Monday, April 25, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 25 , 2011.


முக்கிய செய்தி :

24-saibaba1200.jpg

ஸ்ரீ சத்ய சாய் பாபா மரணம்... மக்கள் கண்ணீர்!

புட்டபர்த்தி: உலகின் மிக அதிக மக்களால் குருவாக வழிபடப்பட்ட, ஆன்மீகத் தலைவர், சமூக சேவகர் புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா இன்று காலை 7.40 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நோய்களாய் அவர் அவதிப்பட்டு வந்தார் பாபா. கடந்த மார்ச் 28-ம் தேதி அவர் புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவரது உடல் உறுப்புகள் முற்றாக செயலிழந்த நிலையில் புட்டபர்த்தி சத்யசாய் ட்ரஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவரது உறுப்புகள் எந்த மருந்தையும் ஏற்கவில்லை. எனவே அவரது உடல்நிலை மிக மோசமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந் நிலையில் இன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிறகு, அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாபாவின் மரணம் குறித்த செய்திகள் முன்கூட்டியே பரவ ஆரம்பித்ததால், புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 6,000க்கும் அதிகமான போலீசார் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்ட்ரஸ்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அனுமதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனை அருகில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரசாந்தி நிலையத்தில் மரியாதை செலுத்த...

'பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா இந்த மக்களிடையேதான் உள்ளது', பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது.

சாய்பாபாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் பிரசாந்தி நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. 

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான விவிஐபிக்கள் புட்டபர்த்திக்கு வரவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

நான்கு லட்சம் பக்தர்கள்

உலகம் முழுவதிலுமிருந்து 4 லட்சம் பக்தர்கள் பாபாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். 

சாய் பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

ஆந்திராவில் 4 நாட்கள் துக்கம்... அரசு மரியாதையுடன் சாய்பாபா இறுதிச் சடங்கு!!

சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது.

பாபாவின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் வரும் பு‌தன்கிழமை பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் சமாதியில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆந்திர ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்தியில் முகாமிட்டுள்ளனர்.
  
பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்றும், அவரது உடல் சமாதிக்குள் வைக்கப்படும் புதன் கிழமையும் அனந்தப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை என்றும் ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், "சத்ய சாய்பாபாவின் ஆன்மீக, சமூக சேவைகள் அளப்பரியவை. தெலுங்கானா மற்றும் ராயலசீமா மக்களின் தாகம் தீர்த்த மாமனிதர் அவர். இந்தியா முழுவதும் அவரது பணிகள் பரந்து விரிந்துள்ளன. கல்வித் துறையில் அவரது சேவைக்கு நிகரில்லை," என்றார்.

உலகச் செய்திமலர் :

* ராஜ திருமணத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைக்கப்படவில்லை

லண்டன்: இளவரசர் வில்லியம், கேட் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல், இருக்கை ஏற்பாடுகள் குறி்த்த விவரத்தை இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் நேற்று வெளியிட்டனர். இதில் அமெரி்கக அதிபர் ஒபாமா பெயர் இல்லை. 

இளவரர் வில்லியம், கேட் மிடில்டன்னை வரும் 29-ம் தேதி மணக்கிறார். இந்த ராஜ திருமணத்திற்கு சுமார் ஆயிரத்து 900 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் கடந்த வாரமே ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதில் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், அவரது மனைவி விக்டோரியா, இசையமைப்பாளர் எல்டன் ஜான், இயக்குனர் கை ரிட்சி, பாடகர் ஜோஸ் ஸ்டோன், மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் ஆகியோர் பெயர் அடக்கம்.

பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா இந்த திருமணத்தில் கலந்து கொள்கிறார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க், நார்வே, ஸ்பெயின், தாய்லாந்து, மொராக்கோ நாடுகளைச் சேர்ந்த 40 ராஜ குடும்பத்தினர் வில்லியம் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், இங்கிலாந்து அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் போராடிய இங்கிலாந்து வீரர்கள் மற்றும் வில்லியமின் அறக்கட்டளைகளில் பணிபுரிவோர்களும் கலந்து கொள்கின்றனர்.

ராஜ திருமணங்களுக்கு வழக்கமாக அந்நாட்டை ஆளும் ராஜ குடும்பத்தினர் தான் அழைக்கப்படுவர். காமன்வெல்த் நாடுகள் அல்லாத நாடுகளின் அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவதில்லை. அதனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் சார்கோசி ஆகியோர் அழைக்கப்படவில்லை என்று அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மிக உயரிய மனித உரிமை விருது!

24-binayak-sen200.jpg

சியோல்: சமூக சேவகர் பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மனித உரிமைக்கான உயரிய விருதான 'குவாங்ஜூ' விருது (Gwangju award) வழங்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கரில் ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வந்த சென், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடி வந்தார். மேலும் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக அந்த மாநில அரசே உருவாக்கி, ஆதரவு தந்து, நடத்தி வந்த 'சல்வா ஜூதும்' என்ற வன்முறை இயக்கம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து வந்தார்.

இதையடுத்து அவர் நக்ஸலைட்டுகளுக்கு உதவியதாக அந்த மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நக்ஸல்கள் குறித்த புத்தகங்கள் இருந்ததாக அந்த மாநில அரசு குற்றம் சாட்டியது.

இதை எதிர்த்து பினாயக் சென் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஒருவர் தனது வீட்டில் மகாத்மா காந்தி புத்தகம் வைத்திருந்தால், அவர் காந்தியவாதியா என்று கேள்வி கேட்டு மாநில அரசை கண்டித்தது. நக்ஸல் புத்தகம் வைத்திருப்பது எப்படி நகஸல்களுக்கு உதவியதாகும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அவர் ஜாமீனில் விடுதலையானர். இந்நிலையில் 2011ம் ஆண்டின் மனித உரிமைக்கான 'குவாங்ஜூ' விருதை விநாயக் சென்னுக்கு வழங்குவதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதால் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

இந்த விருது ஆசிய அளவில் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதி போன்ற விஷயங்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் தேதி இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுடன் 50,000 அமெரிக்க டாலர்களும் பரிசாக தரப்படும்.

இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் பினாயக் சென் ஆவார். இதற்கு முன் இந்த விருதை மணிப்பூரைச் சேர்ந்த ஜரோம் ஷர்மிளா என்ற மனித உரிமை ஆர்வலர் பெற்றார்.

விநாயக் சென் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் என்று விருதுக் குழு தெரிவித்துள்ளது.

*நெல்சன் மண்டேலா தலைமையிலான உலகளாவிய ஜனநாயக அமைப்பு இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்துகின்றது

நெல்சன் மண்டேலா தலைமையிலான உலகளாவிய ஜனநாயக அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்துகின்றன.
சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் ஒன்று சோ்ந்து தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தலைமையில் "த எல்டர்ஸ்" எனும் பெயரிலான அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

அந்த அமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும்  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றையும் வெளியிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

" த எல்டர்ஸ்" அமைப்பில் நெல்சன் மண்டேலா, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இராஜதந்திரியுமான ஜிம்மி கார்ட்டர்,  மியன்மாரின் ஜனநாயகத் தலைவி அவுன்சான் சூகி, முன்னை நாள் ஐ.நா. செயலளார் நாயகம் கொபி அன்னான், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் நோபல் பரிசு பெற்றவருமான மார்டி அதிசாரி, முன்னை நாள் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையாளரும், முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதியுமான மாரி ரொபின்சன், தென்னாபிரிக்காவின் பிரபல பிஷப் டெஸ்மன் டுட்டு ஆகியோரும் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளனர்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணையொன்றின் அவசியம் குறித்து அவர்களால் விடுக்கப்படவுள்ள அறிக்கையானது, சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கு இன்னுமொரு உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

* தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் செய்ய ஐ.நா. வலியுறுத்தல்

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் மீண்டும் சண்டை மூண்டுள்ளதையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். 

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் உள்ள ஆலயம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளிடையே அடி‌க்கடி சண்டை மூண்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக எல்லையில் நடந்த சண்டையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், பிரச்சனையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது என்றும், தாய்லாந்தும், காம்போடியாவும் தீவிர பேச்சுவார்த்தையில் முடிவு காணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

* சிரியாவிற்கு பான் கீ மூன் கண்டனம்!

சிரியாவில் போராடிவரும் மக்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அ¨தியான முறையில் போராடும் மக்கள் மீதான தாக்குதலை சிரியா அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மூன், படுகொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

சர்வதேச மனித உரிமைகளையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் சிரியா அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரானின் உதவுயுடன் மக்கள் போராட்டத்தை சிரியா நசுக்கிறது என்றும், இத்தகைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

* கடல் கொள்ளையைத் தடுக்க மோரீஷஸுடன் கூட்டு: குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

ppaadil.jpg

போர்ட் லூயிஸ், ஏப். 24: இந்தியப் பெருங்கடலில் கடல் கொள்ளையர்களின் அட்டூழியத்தை ஒழிப்பதில் மோரீஷஸýடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று  ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 5 நாள் பயணமாக மோரீஷஸ் வந்திருக்கும் அவர், விமானப் பயணத்தின்போது செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். மோரீஷஸில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவை உருவாக்குவதற்கு இந்தியா உதவும் என்றும் அவர் கூறினார்.

இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து மோரீஷஸ் தலைவர்களுடன் பேச இருப்பதாகத் தெரிவித்த பிரதிபா பாட்டீல், இருநாட்டு உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல இந்தப் பேச்சுகள் உதவும் என்றார். ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மோரீஷஸ் ஆதரவு தெரிவித்து வருவதையும் பிரதிபா நினைவுகூர்ந்தார். 

* ஏமன் அதிபர் உடனே விலக மக்கள் வலியுறுத்தல்

சானா,ஏப்.24: ஏமன் அதிபர் பதவியிலிருந்து அலி அப்துல் சாலே உடனே விலக வேண்டும் என்று அவருக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்திவரும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 இன்னும் 30 நாள்களுக்குள் பதவி விலகுகிறேன் என்று அதிபர் சாலே சனிக்கிழமை கூறியிருந்தார். அதை ஏற்க முடியாது என்று மக்கள் சனிக்கிழமை நள்ளிரவே நிராகரித்துவிட்டனர்.

 அதிபரை எதிர்த்து தலைநகர் சானாவிலும் இதர பெரிய நகரங்களிலும் வெட்டவெளியில் நகர சதுக்கங்களில் தங்கி கடந்த ஜனவரி முதல் மக்கள் கிளர்ச்சி செய்துவருகின்றனர். இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள்.

 அதிபர் சாலே 1978 முதல் பதவியில் இருக்கிறார். "என்னைவிட்டால் ஏமனைக் காப்பாற்ற யாருமே இல்லை' என்று சொல்லிக்கொண்டு ஏமனின் சொத்தைக் கொள்ளையடித்துத் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே கொழுக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
 தனக்குப் பிறகு தன்னுடைய மகன் அதிபராக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பாக இருக்கிறது.

 ஏமனில் அடிக்கும் காற்று நாளை நம் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்றுதான் சவூதி அரேபியா தலைமையிலான வளை குடா ஒத்துழைப்பு கவுன்சில் என்ற அமைப்பைச் சேர்ந்த 6 நாடுகள் சமரச திட்டத்தை வகுத்தன.

 அதிபர் சாலே 30 நாள்களுக்குள் பதவி விலகிவிடுவார், 2 மாதங்களுக்குள் அடுத்த அதிபர் தேர்தல் நடைபெறும், நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையில் நாட்டின் அரசியல் சட்டம் திருத்தப்படும் என்றெல்லாம் கூறிப்பார்த்தார்கள்.

 "முதலில் அதிபர் விலகட்டும், இந்த நாட்டின் அரசியல் சட்டம் எப்படி திருத்தப்படவேண்டும், நாடாளுமன்றத்துக்கு எப்படிப்பட்ட அதிகாரம் வேண்டும் என்பதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறிவிட்டார்கள் மக்கள்.

* ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கருத்துக் கணிப்பில் தகவல்

opamaa1.jpg

வாஷிங்டன், ஏப். 24: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பெரும்பான்மை மக்கள் கருதுவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.
 அமெரிக்க நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

 நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சியும் இணைந்து அண்மையில் தொலைபேசி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தின. கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை நடந்த இந்தக் கருத்துக் கணிப்பில் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,224 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 இதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்பாடு குறித்து 45 சதவீதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இது கடந்த ஜனவரி மாதத்தைவிட 

 பொருளாதார நெருக்கடிகளை அவர் கையாளுவது குறித்து 57 சதவீதம் பேரும், பட்ஜெட் பற்றாக்குறையை அவர் கையாண்டது குறித்து கிட்டத்தட்ட அதே அளவினரும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

 அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

 எனினும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கை ரத்து செய்யும் ஒபாமாவின் திட்டத்துக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

 எந்த வகையில் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்கிற கேள்விக்கு ராணுவச் செலவுகளைக் குறைப்பதற்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சமூகப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்கலாம் என 17 சதவீதம் பேரும், மருத்துவத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கலாம் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

 நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 70 சதவீதம் அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். லிபியா மீதான தாக்குதலுக்கும் பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

* மறுவாழ்வுப் பயிற்சிக்குப் பிறகு 483 விடுதலைப் புலிகள் விடுதல

கொழும்பு,ஏப்.24: இலங்கை அரசின் மறுவாழ்வுப் பயிற்சி முகாமிலிருந்து 483 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

 இதற்கான நிகழ்ச்சி இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இலங்கை அரசில் சிறை, மறுவாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் சந்திரசிரி கஜதீரா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
 
"2009 மே மாதம் போர் முடிவுற்ற பிறகு 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் போராட்டப் பாதையிலிருந்து திரும்பி நல்வாழ்வு வாழ கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட்டன. அப்படி பயிற்சி பெற்றவர்கள் அவ்வப்போது குழுக்களாக விடுதலை செய்யப்பட்டனர். இப்போது 483 பேர் விடுதலை பெறுகின்றனர். இன்னும் சுமார் 4 ஆயிரம்பேர்தான் இத்தகைய முகாம்களில் இருக்கின்றனர். அவர்களும் படிப்படியாக பயிற்சி முடித்ததும் விடுதலை செய்யப்படுவார்கள்.

இலங்கையில் வெவ்வேறு இனக்குழுக்கள் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும். யாரும் தங்களுடைய இனம்தான் சிறந்தது, அதற்கு மட்டும்தான் வாழ உரிமை உண்டு என்றெல்லாம் பேசக்கூடாது. குறிப்பாக சிங்களர்கள் தேசியவாதம் பேசி மற்ற இனக் குழுக்களைத் தாழ்த்தினால் அது அவர்களுடைய தன்மானத்தைத் தூண்டி பதிலுக்கு அவர்களையும் இன உணர்வு கொள்ளவைக்கும்.
 இலங்கை அனைவருக்கும் சொந்தம். 

அனைவருக்கும் இங்கு வாழ சம உரிமை உண்டு. இன உணர்வுகளைத் தூண்டாமல் நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்றவே அரசியல் தலைவர்கள் முற்பட வேண்டும். அதில் தவறினால் நாட்டில் மீண்டும் அமைதியின்மைதான் ஏற்படும்' என்று எச்சரித்தார் சந்திரசிரி கஜதீரா.

தேசியச் செய்தி மலர் :

* காலங்களை தாண்டி நிற்கும் சாய்பாபா கல்விப் பணிகள்!

கல்வித் துறையில் சத்ய சாய்பாபா செய்த மிகப் பெரிய சேவை காலங்களைக் கடந்தும் அவர் பெயரைப் பறை சாற்றக் கூடியவை. 

1954-ல் ஸ்ரீசத்யசாய் பல்கலைக்கழகத்தை புட்டபர்த்தியில் ஆரம்பித்த சாய்பாபா,இதன் வேந்தராக இருந்தார்.

இந்தப் பல்கலைக் கழகம் பின்னர் பெங்களூர் மற்றும் அனந்தப்பூரிலும் கிளைகளைப் பரப்பி பல்லாயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளித்தது.

சத்யசாய் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறையிலும் உயர்கல்வி படிக்க முடியும். இந்தியாவில் மத்திய அரசின் நாக் (National Assessment and Accreditation Council) கமிட்டியால் ஏ++ சான்றிதழ் தரப்பட்ட ஒரே கல்வி மையம் சத்ய சாய் பல்கலைக் கழகம்தான்.

160 நாடுகளுக்கும் மேல் சாய்பாபாவின் அறக்கட்டளை மூலம் கல்விப் பணிகள் நடந்துவருகின்றன. இங்கெல்லாம் சத்யசாய் பல்கலைக் கழகத்தின் படிப்பு மையங்களும் தொடர்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

படிப்போடு சேர்த்து நன்னடத்தை குறித்த கல்வியையும் இந்த நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது.

பள்ளிகள்...

சாய்பாபாவின் Educare திட்டம் மூலம் உலகம் முழுக்க பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை ஆஸ்திரேலியா  , மெக்ஸிகோ, இங்கிலாந்து  , பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இத்தகைய பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள பள்ளிகளில் மிகச் சிறந்தது என சாய்பாபா பள்ளியை பட்டியலிட்டுள்ளது அந்நாட்டின் பிரேஸர் கல்வி நிறுவனம். பிரேஸர் கல்வி நிறுவன தகுதி ரேங்கில் 10-க்கு 10 மதிப்பெண்களைப் பெற்றது சாய் பாபா பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இசைக்கென்றே சர்வதேசத் தரத்தில் ஸ்ரீசத்யசாய் மிர்புரி இசைக் கல்லூரியையும் பாபா ஏற்படுத்தியுள்ளார்.

மருத்துவக் கல்வி... சேவைகள்

அனைத்து அடிப்படை கல்வி மற்றும் உயர் படிப்புகளும் இலவசமாகவே தரப்படுகின்றன. புட்டபர்த்தியில் சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புட்டபர்த்தியில் உள்ள இந்த மருத்துவமனை 220 படுகைகளுடன்கொண்டது. அனைத்து சிகிச்சைகளும் (இதய அறுவை சிகிச்சை உள்பட) இலவசம்.

பெங்களூர் ஒயிட்பீல்டில் 200 ஏக்கரில் பரந்து விரிந்த இந்த மருத்துவமனையில் 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. கிட்டத்தட்ட 2.5 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவசேவை அளித்து வருகின்றன இந்த மருத்துவமனைகள்.

பெங்களூர் ஒயிட்பீல்டில் மட்டும் 20 லட்சம் நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

சிகிச்சை மட்டுமின்றி, உடைகள், உணவு என பல வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

இந்த சிறப்பு மருத்துவமனைகள் தவிர, இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் கண் மருத்துவமனை, காது மூக்கு தொண்டை மருத்துவமனை என ஏராளமான மருத்துவமனைகளை அமைத்துள்ளார் சாய் பாபா.

* தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புது தில்லி, ஏப். 24: புது தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் ஞாயிற்றுக்கிழமை அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அது வெறும் மிரட்டல் என தெரியவந்தது.

 இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தில்லி அசோகா சாலையில் அமைந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

 மறுமுனையில் பேசிய மர்ம நபர், அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். தகவல் பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர் குழுவினர், அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொலைபேசி அழைப்பு வெறும் மிரட்டல் என தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

* 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு: துணைக் குற்றப் பத்திரிகை இன்று தாக்கல்?

புது தில்லி, ஏப். 24: 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகையை சிபிஐ திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

 இந்த வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை சிபிஐ நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, துணைக் குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25-க்குள் தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ உறுதியளித்திருந்தது.

 அதன்படி, கலைஞர் டி.வி. மற்றும் சிலருக்கு எதிராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தரப்பினருக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறைமுகமாக லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

 அதன்படி டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் உஸ்மான் பல்வா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநரான மறைந்த சாதிக் பாட்சா ஆகியோர் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வரைவுத் திட்டம் இன்னும் தயாரிக்கவில்லை: மத்தியக்குழு தகவல்

ஜம்மு, ஏப்.24: ஜம்மு-காஷ்மீருக்கு 1953-ம் ஆண்டுக்கு முந்தைய அந்தஸ்து வழங்குவது தொடர்பாக வரைவுத் திட்டம் ஏதும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்று அம்மாநில விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட தூதுக்குழுத் தலைவர் திலீப் பட்காவோன்கர் தெரிவித்தார்.

 ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைக்கு நிரந்தத் தீர்வு காணும் பொருட்டு அம்மாநிலத்தின் எல்லா தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை அளிக்க பட்காவோன்கர் தலைமையில் 3 பேர் கொண்ட தூதுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு தனது அறிக்கையை அளித்துவிட்டதாகவும், அதில் 1953-ம் ஆண்டிற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அந்தஸ்தை ஜம்மு-காஷ்மீருக்கு வழங்க பரிந்துரை அளிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. அவ்வாறு அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் ஜம்மு-காஷ்மீர் அரசே சுயமாக எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொள்ள முடியும்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பட்காவோன்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அந்த செய்தியை அவர் மறுத்தார். அதுகுறித்து அவர் கூறியது: இதுவரை எந்தவித வரைவுத் திட்டத்தையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை. பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதுபோன்றத் தகவலை நாங்கள் சிந்திக்கக்கூட இல்லை. காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கும் முன் அம்மாநிலத்தில் உள்ள எல்லா தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுவரை 50 குழுவினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

 மேலும் தனி நாடு கோரிவரும் குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தீவிர முயற்சி செய்து வருகிறோம். இம்மாநிலத்திலுள்ள ஜம்மு, காஷ்மீர், தோடா, மற்றும் கஷ்ட்வார் ஆகிய பகுதியைச்சேர்ந்த எல்லா தரப்பு மக்களிடமும், அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கருத்தை அறிந்த பிறகே மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்படும். பல்வேறு குழுக்களை சந்திக்கும்போது அவர்களது பிரச்னைகள், கருத்துக்களை அறிந்து வருகிறோம்.

 அதன்பிறகு பரந்த, எல்லா தரப்பு கருத்துக்களும் அடங்கிய அறிக்கை அளிக்கப்படும்.
 எங்களது அறிக்கை உறுதியான, அரசியல் சட்டப்படியான, அரசியல் அதிகாரம், நிதி, மற்றும் நிர்வாக அந்தஸ்து அளிக்கும்வகையில் இருக்க வேண்டும் என்பது நாங்கள் பேச்சு நடத்திய மக்களின் கருத்தாக உள்ளது என்றார்.

பட்காவோங்கர் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட இக்குழுவில்
 ராதாகுமார், முன்னாள் தகவல் துறை ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

*எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

ஜம்மு, ஏப் 24:ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

 காஷ்மீர் மாநிலம் பூன்ஞ் மாவட்டத்தில் ராணுவம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றது. 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் குழு ஒன்று ஊடுருவ முயன்றது. ராணுவத்தினரின் தாக்குதலையடுத்து இந்தப் பயங்கரவாதிகள் திரும்பவும் பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடிவிட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்தியா : சாய்பாபா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார்?

ssbhabha.jpg

புட்டபர்த்தி, ஏப்.24: பகவான் சத்ய சாய் பாபாவின் அருள் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பக்தர்களின் நன்கொடையில் உருவாகி இன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிழல்தரும் மிகப்பெரிய ஆலமரமாக விளங்கும் "ஸ்ரீ சத்ய சாய் மைய அறக்கட்டளை' அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விதான் அனைவர் மனங்களிலும் எழுகிறது.

 2 காரணங்கள்: பாபா இருந்தவரை இந்த அறக்கட்டளைக்கு அவர் வழிகாட்டல் இருந்தது என்பதால் அவருக்கு அடுத்து யார் என்று கேட்க யாருக்குமே தோன்றவில்லை. மேலும், 96 வயதுவரை நான் உயிர் வாழ்வேன் என்று பாபா கூறியிருந்ததால் இந்த எண்ணமே எவருக்கும் வரவில்லை.

 ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்: அடுத்ததாக இந்த அறக்கட்டளைக்கு உள்ள சொத்துகளின் மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் கோடி வரையில் என்று கூறுகின்றனர். அறக்கட்டளை நடத்திவரும் பல்வேறு நிறுவனங்களிடம் ஏராளமான ரொக்க கையிருப்பு இருக்கிறது.

 165 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட நேரடி பக்தர்கள் பாபாவுக்கு இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வருவாயில் சிறு பகுதியை பாபாவின் அறக்கட்டளைக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.

 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம், உறைவிடப் பள்ளிகள், தொழில் பயிற்சி மையங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தியான மண்டபங்கள் என்று ஏராளமான நிரந்தர சொத்துகள் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உருவாகியிருக்கின்றன.

அனந்தப்பூர் மாவட்ட மக்களுக்கும் சென்னை மாநகர மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இந்த அறக்கட்டளையைத்தான் பாபா பயன்படுத்தினார். எனவே இந்த அறக்கட்டளைக்கு அடுத்த தலைவர் யார் என்பதை அறிவதில் பாபாவின் ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மட்டும் அல்ல அரசுகளுக்கும் ஆர்வம் இருக்கிறது.

 பி.என். பகவதி: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் மிகச் சிறந்த நேர்மையாளருமான பி.என். பகவதி இந்த அறக்கட்டளையின் உறுப்பினராகப் பதவி வகிக்கிறார். கல்வி, கேள்விகளில் சிறந்தவரும் நல்ல ஒழுக்க சீலருமான பகவதி அடுத்த தலைவராக வரக்கூடும்.

 எஸ்.வி. கிரி: ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவரான எஸ்.வி. கிரியும் தலைசிறந்த நிர்வாகி, நேர்மையாளர். எனவே அவரும் தலைமை வகிக்கக்கூடும்.

 வேணுசீனிவாசன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ். தொழில் குடும்பத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசனும் அறக்கட்டளை உறுப்பினராக இருக்கிறார். சிறந்த நிர்வாகியும் நேர்மையாளருமான வேணு சீனிவாசன் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். பாபா விரும்பிய தொண்டுகளைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றியவர். தலைமைக்குத் தகுதியானவர்.

கே. சக்ரவர்த்தி: ஆனால் அனைவராலும் அடுத்து தலைமை ஏற்கக்கூடியவர் என்று அடையாளம் காட்டப்படுபவர் கே. சக்ரவர்த்தி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். இவர் அனந்தப்பூர் மாவட்ட ஆட்சியராகத்தான் இங்கே வந்தார். இவருடைய நிர்வாகத் திறமையைக் கண்ட பாபாதான், அரசு வேலையை விட்டுவிட்டு தன்னிடம் சேர்ந்துவிடுமாறு பணித்தார்.

 சக்ரவர்த்தியும் அதையே கட்டளையாக ஏற்று 1981-ல் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு பாபாவிடம் சேர்ந்தார். அறக்கட்டளை உறுப்பினர் ஆனார். பாபாவின் நம்பிக்கையை மட்டும் அல்ல பிற நிர்வாகிகளின் நம்பிக்கைக்கும் உரியவரானார். 1994-ல் அறக்கட்டளை செயலாளரானார்.

 ஆனால் இவர் பதவிக்கு வந்த பிறகுதான் பாபா தங்களைவிட்டு அன்னியமாகிவிட்டார் என்ற எண்ணம் புட்டபர்த்திவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவர் தலைவர் ஆவதை மற்றவர்கள் ஏற்றாலும் பக்தர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

 ஆர்.ஜே. ரத்னாகர்: பாபாவின் தம்பி ஜானகிராம் என்பவரின் புதல்வர் ஆர்.ஜே. ரத்னாகர் இப்போது அறக்கட்டளை உறுப்பினராக இருக்கிறார். பாபாவின் உறவினர்களில் இவர் ஒருவர்தான் அறக்கட்டளையில் இடம் பெற்றுள்ளார். 

எம்.பி.ஏ. பட்டதாரி. புட்டபர்த்தியில் கேபிள் டி.வி. நடத்துகிறார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகியாக இருக்கிறார். தன்னுடைய தகப்பனாரைப் போலவே அரசியலிலும் ஈடுபாடு கொண்டுள்ளார்.

சத்யஜித் (33): சத்ய சாய் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய 5-வது வயதில் சேர்ந்தார். பாபாவின் நேரடி பார்வையில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பு முடித்ததும் சத்ய சாய் உயர் கல்விக்கழகத்திலேயே சேர்ந்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். 

பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாக ரேங்க் பெற்றார். படிப்பு முடித்ததும் ஆஸ்ரமத்திலேயே சேவையில் ஈடுபட்டு பாபாவின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். 

இவருடைய அனுமதி இல்லாமல் எவரும் பிரசாந்தி நிலையத்தின் உள்ளே நுழையக்கூட முடியாது என்று கூறுகின்றனர். இவர்களில் யார் அடுத்து தலைவர் ஆவார் என்று விவாதம் நடக்கிறது.

 உள்ளூர் மக்கள் மனக்குறை: பாபாவின் தம்பி ஜானகிராம் இருந்தவரை ஊருக்குள் உள்ள எல்லோரையும் நேரில் வந்து பார்க்கும் வழக்கம் வைத்திருந்தார். வீட்டில் ஏதாவது பிரச்னை என்றால்கூட பிரசாந்தி நிலையத்தால் என்ன உதவி செய்ய முடியும் என்று பார்த்து உதவுவார். 

ஏதாவது மிகப்பெரிய சிக்கல் என்றால் பாபாவிடமே அழைத்துச் சென்று தீர்ப்பார். இந்த நிலையில் பாபாவே மறைந்துவிட்டதால் தங்களை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று உள்ளூர்வாசிகள் கவலைப்படுகின்றனர்.

 அறக்கட்டளையை அரசு ஏற்குமா? 

அறக்கட்டளைக்கு உள்ள ஏராளமான சொத்துகளை ஹிந்து அறநிலையத்துறையே எடுத்துக் கொண்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடயே ஏற்பட்டிருக்கிறது.

 ஆந்திர அரசுக்கு அத்தகைய எண்ணம் ஏதும் இல்லை என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் என். ரகுவீர ரெட்டி நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் தெரிவித்தார்.

அவர் அப்படிக் கூறியிருந்தாலும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை ஏற்படாமல் நிர்வாகம் எதையும் செய்ய முடியாமல் போனால் அறக்கட்டளையின் சொத்துகளை அரசு தன் வசம் எடுத்துக்கொண்டு நிர்வகிப்பதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும் என்றே நடுநிலையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

* பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் இல்லை: அதிகாரி அதிருப்தி

புது தில்லி, ஏப். 24: 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று பிரதமர் முன்னிலையில் தேசிய பஞ்சாயத்து தின நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் செயலர் ஏ.என்.பி. சின்ஹா பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டார்.

 தேசிய பஞ்சாயத்து தினத்தையெட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 பஞ்சாயத்து ராஜ் முன்னாள் அமைச்சர் மணி சங்கர் ஐயர் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் மேடையில் இருந்தபோது நன்றியுரையாற்றிப் பேசிய சின்ஹா, "11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த குறை களையப்பட வேண்டும்' என்று அதிருப்தி வெளியிட்டார்.

அடுத்து நடைபெற உள்ள தேசிய ஆலோசனைக் கூட்டத்தின் விவாதப் பொருள் பட்டியலில் பஞ்சாயத்து ராஜ் குறித்தும் சேர்க்குமாறு அதன் தலைவர் சோனியா காந்தியை அவர் கேட்டுக் கொண்டார். மேடையில் இருந்த தலைவர்கள் அவரது பேச்சை அமைதியாகக் கேட்டனர். அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

 பார்வையாளர்கள் வரிசையில் இருந்த மணிசங்கர் ஐயர் பின்னர் கூறுகையில், "11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பஞ்சாயத்து ராஜுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று சின்ஹா கூறியது உண்மைதான்.

 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்குவதற்காக கமிட்டி ஒன்றை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்' என்றார்.
 
மாநிலச் செய்தி மலர் :

* ஈஸ்டர் திருநாள் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சென்னை : இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. பாதிரியார்கள் மற்றும் போதகர்கள் ஈஸ்டர் திருநாள் உரை நிகழ்த்தினர். பின்னர் அனைவருக்கும் ஈஸ்டர் கேக் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டது.

* மே 14ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது: 25ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு

large_230103.jpg

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 14ம் தேதி வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர் எழுதினர். இவர்களில், மூன்று லட்சத்து, 36 ஆயிரத்து, 443 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 102 பேர் மாணவியர். 1,890 மையங்களில், தேர்வுகள் நடந்தன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்போது, பாட வாரியாக மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி, "டேட்டா சென்டரில்' மும்முரமாக நடந்து வருகிறது.

 மெட்ரிக் - ஆங்கிலோ இந்திய தேர்வுகள், மார்ச் 22ம் தேதியில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ். எல்.சி., தேர்வுகள், மார்ச் 28ம் தேதியில் இருந்தும் ஆரம்பமாகி, நான்கு போர்டு தேர்வுகளும், ஏப்ரல் 11ம் தேதி முடிந்தது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு, மே 14ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு, மே 13ம் தேதி, தேர்தல் முடிவு வெளிவர இருப்பதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து, கடந்த வாரம் வரை, உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக, தேர்வுத்துறை மற்றும், "டேட்டா சென்டர்' அதிகாரிகளுக்கும் எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், நேற்று திடீரென, தேர்வு முடிவு தேதிகளை, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டார்.

சென்னை, கன்னிமாரா நூலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், நிருபர்களிடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. எனவே, இதன் முடிவுகள், மே 14ம் தேதி வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதற்கேற்ப, பணிகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவு மட்டும், மே 14ம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும்' என்று அறிவித்தார்.

* விடுமுறை நாளில் மின்வெட்டு இல்லை: கோடை மழையால் 700 மெகா வாட் மிச்சம்

சென்னை, ஏப். 24: தமிழகம் முழுவதும் வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இல்லை. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 தமிழகத்தில் 2,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் தினமும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு மூலம் 1,600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு பகுதியில் குறித்த நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். ஆனால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 எந்த இடத்திலும் வழக்கமான அளவான மூன்று மணி நேரம் மின்வெட்டு செய்யப்படவில்லை. அரை மணி நேரம் வரையிலே மின்வெட்டு செய்யப்பட்டது. சென்னையில் மின்வெட்டு இல்லை.

என்ன காரணம்? கோடை மழை பெய்து வருவதே மின்வெட்டு செய்யப்படாததற்குக் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "கோடை மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவுக்கு மின்மோட்டார்களை பயன்படுத்தவில்லை. இதன்மூலம், 700 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மின்சாரம், வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இல்லை' என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

 தொடருமா? மின்வெட்டு இல்லாத நிலை தமிழகத்தில் தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் கோடை மழை தொடர வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

 "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை நீடிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மின்வெட்டு இல்லாத நிலை மேலும் சில நாட்களுக்கு மாநிலத்தில் நீடிக்கும் எனத் தெரிகிறது.

* நீர் ஆதாரங்களை பெருக்க 100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்த வேண்டும்: வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் பேட்டி

vitvc1.jpg

புதுச்சேரி, ஏப்.24: நீர் ஆதாரங்களை பெருக்க 100 நாள் வேலை உறுதி திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் கூறினார்.

 கோடையில் அதிக வெயிலை பதிவு செய்யும் வேலூரில் கடந்த 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாநகருக்கு நீராதாரமாக திகழும் ஓட்டேரியில், சொட்டு நீர் கூட இல்லை. இதை மேம்படுத்த பல்கலைக்கழகம் சார்பில் ஏதாவது சிறப்பு திட்டம் உண்டா என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதனிடம் தினமணி செய்தியாளர் கேட்டபோது, அவர் கூறியது:

 வேலூர் மாவட்டத்தில் நன்றாக மழை பெய்துள்ளது. மழை பெய்தாலும் பல ஏரிகள் நிரம்புவதில்லை. எங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வேலூரில் ஒரு ஏரியை பராமரித்து வருகிறோம். அந்த ஏரிக்கு நீர் வரும் வழிகளை அறிந்து, அவற்றை சீரமைத்து வருகிறோம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஏரியில் மட்டும் நீர் நிரம்பி இருக்கும். ÷வாழ்க்கைக்கு நீர் அவசியமான ஒன்று. கிடைக்கும் மழை நீரை சேமிக்க வேண்டும். அதற்கு மழை காலங்களில் கிடைக்கும் நீரை ஏரியில் தேக்கி வைக்கும் விதமாக மழை நீர் வரும் வழிகளை சீரமைக்க வேண்டும். அதற்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

 வேலூர் மாநகரை மேம்படுத்த பல்கலைக்கழகம் சார்பில் வளர்ச்சிக் குழுவை அமைக்க இருக்கிறோம். இந்த குழு வேலூரில் நீராதாரத்தை பெருக்குவது, விமான நிலையம் அமைக்க உதவுவது, மாநகர் முழுவதும் மரம் நடுவது, சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இது தொடர்பாக புதிதாக அமைய உள்ள அரசிடம் பேசுவோம் என்றார்.

* குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசி, ஏப். 24: குற்றாலம் அருவிகளில் சில நாள்களாக தண்ணீர் மிதமாக விழுவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
 இங்கு ஆண்டுதோறும் மே மாத இறுதியில்தான் சீசன் தொடங்கும். அப்போது மிதமான வெயிலுடன், சாரல் மழைம் பெய்யும். அப்போது அருவிகளில் குளித்துமகிழ அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவர்.

 இந்நிலையில், குற்றால வனப் பகுதியில் சில நாள்களாக பரவலாக மழை பெய்கிறது. இதனால், அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

 கோடை மழை பெய்த முதல்நாளில் பேரருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி சீறிப்பாய்ந்த நீரின் சீற்றம் படிப்படியாகக் குறைந்து இப்போது குளிப்பதற்கேற்ற அளவில் விழுகிறது.
 குற்றாலம் பேரருவி, ஐந்தருவியின் 3 கிளைகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

 இதனால் சீசன் தொடங்கும் முன்பே இந்த ஆண்டில் குற்றாலம் களை கட்டத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையென்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அருவிப் பகுதியிலும், பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* பருத்தி, நூலிழை விலை சரிவு; துணி விலையும் குறைந்தது:ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை

திருப்பூர்:விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு பயன்படும் நூலிழை ரகங்கள் விலை, திடீரென பெருமளவு குறைந்துள் ளது. இதனால், துணி ரகங்களின் விலையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், இரண்டு லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம், தினமும் ஏறத்தாழ ஒரு கோடி மீட்டர் அளவு, காடா துணி ரகங்கள் உற்பத்தியாகின்றன. இவை, பல்வேறு வட மாநிலங்களுக்கும், சில வெளிநாடு களுக் கும் செல்கின்றன.இந்த உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான நூலிழை ரகங்கள், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் உள்ள நூற்பாலை களிலிருந்தும், மகாராஷ் டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகின்றன. ஏற்று மதி உள்ளிட்ட காரணங்களால், பருத்தி விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. எனவே, பருத்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தொழிற்துறையினரின் கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு சில நடவடிக்கை களை மேற்கொண்டது; விலையும் சற்று கட்டுக்குள் இருந்தது.இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில், பருத்தி ரகங்களின் விலை, திடீரென குறைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, நூலிழை ரகங்களின் விலையும் குறைந்தது;

 விசைத்தறியில் உற்பத்தியாகும் துணி ரகங்களின் விலையும், கடுமையாக குறைந்து விட்டது. இது, நூற்பாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் என, இரு தரப்புக்கும், பெரும் அதிர்ச்சியையும், அதிக இழப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால், தொழில் துறையினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.பருத்தி விலை மாற்றம்: முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு நாள்களில், பருத்தி ரகங்கள் 7,000 முதல் 9,000 ரூபாய் வரை, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 40 ரகம் வெப்ட் மற்றும் 30 ரகம் வார்ப் நூலிழை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும், 28 எம்.எம்., ரக பருத்தி, 356 கிலோ எடையுள்ள ஒரு கேண்டி, கடந்த வாரம் 60 ஆயிரம் முதல் 61 ஆயிரம் ரூபாய் வரை விலை இருந்தது.கடந்த இரண்டு நாள்களில், இதன் விலை 53 ஆயிரம் முதல் 54 ஆயிரம் வரை, ஏறத்தாழ 7,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. 

இவ் வகையில் தற்போது நூலிழை விலையில் ஏற்பட்டுள்ள சரிவால், துணி ரகங்களின் விலை பெருமளவு குறைந் துள்ளது. மீட்டர் ஒன்றுக்கு 36 ரூபாய்க்கு விற்ற துணி, தற்போது 32 ரூபாயாகவும், 31 ரூபாய்க்கு விற்பனை செய்த ரகம் 29 ரூபாயாக வும், 32.75 ரூபாய்க்கு விற்ற ரகம் 29.25 ரூபாய் எனவும், மீட்டர் ஒன்றுக்கு ரக வாரியாக இவற் றின் விலை, 3 முதல் 4 ரூபாய் வரை மிகவும் குறைந்துள்ளது.ஆலோசனை கூட்டம்: பருத்தி, நூலிழை மற்றும் துணி ரகங்களின் விலை குறைவால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். இதுகுறித்து விவாதிப்பதற்கு, வரும் 25ம் தேதி, சோமனூரில் அனைத்து ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், அவசர ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி *கொச்சி டஸ்கர்ஸ் பரிதாபம்

ஜெய்ப்பூர்: கொச்சி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்து பிரிவிலும் சொதப்பிய கொச்சி அணி, பரிதாபமாக வீழ்ந்தது.

ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் வார்ன், பீல்டிங் தேர்வு செய்தார். தோள்பட்டை வலி காரணமாக பிரண்டன் மெக்கலம், ரமேஷ் பவார் நீக்கப்பட்டு, கொச்சி அணியில் லட்சுமண், பெரேரா சேர்க்கப்பட்டனர். 

சுமாரான துவக்கம்:
கொச்சி அணிக்கு லட்சுமண், ஜெயவர்தனா ஜோடி துவக்கம் கொடுத்தது. வழக்கம் போல நிதானமாக துவக்கிய லட்சுமண் (8) ரன் அவுட்டானார். கேப்டன் ஜெயவர்தனாவும் (13) நிலைக்கவில்லை. 14 பந்தில் 8 ரன்கள் எடுத்த ஹாட்ஜ், வார்ன் சுழலில் சிக்கினார்.
ஆறுதல் ஜோடி:

பின் இணைந்த பார்த்திவ் படேல், ரவிந்திர ஜடேஜா ஜோடி ஒன்றும் இரண்டுமாக ரன்கள் சேர்த்து ஆறுதல் தந்தனர். இவர்களுக்கு வில்லனாக உருவெடுத்த வார்ன், ஜடேஜா (22), பார்த்திவ் படேல் (32) இருவரையும், அடுத்தடுத்த பந்தில், பெவிலியன் திருப்பி அனுப்பினார்.

இதன் பின், பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். கோமெஜ்(0), பெரேரா (1), வினய் குமார் (5), ஜாதவ் (5) என யாரும், சிறிதுகூட தாக்குப்பிடிக்க வில்லை. கடைசியில் ஆர்.பி.சிங்கும் (1) ரன் அவுட்டானார். 

90 ரன்னுக்கு 3 விக்கெட் என்றிருந்த கொச்சி அணி, அடுத்து 19 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. கொச்சி அணி 20 ஓவரில் 109 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராஜஸ்தான் சார்பில் வார்ன், திரிவேதி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
டிராவிட் அபாரம்:

எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் ஜோடி அபார துவக்கம் கொடுத்தனர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஜடேஜா பந்தில் இப்போட்டியில் முதல் சிக்சரை அடித்தார் டிராவிட். இவர் 44 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.

எளிய வெற்றி:
மறுபக்கம், முரளிதரன் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து அசத்திய வாட்சன், 49 ரன்களுக்கு அவுட்டானார். பின் 14.1 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோகன் போத்தா (14), ராஸ் டெய்லர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :


* ஆதிகேசவ பெருமாள் ஆலய தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர், ஏப். 24: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ராமானுஜர் ஆலய தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஆண்டுதோறும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ராமானுஜர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ விழா சித்திரை மாதம் நடைபெறும். இதில் ஆதிகேசவ பெருமாளுக்கு பத்து நாள்களும், ராமானுஜருக்கு பத்து நாள்களும் உற்சவம் நடைபெறும்.

 இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஆதிகேசவ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதிஉலா வந்தார்.

 தேர் காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கைஆழ்வார் தெரு வழியாக மதியம் 12.30 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு சென்றனர்.

 அடுத்த மாதம் 5-ம் தேதி ராமானுஜருக்கு தேர் திருவிழா நடைபெறவுள்ளது.

 ஸ்ரீபெரும்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதிகேசவ பெருமாள் ஆலய தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

* அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : நந்தீஸ்வரர்
  -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் -
  ஊர் : திருநந்திக்கரை
  மாவட்டம் : கன்னியாகுமரி
  மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:
   
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  

பிரகாரத்தில் கணபதி, விஷ்ணு, சாஸ்தா, நாகர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.

தலபெருமை:
   
 
பொதுவாக பிரகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர்.

சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலும் ஒன்று.

காளையை சிவபெருமான அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை  அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது.

நட்சத்திர மண்டபம் : இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின்  அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்குளும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.

பரசுராமர் தன் தாயைக் கொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது தாயைக்கொன்ற பாவம் தீர பரசுராமர் நந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து இங்குதான் அவரது பாவம் நீங்கியது.

தல வரலாறு:
   
 
ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோயிலுக்கு வந்து காளையை அடக்கும்பிடி சிவனிடம் வேண்டினர்.

சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார்.  காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது.

இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது.

சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். 
 
திருவிழா:
   
  மார்கழி திருவாதிரை,மகா சிவராத்திரி, சோமவாரத்திலும், பிரதோஷ நாளிலும் விசேஷ பூஜைகள் உண்டு.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பட்டினத்தார் - தேனீயைப் பாருங்கள்!

* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.

வினாடி வினா :

வினா - முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார் ?

விடை - C.ராஜகோபாலாச்சாரி (1948-50)  

இதையும் படிங்க :

மனதில் பாரம் இல்லையென்றால் "செஞ்சுரி' அடிக்கலாம்

இதய சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம்: மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர், எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக, முகமூடி அணிந்தவர்களாக உள்ளனர். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் உள்ளனர். அடுத்து, அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக உள்ளனர். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக் கூடாது. இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி பாதிக்கிறது. மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். தொழிலை சுமையா நினைக்கக் கூடாது. மன மகிழ்ச்சியுடன் 20 மணி நேரம் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே, கஷ்டப்பட்டு இரண்டு மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால், இதய பாதிப்பு நிச்சயம் வரும்.மன அழுத்தத்தைக் குறைக்க, தியானமும், யோகாசனமும் நல்ல வழிகள். உடம்பில் அனைத்து உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பது தியானம். ஒரு மனிதன், 100 வருடங்கள் வாழ, வருடத்திற்கு, 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது, தினமும், 15 - 20 நிமிடம் யோகா போதும். சர்க்கரை, 100ஐ தாண்டாது; கொலஸ்ட்ரால், 100ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால், உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது; மனதிலும் பாரம் இருக்கக் கூடாது.




நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி,சமாச்சர், தின மலர்.

-- 

No comments:

Post a Comment