Wednesday, May 18, 2011

இன்றைய செய்திகள் , மே 18 , 2011 .

முக்கியச் செய்தி :

புதிய தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஷீலா ராணி-ஜெ நியமனம்

17-sheela-rani-debendranath-sa.jpg

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி, அதிகாரமில்லாத துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

அதே போல உள்துறைச் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் ஞானதேசிகன் இருந்தார். சுங்கத் இதுவரை தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு வாரிய முதன்மைத் தலைவராக இருந்து வந்தவர் ஆவார். இப்போது இவர் வசம் காவல்துறை வந்துள்ளது.

முதல்வராக பதவியேற்றவுடன் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார், உள்துறைச் செயலாளராக சுங்கத்தை நியமித்துள்ளார். சாரங்கி இப்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குநராக உள்ளார்.

லைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வு பெற்றபோது, அடுத்த தலைமைச் செயலாளர்களாக வருபவர்களின் பட்டியலில் சாரங்கியின் பெயர் இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த இவர் 1977 பேட்ச் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாவார். இவரை விட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சூசன் மேத்யூ, பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமைச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களை ஒதுக்கிவிட்டு சாரங்கியை நியமித்துள்ளார் ஜெயலலலிதா.

மிக நடுநிலையானவர் என பெயர் எடுத்த சாரங்கியின் மனைவி தமிழ்ப் பெண் ஆவார். இவர்களது மகன் ஐடி துறையில் பணியாற்றுகிறார். மகள் அமெரிக்காவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார்.

உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலாராணி சுங்கத், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1978ம் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக திறம்பட பணியாற்றினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகள் தெரிந்தவர். ஷீலாராணி சுங்கத்தின் கணவர் மோகன் வர்க்கீஸ் சுங்கத், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

முதல்வரின் புதிய செயலாளர்கள்:

தே போல முதல்வரின் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெங்கடரமண் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளராகவும், ராவ் விவசாயத்துறை செயலாளராகவும் இருந்தவர்கள்.

இதில் ஷீலா ப்ரியா முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாராகவும், ராவும் வெங்கடரமணும் முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாகவும் இருப்பர்.

அதே போல ராமலிங்கம், ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி இப்போது புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி அந்தஸ்து கூடுதல் செயலாளர் என்ற நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அந்தத் துறையின் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சிறப்பு ஆணையாளராக டம்மி போஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சட்டப் பேரவையின் செயலாளராக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சிறைத்துறை இயக்குனராக மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பில் கூடுதல் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து பல துறைகளின் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும், கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது.
  
உலகச் செய்தி மலர் :

* குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வாய்ப்பளியுங்கள்! - ஐநாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை
எங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கை:

அன்பான தமிழ் மக்களே,

காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.

பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள்.

இருக்க இடமின்றி உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் என சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

கூக்குரலை புறந்தள்ளிய உலகம்

எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச் சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.

போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல்இ பக்கச்சார்பானவையென்றும்இ உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அறிக்கையை வரவேற்கிறோம்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.

எம் அன்பிற்குரிய தமிழக மக்களே ,

எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.

எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும் வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான உலகத்தமிழ் உறவுகளே,தமிழீழத் தாயகமமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்த வெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்
. பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்ற நிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மை நிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்கு முறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.
  
* மும்பை தாக்குதலுக்கு உடந்தை பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டும்: அமெரிக்கா
வாஷிங்டன், மே 17: மும்பைத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அந்நாடு பதில் கூற வேண்டும் என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் ஏறத்தாழ 170 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் அமெரிக்க பிரஜைகள். இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானிலிருந்து கடல் வழி வந்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான்.

இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. உதவி புரிந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் வாழும் வர்த்தகர் தஹவூர் ராணா என்பவர் அமெரிக்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு இவர் ஆள் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்த வழக்கு சிகாகோ நகரில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. வழக்கிற்கான ஜூரி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் பின்னணியில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு உண்டு என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியது: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-க்கும் பங்குண்டு என கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் அரசு முறையாக பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஆனால் தாக்குதல் குறித்த வழக்கு பற்றி இப்போது விவரமாக எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கின் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆனால் மும்பைத் தாக்குதலைப் பொருத்தவரையில், அந்த பயங்கரவாத சம்பவம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அனைத்து நாடுகளும், அனைத்து தரப்பினரும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.

ராணா வழக்கு: மும்பை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக டேவிட் கோல்மன் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் குழந்தைப் பருவம் முதலே நண்பர்கள். இதில் ராணா ஒரு மருத்துவர். பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் இவர் கனடாவில் குடியேறினார்.

மும்பை தாக்குதலுக்கு அவர் பொருள் உதவி செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும், உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் தூண்டியதால் பயங்கரவாத தாக்குதலுக்குத் துணை போனதாக இவர் கூறியுள்ளார். ஆனால் ராணாவை நயவஞ்சகமாக இந்த சதியில் உள்படுத்தியது ஹெட்லிதான் என ராணாவின் வக்கீல் கூறி வருகிறார்.

ஹெட்லி என்று இப்போது அறியப்படுபவரின் உண்மையான பெயர், தாவூத் சையத் கிலானி. தனது அடையாளம் வெளிப்படாமல் இருக்க பெயரை மாற்றிக் கொண்டார். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடும் பொருட்டு பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார்.

மும்பை தாக்குதலைத் திட்டமிட அவர் அங்கு சென்று தங்கியிருந்தார். தாக்குதல் நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் அவர் அங்கு தங்கியிருந்தார். தாக்குதலுக்குப் பின் அவருடைய வெளிநாட்டுப் பயணத்தின்போது விமான நிலையத்தில் அவர் கொடுத்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களினால் சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, பாகிஸ்தான் உளவு நிறுவனம் தனக்கு 25 ஆயிரம் டாலர்கள் தந்து இந்த பயங்கரச் செயலைச் செய்யுமாறு சொன்னதாக ஒப்புக்கொண்டார் ஹெட்லி.

* இந்திய விஞ்ஞானிக்கு விருது

வாஷிங்டன்,மே17 :குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மலேசியாவில் உருவாக்கியுள்ள இந்திய விஞ்ஞானிக்கு,அமெரிக்காவின் விருது கிடைத்துள்ளது.

 இந்தியாவைச் சேர்ந்த கே எஸ் சிவபிரசாத், குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளார். இத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மலேசியாவில் 700 டன் குப்பையிலிருந்து 8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்நிறுவனம்,அதன் சுய தேவைகளுக்குப் போக, மீதமுள்ள 5.5 மெகாவாட் மின்சாரத்தை தேசிய தொகுப்புக்கு விற்பனை செய்து வருகிறது. இத்தொழில் நுட்பத்துக்கான காப்புரிமையை சிவபிரசாத் அவரிடமே வைத்துள்ளார். மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் ஆறு பெரிய நிறுவனங்களில் மலேசியாவில் உள்ளது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ரோஸ்மாண்ட்டில் நடைபெற்ற ஆண்டு விழாவில், இந்திய விஞ்ஞானி சிவபிரசாத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத குப்பையிலிருந்து,மின்சாரம் தயாரிக்கும் தொழிற் சாலைகளை இந்தியாவில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த சிவபிரசாத் இந்தியா வரவுள்ளார்.

* இந்தியக் குடியுரிமை கோரும் பாகிஸ்தான் ஹிந்துக்கள்
கன்னா, மே.17: பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் புலம் பெயர்ந்த பாகிஸ்தான் நாட்டு ஹிந்துக்கள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

 பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஹிந்துக்கள் சிலர், அங்கு நடக்கும் தீவிரவாதச் செயல்களால் பாதிப்புற்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துள்ளனர். 1999 -ம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், வருடந்தோறும் இங்கு தங்குவதற்கான உரிமையைப் புதுப்பித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவும் வன்முறைச் சூழ்நிலையால் மீண்டும் அங்கு திரும்ப விரும்பாத இவர்கள் நிரந்தரக் குடியுரிமை கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 பஞ்சாப் அரசின் உள்துறை மற்றும் நீதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ள இவர்களது விண்ணப்பம், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களில் ஒருவரான ஓம் லால் இதுபற்றிக் கூறுகையில், பாகிஸ்தானில் தீவிரவாதச் சூழ்நிலை நிலவுவதால், தான் ஒருபோதும் பாகிஸ்தானுக்குத் திரும்பப்போவதில்லை என்று கூறினார். குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற உரிமைகளை பெறச் சிரமப்படுவதால் இந்திய அரசு தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டினார்.

 இவரைப் போன்றே புலம் பெயர்ந்த பல பாகிஸ்தான் பிரஜைகளும் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கிடையில் பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அவினாஷ் ராய் கன்னா இந்த விஷயத்தை தான் மாநிலங்களவையில் சமீபத்தில் எழுப்பியுள்ளதாகக் கூறினார்.

* பிரதமர் மன்மோகனுக்கு அமெரிக்கா பாராட்டு

pm.jpg

வாஷிங்டன்,மே 17: பிரதமர் மன்மோகன்சிங்கை அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் பாராட்டியுள்ளார்.

 இது பற்றி அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியது: மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருப்பது உலகத்துக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிர்ஷ்டமானது. தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்கியபோதும் மன்மோகன்சிங் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் மோதல் ஏற்படுவதை தவிர்த்தார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவை கட்டுப்படுத்த முடியாது. இதை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெளிவாக கூறிவிட்டது.

 எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் சில இடங்கள் தீவிரவாதிகளுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் சொர்க்கமாக உள்ளன. இதனால் தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அதிக விலை கொடுக்க வேண்டியதுள்ளது என்று ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்தார்.

* இந்திய, சீன மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா அறிவுரை

obamaa.jpg

வாஷிங்டன், மே 17: எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீன மாணவர்களின் போட்டியைச் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்க மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

 டென்னஸ்ஸீ மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் கல்லூரி மாணவர்களுடன் உரையாடியபோது அவர் இக்ருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:

 அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.

 எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்நாட்டு போட்டியை சமாளித்தால் போதும் என்ற நிலை இனி இருக்காது. வெளிநாட்டிலிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழல் உருவாகி வருகிறது.

 இந்திய, சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர். இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.

 படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது நீங்கள் நாஷ்விலே பகுதியைச் சேர்ந்தவருடனோ அல்லது அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவருடனோ போட்டியிடப் போவதில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 இதற்கு அனைத்து அமெரிக்க மாணவர்களும் தயாராக வேண்டும். வெறுமனே ஒரு சில அமெரிக்க மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். மாணவர்கள் வெறும் படிப்புடன் நின்றுவிடாமல் பட்டயப் படிப்போ அல்லது தொழில் படிப்போ கூடுதலாக கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. இவையில்லாமல் வெற்றி பெற முடியாது. போட்டிகளை எதிர்கொள்வதும் கடினம்.

 கல்வியானது ஒருவரை பலவழிகளில் சிறந்த மனிதராக உருவாக்குகிறது. மிகக் கடுமையான போட்டிகளை எதிர்கொள்வதற்குக் கற்றுத் தருகிறது. பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண வழியேற்படுத்தித் தருகிறது.

 அல்ஜீப்ரா கணிதத்தைப் போட வேண்டியதன் அவசியம் என்ன? என்று எங்களது இளமைக் காலத்தில் ஆசிரியர்களைக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

 அல்ஜீப்ரா கணக்குகளுக்குத் தீர்வு காணாமல் நல்ல வேலையைப் பெற முடியாது அல்லது நல்ல தந்தையாக இருக்க வேண்டியாது என்று பேராசிரியர் குறிப்பிட்டார். அவரவர் தங்களது சொந்தக்காலில் நிற்பதற்குப் பழக வேண்டும்.

 தகவல்களை எந்தெந்த வழிகளில் பெறலாம் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். எனவே கணக்கு ஆசிரியர்கள் தங்களது மாணாக்கர்களுக்கு கணக்குப் பாடத்தில் அல்ஜீப்ராவை நன்கு கற்றுத் தர வேண்டும் என்று சிரித்தபடியே கூறினார்.

 ஒவ்வொரு பாடப் பிரிவில் உள்ள சாதக அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. அத்துடன் ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். ஸ்திரமான கட்டுப்பாடு, கடின முயற்சி ஆகியன மூலம் மாணவர்கள் மிகச் சிறந்த இடத்துக்கு உயரலாம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

 இத்தகைய போதனைகளை மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்துவதன் மூலம்தான் ஏற்படுத்த முடியும். வாழ்க்கையில் இலக்கை நிர்ணயித்து அதை எட்டுவதற்காகப் போராடி முன்னேறும்போதுதான் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். பிரபலமானவர்களாக ஆவதும் இத்தகைய கடின முயற்சியால்தான்தான் என்று ஒபாமா குறிப்பிட்டார்.

 உண்மை சம்பவ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது நீங்கள் பிரபலமாகக் கூடும். ஆனால் அது கடைசி வரை நீடித்திருக்காது. ஸ்திரமான சாதனைகள் மட்டுமே நிலைத்திருக்கும்.

 உங்கள் வீடுகளில் மற்றும் பள்ளிகளில் பயிலும் சரியான கல்வி உங்களை மிகச் சிறந்த மனிதர்களாக உருவாக்குகிறது. நீங்கள் கதைகள் படிக்கும்போதோ அல்லது வரலாறு படிக்கும்போதோ உங்களது கற்பனை விரிந்து அந்த கதாபாத்திரமாக மாறவும், அந்த கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சவாலை சமாளிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

 அமெரிக்காவின் எதிர்கால பொருளாதார நிலை மாணவர்களின் திறமையில்தான் அடங்கியிருக்கிறது. அதேபோல அமெரிக்க சமூகத்தின் எதிர்காலம் நீங்கள் பின்பற்றும் விதிமுறைகளில்தான் அடங்கியிருக்கிறது. உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதேபோல மற்றவர்களை நீங்கள் நடத்துவதற்கு முயலுங்கள் என்றார் ஒபாமா.


தேசியச் செய்தி மலர் :

* நெடுஞ்சாலைத் துறை செயல்பாடு: மே 30-ல் பிரதமர் மறு ஆய்வு
புது தில்லி, மே 17: தேசிய நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாடு குறித்து வரும் 30-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மறு ஆய்வு செய்யவுள்ளார்.

 இதை நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-2012) நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவு புதிய சாலையை உருவாக்குவதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் கோருதல் , நிலம் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுதலில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக புதிய சாலை உருவாக்குவதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை.

 இதனால் நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய பிரதமர் திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தின் போது 11-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் கடந்த 4 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதுடன், இன்னும் ஓராண்டில் விரைந்து சாலை அமைப்பதற்கான சிறப்புத் திட்டத்தை உருவாக்குவது குறித்து அந்த துறை அதிகாரிகளுடன் ஆலோசிப்பார்.

 இந்தக் கூட்டத்தின் போது கடந்த ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வரும் காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அந்த துறையின் அமைச்சர் சி.பி.ஜோஷி விளக்குவார்.

* பயங்கரவாதிகள் பட்டியல்: உள்துறை அமைச்சகம் குழப்பம்
மும்பை, மே 17: பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட பயங்கரவாதக் குற்றம்சுமத்தப்பட்டுள்ள இந்தியரான வாஜுல் கமார் கான் என்பவர் தாணேயில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

 இது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஜுல் கமார் கானின் பெயரை மகாராஷ்டிர மாநில உள்துறையும், காவல்துறையும்தான் மத்திய அரசுக்கு அளித்தன.

 இதுதொடர்பாக விளக்கம் தருமாறு மகாராஷ்டிர அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 2002, 2003 ஆண்டுகளில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக வாஜுல் கமார் கான் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில் ஜூலையில் ஜாமீனில் வெளி வந்தார்.

 இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்துறை செயலர்கள் கடந்த மார்ச் மாதம் தில்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது. அதில் வாஜுல் கமார் உள்பட 50 பேரின் பெயர் இடம்பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இந்த பயங்கரவாதிகள் பெயர் பட்டியல் கடந்த வாரம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இதையடுத்துதான் வாஜுல் கமார் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதும், அவர் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டதும் தெரியவந்தது.

 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆங்கில பத்திரிகை ஒன்று வாஜுல் கமார் பாகிஸ்தானில் இல்லை. இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் மகாராஷ்டிரத்தின் தாணேயில் தொழில் செய்து வருகிறார். அவர் ஜாமீனில்தான் இருந்துவருகிறார் என்று செய்தி வெளியிட்டது.

 இதையடுத்து பிற பத்திரிகையாளர்கள் தாணேயில் வாஜுல் கமார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் பேட்டி கண்டனர். அப்போது அவர், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள இந்தியாவில்தான் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

 மேலும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இதனால் தனது தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

* மம்தாவை முதல்வராக நியமித்து ஆளுநர் உத்தரவு

mamthapa.jpg

கொல்கத்தா, மே 17: மேற்கு வங்கத்தின் முதல்வராக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நியமிக்கப்படுவதாக ஆளுநர் எம்.கே.நாராயணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

 "அரசியல் சட்டப் பிரிவு 164(1)-ன் படி வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் மம்தா பானர்ஜியை முதல்வராக நியமிப்பதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்திருக்கிறார்' என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் பேரவை திரிணமூல் கட்சித் தலைவராக மம்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, ஆட்சியமைக்கும் உரிமையை ஆளுநரிடம் அவர் கோரினார். அதன்படி, ஆட்சியமைக்க வருமாறு மம்தாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், மம்தாவை முதல்வராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.

 வரும் 20-ம் தேதி மம்தா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* அசாம் முதல்வராக தருண் கோகோய் இன்று பதவியேற்பு

pranap.jpg

குவாஹாட்டி, மே 17: அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தருண் கோகோய் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் முதல்வராக புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.

 பதவியேற்பு: சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தருண் கோகோய், மாநில முதல்வராக புதன்கிழமை (மே 18) பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கோகோய் மட்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அவர் அமைச்சரவை விரிவாக்கும் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்துவதற்காக தில்லி செல்ல உள்ளார். அங்கு ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவை இறுதி செய்யப்படும்.

 முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கோகோய் பெயரை பூமிதர் பர்மான் முன்மொழிந்தார். இதை ராமேஸ்வர் தனோவார், மூத்த சட்டப் பேரவை உறுப்பினர் ஜி.சி. லங்தஸô, அமியா கோகோய், சந்தன் சர்க்கார் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கோகோய் பெயரை ஒருமனதாக ஆதரித்தனர்.

 மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரும், அசாம் மாநில பொறுப்பாளருமான திக்விஜய் சிங், வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் பிஜோய் ஹண்டிக்கும் பங்கேற்றனர்.

* எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளில் மன்மோகன் 6 நாள் சுற்றுப்பயணம்
புதுதில்லி,மே 17: பிரதமர் மன்மோகன்சிங் 6 நாள் சுற்றுப்பயணமாக எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளுக்கு செல்கிறார்.

 ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு வருகிற 24,25-ம் தேதிகளில் அடிஸ்அபாபா நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆப்ரிக்காவில் உள்ள 15 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மேலும் அவர் எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் 23-ம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்டு அடிஸ்அபாபா நகருக்கு செல்கிறார். அவருடன் மனைவி குருசரண் கவுர், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரும் செல்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங் ஆப்பிரிக்க தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 முன்னதாக 23-ம் தேதி வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடக்கிறது. இதில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் இந்திய குழு கலந்து கொள்கிறது.

 மேலும் 21-ம்தேதி வர்த்தக அமைச்சர்கள் சிறப்புக் கூட்டமும் நடக்கிறது. இதில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் ஒரு குழு கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

 மாநாடு முடிந்த பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் எத்தியோப்பியா நாட்டுக்கு செல்கிறார். அங்கு அவர் எத்தியோப்பியா பிரதமர் மெலிஸ் செனாவியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசுகிறார். மேலும் மன்மோகன்சிங் எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.

 பின்னர் 3 நாள் பயணமாக மன்மோகன்சிங் 26-ம் தேதி தான்சானியா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். தான்சானியா அதிபர் ஜகையா கிக்வேட்டுடன் இரு நாட்டு வர்த்த உறவுகள் குறித்து பேசுகிறார்.

 இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விவேக் கட்சு தில்லியில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது,இந்தியாவும்,ஆப்பிரிக்க நாடுகளும் தீவிரவாதிகளாலும், சோமாலிய கடற் கொள்ளையர்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

 எனவே இந்திய,ஆப்பிரிக்க தலைவர்கள் தீவிரவாதத்தையும் கடற்கொள்ளைர்களையும் ஒடுக்க முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்தியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நெடுங்காலமாக தொடர்பு உள்ளது. நாங்கள் நண்பர்களாக உள்ளோம். எப்போதும் நண்பர்களாக இருப்போம் என்று கட்சு தெரிவித்தார்.


மாநிலச் செய்தி மலர் :

* கட்டண வசூலில் மெட்ரிக் பள்ளிகள்: நகைகளை அடகு வைக்கும் பெற்றோர்

நெல்லை: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 13 தினங்களே உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றன.

கோடை காலம் முடிந்தவுடன் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை களை கட்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பிரபலமான பள்ளிகளில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்களி்ன் வருமானத்தை பெருக்கிக்கொள்ள இப்போதே வசூலில் இறங்கிவிட்டன.

புதிதாக ஒரு மாணவரை பள்ளியில் சேர்க்க குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரமாவது வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் நச்சரிக்கின்றன. அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தக கட்டணம், சுற்று கட்டணம் என அடுத்தடுத்து பல அதிர்ச்சிக்ள் காத்திருக்கின்றன. ஏற்கனவே பளளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், இவ்வாண்டு சில புதிய விதிமுறைகளை பிறபிக்கத் துவங்கியுள்ளன. பாளையி்ல் ஒரு பள்ளியில் கடந்த வாரத்துக்கு முன்பு பெறறோர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி புத்தக கட்டணமாக ரூ.2000 முதல் 5000 வரை செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. நேற்று இறுதி நாள் என்பதால் பணத்தை கட்ட சென்ற பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் மேலும் ரூ.6 ஆயிரம் செலுத்துமாறு கூறியது. 4, 5-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் கூட ரூ.8,500 செலுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

பெறறோர்கள் அவசரம், அவசரமாக ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து செலுத்தியபோது ரூ. 4 ஆயிரத்துக்கு ஒரு டிராப்ட் பெயரில் பில் போடப்பட்டது. மீதி தொகைக்கு பின் பில் தருகிறோம் என கூறி பெற்றோர்களை திருப்பி அனுப்பி விட்டது. பாளையில் உள்ள மற்றொரு மெட்ரிக் பள்ளி இவ்வாண்டு பல மாணவர்களுக்கு தேர்ச்சி அட்டைகளை அனுப்பவில்லை. பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் கடந்த ஆண்டு பாக்கி தொகையை முழுமையாக கட்டினால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி கடந்த ஆண்டு பல பெற்றோர்கள் குறைவான கட்டணத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது.

பழைய கட்டணத்தோடு, புதிய கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருப்பதால் பல பெற்றோர்கள் இப்போதே நகைகளை அடகு வைக்கத் துவங்கிவிட்டனர். பள்ளிகள் துவங்கும் முன்பே வசூலிக்கப்படும் இத்தகைய கட்டணங்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.


* மானிய விலை உரங்கள் விற்பனையில் ரூ. 1.34 கோடி ஊழல் 5 அதிகாரிகள் கைது

arrest.jpg

கரூர், மே 17: அரசிடமிருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று, அவற்றை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து, தமிழக அரசுக்கு சுமார் ரூ. 1.34 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக கரூர், சேலம், திருச்சியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களை கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸôர் கைது செய்தனர்.

 வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் சி. பாக்கியநாதன், கரூரிலுள்ள வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

 அதன் விவரம்:

 திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் பி. செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடியால் அரசுக்கு ரூ. 1,33,63,261 இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 இதையடுத்து, புகார் மீது விசாரணை நடத்த வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில், துணைக் கண்காணிப்பாளர் ஏ. சூர்யகலா தலைமையில், ஆய்வாளர்கள் வேணுகோபால், ரவிச்சந்திரன், அயுப்அலிகான், விஜயகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.

 தனிப் படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் பி. செல்லமுத்து (48), (உர ஊழல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்), திருச்சி டான்பெட் துணை மேலாளர் இ. பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்து, தற்போது ஸ்ரீரங்கம் வேளாண்மை துணை இயக்குநராக பதவி வகித்து வரும் பி. மீனாட்சிசுந்தரம் (53), கரூர் மாவட்டம், காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் சி. ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் (கொள்முதல்) எஸ். கல்யாணசுந்தரம் (56) ஆகியோரை தனிப் படையினர் கைது செய்து, செவ்வாய்க்கிழமை கரூர் கொண்டு வந்தனர்.

 அவர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திய பின்னர், குளித்தலை குற்றவியல் நடுவர் நீதித் துறை எண். 1-ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 இதுகுறித்து துணைக் கண்காணிப்பாளர் ஏ. சூர்யகலா கூறியது: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக பெறப்பட்ட உரங்களை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்த வகையில் அரசுக்கு ரூ. 1.34 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்திய தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் தனி அலுவலர், உரங்களை வழங்குவதற்கு உறுதுணையாகச் செயல்பட்டவர்கள், உரங்களைப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இதுவரை 5 பேரைக் கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார் அவர்.


ஆரோக்கியச் செய்தி மலர் :

காயப்படுத்தினால் பலன் தரும் பெருங்காயம்

17-asafoetida300.jpg

தமிழ்நாட்டின் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் பெருங்காயம். இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது."ஃபெருலா ஃபொட்டிடா" அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து பெருங்காயம் கிடைக்கிறது..

இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகள் மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக வாசனையுள்ள பால் காணப்படுகிறது.

இந்த தாவரமானது இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் வளர்ந்த தாவரத்தின் வேர்பகுதியில் இருந்து பெறப்படும் மணம் கொண்ட பிசின் போன்ற பொருளே பெருங்காயம் ஆகும்.

உயர்வகை பிசின்

தண்டு முதல் வேர்வரை வெட்டி காயப்படுத்தப்படும்போது இதிலிருந்து பிசின் போன்ற பொருள் வெளியேறி கெட்டியாகிறது. சிவப்பு வண்ணத்தில் உள்ள பிசின் சுரண்டி எடுக்கப்பட்டு தோல்பைகளில் சேகரிக்கப்படுகிறது. இதுவே பெருங்காயமாகும்.

ஜூன் மாதங்களில் பிசின் எடுக்கப்படும். வணிக ரீதியான பெருங்காயம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் பெறப்படுகிறது. வேரின் மையத்தில் உள்ள இலை மொட்டில் இருந்து உயர்ந்த வகை பெருங்காயம் பெறப்படுகிறது. இது ‘கந்தகாரி’ பெருங்காயம் எனப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

பெருங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ரெசின் மற்றும் பிசின் காணப்படுகிறது. இதில் டை- சல்பைட்கள் மற்றும் பெரூலிக் அமிலம், பிட்டிடன் ஆகியவற்றுடன் கௌமரின்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்காயத்தின் மருத்துவ பயன்களுக்கு அடிப்படையாகின்றன.

ஃபெருலா என்றழைக்கப்படும் தாவரத்தின் இலைகள், தண்டு, வேர் மற்றும் பிசின் – ரெசின் ஆகியன மருத்துவ பயன் உடையவை.

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதேசமயத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். இது சுவைக்காக மட்டுமின்றி, உணவு செரிக்கவும் உதவுகிறது. வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களையும் இது அழிக்கிறது.

நரம்பு கோளாறு நீங்கும்

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயத்திற்கும் உள்ளது. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.

அஜீரணம் நீங்கும்

இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. தண்டுப்பகுதி மூளை மற்றும் கல்லீரலை வலுப்படுத்துகின்றன.மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவில் பெருங்காயம் சாதாரண அஜீரணம், வாயு, உப்புசம், மலச்சிக்கல், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.

மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தையில் கரடியின் பிடி இறுகுகிறது
மும்பை, மே 17: பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரடியின் பிடி இறுகியதால் 208 புள்ளிகள் சரிந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் குறைந்தது, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மானிய சுமை அதிகரிப்பு, எண்ணெய் அகழ்வுப் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் தாமதப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது.

 மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 18,137 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 60 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,438 புள்ளிகளாகக் குறைந்தது.

 பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் ரூ. 203.70 குறைந்து ரூ. 2,413.60-க்கு விற்பனையானது. இவ்வங்கிப் பங்குகள் 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்குக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெற உள்ள நிதி ஆய்வுக் கொள்கையில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது.

 முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 23.90 சரிந்து ரூ. 920.40-க்கும், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை ரூ. 5.80 சரிந்து ரூ. 2,843.95-க்கும் விற்பனையானது.

 ஓஎன்ஜிசி பங்கு விலை ரூ. 19.95 சரிந்து ரூ. 277.95-க்கும், ஆயில் இந்தியா பங்கு விலை ரூ. 66.80 சரிந்து ரூ. 1,289.20-க்கும் விற்பனையானது. கெயில் இந்தியா பங்கு விலை ரூ. 17.65 குறைந்து ரூ. 433-க்கு விற்பனையானது. ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங், தென் கொரியா, தைவான் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. சீனா, ஜப்பான் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன.

 மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 19 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மற்றவை கணிசமான லாபம் ஈட்டின. ஹீரோ ஹோண்டா (3.39%), ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் (2.17%), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (2.06%), என்டிபிசி (1.72%), ஐசிஐசிஐ வங்கி (1.70%), டாடா மோட்டார்ஸ் (1.54%), மாருதி சுஸýகி (1.23%), எல்&டி (0.82%) அளவுக்குச் சரிவைச் சந்தித்தன.

ஜின்டால் ஸ்டீல் (1.97%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (1.60%), டிசிஎஸ் (1.30%), ஐடிசி (0.83%), டிஎல்எப் (0.64%) அளவுக்கு முன்னேற்றம் பெற்றன.

 பங்குச் சந்தையில் மொத்தம் 1,725 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,063 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,797.54 கோடி.


விளையாட்டுச் செய்தி மலர் :
* கிரிக்கெட்

"கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி
"கில்லி' சூறாவளி சதம் * பஞ்சாப் சூப்பர் வெற்றி
தர்மசாலா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் அதிரடி சதம் விளாச, பஞ்சாப் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி பரிதாபமாக வீழ்ந்தது.
ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் 63வது லீக் போட்டி, தர்மசாலாவில் நடந்தது. இதில் கில்கிறிஸ்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராத் கோஹ்லியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.
வல்தாட்டி ஏமாற்றம்:
பஞ்சாப் அணிக்கு வல்தாட்டி, கில்கிறிஸ்ட் இணைந்து துவக்கம் கொடுத்தனர். லாங்கிவெல்ட் பந்தில் ஒரு சிக்சர் அடித்த வல்தாட்டி 20 ரன்னுடன் திரும்பினார். இதன் பின் கில்கிறிஸ்ட்டுடன், ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.
"பெஸ்ட்' ஜோடி:
துவக்கத்தில் சற்று பொறுமை காத்த இவர்கள், போகப் போக பெங்களூரு பவுலர்களை ஒரு "கை' பார்க்கத்துவங்கினர். கில்கிறிஸ்ட், மார்ஷ் இருவரும் மாறி, மாறி பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். கெய்ல் பந்துகளை அடுத்தடுத்து சிக்சருக்கு அனுப்பிய "கில்லி', லாங்கிவெல்ட் ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் அடித்து மிரட்டினார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
6 பந்து 30 ரன்:
மறுமுனையில் மார்ஷ் தன் பங்கிற்கு ரன்மழை பொழிந்தார். வான் டர் வாத்தின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 ரன்கள் குவித்து, அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய கில்கிறிஸ்ட், ஐ.பி.எல்., தொடரில் 2வது சதம் கடந்தார். இவர் 55 பந்துகளில் 106 ரன்கள் (9 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.
20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்தது. மார்ஷ் 79 ரன்னுடன் (49 பந்து, 5 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
கெய்ல் "டக்':
எட்டமுடியாத இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கெய்ல் இம்முறை "டக்' அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். நான்காவது ஓவரில் பெங்களூரு அணிக்காக முதல் பவுண்டரி அடித்த கேப்டன் விராத் கோஹ்லி (11) நிலைக்கவில்லை. சவுரப் திவாரி (6), ஆசாத் பதான் (7) அடுத்தடுத்த ஓவர்களில் திரும்ப, 43 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி திணறியது.
இதன் பின் டிவிலியர்ஸ், முகமது கைப் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கைப் 11 ரன்னுக்கு அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது. டிவிலியர்ஸ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.
பின் வந்த "டெயிலெண்டர்கள்' அருண் கார்த்திக் (6), வான் டர் வாத் (4), அபிமன்யு மிதுன் (10), லாங்கிவெல்ட் (8) விரைவில் திரும்பினர். பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 17 ஓவரில் 121 ரன்னுக்கு சுருண்டு, 111 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது. அரவிந்த் (11) அவுட்டாகாமல் இருந்தார்.
பஞ்சாப் அணி சார்பில் சுழலில் அசத்திய பியுஸ் சாவ்லா 4, ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை கில்கிறிஸ்ட் தட்டிச் சென்றார். இதையடுத்து கடந்த 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த, பெங்களூரு அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

சூப்பர் ஜோடி
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை பதம்பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்-மார்ஷ் ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக கடந்த 2008ல், டெக்கான் அணிக்காக விளையாடிய கில்கிறிஸ்ட்-லட்சுமண் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
* தவிர இந்த ஜோடி, சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 2006ல், சாமர்சட் அணிக்காக விளையாடிய ஜஸ்டின் லாங்கர்-கேமிரான் ஒயிட் ஜோடி 186 ரன்கள் (எதிர்-குளோவ்சஸ்டர்ஷயர்) சேர்த்தது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்    :    குந்தளேஸ்வரர்
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    குந்தளாம்பிகை
தல விருட்சம்    :    வில்வம்
தீர்த்தம்    :    கணபதி நதி
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    திருக்கரக்காவல்
ஊர்    :    திருக்குரக்கா
மாவட்டம்    :    நாகப்பட்டினம்
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:


திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

ஆல நீழல் அமர்ந்த அழகனார் காலனை உதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞை களாலும் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே..

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.

 தல சிறப்பு:

இங்கு சிவன் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.

பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன், கோஷ்டத்தில் வனதுர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர்.

இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.

 தலபெருமை:


சிவ ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார்.

அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத் தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை, "சிவஆஞ்சநேயர்' என்றும், "சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.

இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.

சிறப்பம்சம்: அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளு கிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.

  தல வரலாறு:


சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார்.

இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.

சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார்.

ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் "குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

 திருவிழா:

சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

நல்லவனாக வாழ்வோம்! - குரு நானக்.
* உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது? சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.

வினாடி வினா :

வினா - அவசரக் கூட்டம் எப்போது பிறப்பிக்கப்படுகிறது ?

விடை - பாராளுமன்றம் கூடாத சமயங்களில்.


இதையும் படிங்க :

அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்

17-bael-tree300.jpg

இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது.

இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

அஸ்வமேதயாகம்

வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.

வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.

தங்கமலர் அர்ச்சனை

சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.

வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

வேடனுக்கு மோட்சம்

ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.

ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம்.

அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது.

கற்பக மூலிகையான வில்வம்

திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.

வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.

இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.

சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்பொழுது பறிக்கக்கூடாது

வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு.

இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.



நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.
  

1 comment:

அப்பாதுரை said...

தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி. சில வார விடுமுறைக்குப் பின் வந்து பார்த்தால் வழக்கம் போல் அருமையான தொகுப்பு. again, நன்றியும் பாராட்டும்.

நாலாம் வகுப்புக்கு பணம் கட்டுவது நியாயமே இல்லை. கொடுப்பவர் இருக்கும்வரை கேட்பவர் கேட்டுக் கொண்டுதானே இருப்பார்? கேட்டால் குறைவதில்லையே?

மன்மோகன் சிங்கைப் பாராட்ட காரணம் தேடியவரை அல்லவா பாராட்ட வேண்டும்?

பெருங்காயத்துக்கு இத்த்தனை சக்தியா? ஏனோ, எனக்கு அந்த வாடை அவ்வளவாகப் பிடிப்பதே இல்லை.

Post a Comment