Wednesday, June 22, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 22 , 2011

முக்கியச் செய்தி :

* தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு

ananahe.jpg

புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

 அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

 லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரைக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் அரசுத் தரப்புக்கும் அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.

 இந்த நிலையில் இந்த வரைவுக் குழுவின் ஒன்பதாவது மற்றும் கடைசிக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. வரைவுக் குழுவின் 10 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் 8 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

 இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பிலான அதிகாரப்பூர்வமான வரைவு மசோதா வெளியிடப்பட்டது. லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்பிலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கப்படும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதாக அண்ணா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

 பிரதமர் மற்றும் உயர்நிலை நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது, நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களுக்கு நடத்தை விதிகளை வகுப்பது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அவர்களை நீக்கும் நடைமுறையை வகுப்பது ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

 இது தொடர்பாக அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "அவர்கள் அவர்களது வரைவு மசோதாவைக் கொடுத்தார்கள். நாங்கள் எங்களது மசோதாவைக் கொடுத்தோம். இரண்டின் மீதும் குறுகிய விவாதம் நடந்தது. 6 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும் இரு பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன' என்றார்.

  அரசு தரப்பில் தரப்பட்டிருக்கும் மசோதா தொடர்பாக ஹசாரே குழுவினர் கருத்துத் தெரிவிக்க இன்னும் இரண்டு மூன்று நாள்கள் அவகாசம் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 ஹசாரே குழு அதிருப்தி:

 இதனிடையே, அரசு அளித்திருக்கும் வரைவு மசோதா குறித்து ஹசாரே குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இருக்கும் வகையில் அரசின் மசோதா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் பிரசாந்த் பூஷண்.

 இதற்கு முந்தைய வரைவிலாவது, பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போதைய வரைவில் அதுவும் இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் குறைகூறியிருக்கிறார்.

  அரசுக்குப் பாடம் புகட்டுவோம் - ஹசாரே: லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதால் திட்டமிட்டபடி, "அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில்' ஆகஸ்ட் 16-ம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருக்கிறார்.

உலகச் செய்தி மலர் :
* நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு
பெர்லின், ஜூன் 21: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.

 ஐரோப்பிய நாடுகளின் ஸ்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த நிதியத்துக்குத் தேவைப்படும் தொகை 2013-ம் ஆண்டுக்குள் திரட்டப்பட்டுவிடும்.

 ஓராண்டுக்கு முன்பு கிரேக்கத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் நிதி நெடுக்கடிக்கு உள்ளாயின. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இந்த நாடுகள் எதிர்கொண்ட நிதி நெருக்கடியால் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளமான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவானது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார தேக்க நிலை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆலோசித்து முதல் கட்டமாக கிரேக்கத்துக்கு 10,000 கோடி யூரோக்களை அளிக்க ஒப்புக் கொண்டனர். ஐரோப்பிய யூனியனும், அன்னியச் செலாவணி நிதியமும் (ஐஎம்எஃப்) இணைந்து இந்தத் தொகையை கடந்த ஆண்டு மே மாதம் அளித்தன.

 இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நிதி உதவி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 12,000 கோடி யூரோ தேவை என மதிப்பிடப்பட்டது. நிதியத்தில் மொத்தம் 44,000 கோடி யூரோக்கள் அளவுக்கு சேர்ந்துள்ள நிலையில் கிரேக்கத்துக்குத் தேவையான 12 ஆயிரம் கோடி யூரோக்களை அளிப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது என கூறப்படுகிறது. எஞ்சிய தொகையை அயர்லாந்து, போர்சுக்கலுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 மீட்பு நிதியத்தில் 620 கோடி யூரோ கடன் உத்தரவாதத்தின் பேரிலும் 80,000 கோடி யூரோ ரொக்கமாகவும் இருக்கும். இந்த நிதி 2013-ல் திரட்டப்பட்டு 2017-க்குள் அளிக்கப்பட்டு விடும்.

 திரட்டப்படும் நிதித் தொகையில் அன்னியச் செலாவணி நிதியத்தின் பங்கு 25,000 கோடி யூரோவாக இருக்கும். ஐரோப்பிய பிராந்தியத்தில் ஸ்திரமான நிதி நிலை, பொருளாதார சூழல் நிலவுவதற்காக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படுவதாக 17 நாடுகளின் தலைவர் ஜீன் கிளாட் ஜுன்கர் தெரிவித்தார்.

 முதல் முறையாக இந்த நிதியத்தில் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி தன் பங்காக 16,800 கோடி யூரோவை அளிக்கும். இதில் 2,200 கோடி யூரோக்கள் ரொக்கமாக இருக்கும்.

*  ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியது: 44 பேர் கருகி சாவு
மாஸ்கோ,ஜூன் 21: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ரஷிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி எரிந்ததில் அதில் பயணம் செய்த 8 ஊழியர்கள் உள்பட 44 பேர் உடல் கருகி இறந்தனர்.

 வட மேற்கு ரஷியாவின் கரேலியா குடியரசில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.

 ரஷியாவின் ரஷ்-ஏர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான டியு-134 ரக விமானம் 52 பேருடன் மாஸ்கோவில் இருந்து கரேலியா குடியரசின் தலைநகர் பெர்ரோஜவாத்ஸ்க் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. கரேலியா விமான நிலையத்தில் தரையிறங்கும் நிலையில் அது சாலையில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக அவசர கால அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரியானோவா தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விமானத்தில் 9 விமான சிப்பந்திகளுடன் 52 பேர் பயணம் செய்தனர். இதில் 44 பேர் விபத்தில் சிக்கி இறந்தனர். 8 பேர் பலத்த காயங்களுடன் தப்பினர். அவர்களில் ஒருவர் விமானப் பணிப்பெண் ஆவார் என்றார்.

 விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், விமானம் தரையிறங்கும்போது வானிலை மிக மோசமாக இருந்தது.

 விமான நிலையம் பனியால் சூழப்பட்டிருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது என்றார்.

 ரஷியா விசாரணை குழுவின் செய்தித் தொடர்பாளர் விலாடிமிர் மார்க்கின் கூறுகையில்,

 இந்த விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதத் தவறு நடந்துள்ளதா என்றும் விசாரணைக்குழு விசாரிக்கும். விமானம் விழுந்து நொறுங்கியதும் உடனடியாக மீட்புப்படை சென்று ஒரு குழந்தை உள்பட 8 பேரை மீட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவைப்பட்டால் அவர்களை மாஸ்கோவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

 கடந்த ஆண்டு டியு 154 ரக விமானம் ஒன்று ரஷியாவின் ஸ்மோலெஸ்க் நகரில் விழுந்து நொறுங்கியதில் அப்போதைய போலந்து அதிபர் லெசிகசிஸôய்ங்ஸ்கி உள்பட 96 பேர் இறந்தனர். டியு 134 விமானம் இரட்டை என்ஜின் கொண்ட விமானமாகும். இந்த ரக விமானம் 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


* இராக்கில் கார் குண்டு வெடிப்பு: 25 போலீஸôர் சாவு


பாக்தாத், ஜூன் 21: இராக்கில் கார் குண்டு வெடித்து 25போலீஸôர் இறந்தனர்.

 ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திவானியா நகர். இங்குள்ள கவர்னர் சலாம் ஹூசைன் வீட்டு முன்பு 30 மீட்டர் தூரத்தில் போலீஸôர் சோதனைச் சாவடி அமைத்து காவலுக்கு இருந்தனர். ÷செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப்படையினர் போலீஸ் சோதனைச் சாவடி மீது மோதினர்.

 இதில் காரில் இருந்த குண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதில் கவர்னர் வீட்டுக்கு முன்பு காவலுக்கு இருந்த 25 போலீஸôர் இறந்தனர். 30 போலீஸôர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.

* சீனாவில் நிலநடுக்கம்: 10 ஆயிரம் வீடுகள் சேதம்
பெய்ஜிங், ஜூன் 21: சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.

 சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள மாங்பாங் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.

 நிலநடுக்கத்தால் ரோடுகள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலநடுக்கத்தால் 94 வீடுகள் இடிந்து விழுந்தன. 9741 வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன அரசு 405 கூடாரங்களையும்,400 படுக்கை மெத்தைகளையும் அளித்துள்ளது.

 சாலமன் தீவில்... அமெரிக்கா அருகில் உள்ள சாலமன் தீவில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 7.34 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தன. இதனால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 கடந்த 2007-ம் ஆண்டு சாலமன் தீவில் 8.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமியும் உருவானது. இதில் 52 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.

* துனிசியா முன்னாள் அதிபர், மனைவிக்கு 35 ஆண்டு சிறை

தூனிஷ், ஜூன் 21: துனிசியா நாட்டு முன்னாள் அதிபர் ஜினே அல்அபிதின் பென் அலி மற்றும் அவரது மனைவி லைலா தரபெல்சி ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 துனிசியா நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவி வகித்த அவர் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி அவரை விரட்டியடித்தனர். இதனால் பதவியை ராஜிநாமா செய்து சவூதி அரேபிய நாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். தற்போது ஜினே அல்அபிதின் அந்நாட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் மீது

 துனிசியா நாட்டு நீதிமன்றத்தில் ஊழல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தல், போதை மருந்து கடத்தல், கருப்புப்பணத்தை பதுக்கிவைத்தல் என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ராணுவ நீதிமன்றத்தில் பொதுமக்களை கொலைசெய்த வழக்கு உள்பட 182 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுபோல் லைலா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இந்நிலையில் ஜினே மீதும் அவரது மனைவி மீதும் துனிசியா நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இருவருக்கும் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.170 கோடி அபராதமும் விதித்து திங்கள்கிழûமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

 தண்டனை அடைந்துள்ள ஜினேயையும் லைலாவையும் துனிசியாவுக்கு அனுப்பிவைக்கும்படி சவூதி அரேபியாவுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு நீதிமன்ற பேச்சாளர் தெரிவித்தார்.

* இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழக பேரவைத் தீர்மானத்துக்கு அமெரிக்க தமிழர் அமைப்பு வரவேற்பு

வாஷிங்டன், ஜூன் 21: இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அமைத்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபைக் குழுவின் இந்த அறிக்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இந்த தீர்மானத்தை அமெரிக்காவில் செயல்படும் தமிழ் அரசியல் செயல் கவுன்சில் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் இலியாஸ் ஜெயராஜா கூறுகையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அந்தத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிய தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

 இலங்கை வன்னிப்பகுதியில் நடந்த சண்டையின்போது அந்நாட்டு விமானங்கள் மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த பள்ளிகள் மீதும், அவர்கள் தங்கியிருந்த முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி அப்பாவி மக்களை அழித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவேதான் இங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. எனவே இலங்கையை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

* அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்தியருக்கு உயர் பதவி
பாஸ்டன், ஜூன் 21: அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் உயர்பதவிக்கு இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 சென்னை ஐஐடி பட்டதாரியான ஆனந்த் அகர்வால் என்பவரைத் தனது "கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத் திறன் (ரோபாட்டிக்ஸ்) ஆய்வுக்கூடத்துக்கு' இயக்குநராகத் தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் பிரபலமான மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்(எம்ஐடி). அவர் இந்தப் பதவியை ஜூலை 1-ம் தேதி ஏற்றுக்கொள்கிறார்.

 ஆனந்தின் தொலைநோக்குப் பார்வையும், ஆர்வமுமே அவர் இந்த முக்கியப் பதவியை அடையக் காரணமாகும் என்று இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை முதல்வர் இயான் வெயிட்ஸ் தெரிவித்தார். ஆனந்த் இப்போது "மல்டிகோர் பிராசசர்" எனப்படும் பல்நோக்குத் தொழில்நுட்பத் திறனுடைய கணினிப் பயன்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

 "எலக்டிரிகல் மற்றும் கணினி அறிவியல்'துறைக்கு மற்றொரு இந்தியரான ஆனந்த சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அமெரிக்காவின் நாசா, சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை நிதியுதவி செய்து வருகின்றன.

* இந்திய தூதரக அதிகாரி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார்
 நியூயார்க், ஜூன் 21: நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அலுவலகப் பணியாளர் சந்தோஷ் பரத்வாஜ், தூதரக அதிகாரி பிரபு தயாள் மீது நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.

 இந்தியாவுக்கான தூதரக அலுவலகம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ளது. தூதரக அதிகாரியின் அலுவலகம் மற்றும் வீடும் ஒரே இடத்தில் உள்ளது.

 இதில் வீட்டு பணியாளராக கடந்த ஆண்டு வரை பணி புரிந்த சந்தோஷ் பரத்வாஜ் என்ற பெண்மணி, தனக்கு ஊதியம் குறைவாக அளித்ததாகவும், தன்னை மிக மோசமான அறையில் அடைத்து வைத்ததாகவும் புகார் கூறியுள்ளார்.

 மேலும் தன்னை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்த முயன்றபோது அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான சந்தோஷ் பரத்வாஜ் (45), தனது புகார் மனுவில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு டாலர் அளிப்பதாகக் கூறி இந்தியாவிலிருந்து அழைத்து வந்ததாகவும், ஆனால் அதைவிடக் குறைவாக அளித்ததாகவும் கூறியுள்ளார். தனது பாஸ்போர்ட்டை பிரபு தயாள் வைத்திருப்பதாகவும் அதை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 தங்குவதற்கு இடமளிப்பதாகக் கூறி அழைத்துவந்த தம்மை மிகக் குறுகிய அறையில் தங்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சமயம் தன்னிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்றபோது அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 சந்தோஷ் பரத்வாஜுக்கு ஆதரவாக சட்ட உதவி ஆலோசனை மையம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பிரபு தயாள் விளக்கம் அளிக்குமாறு அச்சங்கம் கூறியுள்ளது. ஆனால் இந்த புகார் அனைத்தும் தவறானவை என்று குறிப்பிட்ட பிரபு தயாள், வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர், வேறு எங்கும் பணி புரியக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனால் அவரை வேறிட பணிகளுக்கு அனுமதிக்கவில்லை. இங்கு பணியாற்றுவதற்கு சம்பளம் அளித்தது தவிர, அவருக்கு அலுவலகத்தின் ஐந்தாவது தளத்தில் தங்குமிட வசதி அளிக்கப்பட்டது.

 அங்கு டி.வி, தொலைபேசி வசதிகள் உள்ளன. இந்தியாவில் அவரது குடும்பத்தாருக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் தொகை அனுப்பப்பட்டது என்றும் தயாள் குறிப்பிட்டார்.

 2010-ம் ஆண்டு வெளியேறிய அவர் இவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிகிறது என்றால் அதற்கு இங்கு பெற்ற தாராளமான ஊதியமும் ஒரு காரணம். பாஸ்போர்ட்டை குடியேற்றத்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக தயாள் கூறினார் 

தேசியச் செய்தி மலர் :

* மத்திய அமைச்சரவை மாற்றம்: பிரதமருடன் சோனியா ஆலோசனை

புதுதில்லி, ஜூன் 21 : மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்டில் கூட்டப்படவுள்ளது. அதற்கு முன் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, அமைச்சரவை மாற்றம் பற்றிய முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

 ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.

* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1- ல் தொடக்கம்

புது தில்லி, ஜூன் 21: நாடாளுமன்றத்தின் மழைக் காலத் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கி மூன்று வாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜூலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பன்சால் மேலும் கூறினார்.

 2ஜி விவகாரத்தில் ஜே.பி.சி. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னையால் கடந்த குளிர்கால கூட்டத் தொடர் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடங்கியது நினைவு கூரத்தக்கது

* காஷ்மீர்: சமரசம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-மெஹபூபா

ஸ்ரீநகர், ஜூன் 21: ஜம்மு-காஷ்மீரில் சமரச சூழ்நிலை ஏற்பட கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

 மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மெஹபூபா

 கூறியது: காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கு கொண்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநில நிலைமையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உன்னிப்பாக கவனித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மாநிலத்தில் சுமுக சூழ்நிலை ஏற்பட கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இதன்மூலம் மாநிலத்தில் சுமுக சூழ்நிலை ஏற்பட மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை.

 மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை.

 மாநிலத்தில் இப்போது அமைதி நிலவுவதை வைத்துக் கொண்டு தவறாக கணக்கிட்டுவிடக்கூடாது. இதே நிலை நீடித்தால் பெரும் சூறாவளி ஏற்படும் என மாநில அரசை எச்சரிக்க விரும்புகிறேன் என்றார்.
 
* இந்தியாவுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு மிரட்டல்
புது தில்லி, ஜூன் 21: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

 பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்- தவா என்ற தீவிரவாத அமைப்பு சார்பில் அந்நாட்டில் திங்கள்கிழமை மாநாடு நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஸ்திர தன்மை என்ற பெயரில் மாநாட்டில் விவாதம் நடத்தப்பட்டது. ஜமாத்-உத் தலைவர் அப்துர் ரெஹ்மான் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பேசினர். அப்துர் ரெஹ்மான் பேசுகையில், வெளிநாடுகளும், தொலைக்காட்சிகளும் சித்திரிப்பதுபோல் பாகிஸ்தான் நிலைமை மோசமாக இல்லை என்றார். அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய ஒசமா பின்லேடனை அவர் புகழ்ந்தார்.

 அமெரிக்க நமது எதிரி நாடு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 மேலும் 2007-ம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

* பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?

microphone300_21062011.jpg

 புது தில்லி, ஜூன் 21: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 இது தொடர்பாக 2010 செப்டம்பர் 7-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

thumb_261924.jpg

 நிதியமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று பிரணாப் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தில்லி நார்த் பிளாக்கில் உள்ளது. அவரது அலுவலகத்திலும், அவரது தனி உதவியாளரின் அறை, அவரது செயலரின் அறை, இரு கருத்தரங்க அறைகள் ஆகியவற்றில் உளவு முயற்சி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 ஆனால், 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ, கேமராக்களோ சிக்கவில்லை. அவற்றைப் பொருத்த பசை தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தனது கடிதத்தில் பிரணாப் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் உளவுப் பார்க்கும் முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டபோதுதான் உளவு முயற்சி குறித்து தெரியவந்தது. இதையடுத்தே பிரதமருக்கு பிரணாப் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.

 இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரணாப் முகர்ஜி, இப் பிரச்னை குறித்து, மத்திய உளவுத் துறையான ஐ.பி., முழு அளவில் சோதனை நடத்திவிட்டு, அலுவலகம் எந்த வகையிலும் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.

 ஆனால், பசை ஒட்டப்பட்ட இடங்களில் சிறிய துளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, அந்த இடங்களில் கேமராக்களோ, ரகசிய மைக்ரோபோன்களோ வைக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டிருக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் துறையினர் கூறினர்.

 பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிதியமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு நிகழ்வதாக நிதியமைச்சரே கடிதம் எழுதியிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.

 மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் பிரணாப்.

 அவரது அலுவலகத்திற்குள் ஒட்டு கேட்கப்படுவதாகக் கூறப்படுவது மிக முக்கியமான பிரச்னையாகும். பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில் இந்த பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


* கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்: நானாவதி கமிஷன் பதவிக் காலம் 16-வது முறையாக நீட்டிப்பு

ஆமதாபாத்,ஜூன் 21: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நானாவதி கமிஷனின் பதவிக் காலம் 16-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

 குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ். 6-வது பெட்டி சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டது.

 இதில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். ரயில் பெட்டி எரிந்ததில் 25 பெண்கள், 15 குழந்தைகள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். ÷

 இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 1263 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 298 தர்காக்கள், 290 மசூதிகள், 17 கோயில்கள், 3 கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டன.

 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் கலவரம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் நானாவதி, அக்ஷய் மேத்தா ஆகியோரை கொண்ட நானாவதி கமிஷனை குஜராத் அரசு 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் அமைத்தது. இந்த கமிஷன் 4145 சாட்சிகளை விசாரித்துள்ளது. இப்போது ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் தத்தின் சாட்சியத்தைப் பதிவு செய்து வருகிறது.

 இது வரை நானாவதி கமிஷனின் பதவிக் காலம் 15 முறை நீடிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த கமிஷனின் பதவிக் காலம் 16-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

* ராசா மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்த உத்தரவு
புது தில்லி, ஜூன் 21: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 ராசா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில் அவரை மத்திய அமைச்சரவையில் நீடிக்க விட்டது ஏன் என்பது போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அளிக்கும்படி தகவல் உரிமை ஆணையத்திடம் ஒருவர் மனு செய்திருந்தார். அந்த மனுவை தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருந்தது.

 இதற்குப் பதில் அனுப்பிய பிரதமர் அலுவலகம் ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவித கோப்பும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்துவிட்டது.இதையடுத்து அந்த நபர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் மனு செய்திருந்தார். இதையடுத்து ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அளிக்கும்படி மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி பிரதமர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக சைலேஷ் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் ராசா மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களின் உத்தரவாத நகல்களை ஜூலை 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

* மகளிர் மசோதா: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இந்நிலையில்,இந்த கூட்டத்தொடரிலாவது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மீராகுமார் விரும்புகிறார்.

இதனையடுத்து இது குறித்து விவாதிப்பதற்காக மீரா குமார் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார்.
   
மாநிலச் செய்தி மலர் :

* பிரான்ஸில் 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

21-chateaude-chantilly-france3.jpg

பாரிஸ்: 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு பிரான்ஸில் நடக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடத்தும் இந்த மாநாடு செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடக்கிறது.

இது தொடர்பாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளருமான துரை கணேசலிங்கம், செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, பிரான்ஸ் கிளை செயலரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இந்தாண்டு செப்டம்பர் 24, 25 சனி, ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸின் எவ்ரி (Evry) நகரில் நடைபெற உள்ளது.

இந்த இயக்கம் தென் ஆப்பிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1977ல் சென்னையிலும், 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்,1989ல் மலேசியாவிலும்,1992ல் ஆஸ்திரேலியாவிலும், 1996ல் கனடாவிலும, 1999ல் சென்னையிலும், 2001ல் தென் ஆபிரிக்காவிலும், 2004ல் புதுவையிலும், 2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு, வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதுவரை இந்த இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு, தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர் ஒற்றுமை பேணல்,முதலான விஷயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.

இந்த நோக்கங்களுடன் தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க் கலை மீட்பு,

தமிழ்க் கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.

மாநாட்டில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு, தொடர்பான ஆவணக்காட்சியும், தமிழர் வாழ்வியல் வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள், இறுவெட்டுக்கள், ஒலி இழை நாடாகள், நிழற்படங்கள் முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மாநாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவையும் இடம்பெற உள்ளன.

இவற்றில் சிறந்தவற்றை உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.

எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர், மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத் தர விரும்புவோர், கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர் அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்," என்று கூறப்பட்டுள்ளது.

* எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வருகிற ஜூன் 30 ஆம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்குகிறது.

இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் இன்று வெளியிட்டார்.

இதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்னும் மாணவி ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாமக்கல்லைச் சேர்ந்த தட்ஷிணி என்னும் மாணவி இரண்டாவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்னும் மாணவி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

* சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக்கம்
சென்னை: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீர் நில அதிர்ச்சி ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.

சேலம், கிருஷ்ணகிரி, ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு வரை இந்த நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தனர்.

காலை 5.21 மணிக்கு ஏற்பட்ட ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நில அதிர்ச்சியால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. வாழப்பாடி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், ராசிபுரம் போன்ற பகுதிகளில் நில அதிர்ச்சி சற்று பலமாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் மிதமான அதிர்வு காணப்பட்டது. வேலூர்- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளி்ல் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் எதும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் மையம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருந்தது. அதே போல பனைமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உமையாள்புரம், உத்திரகவுன்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த நிலநடுக்கம் தீவிரமாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த 3 மாவட்டங்களிலும் தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 8.35 மணியளவில் நில அதி்ர்வு ஏற்பட்டது. வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்தன.

அடுத்த சில நிமிடங்களில் 8.40 மணி்க்கும் 2வது முறையாக மீண்டும் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.

மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், இந்த சிறு பூகம்பத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* ஜூலை 8 முதல் பி.இ கவுன்சிலிங்-எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு
சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்ந்து 35 நாட்களுக்கு நடைபெறும். சென்னையில் மட்டுமே இந்த கவுன்சிலிங் நடக்கும்.

தமிழகத்தில் உள்ள 494 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1.25 லட்சம் இடங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்துகிறது.

இதில் 1.42 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் நேற்று வழங்கப்பட்டன.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்களை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,

மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை www.annauniv.edu/tnea2011 என்ற முகவரியில் பார்க்கலாம். இந்த ஆண்டு கவுன்சிலிங் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் நடக்கும்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 509 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. அதில் பொது கவுன்சிலிங்குக்கு உரியவர்கள் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 பேர். அவர்களில் 83 ஆயிரத்து 950 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 825 பேர் மாணவிகள். பிளஸ்-2 தொழில்கல்வி படித்து விண்ணப்பித்தவர்கள் 5578 பேர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 348 பேர். 230 பேர் மாணவிகள்.

விளையாட்டு இடஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 457 பேரும், மாற்றுத்திறனாளிகள் 464 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 2 ஆயிரத்து 193 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு தான். காரணம் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருவதற்கு முன்னதாக என்ஜினீயரிங் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் தேர்வு முடிவு வெளி வந்து மாணவர்களுக்கு அவர்களின் மார்க் தெரிந்து விட்டது. இதனால் குறைந்த மார்க் எடுத்த பலர் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கவில்லை.

என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மார்க்குகளின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயார் செய்யப்படும்.

பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெற்றிருக்கும்போது முதலில் கணிதம், பின்னர் இயற்பியல், அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியியல் பாடத்தில் உள்ள மார்க்கை கொண்டு யார் அதிகம் எடுத்தார்களோ அவர்களை முதலில் கவுன்சிலிங்குக்கு அழைப்பார்கள்.

இதிலும் ஒரே மாதிரி வந்தால் பிறந்த தேதியில் யார் சீனியரோ அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிலும் ஒரே நாளில் பிறந்திருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். ரேண்டம் நம்பரில் யாருக்கு அதிக நம்பர் இருக்கிறதோ அவர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை வழங்கப்படும். ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும். இதை www.annauniv.edu/tnea2011 இணையத்தளத்தில் பார்க்கலாம்.

அடுத்த கட்டமாக விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம் தேதி அன்று நடக்கிறது. முன்னதாக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 29 மற்றும் 29 தேதிகளில் நடைபெறுகிறது.

தொழில்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 6ம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.

ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 775 மாணவ- மாணவிகள் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் 35 நாட்கள் நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு அதற்கான நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுப்பார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் 64 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 63 பேர் மாணவர்கள். 24 ஆயிரத்து 347 பேர் மாணவிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சலுகை தொடரும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக கிடந்தது. அந்த இடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதற்கான பணிநடைபெற்று வருகிறது.

துணைவேந்தர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் நேர்மையான முறையில் நியமிக்கப்படுவார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேர்வுக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

* வேளாண் பல்கலை., : தேதி நீட்டிப்பு

 கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை., டீன் உதயசூரியன் தெரிவித்தார். மேலும் வரும் ஜூலை 13ம் தேதி இப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

* பார்வை குறைபாடு உடையவர் கல்லூரி முதல்வராக நியமனம்
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வராக, பார்வை குறைபாடுடைய பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கிலத்துறை முதுகலை பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சிக்கண்ணா கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பார்வை குறைபாடு உடையவர்; தமிழக அரசு கல்லூரிகளில் பார்வை குறைபாடு உடைய ஒருவர், முதல்வராக பதவி வகிப்பது இதுவே முதல்முறை. இவர், ஹரியான பி.பி.எஸ்., பெண்கள் பல்கலையில் ஆங்கில விரிவுரையாளர் மற்றும் துறை முதன்மையராக பணியாற்றி உள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருந்து வருகிறார். சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :
மன அழுத்தம் நீக்கும் ஜாதிக்காய்

21-myristica-fragrans300.jpg

தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு.

இது ஜாதிக்காய் பற்றி எழுதப்பட்டுள்ள பழம் பாடல்.

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல்.

ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது.

ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்

அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும் , காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவறல் பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம்,குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

வர்த்த்கச் செய்தி மலர் :

* சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

மும்பை, ஜூன் 21: கடந்த நான்கு நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சிறிது முன்னேற்றத்தை சந்தித்தது. தொடர்ந்து 7 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை லேசாக முன்னேறியதும் பங்குச் சந்தை மீட்சிக்குப் பிரதான காரணமாக அமைந்தது. 54 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 17,560 புள்ளிகளானது.

 தேசிய பங்குச் சந்தையில் 18 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,275 புள்ளிகளானது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.67 சதவீதம் உயர்ந்து ரூ. 848.50-க்கு விற்பனையானது.

 இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை 0.67 சதவீதம் உயர்ந்து ரூ. 2,742.45-க்கு விற்பனையானது.

 கடந்த சில நாள்களாக ஏற்பட்ட சரிவு தாற்காலிகமானது என்று முதலீட்டாளர்கள் கருதியதால், செவ்வாய்க்கிழமை துணிந்து முதலீடுகள் செய்தனர். இதனால் சரிவிலிருந்து பங்குச் சந்தை மீண்டது.

 பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த விலையில் பங்குகளை வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் முதலீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் புள்ளிகள் கணிசமாக உயர்ந்தது.

 ஆசிய சந்தையில் ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரேக்கத்துக்கு உதவுவது என்று ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கென தனி நிதியத்தை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது.

 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த 7 நாள்களில் ரூ. 2,379 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

 மோரீஷஸிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்துக்கு வரி விதிக்கப்படும் என தகவல் வெளியானதால் திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. ஆனால் அத்தகவல் தவறானது என அரசு விளக்கியதையடுத்து செவ்வாய்க்கிழமை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இதுவும் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.

 டிசிஎஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக 3.24 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக ஹெச்டிஎப்சி 1.78%, ஹீரோ ஹோண்டா 1.39%, ஹெச்டிஎப்சி வங்கி 1.15% அளவுக்கு உயர்ந்தன.

 ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவன பங்கு விலை அதிகபட்சமாக 3.92 சதவீதம் சரிந்தது. இதற்கு அடுத்தபடியாக டிஎல்எப் 2.92%, ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரக்சர் 2.56%, எஸ்பிஐ 1.38%, ஐசிஐசிஐ 1.06%, மாருதி சுஸýகி 0.99% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

 பங்குச் சந்தையில் கட்டுமான நிறுவனப் பங்குகள் 1.78 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இரண்டாம் நிலை நிறுவனப் பங்குகள் பெருமளவு சரிவைச் சந்தித்தன. செவ்வாயன்று 1,667 நிறுவனப் பங்குகள் நஷ்டமடைந்தன. 1,125 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,351.32 கோடி.

விளையாட்டுச் செய்தி மலர் :

* நியூஸீலாந்து கேப்டனாக ராஸ் டெய்லர் தேர்வு  

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை தோல்விக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து டேனியல் வெட்டோரி விலகியதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ராஸ் டெய்லரும், பிரண்டன் மெக்கலமும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

ராஸ் டெய்லரின் பெயரை நியுஸிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ஜான் பச்னன், தேசிய பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் தேசிய தேர்வுக் குழு மேலாளர் மார்க் கிரீட்பேட்ச் ஆகியோர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அவரை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில்

மூலவர்    :    தெய்வநாயகேஸ்வரர்
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    கனககுசாம்பிகை
தல விருட்சம்    :    மரமல்லிகை
தீர்த்தம்    :    மல்லிகா புஷ்கரணி
ஆகமம்/பூஜை     :    காமீகம்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர்
ஊர்    :    எலுமியன்கோட்டூர்
மாவட்டம்    :    காஞ்சிபுரம்
மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:


திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுஉரை தனதுஉரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் கலையினார் மடப்பினை துணையொடும் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயில் ஆலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.

 தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.

இங்குள்ள தலவிநாயகர் ,குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

 தலபெருமை:


தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், "தெய்வநாயகேஸ்வரர்' என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், "அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் "எலும்பியங்கோட்டூர்' என்று மருவியது.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

  தல வரலாறு:


தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார்.

தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.

ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் "இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு!' என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.

தேவகன்னியர்கள் வழிபாடு: அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன், "யோக தெட்சிணாமூர்த்தி'யாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார்.

இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.

கோயில் நுழைவுவாயில் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன், "ரம்பாபுரிநாதராக' 16 பேறுகளை அழிக்கும் படி, 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

 திருவிழா:

குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.

திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆன்மா - அன்னை

ஆன்மா இறைவனிடமிருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் அவனைவிட்டுப் பிரிவதில்லை, அவனிடம் திரும்பச் செல்கிறது, ஆனால் சிருஷ்டியை விட்டு மறைந்துவிடுவதில்லை.

தனித்தன்மையை ஏற்றுக்கொண்ட, ஆனால் தெய்வத்தன்மையை இழந்துவிடாத, இறைவனே ஆன்மா. ஆன்மாவில் தனித்தன்மை பெற்ற ஜீவனும் இறைவனும் எல்லையில்லாக் காலத்திற்கும் ஒன்றாக உள்ளனர். ஆகவே உன்னுடைய ஆன்மாவை அறிவது என்பது இறைவனுடன் ஐக்கியப்படுவதாகும். ஆகவே ஆன்மா செய்ய வேண்டிய வேலை மனிதனை உண்மையான ஜீவனாக ஆக்குதல் என்று சொல்லலாம்.

ஆன்மா நித்யமானது, எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. இந்த திறமையின்மைகள், இயலாமைகளெல்லாம் அது சம்பந்தப்பட்டவரை உண்மையான இருப்புடையவை அல்ல.

வினாடி வினா :

வினா - சுரங்க இரயில் பாதை கொண்ட ஒரே இந்திய மாநிலம் எது ?

விடை - மேற்கு வங்காளம்.

இதையும் படிங்க :

பராமரிப்பு இல்லாததால் காணாமல் போகும் ஏரிகள்

large_261872.jpg

நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாய் இருக்கும் கண்மாய்கள், மெல்ல மெல்ல காணாமல் போகும் நிலை தொடர்வதால் கிராம வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அவற்றின் கட்டமைப்பே சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்பரப்பு நீர்வள ஆதாரம், 853 டி.எம்.சி.,யாகும். இதில் அண்டை மாநிலங்கள் நமக்கும் அளிப்பது 261 டி.எம்.சி., தமிழகத்தில் 75 பெரிய அணைகள், ஏழு சிறிய அணைகள் மூலம் 233.2 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இதில், 13 ஆயிரத்து 710 ஏரிகள், நீர்வளத்துறையினரால் பராமரிக்கப்படுகிறது. கடந்த 2008 -09ம் ஆண்டு கணக்கின் படி, 72.43 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், 18.93 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆற்று கால்வாய் மூலமும், 13.34 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏரிகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மீதம், அதாவது பாதி அளவிற்கு மேல், 39.89 ஏக்கர் நிலம் நிலத்தடி நீர்மட்டத்தையும், இதர நீர் ஆதாரத்தையும் நம்பியே உள்ளன. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் 85 சதவீதம் பயன்படுவதால், அது வேகமாக குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 145 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாப்பு இருக்கிறது. எட்டு ஒன்றியங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்øமையை அடைந்துள்ளது. 57 ஒன்றியங்கள் மிக அபாயகரமாகவும், 33 ஒன்றியங்கள் அபாயகரமான அளவிலும் நீர்மட்டம் உள்ளது. 142 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட காரணம், மழை நீரின் அடிப்படை ஆதாரங்களான ஆறு, குளம், கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததே ஆகும்.

அத்துடன், கடந்த 50 ஆண்டுகளாக அதிக அளவு ஆழ்குழாயை நம்பி நடத்தப்படும் விவசாயம் முக்கியத்துவம் பெற்றது காரணமாகும். தடுப்பணை அல்லது சிற்றாறுகளை இணைத்து நீர் விரயத்தைத் தவிர்க்கும் புதிய திட்டங்கள் பெரும் அளவில் இல்லை. இதில், ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவை அங்குள்ள கண்மாய்களே. வடமாவட்டங்களில் இவற்றை ஏரிகள் என்றும், தென் மாவட்டங்களில் இவற்றை கண்மாய் என்றும் அழைக்கின்றனர். முன்பு இவற்றை பராமரிக்கும் பணி, அந்தந்த பகுதி மக்களிடமே இருந்தது. ஆனால் இப்போது நடைமுறை சாத்தியம் அல்ல. மேலும், செங்கல்பட்டு ஏரிகள் வளம் மூலம் ஏராளமாக பாசனப் பரப்பும், நெல்விளைச்சலும் இருந்ததாக பிரிட்டிஷார் ஆவணங்கள், சாட்சியம் கூறுகின்றன.

ஏரிகளை பாதுகாக்க தற்போது பல்வேறு மாநிலங்களில், "பாசனத் தலைவர் சபை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் பாசன வசதி பெறும் நில உரிமையாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இச் சபைக்கு முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தூர் வாருதல், மராமத்து செய்தல், பாசன முறைகள் ஆகியவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகளை பொதுப்பணித்துறையே பராமரித்து வருகிறது. அரசின் வசம் இருந்தும் ஏராளமான கண்மாய்கள், ஆக்கிரப்பாளர்கள் கையில் சிக்கி உருத்தெரியாமல் சிதைந்து வருகின்றன. இதில் அரசியல் தலையீடு அதிகரித்ததால் சீர்குலைவு ஏற்பட்டது. ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை ஏரிகளை பராமரிக்கவும், தூர் வாரவும் கணிசமான தொகை ஒதுக்குகிறது. இருப்பினும், இப்போதும் பெரும்பாலான ஏரிகள் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத் தாமரை போன்ற நீர் உறிஞ்சும் தாவரங்களால் நிறைந்து காணப்படுகின்றன. அவை, சீரமைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

இது குறித்து, விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூறியதாவது: முன்பு கண்மாய்களை பாதுகாக்க, "லஸ்கர்' என்பவர்கள் இருந்தனர். இப்போது அது போன்ற முறை இல்லை. இதனால், தண்ணீர் திறப்பு, ஷட்டர் பராமரிப்பு, கரைகள் சீரமைப்பு போன்றவை சரிவர நடப்பதில்லை. சென்னையில் மட்டும் முன்பு நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. 1960, 62ம் ஆண்டுகளில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏரி, ஆற்று பாசனத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஏரிகளில் கொண்டு வரப்பட்ட காடு வளர்ப்பு திட்டம், ஏரிகளில் தூர் வாரப்படாமல் செய்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில், நீர், நில வள மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில், உலக வங்கியிடம் 2,400 கோடி ரூபாய் கடன் பெற்று ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

குடிநீர் வசதி, பாசன வசதி, இவைகளை கருத்திற்கொண்டு நீர்நிலைகள் அமைப்பது பற்றி இனி ஒரு ஒட்டுமொத்த அணுகுமுறை தேவை. தடுப்பணைகள், தற்போது இருக்கும் நிர்நிலைகளில் சேரும் மாசு முற்றிலும் தடுக்க அடிப்படை அணுகுமுறை, அதற்கான செயல் திட்டம் தேவை. மேலும், உலக வங்கி போன்ற அமைப்புகளில் இருந்து பெறப்படும் திட்டம் என்றால், அதன் பயன் முற்றிலும் மக்களுக்கு செல்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தினால் ஒழிய, இனி எதிர்வரும் காலங்களில் நீர்நிலைகள் முற்றிலும் மாசற்றதாக காப்பது என்பது சுலபம் அல்ல. நீர்நிலைகள், தேசிய சொத்து என்ற கருத்துடன் அரசு மேற்கொள்ளும் திட்டப்பணிகள் அமைய வேண்டுமே ஒழிய, ஐந்தாண்டுகள் ஆட்சிபுரியும் கட்சிகளின் செயல்திட்டம் அல்ல என்பதும் வெளிப்படையாக அமைய வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது.

வி. கோபாலகிருஷ்ணன்.


* நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

large_261929.jpg

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே, நான்கு தலைமுறையைச் சேர்ந்த, 90 குடும்பங்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊராட்சி, கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி, சுப்பராய செட்டியார். இவருடைய வாரிசுகள், ஐந்து தலைமுறையை எட்டி விட்டனர். இதில், நான்கு தலைமுறை உறவினர்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குருக்கம்பாளையம், ராயர் பெருமாள் கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரங்கசாமி தலைமையில், இந்த சந்திப்பு நடந்தது. நான்கு தலைமுறையை சேர்ந்த, 90 குடும்பங்களில், 323 பேர் பங்கேற்றனர். கோவை, வாராஹி மணிகண்ட சாமிகள் ஆசி வழங்கி பேசுகையில், "பெரியோரை மதித்தல், அனைவரிடமும் அன்பு செலுத்துதல் ஆகியவை, குடும்பம் சிறக்க உதவும். நாம், நம் குடும்பம் என்ற வட்டத்துக்கு வெளியே வந்து, சமுதாயம், ஊர் என்ற அளவில், முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பல தலைமுறையினர், ஒரே சமயத்தில் சந்திக்கும் இந்நிகழ்ச்சியில், ஆதரவற்றவர்களுக்கு உதவ, மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: எங்கள் மூதாதையர், 120 ஆண்டுகளுக்கு முன், தேக்கம்பட்டியிலிருந்து பிழைப்புக்காக,கேரள மாநிலம் மண்ணார்க்காடு, கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் அன்னூர் பகுதிக்கு வந்தனர். இதுவரை பெரும்பாலும், வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய தலைமுறையினர், ஆசிரியர் உள்ளிட்ட அரசு பணியிலும், கம்ப்யூட்டர் துறையிலும் நுழைந்து சாதித்து வருகின்றனர். இனி, ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, ஆதரவற்றோருக்கும், வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கும் உதவ, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மூன்று மாநிலங்களிலிருந்து, ஒரு வயது குழந்தை முதல், 90 வயது பாட்டி வரை, பங்கேற்ற இந்த சந்திப்பு, புதிய தலைமுறையினருக்கு, குடும்பம், உறவு குறித்து, புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

புதிய தலைமுறையினருக்கு, குடும்பம், உறவு குறித்து, புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது.


செய்திப் பகிர்வுகள் பயனுள்ளவை. பாராட்டுக்கள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr

Post a Comment