Sunday, February 27, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 27 - 2011.



முக்கியச் செய்தி :

இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை: பொருளாதார ஆய்வறிக்கை

நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க 1960ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி போன்று, மீண்டும் ஒரு பசுமை புரட்சி தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும், அதனை உறுதி செய்ய இரண்டாவது பசுமைப் புரட்சி வேண்டும் என்றும் கூறியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, நமது நாட்டின் விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும் இணைந்து அம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது

இந்த நிதியாண்டில் இதுவரை காணாத அளவிற்கு 8.147 கோடி டன் கோதுமை உற்பத்தியாகியுள்ளது, பருப்பு வகைகள் 1.651 கோடி டன்களும், பருத்தி 3.393 கோடி டன்களும் உற்பத்தியாகியுள்ளதென்றும், நாட்டின் பல பகுதிகளில் வறட்சியும், மழை வெள்ளம் காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்டும் இந்த அளவிற்கு உணவு உற்பத்தியை நாடு எட்டியுள்ளதென பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகச் செய்தி மலர் :

* இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை: அனைத்துலக மன்னிப்புச் சபை

இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை என்று ஐ.நா.வுக்கு அளிக்க உள்ள அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருவதுடன், அங்கு கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மேம்படவில்லை என்றும், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை கையளிக்கவுள்ள எழுத்துமூலமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 16 ஆவது கூட்டத்தொடர் வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில்,அனைத்துலக மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த ராஜபக்சே குடும்பம்!

கொழும்பு: வடக்கு இலங்கை கிளிநொச்சியில் தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 1300 ஏக்கர் நிலத்தை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ராஜபட்சவுக்கு நெருக்கமானவர்கள் சிலர் சுமார் 1000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் மொத்தம் 2500 ஏக்கருக்கு மேல் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.

இதனிடையே, தங்கள் சொந்த இடத்துக்கு திரும்பி வரும் தமிழர்களுக்கு, காட்டுப் பகுதிகளில் மாற்று இடம் வழங்கி அங்கே குடியேறுமாறு கட்டாயப்படுத்துகிறதாம் சிங்கள ராணுவம்.

அமைச்சர் பசில் ராஜபக்சே உத்தரவின் பேரில் தமிழர்களின் நிலம் ஆக்கிமிக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடங்களில் இடம் வழங்கப்படுவதாகவும் தமிழர் தரப்பில் புகார் கூறப்படுகிறது

* லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 4 கப்பல்கள்; 2 விமானங்கள்! - ஜி கே வாசன்

சென்னை: லிபிய கலவரத்தால் பாதிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான நான்கு சிறப்புக் கப்பல்களை லிபிய தலைநகர் ட்ரிபோலிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி கே வாசன் கூறினார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு ஜிகே வாசன் அளித்த பேட்டி:

லிபியாவில் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புடன் செய்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலில் கப்பல்துறை அமைச்சகம் ஏற்கனவே காட்டியா என்ற கப்பலை லிபியாவுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, வெளிநாட்டுவாழ் இந்திய நலத்துறை மந்திரி வயலார் ரவி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் கலந்துபேசி இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் லிபியாவிற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடும்..." என்றார்.

ஏர் இந்தியா விமானங்கள்....

இதற்கிடையே ஏர் இந்தியாவின் இரு விமானங்கள் ட்ரிபோலிக்கு விரைந்துள்ளன. அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணியில் அவை ஈடுபடும்.

லிபியாவில் தமிழர் உள்பட 18000 இந்தியர்கள் வசிக்கின்றனர்

* ஆப்கனில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 4 பேர் பலி

காபூல், பிப்.26- ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மைதானம் ஒன்றில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இத்தகவலை ஃபர்யப் மாகாண ஆளுநர் அப்துல் ஹக் ஷாபி் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வடகிழக்கு ஷிரின் தகப் மாவட்டத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் சிலர் ஆப்கனின் பாரம்பரிய குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
இது தலிபான்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, ஆப்கனின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் இத்தகைய தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

* லிபியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கெய்ரோ / வாஷிங்டன், பிப்.26: லிபியாவின் சர்வாதிகாரி மம்மர் கடாஃபிக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பு வலுத்திருக்கிறது. அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதுடன், கடாஃபியின் சொத்துக்களையும் முடக்கியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் லிபியாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும் விரைவில் பொருளாதாரத் தடைகளை அறிவிக்க இருக்கிறது. ஐ.நா. லிபியா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஆலோசித்து வருகிறது.

இதன் பிறகும் கடாஃபி தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. அரசு டி.வி.யில் சனிக்கிழமை பேசிய அவர் "எல்லா வன்முறைகளையும் அடக்குவோம். நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன். தொடர்ந்து போராடுவேன். எந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும் தோற்கடிப்போம்' என்றார்.

அமெரிக்கா பொருளாதாரத் தடை: போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, லிபியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்திருக்கிறது. இதற்கான அரசு உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தார்.

"எல்லா வகையிலும் மம்மர் கடாஃபியின் அரசு சர்வதேச விதிமுறைகளையும், வழக்கமான மரபுகளையும் மீறிவிட்டது.

அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதனால் கடாஃபி அரசு மீது பொருளாதாரத் தடை
விதிக்கப்படுகிறது' என்று ஒபாமா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

கடாஃபி, அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் பெயரில் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களும் இந்த உத்தரவின் மூலம் முடக்கப்படுகிறது.

அமெரிக்கா தூதரகம் மூடல்: திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதுடன், லிபியாவுடனான ராணுவ உறவுகளையும் அமெரிக்கா முறித்துக் கொண்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்பிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே தெரிவித்தார்.

விருப்பம் தெரிவித்த அனைத்து அமெரிக்கர்களும் லிபியாவிலிருந்து நாடு திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பு: லிபியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறது

தற்போதைய நிலையில், லிபியா மீது அடுத்தவாரம் முறைப்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஐ.நா.மனித உரிமை அமைப்பு: ஐ.நா.மனித உரிமை அமைப்பிலிருந்து லிபியாவை தற்காலிகமாக நீக்கும் தீர்மானத்தை அந்த அமைப்பு நிறைவேற்றியிருக்கிறது. லிபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

எனினும், இந்த தீர்மானங்கள் ஐ.நா. பொது அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் அமலுக்கு வரும். மனித உரிமை அமைப்பின் இந்தத் தீர்மானத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி வரவேற்றுள்ளார்.
பாதுகாப்பு அவையில் கண்ணீர் விட்ட லிபிய தூதர்: லிபிய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இதில் பேசிய ஐ.நா.வுக்கான லிபிய தூதர் முகமது ஷால்கம் தனது பேச்சின்போது அழுது கண்ணீர் வடித்தார்.

கடாஃபிக்கு எதிராக உடனடியாக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோரிய அவர், "நாங்கள் உங்களை ஆட்சி செய்வோம் அல்லது உங்களைக் கொல்வோம்' என கடாஃபியும் அவரது மகனும் நாட்டு மக்களை எச்சரித்திருப்பதாகக் கூறினார்

* இந்தியாவிடம் தேர்தல் பயிற்சி: உலக நாடுகள் ஆர்வம்

வாஷிங்டன், பிப். 26: இந்தியாவிடமிருந்து தேர்தல் நடத்துவது தொடர்பான பயிற்சியைப் பெற உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருவது உலக நாடுகளுக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாகும்.
இதனால், பெரும்பாலான நாடுகள், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகள், இந்தியாவிடமிருந்து தேர்தலை நடத்துவது தொடர்பான பயிற்சியைப் பெற ஆர்வமாக இருக்கின்றன. ஏற்கெனவே பல நாடுகளுக்குச் சென்று இந்திய அதிகாரிகள் தேர்தல் தொடர்பாக பயிற்சியளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக இந்தியாவிடம் பயிற்சி பெறுவதற்கு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக மீரா சங்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தேர்தலுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர்,"நமது அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிப்பதுதான் இந்த மையத்தின் முதல் நோக்கமாக இருந்தாலும்,இங்கு பயிற்சி பெறுவதற்கு உலகின் பல நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன' என்றார்.

நமது அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் தேவை நிறைவடைந்தால், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சியளிக்க முடியும்.

நமது தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அண்மையில் தேர்தல் தொடர்பான பேச்சுகளை நடத்தினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் பேச்சு நடத்திபோது, எகிப்து தேர்தலில் இந்தியா உதவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பிரமாண்டமான தேர்தலை நடத்தும் அனுபவம் நமக்கு உண்டு என்பதால், எகிப்து அரசிடம் ஆலோசனை நடத்தி, இதுபற்றி முடிவெடுக்கலாம் என அமெரிக்காவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றார் மீரா சங்கர்.

* மரண தண்டனை கைதி சரப்ஜீத் சிங்கை வழக்கறிஞர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி

லாகூர், பிப்.26: பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சரப்ஜீத் சிங்கை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு லாகூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1990-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு சரப்ஜீத் சிங்தான் காரணம் என்று கூறி அவரைப் போலீஸார் கைது செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை அளித்தது.

இந்த வழக்கில் போலீஸார் தவறுதலாக சரப்ஜீத் சிங்கை சிக்க வைத்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். குடிபோதையில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டார் என்றும் அங்கு அவரை போலீஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார் சரப்ஜீத் சிங்.
இந்நிலையில் 2008-ம் ஆண்டில் சரப்ஜீத் சிங்கின் தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை கால வரையின்றி ஒத்திப் போட்டார் பிரமதர் யூசுப் ரஸா கிலானி

இந்த வழக்கில் சரப்ஜீத் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவைஸ் ஷேக், இந்தியாவில் உள்ள சரப்ஜீத் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து சரப்ஜீத் சிங்கை சிறையில் சந்திக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் சிறைச்சாலையில் சரப்ஜீத் சிங்கை சந்திக்க அனுமதி அளித்தனர். இதன்படி கோட் லக்பத் சிறைச்சாலையில் உள்ள சரப்ஜீத் சிங்கை அவர் சந்திக்க உள்ளார்.

ஏற்கெனவே சரப்ஜீத் சிங்கின் கருணை மனுவை பரிசீலிக்குமாறு அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரிக்கு கடிதம் எழுதியுள்ளார் வழக்கறிஞர் ஷேக். தவறுதலான அங்க அடையாளங்களால் அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக ஷேக் தெரிவித்தார்

தேசியச் செய்தி மலர் ;

* காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி இன்று கைதாகிறார்?

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி இன்று கைதாவார் என்று தெரிகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உபகரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ் கல்மாடி பல கோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்துள்ளது.

காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ் கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ் கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

* தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் கொழும்பில் சந்திக்க ஏற்பாடு



புதுதில்லி,பிப்.26: இலங்கைக் கடல் எல்லையில் புகுந்து மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய வெளியுறவுத்துறையும் தமிழக அரசும் இணைந்து புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை கொழும்பு நகருக்கு அடுத்த மாதம் அழைத்துச் சென்று அந்த நாட்டு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச வைப்பதே அந்த நடவடிக்கை.

அடுத்தபடியாக அந்த நாட்டு கடற்படை, வெளியுறவுத்துறையுடனும் பேசி சர்வதேசக் கடல் எல்லையை இந்திய மீனவர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைத் தீர்மானிப்பதுடன் அப்படியும் எல்லை மீறினால் அவர்களைத் தாக்காமல், சுட்டுக்கொல்லாமல் சர்வதேசச் சட்டம் மற்றும் நடைமுறைகள்படி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள்.

நிருபமா ராவ் முயற்சி: தில்லியில் சனிக்கிழமை இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் பாதுகாப்பு (ராணுவம்) அமைச்சகம், கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்

தமிழக தலைமைச் செயலர் எஸ். மாலதி: தமிழக அரசின் தலைமைச் செயலர் எஸ். மாலதி, மீன்வளத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடல் எல்லையை இந்திய மீனவர்களுக்கு அடையாளம் காட்டும் வழிகள் குறித்து கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநரிடம் ஆலோசனைகள் பெறவும் முடிவு செய்யப்பட்டது

கூட்டு நடவடிக்கைக் குழு: மீன்பிடித் தொழில் தொடர்பாகவே இந்திய, இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை மார்ச் மாதம் கொழும்பில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இது குறித்து அதிகாரிகள் நிலையில் விவாதிக்க முடியும் என்பதால் அந்தக் கூட்டத்துக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போதும் தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேருக்கு நேர் பேச வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுவதுடன் அது எதிர்கால நட்புக்கும் வழிவகுக்கும்.

மோசமான பருவநிலையாலும் படகுகளில் ஏற்படும் பழுதாலும் உடல்நலக் குறைவாலும் தப்பித்தவறி எல்லை மீறி வந்துவிட்டாலும் அவர்களுக்குப் பரஸ்பரம் உதவிகளை அளிக்க மீனவர் சங்கங்களே இனி முன்முயற்சி எடுக்கவும் முடியும்.

அதே போல வேண்டுமென்றே, மீன்பாடு கிடைக்கிறது என்பதற்காக எல்லை மீறினால், உரிய கடலோரக் காவல்படை அல்லது கடற்படை மூலம் அவர்களைப் பிடித்து எச்சரித்து அனுப்பவும் முடியும்

தேவையற்ற உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் தவிர்க்க இத்தகைய சந்திப்புகள் உதவும்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா: ஆண்டுதோறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்குத் தமிழ்நாட்டிலிருந்து மக்கள் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் உள்நாட்டு நிலவரம் காரணமாக இதில் தொய்வு ஏற்பட்டது.

தமிழர்களின் இந்தப் பாரம்பரிய உரிமை கச்சத்தீவுக்காக செய்துகொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் தமிழக மீனவர்கள் தங்களுடைய மீன் வலைகளை அத் தீவில் உலர்த்தவும், தங்கி இளைப்பாறவும்கூட அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இலங்கை அதிகாரிகளுடன் பேசி சுமுகமான தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

* 150 ரூபாய் நாணயம்: வெளியிட்டார் பிரணாப்

புதுதில்லி, பிப்.26- புதியதாக ரூ. 150 மதிப்பிலான நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டார்.

வருமான வரித்துறையின் 150-வது ஆண்டை குறிப்பிடும் வகையில் இப்புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று நடைபெற்ற வருமான வரித்துறையின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரணாப் முகர்ஜி இந்த நாணயத்தை வெளியிட்டார்

* சுனில் ஜோஷி கொலை: பெண் சாமியார் பிரக்யா சிங் கைது

மும்பை, பிப்.26- சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரக்யா சிங், தற்போது மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2007, டிசம்பர் 29-ம் தேதி சுனில் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்

* நால்கோ தலைவருக்கு மார்ச் 3 வரை சிபிஐ காவல்

புதுதில்லி, பிப்.26- லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நால்கோ நிறுவனத்தின் தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட 4 பேரையும் மார்ச் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அலுமினிய நிறுவனத்தின் (நால்கோ) தலைவர் ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி மற்றும் இருவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதில், அவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு வசதியாக மார்ச் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

மாநிலச் செய்தி மலர் :

* தனியார் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானிய உதவி

சென்னை, பிப். 26: தனியார் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்கள், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மானிய உதவி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை பிறப்பித்த ஆணை:

1991-92-ம் ஆண்டுக்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசின் மானிய உதவியுடன் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில், 31-5-1999 வரை மானிய நிதி உதவியின்றி, அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு மானியத்துடன் பணியிடங்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் 1973-ல் திருத்தம் வெளியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது

இதன்படி, சுமார் 965 தனியார் பள்ளிகளில் 4,851 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் 1.6.2011 முதல் ரூ. 131.13 கோடி செலவில் அனுமதிக்கப்பட உள்ளது. மேலும் 1990-91-ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை, 467 சிறுபான்மை அல்லாத உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாகத் தேவைப்படும் 6,456 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 200 கோடி செலவில் அனுமதிக்கப்பட உள்ளன.

1999-ம் ஆண்டுக்கு பின் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை, பிப். 26: இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது.

முதல் கட்ட போலியோ முகாம் ஜனவரி 23-ல் நடைபெற்றது. முதல் தவணையில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் பலன் அடைந்தனர்.
 ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் முகாம் நடைபெறும். இதற்கென்று தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

 முகாம் நாளில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகள் பயனடையும் வகையில் பஸ் நிலையம், ரயில் நிலையம், சுற்றுலாத் தலங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறநகர் பஸ் நிலையங்களில் 24 மணி நேர நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையம் செயல்படும்

அனைத்து குழந்தைகளுக்கும்...அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருந்தாலோ அல்லது அதிக வயிற்றுப்போக்கு இருந்தாலோ அல்லது மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தாலோ போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டாம்.

உடல்நலக் குறைவுடன் குழந்தை உள்ள நிலையில் உணவு கொடுப்பதன் காரணமாக புரையேறி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தை இறந்து விட்டதாகக் கூறுவது தவறு. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டவுடன் குழந்தை இறந்ததாக பரவும் வதந்தியை பெற்றோர் நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

* பண்ருட்டி அருகே 2000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


பண்ருட்டி, பிப். 26: பண்ருட்டி வட்டம் சூரக்குப்பம் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியும், அதனுள் இருந்த மண்பாண்டங்கள், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உலகமும், மனித இனமும் தோன்றிய நாள் முதல், மனிதர்களின் நாகரிகங்களும், கலாசாரங்களும் ஓவ்வொரு நூற்றாண்டுக்கும் மாறுபட்டும், வேறுபட்டும் வந்துள்ளன. உணவிலும், உடையிலும், அணிகலன்களிலும், வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதிலும் காலம் காலமாக புதிய புதிய பரிணாமங்கள் கையாளப்பட்டு வந்துள்ளன.
மனிதர்கள் இறந்தபோன பின்னர் செய்யப்படும் ஈமச்சடங்குகளிலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்பட்டு வந்துள்ளது. அவற்றில் ஒன்று ஈமத்தாழி எனப்படும் முதுமக்கள் தாழியாகும். இதுபோன்ற தாழிகள் நிறைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள சூரக்குப்பம் கிராமப் பகுதியில் இதுபோன்ற தாழிகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் அண்மையில் கண்டறிந்தார்.

இதுகுறித்து தினமணி நிருபரிடம் அவர் கூறியது:
முதுமக்கள் தாழிகளின் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. மன்னர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவர்கள் இறந்தவுடன் இதுபோன்ற தாழிகளில் வைத்து புதைக்கும் வழக்கம், சங்கக் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
சில சமயங்களில் 100 வயதுக்கு மேல் கடந்து முதிர்ந்து நடக்க முடியாமல் உடலின் கழிவுகளை இருக்கும் இடத்திலேயே போக்கி குடும்பத்தினரையும், உறவினர்களையும் முகம் சுளிக்க வைத்த மூத்தோர்களின் செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நீராட்டி, தூப தீபம் காட்டி இதுபோன்ற தாழிகளுக்குள் இறக்கி வைத்துவிடுவர்.
அந்த தாழிக்குள் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், தண்ணீர், கள் போன்றவற்றை பாத்திரங்களில் வைத்து அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து தாழியை மூடி விடுவர். சுவாசிக்கும் காற்று அடைபடுவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விடுவர். ஒரு வகையில் இதை கருணைக் கொலை என்றும் கூட கூறலாம்

இவ்வழக்கில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு ஞானிகளும், முனிவர்களும் தங்களின் இறப்புக்கு தாங்களே நாள் குறித்து அந்த நாளில் தங்கள் சீடர்கள் முன்னிலையில் தாழியில் அமர்ந்து மூடச் செய்து இறைவனை தியானித்து உயிர் நீர்த்தவர்களும் உண்டு என்கிற செய்தியும் வரலாற்று இலக்கியங்களால் அறியப்படுகிறது.
இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கோடிக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாழிகள் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பூமியை தோண்டியபோது உடைந்து கிடைத்தன. இப்பகுதியில் இதுபோன்ற தாழிகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இங்கு கிடைத்த தாழியின் சுற்றளவு 190 செ.மீ, உயரம் 56 செ.மீ என ஒரு தாழிக்கு மேல் மற்றொரு தாழியாக 4 அடுக்குகள் கொண்ட தாழியாக மொத்தம் 224 செ.மீ. உயரத்துக்கு காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பு கிடைப்பது மிகமிக அரிதாகும்.
பொதுவாக இதுபோன்ற முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புகளும், மண்ணால் செய்யப்பட்டு சூளையிட்ட உணவு தட்டுகளும், குடுவைகளும், விதவிதமான கலயங்களும், விளக்குகளும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் காணப்படும். அதுபோன்றே இந்த தாழியிலும் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் அச்சில் வார்த்தது போல் துல்லியமாக செய்யப்பட்டுள்ளன. இவை அக்காலத்து மண்பாண்டக் கலையின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன.
சில ஊர்களில் கிடைத்துள்ள தாழிகளில் போர் வீரர்கள் பயன்படுத்திய சிறிய, பெரிய கத்திகள், குறுவாள்கள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் துருபிடித்துள்ள நிலையில் கிடைத்துள்ளன. அதுபோன்று இந்த தாழியில் ஏதும் காணப்படவில்லை. இந்த தாழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்

* வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 508 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

சென்னை, பிப். 26: வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 508.69 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

கடந்த 2010 அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.1,832 கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்தது.

உடனடி நிவாரணத்துக்காக ரூ. 600 கோடியும், பாதிக்கப்பட்ட சாலைகள், ஏரிகள் சீரமைப்பு போன்ற நிரந்தர பணிகளுக்காக ரூ. 500 கோடியுமாக மொத்தம் ரூ. 1,100 கோடியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இப்போது ரூ. 508.69 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 1,100 கோடியிலான வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி போக, மீதமுள்ள ரூ. 591.31 கோடியை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


வர்த்தகச் செய்தி மலர் :



* நேரடி வரி வருவாய் 5 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு: பிரணாப் முகர்ஜி

வருமான வரி, சேவை வரி, பெரு நிறுவன வருவாய் வரி ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் நேரடி வரி வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்திய வருமான வரித் துறை உருவாக்கப்பட்ட 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி, 150 ரூபாய் நாணயத்தை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.

அப்போது பேசிய பிரணாப் முகர்ஜி, 2004-05 நிதியாண்டில் ரூ.1,34,771 கோடியாக இருந்த மத்திய அரசின் நேரடி வரி வருவாய், 2009-10ஆம் நிதியாண்டில் 3,78,000 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

நேரடி வரி வருவாய் உயர்விற்கு காரணம் வரிச் சீர்திருத்தம், முறைப்படுத்தல், வரி நிர்வாக மேம்பாடு, வருமான வரித்துறையின் சீரிய செயல்பாடு ஆகியனவே காரணம்” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, இந்த ஆண்டில் இதுவரை நேரடி வரி வருவாய் வசூல், கடந்த நிதியாண்டை விட 20 விழுக்காடு அதிகரித்து ரூ.3,35,000 கோடியாக உள்ளது என்றும், கடந்த பல ஆண்டுகளாகவே நேரடி வரி வருவாய் ஆண்டிற்கு சராசரியாக 24 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) 4.1 விழுக்காடாக இருந்த நேரடி வரி வருவாய், தற்போது 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

* பட்ஜெட் ஸ்பெஷல்: வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாகிறது

டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.1.5 லட்சம்வரை வருவமானகழிவு பெறலாம். 3 சதவீத கல்வி வரியும் ரத்து செய்யப்படுகிறது.

பாராளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (28-ந் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமானவரிச் சலுகைகளை அவர் அறிவிக்கிறார்.

அதன்படி, தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உள்ள வருமானவரி விலக்கு உச்சவரம்பு, வரும் நிதியாண்டிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ரூ.2 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத வருமானவரி விதிக்கப்படும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.

ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி கழிவு பெறலாம். இதை இரண்டு பிரிவாக பெறலாம். பொது வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி போன்ற நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் மீதான முதலீட்டுக்கு ரூ.1 லட்சம் வரையும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்கள், பிள்ளைகளின் கல்விக் கட்டணம் ஆகியவற்றின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் கழிவு பெறலாம்.

வருமானவரி மீது விதிக்கப்பட்டு வந்த 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது. மேலும், வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச்சலுகை நீடிக்கும்.

இந்த புதிய வருமானவரி சலுகைகள் மூலம், வீட்டுக்கடன் இல்லாதபட்சத்தில், ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரிச்சுமை ரூ.22,600-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக குறையும். இதன்மூலம் அவர்கள் ஆண்டுக்கு ரூ.7,660-ஐ மிச்சம் செய்யலாம். விலைவாசி உயர்வால் அதிகரித்துள்ள அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்ய இத்தொகை உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதற்கேற்ப அதிக வரித்தொகையை மிச்சம் செய்யலாம்.

மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு சலுகையும் அறிவிக்கப்படுகிறது.

* பிஎஸ்ஈ17,700.9168.50என்எஸ்ஈ5,303.5540.85Updated: 4:10 PM (IST) Feb 25

* இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம்!

டெல்லி: தவறான முறையில் வரிவிலக்குப் பெற்ற இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. இத்தகவல் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனம் இன்போஸிஸ். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தங்கள் ஊழியர்களை குறுகிய கால பணிக்காக அனுப்பி வைக்கிறது இந்நிறுவனம் (ஆன்ஷோர்).

இந்த வகையில், கடந்த 2007-2008-ம் ஆண்டு ரூ 657.81 கோடி இன்போஸிஸ் நிறுவனத்துக்கு வருவாயாக வந்துள்ளது. அதை ரூ 456.38 கோடியாக குறைத்துக் காட்டியுள்ளனர். இதனை ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயாகக் காட்டி வரிவிலக்குப் பெற முயன்றுள்ளது இந்நிறுவனம்.

"ஆன்ஷோர் பணிகள் மூலம் பெறப்படும் வருமானம் வரிவிலக்கின் கீழ் வராது. இது வர்த்தக ஏற்றுமதிப் பிரிவிலும் சேராது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக மக்களவையில் தெரிவித்தார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கம். இதனால் இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடியை அபராதமாக விதித்துள்ளது வருமான வரித்துறை

விளையாட்டுச் செய்தி மலர் :

* இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 277 ரன்கள்!

கொழும்பு: உலகக் கோப்பைப் கிரிக்கெட் போட்டியின் 10 வது ஆட்டத்தில் இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது.

கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்வதாக தீர்மானித்தது. இதில் எடுத்த எடுப்பிலேயே தொடக்க ஆட்டக்காரர் அகமத் ஷாஸாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் நிதானமாகவும் உறுதியாகவும் ரன்களைக் குவித்தது பாகிஸ்தான்.

அந்த அணியின் யூனிஸ்கான் 76 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். மிஸ்பா உல் ஹக் 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத், திசரா பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முத்தையா முரளிதரன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை துவங்கியுள்ளது இலங்கை.

* துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: டோக்கோவிச் சாம்பியன்

துபாய்: துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் டோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரிர் துபாயில் நடக்கிறது. இதன் இறுதி சுற்றில் செர்பியாவின் நோவக் டோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்யை எதிர் கொண்டார். இதில் செர்பியாவின் நோவக் டோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

மூலவர் : தம்பதியருடன் முருகன்
  -
  -
  தல விருட்சம்:  நாவல்
  தீர்த்தம் :  நூபுர கங்கை
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  சோலைமலை (அழகர்கோயில்)
  மாவட்டம் :  மதுரை
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அருணகிரிநாதர்

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -

அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;

இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே -
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்

மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

-அருணகிரிநாதர்

தல சிறப்பு:
 
  சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்

பிரார்த்தனை
 
 திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.

தல வரலாறு:
தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்

சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது

திருவிழா:
 
  தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* வீட்டிலும் தவம் செய்யலாம் - கிருபானந்த வாரியார்.

*சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம், முதல் எழுத்தின் தலையில் ஒரு சுழிதான். தலையில் சுழி உள்ளது ஜீவன். தலைச்சுழி இல்லாதது சிவன்.
* பிள்ளையார் முன் பயபக்தியுடன் குட்டிக் கொண்டு, நன்றாக உட்கார்ந்து, எழுந்து, மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதனால், அறிவும் ஆரோக்கியமும் பலம் பெறும்.
* சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

வினாடி வினா :

வினா - உலகத்தின் முதல் விண்வெளிப் பயணி யார் ?

விடை - சிரு. டிடோ - ரஷ்யா.

 இதையும் படிங்க :





உலகின் மிகப் பெரிய "குடும்பஸ்தன்' ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்று கூறியுள்ளார், "காதல் மன்னன்' ஜியோனா சானா.




.







நன்றி - சமாச்சார், தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.

No comments:

Post a Comment