Monday, April 4, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 04 , 2011.


முக்கியச் செய்திகள்:
                                                                           

இன்று இரவு சனியை பார்க்கலாம்!

புது தில்லி, ஏப். 3: திங்கள்கிழமை இரவு சனி கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்திய கோளியல் சங்கத்தின் செயலர் ரகுநந்தன் குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: "எந்த ஒரு கிரகமும் சூரியனுக்கு நேர் எதிராக இருக்கும்போது அந்த கிரகம் சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு ஒளிரும். 

திங்கள்கிழமை சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயம் வரை சனி கிரகத்தை அதன் வளையங்களுடன் வெறும் கண்களால் காணலாம்.

வானத்தின் கிழக்கில் ராசி மண்டலத்தின் 6-வது பகுதியான கன்னி ராசிப் பகுதியில் சனி கிரகம் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதை தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் வளையங்கள் மிகத் தெளிவாகத் தெரியும்.

378.1 நாள்களுக்கு ஒரு முறை, சனி கிரகம் இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது 30 ஆண்டுகளில் 29 தடவை இவ்வாறு நேர்கோட்டில் வரும். அப்போதெல்லாம் நாம் சனியை வெறும் கண்களால் கண்டுகளிக்கலாம். இதற்கு முன் சென்ற ஆண்டு (2010) மார்ச் 22-ம் தேதி இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வந்தது இனி அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் 15-ம் தேதி இவ்வாறு வரும்' என்றார் அவர்.

* குரான் எரிப்பு மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் - ஒபாமா!  

குரான் உள்ளிட்ட எந்த புனித நூலையும் அவமதிப்பது என்பது மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றும், குறுகிய மனப்பான்மை எண்ணம் கொண்டது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு ஃப்ளோரிடா கிறித்தவ தேவாலயத்தில் டெர்லி ஜோன்ஸ் என்ற பாதிரியாரால் குரான் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானில் ஐ.நா. ஊழியர்கள் 7 பேரும், காந்தகாரில் 10 பேரும் கொல்லப்பட்டனர். 

இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எந்தவொரு புனித நூலையும் அவமதிப்பது மத சகிப்புத் தன்மை இல்லாதையே காட்டுகிறது, குறுகிய எண்ணம் கொண்து. ஆனால், அந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாவி மக்களைத் தாக்கி படுகொலை செய்வது கொடூரமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்தி மலர் :

* பூட்டோவிற்கு மரண தண்டனை: மீண்டும் விசாரிக்க மனு  

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவிற்கு மரண விதித்து தூக்கி‌லிடப்பட்ட வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். 

32 ஆண்டுகளுக்கு முன்பு, பலரை கொன்றதாக குற்றம் சாற்றப்பட்டு ராணுவ ஆட்சியாளர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார் பூட்டோ. 

இந்நிலையில், அந்த வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தற்போதைய பாகிஸ்தான் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஜர்தாரி மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பூட்டோ வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை பரிசீலனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கவுள்ளது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம். 

முன்னாள் பிரதமர் பூட்டோவின் மகள் பெனாசிரின் கணவர்தான் ஜர்தாரி என்பது குறிப்பிடத்தக்கது.

* காட்டு ஆமணக்கு எண்ணெயில் மெக்சிகோ விமானம் ஓடியது!

வாஷிங்டன், ஏப்.3: மெக்சிகோ நாட்டில் ஏ320 ரக ஏர்-பஸ் விமானத்தை விமான எரிபொருளுடன் 30% காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனை படைத்தார்கள்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடக்கிறது.
ரயில் என்ஜின்களில் டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ஓட்டலாம் என்பதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக ரயில்பாதை ஓரங்களில் காட்டு ஆமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன காரணத்தாலோ இந்த ஆய்வும் சோதனைகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் மெக்சிகோ நாட்டில் விமானத்தையே காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருளில் ஓட்டி சனிக்கிழமை சோதித்துப் பார்த்தார்கள். விமானம் வெற்றிகரமாக, எந்தவிதத் தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி பறந்தது.

மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஞ்செல் அல்பினோ கார்சோ நகரம் வரை விமானத்தை ஓட்டினார்கள்.

விமான எரிபொருளைப் பயன்படுத்தினால் ஏற்படும் கரியுமிலவாயு வெளிப்பாடு இந்த கலப்பு எண்ணெயைப் பயன்படுத்தியபோது 60% குறைந்திருப்பதும் குறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 30% முதல் 60% வரை குறைந்தாலே சர்வதேசச் சந்தையில் அதன் விலை தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தி விடலாம்

அதே சமயம் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற காட்டு ஆமணக்கு எண்ணெய்க்கும் நல்ல பொருளாதாரப் பயன்பாடு கிடைக்கும். எளிதில் சாகுபடி செய்யக்கூடிய இதை இந்தியா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் சாகுபடி செய்து எண்ணெய் வளத்தை உள்நாட்டில் பெருக்க முடியும்.
எனவே இந்த சோதனை முயற்சி எல்லா வகையிலும் பாராட்டத்தக்கதே ஆகும்.

* கடலோர நிலப்பகுதிகளை வாங்க ஜப்பான் முடிவு

டோக்கியோ, ஏப்.3: நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடலோரத்தில் உள்ள நிலப்பகுதிகளை அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளுடன் வாங்கிக் கொள்ள ஜப்பானிய அரசு பரிசீலித்து வருகிறது.

ஆழிப் பேரலையால் தங்களுடைய வீடுகளை இழந்தவர்களுக்கு, சற்றே உயரமான நிலப்பகுதியில் புதிய வீடுகளைக் கட்டித்தரவும் அரசு உத்தேசித்து வருகிறது.

கடலோரப் பகுதியில் வீடுகளையும் இதர குடியிருப்புகளையும் கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும் ஏற்கெனவே கட்டியவர்களின் வீடுகளை இடித்துவிட்டு அந்த இடங்களைப் பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் திட்டம் தயாராகி வருகிறது.

இதை எந்த அளவுக்கு மக்கள் வரவேற்பார்கள் என்று அரசுக்குத் தெரியவில்லை.

வீடுகள் சற்றே உயரமான இடங்களில் கட்டப்பட வேண்டும் என்று இப்போது பெரும்பான்மையானவர்கள் நினைக்கின்றனர். எனவே உயரமான இடங்களுக்குக் குடியிருப்புகளை மாற்றிவிட திட்டம் தயாராகிவருகிறது.

ஆழிப்பேரலை தாக்கிய மார்ச் 11-க்கு முன்னால் இந்தப் பகுதியில் நிலத்துக்கு என்ன மதிப்பு இருந்ததோ அதே மதிப்பில் நிலங்களை வாங்கிக்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.

அனைவரையும் ஒட்டுமொத்தமாக வீட்டைக் காலிசெய்துவிட்டுப் புதிய இடங்களில் குடியேறுங்கள் என்று சொன்னால் வேதனை அடைவார்கள் என்பதால் மக்களின் ஒத்துழைப்புடன் இதைச் செய்ய அரசு நினைக்கிறது. அரசு ஒதுக்கும் இடங்களில் வீடுகளைக் கட்டுவோருக்கு நாலில் மூன்று பங்குச் செலவு மானியமாகவே தரப்படும் என்று தெரிகிறது.

அதே வேளையில் கடலோரப் பகுதியில் அரசு மீட்கும் நிலப் பகுதிகளில் வீடுகளையும் வர்த்தக நிறுவனங்களையும் கட்டாமல் பொதுமக்கள் பயன்படுத்த பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடல் பொங்கி தரை மீது வரும்போது எத்தகைய சேதத்தை ஏற்படுத்துகிறது, கடல் நீர் என்ன வேகத்தில் வருகிறது, அது கொண்டுவரும் கசடுகளாலும் வண்டல்களாலும் நிலப்பரப்புக்கும் நிலத்தடி நீருக்கும் என்ன நேருகிறது என்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. எனவே ஜப்பான் கொண்டுவரவுள்ள புதிய குடியிருப்பு திட்டம் இதற்கெல்லாம் விடை காண்பதாக இருக்கும்.

கடலோரத்தில் வீடுகளைக் கட்டியவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு இடம் போக விரும்பவில்லை என்றால் அந்த இடத்தையே மேம்படுத்தி, அந்த வீடுகளிலேயே சில மாற்றங்களைச் செய்து அவர்களை அங்கேயே மீண்டும் குடியமர்த்தவும் அரசு திட்டம் வைத்திருக்கிறது.

* "தாய்ப் பால்' தரக்கூடிய மரபணு மாற்றப் பசு!

லண்டன், ஏப். 3: மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப் பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்ப் பால் தருவதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி சண்டே டெலிகிராப்' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளது: இந்த பசுக்கள் தரும் பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தொற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். பொதுவாக தாய்ப் பாலில் குடிக்கும் குழந்தைகளுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். பசும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அது கிடைக்காது. ஆனால் எங்கள் குழு உருவாக்கியுள்ள பசுக்களின் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.

குளோனிங் மூலம் புதிய உயிர்களை உருவாக்கும் முறையைப் பயன்படுத்தி பசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்து அவற்றை, தாய்ப்பால் தரும் வகையில் மாற்றியுள்ளோம். "லைசோசைம்' எனப்படும் புரதச்சத்து இருப்பதுதான் தாய்ப்பாலின் சிறப்பு அம்சம். இதுவே தாய்ப்பாலில் அதிகம் இருக்கிறது. இந்த புரதசத்துதான் குழந்தைப் பருவத்தில் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. இது எங்கள் பசுக்களிலும் உள்ளது. எனவே எங்கள் பசுக்கள் தரும் பால் தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்றார்.

எனினும் இந்த மாற்றுத் தாய்ப்பாலுக்கு பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசு தரும் பாலை பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்ற சந்தேகங்களும் கிளம்பியுள்ளது.

* கஜகஸ்தானில் அதிபர் தேர்தல்

அஸ்தானா,ஏப் 3: கஜகஸ்தானில் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் (70) மீண்டும் போட்டியிடுகிறார்.

அதிபரை எதிர்த்து 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்கிடையே நடைபெறும் இத்தேர்தல் சம்பிரதாயமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

மேற்காசியாவிலுள்ள இஸ்லாமிய நாடுகளில் சமீப காலத்தில் நடைபெற்ற புரட்சியின் மூலம் ஆட்சியாளர்கள் அகற்றப்பட்ட நிலையில், கஜகஸ்தானில் மக்களிடம் எவ்வித எதிர்ப்பும் இன்றி அதிபர் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் நஸர்பயேவ் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபரின் ஆட்சியில் கஜகஸ்தான் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தேர்தல் பற்றி பிரதமர் கரீம் மாசிமோவ் கூறுகையில், அதிபர் நஸர்பயேவ் மேற்கத்திய ஜனநாயக முறைக்கு மாறுவதற்கு மக்களின் ஆதரவை கோர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

* புனிதத்தலத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 41 பேர் சாவு

இஸ்லாமாபாத், ஏப். 3: பாகிஸ்தானில் உள்ள சுஃபி புனிதத்தலத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து வெடித்ததில் 41 பேர் இறந்தனர். 115 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சுஃபி அமைப்பினரின் புனிதத்தலத்தின் பிரதான நுழைவாயிலான சக்தி சர்வார் தர்பாரில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீஸôர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே ஆலயத்தின் உள் பகுதியில் மேலும் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 41 பேர் இறந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

தேசியச் செய்தி மலர் :

* அசாமில் 3ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு 

அசாம் மாநில சட்டமன்றத்தை தேர்வு செய்ய 3ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

மொத்தமுள்ள 126 தொகுதிகளில் நாளை (3ஆம் தேதி) முதல்கட்டமாக 62 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

62 தொகுதிகளுக்கும் காங்கிரஸ், பா.ஜ.க. உட்பட மொத்தம் 485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 38 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

காலை 7 மணிக்குத் துவங்கி பிற்பகல் 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 64 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குகள் மே மாதம் 13ஆம் தேதி எண்ணப்படுகிறது.

* ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை ஆ‌ய்‌வி‌ல் வைகோ ப‌ங்கே‌ற்பு  


உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற உ‌த்தரவு‌ப்படி, தூ‌த்து‌க்குடி‌யி‌ல் உ‌ள்ள ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ல் ‌சூற்றுச்சூழலை மாசுபடுத்தும் க‌ழிவுக‌ள் கு‌றி‌த்து நீ‌ரி நட‌த்தவு‌ள்ள ஆ‌ய்‌வி‌ல் ம.‌‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கல‌ந்துகொ‌ள்‌கிறா‌ர். 

இதுகு‌றி‌த்து ம.‌தி.மு.க. தலைமை அலுவலக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு :

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவதால், அதை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, செப்டம்பர் 2010-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தடை உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை 2011, பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றது. அப்போது நேரில் ஆஜராகி வாதாடிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் நீரைக் குடிக்கிற ஆடு, மாடுகள் மரணமடைவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, சூற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் கழிவுகள் குறித்து "நீரி" என்னும் நிறுவனம் ஆய்வு நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த ஆய்வு குறித்து வைகோவுக்கு முன் தகவல் தந்து நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

எனவே, ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதி நடைபெறும் ஆய்வில் கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கு "நீரி" நிறுவனம் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தேதிகளில் "நீரி" நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும்போது, உடனிருந்து ஆய்வு செய்வதற்காக வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்கிறார் எ‌ன்று அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

* நேர்மைக்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார் ராசா: குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்

புதுதில்லி, ஏப்.3- 2ஜி தொகையை நிர்ணயிப்பதில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, நேர்மைக்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

2ஜி ஒதுக்கீட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

2ஜி ஏலத்தில் கலந்துகொள்வதற்கான நுழைவுக் கட்டணம் குறித்து, ஆ. ராசா பரிசீலனையோ மறுஆய்வோ செய்யவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு சார்பில் பல்வேறு தரப்பில் இருந்தும், ராசாவுக்கு கூறப்பட்ட பல அறிவுறுத்தல்களை அவர் கண்டுகொள்ளாமல், 2001-ம் ஆண்டு வழங்கப்பட்ட அதே தொகைக்கு 2ஜி உரிமத்தை வழங்கியுள்ளார் என்றும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஜெனிவா சுற்றுலா திருவிழா: கெளரவ விருந்தினராக இந்தியா அறிவிப்பு

புதுதில்லி, ஏப்.3- சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் நடைபெறும் சுற்றுலா திருவிழாவின் கெளரவ விருந்தினராக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஜெனிவா சுற்றுலாத்துறை இயக்குநர் பிலிப் விக்னான், இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு இந்தியர்களின் வருகை 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

சுவிஸ் அரசு சார்பில், ஜெனிவாவில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சுற்றுலா திருவிழா கொண்டாடப்படுகிறது.

* டாடா, நீரா ராடியா பிஏசி முன்பாக நாளை ஆஜர்

tataradia.jpg

புதுதில்லி, ஏப்.3- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோர் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முன்பாக நாளை ஆஜராகவுள்ளனர்.

காலை 11 மணிக்கு நீரா ராடியாவும், மாலை 3 மணிக்கு டாடாவும் ஆஜராகின்றனர் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொது கணக்கு குழு அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தும்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகியோருடனான நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரிடமும் டாடாவிடமும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏப்.13-ம் தேதி ஆஜராக சம்மன்

புதுதில்லி, ஏப்.3: தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஆய்வுசெய்த 2ஜி ஊழல் வழக்குக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கை நடத்த போதுமான ஆவணங்கள் உள்ளதாகத் தெரிவித்தது.

முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, சாட்சிகளின் வாக்குமூலங்கள், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை கவனமாக ஆராய்ந்தேன். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கை நடத்த போதுமான ஆவணங்கள் உள்ளன என சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையில், ஆ.ராசா, தொலைத்தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரின் பெயர்களும் ஸ்வான் டெலிகாம், யுனிடெக் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்வான் டெலிகாமின் ஷாகித் உஸ்மான் பல்வாவின்பெயரும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டு இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி சம்மன் அனுப்பினார்.

கைது செய்யப்பட்ட ராசா, பெகுரா, சந்தோலியா மற்றும் பல்வா ஆகியோருக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் விநியோகிக்கப்பட்டன.

கைது செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி குற்றப்பத்திரிகையின் நகல்கள் விநியோகிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

* "2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு உடல் வலுவும் தகுதியானது'

புது தில்லி, ஏப். 3: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு நிறுவனப் பிரதிநிதிகளின் உடல் வலுவும் தகுதியாகிவிட்டது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

2-ஜி அலைக்கற்றை வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட 9 பேர் மீதான குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. 5 பகுதிகளாகப் பிரித்துள்ளது. விண்ணப்பிக்க கெடு தேதி, முதலில் வந்தவருக்கே முன்னுரிமை, இரட்டைத் தொழில்நுட்பத்துக்கு அனுமதி- அலைக்கற்றை ஒதுக்கீடு, நிறுவனங்களின் தகுதி, அரசு கருவூலத்துக்கு வருவாய் இழப்பு என ஐந்தாகப் பிரித்துள்ளது.

2007-08-ம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடல் வலு...: கெடு தேதி குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாற்றப்பட்ட விதிமுறை காரணமாக, உரிமம் பெற அனுமதி கோரும் கடிதம் அளிக்க தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்துக்கு நிறுவனத்தின் பிரதிநிதிகள் விரைந்து செல்ல வேண்டிதாயிற்று.

அதனால், அலுவலகத்தின் வரவேற்பு அறையில் கூட்ட நெரிசல் அதிகமாகியது. இதனால், அனுமதி கோரும் கடிதத்தை அளிக்க உடல் வலுவே தகுதியாகிவிட்டது.
ஏற்கெனவே பல நிறுவனங்கள் அனுமதி கோரியிருந்தபோதும், சதி செய்து மாற்றப்பட்ட விதிமுறை காரணமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனமும், யூனிடெக் ஒயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனமும் முன்னுரிமை பெற்றன.

இந்த சகாயத்துக்காக - அலைக்கற்றை உரிமம் பெற தகுதியில்லாதபோதும் - ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகளை சண்டோலியா மிரட்டியுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை கொள்கைப்படி டாடா நிறுவனத்துக்குதான் அலைக்கற்றை உரிமம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமம் அளிக்கப்பட்டுள்ளது என குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

* இந்திய வங்கித்துறை வல்லுநர்களுக்கு வலை வீசும் வெளிநாடுகள்!

மும்பை, ஏப். 3: இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களுக்கு நிகராக அதிக ஊதியம் தரும் துறையாக, வேகமாக வளர்ந்து வருகிறது வங்கித் துறை. இத்துறையில் திறமைமிக்கவர்கள் பலரும் இந்தியாவில்தான் உள்ளனர். இப்போது உலகம் முழுவதும் வங்கிகள், அதுசார்ந்த துறைகள் வேகமாக வளர்ந்து வருவதால் பல வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் வங்கிகள் இந்தியாவில் இத்துறையில் உள்ளவர்களை ஈர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளிலும், துபை, சவூதி அரேபியா, அபுதாபி, ஐக்கிய அரபு அமீரக உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய வங்கித் துறையினருக்கான தேவை 25 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் வங்கித்துறையில் உள்ளவர்களை அவர்களின் திறமைக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அதிக ஊதியம் கொடுத்து தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
வங்கி நிர்வாகம், நிறுவன மேலாண்மை, விற்பனை, சந்தைப்படுத்துதல், திட்டமிடுதல் ஆகிய துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அடுத்த சில ஆண்டுகளில் இத்துறையில் பணிபுரிபவர்களுக்கான தேவை அதிகரிக்கும். இப்போதே இத்துறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 15 முதல் 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்துக்கு மாறும்போது சம்பளம் மிக அதிக அளவில் அதிகரிக்கிறது. திறமையானவர்களை தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்ளவும் வங்கிகள் அதிக ஊதியத்தை அளிக்க முன்வருகின்றன.

மற்ற நாடுகளில் இருப்பவர்களை விட இந்தியாவில் வங்கித்துறையில் இருப்பவர்களுக்கு அதிக திறமை இருக்கிறது. அதிக அளவு பணியாளர்கள், வாடிக்கையாளர்களை கவனிப்பது, பல்வேறு கணக்குகளை கையாளுவது, கிரெடிட் கார்டு, மொபைல் பேங்கிங் ஆகிய துறைகளில் இந்திய வங்கித் துறையினருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. இதுவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியர்களை பணியில் அமர்த்திக் கொள்ள விரும்புவதற்கு முக்கியக் காரணங்கள்.

மாநிலச் செய்தி மலர் :

* இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்கத் தூதர் வாழ்த்து

சென்னை, ஏப்.3- உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்கத் தூதர் டிமோதி ஜே ரோமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகக் கோப்பையை வென்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா மற்றும் இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தை பெருமையுடன் பார்த்தோம். இருநாட்டு அணிகளுமே விளையாட்டுக்கான உயரிய கொள்கைகளை உண்மையாக பின்பற்றினர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக, இந்திய அரசும் மக்களும் பெருமை கொள்ளலாம். கிரிக்கெட் தூது முறையில் தங்கள் தலைமைத்தன்மையை இந்தியா நிலைநாட்டியுள்ளது.
இவ்வாறு அமெரிக்கத் தூதர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

* சென்னை, ஏப். 3: தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான யுகாதி திருநாள் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா: தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் யுகாதி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வேளையில், அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுகாதி திருநாள் மக்களிடையே ஒற்றுமை, அமைதி, ஒருமைப்பாட்டு உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: தமிழகத்தில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முந்தைய அ.தி.மு.க. அரசு காலத்தில் யுகாதி திருநாளுக்கான அரசு விடுமுறை மறுக்கப்பட்டது. 2006-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், மீண்டும் அரசு விடுமுறை வழங்கப்பட்டது.

தெலுங்கு, கன்னட மொழிகளைப் பயில விரும்புவோருக்குத் தமிழகப் பள்ளிகளில் உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இத்தகைய நடைமுறைகள் மூலம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் உள்பட பிற மாநில மொழிகள் பேசும் மக்களின் நலனைக் காப்பதில் தி.மு.க. தொடர்ந்து பாடுபடும் என்பதையும், யுகாதித் திருநாள் கொண்டாடும் கன்னட, தெலுங்கு மக்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தாண்டு, அந்த மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டு வரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும், வளம், நலம், வெற்றி ஆகியவற்றை தரும் ஆண்டாக இருக்க வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்தித்து, எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு: தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதிப் பண்டிகை நாளான இன்று, நாடெங்கும் மொழி, ஜாதி, இனப் பிரிவுகள் மாய்ந்து, அனைத்து மக்களிடமும் நல்லிணக்கம் உயர்ந்து, எங்கும் மகிழ்ச்சிப் பெருகிட உறுதி ஏற்போம் என்று தங்கபாலு கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோரும் யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* தமிழகம்தமிழகத்தை முற்றுகையிடும் தேசியத் தலைவர்கள்

சென்னை, ஏப். 3: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேசியத் தலைவர்கள் பலரும் தமிழகத்தை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. பிரசாரம் செய்ய இன்னும் சரியாக 8 நாள்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கடைசிகட்ட பிரசாரம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் தமிழகத் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேசியத் தலைவர்களும் தமிழகத் தேர்தல் களத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.

ஆரோக்கியச் செய்தி மலர் :


நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் 

கட்டடங்களின் கூரையாகப் போட பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது உறுதியாகத் தெரிந்துள்ளதால் அதன் பயன்பாட்டை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்களும், அறிவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆஸ்பெஸ்டாஸ் என்றழைக்கப்படும் மிருதுவான, நார் போன்ற இப்பொருள் சிலிகேட் கனிமப் பொருள் வகையைச் சார்ந்தாகும். இதனை கிரைசோலைட் என்றும் அழைக்கின்றனர். இந்த ஆஸ்பெஸ்டாஸ் பெரும்பாலும் கட்டடங்களின் கூரையாகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூரையாக போடப்படும் ஆஸ்பெஸ்டாஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் நார்கள் சுவாசத்தின்போது நுரையீரலிற்குச் சென்று தங்கிவிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது என்று மருத்துவ அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆஸ்பெஸ்டாஸில் பல வகைகள் உள்ளன என்றாலும், அவை யாவும் ஆபத்தானவையே என்று கூறுகிறார் பேராசிரியர் எலிஹூ ரிச்டர். இவர் இஸ்ரேலின் ஹூப்ரூ பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியராவார்.

நுரையீரல் புற்று நோய் மட்டுமல்ல, மீசோதேலியோமா எனும் மற்றொரு வகை புற்றுநோயையும் ஆஸ்பெஸ்டாஸ் உருவாக்கக் கூடியது என்கி்ன்றனர் மருத்துவர்கள். மனித உடலின் உள்ளுருப்புகளைச் சுற்றியிருக்கும் ஒருவித பாதுகாப்பு தோல் போன்றது மீசோதேலியம் என்பது. ஆஸ்பெஸ்டாஸில் இருந்து வெளியேறும் மெல்லிழை போன்ற நார்கள் உள்ளே சென்று இவற்றோடு ஒட்டிக்கொண்டு மீசோதேலியோமா (Malignant Mesothelioma) எனும் புற்று நோயை உண்டாக்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

நுரையீரலுக்குள் மட்டுமின்றி, அதற்கு வெளியேயுள்ள வெற்றிடங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் நார்கள் சென்று அடைந்துவிடும் என்றும், அதுவும் புற்றுநோயை உண்டாக்கவல்லது என்றும், இதனை மனிதனால் உண்டாக்கப்படும் கார்சினோஜன் என்றும் (கார்சினோஜன் என்பது உலகிலுள்ள எல்லா பொருட்களிலும் உள்ளதொரு, புற்றுநோயை உண்டாக்கவல்ல சத்தாகும்) புற்றுநோய் ஆய்விற்கான பன்னாட்டு முகமை (International Agency for Research on Cancer - IARC) கூறுகிறது.

வர்த்தகச் செய்தி மலர் :

* ஐ.பி.எல். போட்டிகளின்போது விளம்பரம் செய்ய போட்டாபோட்டி!

புதுதில்லி, ஏப்.3: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த கையோடு இந்திய பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகள் ஏப்ரல் 8-ல் தொடங்கி மே 28 வரை நடைபெறவுள்ளன. எனவே இந்தப் போட்டிகளின்போது தங்களுடைய நிறுவனம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்று முன்னணி தொழில், வர்த்தக நிறுவனங்கள் ஒற்றைக்காலில் தவம் கிடக்க ஆரம்பித்துவிட்டன.
10 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 74 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐ.பி.எல். என்பது 20 ஓவர்களைக் கொண்ட ஆட்டம் என்பதால் பரபரப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமே கிடையாது. எனவே கோடிக்கணக்கான ரசிகர்கள் இவற்றைப் பார்ப்பது நிச்சயம்.

மும்பையில் சனிக்கிழமை நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று கோப்பையைக் கைப்பற்றியதால் கிரிக்கெட் ரசிகர்களும் ஷாம்பெய்ன் மழையைப் பார்த்தே போதையில் மிதக்கிறார்கள். எனவே அவர்களுடைய கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் விளம்பரம் செய்து தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எல்லா நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.

""ஐ.பி.எல்.லா, இந்த சோட்டா ஆட்டங்களையெல்லாம் பார்க்க நேரம் ஏது?'' என்று பிகு செய்துகொண்டவர்கள்கூட இப்போது ஐ.பி.எல்.லைப் பார்க்கக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே இந்தப் போட்டிகளில் விளம்பரம் செய்யாமல் முதலில் அலட்சியம் காட்டிய நிறுவனங்கள்கூட தங்களுடைய மேலாளர்களை அழைத்து எப்படியாவது நம்முடைய விளம்பரமும் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கட்டளையே போட்டுவிட்டனர்.

பிராமல்,டாடா மோட்டார்ஸ், நிகான், பாரகன், கான்சாய் நெரோலக் பெயின்ட்ஸ், ஹிடாச்சி, ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எம்.) என்ற நிறுவனத்தை முதல் முறையாக அணுகியிருப்பதாக அதன் தலைவர் ரோகித் குப்தா பெருமையோடு தெரிவிக்கிறார். இந்த நிறுவனம் தான் விளம்பரங்களைத் தேர்வு செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாகவே ஐ.பி.எல். பிரபலமாகிவருகிறது. எங்களுடைய மொத்த விளம்பர பட்ஜெட்டில் 30 சதவீதத்தை ஐ.பி.எல்.லில் செலவிட முடிவு செய்திருக்கிறோம் என்கிறார் நிகான் இன்டியா நிறுவனத்தின் பொது மேலாளர் சச்சின் குமார். இந்த நிறுவனம் வரும் நிதியாண்டில் விளம்பரச் செலவுக்காக மட்டும் ரூ.120 கோடி ஒதுக்கியிருக்கிறது. இதன் விளம்பரத்தூதர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் முதல் முறையாக விளம்பரம் செய்வதுடன் டெல்லி டேர்-டெவில்ஸ் அணிக்கு கார் சப்ளையிலும் ஈடுபடும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிற ஐ.பி.எல். அணிகளுக்கும் வாகன வசதிகளை ஏற்பாடு செய்துதரத் தயார் என்றார்.

ஐ.பி.எல். போட்டியின்போது 10 விநாடிகள் மட்டுமே விளம்பரம் செய்ய ரூ.6.25 லட்சம் மட்டுமே கட்டணம். இந்தத் தொகை அரை இறுதிச் சுற்றுவரை மட்டுமே. அதன் பிறகு இந்தக் கட்டணம் மேலும் அதிகமாகும் என்று எம்.எஸ்.எம். நிறுவனத்தின் குப்தா தெரிவிக்கிறார்.

* தங்கத்திற்கான தேவை 1,200 டன்னாக அதிகரிக்கும்

5319440.jpg

ஏப்ரல் 04,2011,00:43

மும்பை: உலகளவில், தங்கம் பயன்பாட்டில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செவதை இந்திய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவைப்பாடு, 1,200 டன் அல்லது தற்போதைய மதிப்பில் 2.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, உலக தங்க கவுன்சில், அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், தங்கத்தின் விலை, 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான தேவைப்பாடு 25 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு 2011ம் நிதியாண்டில், தங்கம் பயன்பாடு 1.75 சதவீதம் உயர்ந்து, 980 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் நிதியாண்டில், 963.10 டன்னாக இருந்தது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், ஒட்டுமொத்த தங்கம் தேவைப்பாட்டில், தங்க ஆபரணங்கள் 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

இந்தியாவில், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தங்கத்திற்கான தேவைப்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த தங்க தேவைப்பாட்டில், கேரளா, ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களின் பங்களிப்பு, 40 சதவீத அளவிற்கு உள்ளது.

இவை தவிர, தங்கம் பயன்படுத்துவதில், மேற்கு மாநிலங்கள் 25 முதல் 30 சதவீத பங்களிப்புடனும், கிழக்கு மாநிலங்கள் 10 முதல் 15 சதவீத பங்களிப்புடனும் உள்ளன.

தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு பாதுகாப்பானது என்பதாலும், தங்கம் பாரம்பரிய கலாசாரத்துடன் தொடர்புடையது என்ற கருத்து இந்திய மக்களிடம் நிலவுவதால், தங்கத்திற்கான தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்ற 2010ம் ஆண்டில், உலகின் மொத்த தங்க தேவைப்பாட்டில், இந்தியாவின் பங்களிப்பு 32 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து  
2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். 

மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது தோனி தலைமையிலான இந்திய அணி. 

இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், தோனி தலைமையிலான இந்திய அணிக்கு இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். 

இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

* உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள்

மும்பை: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் குவிய ஆரம்பித்துள்ளன. கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு தலா ரூ. 1கோடி பரிசளித்துள்ளது. இதுபோல டெல்லி அரசு, உத்தரகாண்ட் அரசு ஆகியவையும் பரிசுகளை அறிவித்துள்ளன.

உலகக் கோ்பைபப் போட்டியிந் இறுதியாட்டம் முடிந்த சில விநாடிகளிலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பரிசு குறித்த அறிவிப்பை ரவி சாஸ்திரி மூலம் வெளியிட்டது.

அதன்படி வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும் என வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்தார். அதேபோல அணி பயிற்சியாளர் கிர்ஸ்டன், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும். அணித் தேர்வாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

டோணிக்கு டெல்லி அரசு ரூ. 2 கோடி

அதேபோல டெல்லி அரசும் பரிசுகளை அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு ரூ. 2 கோடி பரிசாக அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

அதேபோல டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக், விராத் கோலி, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும்.

டோணி, சச்சினுக்கு முசெளரியில் வீடு

உத்தரகாண்ட் மாநிலம் விருதுகளையும், பரிசையும் அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு உத்தரகாண்ட் ரத்னா விருதை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேபோல டோணிக்கும், சச்சினுக்கும் முசெளரியில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூசுப் பதான், முனாபுக்கு விருது

அதேபோல குஜராத் அரசும் தன் பங்குக்கு இரு வீரர்களுக்கு விருது அறிவித்துள்ளது. யூசுப் பதானுக்கும், முனாப் படேலுக்கும் ஏகலவ்யா விருது அளிக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆன்மீகச் செய்தி மல்ர் :

* அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவில் - சென்னை.

மூலவர் : கச்சாலீஸ்வரர்
 
  அம்மன்/தாயார் :  அழகாம்பிகை
  தல விருட்சம் :  கல்யாணமுருங்கை
  தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  -
  ஊர் : பாரிமுனை, பாரிஸ்
  மாவட்டம் : சென்னை
  மாநிலம் :  தமிழ்நாடு


தல சிறப்பு:
     
  இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும். அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  
   
இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்குள்ள விமானம் சதுரங்க விமானம்.  
   
தலபெருமை:
     
  அம்பாள் அழகாம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் உள்ளனர். ஒரேநேரத்தில் இம்மூன்று சக்திகளையும் வணங்கினால் கல்வி, செல்வம், ஆற்றல் பெறலாம். சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னதி தீக்கிரையான போது, தமிழகத்தில் இருந்து புதிய சிலை எடுத்துச் செல்லப்பட்டது. அந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் ஜோதி தரிசனத்தின்போது, இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது. கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்கவாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். இங்கு 63 நாயன்மார் மண்டபம், தத்தாத்ரேயர்,துர்க்கை, ஆதிசங்கரர், மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

தல வரலாறு:
     
 
பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. "என்ன செய்வேன் இறைவா!' என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது.பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம்! அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர். காலப்போக்கில் அங்கு கோயிலும் எழுப்பப்பட்டது.

 பஞ்சவாகன சிவன்: பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப்பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், "கச்சபேஸ்வரர்' என்றும், "கச்சாலீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். "கச்சபம்' என்றால் "ஆமை' என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழா:
     
   சித்திரையில் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

திறக்கும் நேரம்:
     
  காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது? - ரமணர்   

அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது. எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை. ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, 'ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. 

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால், ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில் உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும். 'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்!

வினாடி வினா :

வினா - இந்திய அணுசக்தி கமிஷனின் முதல் தலைவர் யார் ?

விடை - டாக்டர் ஹோமி பாபா.

இதையும் படிங்க :

பச்சடியுடன் கொண்டாடுங்கள் தெலுங்கு வருடப்பிறப்பை

திங்கட்கிழமை யுகாதிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. த‌மிழ‌ர்க‌ள் த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடுவது போலவே ஆ‌ந்‌திர, க‌ர்நாடக ம‌க்களு‌ம் யுகாதி எனப்படும் பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர்.

அதிகாலையில் எழுந்து வாச‌லி‌ல் வ‌ண்ண‌க் கோல‌மி‌ட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வ‌ழிபடும் மக்கள்  
வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி என்ற ஒரு உணவை தயா‌ரி‌ப்பா‌ர்க‌ள்.

வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள்.

இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவ‌ர்.

யுகாதி பச்சடி

தேவையான பொருட்கள்:

மாங்காய் (தோலோடு மெல்லிதாக சீவியது), வெல்லம்- கால் கப்.
புளிக்கரைசல் /பேஸ்ட், உலர்ந்த வேப்பம்பூ - 1 மேஜைக்கரண்டி அளவு
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி + தேவையான அளவு உப்பு. எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு திக் பேஸ்ட் மாதிரி கலந்துக்கொண்டால், பச்சடி ரெடி!

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்!




வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, சமாசார், தின மலர், தர்ஸ் தமிழ்.

--


No comments:

Post a Comment