Tuesday, March 29, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் 29. 2011.


முக்கியச் செய்தி :

பிளாஸ்டிக்கை ஏன் முழுமையாக தடை செய்யவில்லை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதி்ல்லி, மார்ச் 28- பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு ஏன் முழுமையாக தடை விதிக்கவில்லை என்று கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

"சாதாரண மனிதனுக்கு சுத்தமான சுற்றுச்சூழல் வசதி செய்து தருவதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அரசுக்கு கவலை இல்லை. புகையிலைப் பொருட்களை மட்டும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். மற்ற வழிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை அனுமதிக்கும் வகையில் அதற்கான சட்ட விதிமுறைகள் சூழ்ச்சியுடன் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை அல்லாத பொருட்களின் பயன்பாட்டில் பெருமளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. நுகர்வோர் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தாத அனைத்து வகைப் பொருட்களுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், பிளாஸ்டிக்கால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் தடுக்கலாம்." என்று தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அடுத்த விசாரணையின்போது பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* லிபியா மீதான தாக்குதலை ஐநா அங்கீகரிக்கவில்லை: ரஷ்யா

மாஸ்கோ, மார்ச் 28- லிபியாவில் அதிபர் கடாஃபி படையினர் மீதான நேட்டோ படைகளின் விமானத் தாக்குதலுக்கு ஐநா அங்கீகாரம் வழங்கவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"லிபியாவின் அதிபர் கடாஃபி படையினர் மீதான தாக்குதல் அந்நாட்டின் உள்நாட்டுப் போரில் நேட்டோ தலையிடுவதாக உள்ளது. அந்நாட்டின் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது நேட்டோ படைகளின் விமானத் தாக்குதல்கள் ஐநாவின் தீர்மானத்துக்கு விரோதமாக உள்ளது. லிபியா மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் நேட்டோ படைகள் ஒரு வரைமுறையுடன் செயல்பட வேண்டும்." என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

அதிபர் கடாஃபி படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடர்பான தீர்மானம் ஐநாவில் கொண்டு வரப்பட்டபோது, ரஷ்யாவும் சீனாவும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்க உளவாளிகளைக் குறிவைக்கும் தலிபான்கள்

இஸ்லாமாபாத், மார்ச் 28: ஆள் இல்லாத சிறு பொம்மை விமானம் மூலம் தலிபான்களைக் கொல்ல அமெரிக்க ராணுவத்துக்கு உளவு சொல்பவர்களைக் கண்டுபிடிக்க தலிபான்கள் புதிய படையையே ஏற்படுத்திவிட்டனர்.

 லஷ்கர்-இ-கொராசான் என்ற அந்த அமைப்பில் இப்போது 300-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். கடந்த ஓராண்டாக இந்தப் படை இருந்தாலும் சமீப காலத்தில்தான் இது தொழில்முறையுடன் நேர்த்தியாக நிர்வகிக்கப்படுகிறது.

 உளவாளிகளை உளவுபார்க்கும் புதிய உத்திகளை இந்த அமைப்பு கடைப்பிடிக்கிறது.

 தலிபான்கள் அவர்களுடைய ஆதரவாளர்கள் கூட்டம் போட்டாலோ வாகனங்களில் சென்றாலோ டுரோன் என்று அழைக்கப்படும் ஆள் இல்லாத பொம்மை விமானங்கள் பறந்துவந்து குறி பிசகாமல் குண்டு வீசிவிட்டுச் செல்கின்றன. இதில் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.

 இந்தத் தாக்குதலுக்கு உள்ளூரில் யாரோ உளவு சொல்வதால்தான் இப்படி தலிபான்களைத் தாக்கி அழிக்க முடிகிறது என்று உணர்ந்து கொண்ட தலிபான்கள், தங்களுக்கிடையே உலவும் அந்த துரோகிகளை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியது.

 அப்போதுதான் கார், ஜீப் போன்ற வாகனங்களை பழுதுபார்க்கும் மோட்டார் மெகானிக்குகள் சிலர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு தலிபான்களின் வாகனங்களில் அடையாளத் தகட்டைப் பொருத்திவிடுவார்களாம். அதில் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு டுரோன் எனப்படும் ஆள் இல்லாத பொம்மை விமானம் மூலம் குண்டுவிசி தகர்த்துவிடுவார்களாம்.

அமெரிக்க ராணுவத்துக்காக மட்டும் அல்ல அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுக்காகும் உளவு பார்க்கும் எந்த ஆளையும் உயிரோடு விட்டுவைக்கக்கூடாது என்ற முனைப்பில் தலிபான்கள் செயல்படுகின்றனர். அமெரிக்க ராணுவத்துக்கோ சி.ஐ.ஏ.வுக்கோ தகவல் தருகிறார் என்ற சந்தேகம் எவர் மீது ஏற்பட்டாலும் அவரைக் கண்காணிக்கின்றனர். ஆதாரங்கள் கிடைத்தால் அழைத்துச் சென்று அடித்து விசாரிக்கின்றனர். உண்மையை ஒப்புக்கொண்டால் அவர்களை அங்கேயே கொன்றுவிட்டு அடுத்த ஆளைத் தேடிச் செல்கின்றனர்.

2010-ம் ஆண்டில் டுரோன் மூலம் 100-க்கும் மேற்பட்ட முறை தாக்கி ஏராளமான அப்பாவிகளைக் கொன்றுவிட்டனர்.

 சமீபத்தில் இந்த உளவாளிகளில் 6 பேரை அடையாளம் கண்டனர். அவர்கள் மோட்டார் மெகானிக்குகள். அவர்களைத் தலிபான்களின் நீதி மன்றமே விசாரித்து அனைவருக்கும் மரண தண்டனை விதித்து அதை அருகிலிருந்தே நிறைவேற்றிவிட்டுச் சென்றனர்.

 இந்த மோட்டார் மெகானிக்குகள் ஆறு பேரும் கைபர் - பக்டூன்கவா பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனால் அமெரிக்கர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தரும் பணத்துக்கு ஆசைப்பட்டு தலிபான்களின் கையால் மரணத்தைத் தழுவும் ஆள்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.

* கதிர்வீச்சு அளவு ஒரு கோடி மடங்கு என்று பீதி கிளப்புவதா? ஜப்பான் அரசு கண்டனம்

புகுஷிமா,மார்ச் 28: ஜப்பானின் புகுஷிமா நகரில் உள்ள அணு மின்சார உற்பத்தி நிலையத்தின் 2-வது எண் அணு உலையிலிருந்து கசிந்த கதிரியக்க அளவு ஒரு கோடி மடங்கு என்று சரியாகக் கணக்கிடாமல் அறிவித்து அனைவரையும் பீதிக்கு உள்ளாக்கலாமா என்று அதை நிர்வகிக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) என்ற நிறுவனத்தை ஜப்பானிய அரசு கண்டித்திருக்கிறது.

 ஜப்பானில் மார்ச் 11-ல் நேரிட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ஆழிப் பேரலை ஆகியவற்றுக்குப் பிறகு அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக சூடேறி வெடித்ததில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டு வருகிறது. அவற்றைக் குளிரவைக்க ஜப்பானிய அரசு தன்னாலியன்ற அனைத்தையும் செய்து வருகிறது.
ஆனால் அதன் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அடுக்கடுக்காக தடைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இந்த நிலையில் கடல் நீரில் கரைந்த அணுக்கதிர்களால் ஏற்பட்ட கதிர்வீச்சை அளந்த தொழிலாளி ஒருவர் ஆலைப் பகுதியில் நிலவிய கடுமையான அணுக்கதிர்வீச்சு காரணமாக அவசர அவசரமாக ஒரு முறை மட்டுமே கதிர்வீச்சு அளவுமானியைப் பார்த்துவிட்டு ஒரு கோடி மடங்குக்கு கதிர் வீச்சு ஏற்பட்டிருப்பதாக அறிவித்தார்.

 இதனால் உலகம் எங்கும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டது. ஜப்பானில் இது மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச அணுவிசை ஏஜென்சியே செய்வதறியாது திகைத்தது.

இந்த நிலையில் கதிர்வீச்சை மற்றொரு முறை அளவிட ஜப்பானிய அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போதுதான் ஒரு லட்சம் மடங்கு மட்டுமே கதிர் வீச்சு உயர்ந்திருப்பது தெரிந்தது. இதுவும் மனித குலத்துக்கு ஆபத்துதான் என்றாலும் ஒரு கோடி மடங்கு அளவுக்கு இல்லை. அத்துடன் பசிபிக் கடலோரத்தில் வாழும் நாடுகள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இந்தக் கதிர்வீச்சும் கடலில் கரைந்து நீர்த்துப் போகும் என்பதாலும் பாதிக்கப்பட்ட கடலோரத்தில் மீன் பிடிக்கும் வேலை சுமார் ஒரு மாதத்துக்கு தடைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாலும் மீன்கள், நத்தைகள் போன்றவற்றால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் சற்றே நிம்மதி ஏற்பட்டிருக்கிறது.

 பாதிக்கப்பட்ட அணு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கம்பிகள், கம்பிகளை மூழ்கவைக்கும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவற்றில் ஏற்படும் கதிர்வீச்சைக் குறைக்க அந்தத் தண்ணீரை அதற்காகவே உள்ள தொட்டிகளுக்கு பம்ப் செய்து அனுப்பும் பணியைத் தங்களுடைய உயிரையே பணயமாக வைத்து சுமார் 19 தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அவர்களில் 3 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 100 மில்லிசிவர்ட்ஸ் அளவுக்குக் கதிர் வீச்சு பாதிப்பு இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் இந்த 19 பேர் பணி செய்த இடம் 250-க்கும் மேல் இருக்கும். தங்களுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை, ஆயிரக்கணக்கான நம் நாட்டு ஜப்பானியர்களுக்கும் எதிர்கால சந்ததியான குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் இருக்க இந்தக் கதிர் வீச்சை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இவர்கள் இந்தப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் 3 பேர் கடந்த வியாழக்கிழமை 173 முதல் 180 மில்லி சிவர்ட்ஸ் வரை கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றனர். இருந்தும் மீண்டும் அந்த மூவரும் மற்றவர்களுடன் வேலைக்கு வந்துவிட்டனர்.

 இதற்கிடையே ஆழிப்பேரலை, நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த தங்களுடைய வீடுகளிலிருந்து சில பொருள்களை எடுக்க சிலர் முகாம்களிலிருந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கதிர்வீச்சு இருக்கிறது என்ற எச்சரிக்கையையும் அவர்கள் பொருள்படுத்தவில்லை என்பதால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். கதிர்வீச்சு அபாயம் குறையும்வரை வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* கார் சாவியை கிரேன் மூலம் மீட்ட ஹோட்டல் அதிபர்

மெல்போர்ன்,மார்ச் 28:நியூஸிலாந்தில் ஹோட்டல் அதிபர் ஒருவர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டிலிருந்த கார் சாவியை கிரேன் மூலம் மீட்ட செயல் விமர்சனத்துக்குள்ளானது.

 நியூஸிலாந்தில் பிப்ரவரி 22 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் கிறிஸ்ட்சர்ச் நகரம் வெகுவாக பாதிப்படைந்தது. இதனால் 5 வாரங்களாக மக்கள் அபாய வளையப் பகுதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த ஜான் பட்டர்ஃபீல்டு என்ற ஹோட்டல் அதிபர், அபாய வளையப் பகுதியில் 13-வது மாடியில் இருந்த தனது வீட்டிலிருந்து, தனது மற்றும் மனைவியின் கார் சாவி மற்றும் ஏனைய பொருள்களை கிரேன் மூலம் எடுத்துள்ளார்.

 "தி ஸ்டார்" என்ற தினசரிக்கு பேட்டியளித்த பட்டர்ஃபீல்டு,கிரேன் பயன்படுத்த தான் முறையாக அனுமதி பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும் அவரின் இச்செயல் மக்களிடையே கடும் விமர்சனுத்துக்குள்ளானது.


தேசியச் செய்தி மலர் :

* கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் மன்மோகன்-ஜிலானி சந்திப்பு

புதுதில்லி, மார்ச் 28- மொஹாலியில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணும் முன்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாக். பிரதமர் ஜிலானியும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டி மார்ச் 30-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு, மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று இப்போட்டியை நேரில் காண ஜிலானி வரவுள்ளார்.

அன்றைய தினம் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கும் ஜிலானியும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 30-ம் தேதி காலை தில்லியில் மன்மோகன் சிங் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மொஹாலி புறப்படுகிறார். எனவே, பாக். பிரதமர் ஜிலானி தில்லிக்குப் பதிலாக சண்டீகரில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

எனினும், இதுதொடர்பான முழு விவரங்களை தெரிவிக்க பிரதமர் அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மன்மோகன் சிங் - ஜிலானி சந்திப்பு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்றே கூறப்படுகிறது. எனவே, இதில் இருதரப்பு பிரச்னைகள் குறித்து குறைவாகவே ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இன்று தில்லியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் உள்துறைச் செயலர்கள் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

* தமிழக டிஜிபி நியமனத்தில் பாரபட்சமாக செயல்படவில்லை: தேர்தல் ஆணையம்

சென்னை, மார்ச் 28- தமிழக டிஜிபியாக போலா நாத் நியமிக்கப்பட்டதில் பாரபட்சமாக செயல்படவில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டே புதிய டிஜிபி நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், டிஜிபி நியமனத்தில் தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவே முடிவு எடுத்துள்ளது என்று, அதன் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தானாகவே வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

"சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் தேர்தல் நடத்த எந்த அதிகாரியையும் டிஜிபியாக நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. இதில், எந்தவித பாரபட்சமும் இல்லை. மேலும், இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்ப இயலாது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்த கருத்துகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேர்தல் காலத்தில், ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியையும் காவல்துறை அதிகாரிகளையும் முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு." என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சரியான திசையில் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு

புது தில்லி, மார்ச் 28: இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் இடையேயான பேச்சு சரியான திசையில் செல்வதாக இரு நாட்டு உள்துறைச் செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.

 2008-ல் மும்பை தாக்குதலுக்குப் பின் இருநாட்டு அதிகாரிகள் அளவிலான ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

 அதன் பிறகு, இப்போதுதான் முதல்முறையாக உள்துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 புது தில்லியில் திங்கள்கிழமை 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது.

 இந்தியத் தரப்புக்கு உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தலைமை வகித்தார். பாகிஸ்தான் தரப்பில் உள்துறைச் செயலர் செüத்ரி கமார் ஜமான் தலைமையில் 12 பேர் குழு பங்கேற்றது.

 பேச்சுக்குப் பின் செய்தியாளர்களிடம் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:

 பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது. பேச்சு சரியான திசையில் செல்வதாகவே கருதுகிறேன். இப் பேச்சு தொடர்பான கூட்டறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்றார்.

 செய்தியாளர்களிடம் கமார் ஜமான் கூறியதாவது:

பேச்சுவார்த்தை சுமுகமாகவும், சரியான திசையிலும் அமைந்திருந்தது. இன்னும் ஒரு நாள் பேச வேண்டியுள்ளதால் குறிப்பான விவரங்கள் எதையும் இப்போது கூற முடியாது.

 எனினும், இருதரப்புமே ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டுள்ளோம். செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

 இன்னும் பல விஷயங்கள் குறித்து பேச வேண்டியுள்ளது. முதல் நாள் பேச்சுவார்த்தை பலன் அளிப்பதாக இருந்தது என்றார்.

 பேச்சுவார்த்தைக்குப் பின் ஆக்ராவுக்கு தான் செல்ல உள்ளதாக ஜமான் கூறினார்.

 மும்பை தாக்குதல் வழக்கு, எல்லை தாண்டிய பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், கள்ளநோட்டுப் புழக்கம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

 மன்மோகன்- கிலானி சந்திப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் புதன்கிழமை மோதுகின்றன.

 மொஹாலியில் நடைபெறும் இந்த ஆட்டத்தைக் காண வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி ஏற்றுக் கொண்டுள்ளார்.

 கிரிக்கெட் ஆட்டத்துக்கு முன்போ, பின்போ இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இருவரும் பேசுவது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 இந்த நிலையில், உள்துறைச் செயலர்கள் அளவிலான பேச்சு நடைபெற்றுள்ளது.

 மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் அரசு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என இந்தியா தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது


* புலிகள் எண்ணிக்கை உயர்வு, கணக்கெடுப்பில் தகவல்

புது தில்லி, மார்ச் 28: நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 1,706 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் என்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தகவல் தெரிவிக்கிறது.

 காடுகளை பாதுகாப்பதில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் இது சாத்தியமாகியுள்ளதாக, 2010-ம் ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

தில்லியில் தொடங்கிய புலிகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச 3 நாள் கருத்தரங்கில் ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுந்தரவனக்காடுகள் சேர்க்கப்படவில்லை. அதனால் அப்போதைய எண்ணிக்கை 1,411-ஆக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பின் படி இது 1,636-ஆக உயர்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளின் உத்தேச எண்ணிக்கையான 70-ஐ சேர்த்தால் இது 1,706-ஆக உள்ளது. உத்தேச மதிப்பான 70-ஐ சேர்க்காமலேயே, 12 சதவீதமாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

 "கொல்லப்படும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், அவற்றின் பிறப்பு எண்ணிக்கை உயர்வையும் மறந்து விடக்கூடாது. ஆனால், புலிகள் கொல்லப்படுவது குறித்த தகவல் மட்டுமே செய்திகளாகின்றன. புதிதாக பிறக்கும் புலிகள் குறித்த செய்திகள் வருவதே இல்லை. மக்களும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால், கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 615-க்கும் அதிகமானவை ஒன்றரை வயதுடைய புலிக்குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது' என்றார்.

 மத்திய இந்தியாவில் ஏற்கனவே இருந்த எண்ணிக்கை குறைந்துள்ள அதே வேளையில், நக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஆந்திரத்தின் நாகார்ஜுன சாகர், சத்தீஷ்கரின் இந்திராவதி, ஒரிஸôவின் சிம்லிபால், பிகாரின் வால்மிகி, ஜார்கண்டின் பாலமோவ் ஆகிய காப்பக பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை நம்பிக்கை தரும் விதமாகவே உள்ளது.

 பல்வேறு அறிவியல் முறைகள் கணக்கெடுப்பில் கடைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உலக அளவில் புலிகள் அதிகம் உள்ள பகுதியாக தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகியவை உள்ளன என்றார்.

* எண்ணெய், எரிவாயு துரப்பணப் பணி: ஓஎன்ஜிசி, ரிலையன்ஸýக்கு லைசென்ஸ்

புது தில்லி, மார்ச் 28: புது தில்லியில் திங்களன்று நடைபெற்ற எண்ணெய், எரிவாயு துரப்பணப் பணிக்கான லைசென்ஸ் வழங்கப்பட்டன. இதில் டெண்டர் கோரியிருந்த நிறுவனங்களில் ஓஎன்ஜிசி-க்கு 10 இடங்களில் அகழ்வு செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 2 இடங்களும், பிஜி-பிஹெச்பி நிறுவனத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 9-வது தேசிய அகழ்வு லைசென்ஸ் கொள்கையின்படி லைசென்ஸ்கள் வழங்குவதற்கான பரிசீலனை நடைபெற்றது. இதில் பல நிறுவனங்கள் டெண்டர் மூலம் விண்ணப்பித்திருந்தன. மொத்தம் 29 இடங்களில் அகழ்வுப் பணி மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி 10 இடங்களில் அகழ்வுப் பணிக்கான லைசென்ûஸப் பெற்றுள்ளது. முந்தைய 8-வது லைசென்ஸ் வழங்கும்போது ஓஎன்ஜிசி விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆழ்கடல் துரப்பண பணியை மேற்கொள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு பூர்வாங்க ரீதியில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவை தவிர, பிரிட்டனின் பிஜி குழுமம் பிஹெச்பி பில்லிடன் நிறுவனத்துடன் இணைந்து மும்பை பகுதியில் ஆழ்கடல் அகழ்வுக்கான லைசென்ûஸப் பெற்றுள்ளது.

இப்பகுதியில் துரப்பணப் பணியை மேற்கொள்ள பிஜி-பிஹெச்பி நிறுவனத்துக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்ஸôர் ஆயில் நிறுவனம் போட்டியிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கான லைசென்ûஸப் பெற்றுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களும் இந்த அகழ்வுப் பணிக்கு போட்டியிட்டிருந்தன. அவற்றின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு நடுநிலையோடு ஏலம் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.


* கறுப்புப் பணத்தின் மூலத்தை கண்டுபிடியுங்கள்: மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புது தில்லி, மார்ச் 28: வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக போடப்படும் கறுப்புப் பணத்துக்கான மூலாதாரத்தைக் கண்டுபிடியுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சுந்தரேசன் ரெட்டி, எஸ்.எஸ். நிசார் ஆகியோரடங்கிய பெஞ்ச் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை முன்னணி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி தாக்கல் செய்துள்ளார். அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜரானார்.

 இந்த வழக்கில் இதுவரை ஹசன் அலி கான் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்ட பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. இதற்கான மூலாதாரத்தைக் கண்டுபிடிக்காமல் வழக்கை நடத்துவதில் பலனில்லை என்று நீதிபதிகள் கூறினர். வெளிநாடுகளில் முறைகேடாகப் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஹசன் அலிக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விவரத்தைப் படித்த நீதிபதிகள், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கடுமையாகக் குறை கூறினர். அவருக்கெதிரான பாஸ்போர்ட் வழக்கு கூட சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று அதிருப்தி வெளியிட்டனர்.

 2008-ம் ஆண்டிலிருந்து இதுவரை அனைத்து துறைகளும் தூங்கிக் கொண்டிருந்தனவா? என்று நீதிபதிகள் கடுமையாகக்கேட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் எதுவுமே நடந்திருக்காது அல்லவா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இக்குழுவில் புலனாய்வுக் குழு அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறினர்.

* ஹைதராபாத் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய விமானத்தின் டயர் வெடித்தது: கர்நாடக அமைச்சர்கள் உயிர் தப்பினர்

பெல்லாரி, மார்ச் 28: கர்நாடக அமைச்சர்கள் சென்ற தனி விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பியபோது வெடித்தது.

 ÷உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 ÷கர்நாடக சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. விருது வழங்கும் விழா திங்கள்கிழமை புதுதில்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள அமைச்சர்கள் இருவரும் தனி விமானத்தில் பெல்லாரியில் இருந்து புறப்பட்டனர்.

 ÷எரிபொருள் நிரப்புவதற்காக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் புறப்பட்டது. ஓடுதளத்தில் வேகமாக பாய்ந்த விமானம், பறப்பதற்காக மேலே ஏறியபோது எதிர்பாராவிதமாக விமானத்தின் டயர் வெடித்தது. ÷இதையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அமைச்சர்களும், அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 ÷சிறிது நேரத்திற்குப் பின்னர் வேறொரு விமானம் மூலம் ஜனார்தனரெட்டி புதுதில்லி புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீராமுலு புதுதில்லி செல்லாமல் மீண்டும் பெல்லாரி திரும்பினார்.

 ÷இச்சம்பவத்தால் ஹைதராபாத் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. டயர் எதனால் வெடித்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

* பெண் போர்ட்டர்களுக்கு ரூ.25,000 சன்மானம்: கோவா முதல்வர் அறிவிப்பு

பனாஜி,மார்ச் 28:ஆசியாவின் ஒரே பெண் கூலிகளான பாடெல் பழங்குடியினப் பெண் போர்ட்டர்களுக்கு, ரூ.25,000 சன்மானம் வழங்குவதாக கோவா முதல்வர் திகம்பர் காமத் அறிவித்துள்ளார்.

 மார்ச் 17 அன்று பட்ஜெட் தாக்கல் செய்த அவர்,கோவா விடுதலைப் பொன்விழா ஆண்டில் பாடெல் பழங்குடியினப் பெண்கள், சமூகத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக இத்தொகையை அளித்து அங்கீகரிப்பதாக கூறினார். குறைந்தது 25 வருடங்கள் பணி செய்தவர்களுக்கு இத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 பாடெல் இனப் பெண்களின் பூர்வீகம் ,18-ம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுகிசியர் காலத்திலிருந்து தொடங்குவதாகத் தெரிகிறது.

 பாடெல் இனப் பெண்கள் கடைகள் மற்றும் வியாபாரத் தலங்களில் கூலிகளாக பணியாற்றுபவர்கள். முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக ஜாக்குயினா கொலோக்கோ என்ற பாடெல் இனப் பெண்மணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

* ராஜஸ்தானில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் மோசடி

ஜெய்பூர், மார்ச் 28: ராஜஸ்தான் மாநில 10, 12-ம் வகுப்பு தேர்வில், விடைத்தாளை மாற்றும் மோசடியில் ஈடுபட்ட கும்பலை சவாய் மாதோபூர் மாவட்ட போலீஸôர் திங்கள்கிழமை பிடித்துள்ளனர்.

 அரசு ஊழியர்கள் துணையுடன் விடைத்தாள்களை கைப்பற்றும் இக்கும்பல், அதில் சரியான விடைகளை எழுதி, மாணவர்கள் பயன்படுத்திய தாளுக்கு பதிலாக அவற்றை ஆஜ்மிரில் உள்ள திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைப்பதற்காக மாணவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளதும் போலீஸôர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 இது குறித்த தகவல் பேரில் திடீர் சோதனை நடத்திய போலீஸôர், காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த மான்சிங் மீனா, ராஜேஷ் மீனா, மையத்தின் பொறுப்பாளர் ஓம்பிரகாஷ் குமாவத் மற்றும் அரசு அலுவலர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

 இவர்கள் அனைவரும் சரியான விடைகள் எழுதிய தாள்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
 இவற்றை பெற்றுச்செல்ல வந்திருந்த மாணவர்கள் 8 பேரையும் போலீஸôர் சுற்றிவளைத்து பிடித்தனர். மற்ற மாணவர்கள் தப்பியோடிவிட்டனர்.
 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களும், ஏராளமான புத்தகங்களும் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 இதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் ஓம்பிரகாஷ் குமாவத், ஷம்புதயாள் ஷர்மா, முகேஷ் ஹரிஜன் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு முறையான சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறை தலைவர் சுபாஷ் கார் தெரிவித்தார்.

* ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை, மார்ச் 28: கடந்த வாரம் முழுவதும் உயர்வை அடைந்து வந்த ரூபாயின் மதிப்பு திங்களன்று சரிவைச் சந்தித்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ. 44.78 ஆக இருந்தது.

 முந்தைய வார இறுதியில் ஒரு டாலரை வாங்க வேண்டுமெனில் ரூ. 44.67 தர வேண்டியிருந்தது. ஆனால் இந்த நிலைமை திங்களன்று மாறியது.

இதனால் ஒரு டாலருக்கு ரூ. 44.78 தர வேண்டியதாயிற்று. மாற்று மதிப்பு 11 காசுகள் சரிந்தது. வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை மிக அதிக அளவில் வாங்கியதால் இதன் மதிப்பு சரிந்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர் தெரிவித்தார். டாலருக்கு நிகரான மாற்று மதிப்பில் பிற நாடுகளின் கரன்சி மதிப்புகளும் உயர்ந்தன. நிதி நிலையைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து டாலரின் மதிப்பு ஸ்திரமடைந்தது.

* கஃபே விற்பனையகம்: பிரிட்டானியா திட்டம்

மும்பை, மார்ச் 28: பிஸ்கட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் காபி விற்பனையகங்களை (கஃபே) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

 சர்வதேச அளவில் "ஸ்டார் பக்ஸ்' நிறுவனம் பிரபலமாக உள்ளது. இந்தியாவிலும் இந்நிறுவனம் தடம் பதிக்க உள்ளது. இதற்குப் போட்டியாக இந்தியாவில் பிரபலமாக கஃபே விற்பனையகங்களை அமைக்க பிரிட்டானியா முடிவு செய்துள்ளது. ஒரு விற்பனையகத்துக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின் அங்கமான டெய்லி பிரெட் குர்மெட் ஃபுட்ஸ் லிமிடெட் மூலம் இத்தகைய விற்பனையகங்களை அமைக்க பிரிட்டானியா திட்டமிட்டுள்ளது.

 முதல் கட்டமாக பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கோவாவில் இத்தகைய விற்பனையகங்களை திறக்க உள்ளது. ஒரே ஆண்டில் 75 விற்பனையகங்களைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலச் செய்தி மலர் :

* அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது: தேர்தல் ஆணையம்



சென்னை, மார்ச் 28: தேர்தலின்போது அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை எதிர்த்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன், மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 இது தவிர, முதல்வரின் அறிக்கையும் வழக்காக விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

 இந்த அனைத்து வழக்குகளும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

 அப்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்தார்.
 அதில் அவர் கூறியிருப்பதாவது:

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்த முழு அதிகாரம் உள்ளது. அதை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 தேர்தலுக்காக ஒரு குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்துவதும், குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

 நமது நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்துவதும், தனிநபர் அல்லது கட்சியின் பண பலத்தால், ஜனநாயக நடைமுறை தோல்வியுறாமல் பார்த்துக் கொள்வதும், தேர்தல் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி தேர்தல் குற்றங்களைத் தடுப்பதும் ஆணையத்தின் கடமை.

தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை என்பது தவறு. அரசின் தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்ற போலீஸ் அதிகாரிகள், உள்துறைச் செயலர் ஆகியோருடனும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன.

 தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. அதனால், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

 ஒரு தொகுதியின் முடிவு குறித்து வெளியிடப்படும் அறிவிப்பு மற்ற மாநிலங்களில் நடைபெறும் வாக்குப் பதிவைப் பாதிக்கும். அதனால் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

"மாநில அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும்'

 சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:

 தேர்தல் ஆணையம், தேர்தலை நியாயமாக, நேர்மையாக, வெளிப்படையாக நடத்துவதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

 தேர்தல் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வெற்றி கிடைக்கிறதென்றால் அந்தப் பெருமை மாநில அரசையும் சாரும்.

 எனினும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது தேர்தல் ஆணையம் மாநில அரசையும் கொஞ்சம் கலந்தாலோசித்தால் நன்றாக இருக்கும்.

 ஏனெனில், தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவரை டி.ஜி.பி. பணியில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

 மேலும், மாற்றப்படும் அதிகாரிகளுக்குப் பொறுப்பு வழங்கப்படாதபோது அவர்களுடைய பணி பதிவேட்டில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. எனவே, அவ்வாறு மாற்றப்படுகிறவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று கூறினார்.

* தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக்கு காரணம் என்ன? நரேஷ் குப்தா

சென்னை, மார்ச் 28: தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு, முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள்தான் காரணம் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.

 தமிழகம், புதுவைக்கான மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் தேர்தல் விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இதில் நரேஷ் குப்தா பேசியதாவது: ஒரு நாட்டின் ஜனநாயக மரபைக் காப்பது தேர்தல். ஆனால் அந்தத் தேர்தல் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்.

 இதற்கு காரணம் தேர்தலின்போதும் தேர்தலுக்குப் பிறகும் நடைபெறும் முறைகேடுகள்தான்.

 நமது நாட்டில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் காலத்துக்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வருகிறது. அதற்குக் காரணம் முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள்தான்.

 ஒவ்வொரு சட்டபேரவைத் தொகுதிக்கும் ரூ.16 லட்சம்தான் செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் விதிமுறையை வகுத்துள்ளது.
 ஆனால், உண்மையில் நடப்பது என்ன என்பது மக்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கு என தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம்தான் பணத்தைச் செலவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 அதேபோல தேர்தல் நடவடிக்கைகளை விடியோ மூலம் படம்பிடித்தல், அவற்றை இன்னொரு குழு கண்காணித்தல், தங்கள் தொகுதிகளில் நடைபெறும் முறைகேடுகளை பொதுமக்களே படம் பிடித்து அனுப்புதல் போன்ற விதிமுறைகளையும் ஆணையம் வகுத்துள்ளது.

இவை அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவை. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்து "49-ஓ' விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்யலாம். 49-ஓ படிவத்தை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தலில் மக்கள் தங்களது சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழக்காமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.

 முன்னதாக, தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக ட்ற்ற்ல்://ச்ழ்ங்ங்
 ச்ஹண்ழ்ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ர்ழ்ஞ்/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

 இந்தக் கருத்தரங்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எம்.ஜி.தேவசகாயம், ஆண்ட்ரூஸ், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் டாக்டர் வி.சுரேஷ், பத்திரிகையாளர்கள் டி.ராமகிருஷ்ணன், ஆரோக்கியவேல், சாம் ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


* மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த அதகப்பாடி மக்கள் எதிர்ப்பு: சின்னங்கள் அழிப்பு, வீடுகளில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 28: மத்திய அரசின் மின் கட்டமைப்பு கழகத்துக்கு (பவர் கிரிட் கார்ப்பரேஷன்) நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தருமபுரி அருகே உள்ள அதகப்பாடி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கிராமங்களில் எழுதப்பட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் தேர்தல் சின்னங்களையும் அழித்தனர்.

 ÷மேலும், வீடுகள்தோறும் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. தருமபுரி- பென்னாகரம் சாலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
 ÷மத்திய அரசின் மின் கட்டமைப்புக் கழகத்துக்காக அதகப்பாடியில் 150 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் தேர்வு செய்துள்ளனர்.

 ÷இந்த நிலத்தை நம்பி அதகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

 ÷வேளாண்மைக்கு உகந்த மண்வளம் மிக்க இந்த நிலத்தில் தக்காளி, அவரை, நெல், கத்தரி, பூ ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது. மேலும், தருமபுரி மாவட்டத்திலேயே வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு பருத்தி விளைச்சலும் அதிகம் உள்ளது.
 ÷இப்போது, இந்த நிலத்தை மின்கட்டமைப்பு கழகத்துக்கு கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ÷இந்த நிலத்தில் தாழ்த்தப்பட்டோர் காலனி, பெருமாள் கோயில், உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. அதகப்பாடி கிராமத்துக்கு அருகிலேயே அரசின் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு மின் கட்டமைப்பு கழகத்தை நிறுவ வேண்டும் என்றும் தங்களது கிராமத்தில் நிறுவக்கூடாது எனவும் வலியுறுத்தி திங்கள்கிழமை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

÷கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்று திரண்டு தருமபுரி-பென்னாகரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 ÷தகவலறிந்து வட்டாட்சியர் இரா. கமலநாதன், பென்னாகரம் டிஎஸ்பி குருசாமி, இண்டூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசினர்.

 ÷நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தால் வருவாய்த்துறை மூலம் அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 ÷இருப்பினும் கிராம மக்கள், கிராமங்களில் வரையப்பட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் தேர்தல் சின்னங்களையும் அழித்துள்ளனர். வீடுகள் தோறும் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர். கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

* தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, மார்ச் 28: தமிழகம், புதுவையில் ஒரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மாநிலத்திலேயே அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

 இதர இடங்களில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): சிவகிரி 30, பெரியாறு அணை 10.

 திருநெல்வேலி...:தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு திங்கள்கிழமை வெயில் கொளுத்தியது. திருச்சி 99, மதுரை, வேலூர் 97, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர் 95, சென்னை, கடலூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி 93, நாகப்பட்டினம், தூத்துக்குடி 91.

 சென்னையில்...: நகரில் வானம் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருக்கும்

* தேர்தல் விதி மீறல்: 2,625 வழக்குகள் பதிவு

சென்னை, மார்ச் 28: தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக அரசியல் கட்சியினர் மீது இதுவரை 2,625 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என டிஜிபி போலாநாத் தெரிவித்தார்.

 இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 28,909 இடங்களில் 54,016 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

 இவற்றில் பாதுகாப்பு பணிகளில் போலீஸôர் 57,021 பேரும், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 32,195 பேரும், முன்னாள் ராணுவத்தினர் 17 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 பாதுகாப்பு பணிகளுக்காக 200 கம்பெனி துணை ராணுவம் கோரப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
 இப்போதைய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் மேலும் 85 கம்பெனி துணை ராணுவம் வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக கூறியுள்ளது.

 அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கருதபட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 வாக்குச்சாவடிகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் துணை ராணுவத்தினர் அடங்கிய 8,252 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், அனைத்து வாக்குச்சாவடிகளும் துணை ராணுவத்தினரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும். தேர்தல் விதிகளை மீறியதாக வந்த புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மீது இதுவரை 2,625 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* சிரித்துப் பழகுங்கள் இதய நோய்க்கு "டாடா' சொல்லுங்கள்

இதய நோய் சிகிச்சை நிபுணர் சம்பத்குமார்: குறித்த நேரத்தில் வேலைக்கு கிளம்ப, குடும்பத்துடன் கலந்து பழக நேரத்தை திட்டமிட வேண்டும். பதட்டத்திற்கு இடம் தராதீர்கள், வெயிட்டான எந்தப் பொருட்களையும் நின்ற நிலையிலிருந்து தூக்காதீர்கள். கீழே உட்கார்ந்த நிலையிலிருந்து தூக்குவது இதயத்திற்கு நல்லது. உணவை ரசித்து உண்ணுங்கள். எப்போதும் கலகலவென சிரித்துப் பேசிப் பழக வேண்டும்.

எப்போதும் கவலையுடன் படுக்கச் செல்லாமல், நல்ல ஓய்வு கொள்கிறேன். நிம்மதியாகத் தூங்கி கண் விழிப்பேன், என எண்ணி தூக்கத்தில் ஆழ்ந்து விடுங்கள். நல்ல தூக்கம் பரிபூரண ஆரோக்கியம் தரும். இதயத்திற்கு நெருக்கடி தரும் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை தொடாமல் இருப்பது நல்லது. தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் வயது எதுவானாலும், சரி உடற்பயிற்சி அவசியம். நாள் தோறும் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு குறையாமல் நடந்தால், எந்த இதய நோயாக இருந்தாலும், அது தீவிரமடையாமல் தடுக்கலாம். நார்பொருட்கள் மிகுந்த காய்கறிகளை உண்ண வேண்டும். முட்டையின் வெள்ளைக் கருவை எப்போதும் சாப்பிடலாம். மஞ்சள் கருவை தவிர்க்கலாம்.

சூரிய காந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளைத் தான் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயம் இதய பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம். வருடத்திற்கு ஒரு முறை "டி.எம்.டி.' எடுத்து பார்த்துக் கொள்வது நல்லது.

வர்த்தகச் செய்தி மலர் :

* ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
மார்ச் 28,2011,15:58

மும்பை : வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய வர்‌த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 127.50 புள்ளிகள் உயர்ந்து 18943.14 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 33 புள்ளிகள் அதிகரித்து 5687.25 என்ற அளவிலும் முடிவடைந்தது. பைனான்சியல், இன்ப்ராஸ்ட்ரெக்சர், வாகன நிறுவனங்கள் மற்றும் எப்எம்சிஜி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் சென்செக்ஸ் 19 ஆயிரம் வரையிலும், நிப்டி 5700 புள்ளிகள் வரையிலும் உயர வழிவகை செய்தது என்று கூறினால் அது மிகையல்ல. மதியம் 02.53 மணிவாக்கில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் அதிகரித்து 18,980 என்ற அளவிலும், நிப்டி, 43 புள்ளிகள் உயர்ந்து 5,697 என்ற அளவிலும் இருந்தது. லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்‌டெல், ரிலையன்ஸ் இன்‌ப்ராஸ்ட்ரெக்சர், இந்துஸ்‌தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் 2 முதல் 3.5 சதவீதம் ஏற்றம் கண்டன. முன்னணி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏற்றம்‌ பெற்றிருந்தபோதிலும், சன் பார்மா, இன்போசிஸ், ஸ்டெர்லைட், டிஎல்எப், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரான்பாக்சி, ரிலையன்ஸ் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விற்றமயமாகவே இருந்தன.


விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்தியா பாக்., கிரிக்கெட் போட்டி: கிலானி கருத்து

இஸ்லாமாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான அரையிறுதிப்போட்டி இருநாடுகளும் தங்களால் ஒன்றாக விளையாடி முடியும் என்றும், அதே நேரத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்றாக சிந்திக்க முடியும் என்பதைக் காட்ட ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி தெரிவித்துள்ளார்

ஆன்மீகச் செய்தி மலர் :

*பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: அலைமோதிய பக்தர் கூட்டம்
TN_111612000000.jpg
                                                 நன்றி - தின மலர்



ஈரோடு: விடுமுறை நாளான நேற்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா களைக்கட்டியது. விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றினர். ஈரோடு பெரிய மாரியம்மன், வகையாறா கோவில்களான நடுமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா 15ம் தேதி பூச்சாட்டுதல், 19ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதலுக்கு பிறகு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து, கம்பத்துக்கு நீரூற்றி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், நீர்மோர் தினசரி வழங்கப்படுகிறது. நேற்று விடுமுறை என்பதால் ஈரோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தனித்தனி குழுக்களாக காவிரியில் குவிந்தனர். விமான அலகு, முதுகில் அலகு என பல்வேறு வகையான அலகு குத்தியும், தீர்த்த குடம் எடுத்தவாறு காவிரியில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் வரை சாரைசாரையாக வந்த வண்ணம் இருந்தனர். நேற்று அதிகாலை முதல் பன்னீர்செல்வம் சிக்னல் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு கூட்டம்
அதிகமானதால் பன்னீர் செல்வம் பூங்கா, வணிக வரி துறை ஆகிய இரு பக்கத்திலும் பேரிகார்டு மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது. இவ்வழியாக வாகனங்கள்அனுமதிக்கப்படவில்லை. காமராஜ் வீதி, என்.எம்.எஸ்., காம்பவுன்ட், திருவேங்கடசாமி வீதி வழியாக வாகனங்கள் சென்றன. விடுமுறை நாளான நேற்று பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா களை கட்டியதோடு, கோவில் கடைகளும் களை கட்டியது.

* * அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் - ஈரோடு.

மூலவர் :  பெரிய மாரியம்மன்
தல விருட்சம் : வேப்பமரம் 
 பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
 -ஊர் :  பிரப் ரோடு
 மாவட்டம் :ஈரோடு
 மாநிலம் : தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

இக்கோயிலின் தேரில் சிவபெருமான், முருகன் திருவிளையாடல்களை காணலாம். தேரின் நான்கு முனைகளிலும் அழகிய நான்கு யானைகள் தாங்குவதை போல் சிற்பங்கள் இருக்கிறது.

பிரார்த்தனை
     
  வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள் பாலிக்கிறாள்.

பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

 தலபெருமை:
கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், தூரியும் அழகுற விளங்குகிறது. வேப்பமரத்தை தல விருட்சமாக கொண்டது இக்கோயில். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 7.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.

பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் கோயில், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது.

பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். ஜாதி, மதம், இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற விழாவாகும்.

மக்கள் குழுக்களாக கூடி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

மூன்று கோயில்களிலும் உள்ள கம்பங்களை எடுத்து வாய்க்காலில் விடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கம்பங்களுக்கு மஞ்சள் நீர் வார்த்து பயபக்தியுடன் வழிபாடு செய்வர்.

மக்கள் ஒருவர்மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வது வடநாட்டு ஹோலி பண்டிகையை நினைவூட்டும்.

தல வரலாறு:
இக்கோயில் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது.

திருவிழா:
     
  இக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனி தேர்த்திருவிழாவாகும். ஒவ்வொரு பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை விழா ஆரம்பித்து அன்று இரவு பூச்சாட்டுதல் நடைபெறும். பின் அதை தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, கரகம் எடுத்தல், பொங்கல், தேரோட்டம் இறுதியாக கம்பத்தை எடுத்து காரை வாய்க்காலில் விடுதல் முதலிய நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

கிருஷ்ண ஜெயந்தி - பகவத்கீதை
* * வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.

தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

வினாடி வினா :

வினா - இந்திய அணுசக்தி கமிஷனின் முதல் தலைவர் யார் ?

விடை - டாக்டர் ஹோமி பாபா


இதையும் படிங்க :

கடலில் பணி செய்தால் வருமான வரி கிடையாது: நிபுணர் நரசய்யா பேச்சு.
மதுரை : "" உலகில் அதிகளவு சம்பளம் பெற்றுத் தரும் கடல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது, என மதுரையில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல்சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ., நரசய்யாதெரிவித்தார்.கடல்சார் படிப்புகளுக்கான
வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது: உலகில் பெரும்பகுதி கடலாக உள்ளது. கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே கடல் வணிகம் செய்யப்பட்டதை, நாம் மறந்து விட்டோம். கடலை தன்வசம் வைத்திருந்தவர்கள் தான் உலகை ஆள்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் வணிகத்தைப் பொறுத்தது. அந்த வணிகத்திற்கு நாடு அளிக்கும் சேவையைப் பொறுத்து மாறுபடும். பெரிய அளவிலான சேவைகள் அனைத்தும் கடல் வணிகம் மூலமே நடக்கிறது. இதுவே நாட்டின் சக்தியை பெருக்குகிறது.

நாட்டின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் உயரவேண்டுமெனில், கடல்வழி பொருளாதாரம் 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும். உலக வரிசையில் இந்தியா, சீனா மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்தாலுமசீனாவில் ஆங்கில மொழியறிவு குறைவு. எனவே, சீனர்களால் கடல் பணிகளில் சேர இயலவில்லை. கடல் பணிகளில் சேருவதற்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். வெளிநாட்டு கப்பல்களில் மாலுமிகளாக, சேவையாளர்களாக இந்தியர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்.

மரைன் இன்ஜினியரிங் படிப்பதற்கு பிளஸ் 2 வில் குறைந்தபட்சம் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தனித்தனியாக 60 சதவீதமும், மொத்தமாக 60 சதவீத மதிப்பெண்ணும் பெறவேண்டும். நல்ல உடற்திறன், கண்பார்வை வேண்டும். நாட்டிகல் சயின்ஸ் படிப்பில் மூன்றாண்டுகள் கல்லூரியிலும், ஓராண்டு கப்பலிலும் செய்முறை பயிற்சி பெற வேண்டும். மதுரையில் ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.

இந்தியாவில் மும்பை, கோல்கட்டாவில் உள்ள நான்கு அரசு பயிற்சி மையங்களில் படிக்கலாம். பயிற்சிக்கு பின் இளநிலை பொறியாளராகலாம். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தால், ஓராண்டு மரைன் பயிற்சி பெற்று மரைன் இன்ஜினியர்களாகலாம். கடல் பணிக்கு சென்ற பின், விருப்பமில்லை என சொல்லக் கூடாது என்பதால் இப்படிப்பிற்கு உளவியல் ரீதியாக மனதை அறிந்து கொள்ளும் "சைக்கோமெட்ரிக்' தேர்வு நடத்தப்படுகிறது.

மாலுமியாவதற்கு எல்லா நிலைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய மாலுமிகளையே விரும்புகின்றனர். கப்பலில் ஆறுமாதங்கள் மாலுமியாக பணியாற்றினால், ஆறுமாத விடுப்பு கிடைக்கும். தற்போது மனைவி, இரண்டு குழந்தைகள் கப்பலில் செல்லலாம் என்ற சலுகையும் உள்ளது. ஆனால் கப்பலில் பணிசெய்வது சற்றே கடுமையான விஷயம். கடின உழைப்பிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

கப்பல் போக்குவரத்து, ஆண்டுதோறும் ஏழு சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் போது சேவையாளர்களின் பணியிடங்களும் அதிகரிக்கும். எனவே பணிவாய்ப்பு அதிகமுள்ள துறையாக உள்ளது. இந்தியாவில் கடல்துறை அலுவலர்கள் 8,900 பேரும், வெளிநாடுகளில் 18 ஆயிரம் பேரும், இந்தியாவில் 21 ஆயிரம் சேவையாளர்களும், வெளிநாடுகளில் 34 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். கடலில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கினாலும், வருமான வரி பிடித்தம் செய்வதில்லை. 2015ல் பணியிடத்தின் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும். பெண்களுக்கு கல்வி கட்டணத்தில் 30 சத சலுகை வழங்கப்படுகிறது. கடல்துறையிலிருந்து வெளியே வந்த பின், பல்வேறு நிறுவனங்களில் தொடர்ந்து பணி வாய்ப்பு பெறலாம், என்றார்.






வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!




நன்றி - தின மணி, தின மலர்.



No comments:

Post a Comment