Monday, May 23, 2011

இன்றைய செய்திகள் - மே , 23, 2011

முக்கியச் செய்தி :

சட்டசபையில் நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு-27ம் தேதி சபாநாயகர் தேர்வு

சென்னை: 14வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர். சபாநாயகர் தேர்தல் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டது. புதிய சட்டசபை உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்காமல் உள்ளனர். இடையில் புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு மாறியிருந்த சட்டசபை தற்போது மீண்டும் பழைய கட்டடத்திற்கே இடம் பெயர்ந்து வருகிறது.

பழைய சட்டசபை அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

இங்கு நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நாளை முற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏக்களுக்கு் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இதற்கு முன்னதாக இன்றுகாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் செ.கு. தமிழரசனுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

நாளை எம்.எல்.ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை மண்டபம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

நாளை முதலில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொள்வார். பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் 27ம் தேதி மீண்டும் சட்டசபை கூடும். அப்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும். ஜூன் 3ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சபையில், ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும்.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.

* மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்
22-chinna-kuthoosi-300.jpg

சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனைக்குச் சென்று சின்னக் குத்தூசியின் உடல் நலம் விசாரித்தனர்.

மறைந்த சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறந்த முறையில் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் கூட அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் பார்த்து வந்தார்.

மறைந்த சின்னக் குத்தூசியின் உடல் ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் குத்தூசியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
  

உலகச் செய்தி மலர் :

லண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் மரணத்திற்குப் பின்னர் அல் கொய்தாவின் புதிய தலைவராக மாறியிருக்கும் சைப் அல் அதெல், லண்டனைத் தாக்கித் தகர்ப்போம் என எச்சரித்துள்ளார்.

பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் வகையில் லண்டனில் தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதை சந்திக்க லண்டன் தயாராக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தலிபான் தலைவர்களின் பேச்சுக்களை இடைமறித்து கேட்டு கண்டுபிடித்துள்ளது இங்கிலாந்து உளவுத்துறை. அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் தாக்கி அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என அதெல் உறுதி பூண்டுள்ளாராம்.

முதலில் லண்டனில் தாக்குதல் நடத்துவோம் என்று அதெல் கூறியதாக அந்த தலிபான் தலைவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை லண்டனில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரயில்களில் நடந் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி அப்போது 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். தற்போதும் அதே போன்ற ஒரு தாக்குதலுக்கு அல் கொய்தா திட்டமிட்டுள்ளதாம்.

தாக்குதலுக்கு விரைவில் அதெல் உத்தரவிடுவார் என்றும், அது வந்த பிறகு தாக்குதல் நடத்தப்படும் என்றும் தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

மேலும் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலைப் போல மிகப் பெரிய சர்வதேச தாக்குதலுக்குத் தயாராகுமாறும் அல்கொய்தா அமைப்பினருக்கு அதெல் உத்தரவிட்டுள்ளாராம்.

தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் இஷானுல்லா இஷான் கூறுகையில்,எங்களது புதிய தலைவர் லண்டனைத் தாக்க தயாராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஐரோப்பாவின் முதுகெலுப்பு இங்கிலாந்துதான், முதலில் அதை முறிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும். லண்டனில் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அங்கு எங்களுக்கு ஆட்கள் நிறைய இருப்பதால் லண்டனை முதலில் தேர்வு செய்துள்ளோம் என்றார் இஷான்.

* தாக்குதலைத் தொடர்ந்தால் பதிலடி : அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை 
தங்கள் நாட்டில் இதற்குமேலும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை‌ச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதை மேலும் விரிவாக்குவது, பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவது குறித்து விவாதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் பாஷா, அமெரிக்கா இதற்கு மேலும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

* தேவைப்பட்டால் பாக்.கில் மீண்டும் தாக்குதல் - ஒபாமா 

opama2.jpg

பயங்கரவாதத் தலைவர்கள் வேறு யாரேனும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தால், பின் லேடனை சுட்டுக் கொன்றதைப் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனுக்குப் புறப்படுதற்கு முன் பிபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளிட்ட ஒபாமா, பாகிஸ்தானின் இறையாண்மை மீது மரியாதை வைத்துள்ளோம். ஆனால், அமெரிக்க மக்களையோ, கூட்டணி நாட்டு மக்களையோ கொல்லும் பயங்கரவாதிகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

அல் கய்டாவின் மற்ற தலைவர்களோ அல்லது தாலிபான் தலைவர் முல்லா ஒமரோ பாகிஸ்தானிலோ அல்லது பிற நாட்டிலோ இருப்பது தெரியவந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, தேவைப்பாட்டால் அமெரிக்கா தன்னிச்சையான நடவடிக்கையை மே‌ற்கொ‌ள்ளு‌ம் என்று அதிபர் ஒபாமா கூறினார்.

* காஷ்மீர்: கண்ணி வெடி கண்டுபிடித்து அழிப்பு  
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா எல்லையில், பீரங்கிகளை அழிக்கவல்ல கண்ணி வெடி பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லை அமைந்துள்ள மாலு சாக் பகுதியில் பாதுகாப்பு கட்டமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் இந்த பீரங்கியை அழிக்கப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கண்ணி வெடியைக் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், அந்த கண்ணி வெடி செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஐஎம்எஃப் முன்னாள் தலைவர் ஜாமீனுக்கு வீட்டை அடமானம் வைத்த மனைவி

imfexcr.jpg

வாஷிங்டன், மே 22: பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) முன்னாள் தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ் கானை ஜாமீனில் விடுவிக்க வாஷிங்டனில் உள்ள வீட்டை அவரது மனைவி அடமானம் வைத்தது தெரியவந்துள்ளது.

 ஐஎம்எஃப் தலைவராக இருந்த டோமினிக் ஸ்ட்ராஸ் கான், மன்ஹாட்டான் ஹோட்டல் ஊழியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவரை அமெரிக்கப் போலீஸôர் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜாமீனில் அவர் வெளிவந்தார். 27 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை தாக்கல் செய்தால் மட்டுமே ஸ்ட்ராûஸ ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இதையடுத்து ஸ்ட்ராஸின் மனைவி, வாஷிங்டனில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை அடமானம் வைத்து ரூ.27 கோடிக்கான பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்தே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

 வாஷிங்டனில் உள்ள அந்த வீட்டை கடந்த 2007-ல்தான் ஸ்ட்ராஸ் மனைவி வாங்கினார். ஆசையோடு வாங்கிய அந்த வீட்டை அடமானம் வைக்க நேர்ந்தது ஸ்ட்ராஸின் மனைவிக்கு லேசான சோகத்தை ஏற்படுத்தினாலும் கணவனை ஜாமீனில் மீட்டுவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் என்று

 அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* ஜப்பான் பொருள்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தளர்த்தப்படும்: சீனப் பிரதமர் அறிவிப்பு.

chinapm.jpg

டோக்கியோ, மே 22: ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவையொட்டி அந்நாட்டின் உணவுப் பொருள்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்த சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

 ஜப்பான், சீனா, மற்றும் தென் கொரியா நாடு பிரதமர்கள் கலந்து கொண்ட 3 நாடுகள் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமி, பூகம்பம், அதனால் ஏற்பட்ட அணு மின் நிலைய பாதிப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் ஜப்பான் பிரதமர் நெüடோ கான், சீனப் பிரதமர் வென் ஜியோபோ மற்றும் தென் கொரியா நாட்டு அதிபர் லீ மியுங்க்பாக் ஆகியோர் கலந்து கொண்டு விவாதம் நடத்தினர். அப்போது இயற்கைப் பேரழிவில் இருந்து ஜப்பான் நாடு மீள தேவையான உதவிகளை செய்வோம் என சீனா, கொரிய நாடுகள் உறுதி அளித்தன.

 அணுக்கதிர் கசிவையடுத்து ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 12 வகை உணவுப் பொருள்களுக்கு சீனா தடை விதித்திருந்தது. இதில் 2 பொருள் மீதான தடையை விலக்கிக் கொள்வதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ அறிவித்தார். மேலும் சீன மக்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதற்காக அனுமதி பெற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா முகவர்கள் சீனாவில் அனுமதிக்கப்படுவர் என்றார்.

 ஜப்பான், சீனா, மற்றும் கொரியா பிராந்தியத்தில் உணவு பாதுகாப்பு அவசியம் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. புகுஷிமா அணு மின்நிலையத்தில் இருந்து அதிக அளவு கதிர் இயக்க வீச்சுள்ள தண்ணீரை ஜப்பான் நாடு, கடலில் திறந்துவிட்டதற்கு சீனப் பிரதமரும், கொரிய அதிபரும் அவர்களது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 மாநாடு துவங்குவதற்கு முன் அதாவது சனிக்கிழமை சீனப் பிரதமர் வென் ஜியோபோ, தென்கொரிய அதிபர் லீ மியுங்க்பாக் மற்றும் ஜப்பான் பிரதமர் நெüடா கான் ஆகியோர் புகுஷிமா அணு உலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

* ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா

நியூயார்க், மே 21: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  ஸ்விட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் தற்போது 14 இடங்களுக்கு உறுப்பினராக இடம்பெற பல்வேறு நாடுகளிடையே போட்டியெழுந்தது.

  ஆசியப் பிராந்தியத்தில் 4 இடம் மட்டுமே இந்த சுற்றில் நிரப்பப்பட வேண்டியிருந்தது. இதில் இந்தியா கலந்து கொள்ளும் திட்டம் இருக்கவில்லை. இருப்பினும், 189 நாடுகள் கலந்து கொண்ட வாக்கெடுப்பின் போது இந்தியாவுக்கு 181 வாக்குகள் கிடைத்தது.

  இந்தோனேசியா (184), பிலிப்பின்ஸ் (183), குவைத் (166) ஆகிய மற்ற நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற நாடுகள்.

  இந்த நாடுகளின் பதவிக்காலம் ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது. மூன்று ஆண்டு காலத்துக்கு இந்தக் கவுன்சிலில் இந்தியா இடம் வகிக்கும்.

  இது குறித்து ஐ.நா.வில் இந்தியாவின் துணைத் தூதுவரகா உள்ள மன்ஜீவ் சிங் புரி கூறியது:

  ""உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது. பல மொழிகள், பல இனங்கள், வாழும் சமூகம் இங்குள்ளது. இந்தியாவின் முக்கியத்துவத்தை ஐ.நா. அங்கீகரித்துள்ளது என்பதையே நமது வெற்றி சுட்டிக்காட்டுகிறது'' என்றார் அவர். 

 

தேசியச் செய்தி மலர் :

* சிக்க வைத்த "செக்!': கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம்

large_244292.jpg

புதுடில்லி: "ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் "டிவி' துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது.

ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றம், காசோலை மூலம் நடந்ததே, தற்போது, கனிமொழியைச் சிறைக்கு அனுப்பியுள்ளது.

நேற்று முன்தினம், டில்லி, திகார் சிறையில் கனிமொழியை அடைத்த பின், சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தில், காசோலை மூலம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது, எங்கள் அதிர்ஷ்டம். மூளையைக் குழப்பும் புதிர் போல, ஆங்காங்கே சிதறிக் கிடந்த தகவல்களை ஒன்று திரட்ட, இந்தப் பணப் பரிமாற்றம் தான், முக்கிய ஆதாரமாக விளங்கியது."ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டுக்காக வாங்கப்பட்ட லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, கலைஞர் "டிவி'க்குச் சென்ற பாதையை மட்டும் தான் தற்போது எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அதன் வழியாகத் தான், அந்த, "டிவி'யில், 20 சதவீத பங்கு வைத்துள்ள கனிமொழி சிக்கினார்.மீத லஞ்சப் பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய, மொரீஷியஸ் நாட்டுக்குச் செல்ல உள்ளோம். அங்கு, கணிசமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.சுப்பிரமணி
யசாமி கூறியுள்ளது போல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான பணப் பரிவர்த்தனைகளும், இந்த விவகாரத்தில் நடந்துள்ளதா என்பதை, நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நிரா ராடியா ஈடுபட்டதாக நாங்கள் கருதவில்லை. எனினும், வோல்டாஸ் நிலம் தொடர்பான விவகாரங்களில், அவர் தலையீடு இருப்பது குறித்து, நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.மேலும், 2001-07ம் ஆண்டுகளில் நடைபெற்ற, "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான புலனாய்வை, நாங்கள் விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.

* தில்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஜாமீன் மனு?
புதுதில்லி, மே 22: 2 ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2ஜி அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழிக்கு தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி கனிமொழி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஜாமீன் மனு திங்கள் கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

 கோபாலபுரம் வீட்டில் ஆலோசனை: கனிமொழி கைது நடவடிக்கையின் காரணமாக, அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது சென்னை கோபாலபுரம் வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.

 விருந்துக்கு அழைப்பு: இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மற்றும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


* கர்நாடக அரசு கலைப்பு: ஆளுநர் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

புது தில்லி, மே 22: எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை கலைத்துவிட்டு கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அம்மாநில ஆளுநர் எச். ஆர். பரத்வாஜ் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துவிட்டது.

 மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

 கர்நாடக அரசை கலைக்குமாறு ஆளுநர் பரத்வாஜ் அளித்துள்ள பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

 மேலும், ஆளுநர் பரத்வாஜ் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவரது பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென முதல்வர் எடியூரப்பாவும், பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* 2ஜி வழக்கு: பெருநிறுவன அதிகாரிகள் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு?


புதுதில்லி, மே 22: 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக யூனிடெக், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 5 அதிகாரிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக யூனிடெக் தமிழ்நாடு நிறுவன மேம்பாட்டாளர் சஞ்சய் சந்திரா, டி.பி.ரியாலிட்டி மேம்பாட்டாளர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும நிர்வாக இயக்குநர் கெüதம் தோஷி, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 ஏப்ரல் 20-ம் தேதி இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை 2ஜி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 இதை எதிர்த்து இவர்கள் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த 9-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

* ஜிசாட்-8 சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது
 பெங்களூர், மே 22: ஜிசாட்-8 செயற்கைக்கோளின் சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

 தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து 3,100 கிலோ எடை கொண்ட இந்திய விண்கலம் ஜிசாட்-8 சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள வீடுகளில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உதவும் ஜிசாட்-8 செயற்கைக்கோள் புவிநிலை மாற்று சுற்றுவட்டத்தில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹாசனில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) தலைமைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 3.58 மணிக்கு, ஜிசாட்-8 செயற்கைக்கோளில் இருக்கும் 440 நியூட்டன் திரவ அபோகி மோட்டார் (எல்ஏஎம்) இயக்கப்பட்டது.

 இதன் மூலம், பூமியில் இருந்து 15,786 கி.மீ. உயரத்துக்கு செயற்கைக்கோளை கொண்டு செல்லும் பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதற்காக எல்ஏஎம் 95 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நீள்வட்டப் பாதையில் 35,768 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோள் பறக்கும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

 பூமத்திய ரேகையை மையமாக கொண்டு 2.503 டிகிரி சாய்வாக இயங்கிவந்த ஜிசாட்-8, இப்போது 0.5 டிகிரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இப்போதைய சுற்றுவட்டப்பாதையை 15 மணி 56 நிமிடங்களில் செயற்கைக்கோள் வலம் வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

* ரூ.19 கோடி மோசடி: 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
கவுகாத்தி,மே 22 :போலி உத்தரவு மூலம் போலீசாரை நியமனம் செய்து ரூ.19 கோடி மோசடி செய்தது தொடர்பாக 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 அசாம் மாநிலத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் பலர் போலியாக நியமிக்கப்பட்டு அரசு பணம் ரூ.19 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது.இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த 2009-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் போலி உத்தரவு மூலம் போலீசார் பலர் நியமிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பரேஷ் நாக், இந்திர கந்தா,ஜெய்பான்சிங் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

* குளிர் பானத்தில் பூச்சி: நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, மே 22: குளிர்பானத்தில் பூச்சி கிடந்ததையடுத்து அதை தயாரித்த நிறுவனம், விற்பனை செய்த கடைக்காரர் ஆகியோர் ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தில்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 தில்லியைச் சேர்ந்தவர் மோகன்லால். வியாபாரியான இவரைச் சந்திக்க சில மாதங்களுக்கு முன் தொழில் தொடர்பான பிரதிநிதிகள் வந்தனர். அப்போது அவர்களுக்கு மோகன்லால் "லிம்கா' குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். மொத்தம் 5 பாட்டில் குளிர்பானம் வாங்கினார். அதில் ஒரு பாட்டிலில் கொசு போன்ற பூச்சி ஒன்று கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டார். இதனால் வியாபாரப் பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தாமலேயே அவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

 இதைத்தொடர்ந்து பூச்சி கிடந்த அந்த பாட்டிலுடன் கடைக்குச் சென்று விசாரித்தபோது கடைக்காரர் சரியான பதில் சொல்லவில்லை.

 இதையடுத்து அந்த குளிர்பானத்தை தயாரித்த ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனத்துக்கும் கடிதம் எழுதினார். ஆனால் அவர்களும் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தில்லி நுகர் நீதிமன்றத்தில் மோகன்லால் வழக்குத் தொடர்ந்தார். அதில் தனது புகாரைக் குறிப்பிட்டு இதனால் தனது வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதற்காக நஷ்டஈடாக ரூ.5.75 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 இதையடுத்து லிம்கா குளிர்பானத்தை தயாரித்த ஹிந்துஸ்தான் கோககோலா நிறுவனத்துக்கும் அதை விற்பனை செய்த சில்லரை வியாபாரி ஹேமந்த் குமாருக்கும் நோட்டீஸ்

 அனுப்பப்பட்டது. இந்த புகாரை நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் எம்.பி. மகேந்தர் அட்டா விசாரித்து வந்தார். இதில் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரி மோகன்லாலுக்கு நீதிமன்றச் செலவுடன் சேர்த்து ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். இத்தொகையை குளிர்பான தயாரிப்பு நிறுவனமும் சில்லரை வியாபாரி ஹேமந்த்குமாரும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 குளிர்பான தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுகையில் மோகன்லால் குளிர்பானம் வாங்கியதற்கான ரசீதை தாக்கல் செய்யவில்லை என கூறப்பட்டது. ஆனால் இதை நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஏற்கவில்லை. குளிர்பானம் வாங்குவோர் யாரும் பில் வாங்குவதில்லை என்றார் அவர்.

* மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கைது

sachinf.jpg
புதுதில்லி, மே 22: போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட்டை உத்தரப்பிரதேச போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

 உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள கிராமங்களில் சாலை மேம்பாட்டுப் பணிக்காக அம்மாநில அரசு விவசாயிகள் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி நொய்டா அருகேயுள்ள பட்டா மற்றும் பர்செüல் கிராம மக்கள் கடந்த 7-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஆண்களும்,பெண்களுமாக ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸôர் கலைந்து செல்லும்படி கூறியும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸôர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம்போல காட்சியளித்தது. விவசாயிகள், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இச்சம்பவத்தையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், காஸியாபாத்திலுள்ள தாஸ்னா சிறையில் இருப்போரைச் சந்திக்கவும் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு பட்டா மற்றும் பர்செüல் கிராமங்களுக்கு காங்கிரஸ் பிரமுகர்களுடன் சச்சின் பைலட் சென்றார்.

 ஆனால் அவரை அக்கிராமத்துக்குச் செல்லக்கூடாது என போலீஸôர் தெரிவித்தனர். அதை மீறி சச்சின் பைலட் செல்லவே அவரை போலீஸôர் கைது செய்தனர். ஏற்கெனவே இதுபோல் விவசாயிகளைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் போலீஸôர் கைது செய்து பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: நொய்டா சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி யாஸ்மின் அப்ரார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பட்டா மற்றும் பர்செüல் கிராம மக்கள் போலீஸôர் துன்புறுத்தலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். பலர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச அரசு விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சாட்சியங்களை உத்தரப்பிரதேச அரசு கலைக்கும்முன் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

 பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு: யாஸ்மினின் இந்த கருத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக யாஸ்மின் கூறியிருப்பது சரியல்ல. அது தவறான தகவல் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

 இதுதொடர்பாக சனிக்கிழமை அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்தை தேசிய மகளிர் ஆணையத் தலைவி எதிரொலித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீது தனக்குள்ள விசுவாசத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

* எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு பிரதமர் இன்று பயணம்

 புதுதில்லி,மே 22: 6 நாட்கள் சுற்றுப்பயணமாக எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

 இந்தத் தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் (மேற்கு) விவேக் கட்சுý ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

 ஆப்பிரிக்க நாடுகளிடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மன்மோகன் சிங் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு மே 24, 25-ம் தேதிகளில் அடிஸ் அபாபா நகரில் நடைபெறவுள்ளது. அல்ஜீரியா, எகிப்து, கென்யா, லிபியா, நமீபியா, நைஜீரியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 15 நாட்டுப் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் அந்த மாநாட்டில் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார். அடிஸ் அபாபாவில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை சீர்திருத்தம், தீவிரவாதம், சோமாலியா கடல் கொள்ளையர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கிறார்.

 சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதம், கடற்கொள்ளையர்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பது, அதற்கான வழி என்ன என்பது குறித்தும், இந்த பிரச்னையில் ஆப்பிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் அந்நாட்டுத் தலைவர்களுடன் மன்மோகன் சிங் விவாதிக்கிறார்.

 இந்த பேச்சுவார்த்தையின்போது சோமாலியா கடற்கொள்ளையர்கள் பிரச்னைக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும். ஏனெனில் இந்தக் கொள்ளையர்களால் இந்திய கப்பல் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றன. கப்பல்களை கடத்துவதோடு, அதில் பணியாற்றும் ஊழியர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றனர்.

 இதுவரை 200 முறை கடல் கொள்ளையர்கள் இந்தியக் கப்பல்களை தாக்கியுள்ளனர். இதில் 70 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களை விடுவிக்க ரூ.225 கோடி பிணைத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

 மாநாட்டின்போது கென்ய அதிபரும், ஆப்பிரிக்க நாடுகள் கூட்டமைப்பின் தற்போதைய தலைவருமான ஓபியங் நுகுமா பாசோகோவுடன் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உறவு குறித்து பிரதமர் மன்மோகன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அடிஸ் அபாபா மாநாட்டு முடிவில் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளுடையே உள்ள உறவைப் பலப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்படும். ஆப்பிரிக்க நாட்டுடன் நமது உறவு எந்தவிதத் தலையீடும் இல்லாதது. இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் நல்ல நண்பர்கள், நல்ல சகோதரர்கள். இது நீடிக்கும்.

 ஆப்பிரிக்க நாடுகளுடன் மனித வளம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், அடிப்படை கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் விவாதிக்கிறார். அப்போது அவர் அந்நாட்டு சுற்றுப்பயணம் நினைவாக அஞ்சல் தலை, "2 பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற நூலையும் வெளியிடுகிறார்.

 மாநாடு முடிந்த பின்னர் மன்மோகன் சிங் எத்தியோப்பியா நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் மெலிஸ் செனாவியை சந்தித்து இரு நாட்டு உறவுகள், சர்வதேசப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார். மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.

 இதைத்தொடர்ந்து 3 நாள் பயணமாக மன்மோகன்சிங் மே 26-ம் தேதி தான்சானியா நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜகையா கிக்வேட்டுடன் இரு நாட்டு வர்த்தக உறவு குறித்து விவாதிக்கிறார்.

 தான்சானியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதுபோல் இரு நாடுகளின் வளர்ச்சி குறித்தும் அந்நாட்டு பிரதமருடன், மன்மோகன் சிங் விவாதிக்கிறார் என்றார் விவேக் கட்சு.

 இந்த சுற்றுப்பயணத்தில் மன்மோகன் சிங்குடன், அவரது மனைவி குருசரண் கெüர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமரின் முதன்மைச் செயாளர் டிகேஏ நாயர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் செல்கின்றனர்

மாநிலச் செய்தி மலர் :

* சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்

இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடு‌த்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

த‌ற்போதைய சம‌‌ச்‌சீ‌ர் பாட‌த் ‌தி‌ட்ட‌ம் மாணவ‌ர்க‌ளி‌ன் க‌ல்‌வி‌த் தர‌த்தை உய‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் இ‌லலை. எனேவ, சமச்சீர் பாடத் திட்டத்தை மே‌ம்படு‌த்‌தி செயல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தையே தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், ஜூன் 15ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

* தமிழகத்தில் முதல் முறையாக மேட்டூர் அணை ஜூன் 6-ல் திறப்பு

mettur.jpg

சென்னை, மே 22: மேட்டூர் அணை ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

 அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

 மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் குறுவைப் பாசனத்துக்கு உதவிகரமாக இருக்கும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், மேட்டூர் அணையில் நீர் இருப்பதையும், இயல்பான தென்மேற்கு பருவ மழையை எதிர் நோக்கியும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி நீர்வரத்து வரப்பெறும்.

 காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவைப் பாசனத்தை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு வசதியாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்து விட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 முதல் முறையாக திறப்பு: நாடு குடியரசான பின்பு, மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறை. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை எடுத்துள்ளது.

 நீர் இருப்பு எவ்வளவு? மேட்டூர் அணையின் இப்போதைய நீர் மட்டம் 113.63 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 118 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் இருப்பின் அளவு ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நிலவரப்படி 83.67 டி.எம்.சி. ஆகும்.

 கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணையில் நீர் இருப்பு வெறும் 36 டி.எம்.சி.ஆக மட்டுமே இருந்தது. இதனால் கடந்த ஆண்டு விவசாயத்துக்காக

 ஜூலை 28-ம் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு வழக்கமான தேதிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
* சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 சென்னை, மே 22: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட உள்ளன.

 இந்த ஆண்டு மொத்தம் 7 லட்சத்து 69 ஆயிரத்து 929 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர்.

 இதில் பாட்னா மண்டலத்தைத் தவிர பிற மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகளை காலை 10 மணி முதல் தெரிந்துகொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. பாட்னா மண்டலத்துக்கு மே 27-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

 தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

www.results.nic.in,

www.cbseresults.nic.in,

www.cbse.nic.in

 நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் 011-24357270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

* சொல்வன்மை சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும்: பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்

bharathibaskar.jpg

மதுரை, மே 22: சொல்வன்மை சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும். அப்போதுதான் அது மக்களின் வாழ்த்தைப் பெறும் என்று பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.

 மதுரை கம்பன் கழக எட்டாம் ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிர் அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

 மனிதனின் மனது நன்மையை நாடுவதைவிட தீமைகளை ஆராய்ச்சி செய்வதிலேயே மகிழ்ச்சி அடைகிறது. கம்பராமாயணத்தில் வரும் மந்தரை எனும் கூனியின் கதாபாத்திரம் இத்தகையது.

 ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் சில விஷயங்கள் கேள்விக்குறியாகவே கம்பன் வைத்துள்ளான். குழந்தையை யாராவது வாரி எடுக்கும்போது அது எடுப்பவரை அடிக்கும். அதற்காக யாரும் குழந்தை மீது கோபப்பட மாட்டார்கள். இந்த விஷயத்தில் சிறுவயதில் இருந்தபோது ராமனின் செயலுக்கு மந்தரையின் கோபம் நியாயமானதாகத் தெரியவில்லை. எனினும், ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேறவே மந்தரை என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

 மந்தரை கதாபாத்திரக் காட்சியில், கைகேயியின் இரும்பு போன்ற மனச்சங்கிலியின் மெல்லிதான பாகத்தை தட்டி வீழ்த்த தெரிந்திருக்கும் தந்திரத்தை தெரிந்து வைத்திருந்தாள் மந்தரை. அதற்காக அவள் உசுப்பிவிட்டது தாய்ப்பாசத்தை. அதேபோன்று அற உணர்வை அசைத்துப் பார்க்கிறாள். இறுதியில் தந்தைப் பாசத்தை வைத்து கைகேயியின் உடைக்கிறாள்.

 அதேபோன்று, ராவணனின் மகத்தான வீழ்ச்சியானது சூர்ப்பனகையின் சொல்வன்மையால் ஏற்பட்டது. சூர்ப்பனகை மனதுக்குள் இருந்தது காமம். அதற்காக அவள் உபயோகித்தது பொய். ராமன் மீது கொண்ட காமம் நிறைவேறாததால் சூர்ப்பனகைக்கு கோபம் வருகிறது. அதன் விளைவால் அரக்கர் குலமே அழிந்து போகிறது.

 மந்தரை, சூர்ப்பனகை ஆகிய இரு கதாபாத்திரங்களின் சொல்வன்மை பெரிதாக கூறப்பட்டாலும், சொல்லின் செல்வன் என்று ஏன் அனுமனைக் கூற வேண்டும். ஏனெனில், ஒருவரது சொல்வன்மை சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் போதுதான் அது வாழ்த்தப்படும். கண்டேன் சீதையை என்ற அனுமனின் சொல்வன்மை அப்படிப்பட்டது என்றார் பாரதி பாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, கம்பன் கழக புரவலர் சங்கர சீதாராமன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் புலவர் கி.வேலாயுதன் நன்றி கூறினார்.

* நாடு முழுவதும் நூற்பாலைகள் இன்று ஸ்டிரைக்

கோவை, மே 22: நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, அதைச் சரிகட்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் திங்கள்கிழமை (மே 23) ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துகின்றன. மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு குறைக்கவும் முடிவு செய்துள்ளன.

 கடந்த இரு மாதங்களில் நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்து வருகின்றன.

 நூல் கொள்முதல் குறைந்துவிட்ட சூழலில், தொடர்ந்து உற்பத்தி செய்தால் மேலும் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால் திங்கள்கிழமை ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துவதாக, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு அறிவித்தது.

 தில்லியில் அண்மையில் நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் முக்கிய நூற்பாலை சங்கங்கள் பங்கேற்றன. இக் கூட்டத்தில், ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தவும், அதன்பிறகு தினசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

 ஜவுளித் துறையில் நூற்புத் தொழில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் நூல் உற்பத்தியில் 47 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், குஜராத், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

 "நூற்பாலைகளின் இயக்கம் ஒரு நாள் நிறுத்தப்படுவதால் ஒரு கோடி கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்படும்.
 இதன் மதிப்பு ரூ. 250 கோடி. தமிழகத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 2,200 நூற்பாலைகள் உள்ளன. இவற்றில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

 செவ்வாய்க்கிழமை முதல் ஒரு ஷிப்ட் நிறுத்தப்படுவதால், நாளொன்றுக்கு ரூ. 15 லட்சம் உற்பத்தி இழப்பு ஏற்படும்' என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் செயலர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.

* வரும் கல்வியாண்டில் பழைய பாடத்திட்டம் அரசின் முடிவு சரியா? கல்வியாளர்கள் கருத்து

சென்னை, மே 22: வரும் கல்வியாண்டில் பழைய பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தையும் உயர்த்தும் வகையில் அமையவில்லை. எனவே, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும்போது கல்வித் தரத்தையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது.இந்தக் கல்வியாண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்று தமிழக அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுத்துள்ளது.

 கல்வியாண்டு தொடங்கும்போது அரசு எடுத்துள்ள இந்த முடிவு மாணவர்களைப் பாதிக்கும் என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.

 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: சமச்சீர் கல்விக்காக கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத்திட்டம் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்டது. வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறு ஆய்வுக் குழு ஆகிய மூன்றுக் குழுக்களால் பாடநூல்கள் எழுதப்பட்டன.

 இந்தப் பாடத்திட்டத்தின் ரூ.200 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாடப்புத்தகங்களில் எழுத்து, கருத்துப் பிழைகள் இருக்குமானால் சுற்றறிக்கைகள் மூலம் அதை நீக்கலாம்.

 ஆனால், பாடத்திட்டத்தையே மாற்றுவது மாணவர்களைப் பாதிக்கும். எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளின் வணிக நோக்கம் நிறைவேற பயன்படும் இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுப்பாடத்திட்டம் அமலில் இருக்கும்போதே, கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசு வல்லுநர் குழு நியமித்து ஆராயலாம் என்றார் அவர்.

 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி: இப்போது அறிமுகப்படுத்தப்பட இருந்தது பொதுப்பாடத்திட்டம் மட்டுமே. சமச்சீர் கல்வி அல்ல. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே சமச்சீர் கல்வி அளிக்க முடியும். பாடப்புத்தகங்களில் சிறிய தவறுகள் இருந்தால், சுற்றறிக்கைகள் மூலம் அதை சரிசெய்யலாம். ஆனால், புத்தகங்களில் உள்ள கருத்துகள் முழுமையாகத் தவறாக இருப்பதாக நினைத்தால் அரசின் இந்த முடிவு தவறல்ல. உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

 பொதுக்கல்வி வாரிய உறுப்பினர் விஜயன்: சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறேன். பள்ளிக் கல்வி தரமானதாக இருக்க அரசுப் பாடத்திட்டமும், மெட்ரிக் பாடத்திட்டமும் அவசியம்.


ஆரோக்கியச் செய்தி மலர் :

* ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

WR_867449.jpeg

வர்த்தகச் செய்தி மலர் :


பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி பிடிவாதப் பேச்சு!

22-pranab-41-300.jpg

டெல்லி: பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

மும்பையில், இந்திய வங்கிகள் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல் விலை உயர்வு, வாபஸ் பெறப்பட மாட்டாது. பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி மானியம் அளித்தது. டீசலுக்கு லிட்டருக்கு 16 ரூபாயும், மண்எண்ணெய்க்கு லிட்டருக்கு 26 ரூபாயும் மானியம் வழங்கி வருகிறோம். எனவே, பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது.

சில அத்தியாவசிய உணவு பொருட்களின் உற்பத்தியில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த பொருட்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது. உலக சந்தைகளில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது. இதனால் நாம் இறக்குமதியை நம்பி இருக்கும் பொருட்களின் விலை உயர்வது இயல்புதான்.

விலைவாசி எந்த திசையில் செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது. பொருட்களின் விலை நிலவரம், இப்போதும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது.

இருப்பினும், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து உரிய நிதிக்ள்கைகளை பின்பற்றுவதன் மூலம், அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவும், பணவீக்க விகிதத்தை ஏற்றுக்ள்ளத்தக்க அளவுக்கு குறைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது," என்றார்.

* உலகளவில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம்மகாராஷ்டிராவில் அமைகிறது

8171918.jpg

மே 23,2011,01:47
மும்பை:உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைய உள்ளது.

இந்தியாவில் மின்சாரத் தேவையை பூர்த்திச் செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. இதனை ஈடுசெய்யும் அளவில் மத்திய, மாநில அரசுகள் மரபுசாராத வகையில் மின் உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் ஒர் அங்கமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியதாவது:மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில், உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைய உள்ளது. 1,987 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம், 150 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். வரும் 2012ல், இங்கு மின் உற்பத்தி துவங்கும்.மேற்கண்ட மொத்த முதலீட்டில், மாநில அரசு 20 சதவீதத்தை (394.40 கோடி ரூபாய்), 80 சதவீதத்தை (1,592.60 கோடி ரூபாய்) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கே.எப்.டபிள்யூ நிறுவனமும் முதலீடு செய்கின்றன . சந்திரபூரில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தின் விரிவாக்கத்திற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.இந்த மின் நிலையத்தை மகாராஷ்டிர மாநில பவர் ஜெனரேஷன் நிறுவனம் செயல்படுத்தும். மின்சார வினியோகத்தை மகாராஷ்டிர மாநில மின் உற்பத்தி நிறுவனம் ஏற்கும். மின் கட்டண விலையை மகாராஷ்டிர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும். இவ்வாறு சவான் கூறினார்

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

மும்பை அணிக்கு "திரில்' வெற்றி!* கடைசி பந்தில் ராயுடு "சிக்சர்' * கோல்கட்டா பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 23 ரன்களை வாரி வழங்கிய பாலாஜி கோல்கட்டா அணிக்கு "வில்லனாக' மாறினார். இவ்வெற்றியின் மூலம் மும்பை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. கோல்கட்டா அணி நான்காவது இடமே பெற முடிந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்.,"டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த கடைசி லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டன. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:

கோல்கட்டா அணி துவக்கத்தில் தடுமாறியது. கோஸ்வாமி(1) ரன் அவுட்டானார். அகமது ஓவரில் ஒரு சிக்சர் அடித்த கேப்டன் காம்பிர்(8) அடுத்த பந்தில் போல்டானார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தவித்தது. பின் காலிஸ், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். பிரைஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய திவாரி(35), ரன் அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ரன் சேர்த்தார். பிரைஸ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசிய இவர், போலார்டு ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். பிராங்க்ளின் வேகத்தில் யூசுப்(36) வீழ்ந்தார்.
காலிஸ் அரைசதம்:

தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த காலிஸ், ஹர்பஜன் சுழலில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்தார். பின் பிராங்க்ளின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்த இவர், அரைசதம் கடந்தார். காலிஸ் 59 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) பிராங்க்ளின் பந்தில் அவுட்டானார். மலிங்கா பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட டசாட்டே, ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அகமது வீசிய கடைசி ஓவரில் டசாட்டே(18) வெளியேறினார். இதே ஓவரில் 2 பவுண்டரி அடித்த பாட்யா(11) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, பிரட் லீ வீசிய முதல் ஓவர் சாதகமாக அமைந்தது. சுமன் ஒரு பவுண்டரி, சச்சின் இரண்டு பவுண்டரி அடிக்க, 13 ரன்கள் கிடைத்தன. அப்துல்லா சுழலில் சுமன்(4) அவுட்டானார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் "ஒன்-டவுனாக' களமிறக்கப்பட்ட ஹர்பஜன் தனது பணியை கச்சிதமாக செய்தார். பிரட் லீ, பாலாஜி வேகத்தில் பவுண்டரிகளாக விளாசினார். மறுபக்கம் சச்சினும் பொறுப்பாக ஆட, ஸ்கோர் சீராக உயர்ந்தது.
பாட்யா அசத்தல்:

இந்த நேரத்தில் ரஜத் பாட்யா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது முதல் ஓவரில் ஹர்பஜன்(30) சிக்கினார். அடுத்த ஓவரில் ரோகித் சர்மாவை(10) வெளியேற்றினார். தனது 3வது ஓவரில் சச்சினை(38) அவுட்டாக்கிய பாட்யா, மும்பை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார்.
பின் போலார்டு, பிராங்க்ளின் சேர்ந்து போராடினர். அப்துல்லா ஓவரில் பிராங்க்ளின் ஒரு சிக்சர், போலார்டு ஒரு பவுண்டரி அடித்தனர். மீண்டும் பந்துவீச வந்த பாலாஜி வேகத்தில் போலார்டு(18) போல்டானார்.

"வில்லன்' பாலாஜி: கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. பாலாஜி சொதப்பலாக பந்துவீசினார். முதல் நான்கு பந்துகளில் பிராங்க்ளின் வரிசையாக நான்கு பவுண்டரிகள் விளாச, "டென்ஷன்' எகிறியது. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டன. இம்முறை அம்பதி ராயுடு ஒரு இமாலய சிக்சர் விளாச, ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டிருந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கட்டா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. "ஹீரோவாக' ஜொலித்த பிராங்க்ளின்(45), ராயுடு(17) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை பிராங்க்ளின் தட்டிச் சென்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

T_500_1483.jpg

அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோவில்

மூலவர்    :    சுப்ரமணியர்
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    -
தல விருட்சம்    :    -
தீர்த்தம்    :    தாமிரபரணி
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    500 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    -
ஊர்    :    ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம்    :    தூத்துக்குடி
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.

சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பழநியாண்டவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

 தலபெருமை:


கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட,,, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை !

வள்ளி - தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: :பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.

பிரார்த்தனை

சுப்ரமணிய சுவாமியை, சஷ்டி நாளில் விரதமிருந்து தரிசிக்க, தடைபட்ட திருமணம் நடந்தேறும், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவர் என்பது நம்பிக்கை. மேலும் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

 திருவிழா:

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி
 
திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

உண்மையான முன்னேற்றம் - அன்னை  

யோக சாதனைதான் உண்மையான முன்னேற்றம், அதுதான் மிகவும் உணர்வோடு செய்யப்படுகிற மிகவும் வேகமான முன்னேற்றம். சாதனை செய்யாவிட்டால் ஒருவன் இயற்கைப் பிரமாணத்தின்படியே முன்னேறுவான், அப்படியென்றால், ஒரு சிறு முன்னேற்றத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகள், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.

சாதனை மூலம் நிகழும் முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம். இயற்கைப்போக்கில் செய்யக் கணக்கற்ற காலம் பிடிக்கும் ஒன்றை யோகசாதனை மூலம் வெறு குறுகிய காலத்தில் செய்துவிடலாம். இந்த வேலை எப்பொழுதும் இப்புவியில், ஓர் உடலில் தான் நடைபெறுகிறது, வேறு எங்கும் நடப்பதில்லை.

வினாடி வினா :

வினா - பாராளுமன்றத்தைக் கலைக்கவோ, கூட்டவோ அதிகாரம் பெற்றவர் யார் ?

விடை - ஜனாதிபதி.


இதையும் படிங்க :

* தன்னம்பிக்கை தோழிகள்!

large_244674.jpg

சாக்லெட் பொக்கே தயாரிக்கும் தோழிகள் ரீனி, ஏக்தா: பி.காம்., படிக்கும் போது, பிசினஸ் ஆர்வம் தலைதூக்கியது. வீட்டிலிருந்தபடியே சிறிய அளவில் சாக்லெட்டுகளைத் தயாரித்து, தோழிகள், உறவினர்களுக்கு வழங்க ஆரம்பிச்சோம். எங்க தயாரிப்புகளை ரசித்து, சுவைத்து, "ச்சோ சுவீட்' என்று பாராட்டுகள் குவிந்தன. இந்த பாராட்டுகள் தான், எங்களை சாக்லெட் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட தூண்டியது.நாங்க இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும், சாக்லெட் பிசினசும் ஒரு பக்கம் தொடர்கிறது. வீட்டில் இருக்கும் மைக்ரோவேவ் ஓவன், டபுள் பவுலரைப் பயன்படுத்தி சாக்லெட் தயாரிக்கிறோம். நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என, எங்க தயாரிப்புக்கு வாடிக்கையாளர் கூட்டமும் அதிகரித்தது.வேலை பார்க்கும் நிறுவன கேன்டீனிலும், எங்க தயாரிப்பு இடம் பிடிக்க போராடி வருகிறோம். தோழி ஏக்தாவின் அம்மா, "குக்கீஸ்' தயாரிப்பில் கைதேர்ந்தவர். சாக்லெட்டுகளுடன் இரண்டு, மூன்று குக்கீஸ்களையும் சேர்த்து, சாக்லெட் பொக்கே செய்து தந்தது, பிசினசுக்கு பக்கபலமாக இருந்தது. சாக்லெட் பொக்கே, ஸ்டால்களுக்கு வருபவர்கள் மூலம் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் குவிந்தன.வழக்கமான சாக்லெட்டாக இல்லாமல், பிசினசில் புதுமையைப் புகுத்தினோம். டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட், திராட்சை, ஆல்மண்ட், உலர் பழங்கள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைகளை சாக்லெட்டில் நிறைய உபயோகிக்கிறோம். வெறும் தயாரிப்புடன் நில்லாமல், சாக்லெட்டுகளை அழகிய வண்ணக் காகிதங்களில் சுற்றி, கண்கவரும் வகையில் பேக் செய்து வழங்குவது தான் எங்க ஸ்பெஷாலிட்டி.பகுதி நேர பிசினசான சாக்லெட் தயாரிப்பை, எதிர்காலத்தில் முழு நேர பிசினசாக்கி பெரியளவில் சாக்லெட் தொழிற்சாலைத் தொடங்குவோம்!


* சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

large_244749.jpg

ஓசூர் : ஓசூரில் சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள், சந்திரசூடேஸ்வரர் மலையில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில், சின்னஞ்சிறு கல் மற்றும் மண் வீடுகள் கட்டி, வினோத வேண்டுதலில் ஈடுபடுகின்றனர்.

சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைவதற்கு முன், ஓசூர் மிகவும் பின்தங்கிய நகரமாகக் காணப்பட்டது. அப்போது, குடியிருப்புகள் இல்லாத காட்டுப்பகுதியாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த 1977ம் ஆண்டு, மிகப்பெரிய இரு தொழிற்பேட்டைகள் துவங்கப்பட்டன. இதனால், வேலைவாய்ப்பு ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஓசூர் நகரப் பகுதியில் குடியேறத் துவங்கினர்.அதன் பின், நகரப் பகுதி விரிவடைந்து வளர்ச்சியடைந்ததால், மக்கள் தொகை பல மடங்கு பெருகியது. நிலத்தின் மதிப்பும், "கிடுகிடு'வென உயர்ந்துவிட்டது. தற்போது, நடுத்தர, ஏழை மக்களுக்கு சொந்த வீடு என்பது வெறும் கனவாக உள்ளது.

சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்ற, வருமானத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், மக்கள் இஷ்ட தெய்வங்களிடம் வேண்டுதல் வைப்பது அதிகரித்துள்ளது. அவர்களில் சிலருக்கு, சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்போது, வேண்டுதல் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும் நடைமுறையில் உள்ளது.ஓசூர் சுற்று வட்டார பகுதி மக்கள், கிருஷ்ணகிரி பை-பாஸ் சாலையில் உள்ள, 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் மலைக் கோவிலில் சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக, வேண்டுதல் வைத்து பூஜைகள் செய்கின்றனர்.மலைக்கோவிலுக்கு பின்னால் உள்ள அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையில், சொந்த வீடு வேண்டும் மக்கள், சிறு சிறு கல் மற்றும் மண் வீடுகள் கட்டி வேண்டுதல் வைத்து பூஜை செய்து வருகின்றனர். அவர்களில் சிலரது சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளதால், இந்த வேண்டுதல் வழிபாடு, தற்போது ஓசூர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இதனால், சொந்த வீடு கனவில் இருக்கும் ஏராளமான பக்தர்கள், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் வேண்டுதல் வைக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.அம்மன் கோவில் செல்லும் பாதை நெடுகிலும், கண்ணுக்கு தெரியும் இடமெல்லாம் சின்னஞ்சிறு கல் வீடுகள், மண் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விசித்திரமாக வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.தற்போது கோடை விடுமுறை என்பதால், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களும், வெளியூர் மக்களும் சொந்த வீடு கனவு நிறைவேற, சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் பாதையில், நம்பிக்கையோடு கல் வீடுகளைக் கட்டி வேண்டுதல் பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர்.






நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment