக மாற்றப்பட்டுள்ளார் ராணா நிசார் அகமது.

* பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்: வைத்திலிங்கம் பேட்டி

pdygov.jpg

புதுச்சேரி, ஜூன் 13: சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தப் பிறகுதான் நியமன எம்எல்ஏக்களை ரங்கசாமி தலைமையிலான அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் எம்எல்ஏவுமான வி. வைத்திலிங்கம் கூறினார்.

 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால்சிங்கை திங்கள்கிழமை சந்தித்து தன்னுடைய தொகுதி வளர்ச்சி குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தப் பிறகுதான் நியமன எம்எல்ஏக்களை நியமிக்க வேண்டும். அதற்கு முன் நியமனம் செய்தால் தவறான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடும்.

 காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக யார் நியமிக்கப்படுவர் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவிப்பார். இப்போது அவர் ஊரில் இல்லை. வந்தவுடன் அந்த அறிவிப்பை வெளியிடுவார்.

 சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்று கேட்டதற்கு, இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பிறகு முடிவு செய்வோம் என்றார்.

* சமச்சீர் கல்வி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

supremcourt.jpg

புது தில்லி, ஜூன் 13: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது.

 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

 இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது.

 தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த சனிக்கிழமை தில்லி சென்று மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 அப்போது நீதிபதி பி.எஸ். சௌகான் தலைமையிலான அமர்வு, வழக்கின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளாமல் விசாரணை நடத்த முடியாது என்று கூறி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 14) ஒத்திவைத்தது.

* கறுப்புப் பண விவகாரம்: தகவல் அளிக்க மறுக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை: பிரணாப் முகர்ஜி

pranap2.jpg

புது தில்லி, ஜூன் 13: கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். வரிச் சலுகை அளிக்கும் நாடுகள் தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்கள் பற்றிய விவரத்தை அளிக்க மறுக்கின்றன. சம்பந்தப்பட்ட நாடுகள் கோரும் விவரம் உரிய காலத்திற்குள் கிடைக்காவிட்டால், தகவல் கோருவதில் பயன் கிடைக்காது என்றும் அவர் சொன்னார்.

 மத்திய நிதி அமைச்சகம் தில்லியில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு (ஓஇசிடி) கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது:

 பொதுவாக அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளில் செயல்படும் வங்கிகள் பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் சில நாடுகள் குறிப்பிட்ட தேதி வரையிலான விவரத்தை மட்டுமே அளிக்க முன்வந்துள்ளன. இது வங்கி பற்றிய தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். ஏற்கெனவே உள்ள சட்ட விதிமுறைகளை நடைமுறைக்கு ஏற்ப மாற்ற வேண்டியது அவசர அவசியமானதாகும்.

 வரிச் சலுகை அளிக்கும் நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தை போடுவோர் பற்றிய விவரத்தை வணிக நலன் கருதி அளிப்பதில்லை. இவை முற்றிலும் வரிவிதிப்புக்குள்படாதவை என கருத முடியாது. வங்கிகள் இதுபோன்ற ரகசியத்தைக் காப்பாற்ற முயன்றால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படும் வரி விதிப்பு முறையே முற்றிலும் சிதைந்துபோகும். கறுப்புப் பணத்துக்கு வரிச் சலுகை அளிக்கும் நாடுகளில் உள்ள வங்கிகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுகளுக்கு போதிய சட்ட அதிகாரம் இல்லை என்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு கறுப்புப் பணமும் முக்கியக் காரணமாகும் என்று முகர்ஜி குறிப்பிட்டார்.

 பணம் போட்டவர்கள் பற்றிய தகவலை அளிக்க மறுப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வர வேண்டிய வருமானத்தை பாதிக்கும் விஷயம் மட்டும் அல்ல, நிதி சார்ந்த விஷயங்களையும் அது வெகுவாக பாதிக்கும். இது தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 2009-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் உள்ள வங்கிகள், அது பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது போன்ற நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.

 சர்வதேச நிதியமைப்பு சுழற்சியை பாதிக்கும் இதுபோன்ற கறுப்புப் பண விவகாரம் சார்ந்த விவரங்களை அளிக்க மறுக்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டும், இரண்டு ஆண்டுகளாகியும் அது செயல்படுத்தப்படாதது வேதனையளிக்கிறது.

 இதுவரையில் 65 நாடுகளுடன் வங்கி சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டு பேச்சு நடத்தப்பட்டது. இதுவரையில் 14 நாடுகளுடன் வரி பரிவர்த்தனை தகவல் ஒப்பந்தமும் (டிஐஇஏ), 36 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி.

* கனிமொழி ஜாமீன்: விசாரணை 20-க்கு ஒத்திவைப்பு
புது தில்லி, ஜூன் 13: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிறையில் உள்ள கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 கனிமொழியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு திங்கள்கிழமை வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று விளக்கவேண்டும் என சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி. ரியாலிட்டி நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக 214 கோடி ரூபாயை கலைஞர் டிவிக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சி.பி.ஐ. தயாரித்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில், கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி. கனிமொழி, நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரைக் குற்றவாளிகளாகச் சேர்த்தது. அதையடுத்து இருவரும் கைதாயினர்.

 திகார் சிறையில் உள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறி, ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

 இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை என்பதால், விடுமுறைகால நீதிமன்ற நீதிபதி பி.எஸ். செüகான் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 விசாரணையின் போது, கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 214 கோடி ரூபாய் எங்கே போனது; ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் குறைவாகவே இருக்கிறது என்றாலும் காவல்துறை இவர்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஏன் விசாரணை நடத்தவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.

 மேலும் இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் எவ்வளவு என்பதை துல்லியமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பி.எஸ். செüகான் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

 * அமைதிக்கான நோபல் பரிசு: இந்திய பேராயர் பெயர் பரிந்துரை

குவாஹாட்டி, ஜூன் 13: அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவைச் சேர்ந்த குவாஹாட்டி கிறிஸ்தவ மறை மாவட்ட பேராயர் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

 அசாம் மாநிலத்தில் குவாஹாட்டி மறை மாவட்ட பேராயராக இருப்பவர் தாமஸ் மெனாம்பர் அம்பிள்(74). இவருடைய பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு போராட்டக் குழுக்களிடம் சமாதானம் செய்ய இவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ÷இத்தாலி நாட்டில் இருந்து வெளியாகும் பொல்லிட்டினோ செலேசியானோ என்ற பத்திரிகை இவருடைய பெயரை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளது.

 இது பற்றி பேராயர் தாமஸ் மெனாம்பர் அம்பிள் கூறும்போது,நோபல் பரிசுக்கு எனது பெயர் சிபாரிசு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமாதான முயற்சிக்கு விருது ஒரு பொருட்டல்ல.

 எனது பணி அங்கீகரிக்கப்படாவிட்டாலும்,வி
ருது வழங்கப்படாவிட்டாலும் சமாதானப் பணி தொடரும். இப்போது மக்களிடம் மோதல் அல்லாத மனப்பான்மையும்,சகிப்பு தன்மையும்,ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பக்குவமும் தான் தேவை என்றார்.

 தாமஸ் மெனாம்பர் அம்பிள் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1995-ம் ஆண்டு குவாஹாட்டி மறை மாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டார். சமாதான முயற்சிக்காக இவர் பல்வேறு விருகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* வெளிநாட்டுப் பயண விவரங்களைத் தர சோனியாவுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
புதுதில்லி, ஜூன் 13 : தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிஸôரைச் சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர் இத்தகவல்களைக் கேட்டு பிரதமரின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து இருந்தார். அதில், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா காந்தி எந்த எந்த வெளிநாடுகளுக்குப் போனார், அவற்றுக்கான செலவு விவரம், பயணத்துக்கான காரணம், அதனால் ஏற்பட்ட பயன் போன்ற தகவல்களை கேட்டிருந்தார்.

 கடந்த 10 ஆண்டுகளில் சோனியா காந்தி மேற்கொண்ட எந்த வெளிநாட்டு பயணத்துக்கும் அரசு பணம் எதுவும் செலவழிக்கப்படவில்லை என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப்பயணம் விவரங்கள் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டதா என்பது அமைச்சரவை செயலகத்திடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இக்கடிதம், அதே ஆண்டு மார்ச் மாதம் வெளியுறவுத்துறைக்கும், பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கும் சென்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனுப்பப்பட்ட கடிதத்தை உரியமுறையில் பிரதமர் அலுவலகம் கையாள தவறியதற்கு மத்திய தகவல் ஆணையர் சத்தியானந்தா மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார். இனி,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் கடிதங்களை உரிய அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டார்.

 ரமேஷ் வர்மா, பிரதமர் அலுவலகத்தில் உள்ள தலைமை தகவல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் மிஸ்ரா குறிப்பிட்டார். ஆனால், அப்படி செய்யாமல், ஒவ்வொரு அமைச்சகமாக அனுப்பப்பட்டு கால தாமதம் ஆகியதாக அவர் கூறினார். எனவே,தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :
* தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 11-ல் தொடங்க திட்டம்

tnsec.jpg

சென்னை, ஜூன் 13: தமிழகப் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூலை 11-ம் தேதி தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிமுக அரசு பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டுக்காகத் துறை வாரியாக நிதிகளை ஒதுக்க வேண்டும். இதற்காக, சட்டப் பேரவையின் ஒப்புதல் பெறுவது அவசியம். புதிய அரசு என்பதால் புதிதாக நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

 அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூலை 11-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அன்றைய தினம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இதன்பின் துறை வாரியாக நிதி ஒதுக்கும் வகையில் கூட்டத் தொடர் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு துறை என்ற அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டப் பேரவைச் செயலாளர் வெளியிடுவார்.

 தில்லி பயணம்: பட்ஜெட் கூட்டத் தொடரை முன்வைத்தே, முதல்வர் ஜெயலலிதா தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதிகளைப் பெற்று பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் தில்லி பயணத்துக்குப் பின், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் கூடுதல் நிதிகள் மூலமாக பல துறைகளில் புதிய திட்டங்களுக்கு வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

* ஜூன் 19-ல் பவானி அணை திறப்பு: முதல்வர் உத்தரவு
சென்னை, ஜூன் 13: பவானி அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 19-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:

 ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின் கீழுள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

 இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின் கீழுள்ள பாசன சாகுபடிக்காக ஜூன் 19-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவை தொடங்கியது 201 பயணிகளுடன் பயணம்

gkvas.jpg

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன். (வலத
தூத்துக்குடி, ஜூன் 13: தென் மாவட்ட மக்களால் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. 80 நல்லெண்ணத் தூதர்கள் உள்ளிட்ட 201 பயணிகளுடன் முதல் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 தூத்துக்குடி- கொழும்பு இடையே 1907-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ.உ. சிதம்பரனார் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.

 அக் கப்பல் போக்குவரத்து தடைபட்ட பிறகு தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறவில்லை.

 இந்நிலையில், இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் முடிவு செய்தன.

 இதற்கு தேவையான குடியுரிமை, சுங்க சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்படுத்தப்பட்டன. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

 இதையடுத்து, பயணிகள் கப்பலை இயக்க "பிளம்மிங்கோ லைனர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந் நிறுவனம் சார்பில், "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற அதிநவீன சொகுசுக் கப்பல் இப் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

 அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததைத் தொடர்ந்து 104 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.

 தூத்துக்குடி துறைமுகத்தின் முதலாவது கூடுதல் கப்பல் தளத்தில் நடைபெற்ற விழாவில், பயணிகள் கப்பல் சேவையை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

 முன்னதாக, அமைச்சர் ஜி.கே. வாசன் கப்பலில் உள்ள வசதிகளைப் பார்வையிட்டார். குத்துவிளக்கேற்றி கப்பல் பயணத்தைத் தொடங்கிவைத்த அவர், முதல் கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களுக்கு வாழ்த்து கூறினார். முதல் கப்பல் திங்கள்கிழமை மாலை 4.10 மணிக்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

 இக்கப்பலில் துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட 80 நல்லெண்ணத் தூதர்கள் மற்றும் 121 பயணிகள் என மொத்தம் 201 பேர் கொழும்பு செல்கின்றனர்.

 தூத்துக்குடி- கொழும்பு இடையே 152 கடல்மைல் தொலைவை இக்கப்பல் 14 மணி நேரத்தில் கடக்கும் இப் பயணிகள் கப்பல் வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்து செல்லும். அதுபோல, புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்து புறப்பட்டு வரும்.

 இதில் மொத்தம் 1040 பேர் பயணம் செய்யலாம். 300 டன் வரை சரக்குகளைக் கொண்டு செல்லலாம். 9 அடுக்குகளைக் கொண்ட இக் கப்பலில் 322 பயணிகள் அறை, 98 கப்பல் சிப்பந்திகள் அறைகள் உள்ளன. இதைத் தவிர விசாலமான உணவுக் கூடம், காபி அருந்தும் கூடம், மதுக்கூடம், பரிசுப் பொருள்கள் அங்காடி, மருத்துவமனை, கேளிக்கை வசதி போன்றவை உள்ளன. மேலும், 24 பெரிய டிரெய்லர்கள், 53 பஸ்கள், 200 கார்களை இக் கப்பலில் நிறுத்தும் வசதி உள்ளது. குறைந்தபட்ச பயணிகள் கட்டணம் ரூ. 2,243 ஆகும்.

 முதல் கப்பலில் சென்ற பயணிகள் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். "முதல் கப்பலில் கொழும்பு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

 இக் கப்பல் மூலம் இந்தியா- இலங்கை இடையே நல்லுறவு ஏற்படும்' என்றார் நல்லெண்ண தூதுக் குழுவில் இடம்பெற்ற துறைமுக சபை ஊழியரான எஸ். சண்முககுமாரி.

* தனியார் பள்ளிகளுக்கு புது கல்விக் கட்டணம் அறிவிப்பு
சென்னை, ஜூன் 13: மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் திருத்திய நிர்ணய விவரங்களை கட்டண நிர்ணயக் குழுவின் சிறப்பு அலுவலர் அ.திருஞானசம்பந்தம் திங்கள்கிழமை வெளியிட்டார்.

 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் இந்தக் கட்டண விவரங்கள் திங்கள்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டண விவரங்கள் செவ்வாய்க்கிழமை காலைக்குள் தெரிவிக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஏற்கெனவே அறிவித்த கட்டணத்தைவிட சராசரியாக 5சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்தக் கட்டண நிர்ணய விவரங்கள் புதன் அல்லது வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டணம் நிர்ணயித்தது. இதில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

 இதை எதிர்த்து சுமார் 6,400 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்தன. நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு இந்த மனுக்களை நவம்பர் 15 முதல் மே 4-ம் தேதிவரை விசாரித்தது.

 இந்த விசாரணைக்குப் பிறகு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, இப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள செய்தி:

 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன.

 மேல்முறையீடு செய்த ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் பெறப்பட்ட வினாப்பட்டியல், மேல்முறையீட்டின் போதும், நேர்முகக் கேட்பின் போதும் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப் பெற்று, தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

 பள்ளி அமைவிடம், மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-பணியாளர் ஊதியம், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் இவையனைத்தும் மறுகட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணிகளாகக் கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 இந்தக் கட்டண நிர்ணயம் வரும் 2012-13 கல்வியாண்டு வரை பொருந்தும். அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 "மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை எதிர்பார்க்கிறோம். கட்டண உயர்வு அதற்குக் குறைவாக இருந்தால் மேல்முறையீடு செய்வோம்' என்று மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்.விஜயன் தெரிவித்தார்.

 இணையதளத்தில் வெளியீடு: திருத்திய கட்டண நிர்ணய விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகளில் கட்டண நிர்ணயக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதன் அல்லது வியாழக்கிழமை இந்தக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

* கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை இன்று திறப்பு

papanasam.jpg

திங்கள்கிழமை நீர்மட்டம் 57 அடியாக உள்ள பாபநாசம் அணை.
அம்பாசமுத்திரம், ஜூன் 13: கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

 கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாண்டு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்ததால், அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. மணிமுத்தாறு அணையில் இருந்து மே இறுதியில் பெருங்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

 இதனிடையே, தென்மேற்குப் பருவமழை இம்மாதம் 1-ம் தேதி தொடங்கியது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் இரண்டே நாளில் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் கார் பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 அதன்படி, செவ்வாய்க்கிழமை பாபநாசம் அணை திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 18160 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

 திங்கள்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 57.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 530 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.68 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 25 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படுகிறது.

* கலர் டி.வி. ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சரண்

சென்னை, ஜூன் 13: கலர் டி.வி. ஊழல் வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.வி. வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக டி.வி. வாங்கியதில் ஊழல் நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

 இந்த ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விஜயகுமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

 இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த செல்வகணபதி உள்ளிட்ட மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், விஜயகுமார் மீதான வழக்கு மட்டும் நிலுவையில் இருந்து வந்தது.

 இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. ஜெயபாலன் முன்னிலையில் விஜயகுமார் சரணடைந்தார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்
    
கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது. உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.
வர்த்தகச் செய்தி மலர் :
பங்குச் சந்தையில் லேசான சரிவு

மும்பை, ஜூன் 13: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று லேசான சரிவு காணப்பட்டது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 100 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால் பிற்பகலுக்குப் பிறகு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வர்த்தகம் முடிவில் 3 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 18,266 புள்ளிகளாக இருந்தது.

 இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 2 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,482 புள்ளிகளானது. மாதாந்திர ஒட்டுமொத்த பணவீக்க பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் காரணமாக பங்குகளை வாங்குவதை முதலீட்டாளர்கள் தவிர்த்தனர். கைவசம் இருந்த பங்குகளை விற்பனை செய்யவும் முன்வரவில்லை. இதனால் சரிவு மட்டுப்பட்டு 3 புள்ளிகளோடு நின்றது.

 கிருஷ்ணா கோதாவரி படுகையில் கேஜி-6டி பகுதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3 இடங்களில் கண்டுபிடித்த ஹைட்ரோ கார்பன் படிமங்கள் மற்றும் இயற்கை எரிவாயு பகுதிகளை டைரக்டரேட் ஜெனரல் அலுவலகம் நிராகரித்தது. இதனால் இந்நிறுவனப் பங்கு விலை 1.84 சதவீதம் சரிந்தது.

 திங்களன்று காலையில் இறங்கு முகமும், பிற்பகலில் ஏறுமுகமும் இருந்ததால் வர்த்தகம் முடியும்போது சரிவு மிகக் குறைவாக இருந்தது. ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் குறிப்பாக இரு சக்கர, ஆட்டோ வாகன தயாரிப்பு நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கினர். ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளுக்கு ஏற்றுமதி மேம்பாட்டு இயக்குநரகம் 3 மாத சலுகை அளித்ததால் இந்நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்தன.

 ஹின்டால்கோ நிறுவனப் பங்கு விலை 2.22 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.12 சதவீதமும், டிசிஎஸ் 1.10 சதவீதமும், எஸ்பிஐ பங்கு விலை 1.02 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

 சீன பொருளாதாரம் சரிவைச் சந்திப்பதாக வெளியான தகவலை அடுத்து உலோக நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இந்திய சந்தையைப் போல ஆசிய சந்தையிலும் சரிவு காணப்பட்டது. சீனா, ஹாங்காங் பங்குச் சந்தையில் சரிவு தவிர்க்க முடியாததானது. சிங்கப்பூர், தைவான், ஜப்பான், ஷாங்காய் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இருப்பினும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை மிக அதிகபட்சமாக 3.18 சதவீதம் உயர்ந்தது. என்டிபிசி, சிப்லா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்சி ஆகிய பங்குகள் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை முன்னேறின.

 மொத்தம் 1,438 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,379 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,483.55 கோடி.

* இறக்குமதி வரியைக் குறைக்க டாடா கோரிக்கை

புது தில்லி, ஜூன் 13: கார், மோட்ட சைக்கிள் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா வலியுறுத்தினார். இந்திய-ஐரோப்பிய அன்னிய வர்த்தக சங்கக் கூட்டத்தில் ஆட்டோமொபைல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா வரிகுறைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஆட்டோமொபைல் தொடர்பான ஜேடி பவர் இதழுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா கூறியிருப்பது: உள்நாட்டு நிறுவனங்களைக் காப்பதற்காக அதிக அளவில் இறக்குமதி வரி விதிப்பது கொஞ்சமும் நடைமுறை சாத்தியமானதாகத் தெரியவில்லை. இந்தியாவில் அன்னிய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆலை இல்லை. இத்தகைய சூழலில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இணைத்து விற்பனை செய்யும் சூழல்தான் உள்ளது. டாடா நிறுவனம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மட்டும்தான் உள்நாட்டில் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் திறன் பெற்றவையாக உள்ளன. இந்நிலையில் அதிக அளவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும். உள்நாட்டு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் வரி விதிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதேபோல ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான வரியும் பெருமளவு குறைக்கப்பட வேண்டும். இதன் மூலம் சர்வதேச அளவில் குறைந்த விலையிலான உதிரி பாகங்களை இந்திய தயாரிப்பாளர்கள் பெறுவதற்கு வழியேற்படும்.

 இந்திய ஆட்டோமொபைல் துறையில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபட்டிருப்பதால், வரி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் ஆட்டோமொபைல் உதிரிபாக இறக்குமதியாளர்களும், அதிக அளவில் பொருள்கள் குவிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இறக்குமதி வரி குறைப்பைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

 தற்போது முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வாகனத்தின் மீதான இறக்குமதி வரி 60 சதவீதமாக உள்ளது. விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்டவை அனைத்தும் நிர்ணயித்தபிறகு அந்த வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட வரியின் அளவு 110 சதவீதமாக உயர்கிறது.

 வெளிநாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜின், டிரான்ஸ்மிஷன்ஸ், கியர் பாக்ஸ் உள்ளிட்டவை மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி இப்போது 30 சதவீதமாக உள்ளது. பிற ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கு ஒருங்கிணைக்கின்றன. இத்தகைய வாகனங்களில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 இந்திய சந்தையில் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முனையும்போது அவை இந்திய சாலைகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2020-ம் ஆண்டில் எட்டப்படும் என நம்புவதாக டாடா கூறினார். அப்போது இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக தொழில் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக இருக்கும். அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி பெற்றதாகவும் திகழும்.

 ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த ஆண்டில் இந்தியா கையெழுத்திடும் என நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், இதேபோன்ற ஒப்பந்தம் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

விளையாட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்

4வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி


ஆன்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், 103 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளில் வென்ற இளம் இந்திய அணி, தொடரை(3-0) எளிதாக கைப்பற்றியது. நேற்று ஆன்டிகுவாவில் முக்கியத்துவமில்லாத நான்காவது போட்டி நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங் தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்: வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் ஒரு முறை திணறல் துவக்கம் கண்டது. இஷாந்த் வேகத்தில் டான்சா ஹியாத்(1) காலியானார். பிரவீண் குமார் பந்தில் சர்வான்(1) அவுட்டானார். அப்போது 2 விக்கெட்டுக்கு வெறும் 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் டேரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ் இணைந்து போராடினர். அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ், இஷாந்த் சர்மா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தொடர்ந்து அமித் மிஸ்ரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். மிஸ்ரா சுழலில் பிராவோ(15), மர்லான் சாமுவேல்ஸ்(8) சிக்கினர். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ் அரைசதம் கடந்தார். இவர் 67 ரன்களுக்கு ரன் அவுட்டாக, நிலைமை மோசமானது. இதற்கு பின் போலார்டு, கார்ல்டன் பாக் இணைந்து அணியை மீட்டனர். மனோஜ் திவாரி ஓவரில் போலார்டு ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிஸ்ரா ஓவரிலும் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். அரை சதம் கடந்த போலார்டு(70), அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் இணைந்து அதிரடி காட்டினர். இஷாந்த் ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, பாக் 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.

நழுவிய "ஹாட்ரிக்: பிரவீண் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கார்ல்டன் பாக்(39), ரசல்(25) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதை யடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி ஒரு ரன் எடுக்க, பிரவீண் வாய்ப்பு பறிபோனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. டேரன் சமி(1), ரோச்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் சரிவு: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். டேரன் சமி வேகத்தில் மனோஜ் திவாரி(2), பார்த்திவ் படேல்(26) அவுட்டாகினர். ரசல் பந்தில் பத்ரிநாத்(12) வெளியேறினார். மார்ட்டின் வலையில் விராத் கோஹ்லி(22) சிக்கினார். தொடர்ந்து ரோகித் சர்மா 39 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி, 39 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து, 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை மார்டின் தட்டிச்சென்றார். தொடரின் 5வது மற்றும் இறுதிப்போட்டி 16ம் தேதி நடக்கிறது.

100வது போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று 100வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதன் மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா சமன் செய்தது. இந்திய அணி ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியுள்ளது.

கீமர் ரோச் காயம்: இஷாந்த் வீசிய போட்டியின் கடைசி ஓவர் பரபரப்பாக இருந்தது. 4வது பந்தை இவர் "பவுன்சராக வீச, அது கீமர் ரோச்சின் "ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதன் விளைவாக அவரது வாய் பகுதியில் இருந்து ரத்தம் வந்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட, ஆட்டத்தை தொடர்ந்தார்.

* ஐந்தாவது பந்தில் ரோச் ஒரு ரன்னுக்காக ஓடினார். அப்போது இஷாந்த் "த்ரோ செய்ய "பெயில்ஸ் பறந்தது. இந்திய வீரர்கள் அரைகுறையாக "அப்பீல் செய்தனர். அம்பயர் மால்கமும், "டிவி அம்பயரிடம் கேட்கவில்லை. "ரீப்ளேயில் ரோச் ரன் அவுட்டானது தெளிவாக தெரிந்தது. இதனை "டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்த ஹர்பஜன் "அவுட் என அலறியும் பலன் கிடைக்கவில்லை.

* டென்னிஸ்

ஏகான் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா வெற்றி


ஈஸ்ட்போர்ன்: ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட்போர்ன் நகரில், ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜார்ஜியாவின் அனா டடிஷ்விலியை சந்தித்தார்.

முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய சானியா, இரண்டாவது செட்டை 3-6 எனக் கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட சானியா, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். இறுதியில் சானியா மிர்சா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தகுதிச்சுற்றுக்கான மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரியாவின் தமிரா பசக்கை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பு பெறலாம்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்

மூலவர்    :    ரத்தினகிரி முருகன்    -
பழமை    :    500-1000 வருடங்களுக்கு முன்    -
ஊர்    :    சரவணம்பட்டி
மாவட்டம்    :    கோயம்புத்தூர்
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார்

இங்கு ஆதியில் பெரிய பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார்.

 தலபெருமை:


பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார்.

தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார்.

அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.

இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் பிரபாவளையத்துடன் அருட்காட்சி தருகிறார்.

பூப்பறிக்கும் சடங்கு : இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளைகளும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர்.

பின்னர், முருகப்பெருமானுக்கு மாலையணிவித்து தங்களை மணமக்களாக சிரமமின்றி இணைத்து வைக்க வேண்டுவர். இந்த வழிபாட்டிற்கு சூபூப்பறித்தல் நோன்பு' என்று பெயர். இப்பழக்கம் தற்போதைய நாகரீகத்தின் காரணமாக குறைந்து விட்டது. இருப்பினும், விஷயமறிந்த காதலர்கள் இப்போதும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.

எப்படியிருப்பினும், இக்கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் கையாலேயே மலர் பறித்து, மாலை கட்டி முருகனுக்கு அணிவித்தால் நினைத்த கணவன் அல்லது மனைவியை அடையலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்றளவும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தம்பதி சமேதராக வந்து வணங்கிச் சென்றால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை.

பள்ளிக்காலத்து நண்பர்கள் பணி காரணமாக வேறு ஊரில் இருந்தால், பொங்கலன்று தங்கள் ஊருக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் பொங்கலுக்கு மறுநாள் மலைக்கோயிலுக்கு வந்து தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

  தல வரலாறு:


சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து அண்டசராசரங்களையும்அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான்.

இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.

பிரார்த்தனை


முருகன் தலம் ஒன்றில் சூபூப்பறித்தல் நோன்பு' என்ற சடங்கு பிரபலமாக உள்ளது. இந்த நோன்பை நோற்பவர்கள், திருமணத்தடை நீங்கி, விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவர் என்பது நம்பிக்கை.

இங்கு வேண்டிக்கொள்ள புத்திரபாக்கியம் கிட்டும், பயம் நீங்கும், தீராத நோய்கள், மனக்குறைகள் தீரும், தொழில் விருத்தியடைந்து சகல செல்வங்களும் பெருகும்.

 திருவிழா:

தைப்பூசம், மாட்டுப்பொங்கல், அமாவாசை, கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :
மனதில் சாந்தம் நிலவட்டும் - காஞ்சிப் பெரியவர்.

* மனதினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுவிடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.

* அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக்கூடாது.

* நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.

* "அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.

* அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.

* கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.

வினாடி வினா :
வினா - பருத்தி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் பெரும் மாநிலம் எது ?

விடை - குஜராத்.

இதையும் படிங்க:

உயிர்காக்கும் "செங்குருதி'யை பகிர்ந்தளித்தலே இன்பம் : "கொடையாளர்களின்' உன்னத அனுபவங்கள்
தானத்தில் சிறந்ததென அன்னதானம், கல்வி தானம், கண் தானம்... என ஆயிரம் தானங்களைச் சொல்வோம். ஒவ்வொரு தானமும் உயர்ந்தது தான், சந்தேகமில்லை.

உடம்பில் ஓடும் மூலாதாரமான செங்குருதியை, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க, பரந்த மனம் வேண்டும். நல்இதயம் படைத்தோர் செய்யும் உன்னத தானம் தான் ரத்த தானம். இன்று ரத்ததான தினம். உதிரம் கொடுத்து, பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தங்களது அனுபவங்களை விளக்குகின்றனர்.

விவேகானந்தன் (சுயதொழில், மதுரை): 24 வயதில் ஆரம்பித்து, கடந்த 26 ஆண்டுகளாக 80 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். ஆண்டுக்கு ஐந்துமுறை தானம் செய்வேன். போனில் தகவல் தெரிவித்தால், மருத்துவமனைக்கு நேரில் சென்று தானம் செய்வது எங்கள் நண்பர்களின் வழக்கம். மதுரையைச் சேர்ந்த ஒருவரின் ஆறுமாத குழந்தைக்கு ரத்தத்தில் அணுக்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டியிருந்தது. அதன்பின் மாதந்தோறும் ரத்தம் செலுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக நண்பர்கள் அட்டவணையிட்டு ரத்ததானம் செய்தோம். தற்போது அந்த சிறுவன் நன்றாக இருக்கிறான். இனிமேல் ரத்தம் செலுத்த வேண்டியதில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். எங்களைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையை காப்பாற்றியதை பெருமையாக நினைக்கிறோம்.

பானுமதி (வங்கிஅலுவலர், மதுரை): இதுவரை 14 முறை தானம் செய்துள்ளேன். ஒருமுறை கடலூரிலிருந்து நெய்வேலிக்கு பணிஇடமாற்றத்தின் காரணமாக, வீட்டை காலி செய்து, வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். "கர்ப்பப்பை வெடித்ததால், உயிருக்கு போராடும் பெண்ணுக்கு ரத்ததானம் தேவைப்படுகிறது' என, போன் வந்தது. சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தேன். அந்தப் பெண் தற்போது நலமாக உள்ளார். அதேபோல மதுரையில் "அப்பென்டிசைட்டிஸ்' பிரச்னையால், ரத்தப்போக்கு ஏற்பட்டபோது, ரத்ததானம் செய்தேன். அவரும் நன்றாக உள்ளார். உயிரைக் காப்பதை விட, பெரிய தானம் எதுவும் இல்லை.

பாஸ்கர் (போட்டோகிராபர், திண்டுக்கல்): 18 வயதில் துவங்கி, இதுவரை 100 முறை ரத்தானம் செய்துள்ளேன். 75 முறை ரத்ததானம் அளித்ததற்காக 2004 ல் தமிழக அரசின் தங்கபதக்கம், சான்றிதழ் பெற்றேன். ஐந்தாண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாங்கரை பிரிவில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடந்த லாரியின் மீது ரயில் மோதியது. இதில் உயிருக்கு போராடிய இருவருக்கு ஒரே நேரத்தில் ரத்தம் கொடுத்து காப்பற்றினேன். 2008 ல் நந்தவனப்பட்டியில் நடந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். அவர்கள் உயிர் பிழைத்து என்னை வாழ்த்திய போது, பிறவி பயனடைந்ததை உணர்ந்தேன்.

டாக்டர் செல்வராஜ் (வடுகபட்டி): மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது ரத்ததானக் குழு செயலாளராக இருந்தேன். ஒரே ஆண்டில் 50 ஆயிரம் பாட்டில்கள் ரத்தம் சேகரித்து கொடுத்தோம். 61 தடவை ரத்ததானம் செய்துள்ளேன். 1999ல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த பெண்ணுக்கு, ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். தானம் செய்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புத்துணர்வு ஏற்படும். தேனி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

டாக்டர் சரவணன் (பரமக்குடி):கல்லூரி பருவத்திலிருந்து 58 முறை ரத்ததானம் செய்துள்ளேன். நம் உடலில் உள்ள வயதான ரத்த சிவப்பணு செல்கள் அழிந்து சுழற்சி முறையில் புதுப்பிக்கப்படுகின்றன. ரத்தம் கொடுக்கும் போதும் புது செல்கள் உருவாகி, உடலுக்கு புத்துணர்வை தரும். மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரின் கல்லீரல் ஆப்பரேஷனுக்காக எட்டுபேர் ரத்ததானம் செய்தோம். அங்கிருந்த பேராசிரியர் எங்களை அழைத்து ஆப்பரேஷனை நேரடியாக பார்க்க அனுமதித்தார்.

ஏ.ஆர்., தேவராஜன் (காஸ்மாஸ் லயன்ஸ் சங்க துணை தலைவர், காரைக்குடி): 18 ஆண்டுகளில் 75 முறை ரத்தம் வழங்கியுள்ளேன். எனது ரத்தம் அரியவகை,"ஓ' நெகடிவ். 1993ல் மருத்துவமனையில் இருந்த எனது தாயை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் தேவைப்பட்டது. வலியசென்று ரத்ததானம் செய்தேன். இன்று வரை தொடர்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் வியாபார ரீதியாக இலங்கை சென்றிருந்தேன். அங்கு ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்ததானம் செய்தேன். இன்றுவரை அவர் யாரென எனக்கு தெரியாது. குறைந்தது 100 முறையாவது தானம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.

ஆர். சந்திரமோகன் (விவசாயி, விருதுநகர்): 53 முறை ரத்ததானம் செய்துள்ளேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தேன். பந்தல்குடியை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரத்ததானம் செய்ததன் மூலம் ஒன்பது மாதங்கள் உயிர்வாழ்ந்தார். பிரசவ நேரத்தில் நிறைய பெண்களுக்கு அதிகமுறை ரத்தம் வழங்கியுள்ளேன். சிறுகுழந்தைகளுக்கு 100 மில்லி ரத்தம் கொடுத்தால் போதும் என்று சொல்லும் போது, மனதுக்கு வருத்தமாக இருக்கும்.

அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது : மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் பிரபா சாமிராஜ்: ஆரோக்கியமான உடல்நலம் உடையவர்கள் தாராளமாக ரத்ததானம் செய்யலாம். அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது. ஒருவரின் ரத்தத்தில் இருந்து சிவப்பணு, பிளாஸ்மா, பிளேட்லெட் செல்கள் தனியாக பிரிக்கப்பட்டு மூவரின் உயிர் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. நபருக்கேற்ப 100, 350, 450 மில்லி ரத்தம் சேகரிக்கப்படுகிறது. எட்டு முதல் 10 நிமிடங்களாகும். அதன்பின் குறைந்தது ஒருமணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
250 மில்லி பழச்சாறு, அரைலிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். அன்றைய தினம் கடினமாக உடற்பயிற்சி, உடல் வேலை, வாகனம் ஓட்டுதலை தவிர்க்கலாம். மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 9 முதல் மதியம் ஒருமணி வரை, தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யலாம்.

யார் கொடையாளி?*18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ எடைக்கு மேல் உள்ள ஆண், பெண்கள்.
*ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருப்பவர்கள்.
*ரத்தஅழுத்தம் 120/70 முதல் 140/90 இருப்பவர்கள்.
*ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை, பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தானம் செய்யலாம்.
*மாதவிடாய் துவங்கிய ஒன்று முதல் ஐந்து நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தபின், ரேபிஸ் நோய் சிகிச்சைக்கு பின் ஓராண்டு வரை, டைபாய்டு, மலேரியா நோய் சிகிச்சைக்கு பின், டாட்டூஸ் (பச்சை) குத்தியபின் ஆறுமாதங்கள் வரை, மது குடித்த பின், 24 மணி நேரம் வரை ரத்த தானம் செய்யக் கூடாது.
*இருதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, இன்சுலின் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்துபவர்கள், மனநலம் குன்றியவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாத பிரச்னையுள்ளவர்கள், எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் நிரந்தரமாக ரத்ததானம் செய்யக்கூடாது.

"உதிர தான' கழகமும், உயிர்காக்கும் மகத்துவமும் : அரிய வகை ரத்தம் கொண்ட உறுப்பினர்களை இணைத்து "உதிரம்' அமைப்பை உருவாக்கியுள்ளார் டாக்டர் தங்கபாண்டியன். இவர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலக திட்ட அலுவலராகவும் உள்ளார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து ஏழு மணி நேரம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அரியவகை ஓ, ஏ, பி, ஏபி, ஏ2பி நெகடிவ் மற்றும் ஏ2பி பாசிட்டிவ் ரத்தபிரிவை சேர்ந்தவர்கள் "உதிரத்தின்' உறுப்பினர்கள். கடந்தாண்டு துவங்கி, ஐந்து முகாம்களின் மூலம் 650 அலகுகள் ரத்தம் தானம் செய்தனர். அமைப்பின் தலைவர் தங்கபாண்டியன் கூறியதாவது: ரத்தத்திற்கு மாற்று ரத்தம் தான். அரசு மருத்துவனையோ, தனியார் மருத்துவமனையோ, ரத்தம் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகக்கூடாது. நாங்கள் தானம் செய்த 150 அலகுகள் ரத்தம், நோயாளிகளின் உயிரை காத்துள்ளது. மாற்றுத் திறனாளி ஒருவருக்கு "ஓ நெகடிவ்' ரத்தவகை கிடைக்காததால், நான்கு மாதங்களாக இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை. 13 வயது பெண்ணுக்கு ஹீமோபிலியா (ரத்தம் உறையாது) பாதிப்பால், மாதவிடாய் காலத்தில் தொடர் உதிரப் போக்கு (பி நெகடிவ்) ஏற்பட்டது. அனுமந்தன்பட்டியில் ஒரு பெண்ணுக்கு (ஏ நெகடிவ்) தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டார். இதுபோன்றவர்களுக்கு உதிரம் கொடுத்து, அவர்களை வாழ வைத்ததே எங்கள் சாதனை, என்றார்.
இன்று, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை, ரத்த தான முகாம் நடக்கிறது.
உதிரத்தில் உறுப்பினராக சேர வேண்டுமா, டாக்டர் தங்கபாண்டியன் (80125 02345), ஜோஸ்வா சாமுவேல் ஜெபராஜ்(90424 21911) ஐ தொடர்பு கொள்ளலாம்.

உயிரை காப்பாற்றும் குருதிக் கொடை : - இன்று சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம்-:தானங்களிலேயே சிறந்தது ரத்த தானம். உடலுறுப்புகளை இறந்த பிறகு தான் தானம் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போதே ரத்ததானம் செய்ய முடியும். உலகில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பான ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.

பல நாடுகளில் ரத்தம் தேவைப்படும் போது நோயளியின் உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தான் ரத்தம் பெறப்படுகிறது. சில நாடுகளில், ரத்த தானம் செய்வோர் பணம் பெறுகின்றனர். பெரும்பாலான நேரங்களில், சுயமாக ரத்ததானம் செய்ய முன்வருவோரின் ரத்தமே பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல, தொண்டுள்ளம் படைத்தோருக்காகத் தான் சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம், ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

யார் தரலாம் : ரத்தத்தை வகைப்படுத்தும் முறையை கண்டறிந்த, கார்ல் லேண்ட்ஸ்டெய்னரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம், உலக ரத்த தானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது.எல்லோரிடமிரு
ந்தும் ரத்தம் தானமாக பெறப்படுவதில்லை. ரத்தம் கொடுப்பவரின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும். எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும், உடலின் வெப்ப நிலையும் சரியான அளவில் இருப்பது அவசியம். நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது. இதில் 350 மி.லி., மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படுகிறது. 2 நாட்களுக்குள் இழந்த ரத்தத்தை உடல் மீட்டுவிடுகிறது. 2 மாதங்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.

அதிகரிக்கும் தேவை : உலகில் ஆண்டுதோறும், 9 கோடியே 20 லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில் 45 சதவீதம், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. 25 நாடுகளில் 40 சதவீதத்துக்கும் மேலானோர் ரத்த தானம் செய்கின்றனர். மருத்துவமனைகளில் ரத்த அளவை, போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சை தர முடியும். வளரும் நாடுகளில் ரத்த தானம் செய்வோரின் சதவீதம் (1000 பேருக்கு 10 பேர் மட்டுமே) குறைவாக உள்ளது. அனைவரும் தாமாக முன்வந்த ரத்த தானம் செய்வோம் என இத்தினத்தில் உறுதி எடுப்போம்


நன்றி - தின மணி, வெப்துனியா, தின மலர்.

No comments:

Post a Comment