Sunday, March 20, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 20 - 2011.








முக்கியச் செய்தி :

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி

"குற்றப் பின்னணியில் உள்ள வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவில், குற்ற வழக்குகள் குறித்த முழுத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், வேட்பாளரின் குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் இலவசமாக தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஓட்டு போடும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி உண்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. எனவே, போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் பின்னணி விவரங்களை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் புதிய முறையிலான வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்றும், இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தேர்தல் கமிஷன் அதிரடியாக தற்போது ஒரு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, எல்லா தேர்தல் அதிகாரிகள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்த புதிய நடைமுறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளர் மீது சட்டப்படி கோர்ட்டில் உள்ள வழக்குகள் அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரம்;எந்த கோர்ட்டில், எந்த பிரிவின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; கோர்ட்டின் பெயர், வழக்கு எண், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட தேதி; தீர்ப்புகள் வழங்கப்பட்டு அதற்கு மேல் முறையீடுகள் அல்லது மறு ஆய்வு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற விவரம்; வழக்குகளில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, கோர்ட்டில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்றால், அந்த வழக்குகள் குறித்த விவரம், எந்த பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; கோர்ட்டுகளின் பெயர், வழக்கு எண், கோர்ட்டு உத்தரவுகளின் விவரம்; தண்டனை காலம் குறித்த தகவல்களை குறிக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு வேட்பாளர் குறித்த தகவல்கள்களை வாக்காளர்களுக்கு இலவசமாக தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த விளக்கத்தில், "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தங்களின் முந்தைய கால வரலாறு குறித்த வாக்குமூலத்தை தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக கட்டாயப்படுத்தி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அது குறித்த விவரங்களை தேர்தல் அதிகாரி, நகல் எடுத்து அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். மேலும், வேட்பாளர்கள் குறித்த விவரங்களை அறிய விரும்பும் பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் நகல் எடுத்து இலவசமாக அளிக்க வேண்டும். வேட்பாளர்களின் விவரங்களை அறிய விரும்பும் பொதுமக்களுக்கு அவற்றை தேர்தல் அதிகாரி அளிக்க மறுக்கக் கூடாது. வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்தல் அதிகாரிகள் பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்க வேண்டும்'என, தெரிவித்துள்ளது.

உலகச் செய்தி மலர் :

* பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள்-விக்கிலீக்ஸ்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களை மேற்கோள் காட்டி ஈழத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

பிரபாகரன் மறைந்திருந்த பகுதியில் ராணுவம் கடும் குண்டுவீச்சை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி பீட்டர் பர்லர், வாஷிங்டனுக்கு குறிப்பு அனுப்பினார்.

இருப்பினும் இதை சீனா மட்டும் விரும்பவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் மீது விஷமப் பார்வை பார்த்த மேனன்

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரை பாராட்டும் வகையில் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கருத்து தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் மேனன் பேசுகையில், புலிகள் மீது இலங்கை ராணுவம் தான் எதிர்பார்த்ததை விட கடும் போர் மேற்கொள்வதாக கூறியுள்ளார் மேனன்.

* கதிர்வீச்சு அதிகரித்ததால் அணு உலைகளை புதைக்க ஜப்பான் யோசனை!
சனிக்கிழமை, மார்ச் 19, 2011, 12:00[IST]



டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி, பூகம்பமும், சுனாமியும் தாக்கி பேரழிவை உண்டாக்கின. ஃபுகுஷிமா என்ற இடத்தில் 6 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 4 அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. மேலும், அந்த அணு உலைகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனால் மின்சார சப்ளையும் அறுந்தது.

மின்சாரம் இல்லாமல், தண்ணீர் ஏற்ற முடியாததால், அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் தொட்டிகள் நீரின்றி வறண்டு விட்டன. இதனால், அணு உலைகள் மேலும் சூடாகி வரும் நிலையில், கதிர்வீச்சு அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. இதனால் அணு உலைகளை குளிரூட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்நீரை ஒரு ராட்சத தொட்டியில் எடுத்து, அணுஉலைகள் மீது கொட்டி, அவற்றை குளிரூட்டி வருகிறார்கள். ஆனால் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

மின்சப்ளை:

இதையடுத்து, அணு உலைகளுக்கு மின் சப்ளையை புதுப்பிக்கும் பணிகளில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்சப்ளை கொண்டுவரப்பட்டால், தண்ணீர் மோட்டாரை இயக்க முடியும் என்பதால், அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், பூகம்பத்தால், அணுஉலை மோசமாக பாதிக்கப்பட்டதால், மின்சப்ளை கொண்டுவரப்பட்டால்கூட, தண்ணீர் மோட்டார் செயல்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மீண்டும் வெடிவிபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

மண்ணில் புதைக்கத் திட்டம்:

இந்த சூழ்நிலையில், அணு உலைகளை மண்ணிலும், கான்கிரீட்டிலும் புதைப்பது பற்றி ஜப்பான் பரிசீலித்து வருகிறது. கடந்த 1986-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணு உலையில் இருந்து கடுமையான கதிர்வீச்சு வெளியானபோது, இதுபோன்றுதான், அந்த அணு உலையை மண்ணில் புதைத்து, கதிர்வீச்சை தடுத்தனர்.

எனவே, அதே பாணியில், புகுஷிமா அணு உலைகளையும் மண்ணில் புதைப்பதுதான் கதிர்வீச்சை தடுக்க ஒரே வழி என்று என்ஜினீயர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைய நிலையில், அணு உலைகளுக்கு மின்சப்ளையை கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இத்தகவலை ஜப்பான் அணுசக்தி கழக செய்தித்தொடர்பாளர் ஹிடேகிகோ நிஷியாமா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமைக்குள், 2 அணு உலைகளில் மின்சப்ளை கொண்டுவரப்படும் என்று ஓர் அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

நிபுணர் குழு ஜப்பான் விரைந்தது...

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அணு உலைகளை நேரில் பார்வையிடுவதற்காக, சர்வதேச அணுசக்தி கழக தலைவர் யுகியா அமனோ நேற்று 4 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் ஜப்பான் சென்றார்.

அணு மின் நிலையம் அருகே மீண்டும் நிலநடுக்கம்

இந் நிலையில் ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

* துபாயில் அறிவியல் தமிழறிஞருக்குப் பாராட்டு விழா

துபாயில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் அறிவியல் தமிழறிஞர் பொறியாளர் எம். ஜே. முஹம்மது இக்பால் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி 10.03.2011 வியாழக்கிழமை மாலை அல் பரஹா சக்கீனா மஜ்லிஸில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் சேமுமு. முஹமதலி அவர்கள் தனது வாழ்த்துரையில் பொறியாளர் எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்கள் நாளிதழில் தொடர்ந்து எழுதி நூலாக வெளிவந்துள்ள அறிவியல் அதிசயம் தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இடம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து அறிவியல் தமிழ் பணியில் இக்பால் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

நிகழ்வில் திருச்சி பீர் முஹம்மது, திருச்சி முஹம்மது சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேசியச் செய்தி மலர் :

* ஏப்ரல் 10ஆம் தேதி ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு  

இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. மற்றும் பி.டெக். சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 10ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்வு இந்தியா முழுவதும் 130 நகரங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 4 லட்சத்து 95 லட்சம் மாணவ மாணவிகள் இந்ததேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 65ஆயிரத்து 650 பேர் எழுதுகிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 3 ஆயிரம் பேர் குறைவாகும்.

தமிழ்நாட்டில் இந்த தேர்வு சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.

தேர்வு முடிவு மே மாதம் 25 ந்தேதி வெளியிடப்பட உள்ளது. எந்தபடிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஜுன் 27 ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

* நீதிபதி தினகரம் 16 குற்றங்களைச் செய்துள்ளார்: விசாரணைக் குழு அறிக்கை  

சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள பி.டி.தினகரன், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய நிலங்களை அபகரித்தது உட்பட 16 குற்றங்களைச் செய்துள்ளார் என்று மாநிலங்களவை அமைத்த விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.

இந்திய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமித் அன்சாரி 2009ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அமைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அஃப்தாப் ஆலம், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹார், தலைசிறந்த வழக்குரைஞர் பி.பி.ராய் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அளித்துள்ள குற்றச்சாற்று அறிக்கையில், நீதிபதி பி.டி.தினகரன் மீது கூறியுள்ள குற்றச்சாற்றுகள் வருமாறு;

. நீதிபதி தினகரன் வருவாய்க்கும் அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளார்.

2. தாழ்த்தப்பட்டோர், பலவீனமான சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் உட்பட பொதுச் சொத்துகளை சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ளார்.

3. தனது மனைவி, இரண்டு மகள்கள் பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலங்ளை பெற்றுள்ளார்.

4. தமிழ்நாடு நில உச்சரவரம்புச் சட்டத்தை ஏமாற்றி, பினாமி பெயர்களில் வேளாண் நிலங்களை வாங்கியுள்ளார்.

5. தன் மீதான குற்றச்சாற்றை உறுதி செய்யும் ஆதாரங்களை அழித்துள்ளார்.

6. விற்பனைப் பத்திரங்களில் சொத்துக்களின் மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளார்.

7. பத்திரப் பதிவு கட்டணங்கள் மோசடி.

8. சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள்.

9. கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருந்தபோது தனக்கு விருப்பமான நீதிபதிகளை நியமித்து நேர்மையற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

10. சட்டதிற்குப் புறம்பாக நீதிபதிகளை மாற்றல் செய்தது, நீதித்துறை ஊழியர்களை மாற்றம் செய்து உள்ளிட்ட குற்றங்கள் புரிந்துள்ளார் என்பது உள்ளிட்ட 16 குற்றங்களைச் செய்துள்ளதாக விசாரணைக் குழுவின் குற்றச்சாற்று அறிக்கை கூறுகிறது.

இந்த குற்றச்சாற்றுகளுக்கு தனது வழக்குரைஞரை நியமித்து ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்கமாறு நீதிபதி தினகரன் பணிக்கப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பி.டி.தினகரன் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அவரை நீதிமன்றப் பணியில் இருந்து நீக்க்க கோரும் தீர்மானம் மாநிலங்களவையில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிபதி தினகரன் மீதான குற்றச்சாற்றை விசாரிக்க இக்குழு நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* மத்திய அமைச்சர் அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

புது தில்லி, மார்ச் 19: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய அமைச்சர் அழகிரியை தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி அரசு முறைப் பயணமாக தில்லியிலிருந்து சென்னைக்கு மார்ச் 2-ம் தேதி விமானத்தில் பயணம் செய்தார். அங்கிருந்து மார்ச் 4-ம் தேதி மதுரைக்குச் சென்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகளை மேற்கோள்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது.

 இதுதொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு மார்ச் 5-ம் தேதி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. மறுநாள் இதற்கு அழகிரி பதில் அளித்திருந்தார்.

 தான் முதல் முறையாக மக்களவை உறுப்பினரானதால் தனக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் தனது விளக்கத்தில் அழகிரி தெரிவித்திருந்தார்.

 முதல் முறை எம்.பி. என்பதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

இதையடுத்து அரசுப் பயணமாக அவர் தில்லியிலிருந்து சென்னைக்கும் அதன் பிறகு மதுரைக்கும் சென்ற வகையில் ஏற்பட்ட விமானக் கட்டணம் உள்ளிட்ட இதர பயணக் கட்டணங்கள், தங்கும் விடுதி ஆகிய செலவு தொகையை அரசுக்குத் திரும்பச் செலுத்தவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது அவர் கவனமாக இருக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

* ஒப்புதலுக்காக காத்திருக்கும் ரூ. 7,936 கோடி நெடுஞ்சாலை திட்டம்

புது தில்லி, மார்ச 19: மொத்தம் 7 நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 7,936 கோடியாகும். தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை ஆய்வு செய்யும் குழு (பிபிபிஏசி) ஒப்புதலுக்காக இத் திட்டப்பணிகள் காத்துக் கிடக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 967 கி.மீ. தூர நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டப் பணிகளுக்கான டெண்டர்கள் அமைச்சக ஒப்புதலுக்குப் பிறகு கோரப்படும். இந்தத் திட்டப் பணிகளை திட்டக் குழு, பொருளாதார விவகாரத்துறையும் ஆய்வு செய்யும்.

 மத்தியப் பிரதேசத்தில் ஒபைதுல்லா கஞ்ச், ஷாகஞ்ச், புதானி, பேதுல் பிரிவில் நான்கு வழித் தடம் 121 கி.மீ. தொலைவுக்கு அமைத்தல். திட்ட மதிப்பு ரூ. 1,152 கோடி. ஜபல்பூர்-காத்னி-ரேவா பகுதியில் 4 வழி சாலை அமைத்தல். இதன் நீளம் 226 கி.மீ. திட்ட மதிப்பு ரூ. 1906.83 கோடி.

 ஆந்திர பிரதேசத்தில் இச்சாபுரம்-அனந்தபுரம் பகுதியில் ஏற்கெனவே உள்ள 4 வழித் தடத்தை 6 வழித் தடமாக மாற்றுதல். சாலை நீளம் 212 கி.மீ. திட்ட மதிப்பு ரூ. 1,763.50 கோடி.

சத்தீஸ்கர் மாநிலம் ஒüரங் பகுதியில் 4 வழிச் சாலை ஒரிசா மாநில எல்லையை ஒட்டி 150 கி.மீ. தூரத்துக்கு அமைத்தல். திட்ட மதிப்பு ரூ. 1,234 கோடி. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 4 வழிச் சாலை 60 கி.மீ தொலைவுக்கு அமைத்தல். திட்ட செலவு ரூ. 505 கோடி. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் எல்லையில் 4 வழிச் சாலை 89 கி.மீ. தொலைவு அமைத்தல். திட்டச் செலவு ரூ. 670.82 கோடி.

 மத்தியப் பிரதேச மாநிலம் போபால்-பியோரா இடையே 4 வழிச் சாலை 105 கி.மீ. தொலைவு அமைத்தல். திட்டச் செலவு ரூ. 704.26 கோடி. மொத்தம் 967 கி.மீ. தூர நெடுஞ்சாலை ரூ. 7,936.41 கோடி செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

* மாவோயிஸ்டுகள் மிரட்டல்: ஒரிசாவில் ரயில் சேவை நிறுத்தம்



ரூர்கேலா, மார்ச் 19: மாவோயிஸ்டுகளின் மிரட்டல் எதிரொலியாக ஒரிசா மாநிலம் ரூர்கேலா, பர்சுவா இடையே ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

 ஒரிசா-ஜார்க்கண்ட் எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரூர்கேலா-பர்சுவா பாதையில் உள்ள தோபாதிஹி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்பாதைகளில் போஸ்டர்களை ஒட்டியதோடு, சிவப்பு நிற பேனர்களையும் மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனர். இதனால் இங்கு பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
 ஆனால் ரூர்கேலா உருக்காலைக்கும்- இரும்பு சுரங்கத்துக்கும் இடையில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

* ஸ்ரீகாகுளத்தில் அணுமின் நிலையம்: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

விசாகப்பட்டினம், மார்ச் 19: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அமையவுள்ள அணுமின் நிலையத்துக்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 இதுபோன்ற அணுமின் நிலையங்கள் ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள குவாடா கிராமத்தில் அணுமின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அந்த மாவட்டத்தில் சுமார் 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து "அணு வியாதிரிகா போராட்ட சமிதி' என்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

 இந்தப் பகுதியில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை திரும்பப்பெற கோரி மண்டல வருவாய் அதிகாரியிடமும் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

 இங்கு அணுமின் நிலையம் அமைந்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வதாரமும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இங்கு அணுமின் நிலையம் அமைந்தால், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புக்குள்ளாகும்போதும் அது ஜப்பானில் இப்போது ஏற்பட்டுள்ளதைப் போன்று பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. விரைவில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் மூலம் மின் உற்பத்தி தொடங்கவிருக்கிறது. கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை கடல்பகுதியிலே அமைந்துள்ளது. இங்கு நிலநடுக்கம் ஏற்படவும், சுனாமி தாக்கவும் அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஜப்பானில் சுனாமி தாக்கியத்தில் 4 அணு உலைகள் வெடித்துள்ளன. இதில் இருந்து அணுக்கதிர்கள் வெளியேறி வருகின்றன. அதனால் பெரும் பாதிப்பு நேரக்கூடும் என்ற அச்சத்தில் ஜப்பான் உள்ளது

* பள்ளிக்கே வராத அரசு ஆசிரியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

ஜம்மு, மார்ச் 19: ஜம்மு - காஷ்மீர் மாவட்டத்தில் பல நாள்களாக பள்ளிக்கே வராமல் சம்பளம் மட்டும் பெற்று வந்த 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 காஷ்மீர் மாநில கிராமப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் பள்ளிக்கு வருவதும், சில நாள்களில் பள்ளிக்கே வராமல் இருப்பதாகவும் மாநில கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

 ஆசிரியர்களே வராததால், பூட்டப்பட்டிருக்கும் பள்ளி முன்பு மாணவர்கள் காத்திருந்துவிட்டு திரும்பச் செல்லும் நிலையும் பல இடங்களில் இருந்தது.

 இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்வித் துறை அதிகாரிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது பல்வேறு பள்ளிகளில் 10 ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கால வரையறையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் முன்பு திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* கார் விலையை உயர்த்துகிறது டாடா

மும்பை, மார்ச் 19: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா தனது கார்களின் விலையை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை உயர்த்துகிறது.

 ÷இந்த விலை உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதை அடுத்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 ÷விஸ்டா, இண்டிகோ சிஎஸ் ரக கார்கள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரையிலும், மான்சா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், சுமோ ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், கிராண்டே ரூ. 16 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரையிலும், சஃபாரி ரக கார் ரூ. 18 ஆயிரம் முதல் 29 ஆயிரம் வரையிலும் விலை அதிகரிக்கிறது. ஆரியா ரக கார்களின் விலையும் உயர்கிறது. ஆனால் நானோ கார்களின் விலை உயர்த்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டாடா நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஹோண்டா, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களும் கார்களின் விலை உயர்த்தும் எனத் தெரிகிறது.

* ரயில் பாதையில் இருந்து வெளியேறியது ஜாட் போராட்டக் குழு

மொரதாபாத், மார்ச் 19: அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு வழிவிட்டு அங்கிருந்து வெளியேறினர் ஜாட் போராட்டக் குழுவினர்.

 கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் ரயில் பாதையில் மறியலில் ஈடுபடுவோம் என போராட்டக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

 அதேசமயம் உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜாட் போராட்டக் குழு தலைவர்கள் தில்லி விரைந்துள்ளனர்.

 மத்திய அரசுப் பணியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓ.பி.சி) கீழ் தங்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாட் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அதன் ஒருபகுதியாக அவர்கள் ரயில் பாதைகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் கொட்டகை அமைத்து அங்கேயே தங்கினர். இதனால் ரயில், பஸ் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
 இதையடுத்து ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஜாட் போராட்டக் குழுவினரை அங்கிருந்து அகற்றுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அதன்பேரில் போராட்டம் நடத்தப்பட்ட ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஜாட் போராட்டக் குழுவினர் அங்கிருந்து

* திபெத்திய பிரதமர் இன்று தேர்வு

தர்மசாலா (இமாசலப் பிரதேசம்) மார்ச் 19: நாடுகடந்து வாழும் திபெத்தியர்களின் பிரதமர், ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்படுகிறார்.

 ÷இதற்கான தேர்தலில் பல்வேறு நாடுகளில் வாழும் சுமார் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

 ÷முன்னதாக அனைத்து அரசியல் பொறுப்புகளில் இருந்தும் விலக விரும்புவதாகவும், நாடு கடந்துவாழும் திபெத்தியர்கள் இனி திபெத் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கடந்த வாரம் அறிவித்தார்.
 இதனையடுத்து இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. லாப்சாங் சாங்காய், டென்ஸின் நம்கியால், தாஸி வாங்தி ஆகியோர் களத்தில் உள்ளனர். முதல் இருவரும் வெளிநாடுகளில் பல்கலைக்கழக அளவில் கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றனர். தாஸி வாங்தி, தலாய்லாமாவின் பிரதிநிதியாக பெல்லியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ், தில்லி, நியூயார்க் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறார்.

 ÷தேர்தலுக்காக இமாசலப் பிரதேசத்தில் 10, தில்லியில் 4 என வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் 86 தேர்தல் அலுவலங்களும் செயல்படுகின்றன. வாக்குப் பதிவு முடிந்தபின் பதிவான வாக்குகள் இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவுக்கு கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். ஏப்ரல் 3-வது வாரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு, ஏப்ரல் 27-ல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலின் போது எம்.பி.க்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

 ÷நாடு கடந்து வாழும் திபெத்தியர்களுக்கான பிரதமரைத் தேர்வு செய்வதே இத்தேர்தலின் முக்கிய நோக்கம். இப்போது பிரதமராக சாம்தோங் ரின்போசே உள்ளார். அவர் இருமுறை பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திபெத் சட்டத்தின்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பிரதமர் பதவியில் தொடரக்கூடாது.

மாநிலச் செய்தி மலர் :

* பிளஸ்டூ தேர்வில் குளறுபடியான கேள்விக்கு முழு மார்க்-தேர்வுகள் துறை இயக்குநர்

சென்னை: பிளஸ்டூ தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சரியான முறையில் அச்சாகாமல் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து தற்போது அந்த கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் பிளஸ்டூ கணித தேர்வு நடந்தது. இதில் ராசிபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் 1,350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கணித வினாத்தாளை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் `ஏ' பிரிவு மற்றும் `பி' பிரிவு வினாக்கள் சிலவற்றில் 1 மார்க், 6 மார்க், 10 மார்க் கேள்விகளில் டிவைடர் குறி, மைனஸ் குறி, சமக்குறிகள் போன்றவை சரியாக அச்சாகவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் குழப்பத்திற்கு ஆளானார்கள்.

சுமார் 58 மதிப்பெண்கள் வரை உள்ள கேள்விகளில் குறியீடுகள் மற்றும் எழுத்துகள் சரியாக அச்சாகவில்லை என்றும், இதனால் அந்த கேள்விகளுக்கு எப்படி பதில் எழுதுவது என்பது பற்றி குழப்பமாக இருப்பதாகவும் கூறினார்கள். வினாத்தாள்களை தேர்வு மைய அதிகாரிகளிடம் காட்டினார்கள்.

மேலும், தேர்வு எழுதி முடித்த பின்னர், கேள்வித்தாள் குளறுபடியால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளியின் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

வெண்ணந்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு நெடுஞ்சாலையின் அருகே உள்ள ஆண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்

இதையடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அங்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த குளறுபபடி குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவிக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கீரனூரில் மட்டும்தான் கணித வினாத்தாளில் 3 கேள்விகள் சரியாக அச்சாகாமல் இருந்ததாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி எந்த தேர்வு மையத்திலாவது வினாத்தாள் சரியாக அச்சாகாமல் இருந்து அதை மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல், தவறாக புரிந்து பதில் அளித்து இருந்தால் அந்த கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்.

தவறாக பதில் அளித்திருந்தாலும் மார்க் தரப்படும். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேள்வித்தாள் வரவழைக்கப்பட்டுள்ளது. எத்தனை கேள்விகள் அவ்வாறு சரியாக அச்சாகாமல் இருக்கின்றன என்பதை பார்த்து முடிவு செய்யப்படும். மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

* தேர்தல் பணிகளை கவனிக்க தனி டி.ஜி.பி

சென்னை, மார்ச் 19: தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பணிகளைக் கவனிக்க தனி போலீஸ் டி.ஜி.பி.யாக போலோநாத் நியமிக்கப்படுகிறார்.

 வேலூர், தேனி, மதுரை, ஈரோடு மாவட்டங்களின் ஆட்சியர்களும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்த உத்தரவு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என அரசின் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 புதிய ஆட்சியர்கள்: வேலூர் மாவட்டத்துக்கு பழனிகுமாரும், தேனிக்கு ஏ.கார்த்திக்கும், ஈரோடு மாவட்டத்துக்கு இ.காமராஜும், மதுரை மாவட்டத்துக்கு சகாயமும் புதிய மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்படக்கூடும் எனத் தெரிகிறது.

* சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு விரைவில் மாற்றம்- கமிஷனர் தகவல்

சென்னை, மார்ச் 19: சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு விரைவில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.

 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு, இப்போது தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 இவரது சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா (37). ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரான இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். 2-ஜி அலைக்கற்றை முறைகேட்டில் இவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து சிபிஐ விசாரித்து வந்தது.

 இந்த நிலையில், இவர் தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கடந்த 16-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இவரது மனைவி ரஹானா பானு போலீஸôரிடம் புகார் செய்தார்.

 இதன்பேரில் போலீஸôர் ஐ.பி.சி. 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் சனிக்கிழமை கூறியதாவது:

 சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக அவது மனைவி அளித்த புகாரின் பேரில் தான் போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 இந்த வழக்கு தொடர்பாக இப்போது உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து ஓரே ஒரு கடிதமும், அவரது செல் போனும் கைப்பற்றப்பட்டது.

 சாதிக்பாட்சாவின் பிரேதப் பரிசோதனை முழுவதும் விடியோவில் காட்சிப் படமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும். இதைத் தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கில் விசாரணையைத் தொடரும்.

இந்த வழக்குதொடர்பான ஆவணங்கள், சான்றுகள், கோப்புகள் ஆகியவை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார் கமிஷனர் டி. ராஜேந்திரன்.

* ஆகாஷ் ஏவுகணை திட்டத்தில் முறைகேடு; அரசு நிறுவன முன்னாள் இயக்குநர்கள் கைது: சிபிஐ அதிரடி

சென்னை, மார்ச் 19: ஆகாஷ் ஏவுகணை திட்டத்துக்காக மோடம் சாதனங்களை கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, அரசு சார்ந்த நிறுவன முன்னாள் இயக்குநர்கள் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 சென்னை தரமணி சிஐடி வளாகத்தில், சொசைட்டி ஆஃப் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜீனியரிங் அண்ட் ரிசெர்ச் (சமீர்) நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய தொடர்பு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் அதன் நிதியுதவியுடன் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் ஆகும். பாதுகாப்புத் துறை தொடர்பான அதிமுக்கிய ஆராய்ச்சி திட்டங்களை சமீர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் எஸ். கருணாகரன். இதேபோல தரமணியில் உள்ள சாம் சின் பிரிசிசன் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பி. ரத்தினவேல். இவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழர்கள் ஆவர். இதன் காரணமாக சமீர் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எஸ். கருணாகரன் கடந்த 2005 முதல் 2009 வரை, தனது பதவி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

 அதாவது, ஆகாஷ் ஏவுகணை திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த ரேடியோ லைன் மோடம் சாதனங்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து வழங்க ஒப்பந்த அனுமதியை தனது நண்பர் ரத்தினவேலுக்குச் சொந்தமான சாம் சின் பிரிசிசன் நிறுவனத்துக்கு இவர் வழங்கியுள்ளார்.

 இதுதவிர கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து ரத்தினவேல் பல்வேறு பெயர்களில் வழங்கிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கும் கருணாகரனால் ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 இதன்பின் சமீர் நிறுவனம் தணிக்கை செய்தபோது, சாம் சின் பிரிசிசன் நிறுவனம் ஒப்பந்த அனுமதி வழங்குவதற்கு பதிவு செய்யாதது தெரியவந்தது.

இதுகுறித்த புகார் தொடர்பாக சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சமீர் நிறுவனத்தின் மற்றொரு முன்னாள் இயக்குநர் கே.ஆர். கினி என்பவரும் கருணாகரனுக்கு உடந்தையாக செயல்பட்டு, மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.

 இதையடுத்து, சமீர் நிறுவன முன்னாள் இயக்குநர்கள் கருணாகரன், கே.ஆர்.கினி மற்றும் ரத்தினவேல் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதன்பின் சிபிஐ வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் இவர்கள் 3 பேரும் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

தொழில்நுட்பச் செய்தி மலர் :

* இன்டர்நெட் செயல்பாடு: ஐ போனை மிஞ்சிய ஆண்ட்ராய்ட்!



நியூயார்க்: விரைவான செயல்பாடு மற்றும் இன்டர்நெட் பக்கங்களை அதி வேகமாக லோட் செய்வதில் ஆப்பிளின் ஐபோன் 4-ஐ மிஞ்சிவிட்டது கூகுளின் ஆண்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது பிரபல சாப்ட்வேர் நிறுவனம்.

செல்போன் உலகில் மிக உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகிறது ஆப்பிளின் ஐ போன் 4 மாடல். ஆனால் இந்த செல்போனை விட சிறந்ததாக கூகுளின் ஆன்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது.

இதுகுறித்து கனடாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான பிளேஸ் சாப்ட் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் ஐபோனை விட, ஆன்ட்ராய்ட் போன் இன்டர்நெட் செயல்பாட்டில் அதிக வேகம் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஐபோனை விட ஆன்ட்ராய்ட் போன் 84 சதவீதம் அதிக வேகமாக இன்டர்நெட் பக்கங்களைத் திறப்பதாக ப்ளேஸ் தெரிவித்துள்ளது.

வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஆப்பிள் போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

வேகமான இன்டர்நெட் செயல்பாடு குறித்து ஆப்பிள் கவலைப்படவில்லை. ஆனால் கூகுள் அந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என மேலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல, இணையதள இயங்கிகளில், ஆப்பிளின் சபாரியைவிட, கூகுள் க்ரோம் பல மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது.


வர்த்தகச் செய்தி மலர் :

சென்செக்ஸ் இந்த வாரத்தில் 295 புள்ளி்கள் சரிவு  

விக்கிலீக்ஸ் வெளியீட்டால் ஏற்பட்ட அரசியல் நிலையற்றத் தன்மை, தொடர்ந்து உயர்ந்துவந்த கச்சா எண்ணெய் விலை, மிக அதிகமான முதலீட்டு வரவு ஆகியவற்றின் காரணமாக மூன்று வாரத்தில் காணாத அளவிற்கு சென்செக்ஸ் குறியீடு இந்த வாரத்தில் மட்டும் 295 புள்ளிகள் குறைந்துள்ளது.

வாக்கிறகுப் பணம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்ற விக்கிலீக்ஸின் வெளியீடு சந்தை வர்த்தகத்தை பெருமளவிற்கு பாதித்துள்ளது. அதே நேரத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறுகிய கால கடன்களின் மீதான வட்டியை மைய வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும், உயர்த்திய பின்னும் வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டது.

இதனால், 18,000திற்கும் குறைவாக சென்செக்ஸ் சரிந்துள்ளது.

* அமெரிக்க அரசின் ஊக்கத் திட்டத்தால் 36 இலட்சம் பேருக்கு வேலை!  

பொருளாதார பின்னடைவால் பாதிப்பிற்குள்ளான அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அளித்த ஊக்கத் திட்ட நிதிச் சலுகைகளால் கடந்த ஆண்டின் 4வது காலாண்டில் மட்டும் 36 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாஷிங்டனில் இத்தகவலை வெளியிட்ட அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசனை பேரவை, கடைசி காலாண்டில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3.2 விழுக்காடு வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

பொருளாதார பின்னடைவால் நலிவுற்ற நிறுவனங்களை தூக்கி நிறுத்த நிதி உதவியளிக்கும் சட்டத்தை 2009ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதன் விளைவே இது என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

இந்திய மத்திய அரசும் நமது நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 21 இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையாக அளித்தது. ஆனால் அதனால் எந்த அளவிற்கு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது என்றோ, வேலை வாய்ப்பு கூடியது என்றோ எந்த புள்ளி விவரமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் வளர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்ட அளவிற்கும் அதிகமாக பணவீக்கம் இருந்துள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* தென் ஆப்பிரிக்காவிடம் வங்கதேசம் படு தோல்வி-தப்பியது வெஸ்ட் இண்டீஸ்!

மிர்பூர்: தென் ஆப்பிரிக்காவை இன்று உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்த வங்கதேச அணி, 206 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் அது காலிறுதி வாய்ப்பையும் இழந்தது.

அதேசமயம், பி பிரிவில் மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, வங்கதேசத்தின் படு தோல்வியால் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்று விட்டது.

பி பிரிவில்இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மிர்பூரில் நடந்த போட்டியில் மோதினர். இந்தப் போட்டி வங்கதேசத்திற்கு முக்கியமானதாகும். இதில் அது வெற்றி பெற்றால் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதன் கனவு இன்று காணலாகிப் போனது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறி கொடுத்து 78 ரன்களில் சுருண்டு போனது.

இந்த படு தோல்வியின் மூ்லம் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது வங்கதேசம்.

அதேசமயம் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் காலிறுதிக்குள் நுழைகிறார்கள்.

 ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோவில்

மூலவர் : கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
  :  -
  பழமை :  500-1000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  பாடகச்சேரி
  மாவட்டம் :  திருவாரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
 
  பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால் இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
 
பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறுபல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர். தமிழகமெங்கும் பலரையும் பல திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர். அவரது மகிமைகளையும் பெருமைகளையும் எல்லையற்ற தெய்வீக சக்திகளையும் இன்றும் பலர் பசுமையாக நினைவு கூர்கின்றனர். அவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிபூரம், மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் வெகுவிமர்சையாக கொடுக்கப்படுகிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். அவருடைய ஜீவ சமாதி திருவற்றியூரில் பட்டினத்தான் சமாதிக்கு பக்கத்தில் உள்ளது. அவர் பைரவர் உபாசகர். அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக்கணக்கான நாயிகள் திடீரென்று மனிதர்கள் போல இலைகளில் உணவு அருந்தி நொடியில் எங்கோ சென்றுவிடுமாம். இன்றும் அவருடைய மடங்களில் அந்த அதிசயம் நடைபெறுகிறது. அவர் 1949 ஆம் வருடம் ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை சமாதி கொண்டார்.

பிரார்த்தனை
 
 இந்த பெருமாளை தரிசித்த, மனதால் நினைத்த அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் என்பது உறுதி. இந்த பெருமாளை வேண்டியவருக்கு சந்தான பாக்கியமும் கொடுத்த கடன்களும் வசூலாகும் என்கிறார்கள்.

தலபெருமை:
ஸ்ரீ தேவி, பூதேவி உடனாய தாயார்களுடன் நெகிழ்வான - மகிழ்வான - திவ்யமான தரிசனம் தருகிறார் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள். மூலவர்களான இந்தக் கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற புதுமையான திருநாமம். பெருமாள் கோயில் பெரியதாகத்தான் இருந்திருக்கிறது. ஸ்வாமிகள் நாளிலேயே பாலாலயம் செய்யப்பட்டு என்னகாரணத்தினாலோ முடிவு பெறமால் உள்ளது என்கிறார்கள். அதற்கான அடித்தளங்களையும் காணமுடிகிறது. காலத்தால் கரைந்து மூலமூர்த்திகள் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு ஓலைவேய்ந்த சிறுகுடிசைகுள் சுமார் 250 வருடமாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றரையடி உயரமுள்ள திருமேனியழகு வார்த்தைகளுக்கு அடங்காத வனப்புடன் திகழ்கிறது. ஸ்ரீதேவி, பூதேவியும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

திருமாலை யார் தரிசிக்க வந்தாலும் உண்மையிலேயே கண்டவர் உ<ள்ளத்தை மகிழ்விக்கும் பெருமாளாக இன்றும் காட்சி தந்து அருளுகிறார். இப்பொழுது சமீபத்தில் ஒரு பக்தைக்கு தன் திருநாம நெற்றியில் இருந்து ஓர் பேரொளி தோன்றி அங்கு தரிசிக்க வந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். இங்கேயே சவுந்தர நாயகி ஸமேத பசுபதீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பசுபதீஸ்வரர் மிகவும் சக்திவாய்ந்தவர். ஓலையே கூரையாக கொண்டு கணபதி, நந்தியுடன், அமர்ந்திருக்கின்றனர். சவுந்தர்ய நாயகி அழகு வர்ணிக்க வார்த்தை இல்லை இங்குள்ள சிவபெருமான் மண்புற்றுக்குள் தன்னை மூடிக்கொண்டு தவம் இருப்பது பார்வதி தேவியை தவிர வேறுயாருக்கும் தெரியா வண்ணம் தவம் செய்து வந்தார். பார்வதி தேவியையும் இந்த புற்றை புஷ்பங்களால் பூஜை செய்து வந்தார். அப்போது தேவலோகத்து காமதேனு இதை அறிந்து கொண்டு தானும் புற்றின் மேல் பால் சுரைப்பதை வழக்கமாக கொண்டது. ஒருநாள் பார்வதிதேவி பூஜை செய்ய தாமதம் ஆனது. அதை அறியாத பசு அவ்விடம் வந்து பாலை சுரக்க, இருவரது பூஜையும் கண்டு மகிழ்ந்த ஈசன் தவம் கலைந்து எழுந்தார். இங்கு பசு பூஜைசெய்தாலும், பால் சுரந்தாலும், ஈசனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர். பசுவை பால் சுரக்க வைத்த பார்வதி தேவிக்கு சவுந்தர்ய நாயகி என்று பெயர். சவுந்தர்யம் என்றால் அனைத்து அம்சங்கள் உடையவர் என்று பெயர். இன்றும் புற்றானது காட்சி தருகிறது. இந்த சிவனை திங்கட்கிழமைகளில் பூஜித்தால் வியாபாரம் பெருகும், நிம்மதி கிடைக்கும், திருமண வரம் அருளும் என்கிறார்கள்

தல வரலாறு:

இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று சீதாதேவி ராவணனிடம் கதறினாள். தன்னை விடுவிக்குமாறு வேண்டினாள். ஆனால், அவளது பேச்சை லட்சியம் செய்யாமல்,புஷ்பக விமானத்தில் அவளுடன் இலங்கையை நோக்கிப் பறந்தான் ராவணன், அப்போதுதான் சீதாதேவிக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதாவது, ராவணன் தன்னை எங்கே கடத்திச் சென்று வைத்திருக்கிறான் என்பதை தன்னைத் தேடி வரும் ஸ்ரீராமபிரான் அறிந்து கொள்வதற்கு வசதியாக, கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். இறுதியில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். சிறையில் இருந்து தன்னை மீட்கச் செல்ல ஸ்ரீராமபிரான் வர மாட்டாரா என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தாள்.

குடிலில் சீதாதேவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி, அவளைத் தேடிப் புறப்பட்டனர் ராமனும் லட்சுமணனும். சீதாதேவி அணியும் ஆபரணங்களை ஆங்காங்கே தரையில் கண்டார் ஸ்ரீராமபிரான். அந்த ஆபரணங்கள் கிடைத்த வழியைத் தொடர்ந்தே தன் தேடுதல் யாத்திரையை நடத்தினார். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ஸ்ரீராமபிரான், தம்பி லட்சுமணா... இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம்.

அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ஸ்ரீராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை - ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்ததாகச் சொல்கிறார்கள் (மாறுபட்ட கருத்தும் உண்டு).

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால் இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

திருவிழா:
 
  ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி
 
திறக்கும் நேரம்:
   
  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மனத்தூய்மை மிகவும் அவசியம் - ராமானுஜர்.

* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.

* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள் தோறும் படிப்பது நல்லது.

வினாடி வினா :

வினா - ஐ.நா.சபையின் முதல் தலைவர் யார் ?

விடை - டிரை - கு - லை ( நார்வே - 1946 - 1953 )

இதையும் படிங்க :



இன்று சிட்டுக்குருவி தினம்: அழிந்து வரும் குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை

திருவனந்தபுரம், மார்ச் 19: தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துவிட்டால் திரும்பிய திசையெல்லாம் நம் காதுகளில் இனிதாய் ஒலிக்கும் சிட்டுக் குருவிகளின் இனிமையான குரல்.

 உருவத்தில் சிறியதாய் இருந்தாலும், அதன் இனிய குரல் மட்டும் என்னவோ ஊர் முழுக்க கேட்கும். கேட்பவர்களை ரசிக்க வைக்கும். அப்படி மனிதரோடு ஒன்றி வாழ்ந்த இந்தக் குருவிகள் இனம் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

 ஓட்டு வீடுகளிலும், கூரை வீடுகளிலும் இவை கணக்கிலடங்காமல் வசித்த காலம்போய், இப்போது இளைய தலைமுறையினருக்கு இந்தக் குருவிகளை அடையாளம் காட்டுவது என்பதே அரிதான காரியம் ஆகிவிட்டது.

 இவை அழிவை சந்திப்பதற்கு பழைய வீடுகள் எல்லாம் இப்போதும் மாட மாளிகைகளாகவும், கான்கிரீட் அபார்ட்மென்ட்களாகவும் வளர்ந்துவிட்டதும், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுமே காரணம்.

 நம் வீட்டு சின்னக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தனது கீச்சு குரலால் மகிழ்வை ஏற்படுத்திய இந்தக் குருவிகள் நகர்ப்புறங்களில் வசிக்கும் மனிதர்களால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாக கேரளத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர் சைனுதீன் பட்டாஸி தெரிவிக்கிறார்.

 இதுகுறித்து அவர் கூறியது:

 ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவி இனம் அழிவதற்கான காரணம் மற்றும் அவற்றை காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுபுழு பூச்சிகளை உணவாகக் உட்கொண்டு வாழ்ந்து வரும் இந்தக் குருவிகள் பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு மாசுக் காரணிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றன. பெட்ரோல் எரியும்பொழுது அதிகஅளவில் மெத்தில் நைட்ரேட் வெளிப்படுகிறது.

 அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த வாயுவால் பாதிக்கப்படும் சிறுபூச்சிகளை இந்தக் குருவிகள் உண்ணுவதில்லை. இதனால் அதற்கு சரியான உணவு கிடைப்பதில்லை. வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், வீடுகளில் அடிக்கப்படும் வார்னிஷ்கள் போன்றவற்றால் காற்றில் வெப்பம் அதிகரித்து வருவது, பறவைகள் வசிப்பதற்கு ஏற்றவகையில் இல்லாத கட்டடங்கள் போன்றவையும் இவையின் அழிவுக்குக் காரணமாகும்.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் தாக்கமும் சமீப காலங்களில் இந்தக் குருவிகள் மரணத்தைத் தழுவ முக்கியக் காரணம் என நான் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 இதேபோல் இந்தக் குருவிகளுடைய கூடுகளின் அருகில் செல்போன் கோபுரங்கள் அமைத்துவிட்டால் அடுத்த பத்துநாள்களில் அவை அங்கிருந்து இடம்பெயர்ந்து விடுகின்றன.

 வழக்கமாக 10 முதல் 14 நாள்களில் இவை அடைகாத்து குஞ்சு பொறித்துவிடும். ஆனால் செல்போன் கோபுரங்களின் அருகில் இருக்கும் குருவிகள் 30 நாள்கள் வரை அடைகாத்தபோதும் குஞ்சு பொறிப்பதில்லை. இந்தக் குருவிகளை பாதுகாக்க காற்று, நீர், தாவரங்கள் ஆகியவை நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
 இந்தக் குருவி இனங்களின் அழிவு இப்போதுள்ள நகர்ப்புற சூழல்கள் மனிதர்களுக்கு வசிப்பதற்கு உகந்ததல்ல என்பதையே காட்டுகிறது. பிரிட்டனில் உள்ள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அழிந்து வரும் பறவையினங்கள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சிட்டுக்குருவி இனம் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பும் சிட்டுக் குருவி இனங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. எனவே இவற்றைப் பாதுகாக்க புதிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 சமீபத்தில் இந்திய அஞ்சல் துறை பறவையினங்களைப் பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!




நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.



No comments:

Post a Comment