Friday, May 27, 2011

இன்றைய செய்திகள் - மே, 27 , 2011

முக்கியச் செய்தி :

சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?

large_247124.jpg

சென்னை, மே 26: சமச்சீர் கல்விச் சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்தக் கல்வியாண்டில் பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என்றும் அண்மையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு கூறியதாவது:

சமச்சீர் கல்வி முறை பற்றி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் தலைமையிலான குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-2012-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே ரூ. 200 கோடி செலவு செய்துள்ள அரசு, புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க மேலும் சுமார் ரூ. 200 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாலு வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து தங்களுக்கான சிறந்த பாடத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது.

இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களுக்காகவே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

இதற்கிடையே, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?

தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?

முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?

இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உலகச் செய்தி மலர் :

* வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்

26-rajapaksha-fonseka300.jpg

கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா நீதிமன்ற விசாரணையின்போது கூறுகையில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக இறுதிக் கட்ட யுத்தத்தில் ராணுவத்தினருடன் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை.

மேலும் ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.

இந்த விவரங்களை நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன்.

போர் காலத்தில் என்னால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராணுவத் தளபதியே என்னை கைது செய்தார்.

முன்பு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போரில் பின்னடைவு ஏற்பட்டபோது, மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரி கோழைத்தனமாக கண்ணீர் விட்டு அழுதார். இதனால் படையின் கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினேன். ஆனால், 2010 ஜனவரி மாதம் அந்த அதிகாரி மூலமாகவே என்னை கைது செய்ய வைத்தனர்.

நாட்டுக்காக நான் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளேன். ஆனால், என்னை கோதபய நம்பவே இல்லை. என் மீது அவருக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது.

மேலும் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இலங்கை அரசு மதிப்பது தற்போது குறைந்துவிட்டது.

மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களையும் போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்க நான் முன் வைத்த திட்டத்தையும் அதிபர் ராஜபக்சேவும் கோதபயவும் ஏற்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் புலிகளுக்கு எதிராக தான் தலைமை தாங்கி நடத்திய தாக்குதல்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

* இரண்டாம் உலக போரில் நாய்களை பயன்படுத்திய ஹிட்லர்

ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன.

யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.

ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மன் ஷெஃபர்ட்

ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன.

இந்தப் பண்பின் காரணமாகவே அவை இன்றும் புகழ் பெற்று விளங்குகின்றன. நுண்ணறிவைப் பொறுத்த வரையில், பார்டர் கோலி மற்றும் பூடில் என்னும் நாய் வகைகளுக்கு அடுத்தாற்போல, மூன்றாவது இடத்தில் அவை இருப்பதாகக் கருதப்படுகின்றன. இவை எளிய பணிகளை ஐந்தே முறை மீண்டும் மீண்டும் செய்தவுடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்ததாகவும் மற்றும் 95 சத நிகழ்வுகளில் இவை முதலில் அளிக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றன என்றும் நாய்களின் நுண்ணறிவு என்னும் புத்தகத்தில், ஸ்டேன்லி கோரென் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றின் உடல் வலிமையுடன் கூடுதலாக, இந்தப் பண்பும் இணைகையில் இந்த இனத்து நாய்கள், காவல்துறை, பாதுகாவலன் மற்றும் தேட்டம் மற்றும் இடர்மீட்பு நாய் ஆகிய பணிகளுக்கு உகந்தவையாகின்றன; இவை பெரும் உருவம் கொண்ட பிற வளர்ப்பின நாய்களை விடவும் விரைவில் பணிகளைக் கற்றுக் கொண்டு, ஆணைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளன.

ஹிட்லரின் பேசும் நாய்ப்படை

சர்வாதிகாரி ஹிட்லரும் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் நிறுவியிருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர். அந்த நாய்கள் ஒரு நாள் அவற்றின் பாதங்களை தட்டி பேசின.

ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும். மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன


*  சர்வதேச கடற்கொள்ளையர் பிரச்னை: ஐக்கிய நாடுகள் சபை தலையீடு அவசியம்: மன்மோகன் சிங்

pm.jpg

அடிஸ் அபாபா, மே 26: கடல் வழி போக்குவரத்தில் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர் பிரச்னைக்கு முடிவு காண, ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

செங்கடல் மற்றும் சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மிகப் பெரும் சவாலாக உள்ளது. இது கடல்சார் வர்த்தகத்தையே பெரிதும் பாதிப்பதாக அமைந்துள்ளது.

சோமாலியாவில் ஸ்திரமான அரசு அமைய சர்வதேச சமுதாயம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு குந்தகம் ஏற்படாது பார்த்துக்கொள்ளும் அதே வேளையில்  கடற்கொள்ளையர் பிரச்னைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையின் குறுக்கீடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

எத்தியோப்பியாவின் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இக்கருத்தை தெரிவித்தார். எத்தியோபியாவுக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர் என்ற பெருமை மன்மோகனுக்கு கிடைத்திருக்கிறது.  அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மிகச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மன்மோகன் சிங்கை வரவேற்றனர். நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையில் மன்மோகன் சிங் கூறியதாவது:

கடற்கொள்ளையைத் தடுக்க இந்திய அரசு மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இப்போது கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதம் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செங்கடல் மற்றும் சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகள் ஒரு தேர்ந்த தொழிலைப் போல உள்ளது. இது கடல்சார் வர்த்தகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது முக்கிய இணைப்பு வழியாகும். இந்த பிரச்னை குறித்து இந்தியா தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறது. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் 11 சதவீதம் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானது. இந்நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் மீது 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 70 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. பிணையாள்களை மீட்பதற்கு மிக அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய சூழலில் அவரவர் தங்களுக்கு உரிய இலக்கை நிர்ணயித்து அதன்படி வளர்ச்சிக்கு வழி காண வேண்டியுள்ளது. சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் சட்டப்படி மேற்கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் கூறுகிறது. இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரமான சூழலும் உருவாக தனது பங்குக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார் மன்மோகன் சிங்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் உரையை எத்தியோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். அடுத்த சில வாரங்களில் புதிதாக உருவாக உள்ள தெற்கு சூடான், இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

எத்தியோப்பிய பிரதமர் மெலஸ் ùஸனாவி பேசியது: இந்தியாவும், எத்தியோப்பியாவும் பரஸ்பரம் பலன் அடையும் விஷயத்தில் நீண்ட கால நட்பு நாடுகளாக விளங்குகின்றன. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இரு நாடுகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைத்துள்ளன என்றார் எத்தியோப்பிய பிரதமர் ஸெனாவி.

* தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் இந்திய நிலைக்கு அமெரிக்கா ஆதரவு
வாஷிங்டன், மே 26: தேடப்படும் 50 தீவிரவாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தானிடம் அளிப்பது என இந்தியா முடிவு செய்ததை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக தெற்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் வியாழக்கிழமை கூறியதாவது:

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்; இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என 2 நிபந்தனைகளை இந்தியா விதித்திருந்தது. இவற்றை நிறைவேற்றினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்றும் இந்தியா வலியுறுத்தியிருந்தது.

இந்த நிபந்தனைகள் தொடர்பாக பாகிஸ்தான் முழுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும், சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இருந்தபோதிலும், பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதைப் போலவே இந்தியாவும் விரும்புவதால் நிபந்தனைகளை பாகிஸ்தான் பூர்த்தி செய்யாதபோதும், உள்துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தது.

இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக தேடப்படும் 50 தீவிரவாதிகளின் பட்டியலை இந்தப் பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானிடம் அளிக்க இந்தியா முடிவு செய்ததை அமெரிக்கா வரவேற்கிறது என்றார் அவர்.

* மும்பை தாக்குதலுக்கு முன்னதாக ஐ.எஸ்.ஐ. தான் பயிற்சி அளித்தது: ஹெட்லி வாக்குமூலம்

terrorist.jpg

சிகாகோ, மே 26: மும்பை தாக்குதலுக்கு முன் உளவு பார்ப்பது தொடர்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தனக்குப் பயிற்சி அளித்ததாக டேவிட் ஹெட்லி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் டேவிட் ஹெட்லி, தஹாவூர் ராணாவுக்கு எதிராக அமெரிக்காவில் சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.

டேவிட் ஹெட்லியிடம் 3-வது நாளாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஹெட்லி கூறியதாவது:

2006-ல் மேஜர் இக்பாலை சந்தித்தேன். ராணுவப் பயிற்சி, உளவு பார்ப்பது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா அளித்த பயிற்சிகள் சிறப்பானதாக இல்லை என அவரிடம் தெரிவித்தேன்.

இதையடுத்து லாகூரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 2 மாடிக் கட்டடம் ஒன்றில் வைத்து எனக்கு மேஜர் இக்பால் பல்வேறு விதமான பயிற்சிகள் அளித்தார்.

மேஜர் இக்பாலை பலமுறை சந்தித்துள்ள போதிலும் அவரது முழு பெயர் எனக்குத் தெரியாது. அவரை எனக்கு ராணுவ அதிகாரி ஒருவர்தான் அறிமுகப்படுத்திவைத்தார்.

அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகத் தெரிந்தபோதிலும், அவரை ராணுவ சீருடையில் பார்த்ததில்லை.

மேஜர் இக்பால் என்னைப் பார்க்க வந்தபோதெல்லாம் ராணுவ ஜீப்பில்தான் வந்தார். அவருடன் வந்த கீழ்நிலை அதிகாரிகள் ராணுவப் பதவி பொறித்த அடையாளச் சின்னத்துடன் இருந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு விருது: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உயரிய ராணுவ விருதான நிஷான் இ ஹைதர் விருது அளிக்கப்பட வேண்டும் என ஹெட்லி தெரிவித்துள்ளார்.

அணுமின் நிலையங்களை வேவு பார்த்த ஹெட்லி: மேஜர் இக்பால் கூறியபடி இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களை 2008 ஏப்ரலில் ஹெட்லி வேவு பார்த்துள்ளார்.

அதே சமயத்தில் மும்பையிலும் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள், முறை குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார்.

தாக்குதல் நடத்துபவர்கள் ஹிந்துக்கள் போல தெரியும் வேண்டும் என்பதற்காக 15 கைகாப்புகளை (பிரேஸ்லெட்) ஹெட்லி வாங்கியுள்ளார்.

தடயங்களை விட்டுச் சென்ற தீவிரவாதிகள்: மும்பை தாக்குதலுக்கு மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டபோதும் சில தடயங்களை தீவிரவாதிகள் விட்டுச் சென்றது குறித்தும் சாஜித் மிர் என்பவருடன் ஹெட்லி விவாதித்துள்ளார்.

தாங்கள் வந்த படகை மூழ்கடிக்க வேண்டும் என கூறியிருந்தபோதிலும், அதை தீவிரவாதிகள் செய்யவில்லை. தீவிரவாதிகளில் ஒருவர் செயற்கைக்கோள் தொலைபேசியை படகில் விட்டுச் சென்றார். இது இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு முக்கிய ஆதாரமாக மாறிவிட்டது என சாஜித்திடம் ஹெட்லி கூறியுள்ளார்.

2002 பிப்ரவரி முதல் 2003 டிசம்பர் வரை 5 முறை லஷ்கர் இ தொய்பா முகாம்களில் ஹெட்லி பயிற்சி பெற்றுள்ளார். அங்கு அவருக்கு அமைப்பின் கொள்கை, ஆயுதங்கள், கையெறி குண்டுகளை கையாள்வது, தற்காப்புக் கலைகள், தப்பிக்கும் வழிமுறைகள், உளவு பார்ப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி முடிந்தவுடன் காஷ்மீரில் நாசவேலைகளை நிகழ்த்தவே ஹெட்லி விரும்பியுள்ளார். ஆனால், அவரை மும்பை தாக்குதலுக்குப் பயன்படுத்த லஷ்கர் முடிவு செய்திருந்தது.

சிகாகோ நீதிமன்றத்தில் அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தீவிரவாதச் சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் யாரும் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் கூறிவந்தது. இந் நிலையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு உள்ளது தொடர்பான தகவல்கள் தினசரி வெளியாகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

* பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட படைகள் குறைக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், மே 26: பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப்படைகள் குறைக்கப்படும் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் கோல்டேவ் லபான் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: பாகிஸ்தானில் பதற்றமான சில பகுதிகளில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோரை இம்மாத துவக்கத்தில் இருந்து நிறுத்தியுள்ளோம். இப்போது அமெரிக்கப் படையை வாபஸ் பெற வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தான் விரும்பும்பட்சத்தில் அந்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும். தற்போது அப்பணி துவங்கிவிட்டது என்றார்.

ஆனால் எவ்வளவு படைகள் வாபஸ் பெறப்படும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் அறிவிக்கவில்லை. பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படை சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்ததாகும். அல்காய்தா, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட பாகிஸ்தான் நாட்டின் துணை ராணுவப் படைக்கு பயிற்சிஅளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் அமெரிக்கப்படை அனுப்பப்பட்டிருந்தது.

அல்காய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் அமெரிக்கப்படையால் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படையை வாபஸ் பெற வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கைவிடுத்திருந்தது.


தேசியச் செய்தி மலர் :

* 2013-க்குள் 5 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி: கபில் சிபல்

sibal.jpg

புது தில்லி, மே 26: இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கிராமங்களை இணையதள வசதி மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். தேசிய கண்ணாடியிழை ஒருங்கிணைப்பு வசதி (என்ஓஎப்என்) மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த இலக்கை எட்டுவதற்காக பிரதமரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் சாம் பித்ரோடா மற்றும் இணைத் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

என்ஓஎப்என் திட்டத்தின் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள இணைப்பு ஏற்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த ஒரு பரிந்துரையில் 500 பேருக்கு மேல் வாழும் கிராமங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தித் தரலாம் என குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் 3.75 லட்சம் கிராமங்களுக்கு இத்தகைய வசதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் 5 லட்சம் கிராமங்களை இணையதளம் மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான செலவு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் யுஎ்ஓ நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎ்என்எல்) தேசிய பிராட்பேண்ட் (இணையதள இணைப்பு) திட்டத்தை செயல்படுத்தும் என்றும் சிபல் குறிப்பிட்டார்.

இந்த இணையதள சேவைக்கான கேபிளை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். வீட்டிற்கே கண்ணாடியிழை சேவை என்பது தொடர்பான மாநாட்டை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், "இத்தகைய கண்ணாடியிழை ஒருங்கிணைப்பு வசதியை வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது கண்ணாடியிழை கேபிள் இணைப்பு சில நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மட்டுமே உள்ளது.

2010-ம் ஆண்டு இறுதியில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 90 லட்சமாக இருந்தது. இதில் கிராமப் பகுதியில் உள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் 2004-ம் ஆண்டு வகுக்கப்பட்ட இணையதள கொள்கையின்படி 2010-ம் ஆண்டில் இணையதள வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என வகுக்கப்பட்டதாகவும், அது எட்டப்படவேயில்லை' என்றும் கபில் சிபல் கூறினார்.

* அடுத்த ஐஎம்எப் தலைவர்: ஆதரவு திரட்டுகிறது இந்தியா: பிரணாப் முகர்ஜி

pranab.jpg

புது தில்லி, மே 26: சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) அடுத்த மேலாண் இயக்குநர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை இதைத் தெரிவித்தார். இதுவரை மேலாண் இயக்குநராக இருந்த டொமினிக் ்டிரா்-கான் பாலியல் புகாரில் சிக்கியதால் பதவியிழக்க நேரிட்டது.

இதையடுத்து இப் பதவிக்கு இந்தியாவின் மான்டேக் சிங் அலுவாலியாவும் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, இப் பதவிக்கு பிரான்் நிதியமைச்சர் கிறி்டின் லகார்டே போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் லகார்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வளர்ந்து வரும் நாடுகளின் நிதியமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், நமது நிலையை வலுப்படுத்திக் கொண்டால் தகுந்த நேரத்தில் தகுந்த முடிவு எடுக்க முடியும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

ஐஎம்எப்-பின் அடுத்த மேலாண் இயக்குநர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கருதுவதற்கு இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில், ஐஎம்எப்-பின் மேலாண் இயக்குநராக ஐரோப்பியரும், உலக வங்கியின் தலைவராக அமெரிக்கருமே இருந்துள்ளனர். இந்த அமைப்புகளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் உள்ளதால் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

* நில விவகாரம்: கிராம சபைக்கு அதிகாரம்

landact.jpg

ஆமதாபாத், மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.

இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை குஜராத்திலிருந்துதான் துவக்க வேண்டியிருக்கும் என கருதுகிறேன் என்றார் ஹஸாரே.

இந்தக் கலந்துரையாடல்களில் சமூக நல ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகா சாராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

* ஜூனில் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
புது தில்லி, மே 26: பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய நிலையில் இப்போது டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற உள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழுவினர் இதற்கான ஒப்புதலை அளிப்பார்கள் என்று தெரிகிறது. இக்குழுவினரது கூட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை எந்த அளவுக்கு உயர்த்தலாம் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்த இக்குழு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

கடந்த மே 11-ம் தேதி இக்குழுவினர் கூடுவதாக இருந்தது. ஆனால் மே 13-ம் தேதி ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாக இருந்ததால் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு தொடரக்கூடாது என்பதற்காக விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* வட இந்தியாவில் மழை உ.பி.யில் சூறாவளி 10 பேர் சாவு
புது தில்லி, மே 26: வட இந்தியாவின் பல இடங்களில் வியாழக்கிழமையன்று மழை பெய்தது. உத்தரப் பிரதேசத்தில் வீசிய சூறாவளியால் 10 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் தில்லியிலும் மதிய நேரத்தில் லேசாக மழை பெய்தது. வட மாநிலங்களில் பெரும்பாலும் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது.

பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் புதன்கிழமை இரவு முதலே மழை பெய்தது.

உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்டத்தில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பெரும் தூசுப்படலம் ஏற்பட்டது. அப்போது மரங்கள் சாய்ந்தன, சில வீடுகள் இடிந்து விழுந்தன.

இதில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

* சுற்றுச்சூழலுக்கு மாசு: 639 தொழிற்கூடங்களை மூட ஹரியாணா அரசு உத்தரவு
சண்டீகர், மே 26: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால், கடந்த ஓராண்டில் 639 தொழிற்கூடங்களை மூட ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் கேப்டன் அஜய் சிங் யாதவ் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 151 தொழிற்கூடங்களுக்கு எதிராக பரிதாபாத், குருúக்ஷத்திரத்தில் சிறப்பு சுற்றுச்சூழல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

9,239 தொழிற்கூடங்களில் மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் உள்ள மாதா மானசா தேவி கோவில், குர்காவோனில் உள்ள மாதா ஷீதலா தேவி கோவில், புனித நகரங்களான குருúக்ஷத்திரம், தானே்வர், மோர்னி மலைப் பிரதேசம், தேசிய பூங்காக்கள், வன சரணாலயங்களில் பிளா்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாசு ஏற்படுத்தும் தொழிற்கூடங்கள் மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாமல் இயங்க அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.


மாநிலச் செய்தி மலர் :

* இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

சென்னை, மே 26: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ம் தேதி வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. பள்ளிகளின் மூலம் 8.5 லட்சம் பேரும், மொத்தமாக 9.5 லட்சம் மாணவ, மாணவியரும் தேர்வை எழுதினர்.

மாணவ, மாணவியர் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணையதளங்கள், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

"தினமணி'யின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ழ்ங்ள்ன்ப்ற்ள்.க்ண்ய்
ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை வெளியிடும் அரசு இணையதளங்கள்:

 www.pallikalvi.in

www.tnresults.nic.in

 www.dge1.tn.nic.in

 www.dge2.tn.nic.in

 www.dge3.tn.nic.in

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவைப் பெறுவதற்கு tnpubliclibraries.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மதிப்பெண் சான்றிதழ்: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஜூன் 20-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பங்கள் மே 30 முதல் ஜூன் 3 வரை வழங்கப்பட உள்ளன.

சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 8 வரை நடைபெற உள்ளன.

மறுகூட்டல்: மறுகூட்டலுக்கும் மே 30 முதல் ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

சி.டி. இல்லை: வழக்கமாக, தேர்வு முடிவுகள் அடங்கிய சி.டி.க்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு முடிவு வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அனுப்பப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்வு முடிவு சி.டி.க்கள் அனுப்பப்படவில்லை. பள்ளிகளில் ஒட்டுவதற்கான மதிப்பெண் பட்டியல் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

* பி.இ. கலந்தாய்வு: 4 இடங்களில் நடத்த திட்டம்: தமிழக அரசு
சென்னை, மே 26: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னை உள்பட 4 இடங்களில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

கலந்தாய்வு நடைமுறைகளை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 484 பொறியியல் கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கை, இந்த ஒரு மையத்தின் மூலமே நடைபெற்று வருகிறது.

இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்தாய்வில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக, பெற்றோர் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள், சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால் பொருள் செலவும் ஏற்படுவதாக பெற்றோர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிரமங்களை நீக்கும் வகையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மேலும் சில இடங்களில் நடத்த வேண்டுமென பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வை பல இடங்களில் நடத்துவது என்பது, தேவையற்ற கால விரயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்துவதுதான் சிறந்தது என்று கூறி, பெற்றோரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கலந்தாய்வு நடைமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அல்லாமல், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய 10 நாள்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. எனவே சென்னையில் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளில் கலந்தாய்வை நடத்துவதே சிறந்தது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் உயர் அதிகாரிகள் கூறியது:

பொறியியல் கலந்தாய்வுக்கு, குறைந்த நாள்களே உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 3. அதன் பிறகு ஒரு சில நாள்களில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு விடும். தொடர்ந்து ரேங்க் பட்டியல் தயாரிப்பது என அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜூன் மூன்றாம் வாரம் முதல் கலந்தாய்வும் தொடங்கி விடும்.மட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களில் நடத்துவது என்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். தேவையற்ற குழப்பமும் ஏற்படும் என்றனர்.

6 ஆண்டுகளுக்கு முன்பு... கடந்த 2004- 05 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் அல்லாமல் 4 மையங்களில் நடத்தப்பட்டன.

ஆனால் பல்வேறு காரணங்களால் தேவையற்ற தாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன. எந்தக் கல்லூரியில் இடம் உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒற்றைச் சாளர முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டு ஒரே மையமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது கலந்தாய்வு செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதால் சில நொடிகளிலேயே கல்லூரிகளில் இடம் உள்ளதை அறிந்து கொள்ள முடியும். எனவே முன்பு உள்ளது போல் 4 மையங்களில் நடத்துவதால் காலவிரயம் ஏற்படாது என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

* எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய வசதி

medical.jpg

சென்னை, மே 26: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்கள், தங்களது விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சென்று விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

விண்ணப்பத்தைப் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி, முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இணையதளத்தில் வசதி: பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (மே 25) முதல் வழங்கப்பட்டு வருவதால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற்ற மாணவர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வருகின்றனர். சில மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போட்டு வருகின்றனர்.

இதே போன்று டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேரவும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதை தமிழக அரசின் இணையதளம்ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு பதிவு எண் ஆகிய ஏதாவது ஒன்றை "டைப்' செய்யும் நிலையில் விண்ணப்பம் சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.

* பெரியாறு அணையில் ஆய்வுப் பணி தொடங்கியது
கம்பம், மே 26: புது தில்லி சி.எஸ்.எம்.ஆர்.எஸ் வழிகாட்டுதலின்படி நவீன தானியங்கி (ஆர்.ஓ.வி) இயந்திரத்தின் மூலம் பெரியாறு அணையில் ஆய்வுப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உச்ச நீதிமன்றத்தின் சார்பில், ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், 2010 டிசம்பர் 21-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அணையின் தரைப் பகுதியில், ஆர்.ஓ.வி. இயந்திரத்தின் மூலம் படம் எடுக்க கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆர்.ஓ.வி. இயந்திரத்துக்கு போதிய மின் அழுத்தம் கிடைக்காததால், படம் எடுக்க இயலாமல் ஆய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், வியாழக்கிழமை புது தில்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருள்களின் ஆராய்ச்சி நிலையத்தின் (சி.எஸ்.எம்.ஆர்.எஸ்.) ஆராய்ச்சியாளர்கள் அலெக்ஸ் வர்கீஸ், பீரேந்திர பிரதாப், சிவசேரன் உள்ளிட்ட குழுவினர், ஆர்.ஓ.வி. இயந்திரத்தைத் தயாரித்த பிரான்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் சுசில்குமார், ராகவேந்திர பாண்டே ஆகியோர் உதவியுடன் 1,200 அடி நீளமுள்ள மெயின் அணையில் 136 அடி உயரத்தில், ஒவ்வொரு 100 அடியையும் அடையாளமிட்டு ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.

நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் நவீன காமிராக்களைத் தண்ணீருக்குள் கொண்டு சென்று அணையில் விரிசல், சேதம், நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய படம் எடுத்தனர்.

நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் நவீன காமிராக்களைத் தண்ணீருக்குள் கொண்டு சென்று அணையில் விரிசல், சேதம், நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய படம் எடுத்தனர்.

இந்த ஆய்வின்போது, தமிழகத்தின் சார்பில், காவிரித் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் ராமச்சந்திரன், அணையின் செயற்பொறியாளர் ராஜேஷ், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜகோபால், உதவிப் பொறியாளர்கள் நாகஜோதி, மல்லிகா உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.

கேரளத்தின் சார்பில், நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், கேரள நீர்ப்பாசனப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் கொச்சப்பன் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர். தமிழக-கேரளப் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆய்வு குறித்து தமிழக அதிகாரிகள் தினமணி நிருபரிடம் கூறியதாவது:÷உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் உத்தரவுப்படி புது தில்லி சி.எஸ்.எம்.ஆர்.எஸ். நிபுணர்கள் அடங்கிய குழுவினரின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை குறித்தும், அதன் உறுதித் தன்மை குறித்தும் ஏற்கெனவே பலமுறை ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தற்போது நடத்தப்படும் தொழில்நுட்ப ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்றனர்.


ஆரோக்கியச் செய்தி மலர் :
பட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா?

அழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம்.

கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூந்தல் பளபளப்பிற்கு

தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று விற்பனை செய்யப்படுகின்றன. இவை தலைமுடியின் ஆயுளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுத்தமான நல்லெண்ணெய்யும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.

தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.

சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இளநரை நீங்கி முடி கருப்பாக

நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்

பேன், பொடுகு தொல்லை நீங்க

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். இதனால் பேன் தொல்லை குறையும்.

துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.

50 கிராம் உப்பு கலக்காத வேப்பம்பூவுடன் 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

தலை முடி செழித்து வளர

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். பின்னர் முடி செழித்து வளரும்.

முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
வர்த்தகச் செய்தி மலர் :
* ஏறுமுகத்தில் பங்குச் சந்தை

மும்பை, மே 26: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 197 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 18,044 புள்ளிகளாக உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்ததால் குறியீட்டெண் உயர்ந்தது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 63 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,412 புள்ளிகளானது. உலோகம், வங்கி, கட்டுமானத்துறை பங்குகள் விலை உயர்ந்ததால் குறியீட்டெண் கணிசமாக உயர்ந்தது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் உயர்ந்ததால் அந்நிறுவனப் பங்கு விலை 1.98 சதவீதம் உயர்ந்து ரூ. 572.60-க்கு விற்பனையானது. கோல் இந்தியா நிறுவனப் பங்கு விலை 3.22 சதவீதம் உயர்ந்து ரூ. 389.60-க்கும் விற்பனையானது.

உணவுப் பணவீக்கம் மே 14-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயர்ந்த போதிலும் அது பங்குச் சந்தையை பாதிக்கவில்லை.

முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை 2.92 சதவீதம் உயர்ந்து ரூ. 933.25-க்கு விற்பனையானது.

ஓஎன்ஜிசி நிறுவனப் பங்கு விலை 4.44 சதவீதம் உயர்ந்தது. இந்நிறுவனத்தின் மானியச் சுமையைக் குறைக்க முடிவு செய்து டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதால் இந் நிறுவனப்பங்கு விலை உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தையில் சீனாவை தவிர பிற நாடுகளின் பங்குச் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 0.16 சதவீதம் முதல் 2.75 சதவீதம் வரை உயர்ந்தது. சீன பங்குச் சந்தை மட்டும் 0.24 சதவீதம் சரிந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது.

ஹீரோ ஹோண்டா பங்கு விலை 3.97 சதவீதமும், ஸ்டெர்லைட் பங்கு விலை 3.45 சதவீதமும், டிஎல்எஃப் பங்கு விலை 2.95 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.45 சதவீதமும், சிப்லா 2.38 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனி லீவர் 2.18 சதவீதமும், எல்&டி 2.05 சதவீதமும், என்டிபிசி 1.76%, ஐசிஐசிஐ வங்கி பங்கு 1.55 சதவீதமும் உயர்ந்தன.

மொத்தம் 1,496 நிறுவனப் பங்கு விலைகள் ஏற்றம் பெற்றன. 1,275 நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 2,679.76 கோடி. புதன்கிழமை வர்த்தக அளவு ரூ. 2,885.74 கோடியாகும்

* பவுனுக்கு ரூ. 56 குறைந்தது

சென்னை, மே 26: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 56 குறைந்து ரூ. 16,912-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2114.

புதன்கிழமை விலை: ஒரு பவுன்: ரூ. 16,968. ஒரு கிராம்: ரூ.2121.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்
சென்னை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்றில் இன்று மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும் என்பதால் ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.

நான்காவது ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய "பிளே ஆப்' சுற்றின் கடைசி "நாக்-அவுட்' போட்டியில் சச்சினின் மும்பை அணியும், வெட்டோரியின் பெங்களூரு அணியும் சந்திக்கின்றன.
மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக உள்ளது. துவக்க வீரர் பிரச்னைக்கு பிளிஜார்டு முடிவு கட்டியுள்ளார். கோல்கட்டாவுக்கு எதிராக சச்சினுடன் இணைந்து அசத்திய இவர் அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார்.
பிராங்க்ளின் அபாரம்

 "மிடில் ஆர்டரில்' அம்பதி ராயுடு, ரோகித் சர்மா திடீரென சறுக்கலை சந்தித்து வருவது பலவீனமாகியுள்ளது. தவிர, போலார்டு இன்னும் "பார்முக்கு' திரும்பாதது அதிர்ச்சி தான். பிராங்க்ளினின் சமீபத்திய நங்கூரம் போன்ற உறுதியான ஆட்டம் தான், அணியை காப்பாற்றி வருகிறது. இன்றும் இவர் அசத்தும் பட்சத்தில், மும்பை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு தகுதி பெறலாம்.
முனாப் அபாரம்:

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் மலிங்கா, முனாப் படேல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். சுழலில் ஹர்பஜன் சிங், குல்கர்னி போன்றவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு அசத்த காத்திருக்கின்றனர். இன்று எப்படியாவது கெய்லை துவக்கத்திலேயே பெவிலியன் அனுப்பினால், பெங்களூரு அணியின் ரன்குவிப்பை தடுக்கலாம்.

பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங், கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் அபார வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள கெய்ல் (519), இன்று ஏமாற்ற மாட்டார் என நம்பலாம். தவிர, சென்னைக்கு எதிரான போட்டியில் கெய்ல் கைவிட்ட பின்பும், 175 ரன்கள் குவித்தது, பின் வரிசை வீரர்களின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது.
இதில் விராத் கோஹ்லி (514), பாமர்ஸ்பச், சவுரப் திவாரி, டிவிலியர்ஸ் போன்றவர்கள் முக்கியமானவர்.
ஜாகிர் நம்பிக்கை:

 ஜாகிர் கானின எழுச்சி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இவரது சகா அரவிந்த் தன்பங்கிற்கு அசத்தலை தொடர்கிறார். சுழலில் அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் போன்றவர்கள் மீண்டும் நம்பிக்கை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கடந்த போட்டியில் பெங்களூரு பவுலர்கள் கடைசி 4 ஓவர்களில் மட்டும், 58 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதை இன்று திருத்திக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
-------
பழி தீர்க்குமா
* ஐ.பி.எல்., தொடரில் மும்பை, பெங்களூரு அணிகள், இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 5ல் வென்றுள்ளது. மும்பை 3ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

* கடந்த 2010 ஐ.பி.எல்., அரையிறுதியில் மும்பை அணி, பெங்களூருவை 35 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறி இருந்தது. இதனால் இன்று மும்பை அணியை வென்று, பெங்களூரு பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

T_500_229.jpg

* அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோவில்

    மூலவர்    :     நிலாத்துண்டப்பெருமாள்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     நேர்உருவில்லாவல்லி
      தல விருட்சம்    :     -
      தீர்த்தம்    :     சந்திர புஷ்கரணி
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     நிலாத்திங்கள் துண்டத்தான்
      ஊர்    :     நிலாதிங்கள்துண்டம்
      மாவட்டம்    :     காஞ்சிபுரம்
      மாநிலம்    :     தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே.

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:

சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலத்தில் பெருமாள் அருள்பாலிப்பது சிறப்பு

 தலபெருமை:

மகாலட்சுமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் இதயத்தில் குடிகொண்டிருப்பவள் மகாலட்சுமி. இவள் விஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருவாள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை

சகோதர தலம்: சிவனின் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவத்திற்கு தன் தங்கை பார்வதிதேவி விமோசனம் பெற்ற இத்தலத்தில் அவளது அண்ணன் மகாவிஷ்ணுவும் நோய் நீங்கப்பெற்றுள்ளார். பார்வதிக்கு கங்கையையும், மகாவிஷ்ணுவிற்கு சந்திரனையும் பயன்படுத்தி சிவன் அருள் செய்த தலம். சகோதர சகோதரிகள் நிலாத்துண்ட பெருமாளையும், ஏகாம்பரேஸ்வரரையும் வணங்கினால் அவர்களிடையே ஒற்றுமை கூடும் என நம்புகிறார்கள்.

 கோயிலின் முதல் பிரகாரத்தில் சிறிய சன்னதியில் புருஷசூக்த விமானத்தின் கீழ், பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கென தனியே பிரகார தெய்வங்கள் இல்லை.நோய் நீங்குவதற்காக தனியே வந்தவர் என்பதால் தாயார் சன்னதியும் கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே "நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது.

சிவனை வணங்கி குணமாகியவர் என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர். பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இத்தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ""நிலாத்திங்கள் துண்டத்தாய்'' என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். "சந்திர சூடப் பெருமாள்' என்ற பெயரும் இவருக்கு உண்டு.

  தல வரலாறு:

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளை செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற வழி கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினார். சிவனிடம் வேண்டினால் உஷ்ணம் குறைந்து நிறம் மாறும் என ஆலோசனை கூறினார் பிரம்மா.அதன்படி மகாவிஷ்ணு, சிவனை எண்ணி தவமிருந்தார். விஷ்ணுவுக்கு காட்சி தந்த சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டது, இங்கே வடகிழக்கு பாகத்தில் (ஈசானிய மூலை) பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால் வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. சந்திரனின் ஒளியால் இயல்பு நிறம் பெற்றதால் இத்தலத்து பெருமாளை "நிலாத்திங்கள் துண்ட பெருமாள்' என்று அழைக்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.

 திருவிழா:

சந்திரனின் ஒளி பெற்றவர் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

அனைவரிடமும் அன்பாயிருங்கள் -  திருக்குரான்

நபிகள் நாயகம்(ஸல்) மொழிந்தார்கள்:
* ""படைப்புகள் அனைத்தும்
இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவர்''
(நூல்: பைஹகி)

* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால்
விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.
(நூல்: திர்மிதி)

* நபிகள் நாயகம்(ஸல்): நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறை நம்பிக்கையாளர்களாக முடியாது.
* நபித்தோழர்கள்: நாங்கள் ஒவ்வொருவரும் அன்பு செலுத்துபவர்களாகவே உள்ளோம்.

* நபிகள் நாயகம்(ஸல்): அன்பு என்பது உங்கள்
உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.
(நூல்: பத்ஹுல் பாரி)

வினாடி வினா :

வினா - இந்தியக் குடியரசின் உண்மை அதிகாரங்கள் யாருடைய கையில் உள்ளன ?

விடை - அமைச்சர்கள் குழுவிடம்.

இதையும் படிங்க :

கருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப்பு

26-female-infanticide300.jpg


பெண்களை தெய்வமாக வணக்கும் இந்தியாவில்தான் பெண் குழந்தைகைளை பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். ஆண் குழந்தைகளை மட்டுமே பலரும் விரும்புவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் தெரியவந்துள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் அதிக வேறுபாடு எழுந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம்

இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே முதலில் உருவாகும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்து விடுகின்றனர்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி வந்தபின்னர் படித்த பெண்கள் பலரும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு பெண் என்றால் தயங்காமல் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். இப்படி கருவிலேயே கொல்லப்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 12 மில்லியனை எட்டியுள்ளதாக கனடா நாட்டின் டொராண்டாவில் உள்ள உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கருவில் முதலில் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையை எதுவும் செய்யாமல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அதுவே பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதற்கு தயங்குவதில்லை.

இந்தியார்களின் சமூக வாழ்க்கையில் ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்ல காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனப்பான்மை படித்த மற்றும் பணக்காரர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.

ஒரு குழந்தை பாலிசி

அண்டை நாடான சீனாவில் ஒரு குழந்தை கொள்கை கடைபிடிக்கப்படுவதால் முதலில் உருவாகும் பெண் குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்கள் ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் ஸ்கேன் செய்து பார்த்து பெண்குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆண், பெண் பாலினத்திற்கு இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.

1990 முதல் 2005 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது 1990 ஆம் ஆண்டில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகளே பிறந்துள்ளன என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.

1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான கடைசி 30 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 1.2 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதே இந்த விகிதாச்சார மாறுபாட்டிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 : 1 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து விடும். பெண் குழந்தைகளை திருமணம் செய்வதற்காக ஆண்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும்.

கேள்விக்குறியான ஸ்கேன் தடைச்சட்டம்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை ஸ்கேன் பரிசோதனை செய்து பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடை செய்வதற்காக இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்வதை எதன் மூலமும் தடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் வருங்கால தலைமுறை ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடி வேற்றுகிரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்


* "நிச்சயம் படிப்பேன்!'

large_246997.jpg

செங்கல் சூளையில் வேலை பார்க்கும், நர்சிங் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள இருளாயி: பழநிக்கு அருகில் உள்ள, கோதைமங்கலம் எனும் சிறிய கிராமம் தான் சொந்த ஊர். என் பெற்றோர், கூலி வேலைக்கு, பழநியிலிருந்து, தாராபுரம் வரை செல்பவர்கள். நான் அதிகாலையே எழுந்தால் தான், சமையலை முடிக்க முடியும். அவர்களுக்கான மதிய உணவை தயார் செய்து கொடுக்கும் பொறுப்பு, என்னுடையது. நான்கு மணிக்குள் வேலைகளை முடித்துவிட்டு, 6 மணி வரை உறக்கம். அதற்கு பின், தம்பி தங்கையை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். அது முடிந்த பின், அவர்களுக்கான உணவை தயாரிக்க வேண்டும். வீட்டில் காஸ் அடுப்பெல்லாம் கிடையாது; விறகு அடுப்பு தான். ஊதாங்குழலால் ஊதி, ஊதி சமைக்க வேண்டும். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து, மீண்டும் சமையல், துணி துவைத்தல் என்று, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, தம்பிக்கு வீட்டுப்பாடம் கற்றுக் கொடுத்து முடிக்க, இரவு 10 மணியாகிவிடும். அதற்கு மேல், தான் படிக்க முடியும். வீட்டிலிருக்கும் ஒரே ஒரு குண்டு பல்பு, 10 மணிக்கு மேல் எரிந்தால், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால், தெருவிளக்கில் அமர்ந்து, இரண்டு மணி வரை படிப்பேன். இத்தனை வறுமைக்கு நடுவில் படித்து தான், நர்சிங் பாடத்தில், 200க்கு, 181 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்தேன். இனி இதற்கு மேல் படிக்க முடியாது; ஏதாவது வேலை தேட வேண்டும். அதனால், நல்ல வேலை கிடைக்கும் வரை, வீட்டிற்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தேன்; தினக் கூலி தான். ஆனால், நிச்சயம் மேலே படிப்பேன். இப்ப இல்லாட்டியும், நானே சம்பாதித்து படிப்பேன். நர்சிங் படிக்க வேண்டும் என்பது என் லட்சியம். டிப்ளமோ நர்சிங் படிச்சா கூட போதும். ஏன்னா, நான் சீக்கிரம் படித்தால் தான், என் தம்பியை படிக்க வைக்க முடியும்.


நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்

No comments:

Post a Comment