Tuesday, May 24, 2011

இன்றைய செய்திகள் - மே 24, 2011.


23-kodaikanal-lake300.jpg

கொடைக்கானல் ஏரி.


முக்கியச் செய்தி :


சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: அரசுக்கு அமைப்புகள் கோரிக்கை

சென்னை, மே 23: சமச்சீர் கல்வியை அமல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 இந்திய மாணவர் சங்கம்: பொதுப்பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் நிறுத்திவைக்கும் புதிய அரசின் அமைச்சரவை முடிவு சரியானதல்ல. எனவே, அதை அமல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

 பொதுப்பாடத்திட்டத்தில் சில குறைகள் உள்ளதையும், அதில் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்கிறோம்.

 ஆனால், அதை இந்தப் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டேதான் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

 கடந்த தி.மு.க. அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல், பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பான முழுமையான சமச்சீர் கல்வியை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.

 தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:

 இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நவடிக்கை எடுக்கலாம். ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.

 பழைய பாடத்திட்டத்தின் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும். அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள். தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

 தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:

 சமச்சீர் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணழர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறத்தக்க வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

உலகச் செய்தி மலர் :
* ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இலங்கை அரசை சிக்கவைக்குமா?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியும் என ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ தெவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான முதன்மையான அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகாரம் அவ்வரசாங்கத்துக்கே உரித்துடையதாகும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேச்சாளர் நெசர்கீ மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்ள முடியும். மேற்படி அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளையும் எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 17ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. 47 நாடுகளும், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இந்த அமர்வில் கலந்து கொள்ள உள்ளன.

மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றியோ, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பற்றியோ விசேடமாக குறிப்பிடப்படாவிட்டாலும், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சில நாடுகள் முன்மொழிந்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்வதற்காக கொழும்பிலிருந்து மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஒன்று அடுத்த வாரத்தில் ஜெனிவாவுக்கு செல்ல உள்ளது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் அக்குழுவில் அடங்கியுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் 28ஆவது அங்கமாக இணைக்கப்பட்டுள்ள நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கூட்டுப் படுகொலைகள் என்ற அம்சத்தின் கீழ் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படலாம் என்ற மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நிகழ்ச்சி நிரலில் இதுவரை இலங்கைக்கு எதிரான எந்தவொரு பிரேரணையும் சேர்க்கப்படவில்லை. நீதிக்கு புறம்பான கொலைகள் என்ற விடயம் ஆராயப்படும் போது ஐ.நா.நிபுணர்குழு முன்வைத்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டை சில நாடுகள் முன்மொழியலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன

* முல்லா உமர் உயிருடன்தான் இருக்கிறார் - தாலிபான்  

தாலிபான் தலைவர் முல்லா உமர் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளை தாலிபான் மறுத்துள்ளது. மேலும் அவர் உயிருடந்தான் இருக்கிறார் என்றும் ஆப்கானிஸ்தானத்தில்தான் இருக்கிறார் என்றும் தாலிபான் தெரிவித்துள்ளது.

தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறுகையில், "இந்தச் செய்தி முழுதும் தவறு, இது ஒரு பிரச்சாரமே தவிர வேறில்லை. நாங்கள் இந்த வதந்திகளை முழுமையாக மறுக்கிறோம்" என்றார்.

மேலும், "அவர் ஆப்கானில்தான் இருக்கிறார், அவர் தனது ராணுவப்பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார்" என்றார்.

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரிலிருந்து வடக்கு வாஜிரிஸ்தான் நோக்கி உமர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் ஹமீத் குல் என்பவருடன் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஜெனரல் குல் தெரிவிக்கையில் உமர் கொல்லப்பட்டார் என்பது முற்றிலும் தவறு என்றார்.

அவர் குவெட்டாவிலிருந்து வடக்கு வாஜிரிஸ்தான் பகுதிக்கு 2 நாட்கள் முன்னரே சென்று விட்டதாகவும் தாலிபான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* தீவிரவாதிகளிடம் இருந்து கடற்படைத் தளம் மீட்பு 

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தை கைப்பற்றி உள்ளிருந்து முற்றுகையிட்ட தாலிபான் தீவிரவாதிகளிடமிருந்து 18 மணி நேர கடும் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தான் இராணுவம் மீட்டுள்ளது.

பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பெரிய உளவு விமானங்களும், 12 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

மே 2ஆம் தேதி அமெரிக்காவின் அதிரடிப்படையினர் அபோட்டோபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை கொன்றதற்கு பழி தீர்க்க இத்தாக்குதலை தாங்கள் நடத்தியதாகத் தெரிவித்துள்ள தாலிபான் பேச்சாளர் அசானுல்லா கான், இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் தியாகத்தை தழுவும் நோக்கோடு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

நேற்று இரவு கராச்சியில் உள்ள மெஹ்ரான் கடற்படைத் தளத்திற்குள் கையெறி குண்டுகளை வீசியும், ராக்கெட்டுகளை சுட்டுக்கொண்டும் உள்ளே நுழைந்த 10 முதல் 15 தீவிரவாதிகள், அங்கு பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தளத்தில் இருந்த 6 அமெரிக்கப் படையினர் அங்கிருந்து காயமின்றித் தப்பியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தீவிரவாதிகளுடனான சண்டை முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை பேச்சாளர் இர்ஃபான் உல் ஹக், “கடற்படை தளம் மீட்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

* அமெரிக்க சூறாவளிக்கு 30 பேர் பலி  
அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட ராட்சத 'டொர்னாடோ' சூறாவளிக்கு 30 பேர் பலியாகினர்

ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். "கட்டடங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள், வால்மார்ட் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள் என்று நகரம் முழுவதும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சூறாவளி பாதிப்புகள் மேலும் தொடரலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மிசெளரி மாகாணத்தில் ஆளுநர் ஜே நிக்ஸன், அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

சூறாவளியில் உயிரிழந்தவர்களில் இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

* சுழற்காற்றில் 24 பேர் பலி

suravalirain.jpg

சிகாகோ, மே 23: தென்கிழக்கு அமெரிக்க மாநிலமான மிசூரியில் வீசிய சுழற்காற்றில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மிசூரி மாகாணத்தின் ஜோப்லின் நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலமான சுழற்காற்று வீசியது. இதில் பல வீடுகள் நொறுங்கின. பல கடைகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. அங்கிருந்த மருத்துவ மனைக் கட்டடம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில ஆளுநர் ஜே நிக்ஸன் இந்தப் பகுதியில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இப்பகுதியில் மேலும் சுழற்காற்று தொடர்ந்து வீசக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* மும்பை தாக்குதல்: "ஐஎஸ்ஐ.யுடன் ராணாவுக்கு தொடர்பு'

சிகாகோ, மே 23: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் டேவிட் ஹெட்லியின் கூட்டாளி ராணாவுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யுடன் தொடர்பு இருந்துள்ளது என்று அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அரசுத் தரப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக சிகாகோ நீதிமன்றத்தில் தனது வாதங்களை எடுத்துரைத்த அமெரிக்க துணை அட்டர்னி சாரா ஸ்ட்ரீக்கர், மும்பை தாக்குதல் நடந்து முடிந்த பிறகு அது குறித்த தகவலை டேவிட் ஹெட்லியிடம் ரணா தெரிவித்துள்ளார். அதே போல் மும்பையில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்துவது என்று குறிக்கும் படங்கள் அடங்கிய உறை ஒன்றையும் முன்னதாக டேவிட்டிடம், ராணா அளித்ததாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

தேசியச் செய்தி மலர் :


* 2ஜி ஊழல்: பெரு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பிணைய விடுதலை மறுப்பு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பயனடைந்ததாக குற்றஞ்சாற்றப்பட்டுள்ள பெரும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணைய விடுதலை அளிக்க மறுத்துவிட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனமான ஸ்வான் டெலகாமின் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி நிறுவனத்தின் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய ஐந்து பேரும் சி.பு.ஐ.சிறப்பு நீதிமன்றத்தால் பிணைய விடுதலை மறுக்கக்கட்டவர்களாவர்.

ம.பு.க.சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஜித் பாரியோக், ம.பு.க. சார்பாக வாதிட்ட அரசு வழக்குரைஞர் லலித் முன்வைத்த வாதத்தை ஏற்று இவர்களின் பிணைய விடுதலை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் இவர்களும், இவர்களின் நிறுவனங்களும் பெரும் பயனை அடைந்துள்ளன. அது மட்டுமின்றி, இந்த முறைகேட்டை அமைச்சராக இருந்த ஆ.இராசாவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றியும் உள்ளனர். எனவே இவர்களுக்கு பிணைய விடுதலை அளிக்கக் கூடாது” என்று லலித் வாதிட்டார்.

இதே நீதிமன்றத்தி்ல்தான் கனிமொழியின் சார்பாக பிணைய விடுதலை கோரிக்கை மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* 2 ஜி வழக்கு: ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லி: 2 ஜி வழக்கில் சிறையில் உள்ள யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநர் கவுதம் தோஷி உள்ளிட்ட 5 கார்ப்பொரேட் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவி்ட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.

2 ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிபி ரியல்டிஸ் புரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸின் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா உள்ளிட்டோரும் தங்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஐவரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி அஜீத் பாரிஹோக், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இவர்களின் கோரிக்கையில் அடிப்படை நியாயமில்லாததால் ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்த நீதிபதி, தனது விரிவான ஆணையை படித்துக் காட்டவில்லை.

* கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி-ஆளுநர் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு
டெல்லி: கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் என்ற மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி வருமா என்ற குழப்பத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கர்நாடக ஆளுநராக்கப்பட்டார். அன்று முதல் தொடர்ந்து முதல்வர் எதியூரப்பாவுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.

இவர்களது சண்டையால் கர்நாடகத்தில் தொடர்ந்து பரபரப்பும், பதட்டமும் நிரந்தரமாக நிலவி வருகிறது.

எதியூரப்பாவுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே பரத்வாஜ், முதல்வருடன் மோதத் தொடங்கி விடுவார். பள்ளிக்கூடக் குழந்தைகள் போல இருவரும் இப்படி தொடர்ந்து விளையாடி வருவதால் கர்நாடக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் நடந்து கொண்டதற்குக் கண்டனம் தெரிவித்த பரத்வாஜ், கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால் அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாக சட்டசபை சபாநாயகர் கோபிநாத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பாஜக மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார் பரத்வாஜ்.

அவரது இந்த செயலால் பாஜக கடும் கோபமடைந்தது. உடனடியாக தனது எம்.எல்.ஏக்களை படை திரட்டி டெல்லி சென்ற முதல்வர் எதியூரப்பா அவர்களை குடியரசுத் தலைவர் முன்பு ஆஜர்படுத்தினார். இதனால் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடமானது.

மேலும் உடனடியாக பரத்வாஜை நீக்க வேண்டும் என்று எதியூரப்பாவும், பாஜகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். எதியூரப்பா தொடர்ந்து டெல்லியில் முற்றுகையிட்டு பரத்வாஜுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலானது.

இதையடுத்து பரத்வாஜ் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு எதியூரப்பா எனது நண்பர் என்று பல்டி அடித்தார். எதியூரப்பாவும் பரத்வாஜ் எனது நண்பர் என்று பல்டி அடித்தார். ஆனாலும் பரத்வாஜ் மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் எதியூரப்பா.

இந்தப் பின்னணியில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆளுநரின் பரிந்துரையை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இதன் மூலம் கர்நாடக ஆளுநரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எதியூரப்பா அரசும் தப்பியுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* 228 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்: ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் பதவி ஏற்பு

mlas.jpg

சென்னை, மே 23: முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட 228 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

 முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சிவபதி, அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் என 4 பேர் பேரவைக்கு வரவில்லை.

 அவர்கள் வேறொரு நாளில் பேரவைத் தலைவரின் அறையில் பதவியேற்றுக் கொள்வார்கள் என சட்டப் பேரவையின் தாற்காலிகத் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.

 14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணிக்குக் கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பேரவை மண்டபத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 காலை 11.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவர்களைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் பேரவைக்கு வந்தனர்.

* தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்

23-minister-mariam-pichai-300.jpg

திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை, காலையிலேயே தயாராகி விட்டார்.

அமைச்சருடன் அவரது நண்பர் கார்த்திகேயன், உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர்.

இவர்களது கார், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த டிப்பர் லாரி வலது புறமாக திரும்பியுள்ளது.

இதை எதிர்பாராததால், கார், டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார் மரியம் பிச்சை. அவருடன் இருந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் அப்படியே உயிர் தப்பினார்.

அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் இன்று மாலை பாலக்கரை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.

* கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியை அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,கடந்த 20-ம் தேதி கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கம்போல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. பின்னர் சிறையில் அவர் கருணாநிதியை சந்தித்திருந்தார்.

அதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத்குமார் ஆகியோரையு்ம் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனிமொழியைப் பார்த்த பிறகு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிய கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழியின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஷரத்குமார் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐவர் ஜாமீன் மனு நிராகரிப்பு

இதனிடையே, அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் தொழி்ல் நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து முக்கியப் பிரமுகர்களின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது.

யுனிடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி மேலாண் இயக்குநர் கெளதம் தோஷி, ரிலையனஸ் நிறுவன அதிகாரி ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா மற்றும் டி.பி. ரியால்டி உரிமையாளர் வினோத் கோயங்கா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் ஆதாரமற்றவை என்று கூறி, நீதிபதி அஜித் பாரிஹோக் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

இன்னொரு புறம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டடுள்ள சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கனிமொழி, ஷரத்குமாருடன், கரிம் மொரானியும் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே சென்னை வருகிறார்?

23-jaya-ranil300.jpg

சென்னை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ரணிலும் ஏற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

ரணில் சென்னை வருவது உறுதியானால், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் இலங்கைத் தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கே தரப்பில் கூறுகையில், சென்னைக்கு வருமாறு ஜெயலலிதாவிடமிருந்து ரணிலுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் அதை ஏற்றுள்ளார். இருப்பினும் எப்போது முதல்வர் ஜெயலலிதாவை ரணில் சந்திப்பார் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றனர்

* சபாநாயகர் வேட்பாளராக ஜெயக்குமார் அறிவிப்பு-துணை சபாநாயகராகிறார் ப.தனபால்

23-jayakumar-dhanapal300.jpg

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் எம்.எல்.ஏ.வான ப.தனபாலை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதாவே இன்று வெளியிட்டார். சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கடந்த அதிமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தற்போதைய அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை. இதனால் லேசான சலசலப்பு கூட எழுந்தது. ஆனால் சக்தி வாய்ந்த சபாநாயகர் பொறுப்பை அவருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். மே 27ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல ராசிபுரம் தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியை தோற்கடித்தவர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பழ. கருப்பையா நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வழக்கறிஞரான ஜெயக்குமாரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று முதல்வர் ஜெயலலிதா கருதியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

* 29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளருக்கு தேசிய விருது: எழுத்தாளர்கள் பெருமிதம்
கோவை: கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தன் எழுதிய நூலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சுமார் 29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது

மத்திய அரசின் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகையருக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. திரைப்பட விருதுகளோடு ஒவ்வொரு ஆண்டும் சினிமா பற்றிய சிறந்த நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருது கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தனுக்கு கிடைத்துள்ளது.

ஓவியர் ஜீவானந்தன்

கோவையின் பிரபல ஓவியர் ஜீவானந்தன். இவர் புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் உலக சினிமாக்கள் குறித்து எழுதி வந்தார். சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘திரைச்சீலை’ எனும் நூலை வெளியிட்டது. இது ஓவியர் ஜீவானந்தனின் முதல் நூலாகும்.

வெளியான போதே பரவலான கவனிப்பைப் பெற்ற இந்த நூல் 58வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றுள்ளது.

29 ஆண்டுகளுக்கு பின்

கடைசியாக இந்த விருது 1982-ம் ஆண்டு அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து இந்த விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்தது இலக்கிய உலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

* பாரத் பல்கலை. பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்
சென்னை, மே 23: மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.

 பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.

 இதுகுறித்து பாரத் அறிவியல் தொழில்நுட்ப மைய முதல்வர் ஆர். காரி தங்கரத்தினம் திங்கள்கிழமை கூறியது:

 வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி அளிப்பதற்காகவும், ஐபிஎம் நிறுவனத்துடன் பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

 போட்டிகள் நிறைந்த இந்த சூழலில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மிகவும் அவசியம். குறிப்பாக -டெஸ்ட்டிங் சாஃப்ட்வேர்- துறையில் மாணவர்களுக்கு, ஐபிஎம் நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது என்றார்.

* பாளையங்கோட்டையில் 106 டிகிரி வெயில்

சென்னை, மே 23: தமிழகத்திலேயே அதிக அளவாக பாளையங்கோட்டையில் 106 டிகிரி வெப்பம் திங்கள்கிழமை பதிவானது.

 இதற்கடுத்தபடியாக, வேலூரில் 102 டிகிரியும், திருச்சி, புதுவையில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானது.

 சென்னையில்... சென்னையில் திங்கள்கிழமை 99 டிகிரி வெப்பம் பதிவானது. விமான நிலையத்தில் 102 டிகிரி வெப்பம் பதிவானது. பகல் பொழுதில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக, அனல் காற்று வீசியது.

 மாநகரில் வெப்பம் செவ்வாய்க்கிழமை 102 டிகிரியை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்

23-castor-oil300.jpg

தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும்.

குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.

ஆமணக்கு வேலி

மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும்.

தோலில் கட்டி மற்றும் புண்கள் ஏற்பட்டால் அவற்றின் மீது ஆமணக்கு செடியின் இலைகளை வதக்கி கட்டினால் அவை உடையும், வலி குறையும். வேர்ப்பட்டை பேதி மருந்தாகவும், தோல் வியாதி மருந்தாகவும் பயன்படும்.

கொட்டைமுத்து, காய்கள்

ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள். பச்சை நிறமாக இருக்கும் காய்கள் முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும்.

இவ்விதைகளையே 'ஆமணக்கு முத்து' என்பர். விதைகள் நச்சுச்தன்மை கொண்டவை. இரண்டு விதைகளை தின்றால் கூட மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பின்னர் நச்சு கலப்பதில்லை.

குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்

விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பேதியைத் தூண்டும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதன் மருத்துவப்பயன் தெரியவந்துள்ளது. குழந்தைகளை அடிக்கடி இந்த எண்ணெயை குடிக்கச்செய்து வயிற்றினை சுத்தமாக வைப்பர். குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மார்பகங்களின் மீது விளக்கெண்ணெயை தேய்த்து விட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர்.

சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.

பண்டைய பயன்பாடு

ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. விளக்கெரிக்க இவ்வெண்ணெயைப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் என்று பெயர் வந்ததாக பண்டித அயோத்திதாசர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் சமண முனிவர்கள் விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார்.

இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர். இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரீஸ்' ஆகும்.

வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தையில் 333 புள்ளிகள் சரிவு

மும்பை, மே 23: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும் சரிவு காணப்பட்டது. 333 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 18 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழாக சரிந்தது. கடந்த 2 மாதங்களில் புள்ளிகள் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.

 இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 100 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,386 புள்ளிகளாகக் குறைந்தது.

 மூலதன பொருள்கள், மின்சாரம், வங்கித்துறை பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. கிரேக்கத்தின் கடன் சுமையால் கடும் பாதிப்பு ஏற்படும் என கடந்த வாரம் பிட்ச் தர நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதன் பலனாக ஆசிய பங்குச் சந்தையிலும் சரிவு இருந்தது. சர்வதேச அளவில் அனைத்து பங்குச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டதால் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.

 ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஓஎன்ஜிசி, எல்&டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜின்டால் ஸ்டீல், ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டிஎல்எப், ஹிண்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனி லீவர், டாடா பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிஹெச்இஎல் பங்கு விலை அதிகபட்சமாக 6.69 சதவீதம் சரிந்து ரூ. 1,935-க்கும், எல்&டி பங்கு விலை 2.36 சதவீதம் சரிந்து ரூ. 1,612.85-க்கும், பாரத் எர்த் மூவர்ஸ் பங்கு விலை 2.34 சதவீதம் சரிந்து ரூ. 629.60-க்கும் விற்பனையானது.

 பங்குச் சந்தையில் மொத்தம் 1,973 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 801 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்தம் ரூ. 2,371.47 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* பிரெஞ்சு ஓபன்: முதல் சுற்றில் சானியா வெற்றி
பாரீஸ், மே 23: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா வெற்றி பெற்றார்.

 பாரீஸில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெர்மனியின் கிறிஸ்டினா பரோûஸ 6-3,6-3 என்ற நேர் செட்களில் அவர் வென்றார். சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆக்ரோஷமாக ஆட்டத்தைத் தொடங்கிய சானியா, முதலில் சில தவறுகளைச் செய்தார். தொடக்கத்தில் சர்வீஸ் செய்வதிலும் அவர் திணறினார். எனினும் ஆட்டத்தில் அவரது கையே ஓங்கியது. இதனால் நேர் செட்களில் அவர் வெற்றி பெற்றார்.

 முன்னதாக 2005-ல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் 4 -வது சுற்றுவரை முன்னேறினார். இதுவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவரது அதிகபட்ச சாதனை. பின்னர் 2009-ஆம் ஆண்டுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற அவர் மிகவும் சிரமப்பட்டார். இப்போது பிரெஞ்சு ஓபனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 அடுத்த சுற்றில் 12-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னிஸ்கா ரெட்வான்ஸ்கா அல்லது ஆஸ்திரியாவின் பாட்ரிசியாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சர்வதேச தரவரிசையில் சானியா இப்போது 72-வது இடத்தில் உள்ளார்.

* மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 251 ரன்கள் முன்னிலை


பùஸட்டரெ, மே 23: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் 251 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் உள்ளது.

 ÷முன்னதாக 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்ற 2-வது நாள் ஸ்கோருடன் தனது 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த மேற்கிந்தியத்தீவுகள் 223 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

 அந்த அணியில் சாமுவேல்ஸ் 57 ரன்கள் எடுத்தார். ராம்பால் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்தது.

 ÷பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், தபீக் உமர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடர்ந்தனர்.

 ÷ஹபீஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அசார் அலி முதல் இன்னிங்ûஸப் போல இந்த இன்னிங்கிஸýம் அரைசதம் அடித்தார்.

 அவர் 53 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்கிஸில் அவர் எடுத்த 67 ரன்களே பாகிஸ்தான் அணியில் அதிகபட்ச ரன் ஆகும்.

 ÷முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன ஆசத் அலி இந்த இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

 ÷தபீர் உமர் கொடுத்த 3 கேட்ச்சுகளை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் கோட்டை விட்டனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் 97 ரன்கள் எடுத்து ஆட்டநேரம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மிஸ்பா 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

 ÷3-வது நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 251 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 மேலும் இரண்டு நாள்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தான் மேலும் 100 ரன்கள் குவித்தால், அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த இருநாள்களில் மேற்கிந்தியத்தீவுகள் சிறப்பாக ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

 ÷இந்த டெஸ்ட் தொடர் இரண்டு ஆட்டங்களைக் கொண்டது. முன்னதாக முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத்தீவுகள் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில்

T_500_415.jpg

மூலவர்    :    பொன்னழகியம்மன்
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    அழகியநாயகி
தல விருட்சம்    :    மகிழம்
தீர்த்தம்    :    அம்பாள் தெப்பம்
ஆகமம்/பூஜை     :   
பழமை    :    500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :   
ஊர்    :    ஓ.சிறுவயல்
மாவட்டம்    :    சிவகங்கை
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது. இங்கு அனுமான் ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களைப் பிடித்த நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும்.

கோயிலுக்கு முன்புறம், சிறிய கல்வடிவில், "கல்லுச்சியம்மன்' காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம்.

அனுமான் அஞ்சலி ஹஸ்தம் எனப்படும் ராமனை வணங்கிய நிலையிலும், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற அபய ஹஸ்த நிலையிலும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களை பிடித்த நிலையிலுள்ள அனுமானை சிவகங்கை மாவட்டம் ஓ.சிறுவயலில் உள்ள பொன்னழகியம்மன் கோயிலில் தரிசிக்கலாம்.

 தலபெருமை:


அம்பாள் அமைப்பு: அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது.

ராமர் பாதம் பிடித்த ஆஞ்சநேயர்: பிரகாரத்தில் ராமர், சீதை ஆகியோர் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். ராமரின் இருக்கைக்கு கீழ் இருக்கும் ஆஞ்சநேயர், அவரது காலைப்பிடித்தபடி இருக்கிறார். இதனை, ராமருக்கு ஆஞ்சநேயர் கீழ்பணிந்து பணிவிடை செய்த கோலம் என்கிறார்கள். அருகில் இருக்கும் சீதாதேவி தனது வலதுகாலை மடக்கி உயர்த்திக் கொண்டு, இடக்காலை மட்டும் தொங்க விட்டபடி அனுமன் வணங்குவதை பார்ப்பவள் போல காட்சி தருகிறாள்.

தன் கணவரின் சேவகனான ஆஞ்சநேயர் எங்கே தன் காலையும் பிடித்து விடுவாரோ என்ற எண்ணத்தில் அவள் தன் ஒரு காலை மட்டும் இப்படி தூக்கி வைத்துக்கொண்டதாக சொல் கிறார்கள்.

சகோதர தலம்: பிரச்னைகளால் பிரிந்துள்ள சகோதரர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் மீண்டும் சேர்ந்து கொள்வர் என்கிறார்கள். இதற்காக இங்கு "தத்துக் கொடுத்தல்' எனும் சடங்கைச் செய்கிறார்கள்.

  தல வரலாறு:


முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிழங்கின் மீது கத்தி பட்டு ரத்தம் வெளிப்பட்டது.

பயந்த தொழிலாளர்கள் ஊர் மக்களிடம் இதனை தெரிவித்தனர். மக்கள் சென்று பார்த்தபோது அம்பாள் சுயம்புவாக இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் கோயில் கட்டினர்.

 திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

உணவு மண்ணில் வளர்வது எதற்காக? - சாந்தானந்தர்.

tblanmegamideanews_60784548522.jpg

* மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம். சிந்திக்கும் ஆற்றலுடையவர்கள், அளப்பரிய சக்தியுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. சூநான் யார்' என்று சிந்திக்கும்போதே, அவர்களுக்கு உலகம் பற்றிய அனைத்து உண்மைகளும் விளங்கிவிடுகிறது. அனைத்தும் சொந்தமாகி விடுகிறது.

* நீங்கள் இறைவனின் பாதத்தை சேரவேண்டும் என விரும்பினால், அதிக புண்ணியம் செய்யுங்கள். அதன் பலனை முழுமனதுடன் தியாகம் செய்து விடுங்கள். அவ்வாறு செய்பவர்கள் புண்ணியத்தின் பலனால் இறைவனை சென்றடைவதைவிட, இன்னும் விரைவாக அவரிடம் சேர்ந்து விடுவர். அவர்களுக்கு நிரந்தரமான மனஅமைதியும், பேரின்பமும் கிடைத்துவிடும்.

வினாடி வினா :

வினா - இந்தியக் குடியரசின் நிர்வாகத் தலைவர் யார் ?

விடை - ஜனாதிபதி.

இதையும் படிங்க :

10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு சாதனை

large_245233.jpg

திருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.

அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.



நன்றி - தட்ஸ்தமிழ், கூகில் செய்திகள், தின மணி, தின மலர்.

2 comments:

அப்பாதுரை said...

தொகுப்புக்கு நன்றி.
அமைச்சர் மரியம் மரணம் அதிர்ச்சி தருகிறது. ஆட்சி தொடங்கியதுமே இடி.
ராணா-டேவிட் ஹெட்லி பற்றி இன்னும் கொஞ்சம் விவரம் சேர்த்திருக்கலாமோ?

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி சார்.

Post a Comment