Wednesday, April 20, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 20 , 2011.


முக்கியச் செய்தி :

19-siddhartha-mukherjee.jpg

அமெரிக்க இந்தியர் சித்தார்த் முகர்ஜி புத்தகத்துக்கு புலிட்சர் விருது!

பாஸ்டன்: இந்திய-அமெரிக்கரான சித்தார்த் முகர்ஜி எழுதிய கேன்சர் பற்றிய புத்தகத்துக்கு 2011-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது கிடைத்துள்ளது.

சித்தார்த் முகர்ஜியின் புற்றுநோய் தொடர்பான 'The Emperor of All Maladies: A Biography of Cancer' என்ற புத்தகத்துக்கு நாவல் அல்லாத பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது.

10 ஆயிரம் டாலர் பரிசுப் பணம் இந்த விருதுடன் தரப்படும். இந்தியாவில் பிறந்த முகர்ஜி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

நேச்சர், த நியு இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின், த நியூயார்க் டைம்ஸ் மற்றும் த நியு ரிபப்ளிக் பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஆராய்ச்சியை மேம்படுத்த சென்னையில் மெகா அறிவியல் நகரம்

சென்னை: ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் சென்னையில் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்களை அடக்கிய மெகா அறிவியல் நகரம் உருவாக்கப்படவிருக்கிறது. இதற்காக முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டை அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த விளங்கும் மாநிலமாக்கத் திட்டமிட்டு சென்னையில் மெகா அறிவியல் நகரம் அமைக்க முடிவு செய்தார். இது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெகா அறிவியல் நகரம் அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் குழு ஒன்று கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.தங்கராஜ், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் க.கணேசன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மன்ற துணைத்தலைவர் எம்.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சென்னை மெகா அறிவியல் நகரம் உருவாக்குவது பற்றிய இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., தரமணியில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி நிறுவனங்கள், சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகம், தரமணி வளாகம், கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரம், பிர்லா கோள் அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையம் உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும்.

அத்தனை நிறுவனங்களில் உள்ள வசதி வாய்ப்புகளை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தி ஆராய்ச்சி பணியை மேம்படுத்த இந்த மெகா அறிவியல் நகரம் பயன்படும். இத்தனை நிறுவனங்களையும் இணைப்பதுதான் சென்னை மெகா அறிவியல் நகரம் ஆகும்.

மெகா அறிவியல் நகரத்திற்காக 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெரிய கூட்டரங்கு பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. அது தவிர சில மையங்களும் கட்டப்படவுள்ளன

உலகச் செய்தி மலர் :

* இறுதி கட்டப்போரில் 40,000 தமிழர்கள் படுகொலை: ஐ.நா. அறிக்கை

கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் 40,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள் இராணுவத்தினருக்கும் இடையேயான தமிழ்ஈழ இறுதி கட்டப் போர் நடந்தது. அப்போது இலங்கை இராணுவம் ஏராளமான தமிழர்களை கொன்று குவித்தது. இந்த போர்க் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா.சபை ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் அறிக்கை சமர்பித்தது.

அந்த அறிக்கையின் சில பகுதிகள் லீக் ஆகியுள்ளன. அதில், இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரில் இனப் படுகொலை நடந்ததுள்ளது. இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்துள்ளது. சுமார் 40,000 தமிழர்களை ராணுவம் கொன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதை இலங்கை அரசு மறுப்பதுடன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையை எதிர்த்து பேரணி-ஐ.நா. எச்சரிக்கை:

இந் நிலையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபக்சே பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு ஐ.நா. சபை எதிர்ப்பும் எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐ.நாவின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், ஐ.நாவுக்கு எதிரான ராஜபக்சேவின் சவாலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. கொழும்பி பணியாற்றும் ஐ.நா. அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

* அணு ஆயுத ஏவுகணை பாகிஸ்தான் சோதனை

அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் ஏவுகணை பரிசோதனையை வெற்ற்கரமாக நடத்தியுள்ளது. 

புதிதாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஹட்ஃப் 9 ரக ஏவுகணை இன்று ரகசிய இடம் ஒன்றில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 கிலோமீட்டர் தூரம்வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்துசென்று மிக துல்லியமாக தாக்கக்கூடியவை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் இதுபோன்று குறுகிய தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும் அடிக்கடி பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* எரிசக்தித் துறையில் இந்தியா-துபை இணைந்து செயல்பட வேண்டும்: கலாம்

kala.jpg

துபை, ஏப்.19: எரிசக்தித்துறையில் இந்தியாவும்- துபையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

துபையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கலாம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சுகளை "கல்ஃப் நியூஸ்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கலாம் கூறியிருந்ததாவது: எரி சக்தித்துறையில் ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் அமல்படுத்துதல் பிரிவில் இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இதன்மூலம் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடுகளை சமாளிக்க முடியும். அதேசமயத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிசக்தித்துறையில் இந்த இரு நாடுகளும் ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் வர்த்தப் பிரிவில் ரூ.3150 கோடி அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். இத்துறையில் அரசு, தனியார் நிறுவனங்கள், அகாதெமி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியா, துபையைச் சேர்ந்த நிறுவனங்கள், மற்ற ஐக்கிய அரசு நாடுகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இத்துறையில் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். இதற்கு இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இவ்விரு நாடுகளும் எரிசக்தித்துறையில் சுதந்திரமான நிலையை அடைய முடியும்.

இந்தியாவும், துபையும் முதல் கட்டமாக இத்துறையில் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். இதற்காக இரு நாடுகளும் தலா ரூ.450 கோடி ஒதுக்கலாம். இவ்வாறு செய்யும்பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் இத்துறையில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என்று கலாம் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒபாமாவின் வருமானம் குறைந்தது

வாஷிங்டன், ஏப்.19: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வருமானம் கடந்த ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது. 2010-ம் ஆண்டில் அதிபரின் வருமானம் 17 லட்சம் டாலராகக் குறைந்துள்ளது. 2009-ல் ஒபாமாவின் வருமானம் 55 லட்சம் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஒபாமாவும் அவரது மனைவி மிஷேல் ஒபாமாவும் இணைந்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் அவர்களது ஒட்டுமொத்த வருமானம் 17,28,096 டாலராக இருந்தது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் ஜே கார்னி தெரிவித்தார்.

அதிபரின் வருமானத்தில் பெருமளவு அவரது புத்தக விற்பனை மூலம் கிடைப்பதாகும். அரசுக்கு அதிபர் வரியாக செலுத்திய தொகை 4,53,770 டாலராகும். மொத்த வருமானத்தில் 14.2 சதவீத தொகையை நற்பணிகளுக்கு இவர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர். இந்த வகையில் 2,45,075 டாலர் நன்கொடை 36 அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மிக அதிகபட்சமாக ஃபிஷர் ஹவுஸ் அறக்கட்டளைக்கு 1,31,075 டாலர் அளிக்கப்பட்டுள்ளது. அதிபரின் மகள் புத்தகங்களைக் கூட இந்த அறக்கட்டளைக்கு அளித்துவிட்டதாக கார்னி தெரிவித்தார்.

அதிபரும் அவரது மனைவியும் தங்களது சொந்த மாநிலமான இலினாய்ஸிலிருந்து கிடைத்த வருமானத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அங்கிருந்து கிடைத்த வருமானம் 51,568 டாலராகும்.

துணை அதிபர் ஜோ பிடென் மற்றும் அவரது மனைவியின் வருமானம் 3,79,178 டாலராகும். 2010-ம் ஆண்டில் இவர் வரியாக செலுத்திய தொகை 86,626 டாலராகும். இவர்கள் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்த தொகை 5,350 டாலராகும்.

* ஐ.நா. பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற லிபிய அரசு உறுதி

திரிபோலி, ஏப். 19: லிபியாவில் போர்முனையில் சிக்கியுள்ள ஐ.நா. சபை பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற அந்த நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

லிபியாவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ஐ.நா. பணியாளர்கள் அங்கு சேவையாற்றி வருகின்றனர்.

ஆனால், அதிபர் கடாஃபி படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் ஐ.நா. பணியாளர்கள் போர்முனையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அப் பகுதியில் உணவு, குடிநீர், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக ஐ.நா. சார்பில் லிபிய அரசுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில், ஐ.நா. பணியாளர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்ற லிபிய அரசு உறுதியளித்துள்ளது.

* கியூபா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து காஸ்ட்ரோ ராஜிநாமா

ஹவானா, ஏப்.19: கியூபா கம்யூனிஸ்ட் கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ராஜிநாமா செய்துவிட்டார்.

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரான காஸ்ட்ரோ (84) உடல் நலக்குறைவால் அதிபர் பதவியிலிருந்து 2006ம் ஆண்டு விலகினார். இதையடுத்து கியூபா அதிபராக அவரது சகோதரர் ரெüல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றார். கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பைவிட்டு விலகிவிட்டதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், அவரே தலைவராக நீடிப்பதாக இணையதளம் தகவல் வெளியிட்டுவந்தது. இந்நிலையில் இப்போது அந்தப் பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதாக கியூபா நாட்டு இணையதளத்தில் காஸ்ட்ரோ எழுதியுள்ளார். "கியூபா டிபேட்' என்ற அந்த இணையதளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கட்சியில் வழக்கமான பொறுப்பை நான் ஏற்க மாட்டேன் என்பதை ரெüல் அறிவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 திங்கள்கிழமை நடந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்தியக்குழு கூட்டத்தில் காஸ்ட்ரோ கலந்து கொள்ளவில்லை.

84 வயதான காஸ்ட்ரோ 1965-ல் துவக்கப்பட்ட கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிபர் பதவியை துறந்தபோது, கட்சித் தலைவர் பதவியையும் தனது சகோதரர் ரெüலிடம் ஒப்படைப்பேன் என ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்திருந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்துவந்த தலைவர் பதவியை இப்போது அவர் ராஜிநாமா செய்துவிட்டார்.

தேசியச் செய்தி மலர் :

* அசன் அலி பாஸ்போர்ட்: புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு பிரதமர் அனுமதி

19-iqbal-singh200.jpg

டெல்லி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி அளித்துள்ளார்.

வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

1997ம் ஆண்டில் அலி பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடம் அமலாக்கப் பிரிவு அனுமதி கோரினர்.

இதையடுத்து இக்பால் சிங் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தை சந்தித்து விளக்கம் அளித்தார்.
  
இந் நிலையில் சிங்கை விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதல் தகவல் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

இதற்கிடையே கவர்னர் இக்பால்சிங் இன்று அல்லது நாளை டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்புவார் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் புதுவை வந்ததும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

* 5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயரும்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு உயர்நததுள்ளதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை சரிகட்ட பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு விலை உயர்வை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்பதால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என்று இந்தியன் ஆயில் கழகம் கூறியுள்ளது.

தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50 இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது. டீசலுக்கு ரூ.15.79, மண்ணெண்ணெய் விற்பனையில் ரூ.24.74 மற்றும் சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் 13ம் தேதி வெளியாகின்றன.

அதன் பிறகு உடனடியாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

* அருணாசலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 17 பேர் பலி?

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியிலிருந்து பவன் ஹான்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று 18 பயணிகள், 2 விமானிகள், 3 சிப்பந்திகளுடன் அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் நகருக்குக் கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் தினமும் இந்த இரு நகர்களுக்கு இடையே இயக்கப்படுவது வழக்கம்.

பிற்பகல் 1.15 மணியளவில் மேற்கு அருணாசலப் பிரதேசத்தின் தவாங் நகரின் ஹெலிபேட் அருகே சென்றபோது திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. 15 மீட்டர் உயரத்தில் இருந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது.

இதில் இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு இமயமலைத் தொடரில் 11,000 அடி உயரத்தில் உள்ளது தவாங். சீன எல்லையில் உள்ள இந்தப் பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் தரை இறங்கிய விமானத்தின் டயர் வெடித்தது:

இதற்கிடையே ஹைதராபாத்திலி்ருந்து சென்னைக்கு 95 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வந்தது. காலை 11 மணிக்கு அந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் ஓடு பாதையில் வேகமாக சென்று இறங்கியபின் விமானம் நிறுத்தப்படும் இடம் நோக்கி திரும்பியது.

அப்போது விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. உடனே விமானி விமானத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

* தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் வரிச் சலுகை: அரசு திட்டம் 

தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் அதனை சிக்கனமான பயன்படுத்தினாலோ அல்லது பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தினாலோ வரிச் சலுகை அளிப்பது என்கிற ஊக்கத் திட்டத்தை நீர்க கொள்கையில் சேர்க்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மத்திய நீர் வள அமைச்சகமும், திட்ட ஆணையமும் இணைந்து புதிய தேச நீர்க் கொள்கையை வகுத்து வருகின்றன. அதில் சிக்கன நடவடிக்கைக்கு வரிச் சலுகை அளிக்கும் ஊக்கத் திட்டமும் ஒரு அங்கமாக இடம் பெறும். அடுத்த ஆண்டில் இக்கொள்கை வெளியிடப்படும்.

“தொழிலகங்கள் பயன்படுத்திய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனயுடனே தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ள நீர் வள அமைச்சர் சல்மான் குர்ஷித், இப்போது அதற்கான தண்டனைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், இதற்கு மேல் சிக்கனத்தை கடைபிடிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வரிச் சலுகை அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

நமது நாட்டில் தற்போதுள்ள நீர் வளமானது ஒருவருக்கு 1,600 சதுர மீட்டர் அளவிற்குக் கிடைக்கிறது. பன்னாட்டு அளவில் 1,700 சதுர மீட்டருக்கும் குறைவான அளவை பற்றாக்குறையாக மதிப்பீடு செய்கிறார்கள். இது 1,000 சதுர மீட்டராக குறைந்தால் அதனை நீர் வறட்சி நிலையாக மதிப்பீடு செய்கிறார்கள். நமது நாட்டில் தற்போது நீர் வளத்தைத் தருகிற 20 நதிகளில் 9 நதிகள் வறண்டு கிடக்கின்றன.

எனவே, தண்ணீரை சிக்கனமாகவும், பயன்படுத்திய நீரை சுத்திகரிப்புச் செய்து பயன்படுத்துவதற்கு ஊக்கமளிப்பதற்குக் காரணம் தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதேயாகும் என்று அரசு கூறுகிறது.

உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடு நிலத்தைப் பெற்றுள்ளது. மக்கள் தொகை 16 விழுக்காடு, ஆனால் கிடைக்கும் தூய நீரில் 4 விழுக்காடு மட்டுமே இந்தியாவி்ல் உள்ளது. நமது நாட்டின் நீர் வளப் பெருக்கம் பல ஆண்டுகளாகவே வளராமல் இருக்கிறது என்று திட்ட ஆணையம் கூறியுள்ளது. நீர் ஆதாரத்தை பெருக்காமல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார வளர்ச்சி) அதிகரிக்காது என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

* ஒரு மாதத்தில் கூடுதலாக கட்டிய வருமான வரி திருப்பியளிக்கப்படும்: வருமான வரித் துறை  

தங்களுடைய வருமான வரி விவரத்தை (Tax Returns) இணையத்தின் மூலம் தாக்கல் செய்வோருக்கு, கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி ஒரு மாதத்திற்குள் திருப்பியளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் கூறியுள்ளது.

வருமான வரித் துறையின் காகித படிவங்களின் மூலம் வருமான வரி விவரம் அளிப்போருக்கு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட அல்லது பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை திருப்பியளிக்க 5 முதல் 10 மாதம் ஆகிறது என்றும், எனவே, இணையத்தின் மூலம் வருமான வரி விவரங்களை தாக்கல் செய்யுமாறும் மத்திய நேரடி வரி வருவாய் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

“வரி செலுத்துவோர் தங்களுடைய வருமான விவரங்களை இணையத்தின் மூலம் அளித்தால், அதனை வேகமாக சரிபார்த்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரி திருப்பியளிக்கப்படும்” என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 40 இலட்சம் பேருக்கு கூடுதல் வரி திருப்பியளிக்கப்பட வேண்டியிருந்தது. இவர்கள் காகித படிவங்களில் வருமான விவரங்களை அளித்திருப்பதால் அதனை பரிசீலப்பதற்கு நாட்கள் அதிகமாகின்றன. இதனால் அரசு அளிக்க வேண்டிய கூடுதல் வரி ரூ.78,000 திருப்பியளிக்கப்பட வேண்டியுள்ளது என வாரியம் தெரிவித்துள்ளது.

* அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிர முழு அடைப்பில் வன்முறை

bandhj.jpg

ரத்னகிரி, மும்பை: ஏப். 19: மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணுமின்நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.

அரசு மருத்துவமனை சூறையாடப்பட்டது, பஸ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன, முக்கியச் சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போக்குவரத்தை தடை செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஜெய்தாப்பூரில் 9900 மெகாவாட் திறன்கொண்ட அணுமின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 மின் உலைகளைக் கொண்ட இந்த மின் நிலையம், உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம், அதன்பிறகு வந்த சுனாமியால் அங்குள்ள அணுஉலைகளில் குளிர்விப்பான்கள் செயலிழந்து கதிர்வீச்சு பரவிவருவதையடுத்து, ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது.

அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சுமார் 700 பேர் சக்ரினேட் கிராமத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்ரீஸ் அப்துல் சயனேகர் என்பவர் பலியானார்.

* ஹசன் அலியை ஏப்ரல் 30-க்குள் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

பாட்னா, ஏப். 19: வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள புணே தொழிலதிபர் ஹசன் அலி கானை வரும் 30-ம் தேதிக்குள் நேரில் ஆஜர்படுத்துமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஹசன் அலி கைது செய்யப்பட்டு தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர் பாட்னாவில் இருந்து போலி பாஸ்போர்ட் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக மார்ச் 24-ம் தேதி பாட்னாவிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது போலியான முகவரியில் அவர் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

அந்த அலுவலகத்திலிருந்து ஹசன் அலி சம்பந்தப்பட்ட 97 கோப்புகள் கைப்பற்றப்பட்டதாக பாட்னா காவல்துறை கண்காணிப்பாளர் சிவதீப் லந்தேஹாட் தெரிவித்தார். 

இதையடுத்து, ஹசன் அலிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பாட்னா முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஹசன் அலிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தது. அவரை வரும் 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. ஹசன் அலி போலி பாஸ்பார்ட் பெற்றது தொடர்பாக 2010ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாட்னா போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தில் பாட்னாவின் ஆலம்கஞ்ச் பகுதியில் வசிப்பதாக ஹசன் அலி குறிப்பிட்டிருந்தார். அதற்கான போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

* ஒரிசாவில் லேசான நிலநடுக்கம்

புவனேஸ்வர், ஏப் 19:ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 2.9-அலகுகளாக பதிவான இந்த அதிர்வு, நிலநடுக்க ஆய்வு மையத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உருவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் எந்தவித உயிரிழப்பும், சேதமும் ஏற்படவில்லை.

* 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு: சிபிஐ விரைவில் துணை குற்றப் பத்திரிகை

புது தில்லி, ஏப். 19: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இந்த வார இறுதியில் சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், துணைநிலை குற்றப் பத்திரிகை ஏப்ரல் 25-க்குள் தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ உறுதியளித்துள்ளது.

அதன்படி, கலைஞர் டி.வி. மற்றும் சிலருக்கு எதிராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம் விரைவில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தரப்பினருக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறைமுகமாக லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் உஸ்மான் பல்வா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநரான மறைந்த சாதிக் பாட்சா ஆகியோர் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கலப்புத் திருமணங்களுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து: தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

sc.jpg

புது தில்லி, ஏப்.19: கலப்புத் திருமணங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடத்துவோர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநில அரசுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகம் சேர்வை என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்சு, ஜி.எஸ்.மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவின் மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

கலப்புத் திருமணங்கள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றன. ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்வோர் மிரட்டப்படுவதாகவும் அவர்களுக்கு எதிராகக் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாகவும் பல சம்பவங்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் எனக் கருதப்படுகிறது.

வரலாற்று ரீதியில் நமது நாடு பெரிய சமூக மாற்றத்தைச் சந்திக்கும் கால கட்டம் இது. இந்த நிலையில் கலப்புத் திருமணம் செய்யும் இளம் தம்பதியரை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களை இந்த நீதிமன்றம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்காது. ஏனெனில் இது பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய பிரச்னையாக உள்ளது.

நமது நாட்டில் ஜாதி என்பது ஒரு சாபக்கேடாக உள்ளது. விரைவாக சமூக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் ஜாதிப்பிரச்னை மாறிவருகிறது. நாடு எதிர்நோக்கியுள்ள பெரிய சவால்களை நாட்டுமக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகளால் மக்கள் பிரிந்துகிடப்பதை ஏற்க முடியாது. தேச நலன் கருதி கலப்புத்திருமணங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கலப்புத்திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியருக்கு மிரட்டல்கள் வருகின்றன. அவர்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து தகவல்கள் வருகின்றன. இது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்று மிரட்டுவது, துன்புறுத்துவது, வன்செயல்களில் ஈடுபடுவது போன்ற அனைத்தும் சட்டவிரோதமானவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மாநில தலைமைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறோம்.

இந்த மனுதாரர் ஆட்சேபகரமாகப் பேசியிருக்கிறார் என கருதுவதால் இவரது மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

* போபால் விஷவாயு வழக்கில் தண்டனை குறைவு: சிபிஐ

புதுதில்லி, ஏப். 19: போபால் விஷவாயு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவானது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை கூறியது.

1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்தது. சிபிஐ சார்பில் அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி ஆஜரானார்.

"தீர்வு கிடைக்காத ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாபெரும் குற்றம் இழைக்கப்பட்ட நிலையில், அதற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைந்திருக்கிறது' என்று வாஹன்வதி கூறினார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது சிபிஐயின் தவறுதான். ஆனால், இந்தத் தாமதத்தைக் காரணம் காட்டி நீதியை மறுக்கக் கூடாது. தவறுக்கு ஏற்ற தண்டனைதான் வழங்கப்பட வேண்டும் என்பது நீதிபரிபாலனத்தின் அடிப்படைக் கொள்கை என்று அவர் மேலும் கூறினார்.

போபால் விஷவாயு வழக்கில் தெரிந்தே பலருக்கு மரணத்தை விளைவிப்பது என்கிற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இது பின்னர் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் ஏற்பட்ட சாவு என்கிற சட்டப்பிரிவுக்கு குற்றச்சாட்டு மாற்றப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைத்தது. பழைய சட்டப்பிரிவுக்கே குற்றச்சாட்டை மாற்ற வேண்டும் என்று சிபிஐ தனது மனுவில் கூறியுள்ளது.

* பருவமழை இந்த ஆண்டும் சீராக இருக்கும்'

புது தில்லி, ஏப். 19: நாட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பருவமழை சீராகவும் போதுமான அளவுக்கும் பெய்யும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சர் பவன் குமார் பன்சல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு மழை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்றார்.

எனினும் நாட்டில் வடகிழக்கு பகுதியில் பருவமழை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் நீண்ட கால சராசரி மழை அளவு 98 சதவீதம் அளவு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜீத் தியாகி தெரிவித்தார்.

நீண்ட கால சராசரி மழை அளவு என்பது கடந்த 50 ஆண்டு கால மழையின் சராசரி அளவாகும். இது இப்போது 89 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்த 89 செ.மீ. என்ற அளவில் 96 முதல் 104 சதவீதம் வரையில் மழை அளவு பதிவானால் இயல்பான மழை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நாட்டில் பருவமழை நன்கு பொழிந்ததை அடுத்து சாதனை அளவாக 23.58 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

* நாட்டு மக்களுக்கு நன்றி கூற ரயில்பயணம் :ஹசாரே

annahazare.jpg

புனே:நாட்டுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அன்னாஹசாரே தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதாவில் மக்களின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இவரின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியது. இதனையடுத்து மக்கள் பிரதிநிதகள் அடங்கிய முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.கூட்டத்தில் அன்னாஹசாரே கலந்து கொண்டார். இந்நிலையில் இரண்டாம் கட்ட கூட்டம் வரும் மேமாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: என்னுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க உள்ளேன். இதற்காக ரயில் மூலம் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். வரும் மே மாதம் 3-ம் தேதி உ.பி.,மாநிலத்தில் இருந்து பயணத்தை துவங்க உள்ளதாகவும், பொதுப்பெட்டியிலேயே பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். பெரும்பாலான மக்கள் பொதுபெட்டி யிலேயே பயணம் செய்துவருகின்றனர். அதன்காரணமாக அத்தகைய பெட்டியில் பயணம் செய்வதன் மூலம் அனைத்து மக்களையும் சந்திக்க முடியும் என்று தெரிவித்தார்.

மாநிலச் செய்தி ம்லர் :

* பி.எஸ்.எல்.வி. சி-16 இன்று ஏவப்படுகிறது

rocket.jpg

சென்னை, ஏப். 19: மூன்று செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (ஏப்ரல் 20) காலை 10.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ்-சாட் ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இவற்றில் 1,206 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. இது இந்தியாவின் 18-வது தொலை உணர்வு செயற்கைக்கோளாகும்.

இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உடன் அதில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு சூரிய சக்தி தகடுகளும் தானாகச் செயல்படத் தொடங்கும். பின்னர், பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயற்கைக்கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ரிசோர்ஸ்சாட்-1 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்தது போன்று ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளிலும் மூன்று அதிக திறன் கொண்ட கேமராக்களும், அதிநவீன சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் 200 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட உறுதிவாய்ந்த பதிவுக் கருவியும் இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள் இந்தப் பதிவுக் கருவியில் சேமிக்கப்பட்டு, பின்னர் பூமிக்கு அனுப்பப்படும்.

இந்தத் தகவல்கள் மூலம் பூமியில் உள்ள இயற்கை வளங்களை கண்காணிப்பது, சுற்றுச் சூழலை பாதுகாத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

இதனுடன் அனுப்பப்படும் 92 கிலோ எடைகொண்ட யூத்சாட் செயற்கைக்கோள், இந்திய - ரஷிய கூட்டு தயாரிப்பாகும். இந்தச் சிறிய ரக செயற்கைக்கோள் உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகும். இதில் ராபிட், லிவிசி என்ற இரண்டு இந்தியக் கருவிகளும், சோல்ராட் என்ற ரஷிய கருவி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தச் செயற்கைக்கோளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம், சூரியக்கதிர் வேறுபாடுக்கும், காற்றுமண்டல உயர்த்தட்டுப் பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
எக்ஸ்-சாட் செயற்கைக்கோள், தொலை உணர்வு தொழில்நுட்பம் மற்றும் விண்வெளியிலிருந்து படம் எடுப்பதற்கும் உதவும் பணியில் ஈடுபட உள்ளது. அதிநவீன பல்நோக்கு கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோளான இந்த எக்ஸ்-சாட் சிறிய ரக செயற்கைக்கோள் 106 கிலோ எடை கொண்டது.

* சூறாவளிக்கு வாழைகள் நாசம்: ரூ.40 லட்சம் நஷ்டம்

large_227551.jpg

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு ரூ. 40 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடித்தது. இதில் பாலப்பட்டி, மோத்தேபாளையம், அறிவொளி நகர், நேசனல் நகர், கிட்டாம்பாளையம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாதையன், பழனிசாமி, கவிதா, ரவி, ராஜேந்திரன், ஈஸ்வரன் உட்பட பல விவசாயிகள் தோட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே சாய்ந்தன. இதனால் குறைந்த பட்சம் விவசாயிகளுக்கு 30 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயி மாதையன் கூறியதாவது: விவசாயிகள் ஒவ்வொரு முறையும் வாழை பயிர் செய்யும் போது கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர்.

எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால், ஆயிரம் வாழை பயிர் செய்தால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் அனைத்து செலவும் போக 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது யானைகளும், இயற்கை சீற்றமும் விவசாயிகளை பயமுறுத்தி வருகின்றன. வனப்பகுதி ஓரம் உள்ள நிலங்களில் யானைகள் கூட்டமாக வந்து வாழையை முழுமையாக அழித்து சேதம் செய்கின்றன. கிராமப்பகுதிகளில் உள்ள வாழைகள் இயற்கை சீற்றத்தால் (சூறாவளி காற்றால்) சேதமடைகின்றன.

சூறாவளிக் காற்றால் மேட்டுப்பாளையம் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் பல மரங்கள் புடை தள்ளியும், தள்ளும் நிலையிலும் உள்ளன. கீழே விழுந்த மரங்களை வெளியே அகற்ற ஆட்களுக்கு கூலி கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு இயற்கை சீற்றம் மற்றும் யானைகளால் சேதமடைந்த வாழை மற்றும் வேறு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு மாதையன் கூறினார்.

மோகனூரில் பலத்த சூறை காற்று : நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் பல இடங்களில் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தன. வீடுகளில் போடப்பட்டிருந்த ஆஸ்பஸ்டாஸ் கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டன. பல மணி நேரம் மின் துண்டிக்கப்பட்டது. வாழைகள் அழிவு காரணமாக ரூ. 5 லட்சம் வரை நஷ்டமடைந்திருக்கும் என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

* மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்

காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டருக்கு வரும் மாணவிகளை அதன் உரிமையாளர் ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முனிராஜா என்பவர் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். அங்கு இன்டர்நெட் உபயோகிக்க மற்றும் கம்ப்யூட்டர் பயில வரும் மாணவிகளை நைசாகப் பேசி மயக்கி அவர்களுடன் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறு தனது ஆசைக்கு இணங்கிய மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த விஷயம் வெளிவந்ததால் முனிராஜா தலைமறைவானார்.

முனிராஜாவை உடனடியாக கைது செய்யக் கோரி கம்யூட்டர் சென்டர் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கம்யூட்டர் சென்டரை சூறையாடினர்.

இதற்கிடையே பிரச்சனை பெரிதானதை உணர்ந்த முனிராஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

* அறிவிக்கப்படாத மின்தடை: 40 கிராம மக்கள் அவதி

திருத்தணி, ஏப். 19: பள்ளிப்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் 40 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், கிராம விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்திமஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு, சொரக்காய்பேட்டை, காக்களூர், வெளியகரம், கர்லம்பாக்கம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

தொடர்ந்து திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து கிராம விவசாயி பழனி கூறும்போது: 

பொதட்டூர்பேட்டை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அத்திமஞ்சேரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்துதான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளாகவே 2 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. தற்போது கோடைக் காலம் தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரம் கூடுதல் மின்வெட்டு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது தினசரி 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமங்களில் உள்ள எங்களை போன்ற விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நெல், வேர்க்கடலை பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியமால் கடும் அவதிப்படுகின்றனர்.

மேலும் அடிக்கடி இரவு நேரங்களில் இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு, மறுநாள் வரை இத்தடை நீடிக்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளதாலும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதி மக்களுக்கு சீராக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமரா

சென்னை, ஏப். 19: வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு மேஜையையும் வெப் கேமரா மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

குழப்பங்கள், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் போன்றவற்றைத் தவிர்க்க இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது:

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 94 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு 25 நாள்களுக்கு மேல் இருப்பதால் ஒவ்வொரு மையத்திலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்கப்படுகிறது: வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர். அந்த அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே 1-ம் தேதி நடைபெறுகிறது. பயிற்சி பெற்ற அதிகாரிகள் அலுவலர்களுக்கு உரிய பயிற்சியை அளிப்பர்.

வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். அவை "லேப்-டாப்'புடன் இணைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படும். இதனை வேட்பாளர்களின் முகவர்கள் தெளிவாகப் பார்ப்பதற்கு வசதி செய்து தரப்படும். இதன்மூலம், வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். பதிவான நடவடிக்கைகள் சி.டி.யில் பதிவு செய்து தரப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் 10 முதல் 15 மேஜைகளில் வைத்து எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகளை அறிவிக்க மையத்தின் உள்ளேயும், வெளியேயும் இரண்டு ஒலி பெருக்கிகள் வைக்கப்படும் என்றார் பிரவீண் குமார்.

பணியில் பத்தாயிரம் பேர்? வாக்கு எண்ணும் பணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளே வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

செல்போன் போன்ற சாதனங்களுக்கு அனுமதி கிடையாது. வாக்கு எண்ணும் மையங்களின் வளாகத்துக்கு உள்ளே அனுமதி பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 
காவல் துறை அதிகாரிகளுடன் வேட்பாளர்களின் முகவர்களும் 24 மணி நேரமும் விழித்திருக்கின்றனர். வேட்பாளர்களும் அவ்வப்போது சென்று வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

*இந்த ஆண்டு பி.இ. படிப்பில் 2.1 லட்சம் இடங்கள்: மன்னர் ஜவஹர்

mj.jpg

சென்னை, ஏப். 19: பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
கடந்த 2010-11 கல்வியாண்டில் 1.9 லட்சம் அரசு ஒதுக்கீட்டின் க
19-banana-leaf-meal-200.jpg19-banana-leaf-meal-200.jpg

6K   View  


உணவை சக்தியாக்கும் இலை ரகசியம்


நாம் உண்ணும் உணவு உடலுக்குள் செரிமானமாகி நமக்கு சக்தியை தர வேண்டும். உணவு 
உண்பதே ஒரு கலை. உண்ணும் இலையைப் பொருத்து உணவின் சக்தி மாறுபடுகிறது. என்னென்ன 
இலைகளில் சாப்பிடலாம்? எந்த இலைகளை தைத்து சாப்பிடலாம் என்ற விபரம் சாஸ்திர 
நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எந்த இலையில் உண்டால் என்ன கிடைக்கும் என்பது 
பற்றி தெரிந்து கொள்வோம்.


வாழை இலை உணவு


வாழை இலைகளில் சாப்பிடுவது நாம் அறிந்த ஒன்று. பெரும்பாலான விருந்துகளில் வாழை 
இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலைகளில் வாழை இலையும் வேங்கை இலையும் சமமான 
பலனை தரக்கூடியது..


வாழை இலையில் உணவு உண்பதால் அக்னி மாந்தம், வாய்வு, இளைப்பு, பித்தநோய் 
போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு 
வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும் 
கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும். 
ஆண்மையை வளர்க்கும்.. வயிறுமந்தத்தைப் போக்கும்.


பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள் 
நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும்.. பக்க வாதம் 
குணமாகும். உடல் நடுக்கம் காசநோய் குணமாகும்.


தையல் இலைகள்


தையல் இலையை ஒரேவகையான இலையை தைத்து உருவாக்கி அதில்தான் சாப்பிடவேண்டும். 
மாவிலை, பின்னை இலை, பலாஇலை, தாமரை இலை, இலுப்பை இலை, செண்பக இலை, பாதிரிஇலை, 
பலாசு இலை, சுரை இலை, கமுகமடல் ஆகிய இலைகளை உணவு உண்ணப்பயன்படுத்தலாம்..
இருப்பினும் பலா இலையில் அதிகமாக உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை 
அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய் 
மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும். 
சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும்



வர்த்தகச் செய்தி மலர் :


* சென்செக்ஸ் 30.66 புள்ளிகள் உயர்வுடன் முடிவு   


மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் தடுமாற்றம் இருந்து வந்தது. ஆனாலும் வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 30.66 புள்ளிகள் உயர்ந்து 19,121.83 புள்ளிகளில் முடிவடைந்தது.


தடுமாற்றம் காணப்பட்ட தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 11.65 புள்ளிகள் உயர்ந்து 5,740.75 புள்ளிகளில் முடிவடைந்தது.


பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அன் டி, ஹெச்டிஎப்ஸி வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.


ஹீரோ ஹோண்டா, பெல், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.




விளையாட்டுச் செய்தி மலர் :


*பெண்கள் அணிக்கும் ஐபிஎல்: முன்னாள் கேப்டன் அன்ஜும் சோப்ரா பரிந்துரை


மும்பை: ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு நடத்தப்படுவது போன்று பெண்கள் அணிகளுக்கும் ஐபிஎல் போட்டி நடத்த வேண்டும் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அன்ஜும் சோப்ரா தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியதாவது,


இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு போதிய வரவேற்பில்லை. அதனால் பெண்கள் கிரிக்கெட்டை பிரபலமாக்க இந்திய கிரிக்கெட் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்திய பிறகு பெண்கள் கிரிக்கெட்டிற்கும் மவுசு ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறோம்.


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் பிரபலமாக்க ஆண்களைப் போன்று பெண்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும்.


ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு போதிய பெண் வீராங்கனைகள் உள்ளனர். திறமையான வீராங்கனைகளும் இருக்கின்றனர் என்றார்.


* டெல்லியை வீழ்த்தியது டெக்கான்


புது தில்லி, ஏப்.19: தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெக்கான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.


முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற டெக்கான் கேப்டன் குமார் சங்ககரா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான தவாண் 8 ரன்களில் பதான் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். இதன்பிறகு சோஹலுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் சங்ககரா.


இந்த ஜோடி விக்கெட் விழாமலும், அதே நேரத்தில் வேகமாகவும் ஆடியது. இதனால் அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. சங்ககரா 35 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சோஹல் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் ஒயிட் சற்று அதிரடி காட்ட டெக்கான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.


வார்னர் அரைசதம்


பின்னர் பேட் செய்த டெல்லி அணியில் சேவாக்கும், வார்னரும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்தார். கிறிஸ்டியான் வீசிய இரண்டாவது ஓவரில் சேவாக் தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசினார்.


அணியின் ஸ்கோர் 28 ரன்கள் எட்டியபோது, சேவாக் 12 ரன்களில் ஆட்டமிழந்து டெல்லி ரசிகர்களை ஏமாற்றினார். இதன்பிறகு வந்த ஓஜா 2 ரன்களிலும், பிஞ்ச் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வேணுகோபால், வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடினார். 23 பந்துகளைச் சந்தித்த அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.


வார்னர் 48 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வந்த நாகர் அதிரடியாக விளையாடினார். 11 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்களில் தோல்வி கண்டது.


சோஹல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஆன்மீகச் செய்தி மலர் :


                                                                                                  


* அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்


மூலவர் : மாரியம்மன்
  -
  தல விருட்சம் : வேம்பு
  -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : கண்ணபுரம்
  ஊர் : சமயபுரம்
  மாவட்டம் : திருச்சி
  மாநிலம் : தமிழ்நாடு




தல சிறப்பு:
   
  பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர்ல பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.


இக்கோயிலில் விநாயகர், முருகன், நாககன்னி சன்னதியும் உள்ளது. நாககன்னி சன்னதி முன்புள்ள வேப்ப மரத்தில் குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டி வரும் சேலையின் முந்தானையை கிழித்து மரத்தில் கட்டி ஒரு கல்லை வைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைபேறு ஏற்படும் என்பது நம்பிக்கை.


குழந்தை பிறந்ததும் இங்கு வந்து தொட்டிலை அவிழ்த்துவிட்டு அம்பாளுக்கு பூஜை செய்து திரும்புகின்றனர்.


தலபெருமை:
   
 
பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் தன் தாயைக் காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். இவ்வூரிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்துவிடுகின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர்.


இந்த சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரத்து அம்னைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. மாரியம்மன் பிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.


விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சிகயாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள். தாயைப்பிரிந்து செல்லவதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை.


தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில்


தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.


இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது.


கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம். (காரணம் இத்தலத்து மாரியம்மன் சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால்)


ஸ்ரீராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.


தல வரலாறு:
   
 
இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.


இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்கு பூஜை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.


மக்கள் பூ கட்டி பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்து பூஜை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள்.


இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம். இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டுவரப்படுகிறாள்.


திருவிழா:
   
  சித்திரைத்தேர் திருவிழா - ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர். பூச்சொரிதல் - மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர். பஞ்சப்பிரகாரம் - வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.தைப்பூசம் - 11 நாள் திருவிழா : தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். தினந்தோறும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருப்பதோடு வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.  


திறக்கும் நேரம்:
   
  காலை 5மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.  
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :


 ஆதி சங்கரர் - உலகம் யாருக்கு கட்டுப்படும் ?


குரு என்பவர் உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சீடர்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபடுபவர். தூயோன் என்பவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கிறவன். பண்டிதன் என்பவன் விவேகி.


ஆண்டவனைப் பக்தியுடன் ஆராதிப்பவனுக்கே ஐஸ்வரியம் உண்டாகும். உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் ஆரோக்கியம். செய்யக் கஷ்டமானது மனதை இடைவிடாது தடுத்துக் கட்டிப் போடுவதே.


வினாடி வினா :


வினா -உலகத்தின் மிக உயரமான அணை எது ?


விடை - ரோ-கன் - ஸ்கை அணை தட்ஸ்கிஸ்தான் (வக்ஸ் நதி) 




இதையும் படிங்க :






"ராணுவ டாக்டராக சேவை செய்வேன்!' 


தேசிய மாணவர் படைத் தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கிரிஸ் நேகா: என் அப்பா சஞ்சீவ், படிக்கும் காலத்தில், தேசிய மாணவர் படையில் இருந்திருக்கிறார். அதனால், என்னையும், "தேசிய மாணவர் படையில் சேர்ந்து, பயிற்சி எடுத்துக் கொண்டால், உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம், சமூகத்திற்கு உதவ தேசிய மாணவர் படை பெரும் உந்துதலாக இருக்கும்' என, அறிவுறுத்தினார்.அவர் அறிவுறுத்தலின்படி, தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன். சிறந்த முறையில், பயிற்சி எடுத்துக் கொண்டேன். "குடியரசு தின முகாமில் பங்கேற்க, ஆர்வம் உள்ள தேசிய மாணவர் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பு வந்தது; நானும் விண்ணப்பித்தேன். தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றின் இயக்குனரகங்களில் இருந்து, மொத்தம், 106 பேர் தேர்வானோம். இதில் ஜூனியர் பிரிவில், தமிழகத்தில் இருந்து 17 பேர் தேர்வானோம். குடியரசு தின முகாமில் பங்கேற்க, சென்னையில் ஒரு மாதம் கடுமையான பயிற்சி அளித்தனர்.நாங்கள் சென்ற நேரம், அங்கு கடும் பனிப்பொழிவு. பலருக்கு, சீதோஷ்ண நிலை ஒத்துவரவில்லை. இதனால், பலர் பயிற்சியில் சரியாக பங்கேற்க முடியவில்லை. ஆனால், இந்த முகாமில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற வெறி, என்னுள் இருந்தது.முகாமில் நடந்த மாணவர் படைத் தேர்வில், பொது அறிவு, எழுத்துத் தேர்வு மற்றும் துப்பாக்கிச் சுடுதல், பேச்சுப் போட்டி என, பல தேர்வுகள் வைத்தனர். அனைத்திலும் நான் தேர்ச்சி பெற்றேன்.முகாமில் இருந்த நாட்களில், அனைத்து போட்டிகளிலும் நான் சிறப்பாக செயல்பட்டதால், அகில இந்திய அளவில், இரண்டாமிடம் பிடித்து, மேஜர் ஜெனரல் ராஜீவ் வர்மாவிடம், வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, ராணுவத்தில் டாக்டராக சேவை செய்ய விரும்புகிறேன்.






நன்றி - தின மலர், தட்ஸ்தமிழ், தின மணி.

























































No comments:

Post a Comment