Thursday, May 12, 2011

இன்றைய செய்திகள் - மே,12, 2011.


முக்கியச் செய்தி :

* ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-தேர்தல் ஆணையம் தயார்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதியே தேர்தல் முடிந்து விட்டது. அதே தினத்தில் கேரளா, புதுச்சேரிக்கும் தேர்தல் நடந்தது. அஸ்ஸாமில் 2 கட்டமாக நடந்தது. 

மேற்கு வங்க மாநிலத்தில்தான் ஆறு கட்டமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம். மேற்கு வங்க தேர்தல் முடிவதற்காக மற்ற நான்கு மாநிலங்களும் காக்க வேண்டியதாகி விட்டது.

மேற்கு வங்கத்திலும் தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. இதையடுத்து வருகிற 13ம் தேதி இந்த ஐந்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.

ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 839 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்கு எண்ணும் மையங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் பணியில் 43,982 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்புப் பணியில் 17,700 மத்திய படையினர் ஈடுபடவுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவுள்ளதால் பிற்பகல் 1 மணியளவில்தான் முதல் முடிவு தெரிய வரும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படவுள்ளது. எந்தவித மோசடியும் நடைபெறாத வகையில் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது குறித்து எக்ஸிட் போல் முடிவுகளை பலரும் வெளியிட்டுள்ளதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. மே 13ம் தேதியன்று நிஜமான முடிவுகள் தெரிந்து விடும் என்பதால் மக்கள் தங்களது பார்வையை ஒட்டுமொத்தமாக மே 13ம் தேதியை நோக்கி திருப்பி வைத்துள்ளனர்.


* இந்தியாவால் தேடப்படும் 50 பயங்கர குற்றவாளிகள் பட்டியல் பாக்.கிடம் ஒப்படைப்பு

டெல்லி: பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவால் தேடப்படும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கர குற்றவாளிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இவர்களில் முதல் இடத்தில் லஷ்கர் இ தொய்பா தலைவனான ஹபீஸ் சயீத் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்தியா இதுபோல எத்தனையோ முறை பல பட்டியல்களை பாகிஸ்தானிடம் கொடுத்து விட்டது. ஆனால் அதை வாங்கி குப்பைக் கூடையில் போடுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது பாகிஸ்தான்.

இந்த நிலையில் தற்போது பின்லேடனை அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ள அமெரிக்காவைப் பார்த்து அதே பாணியில் இந்தியாவும் செயல்பட்டு மும்பையில் பயங்கரவாத செயலை அரங்கேற்றிய லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், நீண்ட காலமாக இந்தியாவால் கோரப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் போன்றோரை இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கான வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறி விட்டது. இருப்பினும் பின்லேடன் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எழுந்துள்ள சர்வதேச நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது இந்தியா.

இதைத் தொடர்ந்து இந்தியாவால் தேடப்பட்டு வரும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கர குற்றவாளிகளின் பட்டியலைத் தயாரித்து அதை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இப்பட்டியலை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறான் சயீத். இவன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை நிறுவியவன். அந்த அமைப்புக்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து வேறு பெயரில் இயங்கி வருகிறான். மும்பையில் 3 நாட்கள் தீவிரவாதிகள் அரங்கேற்ற அதி பயங்கர தீவிரவாத சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியவன் இவனே.

அதேபோல ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவன் சயீத் சலாஹுதீன் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம், அவனது தம்பி அனீஸ் இப்ராகிம், டைகர் மேனன், சோட்டா ஷகீல் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 பேரில் 21 பேர் தாவூத் முகாமைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் போக பாகிஸ்தான் ஐஎஸ்ஐயைச்சேர்ந்த மேஜர் இக்பால் (இவன் மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.), மும்பை தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் சமீர் அலி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு முக்கிய நபர் மசூத் அஸார். இவன் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய்ப புள்ளி ஆவான். இவனைத்தான் கடந்த பாஜக ஆட்சி, தீவிரவாதிகளிடம் பத்திரமாக கொண்டு போய் ஒப்படைத்தது என்பது நினைவிருக்கலாம்.

இப்பட்டியலில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் போக 2008 பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ரஷீத் அப்துல்லா என்கிற அபு ரெஹான், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த சீமா அஸாம், சையத் சைபுதீன் ஜபி, இப்ராகிம் அத்தார், அஸார் யூசுப், மிஸ்ரி ஸாகுர் இப்ராகிம் என்கிற போலா, சயீத் ஷாஹித் அக்தர், ஷகீர் முகம்மது என்கிற ராம் கோபால் வர்மா, அப்துல் ராப், சுபியான் முப்தி, யாக்கூப் கான் பதான் உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

உலகச் செய்தி மலர் :

*அமெரிக்க தாக்குதலிலிருந்து தப்பிய ஒசாமா பின்லேடனின் மகன் எங்கே?

11-hamza-bin-laden300.jpg

இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வீட்டை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டு நடத்திய தாக்குதலின்போது உயிர் தப்பிய பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள பின்லேடன் வசித்து வந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை சுட்டு வீழ்த்தியபோது, பின்டேனின் மகன்களில் காலித் என்பவர் சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் அங்கிருந்த பின்லேடனின் இன்னொரு மகனான ஹம்சா என்பவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் கொல்லப்படவில்லை, அமெரிக்கப் படையினரிடமும் சிக்கவில்லை. அதேபோல பாகிஸ்தான் படையினரிடமும் அவர் சிக்கவில்லை என்று தெரிகிறது.

ஹம்சாவின் தாயார், பாகிஸ்தான் படையினரிடம் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஹம்சா குறித்து யாரிடமும் தகவல் இல்லை.

அதேசமயம், பின்லேடன் உடலைத் தவிர வேறு யாருடைய உடலையும் தாங்கள் கொண்டு செல்லவில்லை. அதேபோல யாரையும் தாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.

ஒசாமா பின்லேடனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் உள்ளனர். அவருடைய பிள்ளைகள் தற்போது 18 பேர் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஹம்சா எத்தனையாவது குழந்தை என்பது தெரியவில்லை.

ஹம்சா தப்பியிருக்கலாம் அல்லது அவரை பாகிஸ்தான் படையினர் தங்கள் வசம் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

* தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள்
 

வாஷிங்டன்: எங்களது தந்தை ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். இது மிகக் கொடூரமான கொலை. அமெரிக்கப் படையினர் மிகவும் கொடூரமாக நடந்து எங்களது தந்தையின் உடலை கடலில் வீசியுள்ளனர். இது மனித நாகரீகத்திற்கு முரனாணது என்று பின்லேடனின் மகன்கள் குமுறியுள்ளனர்.

இதுகுறித்து பின்லேடனின் மகன்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது...

எங்களது தந்தையை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ள செயல் மிகவும் அத்துமீறிய, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அவரது உடலை கடலில் வீசியதும் கண்டனத்துக்குரியத. 

ஏன் எங்களது தந்தையை கைது செய்ய அமெரிக்கப் படையினர் முயலவில்லை. அவரை கோர்ட்டில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும்.

எங்களது தந்தையின் மரணப் பின்னணி குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அடிப்படை மனித உரிமைகள், சட்ட நெறிமுறைகளைக் கூட அமெரிக்கா கடைப்பிடிக்கவில்லை. ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா. அவரது உடலை கடலில் வீசிய செயலும் நியாயமே இல்லாதது.

அரசியல் பிரச்சினைகளுக்கு இப்படிப்பட்ட படுகொலைகள் தீர்வல்ல. எங்களது தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அதிரடியாக கொன்ற அமெரிக்கப் படையினர் உடலை கடலில் வீசி விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. அவை மிகவும் கோரமாக இருப்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. இதனால் பின்லேடன் வேட்டையாடப்பட்ட விதம் பெரும் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் இதுகுறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பின்லேடனின் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இக்கட்டான நிலையை சமாளிக்க இந்திய உதவியை நாடும் ராஜபக்ஷே

கொழும்பு:""இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது,'' என, அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொது செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.

இது குறித்து கொழும்பில் நிருபர்களிடம் ராஜபக்ஷே குறிப்பிடுகையில், "இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கு தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

* விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

துபை, மே 11: உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
 புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

 போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்


தேசியச் செய்திகள் :

* கனிமொழி, சரத்குமாரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

 டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். சரத்குமார் ரெட்டியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கலாகியுள்ளது.

இதைடுத்து இருவரும் கடந்த 6ம் தேதி சிபிஐ கோர்ட்டில் ஆஜராகினர். முன்ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த மனு மீதான தீர்ப்பு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது. அதை ஏற்று இருவரும் இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.

* ஆதர்ஷ் ஊழல்:மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர்களுக்கு சம்மன்  

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தின் ஊழல் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் அசோக் சவாண் ஆகியோருக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக இருநபர் குழு,விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் இருவருக்கும் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக 14 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியருந்த நிலையில், விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவாண் ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு இருநபர் குழு உத்தரவிட்டுள்ளது.

கார்கில் போர் தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டிய வீடுகளில் 40 விழுக்காடு வீடுகளை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்க அசோக் சவாண் பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


* போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்

11-supreme-court3-300.jpg

டெல்லி: போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி சிபிஐ இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தாமதமாக மறு விசாரணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இதற்கு என்ன காரணம் என்பதை சிபிஐயும், மத்தியப் பிரதேச அரசும் தெளிவாக விளக்கவில்லை.

முன்பே அவர்கள் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த தாமதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவின் மூலம் போபால் விஷ வாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக அளவிலான நிவாரண நிதி கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது.

1984ம் ஆண்டு போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய விஷ வாயுவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்போடு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்.

மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடையும் தரவில்லைய யூனியன் கார்பைடு. இந்த நிலையில் இவ்வழக்கில் 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதில் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீதான கடுமையான குற்றச்சாட்டை நீக்கியது உச்சநீதிமன்றம்.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத்தான் இப்போது சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டி, இத்தனை காலம் சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்று காட்டமாக கேட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போபால் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், மிக மிக குறைந்த அளவிலான தண்டனை தரப்பட்டது. இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை விட கொடுமையாக தண்டனை விதிக்கப்பட்ட அத்தனை பேரும் உடனடியாக ஜாமீனிலும் வெளியாகி விட்டனர்.

தற்போது உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள (அதாவது 2 ஆண்டு சிறை) அத்தனை பேரும் இந்த காலத்தை முடித்து விட்டு வெளியாகி விடும வாய்ப்பு உருவாகி விட்டது. மேலும் யூனியன் கார்பைடு ஆலையின் தவறால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மேல் நிவாரணம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டு விட்டது.

போபால் வழக்கில், மகிந்திரா, விஜய் கோகலே, கிஷோர் காம்தார், முகுந்த், செளத்ரி, கே.வி.ஷெட்டி, குரேஷி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

 
* ஆந்திர எம்.எல்.ஏ வை அடித்து விரட்டிய மலைவாழ் மக்கள்

ஹைதராபாத்: தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப்படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.

அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.

ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்.

இதை யடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.

* பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?

டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைச் சமாளிக்க பெட்ரோல், சீஸல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3-ம், டீஸல் விலை ரூ 4-ம், கேஸ் விலை ரூ 25 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு மட்டும் நாளை நள்ளிரவே அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ 1.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

ஆனால் சில மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதேபோல் டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது.

* தமிழ்நாட்டுப் பெண் ஐ.ஏ.எஸ்ஸில் முதலிடம்

iasstud.jpg

சென்னை, மே 11: இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
 இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.

 2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.

 கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார்.

 அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார். இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை.

 கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

* ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்: தமிழகத்தைச் சேர்ந்த98 பேர் தேர்ச்சி

img1110511041_1_1.jpg

மத்திய அரசுப் பணியாளர் தேர்வகம் நடத்திய இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றிற்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவ, மாணவியர் முதல் 10 இடங்களில் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி முதலிடத்தில் தேர்வாகியுள்ளார். 

2011ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2,589 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 920 பேர் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டக் கல்வி பயின்ற பட்டதாரி திவ்யதர்ஷினி முதலிடத்தை வென்றுள்ளார். சைதை சா.துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் இலவச கல்வி பயிற்சியில் பயின்ற ஆர்.வி.வருண்குமார் 3வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

நெல்லையைச் சேர்ந்த அபிராமி சங்கரன் 7வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேய அறக்கட்டளையைச் சேர்ந்த மற்றொரு மாணவரான எம்.அரவிந்த் 8வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆக முதல் 10 இடங்களில் வென்ற மாணவர்களில் இருவர் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 98 பேர் தேச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 36 பேர் ஆவர். இவர்களில் 29 பேர் மாணவர்கள், 7 பேர் மாணவிகள். 

இவர்களில் ஆர்.ராகப்பிரியா 28வது இடத்திலும், மீர் முகமது 59வது இடத்திலும், எஸ்.கார்த்திகேயன் 118வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பி.சீனிவாசன் என்ற மாணவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகத்தைச் சேர்ந்த அவினாஷ் கே.நிலாங்கர், சி.பிரபாகர் ஆகிய மாணவர்கள் மனிதநேயத்தில் பயிற்சி பெற்றுத் தேர்வாகியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மனித நேயத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு 85 பேரும், வன பணிக்கு 12 பேரும் தேர்வாகி, பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகவே பயிற்சியும், அவர்கள் தேர்வு எதிர்கொள்ளும்போது தேவைப்படும் அனைத்து வசதிகளும் மனித நேய அறக்கட்டளையால் செய்து தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* நீச்சல் உடையில் கடவுள் உருவம்: இந்திய அரசு ஆட்சேபம்

புதுதில்லி,மே 11: நீச்சல் உடையில் லட்சுமி தேவியின் படத்தை அச்சிட்டதால் ஹிந்துக்கள் மனம் புண்பட்டிருப்பதை ஆஸ்திரேலிய அரசிடம் தெரிவிக்குமாறு புதுதில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

 சிட்னி நகரில் நடைபெற்ற ""ரோஸ் மவுண்ட் ஆஸ்திரேலியன் ஃபேஷன் வீக்'' நிகழ்ச்சியில் நீச்சல் உடையில் அந்நாட்டு அழகிகள் மேடையில் நடைபயின்றனர். அவர்கள் அணிந்திருந்த மேல் சட்டையிலும் ஜட்டியிலும் லட்சுமி தேவியின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்தது.

 ஹிந்துக்கள் தெய்வமாக வணங்கும் கடவுளரின் படங்களை இப்படிச் சித்திரித்திருப்பது சரியல்ல, இது ஹிந்துக்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது, இனி எதிர்காலத்தில் இப்படி நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆஸ்திரேலியத் தூதரிடம் தெரிவித்தனர்.

 நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அவர், இந்தியர்களின் மனம் புண்பட்டிருப்பதை உரிய வகையில் தெரிவிப்பதாக உறுதி கூறினார்.

 லிசா பர்க் என்ற ஆடை வடிவமைப்பாளர்தான் இந்த ஆடைகளை வடிவமைத்திருந்தார். லிசா புளூ ஸ்விம்வேர் என்ற பெயரில் விற்பதற்காக அனுப்பப்பட்ட அனைத்து நீச்சல் உடைகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன, இனி சந்தையில் இவை விற்கப்படமாட்டாது என்று அந்த நிறுவனம் அரசிடம் கூறியிருக்கிறது.

 ஹிந்துக்களின் கடவுள் உருவங்களை இப்படி அவமதிப்பது இது முதல் முறையல்ல. ஐரோப்பிய நாடுகளில் செருப்பு போன்ற காலணிகளில் இந்துக்களின் கடவுள் உருவங்கள் அச்சிடப்படுவதும் எதிர்ப்பு பலமாக இருந்தால் அதைத் திரும்பப் பெறுவதும் அவ்வப்போது நடக்கின்றன.
 இப்படி ஹிந்துக் கடவுள்களின் படங்களைத் தேர்வு செய்கிறவர்கள் அவை என்ன படங்கள், அதை யார் வணங்குகிறார்கள் என்றெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

 இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்கள் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு ரோஷம் கொண்டு ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே செய்கின்றனர் என்ற எண்ணம் மேலை நாட்டவரிடையே நிலவுகிறது.


மாநிலச் செய்திகள் :

*ஜூலை 1ம் தேதி முதல் மருத்துவ கவுன்சிலிங் தொடக்கம்

சென்னை : ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் ஷீலா கிரேஸ் கூறுகையில், 

மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்பம் மே 16ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 2ம் தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 21ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் 30ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

* புதுவையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் கொடும்பாவி எரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் இந்து கடவுளான லட்சுமி படம் போட்ட நீச்சல் உடையில் ஒரு அழகி வந்தார்.

இது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்டை கண்டித்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் மறைமலையடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே இந்து முன்னணி நகர தலைவர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அப்போது அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்ரின் உருவ பொம்மையை எரித்தனர். 

தகவல் அறிந்த உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாகிகளான முதலியார்பேட்டை மணி வீரப்பன், பெரியார் நகரைச் சேர்ந்த முருகானந்தம், சாம்பல்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

*ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு : 234 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பம்

11-tamil-nadu-map300.jpg

சென்னை: ""வழக்கமான ஓட்டுஎண்ணிக்கையை விட முடிவுகளை வெளியிட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரிபிரவீன்குமார் தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்துபிரவீன்குமார் கூறியதாவது:தமிழகத்தில் 91 மையங்களில் 234 தொகுதிகளுக்கான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகிறது. இதில், 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 27 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் 18 கம்பெனிகள் இன்று வருகின்றன.காலை 5 மணிக்கே, ஓட்டுஎண்ணிக்கை மையத்துக்கு,தொகுதியின் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்துவிடுவர். எந்தெந்த மேஜையில் ஓட்டு எண்ணிக்கைக்கு எந்த ஊழியரை பயன்படுத்துவது என்பது அப்போது முடிவு செய்யப்படும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், தொகுதி தேர்தல் அதிகாரியின் மேஜையில் தபால் ஓட்டுகள்எண்ணப்படும்.அரை மணி நேரத்துக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுகள் எண்ணப்படும். 

ஒவ்வொரு சுற்று ஓட்டுஎண்ணிக்கை முடிந்ததும்,அதற்கான படிவம் நிரப்பப்பட்டு, தேர்தல் அதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்படும். அனைத்து மேஜைகளிலும் ஒரு சுற்று ஓட்டுஎண்ணப்பட்டு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட பின், அந்த சுற்று விவரம் அறிவிக்கப்படும்.மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் எழுதப்படும். இது தவிர, ஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். அந்த வீடியோ காட்சிகள், "சிடி'யாக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்.தபால் ஓட்டுஎண்ணிக்கைவிவரங்களை அறிவிக்காமல், கடைசி இரண்டு சுற்றுகளுக்கான ஓட்டுஎண்ணிக்கையை துவங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முதலில் வருபவர், இரண்டாவது வருபவர் ஆகியோருக்கு இடையேயான ஓட்டு வித்தியாசம், தபால்ஓட்டுகளை விடகுறைவாக இருந்தால், தபால் ஓட்டுகள்மீண்டும் ஆய்வுசெய்யப்படும். இவை வீடியோவில் பதிவு செய்யப்படும்.

இதை தவிர, ஓட்டு எண்ணிக்கை துவக்கம், இயந்திரங்கள் திறக்கப்படுவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், அசம்பாவித சம்பவங்கள் என அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.தேர்தல் அதிகாரியின் மேஜைக்கு அருகிலேயே, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கான இருக்கையும் ஒதுக்கப்படும். இதனால், அ.தி.மு.க., புகார் கூறியிருப்பது போல, தவறாக எண்ணிக்கையை பதிவு செய்ய வாய்ப்பில்லை. மேலும், வீடியோ பிரதிகளும் உள்ளன. பார்வையாளர், தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஒரிஜினல் படிவங்கள் இருக்கும். டேட்டா பதிவுடன், அதைஒப்பிடலாம். ஒவ்வொரு சுற்றுமுடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின், அடுத்த சுற்று துவங்கஉள்ளதால், வழக்கமாக ஆகும் நேரத்தை விட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்.

* கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

silai.jpg

கள்ளக்குறிச்சி, மே 11: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், காரல் மார்க்ஸ், அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் அண்மையில் கண்டெடுத்தனர்.

 ÷விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது கல்வராயன்மலைப் பகுதியாகும். கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் இம்மலை அமைந்துள்ளது. மலையின் உயரம் 1500 மீட்டரும், 600 சதுர மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இம் மலையில் தேன்பாடி, சிறுக்கலூர், பேராரு, மேகம், முட்டறவி உளளிட்ட 10 அருவிகள் உள்ளன.

 ÷15 பஞ்சாயத்துகளை கொண்ட பகுதியாகும். இம் மலையை குரும்பக் கவுண்டன், சடையக் கவுண்டன், அறையக் கவுண்டன், சாதாக்கவுண்டன் உள்ளிட்டோர் ஆண்டு வந்தனர்.

 ÷பின்னர் 23.06.1976-ல் கொத்தடிமை முறை சட்டம் செல்லும் என்பதன்படி கொத்தடிமை முறையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 1976-வது ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். ÷இந்த நடைமுறைகள் இருந்தபோது, சென்னை மாநில வருவாய்த் துறைக்கு தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக பத்பநாபன் இருந்தார்.

 ÷5.9.77-ல் இந்த நிலையில்தான் கல்வராயன்மலைக்கென்று ஒரு தனி சிறப்புநிலை ஆட்சியர் சம்பந்தம், வருவாய் கோட்டாசியர் செங்கல்வராயன், தனி காவல் துணை ஆய்வாளர் முருகையன் பணியில் இருந்தனர்.

 ÷இம் மலையில் தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், கல்வராயன்மலை சிறப்பு கொத்தடிமை மக்களின் வாழ்வும் வரலாறும் புத்தக இணை ஆசிரியர் எம்.காரல்மார்க்ஸ் மை இந்தியா கிராமப் புற ஆய்வாளர் அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் மலையின் வரலாற்றுக்கு களப்பணியில் எருக்கம்பட்டு கிராமத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 ÷அப்போது மலை காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை கண்டெடுத்தனர். இந்த நடுகல் சிற்பம் குறித்து கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவர் இன்னாடு உண்ணாமலை, மலையக விவசாயி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஊர் வழக்கத்தை கூறினர்.

 மலை வரலாறு

 ÷அக்கா தங்கை இரண்டு பேர் மலையில் வாசம் செய்து வந்துள்ளனர். இவர்களின் தங்கைக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.
 ÷மலைக்காட்டில் அக்காள், தங்கை இருவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு மூவரும் காட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.

 ÷அங்கு வந்ததும் தங்கை தன் பெண் குழந்தையை அக்காவிடம் கொடுத்து, "பார்த்துக் கொள். நான் காட்டுக்குள் சென்று நமது பசிக்கு காரக்காய், சூரக்காய், கள்ளுமடையான், பன்னைக்கீரையைத் தேடி பார்த்து பறித்து ஆய்ந்து எடுத்து வருகிறேன்' என்று கூறி சென்று விட்டார்.

 ÷சற்று நேரம் ஆனதும் இவளின் அகோர பசிக்கு தங்கையின் பெண் குழந்தையை கால் பகுதியில் இருந்து தனது வாய் வழியாக விழுங்க ஆரம்பித்து விட்டாள்.

 ÷அப்போது குழந்தை அழ ஆரம்பித்து தொடர்ந்து அழும் சப்தம் விட்டு விட்டு வந்து கொண்டு இருக்கவே சப்தம் கேட்டு கீரை பறிக்கப் போன குழந்தையின் தாய் ஓடிவந்துள்ளார்.

 ÷தன் குழந்தை, அக்காளின் அகோர பசிக்கு, கால் பகுதியிலிருந்து உடல், வயிறு, மார்பகம் பகுதி வரை விழுங்கி இருப்பதைப் பார்த்ததும் அழுது கதறிக் கொண்டு "அக்கா மிஞ்சாதே' என்று குரல் கொடுத்தும் அவர் குழந்தையை விழுங்குவதை அப்படியே நிறுத்தியுள்ளார். அப்போது கழுத்துக்கு மேல் தலை பகுதி வெளியில் நின்று விட்டது.

 ÷இந்த அகோர நிகழ்வை பார்த்த தங்கை, கோபத்தோடு அக்காவிடம், "நீ வெங்கோடு, எருக்கம்பட்டு, நடுப்பகுதி காட்டுக்குள் போய் இருந்துக் கொள். நான் பட்டுலேயே இருந்துக்கிறேன் உனக்கும், எனக்கும் ஒத்துவராது. உனக்கு மக்களை விழுங்கும் வேங்கை பசி இருக்கும்வரை நீ தனியாக இருக்க வேண்டும்.

 ÷உனக்கு என்னிக்கு காய்கனி பசி எடுக்கிறதோ? அன்று நான் வசிக்கும் பட்டு மக்கள் யாரிடமாவது கனவில் வந்து என்னைப் பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறாயோ? அப்போது ஊர்கூடி ஒன்று திரண்டு அங்கு வந்து மலை நாட்டில் கிடக்கும் உணவு தானியங்களையும் காய்கனிகளையும், காட்டு பழவகைகளையும் எடுத்துக் கொண்டு வருவோம். அன்றுவரை யாரும் உன்னை வந்து தனியாக பார்க்க மாட்டோம்.

 ÷"அங்கு வரும்போது பிறந்த மேனியாகவோ அல்லது வெள்ளை ஆடை உடுத்தி நீ இருக்கும் சம்பாவி அம்மை சோலைக்கு வருவோம். உன்னை பார்க்க பெண்கள் வரமாட்டோம். ஆண்கள் மட்டும் வருவார்கள்' என்றாள்.

 ÷அந்த காலம் முதல் 2011-ம் ஆண்டுவரை அந்த சம்பாயி அம்மா யார் சொப்பணத்தில் எந்த ஆண்டு எப்போ வரசொல்லுகிறாளோ? அந்த ஆண்டு காட்டுசோலை கோயிலுக்கு என்று மலை நாட்டு கிராம நெம்பியான் பூசாரி என்று ஒருவரை நியமனம் செய்து பூஜை செய்து படையல் இட ஊர்மக்கள் நியமிப்பர்.

 ÷நல்ல விசேஷமாக, சம்பாவி என்று இருந்து மருவி சம்பாயி அம்மா என்று விளங்கும் மலைகாட்டு காளிதேவிக்கு பொங்கல், பூஜை நடைபெறுமாம். இப்படி பூசாரியாக (நெம்பியான்) இருந்து நடத்தியவர் இறந்து விடுவது உண்டாம்.

 ÷அதனால் இந்த சம்பாவி அம்மாளுக்கு சாமி கனவு சொப்பனம் கிடைக்க, பத்து, பதினைந்து ஆண்டு கூட ஆகுமாம் என்று கூறினர். இந்த செய்தியை விளக்கும் வகையில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 ÷இந்த நடுகல் 4 அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டது. முழு பலகை கல்லான இந்நடுக்கல், புடைப்பு சிற்பங்களைக் கொண்டது. இந்த உறவு அமைப்பைக் கொண்டு பார்த்தால் மலைக்காளி அமைப்பைக் கொண்டு காணப்படுகிறது. ஆனால் மலை கிராம மக்கள் சம்பாயி அம்மா என்று அழைக்கின்றனர்.

 ÷மலைக்காளி தலையில் கிரீடம் தரித்து விரிசையுடன் காணப்படுகிறாள். மூக்கில் புல்லாக்கு, காதணி, கழுத்து மாலைகள் ஆடை அணிகள் தரித்தும் காணப்படுகிறாள். இவள் எட்டு கைகளை கொண்டு விளங்குகிறாள்.

 ÷கையில் சூலம், வாள் கேடயம், கபாலம், வில் அம்பு, கஜகஸ்தம் வைத்து இருக்கிறாள். மேலும் ஒரு குழந்தையின் உடலை தனது கையில் வைத்திருக்கின்றாள். இவள் இடது காலை ஊன்றி அதன் கீழ் வீரன் இறந்த நிலையில் இருப்பதும் அதன் மீது சூலம் பாய்ச்சுவது போலவும் காணப்படுகிறாள். வலதுகால் மடக்கிய நிலையில் அமர்ந்துள்ளாள்.

 ÷மலைக்காளிக்கு நேர் எதிர்புறம் இரண்டு வீரர்கள் ஆடையின்றி காணப்படுகின்றனர். அதன் கீழ்புறம் இரண்டு பெண் உருவம் காணப்படுகிறது. அவர்கள் நடனம் ஆடி திருவிழா கோலம் கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.

 ÷இதன் காலம் சரிவர உணரப்படவில்லை. நடுகல் அமைப்பை வைத்துப் பார்த்தால் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தெரிகிறது என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை கௌரவ விரிவுரையாளர் பி.சுதாகர்.

 ÷சூரனை சூலாயுதத்தால் காலில் போட்டு மிதித்து குத்துவதுபோல் உள்ளது. தேவனூர் சோலையில் இராகுத்தன் நல்லூர் மலை ஐய்யனார் கோயில் அருகிலும் குதிரையில் சவாரி செய்வது போலவும் வனக்காளி சிற்பம் உள்ளது.

*முழுவதும் தமிழில் தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று மாணவர் சாதனை

சென்னை, மே 11: திருவாரூரைச் சேர்ந்த மாணவர், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை முழுவதும் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

 திருவாரூரைச் சேர்ந்த சீனிவாசன், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என் மூன்று நிலைகளையும் தமிழில் எழுதியுள்ளார்
.
 தாய் மொழியில் தேர்வு எழுதிய இவர் முதல் முயற்சியிலேயே 134-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
 தமிழ் இலக்கியப் பட்டதாரியான இவர், மின் ஆளுமைத் துறையை மேம்படுத்தும் ஆவல் உள்ளது என்றார்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இல்லை: ஜெயப்பிரகாஷ் காந்தி


சென்னை, மே 11: தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்காது. எனவே மாணவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கே முன்னுரிமை தரலாம் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

 பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

 இதில் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியது:

 மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும், முதல் நிலை பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த முறை கட்-ஆஃப் மதிப்பெண் கடும் போட்டியாக இருக்கும்.

 கட்-ஆஃப் 197.5 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., தியாகராஜா, சிஐடி உள்ளிட்ட முதல்நிலையில் உள்ள 6 கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 இந்த கல்லூரிகளில் இசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என எந்தப் பிரிவை தேர்வு செய்தாலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

 கட்-ஆஃப் 185-லிருந்து 197-வரை உள்ளவர்களுக்கு சிறந்த சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி. தேர்வு செய்யலாம்.

 தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்கின்றன. நடப்பு ஆண்டில் அவர்கள் 2.5 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

 கடந்த 2009-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பின்னடைவு ஏற்பட்டபோதும், இப்போது மீண்டும் அந்தத் துறை முன்னேறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தத் துறையின் வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன.

 ஆனால், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேரை மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
 எனவே, மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்,

 இதற்கு அடுத்ததாக, மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை இப்போது அபார வளர்ச்சி பெற்று வருவதால் இரண்டாவதாக மாணவர்கள் இஇஇ-க்கு முன்னுரிமை அளிக்கலாம்.

 திட்டக் கமிஷனின் அறிவுரையின்படி மின் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. மத்திய அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் 14 சதவீத நிதியை மின்துறை வளர்ச்சிக்காக பயன்படுத்த உள்ளது. எனவே இத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

 இதுபோல் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் நாடுகள் ஈடுபட உள்ளன. அதாவது கடலில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு வசதிகள். உதாரணமாக விசாகப்பட்டினத்தில் கடலுக்கு அடியில் திரவ பெட்ரோலியம் வாயுவை (எல்.பி.ஜி.) சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.

 கடலில் மிதக்கும் சர்வதேச விமான நிலையத்தை கட்ட துபை திட்டமிட்டு வருகிறது. இதுபோல் ஜப்பான் போன்ற நாடுகளில் பி.இ. சிவில் முடித்து பூகம்ப பொறியியல் முடித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே மூன்றாவதாக மாணவர்கள் சிவில் பிரிவை தேர்வு செய்யலாம்.
 நான்காவது மெக்கானிக்கல், கடைசியாக இசிஇ-க்கும் முன்னுரிமை அளிக்கலாம்.

 உயிரி தொழில்நுட்ப படிப்பு முழுவதும் ஆராய்ச்சி தொடர்புடையது. மேலும் வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. எனவே, பி.இ. பயோ-டெக்னாலஜி படிப்பை சிந்தித்து தேர்வு செய்யவேண்டும்.

 இதுபோல் ஏரோநாட்டிகல் படிப்புக்கு வேலைவாய்ப்பு மிகமிகக் குறைவு என்றார்.

வர்த்தகச் செய்தி மலர் :

ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் உய‌ர்வு  

இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச் ச‌ந்‌தைக‌ள் ஏ‌ற்ற‌‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 19.76 பு‌ள்‌ளிக‌ள் உய‌‌ர்‌ந்து 18,532.53 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 6.10 பு‌ள்‌ளிக‌ள்‌ அ‌திக‌ரி‌த்து 5,547.35 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது. 

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ள ஆ‌சிய ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌, இற‌க்க‌த்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌‌ளு‌ம் ஏ‌ற்றத்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.


விளையாட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்
 
பெங்களூரு அணி தொடர்ந்து 6வது வெற்றி! * ராஜஸ்தான் மீண்டும் பரிதாபம்

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 6வது வெற்றியை பெற்று சாதித்தது பெங்களூரு அணி.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 55வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. 
இளம் கேப்டன்:
வெட்டோரிக்கு(முழங்கால் காயம்) பதிலாக பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி(22 வயது) ஏற்றார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மிக இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். "டாஸ்' வென்ற விராத் கோஹ்லி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தனர். அரவிந்த் ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டிராவிட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து லாங்கிவெல்ட், அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் வாட்சன்.
அரவிந்த் அபாரம்:
இந்த நேரத்தில் போட்டியின் 10வது ஓவரை வீசிய அரவிந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். 3வது பந்தில் வாட்சனை(34) வெளியேற்றினார். 5வது பந்தில் டிராவிட்(37) விக்கெட்டை கைப்பற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். இதற்கு பின் விராத் கோஹ்லி துல்லியமாக பந்துவீச, ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. ரகானே(17) வீணாக ரன் அவுட்டானார். அரவிந்த் வேகத்தில் போத்தாவும்(19) வீழ்ந்தார். ராஸ் டெய்லர்(13) மீண்டும் சொதப்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது.
"சிக்சர்' கெய்ல்:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன்(38), வார்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி ஒத்துழைக்க, மீண்டும் ஒரு முறை வாணவேடிக்கை காட்டினார் கெய்ல். 13 ரன்கள் எடுத்த நிலையில் வார்ன் கைநழுவியதால் கண்டம் தப்பிய இவர், போத்தா, ராஸ் டெய்லர், மனேரிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பங்கஜ் சிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கோஹ்லி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. கெய்ல் 70(6 பவுண்டரி, 4 சிக்சர்), கோஹ்லி 39(3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே, பஞ்சாப், கொச்சி, ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பெங்களூரு அணி, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.
வார்ன் சோகம்:
 இத்தொடருடன் ஓய்வு பெறும் ராஜஸ்தான் கேப்டன் வார்ன், தனது அணியின் சொந்த ஊரான ஜெய்ப்பூரில் பங்கேற்ற கடைசி ஐ.பி.எல்., போட்டியில் தோல்வியுடன் விடைபெற நேர்ந்தது. 
ஆட்ட நாயகன் விருதை அரவிந்த் தட்டிச் சென்றார்.

ஸ்கோர் போர்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன்(கே)டிவிலியர்ஸ்(ப)அரவிந்த் 34(29)
டிராவிட்(கே)+(ப)அரவிந்த் 37(31)
ரகானே-ரன் அவுட்-(டிவிலியர்ஸ்) 17(10)
போத்தா(கே)அருண்(ப)அரவிந்த் 19(20) 
ராஸ் டெய்லர்(கே)கைப்(ப)லாங்கிவெல்ட் 13(13)
மனேரியா(கே)கைப்(ப)கெய்ல் 8(6)
ராத்-அவுட் இல்லை- 5(8)
யாக்னிக்-அவுட் இல்லை- 2(5)
உதிரிகள் 11
மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,) 146
விக்கெட் வீழ்ச்சி: 1-73(வாட்சன்), 2-73(டிராவிட்), 3-102(ரகானே), 4-122(போத்தா), 5-124(ராஸ் டெய்லர்), 6-133(மனேரியா). 
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-23-0, அரவிந்த் 4-0-34-3, லாங்கிவெல்ட் 4-0-26-1, கெய்ல் 3-0-23-1, கோஹ்லி 3-0-17-0, அப்ரார் 2-0-21-0
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல்-அவுட் இல்லை- 70(44)
தில்ஷன்(கே)ராஸ் டெய்லர்(ப)வார்ன் 38(24)
கோஹ்லி-அவுட் இல்லை--- 39(34)
உதிரிகள் 4
மொத்தம்(17 ஓவரில் 1 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-68(தில்ஷன்). 
பந்துவீச்சு: வாட்சன் 2-0-19-0, போத்தா 4-0-42-0, பங்கஜ் 2-0-23-0, திரிவேதி 2-0-12-0, வார்ன் 4-0-26-1, ராஸ் டெய்லர் 1-0-11-0, மனேரியா 2-0-16-0.

ஆன்மீகச் செய்தி மலர் :


*அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அகத்தீஸ்வரர்
 
  அம்மன்/தாயார்  ஆனந்தவல்லி -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் -
  ஊர் : நெமிலிச்சேரி
  மாவட்டம் : சென்னை
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  சூரியன், சந்திரனோடு பைரவரும் ஒரே சன்னதியில் இருப்பது கோயிலின் தனி சிறப்பு.

வியாதிகளை விரட்டும் விடைவாகனரது கருவறையை விட்டு வெளியே வந்தால், கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, மற்றும் விஷ்ணு துர்க்கையும்; கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் நால்வர் சன்னதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் மேற்குப் பார்த்த சூரியன், சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது வித்தியாசமான காட்சி. கோயிலுக்கு வெளியே இடதுபுறத்தில் அகத்திய புஷ்கரணி அமைந்துள்ளது. அதன்கரையில் மிகப்பெரிய அரசமரமும், அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன.  
தலபெருமை:
     
  நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம்  கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.  

தல வரலாறு:
     
  சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் ஈஸ்வரனை லிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர். பின்னாளில் அந்த லிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி  அகத்திய முனிவரால் லிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.

திருவிழா:
     
   சிவராத்திரி, திருவாதிரை, ஆடிபூரம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், நவராத்திரி பிரதோஷம்.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது? - ரமணர்   

அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது. எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை. ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, 'ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. 

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால், ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில் உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும். 'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்.

வினாடி வினா :

வினா - சீனக்குடியரசின் முதல் ஜனாதிபதி யார் ?

விடை - டாக்டர் சன் யாட்சென்.


இதையும் படிங்க :

கர்நாடக இசைக் கச்சேரியில் கலக்கிய ஆட்டோ டிரைவர்

மானாமதுரை: மானாமதுரையில், "திருவையாறு தியாகராஜ ஆராதனை' போன்ற "சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை' விழா நடந்து வருகிறது.இதில், மதுரையைச் சேர்ந்த பாண்டி முருகன் என்ற இசைக்கலைஞர் கர்நாடக சங்கீதத்தில் பாடல்களை பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். சிறுவயது முதலே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் பாண்டி முருகன் மதுரை இசைக்கல்லூரியில் படித்துள்ளார். வறுமை சூழலில் இரவு முழுவதும் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து, படிப்புச்செலவுக்கு அதை பயன்படுத்தி கொண்டார். தற்போது மியூசிக் அகடமியில் பயிற்சி பெறும் இவர் நேற்று மானாமதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாடல்களை பாடி கர்நாடக சங்கீத பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாண்டி முருகன் கூறுகையில், "சிறுவயது முதல் எனக்கு இசையில் ஆர்வம் அதிகம் . சென்னையில் நடக்கும் எல்லா நிகழ்ச்சியிலும் ஆர்வமுடன் பங்கேற்கிறேன். இசைக் கல்லூரியில் படிக்கும்போதும் இரவில் ஆட்டோ ஓட்டினாலும், பல்வேறு கச்சேரிகளில் பாடும் வாய்ப்பை தவற விடுவதில்லை . இங்கு வந்து பாடியது மன திருப்தியளிக்கிறது' என்றார்.

large_239334.jpg

* "எப்போதும் "பிசி'யாக இருக்க வேண்டும்!'பல துறைகளிலும் சிறந்து விளங்கும் காவியா: என் அப்பாவும், அண்ணனும் பிசினஸ் மேன்கள்; அம்மா, குடும்பத் தலைவி. தமிழ் ஆர்வலரான என் அப்பாவிற்கு, நான் பல கலைகளைக் கற்று, அதில் சாதனைகளும் படைக்கணும்ங்கறது தான் ஆசை. எனக்கும் ஆர்வம் இருந்தது.நான்கு வயதில் கதக், பரதம் இரண்டையும் கற்று, 10 வயதில் அரங்கேற்றம் பண்ணினேன். பேச்சுப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம். குறும்படங்களும் எடுத்து, அதில் நடித்திருக்கிறேன். குதிரை சவாரி, நீச்சல் முழுமையா கற்றுக் கொண்டுள்ளேன்.நான் படிப்பிலும் எப்போதும் முதல் தான். கல்லூரியில் தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறேன். என் டைரி எழுதும் பழக்கம் தான், என் மொழியை வளப்படுத்தியது. அதைக் கொண்டு தான் இப்போது, தன்னம்பிக்கை, ஆளுமையை வளர்க்கும் புத்தகங்களை எழுதறேன்.ரத்தன் டாடா, முத்தையா முரளிதரன், பெண் தொழிலதிபர் கிரண் உட்பட, இதுவரை 40 சாதனையாளர்களைப் பேட்டி எடுத்திருக்கிறேன். அந்தத் தொகுப்பை புத்தகமாக வெளியிட, ஹார்வர்ட் சர்வதேச பிரஸ் முன்வந்துள்ளது.சமூக சேவையிலும் எனக்கு ஆர்வம் அதிகம் உண்டு. காது கேட்காத, வாய் பேச முடியாத, 250 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நடனம் ஆட வைத்து, அதை நிகழ்ச்சியாக நடத்தியுள்ளேன். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கிறேன். கல்வித் தகுதி மற்றும் கிரியேட்டிவ் அடையாளங்களுக்காக, பிராண்ட் மேனேஜராக பணியமர்த்தியுள்ளது, டி.சி.எஸ்., நிறுவனம்.இந்த வேலை, நான் கல்லூரியில் படிக்கும் போதே சேர்ந்த பகுதி நேர வேலை தான். காரணம் நான், எப்பவும் பம்பரமாக சுழல வேண்டும். கல்லூரி முடிந்ததும், இதுவே எனக்கு முழு நேர வேலையாகிவிட்டது.
 




 




நன்றி - தட்ஸ்தமிழ், சமாச்சார், தின மணி, தின மலர்.
 
 

No comments:

Post a Comment