Sunday, May 15, 2011

இன்றைய செய்திகள் மே, 15, 2011.

முக்கியச் செய்தி :

* நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா-திங்கள்கிழமை பதவியேற்பு?

14-jayalalithaa300-1.jpg

சென்னை: நாளை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்திக்கவுள்ளதாகவும், அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 16ம் தேதி, திங்கள்கிழமை, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 118 இடங்களைவிட மிக அதிகமான தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வருமாறு அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டது. அதன்படி மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினர். பலர் நள்ளிரவுக்கு மேல் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.

இன்று அவர்கள் அனைவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து இன்று பிற்பகலில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இக் கூட்டம் இன்று நடக்கவில்லை.

இக் கூட்டம் நாளை தான் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக (முதல்வராக) எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடு்ப்பர். அதைத் தொடர்ந்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார். இதையடுத்து திங்கள்கிழமை அவர் முதல்வராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.

பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா:

ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா பதவியேற்புடன் அமைச்சர்கள் குழுவும் பதவியேற்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே நாளை ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாகப் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.

நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு:

அதிமுக அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை ஆளுநரை சந்திக்கிறார்:

இந் நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அதிமுக செயல்படும். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் நன்மதிப்பை பெறுவோம். அதிமுகவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றி திமுக மீதான எதிர்ப்பு அலைகளால் கிடைத்தது அல்ல, தமிழக மக்கள் அதிமுக மீது கொண்டுள்ள நம்பிக்கை, மதிப்பின் பிரதிபலிப்பு.

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளேன். அதற்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். ஆளுநரைச் சந்தித்த பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும் தேதி, இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.

அதிமுக தலைமையகத்தில் ஜெ-எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை:

இந் நிலையில் தேர்தலில் வென்ற பின்னர் இன்று முதல் முறையாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அவரை வழியெங்கும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு நின்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு மத்தியில் நீந்தி வந்த ஜெயலலிதாவின் கார் தலைமைக் கழக அலுவலகத்திற்குள் நுழைந்தது.

பின்னர் காரிலிருந்து இறங்கிய ஜெயலலிதா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பிரமாண்ட மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

இதையடுத்து அண்ணா சாலைக்குச் சென்ற ஜெயலலிதா, அங்கு ஸ்பென்சர் பிளாசா அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதை முடித்துக் கொண்ட பின்னர் ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.


உலகச் செய்தி மலர் :

* அத்துமீறிப் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம்: அமெரிக்காவுக்கே பாகிஸ்தான் மிரட்டல்.

இஸ்லாமாபாத், மே 14: தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.

 11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

 "பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.

 சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.

 "அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்?

 பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.

 அபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

 பாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

 அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.

 பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

 இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

* விடுதலைப் புலிகள் தப்ப நார்வே உதவியதா?
கொழும்பு, மே 14: இலங்கையில் இருந்து விடுதலைப் புலிகள் சிலர் தப்பித்துச் செல்ல கொழும்பில் உள்ள நார்வேத் தூதரகம் உதவியதாக நார்வே நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 இலங்கையில் ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்ததால் நாட்டைவிட்டு விடுதலைப் புலிகள் சிலர் தப்பித்துச் செல்ல கொழும்பில் உள்ள நார்வேத் தூதரக அதிகாரிகள் உதவினர். 12 புலிகள் தப்பித்துச் செல்ல உதவியுள்ளனர். அவர்களுக்கு விமான டிக்கெட், விசா வாங்கிக் கொடுத்தது முதல் அனைத்து உதவிகளையும் நார்வேத் தூதரக அதிகாரிகள் செய்தனர் என்று நார்வேயின் ஆப்டென்போஸ்டன் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

 இந்தத் தகவல் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை அறியுமாறு நார்வேயில் உள்ள தங்களது நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 இதனிடையே, விடுதலைப் புலிகள் தப்பிக்க உதவியது உண்மைதானா என்று நார்வே நாட்டின் வெளியுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்கைமிடம் கேட்டதற்கு, எங்கெல்லாம் மக்கள் இக்கட்டான சூழலில் சிக்குகிறார்களா அவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது நார்வே. மனிதாபிமான உதவிகளை செய்வதை தனது கடமையாகவும் நினைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் நடந்த போது இருதரப்பையும் சமாதனப்படுத்த நார்வே அரசு நடவடிக்கை எடுத்தது. நார்வே எடுத்த முயற்சியின் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே 2002-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 இருப்பினும் இருதரப்பினரிடையே அவ்வப்போது மோதல் நீடித்து வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மாறி மாறி குற்றம்சுமத்தி வந்தனர்.

 
* நேடோ'வால் என்னைக் கொல்ல முடியாது: கடாஃபி பேச்சு


திரிபோலி, மே 14: ""நேடோ படைகளால் என்னைக் கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன்'' என்று லிபிய நாட்டின் அதிபர் மம்மர் கடாஃபி நாட்டு மக்களுக்கு ஆடியோ கேசட் மூலம் அறிவித்திருக்கிறார்.

 நேடோ படைகள் நடத்திய குண்டுவீச்சில் அவருடைய மாளிகை ""பாப்-அல்-அஜீசியா'' கடுமையாகச் சேதம் அடைந்தது. வியாழக்கிழமை நள்ளிரவு நடந்த இத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள், அப்பாவி சிவிலியன்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

 அந்த 3 பேர் லிபியாவுக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்துள்ளனர் என்று கடாஃபி தன்னுடைய ஆடியோ கேசட் உரையில் புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

 அதே இடத்தின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவும் சனிக்கிழமை அதிகாலையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

 லிபிய அதிபர் கடாஃபி வான் தாக்குதலில் கடுமையாகக் காயம் அடைந்திருக்கிறார், நடமாட முடியாத அவரை மருத்துவ சிகிச்சைக்காக லிபியாவைவிட்டு வேறு எங்கோ எடுத்துச்சென்றுவிட்டனர் என்று நாட்டில் வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் ஒரு சிலர் அவர் உயிரோடு இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்ப ஆரம்பித்துவிட்டனர்.

 இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் ராணுவம் தன்னைவிட்டு விலகாமல் இருக்கவும் இந்த ஆடியோ கேசட்டை வெளியிட்டிருக்கிறார் கடாஃபி.

 இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெளிவானாலும், வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார், கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

 அதிகாரி விளக்கம்: லிபியா அதிபர் மம்மர் கடாஃபி நன்றாக இருக்கிறார், தலைநகர் திரிபோலியிலேயே தங்கியிருக்கிறார் என்று லிபிய அரசின் பத்திரிகைத் தொடர்பாளர் மூசா இப்ராஹிம் அறிவித்தார்.

 இத்தாலி அமைச்சரால் வந்த குழப்பம்: கடாஃபி இப்போது தலைநகர் திரிபோலியில் இல்லை, அவருக்குக் கடுமையான காயம்பட்டிருக்கிறது என்று சந்தேகிக்கிறேன் என இத்தாலி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்கோ பிராட்டினி பேட்டி அளித்தார். அவர் அத்துடன் நிறுத்தாமல், உயிருக்கு அஞ்சி கடாபி ஓடுகிறார் என்ற தகவல் அந் நாட்டு ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் கியோவனி மார்ட்டினேலி மூலம்தான் தனக்குத் தெரிந்தது என்று வேறு குறிப்பிட்டார்.

 ஆனால் பாதிரியார் கியோவனி மார்ட்டினேலி அதை மறுத்துவிட்டார். கடாஃபி காயம் அடைந்தது குறித்தோ, மறைந்து வாழ்வது குறித்தோ நான் ஏதும் கூறவில்லை என்று மறுத்துள்ளார் அவர்.

 புரட்சிக்காரருக்கு வரவேற்பு: அதே நேரத்தில் கடாஃபியின் மிகப்பெரிய எதிர்ப்பாளரும் லிபிய விடுதலை இயக்க அமைப்பின் இரண்டாவது இடத்தில் இருப்பவர் என்று கருதப்படுபவருமான முகம்மத் ஜிப்ரில் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிக்கைக்குச் சென்றார். அவரை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வரவேற்று அழைத்துச் சென்றார். அவர் தன்னுடைய அமைப்பை ""தேசிய இடைநிலை சர்க்கார்'' என்று அழைத்துக் கொள்கிறார்.

 இதையே லிபிய நாட்டுக்கான உண்மையான பிரதிநிதித்துவ அமைப்பு என்று அங்கீகரிக்க மறுக்கிறது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

* மக்கள் பிரச்னைகளுக்கு தீவிரவாதம் தீர்வாகாது: மன்மோகன் சிங்

manmohansingh.jpg

காபூல், மே 13: மக்கள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற சித்தாந்தங்கள் தீர்வாகாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு 2 நாள் அரசுப் முறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், சனிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தினார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் உரை வருமாறு: இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற செயல்களால் அமைதி குலைந்துள்ளது. மக்களால் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியவில்லை. எந்த ஒரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அமைதியும், சலனமின்மையும் அவசியம்.

இருப்பினும் ஆப்கானிஸ்தான் மக்கள் எத்தனையோ தடைகளை தகர்த்தெறிந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாகப் போராடி இதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் கண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்களின் இத்தகைய திறமையையும், தியாகத்தையும் நினைத்து இந்தியா பெருமிதம் அடைகிறது.

ஆப்கானிஸ்தான், இந்தியாவின் உறவு நேற்றைய இன்றையதல்ல. நீண்டகால பாரம்பரிய உறவு. இதை பேணிக்காத்து முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளுமே அக்கறையாக இருந்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது சொந்த நாட்டு விஷயங்களில் பிற நாடுகளின் தலையீடு இன்றி சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்கிறது.

பயங்கரவாதத்தால் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்கு இந்தியா ஆரம்பத்தில் இருந்தே தன்னால் முடிந்த உதவியை செய்து உறுதுணையாக இருந்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த உதவி தொடரும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் சுமார் 25 நிமிடம் உரை நிகழ்த்தினார். அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 354 பேரும் மன்மோகன் சிங் உரையை உன்னிப்பாகக் கேட்டனர். அவ்வப்போது கைதட்டி மன்மோகன் சிங்கை உற்சாகப்படுத்தினர்

தேசியச் செய்தி மலர் :

* கனிமொழி முன்ஜாமீன் வழக்கு மே 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி வந்தது குறித்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் என்பது சிபிஐயின் வாதம். ஆனால் இது கடன் என்றும், திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் டிவி கூறி வருகிறது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக கனிமொழி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்காக ராம்ஜேத்மலானி ஆஜரானார். கனிமொழி ஒரு பெண், தாய், எங்கும் ஓடி விட மாட்டார். அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதாடினார் ராம்ஜேத்மலானி. ஆனால், அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

இந்த வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கனிமொழி மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி சைனி வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ள நிலையில் கனிமொழிக்கு 20ம் தேதி வரை கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது.

* மம்தாவை வரவேற்கப் புதுப்பொலிவு பெறும் மேற்கு வங்க தலைமைச் செயலகம்

mamtha.jpg

கொல்கத்தா,மே 14: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்காகப் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது அந்த மாநில தலைமைச் செயலகம்.

 ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களது நிர்வாகப் பணிக்காகக் கொல்கத்தாவில் கட்டப்பட்டது ரைட்டர்ஸ் கட்டடம். இந்தக் கட்டடம்தான் அந்த மாநில தலைமைச் செயலகமாக இருந்து வருகிறது. இங்குதான் முதல்வர், அமைச்சர்களுக்கான அலுவலகமும் அமைந்துள்ளன.

 கடந்த 34 ஆண்டுகாலமாக இந்தக் கட்டடத்தில் இருந்தே இடதுசாரியினர் ஆட்சி நடத்தி வந்தனர். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இங்கிருந்தே மாநிலத்தை ஆளுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

 ரைட்டர்ஸ் கட்டடம் 1780-ல் கட்டப்பட்டாலும் வலுவாக உள்ளது. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதை சீரமைக்கும் பணி நடந்து வருகின்றது. புதிய அரசு பதவி ஏற்பதற்குள் சீரமைப்புப் பணியை முடிக்கத் திட்டமிட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது.

 முதல்வர், அமைச்சர்கள் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக அந்த மாநில பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.

 எப்போதுமே பரபரப்பாக இருக்கும் ரைட்டர்ஸ் கட்டடம் இப்போது வெறிச் சோடிக்கிடக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களை மட்டுமே காண முடிகிறது. முதல்வர் அறை பூட்டிக் கிடக்கிறது.

 புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இடதுசாரி காபந்து அரசு நீடிக்கும். இதனால் முதல்வர் அறை முன்பு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பெயர் பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது.

 முதல்வர் அறைக்குள் அமைந்துள்ள நாற்காலியைப் படம் பிடிக்க வேண்டும் என்பதில் பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

* அமர்நாத் ஏற்பாடு: காஷ்மீர் ஆளுநர் ஆய்வு
ஸ்ரீநகர்,மே14:அமர்நாத் யாத்திரை குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இமயமலையில் உள்ள அமர்நாத் பனிலிங்க கோவிலுக்கு வருகிற ஜூன் மாதம் 29-ம் தேதி பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை காஷ்மீர் அரசு செய்து வருகிறது.

ளஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா அமர்நாத் கோவில் நிர்வாகக் குழு தலைவராக உள்ளார். இதனால் வோரா வியாழக்கிழமை யாத்திரை தொடங்க இருக்கும் சந்தன்வாரி,பகல்காம் பகுதிகளுக்கு சென்றார். பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் குடிநீர் வசதி,மின்சார வசதி,சுகாதார வசதி,ரோடு வசதி ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அனைத்து வசதிகளையும் காலவரைக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

* ஸ்ரீ காளஹஸ்தி கோயில் அம்பாளுக்கு ரூ.12 கோடியில் வைர கிரீடம்

kalakasthi.jpg

 காளஹஸ்தி ஞானபிரசுனாம்பாளுக்கு கர்நாடக அமைச்சர் கருணாகர் ரெட்டி சனிக்கிழமை வழங்கிய பல கோடி மதிப்புள்ள வைர கிரீடம், தங்கக் கவசம், பாதம், ஜடை மற்ற


திருப்பதி,மே 14: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி கோயில் அம்பாளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான வைர கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்களை, ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், கர்நாடகா அமைச்சருமான காலி கருணாகர் ரெட்டி அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

 சனிக்கிழமை குடும்பத்துடன் ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்கு வந்த அவர், அங்குள்ள ஞானபிரசுனாம்பாளுக்கு பல கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்கத்தினாலான கவசம், தோடு, பாதம், பிடி அஸ்தமம், ஒட்டியானம், ஜடை மற்றும் தங்கப் பட்டுப் புடவை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கி, அம்பாளை வழிப்பட்டார்.

 ஆபரணங்களின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.


* ஆதர்ஷ் ஊழல்: மேலும் சில கோப்புகள் மாயம்

புது தில்லி, மே 14: ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் தொடர்பான மேலும் சில கோப்புகள் மாயமாகி உள்ளன.

மும்பையில் கார்கில் வீரர்களுக்கு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் வீடுகள்  கட்டப்பட்டதில் மாபெரும் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சர்ச்சையால் அந்த மாநில முதல்வர் அசோக் சவாண் பதவியைப் பறிகொடுக்க வேண்டியிருந்தது.

இந்த முறைகேட்டுப் புகாரை சிபிஐ கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வீடுகள் கட்டியது தொடர்பாக மகாராஷ்டிர நகர மேம்பாட்டுத் துறையிடம் இருந்த சில கோப்புகள் ஏற்கெனவே மாயமாகின. ஊழலை மூடிமறைக்கவே இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அத்துறையைச் சேர்ந்த 3 அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் கோப்புகள் மாயமாகியுள்ளன. கடலோரத்தில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கோரி மாநில அரசுக்கு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் எழுதிய கடிதம், அந்தக் கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மாநில அரசு அனுப்பியதற்கான ஆதாரம், அதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பியப் பதில் கடிதம் ஆகியவை உள்பட சில முக்கியமான ஆவணங்கள் கோப்பில் இடம்பெற்றிருந்தன.

அந்தக் கோப்புகளை ஆய்வு செய்ய சிபிஐ அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போதுதான் கோப்புகள் மாயமானது தெரியவந்தது.

"சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சென்ற போதுதான் கோப்புகள் மாயமானது தெரியவந்தது. மாயமான கோப்புகள் அனைத்துமே முக்கியமானவை. இதுகுறித்து எழுத்துப்பூர்வாகப் புகார் கொடுக்குமாறு அந்த அமைச்சக அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்' என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் கார்கில் வீரர்களுக்கு வீடுகள் கட்டியதில் கடலோர ஒழுங்குமுறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குற்றம்சுமத்தியது.

* விவசாயிகளை கடத்திய நக்சல்கள்

சசாராம், மே.14: பிகார் மாநிலத்தில் 4 விவசாயிகளை கடத்திச் சென்றனர் மாவோயிஸ்டு தீவிரவாதிகள்.

 பிகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்திலுள்ள பரார்யா கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு 40 க்கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்டுகள் வந்தனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றதாக போலீஸôர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையும், விவசாயிகளை மீட்கும் பணியையும் போலீஸôர் மேற்கொண்டுள்ளனர்.

* கோவா அமைச்சருக்கு அபராதம்

மும்பை, மே.14:அன்னியச் செலாவணி வழக்கில் கைது செய்யப்பட்ட கோவா அமைச்சருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 கோவா மாநில கல்வியமைச்சர் அட்டனாசியோ மோன்ஸிரேட் . இவர் கடந்த ஏப்ரல் மாதம், கணக்கில் வராத வெளிநாட்டு பணங்களை வைத்திருந்ததற்காக மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். துபாய் செல்லவிருந்த இவர் 25,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பயணிகள் காசோலையும். 70,000 திர்ஹாம்கள்,மற்றும் ரூ.1.25 லட்சம் ஆகியவற்றையும் வைத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான அன்னியச் செலாவணியை வைத்திருந்ததால், சுங்க சட்டத்தின் கீழும், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்பட்டார்.

 இப்போது அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில், கூடுதலாக எடுத்துச் செல்ல முயன்ற பணத்துக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திவிட்டு அவர் பணத்தை மீட்டுச் செல்லலாம் என்று சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில், பாகிஸ்தான் பாடகர் ரஹத் ஃபத்தே அலி கானும், அவரது மேலாளர் மரூஃப்பும் ரூ.60 லட்சம் மதிப்பிலான அன்னியச் செலாவணியை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலச் செய்தி மல்ர் :

* பெட்ரோல் விலை உயர்வு: பல்வேறு அமைப்புகள் கண்டனம்

சென்னை, மே 14: பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வு அனைத்துப் பிரிவு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 தமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர். சுகுமார்: எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன என்று கூறி பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே நஷ்டம் என்பதில் உண்மையில்லை. பொதுமக்களின் நலன் கருதாமல் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறும் நோக்கிலேயே இவ்வாறு பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

 இப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதால் எல்லா பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். இதன் பெரும் சுமை சாதாரண மக்களின் மேல் விழும்.

 எனவே பொதுமக்களின் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்வை மேற்கொள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்.

 வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்: அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இப்போது பெட்ரோல் விலையைக் குறைப்பதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு ரூ. 16-ம் மாநில அரசுக்கு ரூ.14-ம் வரியாகக் கிடைக்கிறது. இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் ரூ. 30 வரியாக வசூல் செய்வது என்பது மிகப் பெரும் மோசடியாகும்.

 எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க வேண்டுமானால் பெட்ரோலின் விலையை உயர்த்தத் தேவையில்லை. மாறாக பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் விலக்கிக் கொண்டாலே போதும் இதனால் எல்லா பொருள்களின் விலையும் 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துவிடும்.

 ஆட்டோ தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் (சிஐடியு): இந்தக் கடுமையான பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 பெட்ரோலிய எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் பெரும் முதலாளிகள், லாபத்தை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

 எனவே, ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 16) எங்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 


                                              * திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம்


கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, மே 14: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அந்தத் தேர்வை எழுதிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

 இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது.

 10 லட்சம் பேர்: வி.ஏ.ஓ. தேர்வை தமிழம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டுகளில் தேர்வு நடத்தப்பட்ட மாதத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி முன்பே அறிவிக்கப்படும்.

 ஆனால், இந்த ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களை நெருங்கும் நிலையில் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

 என்ன நடக்கிறது? அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பும் தேர்வாணையத்திலேயே பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாகவே வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

 விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவைகளும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.

 விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

 இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாளின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

 இதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. போதுமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 பணியாளர்கள் நியமிக்கப்பட்டும்...தேர்வுக்கா
ன முடிவுகளை வெளியிடுவதற்கு வசதியாகப் புதிய பணியிடங்கள் உருவாக்கப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அனுமதி அளித்து அந்தப் பணியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

 அதிமுக தேர்தல் அறிக்கையில்... சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் வி.ஏ.ஓ. தேர்வு குறித்து பிரதானமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் அறிக்கையின் 25-வது பக்கத்தில், "கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் உட்பட வெளியிடப்படாமல் உள்ள அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட உத்தரவிடப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியாக அதை நிறைவேற்ற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 லஞ்ச ஒழிப்புத் துறையின் பிடியில் 800 வி.ஏ.ஓ.க்கள்

 தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் வரை கணக்கிடப்பட்டதன் அடிப்படையில் 3 ஆயிரத்து 484 வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் உள்ளன. அதன்படி, அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதனிடையே, இரண்டு ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சுமார் 800-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

 இந்தக் காலகட்டங்களில் அவர்கள் பணி செய்ய முடியாது. பிழைப்பூதியம் என்ற அளவில் அவர்களுக்கு சிறு தொகை வழங்கப்படும். இதன்படி, தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன.   

* நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா
நாகப்பட்டினம், மே 14: நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்காவின் 454-ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, சந்தன பூசும் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

 இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

 நிகழாண்டுக்கான (454-ம் ஆண்டு) கந்தூரி விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 12-ம் தேதி பீர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 தொடர்ந்து, சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

 நாகை யாஹூசைன் பள்ளி தெருவிலிருந்து தொடங்கிய சந்தனக் கூடு ஊர்வலம், சாலா பள்ளித் தெரு, நூல்கடைத் தெரு, பெரிய கடைத் தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக, சனிக்கிழமை அதிகாலை தர்காவின் அலங்கார வாசலை அடைந்தது.

 இதையடுத்து, பாரம்பரிய முறைப்படி மிகுந்த மரியாதையுடன், சந்தனக் கூட்டிலிருந்த சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், ஹஜரத்து ஆண்டவர்கள் புனித ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரமுகர்கள், இறை அன்பர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


* நிறைவுபெறும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்

kolidam.jpg

சிதம்பரம், மே 14: சிதம்பரத்தை அடுத்த குமராட்சி பகுதியில் சுமார் 86 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

 ÷சிதம்பரத்தை அடுத்த குமராட்சி, புளியங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட சுமார் 86 கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இக்கிராமங்களில் சுனாமியின் போது ஏற்பட்ட மாற்றத்தால் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீóர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவில்லை.

 ÷இந்நிலையில் தமிழக அரசு ரூ.17 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அத்திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் புளியங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் நீருற்று கிணறு அமைக்கப்பட்டு வென்னையூர் வழியாக குழாய்கள் புதைக்கப்பட்டது. ÷இத்திட்டத்தில் 35 கி.மீ. ஒரு பிரிவாகவும், 15 கி.மீ. ஒரு பிரிவாகவும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குழாய்கள் சிதம்பரம் அருகே உள்ள புஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் முடிவடைகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரை சேமித்து வைக்க மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 87 கிராமங்களும், இவையல்லாமல் 121 வழியோர கிராமங்களும் பயன்பெறும்.

 இத்திட்டப் பணிகள் ஒரு பிரிவு மே மாத இறுதியிலும், மற்றொரு பிரிவு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவுறும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
.

ஆரோக்கியச் செய்தி மலர் :

14-pineapple300.jpg

* தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…
பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

மருத்துவகுணம்

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.

குழந்தைகளுக்கு மருந்து

அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.

அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.

இதயக்கோளாறு நீங்கும்

அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

ஜீரணசக்தி அதிகரிக்கும்

அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.

தொப்பை கரையும்

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.
வர்த்தகச் செய்தி மலர் :

* தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும், ஏற்றுமதியும் கை கொடுக்கவில்லை

மே 15,2011,04:59
நடப்பு வாரத்தில், திங்கள்கிழமை முதல் வியாழன் வரை, பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், வெள்ளிக்கிழமையன்று, வர்த்தகத்தில் ஏற்பட்ட உயர்வு நிலை, இழப்பை ஓரளவிற்கு சரிகட்டியது.

வெள்ளிக்கிழமையன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 195 புள்ளிகள் அதி கரித்து, 19,531 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 58 புள்ளிகள் உயர்ந்து, 5,544 புள்ளிகளிலும் நிலைபெற்றன. ஆக, சென்ற வாரத்தில்,'சென்செக்ஸ்' 12 புள்ளிகளும், 'நிப்டி' 7 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது.சந்தையில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்: முதலாவதாக, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில், 7.3 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. இது, இதற்கு முந்தைய நான்கு மாதங்களாக, 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இரண்டாவதாக, உணவுப் பொருள் பணவீக்கம், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்., 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.7 சதவீதமாக குறைந்திருந்தது. மூன்றாவதாக,சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி,சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 34 சதவீதம் அதிகரித்திருந்தது. இவையனைத்தும், வியாழக்கிழமையன்று, நடைபெற்ற நிகழ் வுகளே. ஆனால், இவை, அன்றைய பங்கு வர்த்தகத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வெள்ளியின் விலை: வெள்ளி உலோகத்தின் விலை, மேலும், கீழுமாகத் தான் உள்ளது. வாங்க நினைப்பவர்கள், விலையை பொறுத்து, முழு அளவில் வாங்க முடியவில்லை என்றாலும், சிறிய அளவிலாவது வாங்கலாம். இந்தியாவில் இதன் விலை அதிகரித்துள்ள போதிலும், உலகளவில் இதன் விலை சரிந்து கொண்டு தான் உள்ளது.தங்கம், வெள்ளியென்று பார்த்துக் கொண்டுள்ளோம். சத்தமில்லாமல் வைரத்தின் விலையும் உயர்ந்து கொண்டுள்ளது. சென்ற ஆண்டை விட, இவ்வாண்டில், இதன் விலை 40 - 50 சதவீதம் வரை, அதிகரித்துள்ளது. கடந்த பல வருடங்களாக விலைகள் அதிக அளவு உயராததும், பாலிஷ் செய்யும் பணிக்கு ஆட்கள் கிடைக்காததும் தான், இதன் விலை உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.போர்டிஸ் ஹெல்த்கேர்: போர்டிஸ் ஹெல்த்கேர், தொடர்ந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. இதில், தற்போது சேர்ந்திருப்பது, ரெலிகேர் லேபரட்டரீஸ். இந்நிறுவனத்தை, 803 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது போர்டிஸ். மருத்துவமனை நிறுவனப் பங்குகள் என்று பார்க்கும் போது, அப்போலோவுடன் போட்டி போடும் நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. நீண்டகால அடிப்படையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

காலாண்டு முடிவுகள்: இன்னும் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்து கொண்டுள்ளன. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், சாந்தி கியர்ஸ், கேரியர் பாயிண்ட், சட்லெஜ் டெக்ஸ்டைல்ஸ், சீமென்ஸ் ஆகிய நிறுவனங் களின் நிதிநிலை செயல்பாடு, சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, வளர்ச்சி கண்டுள்ளது.

புதிய வெளியீடுகள்: பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. பங்கின் வெளியீட்டு விலை, 193 - 203 ரூபாய் என்றளவில் நிர்ணயிக்கப் பட்டி ருந் தது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியும் இருந்தது. மொத்தமாக, இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 4.34 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், சிறிய முதலீட் டாளர்களிடமிருந்து, 2 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 56 பங்குகள் வேண்டி விண்ணப் பித்தவர்களுக்கு, 28 பங்குகள் கிடைக்க வாய்ப் புள்ளது. விலை 203 ரூபாயில் நிர்ணயிக்கப்படலாம். கேலக்சி சர்பாக்டென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய வெளி யீடு, 13ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிறுவனம், பங்கின் வெளியீட்டு விலையை 325 - 340 ரூபாய் என்றளவில் வெளியிட்டுள்ளது. ரசாயன தொழிலில் ஈடுபட்டு வரும், இந்நிறுவனத்தின் பங்கு வெளி யீட்டிற்கு 'கிரிசில்'அமைப்பு, 5க்கு 4 என்றளவில் தரக்குறியீடு வழங்கியுள்ளது. இடர்பாட்டை எதிர் கொண்டு முதலீடு செய்ய விரும்புபவர்கள், இதன் பங்கு வெளியீட்டில் பங்கேற்கலாம்.

பங்கு தொகுப்பில் இருக்க வேண்டியவை: உங்கள் பங்கு தொகுப்பில், ஜுபிலியண்ட் புட் வொர்க்ஸ், இண்டஸ்இந்த் பேங்க், தனலட்சுமி பேங்க் போன்றவற்றின் பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம்.

வரும் வாரம் எப்படி இருக்கும்? இரு மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், வெள்ளிக்கிழமையன்று, பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இந்த நிலை வரும் வாரத்திலும் சிறிது தொடரக் கூடும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை, ஓரளவிற்கு ஈடு செய்யலாம். உள்நாட்டு நிலவரங்கள் சரியாக இருந்தாலும், நம் நாட்டின் பங்கு சந்தைகள், உலக நிலவரத்தை பொறுத்தே உள்ளது. எனவே, நாம் அதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

- சேதுராமன் சாத்தப்பன் -


விளையாட்டுச் செய்தி மலர் :

10 ரன்களில் டெக்கான் வெற்றி
மும்பை, மே 14: மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெக்கான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

முதலில் ஆடிய டெக்கான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெக்கான் அணியில் லம்ப் ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே வெளியேறினார். மும்பையின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்ததால் டெக்கான் வீரர்கள் ரன் சேர்க்கத் தடுமாறினர்.

சங்ககரா 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இரண்டு சிக்ஸர்களை விளாசிய சோஹல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் தவாணும், மிஸ்ராவும் அதிரடியாக விளையாட டெக்கான் அணி 135 ரன்கள் குவித்தது. தவாண் 27 ரன்களும், மிஸ்ரா 6 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மும்பை தோல்வி: பின்னர் ஆடிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிளிஸ்ஸôர்டு 1, ராயுடு 2, ரோஹித் சர்மா 4, சைமண்ட்ஸ் 8 என அடுத்தடுத்து நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் கேப்டன் சச்சின் நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 83 ரன்களை எட்டியபோது சச்சின் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த பொல்லார்டும், ஹர்பஜனும் போராடினர். கடைசி ஓவரில் பொல்லார்டு ஆட்டமிழக்க மும்பையின் தோல்வி உறுதியானது. இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்களில் தோல்வி கண்டது. ஹர்பஜன் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

டெக்கான் தரப்பில் ஆனந்த் ராஜன் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஐபிஎல் தொடரில் டெக்கான் அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்த டெக்கான் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி அணி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பேட்டிங்கில் 18 ரன்கள் சேர்த்ததோடு, 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்திய மிஸ்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்

டெக்கான் - 135/6

(தவாண் 27*, குல்கர்னி 3வி/26)

மும்பை - 125/8

(சச்சின் 37, ஆனந்த் ராஜன் 3வி/27)

* பெங்களூருக்கு 8-வது வெற்றி

பெங்களூர், மே 14: பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

 இந்த வெற்றியின் மூலம் 17 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது பெங்களூர். அந்த அணியின் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 38 ரன்கள் குவித்ததன் மூலம் 436 ரன்களுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.

 முதலில் ஆடிய கொல்கத்தா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் பெங்களூர் அணிக்கு 13 ஓவர்களில் 102 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 12.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து பெங்களூர் வெற்றி கண்டது.

 மழையால் பாதிப்பு: முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் மோர்கன் 2, காலிஸ் 17, கேப்டன் கம்பீர் 7 என அடுத்தடுத்து வெளியேறினர். கொல்கத்தா அணி 11 ஓவர்களில் 69 ரன்களை எட்டியபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது.

 இதன்பிறகு ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பதான் 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். 13 ஓவர்களில் கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்தது.

 பெங்களூர் அணியில் கெயில், போமர்ஸ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார் கெயில். உனட்கட் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்டி விருந்து படைத்தார் கெயில். இதனால் பெங்களூர் 2 ஓவர்களில் 39 ரன்களை கடந்தது.

 கெயில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரெட் லீ வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் இந்த ரன்னை எடுத்தார். போமர்ஸ் 16 ரன்கள் எடுத்தார். கோலி 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். 12.3 ஓவர்களில் பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

 கெயில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.



 சுருக்கமான ஸ்கோர்

 கொல்கத்தா - 89/4

 (பதான் 36, திவாரி 19*)

 பெங்களூர் - 105/6

 (கெயில் 38, போமர்ஸ் 16)



  இன்றைய ஆட்டங்கள்

  *  பஞ்சாப் - டெல்லி, இடம்: தர்மசாலா, நேரம்: மாலை 4.

  * கொச்சி - ராஜஸ்தான், இடம்: இந்தூர், நேரம்: இரவு 8.


ஆன்மீகச் செய்தி மல்ர் :

* அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோவில்

மூலவர்    :    தெய்வநாயகப்பெருமாள்
உற்சவர்    :    மாதவப்பெருமாள்
அம்மன்/தாயார்    :    கடல் மகள் நாச்சியார்
தல விருட்சம்    :    -
தீர்த்தம்    :    சோபன, தேவசபா புஷ்கரிணி
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    கீழச்சாலை
ஊர்    :    திருத்தேவனார்த்தொகை
மாவட்டம்    :    நாகப்பட்டினம்
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

போதலர்ந்த பொழில் சோலைப் புறமெங்கும் பொறு திறைகள் தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணி தென்கரைமேல் மாதவன் தானுறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு தேதென வென்றிசை பாடும் திருத்தேவனார்த் தொகையே

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மேற்கு பார்த்த பெருமாள் என்பதால் மிகவும் விசேஷம். கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.

பெருமாளின் திருமணம் நடந்த ஊராதலால் விமானத்தின் பெயர் சோபன (மங்கள) விமானம் என்று பெயர். கர்ப்பகிரகத்தின் முன்பு விசாலமான மண்டபம் இருக்கிறது. கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வசிஷ்டர் தரிசனம் செய்துள்ளார்

 தலபெருமை:

திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திரு மகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகை என பெயர் ஏற்பட்டது.

  தல வரலாறு:

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், "இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்', என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு

 திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்


ஆன்மீகச் சிந்தனை மலர் :

14-peace300.jpg

தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி

மனதிற்கும், உயிருக்கும் தொடர்பு உண்டு. உயிருக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு. மனமும், உயிரும் இறைவனால் இயங்குகின்றன. மனம் தெய்வத்தன்மை வாய்ந்தது. தெய்வ நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும், செய்யும் காரியம் நிச்சயம் நிறைவேறும்.

மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களுக்கு எந்தவித சங்கடத்தையும், துன்பத்தையும், உண்டாக்கக்கூடாது. மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் முக்கிய சக்தியாக இருப்பது மனத்தூய்மை. மனத்தூய்மை உடையவர் யாரும் எந்தவித கெட்ட சக்திக்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.

வினாடி வினா :


வினா - ஆஸ்கார் விருது பெற்ற முதல் நடிகர் யார் ?

விடை - எமில்ஜேனிங்ஸ்.


இதையும் படிங்க :

திறமை என்னை உயர்த்தியது!'

large_241027.jpg

என்.சி.சி.,யில் ஆரம்பித்து, இன்று இந்திய ராணுவம் வரை முன்னேறியுள்ள பாரதி: என் பெற்றோர், என்னை ஒரு வட்டத்திற்குள் வளர்க்க நினைக்காமல், தைரியத்துடன் வளர விட்டனர். அது தான், என்.சி.சி.,யில் என்னை சேர வைத்தது. அதில் தலைமை பதவியை, என் திறமை எனக்கு வாங்கிக் கொடுத்தது. இந்தியக் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு, என் செயல்பாடுகளால் கிடைத்தது.அதே நேரம், அமெரிக்க வாய்ப்பும் கிடைத்தது. அதாவது, எங்க கல்லூரியில் இருந்து இரண்டு சிறந்த மாணவியரை தேர்ந்தெடுத்து, அமெரிக்காவில் உள்ள, மேரி பால்டிவின் கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு, நமக்குப் பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க, கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்புவர்.அந்த பயிற்சியில் நான் தேர்ந்தெடுத்த படிப்பு அமெரிக்க ராணுவம். அங்கு அவர்கள், ராணுவத்தின் நுட்பமான அணுகுமுறைகள், விதிமுறைகளை தெரிந்து கொண்டேன். அந்த கல்லூரி மாணவியருடன் இணைந்து, ட்ரக்கிங், துப்பாக்கி சுடுதல் என்று நிறைய பயிற்சிகள் செய்தேன். அமெரிக்க வாய்ப்பு வந்ததால், இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.பின், கடுமையாக உழைத்து, அந்த வாய்ப்பையும் நான் பெற்றேன். கூடவே, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு போய், அவருடன் சேர்ந்து உணவருந்தியதையும் மறக்க முடியாது.சென்னையில் நடந்த மாநில அளவிலான, என்.சி.சி., ஊர்வலத்தில் பங்கேற்கும் போது, மதுரை டீமிற்கு நான் தான் தலைவர்; அதில் நாங்க தான் ஜெயித்தோம். இரவு உணவுக்கு, கவர்னர் வீட்டிற்கு அழைத்திருந்தனர். இவை அனைத்தும் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள்.நான், என்.சி.சி., யை உளமார நேசித்து, கடமையை செய்த பலனால், இப்போது இந்திய ராணுவத்தில் சேரும் வாய்ப்பு வந்துள்ளது. ராணுவத்தில் சேரும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

"சேவை, எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிறைவு!' :சேவையையே வாழ்க் கையாக கொண்டிருக்கும் ஆனந்தி: உசிலம்பட்டி தான் என் சொந்த ஊர். சென்னைக்கு வாக்கப்பட்டு வந்தேன். குழந்தை இல்லாததால், நிறைய பிரச்னை. நிம்மதிக்காக கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், அனாதை இல்லம்னு போய், அவங்களுக்கு சின்ன சின்ன சேவைகளை, வீட்டுக்கு தெரியாம செய்தேன்.வீட்டுல தெரிஞ்சு, சேவைன்னு சொல்லி, காசை அழிச்சுக்கிட்டிருக்கியான்னு, மனசு மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்தினாங்க. பிறந்த வீடு மற்றும் கணவர் தரப்பிலிருந்தும் பெருசா சப்போர்ட் இல்லை. நிர்க்கதியா நின்ற நேரத்தில், சின்னதா சேவைகள் செஞ்சப்போ அறிமுகமான அந்தோணியும், அவரது மனைவி பத்மாவதியும், நிதி உதவி அளித்து உதவினாங்க.அதன்பின், சுதந்திரமா, முழுமையா, சேவைப் பயணத்தை தொடர்ந்தேன். சாலையில் அநாதரவா திரிஞ்சவங்களுக்கு உதவும் போது, ஆசிரியர், மார்ட்டின் கென்னடி, ஒரு அமைப்பை துவக்க, அனைத்து உதவிகளையும் செய்தார். கடந்த, 2004ல், ராயபுரத்தில், ஒரு வீட்டில ஆரம்பிச்சது தான் உதவும் கரங்கள். அந்த அமைப்புக்கு, எம்.ஏ., பட்டதாரியான பார்வையற்ற பெண், சுனாமியில பாதிக்கப்பட்ட ஒரு பெண், இவங்க தான் என் முதல் தத்துக் குழந்தைகள். என்னைப் பத்திக் கேள்விப்பட்டவங்க, அவங்களாவே நிதி உதவி அளித்தனர். அந்த நிதியைக் கொண்டு, சேவையை விரிவுபடுத்தினேன். பள்ளியைப் பாதியிலேயே நிறுத்திய குழந்தைகள், படிப்பு பறிபோனவர்கள் என பலரையும், மீண்டும் படிக்க வைக்கிறேன். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டலாக இருப்பதில், ஒரு சின்ன சந்தோஷம்.நான் படிக்க வெச்ச யார் கிட்டயும், அமைப் புக்கு பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கிறதில்லை. சேவைங்கறது, எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிறைவு. ஒரு குழந்தை இல்லைங்கற காரணத்துக்காக துரத்தி அடிக்கப்பட்ட எனக்கு, இப்போ ஆயிரமாயிரம் குழந்தைகள்.

No comments:

Post a Comment