Saturday, April 2, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 02 , 2011.


முக்கியச் செய்தி :

தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதம் அதிகரிப்பு: இந்திய அளவில் 13-வது இடம்

சென்னை: தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தை தக்க வைத்துள்ளது. 

பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் விகிதம் உள்ளது. இதுவே கடந்த 2001-ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்களாக இருந்தது.

இந்திய மக்கள் தொகை 17.64 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மகக்ள் தொகை 15.60 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் உள்ள பெண்களை விட 1 லட்சத்து 78 ஆயிரத்து 784 ஆண்கள் அதிகம் உள்ளனர். 

குழந்தைகள் எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்கள் உள்ளனர்.கடந்த 2001-ம் ஆண்டில் தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். ஆனால் தற்போது 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 பேர் தான் இருக்கின்றனர். 

இது தவிர தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவு விகிதத்தில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.

உலகச் செய்தி மலர் :

* சிரியாவில் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள்–அதிபர் ஆஸாத்திற்கு நெருக்கடி

டமாஸ்கஸ்: அவசர நிலை பிரகடனத்தை விலக்கிக் கொள்ளாததைக் கண்டித்து சிரிய அதிபர் ஆஸாத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை பேரணி நடத்துமாறு சிரியா கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

தாங்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள சதுக்கங்களில் கூடி அதிபருக்கு எதிராக போராட வேண்டும் என பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிரியா புரட்சி 2011 எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 15 – ம் தேதி தாரா நகரில் அதிபருக்கு எதிரான புரட்சியை பெயரிடப்படாத இயக்கம் தொடங்கியது. தற்போது கடற்கரை நகரமான லடாக்கியா வரை கிளர்ச்சி பரவியுள்ளது. 

11 ஆண்டுகாலமாக அதிபர் பதவி வகிக்கும் ஆஸாத்திற்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகாலமாக அவசர நிலை பிரகடனம் அமுலில் இருக்கும் சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த மூன்று வாரங்களாக புரட்சியாளர்கள் போரடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* லிபியா: நேட்டோ தாக்குதலில் 7 அப்பாவிகள் பலி  

லிபியாவில் அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்திவரும் அந்நாட்டு இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய நேட்டோ விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரீகா என்ற நகருக்கு அருகிலுள்ள ஜாவியா எல் அர்கோபி எனும் கிராமத்தில் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி ஆதரவு படையினரை குறி வைத்து நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 25க்கும் மேற்பட்ட மக்கள் காயமுற்றவதாகவும் சுலைமான் ரிபார்டி எனும் மருத்துவர் பிபிசி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

நேட்டோ விமானம் வீசிய குண்டு ஒன்று வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற வாகனத்தைத் தாக்கியதால், அதிலிருந்து வெடி பொருட்கள் வெடித்தனால் இச்சம்பவம் நடந்ததாக சுலைமான் கூறியுள்ளார்.

இதற்கிடையே, போர் நிறுத்தத்திற்கு கடாஃபி ஒப்புக்கொண்டு, எல்லா நகரங்களிலும் இருந்து இராணுவம் வெளியேறினால் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் கூறியுள்ளார்.

* இந்தியர்களை விமர்சிக்கும் நாவல்: தடுக்க மலேசியா மறுப்பு

கோலாலம்பூர், ஏப்.1- பூர்வீக இந்தியர்களை விமர்சிக்கும் நாவலை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.

"இன்டர்லாக்" என்னும் தலைப்பில் வெளியான நாவலுக்கு மலேசியாவில் வாழும் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நாவல் தங்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று அவர்கள் புகார் கூறினர்.

இந்நிலையில், திடீரென அந்த நாவல் மலேசிய பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, பூர்வீக இந்தியர்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த பிரச்னை குறித்து ஆராய குழு ஒன்றை மலேசிய அரசு அமைத்தது.

நாவலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் நீக்க அக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த நாவலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மலேசிய அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதீன் யாஸின் கூறுகையில், "சர்ச்சைக்குரிய பகுதியை நீக்குவது என்பது தான் இறுதி முடிவு. இதற்கு மேல் எத்தகைய கோரிக்கைக்கும் பணிய மாட்டோம்." என்றார்.

* இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: கனடாவில் தேர்தல் பிரசாரம்

டொரன்டோ, ஏப்.1- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், தனது தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.

கனடாவில் மே 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இது அந்நாட்டின் 41-வது நாடாளுமன்றத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டும், 2013-ல் இந்தியாவுடனும் செய்து கொள்ளப்படும் என்று ஹலிபேக்ஸ் என்னுமிடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்தார்.

"கனடா ஒரு வர்த்தக நாடு. எனவே தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் வெளிநாட்டு சந்தையை விரிவுபடுத்துவதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வந்தோம்." என்றும் அவர் கூறினார்.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், 2006-ல் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். இந்நிலையில், 2013-ல் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தில் தற்போது அவர் முக்கியக் கருத்தாக கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கிரிக்கெட் வெற்றி ராணுவத்தினருக்கு காணிக்கை: ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி

shavindra.jpg

கொழும்பு, ஏப்.1- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால், போரில் உயிரிழந்த இலங்கை ராணுவத்தினருக்கு காணிக்கையாக அமையும் என்று ஐநாவுக்கான அந்நாட்டுப் பிரதிநிதி சவீந்திர சில்வா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இவர் முக்கியப் பங்கு வகித்தவர் என்று கூறப்படுகிறது.
கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் ஒரு கிரிகெட் போட்டியை நடத்துவதற்கு கூட ஐசிசி மறுத்துவிட்டது. புலிகளை அழிக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டிருந்தால் இலங்கைக்கும் அதே நிலைதான் வந்திருக்கும். மும்பையில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்து இலங்கை அணி வெற்றி பெற வாழ்த்துகள். இதன் மூலம் வெளிநாடுகளில் இலங்கையின் கெளரவத்தை பெரிய அளவில் உயர்த்த முடியும். மேலும், அந்த வெற்றி, போரில் உயிரிழந்த இலங்கை ராணுவத்தினருக்கு காணிக்கையாக அமையும்." என்றும் சவீந்திர சில்வா கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* சிபிஐ வசம் சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு

டெல்லி: முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தியிருந்தது. மேலும், அவரது வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தியது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 19-ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் திடீர் தற்கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சாதிக் பாட்சாவுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சாதிக் பாட்சாவின் மரண வழக்கை தாங்கள் எடுத்துக் கொண்டதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

* சாதிக் பாட்சா தற்கொலைக்கு 2ஜி ஊழல் காரணமாகயிருக்கலாம்: ம.பு.க.  

மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலைக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பு காரணமாகயிருக்கலாம் என்று ஐயப்படுவதாக மத்திய புலனாய்வுக் கழகம் கூறியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குசேகாவ்ன் பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் இராஜீவ் அகர்வால் விசாரணைக் காவலை மேலும் 3 நாட்கள் நீடிக்க வேண்டும் என்று கோரி டெல்லியிலுள்ள மத்திய புலனாய்வுக் கழகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் இவ்வாறு ம.பு.க. வழக்குரைஞர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி பண பரிமாற்றம் செய்துள்ளது தொடர்பாகவே இராஜீவ் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ள டி.பி.ரியால்டி நிறுவனத்திற்கும், சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்துள்ள பண பரிமாற்றமும், சாதிக் பாட்சாவின் தற்கொலையும், அவருடைய வாகன ஓட்டுனர் காணாமல் போயிருப்பதும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக கருதுகிறோம்” என்று கூறியுள்ள ம.பு.க. வழக்குரைஞர், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் பினாமி நிறுவனமே கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்று ஐயப்படுவதாக சட்ட அமலாக்க இயக்ககம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராக ஆ.இராசாவின் மனைவி இருப்பதும், அந்நிறுவனத்தோடு இராஜீவ் அகர்வாலுக்குத் தொடர்பு இருப்பதும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரை மேலும் 3 நாட்களுக்கு விசாரணைக் காவலை நீடிக்க வேண்டும் என்று ம.பு.க. கோரியது.

ம.பு.க. வழக்குரைஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, “இந்த வழக்கு மிகவும் முக்கியமானது, இதிலுள்ள குற்றம் மிகப் பெரியது, இவ்வழக்குத் தொடர்பான புலனாய்வு மிகவும் சிக்கலானது, கடுமையானது. இப்படிப்பட்ட சூழலில் அகர்வாலின் விசாரணைக் காவல் நீட்டிப்பு அவசியமானது என்றே கருதுகிறேன்” என்று கூறி, காவல் நீட்டிப்பு அளித்துள்ளார்.

* டாடா கோரிக்கை குறித்து தினமும் விசாரணை: உச்சநீதிமன்றம்

hc.jpg

புதுதில்லி, ஏப்.1- நீரா ராடியாவுடனான தனது தொலைபேசி உரையாடல்களை இணையதளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை கோரி டாடா அளித்த மனு மீது தினமும் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் தரகர் நீரா ராடியா - தொழிலதிபர் ரத்தன் டாடா இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை வருமான வரித்துறை ரகசியமாக பதிவு செய்தது. சமீபத்தில், அந்த உரையாடல்கள் இணையதளங்களிலும் சில தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

இதுதொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசுக்கும், உரையாடல்களின் எழுத்து வடிவத்தை வெளியிட்ட இரு ஆங்கில இதழ்களுக்கும் டிசம்பர் 2-ம் தேதி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், டாடாவின் கோரிக்கை குறித்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை ஏப்ரல் 19-ம் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தொலைபேசி உரையாடல்களை வெளியிடுவது என்பது தனது அந்தரங்க விவகாரத்தில் தலையிடுவதாகும் என்றும், பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு எதிரானது என்றும் ரத்தன் டாடா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

* உலகக் கோப்பை: இந்தியாவுக்காக லதா மங்கேஷ்கர் உண்ணாவிரதம்

01latha.jpg

புதுதில்லி, மார்ச்.1:  பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியின்போது இந்தியாவுக்காக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

தற்போது தனது அபிமான வீரர் சச்சின் டெண்டுல்கர் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறார்.

அரை இறுதிப் போட்டி முழுவதையும் நான் பார்த்தேன். மிகவும் பதட்டமாக இருந்தது. இந்தியா விளையாடும்போது என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சில மூட நம்பிக்கையை பின்பற்றுவர். நானும், குடும்பத்தில் உள்ளவர்களும் அரை இறுதிப் போட்டியின்போது சாப்பிடவும் இல்லை. தண்ணீரும் அருந்தவில்லை. இந்தியாவின் வெற்றிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்தேன். இந்தியா வெற்றிபெற்றதும்தான் உணவு உட்கொண்டோம் என லதா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இறுதிப் போட்டியைக் காண நேரில் செல்வீர்களா என்ற கேள்விக்கு, ஸ்டேடியங்களுக்கு நான் செல்ல மாட்டேன். வீட்டில் இருந்தபடியே போட்டியைக் காண்பேன் என அவர் கூறினார்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே திறமையானவை. கிரிக்கெட்டில் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

* பிரஸார் பாரதி தலைவர் சஸ்பெண்ட் விவகாரம்: சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

prasar.jpg

புது தில்லி, ஏப்.1: பிரஸார் பாரதி தலைமை செயல் அதிகாரி பி.எஸ். லல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பான உத்தரவை தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்தது. இந்த அறிக்கை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு தாக்கல் செய்யும் அறிக்கைக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று லல்லிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் அரசுக்கு மேலும் 4 வார கால அவகாசம் அளித்து இந்த வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளப்படும் என்றார் கபாடியா.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லல்லி, அரசு நிறுவனமான பிரஸார் பாரதியின் தலைமை நிர்வாகியாக இருந்தபோது செய்த முறைகேடுகள் விவரம் குறித்த அறிக்கையை அளிக்குமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். லல்லி சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார். பிரஸார் பாரதி நிறுவனத்தின் தலைவராக 2006-ல் பொறுப்பேற்ற லல்லி, இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளதால் இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

1971-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சிபெற்றார். இவர் பிரஸார் பாரதி நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) இருந்தபோது பெருமளவில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவரது சஸ்பெண்ட் உத்தரவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் டிசம்பர் 21-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

பிரஸார் பாரதி நிறுவனத் தலைமை நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று பிரஸார் பாரதி சட்டத்தில் உள்ளது. இவ்விதம் குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து விசாரித்து பின்னர் செயல்படுத்த வேண்டும் என்பது விதியாகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த எஸ்ஐஎஸ் நிறுவனத்துக்கு காமன்வெல்த் போட்டியின் நேரடி ஒளிபரப்புக்கு உரிமம் அளித்ததில் முறைகேடு மற்றும் நிதி முறைகேடு, நிர்வாக முறைகேடு ஆகிய காரணங்களுக்காக 67 வயதான லல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பிரஸார் பாரதி நிறுவனம் 1997-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில் இந்நிறுவனத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை எதிர்நோக்குவது இதுவே முதல் முறையாகும்.

நிதி முறைகேடு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சலுகை காட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் இவர் மீது சுமத்தியுள்ளது.

* பாகிஸ்தானியர்களுக்கு தாராள "விசா': சிதம்பரம்

pchidambaram.jpg

புதுதில்லி, ஏப்.1: இந்தியா, பாகிஸ்தானிடையே உறவு மேலும் வலுப்பட மக்களுக்கு இடையிலான சந்திப்புகள் அதிகம் நடக்க வேண்டும்; அதற்காக விசா விதிகளில் மேலும் சில தளர்வுகளை அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தை இந்தியா ஆக்கப்பூர்வமாக அணுக முடிவு செய்திருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

புதுதில்லியில் நிருபர்களிடையே வெள்ளிக்கிழமை பேசுகையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
"விசா விதிகளை ஏற்கெனவே தளர்த்தியிருக்கிறோம்; ஆனால் உள்துறைச் செயலர்கள் இடையே தில்லியில் நடந்த 2 நாள் கூட்டத்தில் இதை மேலும் தளர்த்த இரு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு செயல்குழுவை நியமிக்கலாம் என்ற யோசனை கூறப்பட்டது. அதை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்' என்றார் சிதம்பரம்.

பத்திரிகையாளர்கள், வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள், சிகிச்சைக்காக பாகிஸ்தானிலிருந்து இந்தியா வருகிறவர்கள் ஆகியோரின் விசாக்களைத் துரிதமாகப் பரிசீலித்து அனுமதி வழங்கவும் அவர்கள் இந்தியாவில் விரும்பிய ஊர்களுக்குச் சென்று பார்க்கவும் விரும்பிய காலம்வரை தங்கி தங்களுடைய பணிகளை முடித்துக்கொள்ளவும் சற்றே தாராளமான அனுமதிகளை வழங்கும் அளவுக்கு விசாக்களை வழங்க வேண்டும் என்ற கருத்து உள்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

நோயாளிகள் சிகிச்சைக்காக வரும்போது இந்தியாவில் உள்ள ஒரு நகருக்கு என்று விசா வாங்கி வந்தாலும், இங்கு வந்த பிறகு நோயின் தன்மை மருத்துவ நிபுணர்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் வேறு நகரங்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டிவந்தால் அவ்வாறு செல்வதற்கு விசா ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

விசா கோரும் விண்ணப்பங்கள் மீது இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகமே விரைந்து முடிவு எடுக்கலாம் என்றும் தாராளமான விசாக்களை வழங்க அங்கேயே தீர்மானிக்கலாம் என்றும் கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சந்தேகம் இருந்தாலன்றி சாதாரண மக்களின் விசா விண்ணப்பங்களைப் போலீஸாரின் அறிக்கைக்காகத் தாமதப்படுத்தத் தேவையில்லை என்ற கருத்தும் கூறப்பட்டிருக்கிறது.

இதே அணுகுமுறை இந்தியாவிலிருந்து விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தொடர்பாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

மாநிலச் செய்தி மலர் :

* தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது- உயர்நீதிமன்றம்   

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாகன சோதனையில் ஈடுப்ட்டு வருகிறது. இந்நிலையில் வாகன சோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்குத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாகன சோதனைக்கு தடை விதிக்க கோரி தில்லை நடராசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமியும், தேர்தல் அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால், அதை உறுதி செய்த பிறகே தேர்தல் ஆணையம் வாகன சோதனை செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தர விட்டனர்.

இந்த இடைக்கால உத்தரவை நீக்கக் கோரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்பு ரோஸ், பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட குழு விசாரித்தது. இதனையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவை நீக்குமாறு தீர்ப்பளித்தனர்.

"தமிழக சட்டசபை தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்துவதற்கு தலைமை தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. தேர்தல் முடியும் வரை பணம் பட்டுவாடா மற்றும் பொருள் வினியோகம் செய்வதை அனுமதிக்க முடியாது. நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவு கணக்கை கண்காணிக்கும் வழிமுறைகளை தேர்தல் கமிஷன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

வாகன சோதனை நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதே நேரத்தில் சோதனையின் போது பிடிபடும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காட்டினால் அவற்றை பறிமுதல் செய்யக்கூடாது. அவற்றை உரியவர்களிடம் தேர்தல் கமிஷன் திருப்பி கொடுக்க வேண்டும். பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளை வீடியோ கருவியில் பதிவு செய்ய வேண்டும்." என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

* வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு

ev.jpg

சென்னை, ஏப்ரல் 1: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரத்தில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.
வாக்குப் பதிவில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் பென்னாகரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றது. அப்போது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பேரவைத் தேர்தலிலும் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. இது ஒன்றும் புதிதல்ல என அவர்கள் கூறினர்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

கிழங்கு வகை காய்கறிகளில் உள்ள சத்துக்கள்

01-roots200.jpg

இயற்கை மருத்துவம்–கிழங்கு வகை காய்களில் கிடைக்கும் அதிசய சத்துக்கள்இயற்கைமருத்துவம் – கிழங்கு வகை காய்களில் கிடைக்கும் அதிசய சத்துக்கள்

உணவே மருந்து என்பது ஆன்றோர் வாக்கு மண்ணில் விளையும் காய்கறிகள் மகத்தான சத்துக்களை கொண்டுள்ளது. பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள்:

வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்குவகை காய்கறிகள் மாவுச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன. தினமும் உட்கொள்ளும் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு: உலகின் பெரும்பாலான மக்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உருளைக்கிழங்கில் அரிசியில் உள்ளதை விட அதிகமான சத்துக்கள் உள்ளன. இதில் மாவுச்சத்தும் உயிர் சத்துக்களும் உள்ளன. இரும்பு மற்றும் புரதச்சத்தும் இந்த கிழங்கில் காணப்படுகின்றன

பீட்ரூட்: இனிப்புதன்மை அதிகம் கொண்ட இந்த காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதிக அளவு குளுக்கோஸ் சத்து நிறைந்தது. ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.

கருணைக்கிழங்கு: காரும் கருணை காரா கருணை என இரு வகை உண்டு. பிடிகிழங்கு காரும் தன்மையுடையது. காராக்கருணை சேனைக்கிழங்கு வகையைச்சார்ந்தது. இதில் வைட்டமின் சத்துக்களும், மாவு மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளன.

சேப்பைக்கிழங்கு: நான்கு வகை சேப்பைக்கிழங்குகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ.பி. என்ற உயிர்சத்தும் இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன.

மரவள்ளிக்கிழங்கு: இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளன.

பனங்கிழங்கு: சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், சில உயிர்சத்துக்களும் உள்ளன. மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.

வாழைக்கிழங்கு: வாழைத்தண்டுக்குள்ள மருத்துகுணம் இதற்கு உண்டு சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் நீங்கும். சிறுநீரிலும், வயிற்றிலும் தங்கியுள்ள கற்களை கரைத்துவிடும் ஆற்றல் இந்த கிழங்கிற்கு உண்டு.

 வர்த்தகச் செய்தி மலர் :

* அமெரிக்கர்களைக் 'காத்த' இந்திய நிறுவனங்கள்!

டெல்லி: உலகப் பொருளாதார பெரு மந்தத்தின் பிடியில் அமெரிக்கா சிக்கித் தவித்த நேரத்தில், 2585 அமெரிக்கர்களின் வேலைகளைக் காப்பாற்றின அங்குள்ள இந்திய நிறுவனங்கள், என சிஐஐ (Confederation of Indian Industry) தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள 35 டாப் இந்திய நிறுவனங்கள் அந்நாட்டின் 40 மாகாணங்களைச் சேர்ந்த 60000 பேருக்கு வேலை தந்துகொண்டிருப்பதாகவும் இந்த அமைப்பின் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய நிறுவனங்கள், அமெரிக்க மண்ணில் எந்த அளவுக்கு வேரூன்றி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைநிற்கின்ற என்பது குறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த விழாவில் பேசிய அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* 2வது உலகக் கோப்பையைப் பெற ஒரே ஒரு வெற்றிக்கு காத்திருக்கும் டோணி அன் கோ

மும்பை: இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பாக்கி. கிரிக்கெட் உலகின் உச்சிக்கு மீண்டும் இந்தியாவைக் கொண்டு செல்ல முடியும் என்பதால், டோணி தலைமையிலான இந்திய அணி பெரும் ஆவலுடன் வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழையக் காத்திருக்கிறது.

1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை, அதன் பிறகு ஒரு முறை வெல்வதற்கான வாய்ப்பு கை கூடி வந்தபோதும் கூட அதை நழுவ விட்டு விட்டது இந்தியா. இந்த நிலையில் தற்போது 2வது முறையாக, மொத்ததில் 3வது முறையாக அந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.

இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பாக்கி. அது மட்டும் கிடைத்து விட்டால் டோணியும் அவரது சிஷ்யர்களும் உலகத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். இந்தியாவோ இரண்டாவது முறையாக தனது கிரிக்கெட் பிள்ளைகளை உச்சி மோர்ந்து வாழ்த்த தயாராகும்.

நாளைய போட்டியில் இந்தியா பெரும் தன்னம்பிக்கையுடன் இலங்கையை சந்திக்கவுள்ளது. அரை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த பாகிஸ்தானை தனது பவுலிங்கால் அடித்து நொறுக்கிய இந்தியாவின் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவும் கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்து குஷியடைந்தது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற பெரும் நம்பிக்கை நாடு முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது. மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மிகச் சிறந்த பெருமையாக இந்த வெற்றி அமையும் என்ற நம்பிக்கையும் இந்தியர்களிடம் உள்ளது.

கபில் தேவ் படைத்த சாதனைக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு நாள் போட்டியில் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இருப்பினும் டுவென்டி 20 உலகக் கோப்பையை டோணி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று வந்தது ஆறுதலைக் கொடுத்தது.

அதேசமயம், டோணி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் தவிப்பைத் தணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. கபில்தேவ், கங்குலிக்குப் பின்னர் சிறந்த கேப்டனாக திகழ்கிறார் டோணி. அவர் எள் என்றால் எண்ணெயாக நிற்கிறார்கள் அவரது வீரர்கள். எனவே இந்த முறை உலகக் கோப்பையை கண்டிப்பாக தட்டிச் செல்லும் இந்தியா என்பது டோணி ஆதரவாளர்களின் கருத்து.

நாளைய போட்டியில், லேசான மாற்றம் இருக்கும். ஆசிஷ் நெஹ்ராவுக்குக் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் ஆட மாட்டார் என கேப்டன் டோணி அறிவித்துள்ளார். அவருக்குப் பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

நாளைய போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் செல்ல இந்திய வீரர்கள் மும்முரமாக உள்ளனர்.

* ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் - கரூர்.

மூலவர் : பாலசுப்பிரமணியர்
 
  தீர்த்தம் : காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தம்
  -
         பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
        ஊர் : வெண்ணெய் மலை
  மாவட்டம் : கரூர்
  மாநிலம் : தமிழ்நாடு

தல சிறப்பு:
   
  தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணெய்மலை முருகன் கோயில் ஆகியவற்றில் மட்டுமே கருவூரார் சித்தருக்கு சன்னதிகள் உள்ளன.  
   
மூர்த்தி, தீர்த்தம் மற்றும் தலம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து பாலசுப்பிரமணியனை பணிந்தால், வளமான வாழ்க்கை அமைகிறது.

பிரார்த்தனை
   
  மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லா குறை தீர்வதுடன், தோஷங்களும் தீர்கிறது.

தலபெருமை:
   
  யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறிய செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்து கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் யந்திரம் அமைத்தார் 

தல வரலாறு:
   
  முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்கு பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது. பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். இதற்கு தீர்வாக வஞ்சிவனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார்.இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோக பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது. அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலை பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது. இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.

தல வரலாறு:
   
 
முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்கு பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது. பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். இதற்கு தீர்வாக வஞ்சிவனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார்.இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோக பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது. அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலை பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது. இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.

திருவிழா:
   
  கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் திங்கட்கிழமைகள், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்கள் சிறப்பு தினங்களாக வழிபடப்படுகிறது.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது? - ரமணர்   

அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது. எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை. ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, 'ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. 

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால், ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில் உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும். 'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்!

ரமணாச்ரமத்தில் இருந்துகொண்டே, 'ரமணாச்சரமம் செல்வதற்கு எந்தெந்த வழிகய் உள்ளன? அவற்றுள் எது சிறந்த சுலப வழி?' என்று கேட்பதற்கு ஒப்பானதே இந்தக் கூற்று! நீங்கள் செய்ய வேண்டியது இதுவே, 'உடலை நான்' என்கிற எண்ணத்தைக் கைவிடுக. புறப் பொருட்கள், தோற்றங்கள் பற்றிய எண்ணங்கள், அதாவது, அநாத்ம விஷயங்கள், யாவற்றையும் தவிர்க்கவும். புறப் பொருட்களைப் பற்றிய எண்ணங்களில் மனம் வெளிமுகமாக மேயத் தொடங்கும்போதே அதை நிறுத்தி ஆன்மாவில் - அல்லது மெய்யான நான் என்கிற உள்ளுணர்வில் - பதிய வையுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இம்மட்டுமே. 

மனம் முயற்சியின்றியே விருத்தியற்ற நிலையை சகஜமாக அடையும் வரையில், அதாவது அகங்கார-மமகாரங்கள், முற்றிலுமாக நசிக்கும் வரையில் சாதனையைத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

வினாடி வினா :

வினா - உலகத்தின் உயரமான பெட்ரோல் நிரப்பும் இடம் எது ?

விடை - லே, லடாக்.

இதையும் படிங்க :

நிறைவான வாழ்விற்கு அழகான பொம்மைகள்: 

கணவரை இழந்த பல பெண்களுக்கு ஆதரவு தரும் ராசாத்தி: என் கணவர் இறந்த பின், அந்த தனிமையை என்னால், தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், தவறான முடிவு எடுத்துவிடுவேனோ என்று பயந்தேன். இந்த நிலையில் தான், கோல்கட்டாவில், உள்ள அன்னை தெரசா இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பிரச்னைகளைக் களையவும், அவற்றை எதிர்த்து நிற்கவும் மனோதைரியம் கிடைத்தது. ஒரு முறை அன்னை தெரசா இல்லத்திற்கு அருகில் உள்ள, மென் பொம்மைகள் தயாரிக்கும் கம்பெனியை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான், நாமும் இதே போல் தொழிலை தொடங்கலாம் என்று தோன்றியது. உடனே நான் கும்பகோணம் வந்து, தொழில் தொடங்க, வங்கியில், 22 லட்ச ரூபாய் கடன் பெற்றேன். முதலில் மூன்று லட்சம் ரூபாய் பணம் கட்டி கணவனால், கைவிடப்பட்ட பெண்களை கோல்கட்டாவிற்கு அனுப்பி, பொம்மை தயாரிப்பில் பயிற்சி எடுத்துக்கொள்ளச் செய்தேன். பின், அவர்களைக் கொண்டு இங்குள்ள பெண்களுக்கு பயிற்சி கொடுத்தேன். இன்று ஏராளமான பெண்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாங்கள் இங்கு ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் பொம்மைகள் தயாரிக்கிறோம். பொம்மைகள் தயாரித்தபின், தரத்தை பரிசோதிப்போம். எங்கள் பொம்மைகள் பெரும்பாலும், ஹைட்ராலிக் காட்டன்ல தயாரிக்கிறோம். தண்ணீரில் நனைத்தாலும் பஞ்சுகள் வெளியில் வராது. அதனால் தான் எங்கள் பொம்மைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்தப் பொம்மைகள் இந்தியாவில், 100 ரூபாய் வரை விற்கிறோம். இதே பொம்மைகள் பிரிட்டன், அமெரிக்கா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் 500 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.


வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!



நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.

-- 

No comments:

Post a Comment