முக்கியச் செய்தி :
கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.
அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.
காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.
உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:
கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.
கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி:
முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.
முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.
சிறையில் யார் யார்?:
இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:
இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.
உலகச் செய்தி மலர் :
* புலிகளின் முக்கியத் தளபதி கைது?
விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன், நார்வே நாட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நார்வேயில் உள்ள நெடியவன் வீட்டை எல் சல்வடார் நாட்டில் இருந்து வந்த சர்வதேச காவல்துறையினர் சோதனை நடத்தியதுடன் அவரை கைது செய்ததாகவும், பின்னர் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிப்பதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நார்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றி வரும் நெடியவன், விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் நிதி திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
* மும்பை தாக்குதல் பயங்கரவாதியைக் கைது செய்ய உதவிய சவூதி அரேபியா
இஸ்லாமாபாத், மே 20: மும்பை தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கைது செய்த 7 பேரில் ஒருவரைப் பற்றிய விவரங்களை சவூதி அரேபியாதான் அளித்தது. இந்த தகவலை வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தனது வாஷிங்டன் அலுவலகத்துக்கு அனுப்பிய செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூதரக ரகசிய செய்தியை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை 7 பேரைக் கைது செய்தது.
அதில் ஒருவர் ஜமீல் அகமது. சர்வதேச காவல் படையான இண்டர்போல் ஒரு துப்பு கொடுத்திருந்தது. இந்த விவரத்தை சவூதி அரசு பாகிஸ்தானுக்கு அளித்தது. இந்த தகவலின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை ஜமீல் அகமதைக் கைது செய்ய முடிந்தது.
மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு ஜமீல் அகமது, இவருடன் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ஷாஹித் ஜமீல் ரியாஸýக்கு சவூதி அரேபியாவிலிருந்து பணம் அனுப்பினார்.
2008 நவம்பர் 26-ம் தேதி தாக்குதல் நடந்த பின்பு, அது தொடர்பாக பாகிஸ்தானில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஆறாவதாக கைதானவர் ஜமீல் அகமது. பாகிஸ்தானின் மத்திய புலனாய்வுத் துறையால் இவர் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக உள்ளவர் என்று இவர் பெயர் காவல் துறை ஆவணங்களில் இருந்து வந்தது.
இண்டர்போல் தந்த தகவலின் அடிப்படையில், ஜமீல் அகமது மற்றும் ஷாஹித் ஜமீல் ரியாஸ் ஆகியோரது தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜமீல் அகமது அவருடைய வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார்.
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விசாரணை இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. மும்பை தாக்குதல் சதியைத் திட்டமிட்டு, அதை நடத்தி முடிக்க பணம் வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் ஸக்கியூர் ரஹ்மான் லக்வி என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் மீது நடைபெறும் வழக்கில் பயன்படுத்த இந்தியாவில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் அளித்த வாக்குமூலத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அது ஒரு சாட்சியமாக இவ்வழக்கில் பயன்படுத்தப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
அதைத் தவிர, லஷ்கரின் முக்கிய தலைவர்களான ஸக்கியூர் ரஹ்மான் லக்வி மற்றும் அபு அல் காமா ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களின் பதிவு பாகிஸ்தான் காவல்துறை வசம் உள்ளது.
இந்த தகவல்கள் யாவும் அமெரிக்க தூதரக அதிகாரி வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் உள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ் இப்போது பகிரங்கமாக்கியுள்ளது.
* ஐ.எம்.எஃப். முன்னாள் அதிகாரிக்கு பிணை
கற்பழிப்புக் குற்றசாற்றில் கைது செய்யப்பட்ட ஐ.எம்.எஃப். முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ் கானுக்கு பிணை விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியகத்தின் தலைவராக இருந்தவர் டொமினிக் ஸ்டாரஸ்கான் (65). அமெரிக்காவில் ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு பணிபுரியும் பெண்ணை கற்பழிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில், அவர் தன்னை பிணையில் விடுதலை செய்யும்படி நியூயார்க் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சர்வதேச நிதியக முன்னாள் தலைவர் ஸ்டாரஸ்கானுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினார். ஜாமீன் தொகையாக ரூ.4 கோடியே 50 லட்சம் செலுத்தவும், மற்றும் வீட்டுக்காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவர் மேன்காட்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன் தங்கி கொள்ளலாம். அதே நேரத்தில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகள் நீக்கப்படவில்லை.
* ஐஎம்எப் தலைவராவாரா சிங்கப்பூர் நிதியமைச்சர் சண்முகரத்தினம்?
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நிதிக் கழகத்தின் (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாண வம்சாவளித் தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் நியமித்தார் அந் நாட்டு பிரதமர் லீ சென் லூங்.
அந் நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான சண்முகரட்னம் நேற்று தான் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் (Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் இவரை சர்வதேச நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பான்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஐஎம்எப் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதி்த்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
இப்போது சண்முகரட்னம் ஐஎம்எப்பின் ஸ்டீரிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஹூரியத் தலைவர் கிலானிக்கு வீட்டுக்காவல்
காஷ்மீர் அரசியல் அமைப்பான ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சயத் அலி ஷா கிலானி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல், கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஷ்மீரில் அரசியல் கைதிகளாக உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆனந்த்நாக் நகரில் பேரணி நடத்த கிலானி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஷோபியன் மாவட்டத்தில் இதுபோல ஏற்கெனவே ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்ததால், கடந்த வாரமும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* நோய் தடுப்பில் இந்தியாவை தாண்டிய சீனா
ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் தொற்று நோய்களை தடுப்பதலும், நகர மயமாக்கால் அதிகரிக்கும் உயிர்கொல்லி தொற்று நோய்களால் பாதிக்கப்படுவோரை குறைப்பதிலும் இந்தியாவை விட சீனா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உலக நல்வாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உலக நல்வாழ்வு அமைப்பின் 64வது மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நோய் தடுப்பில் சிறப்பாக செயலாற்றியதன் விளைவாக சீனாவில் சராசரி வாழ்க்கைக் காலம் 2000 ஆவது ஆண்டில் 61 ஆக இருந்தது 2009இல் 74 ஆக உயர்ந்துள்ளது என்றும், இதே காலகட்டத்தில் இந்தியாவில் 61 வயது என்பது 65 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டிற்குப் பிறகு நலவாழ்விற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களையும் சீனா அதிகப்படுத்தியுள்ளதே அதன் சிறப்பான செயல்பாட்டிற்குக் காரணம் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் இன்னமும் குழந்தை பிறப்பின்போது தாய் மரணிப்பதும், குழந்தை இறந்து பிறப்பதும், பிறந்த பின் குறுகிய காலத்தில் இறப்பதும் அதிகமாக உள்ளதெனவும், ஏழை எளிய மக்களிடையே தொற்று நோய் பரவல் அதிகமாக உள்ளதெனவும், நகர வாழ் நடுத்தட்டு மக்களிடையே தொற்று நோயற்ற இதர நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் ஐ.நா.உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
* எங்களது உள் விவகாரங்களில் தலையிடுகிறது அமெரிக்கா: சிரியா குற்றச்சாட்டு
பெய்ரூட், மே 20: தங்கள் நாட்டு உள் விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டு வருவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை கூறுகையில், "சிரிய அதிபர் பஷார் அஸ்ஸôத் ஜனநாயக வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் பதவி விலக வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இது தங்களது நாட்டின் உள் விவகாரத்தில் அப்பட்டமாகத் தலையிடும் செயல் என்றும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை மேலும் தூண்டிவிடும் செயல் என்றும் சிரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவின் இந்தப் பேச்சு சிரியா போன்ற பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்ற அமெரிக்காவின் மனநிலையையே காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தேசியச் செய்தி மலர் :
* உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பம் அவசியம்: வேளாண் விஞ்ஞானி
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியாக வேண்டும் என்று நாட்டின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானி கூறியுள்ளார்.
டெல்லியில் ஆசிய - பசிபிக் பகுதிக்கான வேளாண் உயிரிதொழில்நுட்ப ஒன்றிணைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வேளாண் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் முன்னாள் செயலராக இருந்த ஆர்.கே.பரோடா, “நமது நாட்டின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 23.5 கோடி டன் அளவிற்கு உள்ளது. இதனை 28.5 டன்களாக 2020ஆம் ஆண்டிற்குள் உயர்த்த வேண்டும். அதற்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நமது நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 2 விழுக்காடாக உள்ளது, இதனை 4 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் பரோடா கூறியுள்ளார்.
* மீண்டும் குழப்பம்-பாக்.கிடம் கொடுத்த பட்டியலில் உள்ள தீவிரவாதி மும்பை சிறையில்!
டெல்லி: பாகிஸ்தானும், உலக நாடுகளும் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் நிலைக்கு நாட்டை கொண்டு சென்று வருகிறது சிபிஐ. இந்தியாவால் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் என்று கூறி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு நபரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்து, இந்தியாவின் நிலை வெட்கக்கேடாகியுள்ளது.
இந்தியாவால் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகள் குறித்த ஒரு பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டு நாட்டின் பெயரைக் கெடுப்பதாக அமைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த வஸூல் கமர் கான் என்பவரின் பெயரால் முதலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இவர் 2003 மும்பையின்முலுந்த் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டிருந்தார். இவர் தற்போது தானேவில் உள்ள வாங்க்லே எஸ்டேட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி இவர் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் விலே பார்லே, கட்கோபர் குண்டுவெடிப்புகளிலும், 2002 மும்பை ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
மும்பைக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வரும் இவரை அதிகம் தேடப்படும் நபர் பட்டியலில் சேர்த்து அதை பாகிஸ்தானுக்குக் கொடுத்துள்ளது இந்தியா. அதிகம் தேடப்படும் நபர்கள் பட்டியலிலிருந்து கானின் பெயரை சிபிஐ நீக்காததால் வந்த குழப்பம் இது. மேலும் இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீஸ் பிரிவிலும் இவரது பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த குழப்பத்தால் உள்துறை அமைச்சகத்திற்கும் அவப் பெயர் ஏற்பட்டது. இருப்பினும் சிபிஐதான் இதற்குக் காரணம் என்று உள்துறை அமைச்சகம் விளக்கியது. சிபிஐ கூறினால் அதை அப்படியே ஏற்காமல், பரிசீலனை செய்திருக்கலாமே என்று கேள்விக்கு உள்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் இல்லை.
மீண்டும் ஒரு குழப்பம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழப்பத்தை செய்துள்ளன சிபிஐயும், உள்துறை அமைச்சகமும்.
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரின் பெயரையும், தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்து பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது இந்தியா. அதாவது, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபரை இன்னும் தேடி வருவதாக கூறியுள்ளது இந்தியா.
இந்தக் குழப்பத்திற்கு பாஜக கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு குழப்பமான பட்டியலால் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கேலிக்கூத்தாக்கி விட்டதாக பாஜக கண்டித்துள்ளது.
இந்தக் குழப்பத்திற்கும் சிபிஐதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து ப.சிதம்பரம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓம்கார் கேடியா இதுகுறித்துக் கூறுகையில், பெரோஸின் பெயர் தவறுதலாக அதிகம் தேடப்படுவோர் பட்டியலி்ல இடம் பெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவரது பெயரை பட்டியலிலிருந்து நீக்காமல் விட்டு விட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது என்றார்.
இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து எஸ்.பி, டிஎஸ்பி அந்தஸ்திலான இரு அதிகாரிகளை சிபிஐ சஸ்பெண்ட் செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ செய்தித் தொடர்பாளரான தரணி மிஸ்ரா என்பவர் கூறுகையில், அப்துல் ரஷீத் கான் கைது குறித்த தகவல் 2010 பிப்ரவரியில் சிபிஐயின் இன்டர்போல் பிரிவுக்கு தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ரெட் கார்னர் நோட்டீஸ் பட்டியலிலிருந்து கானின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி அதைச் செய்யவில்லை. அதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் ஒரு குழப்பம்
இதேபோல இன்னொரு குழப்பத்தையும் சிபிஐ செய்துள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர் உல்பா தலைவரான ராஜ் குமார் மேகான். ஆனால் அவரது பெயர் இன்னும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. நல்ல வேளையாக இவரது பெயரையும் சேர்த்து பாகிஸ்தானிடம் கொடுக்காமல் விட்டது இந்தியா.
'காலாவதி வாரண்ட்டுடன் டென்மார்க் போன சிபிஐ'
இதற்கிடையே புரூலியா ஆயுத வழக்கில் தேடப்பட்டு வரும் கிம் டேவியைக் கைது செய்ய காலாவதியான வாரண்ட்டுடன் டென்மார்க் போய் இந்தியாவின் பெயரை கேவலப்படுத்தி விட்டு வந்துள்ளது சிபிஐ. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூ்த்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், டென்மார்க்கை சேர்ந்த கிம் டேவியை கைது செய்வதற்காக அந்த நாட்டுக்கு காலாவதியான வாரண்ட்டுடன் சிபிஐ சென்று நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தவறு, இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம். இந்த தவறுக்கு மத்திய அரசில் யாரேனும் இதுவரை பொறுப்பேற்றுக் கொண்டார்களா?.
இதேபோல சிறையில் இருப்பவர்களையும், ஜாமீனில் வெளியே இருப்பவர்களையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அதனை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளா என்று சாடியுள்ளார் சுஷ்மா.
கிம் டேவி குறித்த குழப்பத்திற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், பாஜக குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பு உண்மையான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை. பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்தின் கீழ்தான் சிபிஐ செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மீதான தீவிரவாதப் புகார்களை இந்தியா அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக கூறி வரும் நிலையில் அதுதொடர்பான ஆதாரங்களையும், தீவிரவாதிகள் குறித்த பட்டியலையும் எவ்வளவு துல்லியமாக அது வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி அடுத்தடுத்து குப்பாச்சு, குழப்பாச்சு வேலைகளில் சிபிஐயும், மத்திய உள்துறையும் செயல்பட்டால் இந்தியா சொல்வதை யாராவது நம்புவார்களா அல்லது இந்தியாவின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மைதான் வருமா...?
* சீனா - பாக்., ராணுவ உறவு: சவால் என்கிறார் அந்தோணி
புதுடில்லி:""சீனா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவுகள் அதிகரித்து வருவது, இந்தியாவுக்கு மிகவும் கவலை தரும் விஷயமே. இருந்தாலும், இந்த சவாலைச் சந்திக்க, இந்தியா தன்னுடைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்,'' என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு சீனா, 50 புதிய ஜே.எப்-17 ரக விமானங்களை தர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான சொர்க்கமாக பாகிஸ்தான் இருப்பதும் கவலை தரும் விஷயமாகும். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் உண்மையிலேயே விரும்பினால், அந்நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம்களையும் அழிக்க வேண்டும். சீனா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவுகள் அதிகரித்து வருவதால், நாமும் நமது நாட்டின் படைத்திறனை மேம்படுத்த வேண்டும். சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் அபோதாபாத்தில், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை ஒழித்துக் கட்ட, அமெரிக்கப் படையினர், திடீரென ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய தாக்குதலை நடத்தும் திறன் இந்திய ராணுவத்திற்கும் உள்ளது என, ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங்கும், விமானப்படை தளபதி பி.வி.நாயக்கும் கூறியுள்ளனர். இது தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமர் இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டார். அதனால், நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, வன்முறை குறைந்துள்ளது. இருந்தாலும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதும் தொடர்கிறது. இருந்தாலும், நிலைமை மேம்பாடு அடைந்துள்ளது.ராணுவ தளபதியின் வயது தொடர்பாக, சட்ட அமைச்சகமும், அட்டர்னி ஜெனரலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நான் எதுவும் தெரிவிக்க முடியாது. இந்தப் பிரச்னையை பெரியதாக்கவும் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அரசு முடிவு எடுக்கும்போது, அது பற்றி அறிவிக்கப்படும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.
*
போயிங் விமானம் வாங்கியதில் ஹசன்அலிக்கு கமிஷன்
மும்பை: அன்னியச்செலவாணி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புபண வழக்கில் கைதாகியுள்ளள , மும்பையின் பிரபல குதிரைப்பண்ணை உரிமையாளர் ஹசன்அலி, அமெரிக்காவிடமிருந்து இந்தியாவிற்கு இரு போயிங் விமானங்கள் வாங்கியதில் தரகராக இருந்து 11.5 மில்லியன் டாலர் கமிஷனாக பெற்றுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 1986-87-ம் ஆண்டுகளில் இந்திய விமானப்படைக்கு போயிங் ரக விமானம் 747 வாங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது ஹசன் அலிகான், தன்னுடைய ஆர்.எஸ். இன்வெஸ்மென்ட் பி லிமிட்ெ பெயரில் 230 மி்ல்லியன் டாலர் மதிப்பிலான போயிங் விமானங்கள் வாங்கியதில் தரகராக செயல்பட்டார். ஹசன் அலிகான் இதற்காக 11. 5 மி்ல்லியன் டாலர் கமிஷனாக பெற்றுள்ளதாக அமாலாகத்துறையினர் கடந்த 2007-ம் இவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியது, மற்றும் அன்னியச்செலவாணி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானம் வாங்கியதில் நிகழ்ந்த பண பரிவர்த்தனையில் ஏராளமான அளவுக்கு வங்கி சட்டதிட்டங்களை மீறியுள்ளதாகவும், சர்வதேச அளவில் மோசடி செய்திரு்ப்பதாகவும் அமலாக்கத்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநிலச் செய்தி மலர் :
* புகழ் பெற்ற ஊட்டி மலர்க்கண்காட்சி தொடக்கம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது.
கோடை விழா
ஊட்டியில் கோடை விழா கடந்த 7ம்தேதி ரோஜா கார்டனில் ‘ரோஜா கண்காட்சி’ மூலம் துவங்கியது. அதனை அடுத்து கடந்த 14,15ம்தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. ஊட்டி சீசனின் மிக முக்கிய நிகழ்வான மலர்க்கண்காட்சிஇன்று முதல் துவங்க இருக்கிறது. 22ம் தேதிவரை இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.
பூக்களால் உலகக் கோப்பை
இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றியை நினைவூட்டும் வகையில் பூக்களால் ஆன பிரம்மாண்டமான உலகக்கோப்பை அலங்காரம் இந்த ஆண்டு மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சம் ஆகும். இது தவிர, பிரம்மாண்டமான கங்காரு ஒன்றின் உருவத்தையும் தாவரவியல் பூங்காவில் உருவாக்கி வருவார்கள். இந்த ஆண்டு கண்காட்சிக்கென பிரத்யேகமாக 15 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.
சிறப்பு ஏற்பாடுகள்
மலர்க்கண்காட்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தினரால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
* சிறுத்தைப் புலி தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி
சென்னை, மே 20: கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு: கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா தாய்முடி எனும் இடத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகள் ஜனனி (3). சிறுத்தைப் புலி தாக்கியதில் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் ரூ.1.5 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*
பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது: ஆர்.பாலகிருஷ்ணன்

மதுரை, மே 20: பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றார் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விஜிலென்ஸ் முதன்மைக் கண்காணிப்பு அலுவலர் ஆர்.பாலகிருஷ்ணன்.
மதுரை கம்பன் கழகத்தின் நிறைவு விழா 3 நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் விஸ்வாஸ் கலை, பண்பாட்டு மையம் இலவச பதிப்பாக தொகுத்துள்ள கம்பனில் "சொல் புதிது! பொருள் புதிது!' என்னும் நூலை வெளியிட்டு கம்பனும் பன்முகத் திறனும் என்ற தலைப்பில் அவர் பேசியது:
நான் பிறந்த மதுரையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பன் விழாவில் பங்கேற்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது பெருந்தலைவர் காமராஜருடன் காரில் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
காமராஜர் பற்றிய சொற்பொழிவை நான் ஆற்றியதற்காக அவர் என்னை காரில் அழைத்துச் சென்றார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் என் நினைவில் இன்றும் நிழலாடுகிறது. உன்னைப் போன்ற இளைஞர்களை தவறான வழியில் அழைத்துச் சென்றுவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன். உனக்கு பொது வாழ்வில் அக்கறை இருக்கிறது என்று சொன்னால் நீ ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளேன். நான் ஐஏஎஸ் தேர்வுக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 40 நிமிட நேர்காணலில் 10 நிமிடம் கம்பராமாயணம் பற்றியதாக கேள்வி இருந்தது.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியாற்றிய போதுகூட கம்பராமாயணம் தொடர்புடைய பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய போது இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்றுள்ளேன்.
இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துரைக்கும் முகவரிச் சீட்டாக இருப்பது நமது மக்களாட்சியும் பம்மியம் எனும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும்தான். இந்த விஷயத்தில் உலகில் இந்தியா ஒரு உதாரணமாக போற்றப்படுகிறது.
கம்ப ராமாயணத்தில் உளப்பாட்டு பம்மியம் குறித்து கூறப்பட்டுள்ளது. இது பாரதத்தின் வாழ்வியல் நடைமுறையாகும். இந்திய இலக்கிய மரபுகளில் இந்த வாழ்வியல் தாக்கத்தை நாம் காண முடிகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒப்பரிய தத்துவத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்துள்ளனர். அந்த வார்த்தையின் அடித்தளத்தில்தான் இந்த ஒற்றுமை கோபுரம் ஓங்கி நிற்கிறது.
கம்பராமாயணம் இந்தியாவுக்கு தமிழகம் அளித்த கொடை. உலகத்துக்கு இந்தியா அளித்த கொடை. நாம் நமது குழந்தைகளை நம்முடைய கனவுகளைச் சுமப்பதற்காக தயார் படுத்துகிறோம். குழந்தைகள் அவர்களது கனவுகளை மட்டுமே சுமக்க வேண்டும். அவர்கள் மறந்தும் மற்றவர்களின் கனவுகளை சுமக்க விடக்கூடாது.
குழந்தைகளே உங்களுக்கு பிடித்ததை விடாதீர்கள். பிடிக்காததைத் தொடாதீர்கள்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. என்னை ஒருவேளை அரசியலோ அறிவியலோ எடுத்துப் படிக்க கட்டாயப்படுத்தியிருந்தால் நான் உங்கள் முன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்திருக்கமாட்டேன். நான் தேர்தல் பணியிலிருந்து தற்போது சென்னையில் வந்து பணியாற்றுவது கூட சிந்துசமய நாகரிகம் பற்றிய ஆங்கில நூலை எழுதி முடிப்பதற்காகத்தான். நாம் அடையவேண்டிய இலக்கு நிறைய உள்ளது.
இது போன்ற வாழ்க்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கட்டாயக் கடமையாகும் என்றார்.
*
ஊர்தோறும் கம்பன் கழகங்கள் உருவாக வேண்டும்: சாலமன் பாப்பையா
மதுரை, மே 20: செந்தமிழைப் பாதுகாக்க வேண்டுமானால் ஊர்தோறும் கம்பன் கழகங்கள் உருவாக வேண்டும் என்று தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசினார்.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதுரைக் கம்பன் கழகத்தின் 8-ம் ஆண்டு நிறைவு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் தலைமை வகித்துப் பேசியது:
பண்டையகால மன்னர்கள் தமிழைப் போற்றினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்று தெரியாது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதற்கான காலவரையறையும் தெரியவில்லை. குறுநில மன்னர்கள் காலத்தில் தமிழ் அவர்களது கைகளில் தவழ்ந்தது. பின்னர் மடங்கள், சமயங்கள் தமிழை வளர்த்தன. இன்றைக்கு தமிழ் வளர்ச்சிக்கு இத்தகைய கம்பன் கழகங்கள் இல்லை என்று சொன்னால் தமிழ் இல்லாமல் போனாலும் போய்விடலாம்.
திருவள்ளுவர் கழகம் ஒருபுறமும் அதற்குப் போட்டியாக கம்பன் கழகம் ஒருபுறமும் பெரிய புராணம் தொடர்பான சொற்பொழிவுகளும் இருந்த ஒரு காலம் உண்டு. ஆனால் அவையெல்லாம் பல்கலை ஆய்வு நோக்காக போய்விட்டன. எப்போது வீதி தோறும் தெருவோர மக்களையும் சராசரி மனிதனையும் தமிழ் போய்ச்சேரவில்லையோ அப்போது அது சளிபிடித்துச் செத்தாலும் சாகும்?
ஆகவே செந்தமிழ் பூந்தமிழ் பைந்தமிழான தமிழைக் காத்து வைக்க வேண்டுமானால் இத்தகைய கம்பன் கழகங்கள் பகுதி பகுதியாக வரவேண்டும். இது போன்ற இலக்கியக் கூட்டங்களிலேயே பணியில் உள்ள தமிழாசிரியர்கள் கூட வருவதில்லை. பணி முதிர்வு பெற்ற தமிழாசிரியர்களே வருகின்றனர். இச்சூழலில் தமிழைக் காக்க கழகங்கள் சார்பில் வந்துள்ள அறிஞர்கள் அத்தனை பேரின் திருவடித் தொட்டு தமிழைக் காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் கம்பனில் சொல் புதிது பொருள் புதிது என்ற நூலை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விஜிலென்ஸ் முதன்மைக் கண்காணிப்பு அலுவலர் ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட, அதைப் பெற்றுக்கொண்டார் கம்பன் கழகத் துணைத் தலைவர் புரவலர் எஸ்.சீதாராமன்.
பள்ளி, கல்லூரிகள் அளவிலான கம்பன் போட்டிகளில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவிகளுக்கு இந்து நாளிதழ் பிராந்திய பொது மேலாளர் டி.முரளி பரிசுகள் வழங்கினார்.
மதுரை கம்பன் கழகச் செயலர் ரா.சொக்கலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். புரவலர் எஸ்.சீத்தாராமன் வரவேற்றார். டாக்டர் வி.விஜயலட்சுமி குழுவினரின் கம்பன்மலர் வழிபாடு நடைபெற்றது. விஸ்வாஸ் புரொமோட்டர்ஸ் இயக்குநர் பத்ம லெட்சுமி சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். பொருளாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் நன்றி கூறினார்.
முன்னதாக கம்பன் திருவீதி உலா பேரணியை மூத்த பொறியாளர் எஸ்.முகமது ரபீக் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் கம்பன் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எடுத்துவரப்பட்டது. மலர்க் குடங்களுடன் பெண்களும் தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.
*
51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை, மே 20: தமிழகத்தில் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள துறைகளில் மூத்த, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள
ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
* பாரதிதாசன் பல்கலை.யில் 6 ஆண்டு எம்.டெக். படிப்புக்கு மே 28-ல் நுழைவுத் தேர்வு
திருச்சி, மே 20: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 6 ஆண்டு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல் கலைக்கழகப் பதிவாளர் த. ராமசாமி தெரிவித்திருப்பது: "ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். (உயிரித் தொழில்நுட்பவியல், உயிரித் தகவலியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், புவிநுட்பவியல், புவித் தகவலியல்) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. கேள்விகள் 12 ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமையும். ஆங்கிலம், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டையும், 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் கொண்டு வர வேண்டும். எனவே, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்' என்றார் ராமசாமி.
ஆரோக்கியச் செய்தி மலர் :
தயிரை சாப்பிட்டு வந்தால்
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
தயிரின் முக்கியத்துவம்
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.
கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
No comments:
Post a Comment