Saturday, June 18, 2011

இன்றைய செய்திகள் - ஜூன் , 18 , 2011




முக்கியச் செய்தி :

tn.jpg


சமச்சீர் கல்வி குறித்து ஆராய புதிய குழு: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, ஜூன் 17: சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் நோக்கில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்திற்கு

எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்திருத்தினை எதிர்த்து ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை  விதித்தது. இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த 15ம் தேதி விசாரித்த நீதிமன்றம், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாடநூல்களின் தரம் ஆகியன குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த குழு ஜூலை 6ம் தேதிக்குள்

தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது:

* தலைவர் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர்

* உறுப்பினர் -  இரு மாநில பிரதிநிதிகள்:

(1) ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

(2) திருமதி. விஜயலட்சுமி சீனிவாசன், முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை.

* உறுப்பினர் -  இரு கல்வியாளர்கள்:

(1) சி.ஜெயதேவ்,  நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி.பள்ளிகள் குழுமம், கோபாலபுரம், சென்னை.

(2). டாக்டர் திருமதி. ஒயி.ஜி.பார்த்தசாரதி, முதல்வர் மற்றும் இயக்குநர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை.

* உறுப்பினர் -  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இருபிரதிநிதிகள்

(1) பேராசிரியர் பி.கே. திரிபாதி, அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுதில்லி.

(2). பேராசிரியர் அனில் சேத்தி, சமூக அறிவியல் துறை,  புதுதில்லி.

* உறுப்பினர் - அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை

* உறுப்பினர் செயலாளர்- பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்.

மேற்கண்ட குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும்  ஜூலை மாதம் 6ம் தேதிக்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்

* அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்!

17-baby-star-water3-300.jpg

புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.

பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.

உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

உலகச் செய்தி மலர் :

* தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் இலங்கை ராணுவம் திடீர் தாக்குதல்
கொழும்பு, ஜூன் 17: இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம், அளவெட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் ராணுவ வீரர்கள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், எம்.பி.க்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இலங்கையில், அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி நிர்வாகிகள் உள்அரங்கில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஆயுதம் ஏந்திய 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அரங்கில் புகுந்து அனுமதியில்லாமல் கூட்டம் நடைபெறுவதாகக் கூறியுள்ளனர்.

உள்கட்சி ஆலோசனைக் கூட்டம் என்பதால் அனுமதி பெறத் தேவையில்லை, அப்படியே அனுமதி பெற வேண்டும் என்றாலும் இந்த விவகாரத்தில் போலீஸôர்தான் தலையிட முடியும் என்று கட்சி நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். இதை ஏற்காத ராணுவ வீரர்கள், திடீரென தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இதில் எம்.பி.க்கள் உள்பட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பிலோ, ராணுவத் தரப்பிலோ இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

* போர்க் குற்ற விடியோ: ஆய்வு செய்ய இலங்கை முடிவு

கொழும்பு, ஜூன் 17: இலங்கை போர் தொடர்பாக பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட மிகக் கொடூரமான காட்சிகள் உண்மையானவைதானா என்பதை ஆய்வு செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது விதிமுறைகள் மீறப்பட்டு, மிகக் கொடூரமான வகையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இலங்கையை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும்

இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் சபையும், இலங்கையில் போர் விதிகள் மீறப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இலங்கை போரின்போது நிகழ்ந்த அத்துமீறல்கள் தொடர்பாக இங்கிலாந்து தொலைக்காட்சி சேனல் வெளியிட்ட விடியோ பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளதாக இரு இனங்களுக்கிடையிலான சமரச கமிஷன் (எல்எல்ஆர்சி) செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மண் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே போர் நிகழ்ந்த சமயத்தில் வெளியான படத் தொகுப்பு ஆதாரங்களை பார்வையிட்டு வருவதாகவும், பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்ட விடியோ ஆதாரத்தையும் ஆய்வு செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ ஆதாரங்கள், ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரப் பதிவுகளின் தொகுப்பாக உள்ளது. அந்த விடியோ ஆதாரங்கள் சரியானவைதானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் எல்எல்ஆர்சி இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐக்கியநாடுகள் சபை பொதுச் செயலரின் நிபுணர் குழு கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

* ஜவாஹிரியையும் கொல்வோம்: அமெரிக்கா திட்டவட்டம்

killer.jpg

வாஷிங்டன், ஜூன் 17: அல் காய்தா அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அல்-காய்தா அமைப்பு தங்கள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அந்த அமைப்பையே முற்றிலுமாக இல்லாமல் செய்வதுதான் அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். ஜவாஹிரியைப் பிடிப்பது அல்லது ஒசாமா பின் லேடனைப் போல சுட்டுக் கொல்வது உள்ளிட்ட நடவடிக்கையை ஜவாஹிரிக்கு எதிராகவும் எடுப்போம் என்று அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் கூறினார்.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அல்-காய்தா அமைப்பின் புதிய தலைவராக ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டிருப்பது தமக்கு எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை என்று குறிப்பிட்ட முல்லன், அல்-காய்தா அமைப்பின் தலைவராக யார் பொறுப்பேற்றாலும் அவரை பிடித்துக் கொன்று விடுவது ஒன்றுதான் சிறந்த வழி என முன்னாள் ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன்னதாக உறுதிபட தெரிவித்ததாகக் கூறினார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜவாஹிரிக்கு சில சிக்கல்கள் இருக்கக் கூடும். ஏனெனில் முந்தைய தலைவரான ஒசாமா பின் லேடன், அந்த இயக்கம் தோன்றியதிலிருந்து தலைவராக செயல்பட்டவர். மேலும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பிரச்னை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஆனால் இவையனைத்தும் ஜவாஹிரியிடம் கிடையாது. மேலும் அவர் எகிப்தியர் என்பதால் அல்-காய்தா அமைப்பினரிடையே ஒருவித சந்தேகம் அவர் மீது உள்ளது.

ஒசாமா பின் லேடனைக் கண்டுபிடிப்பதற்கு பெருமளவில் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டன. ஆனாலும் அல்-காய்தா அமைப்பு மீண்டும் துளிர்விட அனுமதிக்கப்படக்கூடாது. அவ்விதம் அவர்கள் செயல்பட ஆரம்பித்தால் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை, அதாவது பின் லேடனின் பிரதான நோக்கத்தை செயல்படுத்தத் தொடங்கிவிடுவர். எனவே அவர்களது செயல்பாட்டைத் தடுக்க ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ஸ் குறிப்பிட்டதையும் முல்லன் சுட்டிக் காட்டினார்.

புதிய தலைவரைத் தேர்வு செய்ய 7 வார கால தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களது செயல்பாடு வழக்கமாக இதுபோலத்தான் இருக்கும் என்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.

* அமெரிக்காவில் நிலநடுக்கம்

அலாஸ்கா, ஜூன் 17: அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி இருந்தது.

நிலநடுக்கம் பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது 80 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டது. இதனால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரமும்,காயம் அடைந்தவர்கள் விவரமும் தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* பான் கி மூன் மீண்டும் ஐநா தலைவர்

நியூ யார்க், ஜூன் 17: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் பான் கி மூன் அப்பதவியில் மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.

15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை அவருக்கு மீண்டும் ஐந்தாண்டு பதவிக்காலம் தருவதை ஆமோதித்து வாக்களித்தது. இதைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) 192 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுக்குழு அவரை அந்தப் பதவியில் நீடிக்கச் செய்யும் விதமாக வாக்களிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் வாக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டதால், பொதுக்குழுவின் வாக்கு என்பது வெறும் சடங்கு மட்டுமே என்று கருதப்படுகிறது.

தென் கொரியாவைச் சேர்ந்த பான் கி மூனுக்கு 67 வயதாகிறது. 2006-ம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தென் கொரியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார். ஐ.நா. பொதுச் செயலாளராக இவரது இரண்டாவது பதவிக்காலம் 2012-ம் ஆண்டு தொடங்கும். 2016 வரை இப்பதவியில் இருப்பார

தேசியச் செய்தி மலர் :

* கனிமொழிக்கு ஜாமீன் தந்தால் ஆதாரங்களை அழிப்பார், சாட்சிகளை கலைப்பார்: சிபிஐ
kani.jpg

டெல்லி: திமுக எம்பி கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அவரை விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார், ஆதாரங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ கூறியுள்ளது.

முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி தரப்பட்டது தொடர்பாக கனிமொழியையும் அதன் நிர்வாகி சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது. இந்தப் பணம் லஞ்சம் என்கிறது சிபிஐ. ஆனால், கடன் என்கிறது கலைஞர் டிவி.

இந் நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழியும் சரத்குமாரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதந்தர் குமார் ஆகியோர், கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட பணம் குறித்தும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்தும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இன்று சிபிஐ ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில் கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். மேலும் கலைஞர் டிவிக்கு தரப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், அது கடன் தொகை அல்ல. 2ஜி வழக்கில் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது. முன்னதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் பல்வேறு விவகாரங்களையும் கவனமாக பரிசீலித்து தான் இந்த இருவருக்கும் வழங்க மறுத்துவிட்டன. இதனால் உச்ச நீதிமன்றமும் ஜாமீன் தரக் கூடாது.

இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவர், ஆதாரங்களை அழித்துவிடுவர் என்று சிபிஐயின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

* மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்: 6 மாதங்களில் முற்றிலும் ஒழிக்கப்படும்: பிரதமர்

புது தில்லி, ஜூன் 17: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நடைமுறை அடுத்த 6 மாதங்களில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சமூக நீதி நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் இந்த வாக்குறுதியை அளித்தார்.

மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்: நாட்டின் பல்வேறு பகுதிகளில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னமும் நீடிப்பது வேதனையளிக்கிறது. இப் பணியில் தாழ்த்தப்பட்ட மக்களை ஈடுபடுத்துவோர் மீது மாநில அரசுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் அடுத்த 6 மாதங்களில் இந்த அவல நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

லட்சிய கிராமத் திட்டம் விரிவாக்கம்: தமிழ்நாடு, அசாம், பிகார், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களில் லட்சிய கிராமத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த முன்னோடித் திட்டத்தின் சாதக, பாதகங்களைக் கண்டறிந்து 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், லட்சிய கிராமத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும். இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் வேகமாக முன்னேற வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்தப் பணியை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் நீடிக்கிறது. அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை மாநில அரசுகள் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்களின் வருமான வரம்பை திருத்தி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சட்டம்: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக புதிய சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை வரையறுக்கும் பணியில் மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போதைய சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டமசோதா இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனைக் காக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும், அவை போதாது என்றே கருதுகிறேன். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மேலும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

* சாய்பாபாவின் அறையில் ரூ.11 கோடி, 98 கிலோ தங்கம்
புட்டபர்த்தி, ஜூன் 17: ஆன்மிக குரு ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அறையில் 11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 98 கிலோ தங்கம் இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா முக்தி அடைந்தார். அதன் பின்னர் அவரது தனியறையான "யஜுர்வேத மந்திர்' திறக்கப்படாமலேயே இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதால் சத்ய சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் சாய்பாபாவின் தனியறையைத் திறக்க முடிவு செய்தனர்.

அதன்படி வியாழக்கிழமை முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் சாய்பாபாவின் தனியறை திறக்கப்பட்டது.

சாய்பாபாவின் தனியறையிலுள்ள பொருள்கள் குறித்த கணக்கெடுப்பு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதா மற்றும் சாய்பாபாவின் உறவினரும் அறக்கட்டளை உறுப்பினருமான ஆர்.ஜே.ரத்னாகர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

பொருள்களின் மதிப்பீடுகளை அளவிட வருமான வரித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட "மதிப்பீட்டாளரும்' உடனிருந்தார். தனியறையிலிருந்து 11.56 கோடி ரூபாயும், 98 கிலோ தங்கமும், 307 கிலோ வெள்ளியும் எடுக்கப்பட்டன. பணம் பிரசாந்தி நிலையத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சத்ய சாய் சேவா அறக்கட்டளையின் கணக்கில் முதலீடு செய்யப்பட்டதாக ரத்னாகர் தெரிவித்தார்.

* தமிழ்வழிப் பள்ளிகளில் தட்டுப்பாடின்றி கிடைக்குமா பாடநூல்?
வே. சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஜூன் 17: புதுதில்லியில் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டிலாவது தமிழ்வழிப் பாடநூல்கள் போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர், பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுதில்லி இந்தர்புரி, திரிலோக்புரி, கல்யாண்புரி, ஜக்கூர்பூர், மங்கோல்புரி, ஆஸ்ரமம், வசீர்பூர் ஆகிய 7 இடங்களில் தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளைச் சுற்றி இப் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் அதிக அளவில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பெற்றோர்களின் ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகமும், தமிழ்வழிப் பாடநூல்கள் உரிய நேரத்தில், போதிய அளவில் மாணவர்களுக்குப் கிடைக்காமல் போவதும் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

""தமிழ்வழிப் பாடநூல்கள் தமிழகத்தில் இருந்து பெறப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளாகவே தமிழ்வழிப் பாடநூல்கள் மாணவர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை.

பாடநூல்கள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தில்லி மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசை அணுகி பாடநூல்களை விரைந்து பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழ்வழி மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

""சென்ற ஆண்டில் தமிழ்ப் பாடநூல் கிடைக்காதபோது தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் இருந்து பெற்று மாணவர்களுக்கு வழங்கிவிட்டோம். இருப்பினும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் போனதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பாடநூல்களை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் வாங்கி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை மாணவர்கள் நோட்டில் எழுதிப் படிக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பாடத்திற்குரிய புத்தகம் இன்றி, பாடங்களை எழுதிப் படிப்பது சுமை தருகிறது. இப்பிரச்னைகூட மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு ஏன் காரணமாக இருக்கக் கூடாது?'' என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு தமிழ்வழி ஆரம்பப் பள்ளியிலும் 200 முதல் 250 மாணவர்கள் வரை பயின்று வந்தனர். இப்போது 7 பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 1,000 மாணவ, மாணவியர் மட்டுமே பயில்வதாக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.

""மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வி உதவி என பலவற்றிலும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து தருகிறது.

ஹிந்தி அதிகம் பேசுவோர் வாழும் தில்லியில் தமிழ், உருது ஆகிய இரு மொழிகளுக்கு மட்டுமே பயிற்றுமொழியில் பள்ளி நடத்துவதற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயில்வதற்கு ஏற்ப தேவையான தமிழ்வழிப் பாடநூல்களையும் முன்கூட்டியே தமிழகத்தில் இருந்து பெற்று வழங்கினால் நன்றாக இருக்கும். பாடநூல்கள் தங்குதடையின்றி வழங்குவதற்கு தமிழக அரசு உதவி செய்தால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்'' என்றார் மற்றொரு ஆசிரியர்.

தமிழ்வழி மாநகாராட்சிப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் கற்கும் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை வேறு பள்ளியில் தொடங்கும்போது தமிழ்ப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ படிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதுவும், தமிழ்வழிக் கல்வி தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் பெற்றோர்களிடையே ஆர்வம் குறையக் காரணம் ஆகிவிட்டது. 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறினார்.

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

""மும்பை போன்ற இடங்களில் இயங்கும் தமிழ்வழிக் கல்வி பள்ளிகளுக்கு பாடநூல்களை வழங்க தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜூலை 1-ம் தேதி தில்லியில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தில்லி மாநகராட்சி தமிழ்வழி தொடக்கப் பள்ளிகளில் அனைத்துப் பாடநூல்களையும் இலவசமாக வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலிலதா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தில்லிவாழ் தமிழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* கொல்கத்தாவில் கன மழை: 550 மீனவர்கள் மாயம்

rains.jpg

கொல்கத்தா,ஜூன் 17: கொல்கத்தாவில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற 550 மீனவர்கள் மாயமாகி விட்டார்கள்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலும்,பக்கத்து மாவட்டங்களிலும் கடந்த வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கொல்கத்தா நகர தெருக்களில் மழை நீர் முழங்கால் அளவுக்கு வெள்ளம் போல் ஓடியது. தண்டவாளத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொல்கத்தா நகரில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை 25 மி. மீ. மழை கொட்டியது.

இதேபோல் 24 பர்கானா மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இங்கு பல இடங்களில் மரங்கள் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே பலத்த மழைக்கு காரணம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 2 நாள்கள் மழை நீடிக்கும் என்றும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

550 மீனவர்கள் மாயம்

24 தெற்கு பர்கானா மாவட்டத்தில் இருந்து வியாழக்கிழமை 33 படகுகளில் 550 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கதி என்ன வாயிற்று என்பது தெரியவில்லை. இவர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் கடலோரக் காவல் படையும், இந்திய கப்பற்படையும் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று மீனவர்களை தேடி வருகிறனர்.

இந்த நிலையில் காணாமல் போன மீனவர்கள் வங்காளதேச நாட்டுக் கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் மேற்கு வங்க அரசு வங்காளதேச நாட்டுத் துணைத் தூதரை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க உதவும்படி கேட்டுள்ளது.

* லூப் டெலிகாம் தலைமை நிர்வாகியிடம் சிபிஐ விசாரணை
புது தில்லி, ஜூன் 17: லூப் டெலிகாம் நிறுவனத்தின் உரிமை மற்றும் பங்குகள் வைத்திருப்பதற்கான முறை ஆகியவை தொடர்பாக அதன் தலைமை செயல் அதிகாரி சந்தீப் பாசுவிடம் சிபிஐ வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் சிபிஐ மூன்றாவது துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.

சிபிஐயிடம் நேரில் ஆஜரான பாசுவிடம், எஸ்ஸôர் குழுமத்துடன் லூப் டெலிகாம் கொண்டிருப்பதாக கூறப்படும் நிதி பரிவர்த்தனை குறித்தும் அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை எஸ்ஸôர் குழுமம் முறைகேடாக பெற, அதன் சார்பாக லூப் டெலிகாம் நிறுவனம் செயல்பட்டதா என்று சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

* தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமைகள் ஆணையம்

புதுதில்லி, ஜூன் 17: தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

கோவை மாவட்டம் கரிக்கிலிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வசந்தகுமார். தலித் இனத்தைச் சேர்ந்தவன். அங்கு நிலவி வந்த வறட்சியின் காரணமாக கிராமத்திலுள்ள பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளான்.

இதை வேறோர் இனத்தைச் சார்ந்த 3 பெண்களும் மற்றொரு நபரும் கண்டித்ததுடன் சிறுவனை அடித்துள்ளனர்.

காயமடைந்த சிறுவன் வசந்தகுமார் சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டான். இந்த நிகழ்வு பத்திரிகையொன்றில் செய்தியாக வந்துள்ளது.

மேலும் தலித்துகள் வீட்டுக்கு வெளியே செல்போன் பேசவும், உள்ளூரில் முடி வெட்டிக் கொள்ளவும் கிராமத்தினர் தடை விதித்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பத்திரிகை செய்தியையே தன்னேற்பு மனுவாக எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், இதுபோன்று தலித்துகளின் மீதான

தாக்குதலில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தையும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.

பத்திரிகையில் வந்த செய்தி உண்மையாக இருந்தால் அது 1989-ம் ஆண்டின் "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை'

மீறியதாகக் கருதப்படும் என மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* இன்று ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்: ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்

large_258943.jpg

சென்னை: சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.

இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பை பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது. அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்
சென்னை, ஜூன் 17: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் மாற்றம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலைபேிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

* தூத்துக்குடியை வளப்படுத்தும் கொழும்பு கப்பல் சர்வீஸ்

large_258954.jpg

தூத்துக்குடியில் இருந்து, கொழும்புக்கு பயணிகள் கப்பல் சர்வீஸ் துவக்கப்பட்டிருக்கிறது. கடந்த 104 ஆண்டுகளுக்குப் பின் துவங்கப்பட்ட இந்த சர்வீஸ், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., கண்ட கனவை மெய்பிக்கும் நல்ல பணி. முதல் பயணிகள் கப்பலாக, "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல் பயணித்ததை, மக்கள் ஆர்வமுடன் வரவேற்றுள்ளனர். விமானச் சேவையை விட குறைந்த கட்டணம் கொண்ட இந்த பயணிகள் கப்பல் சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வாசன் துவக்கி வைத்திருக்கிறார்.

இன்று இலங்கை - இந்திய உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதல், அங்கு தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றங்கள் பெரிதாக உருவெடுத்திருப்பதால், இந்த கப்பல் சேவை தேவையே இல்லை என, சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இன்றைய உலகச் சூழலில் அண்டை நாடுகள் என்பதை, நாம் நிர்ணயிப்பது இல்லை. பூகோள ரீதியாக ஏற்படும் இயற்கை அமைப்பாகும். பாகிஸ்தானுடன் பயணிகள் போக்குவரத்தும், ஓரளவு வர்த்தகப் பரிமாற்றமும் இன்னமும் நடக்கிறது. சீனா - இந்தியா எல்லையில் லாசா பகுதியில், வர்த்தகப் பரிமாற்றம் நடக்கிறது. ஏனெனில், "சார்க்' நாடுகள் வர்த்தகப் பரிமாற்ற அடிப்படையில், இந்தியா தனது சிறப்புத் தன்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அதையும் விட, தூத்துக்குடி துறைமுகம் அதிக அளவில் வர்த்தகம் கையாளும் துறைமுகமாக மாறிய பின், அங்கு பொருளாதாரப் புழக்கம் அதிகரித்திருக்கிறது. அதற்கு கொழும்பு - தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து சர்வீஸ் நிச்சயம் அதிக மதிப்பைத் தரும். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வர்த்தகம் விரிவடைய, இந்த சர்வீஸ் அதிக உதவி புரியும். இனி நாட்கள் செல்ல செல்ல அதிக அளவில் சுற்றுலா செல்பவர்கள், சிறிய வர்த்தகர்கள் இந்த சர்வீசைப் பயன்படுத்துவர். இலங்கைக்கு தேவைப்படும் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவைகளை, அதிக அளவில் இனி இங்கிருந்து அனுப்ப, இந்த கப்பல் சர்வீஸ் பயன்படுத்தப்படும்.

மேற்கு மாவட்டத்தில் உள்ள, சிறிய குறு தொழிலதிபர்கள், இந்த சேவையை அதிகம் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே தூத்துக்குடி முக்கிய வர்த்தகக் கேந்திரமாக மாறி வருகிறது. இதனால், வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். அங்கு தற்போது நடைபெறும் குற்ற எண்ணிக்கைகள் கூட குறையலாம். இந்த கப்பல் சர்வீஸ் மூலம், இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கப்பல் விட, மத்திய அரசு அதிகம் சிந்திக்க, இது முன்னோடியாகும். அதே சமயம், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அல்லது கடத்தலில் ஈடுபடுவோர் அபாயம் ஏற்படும் என்பது, இந்த சர்வீசை முடக்கும் செயலாகும். விமான சர்வீஸ் வளர்ந்துவிட்டது. அதில் அதிகம் குற்றச் செயல்கள் நடப்பதை, செய்திகள் காட்டுகின்றன. இந்த கப்பல் சர்வீசில், ஏன் உரிய நடைமுறைகள் மூலம், அம்மாதிரி தவறுகளைத் தடுக்க முடியாது? அதைத் தடுக்க, நவீன சட்ட திட்ட நடைமுறைகள் இருக்கும் போது ஏன் வீண் பீதி. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு வசதியாக, பல்வேறு போக்குவரத்து வசதிகளை முறைப்படுத்தும் போது, இந்தக் கப்பல் சர்வீஸ், எதிர்காலத்தில் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் அதிக உதவி புரியும்.

தென் மாவட்டங்களில் தொழில் துறை அதிகம் வளராத நிலையில், இந்த கப்பல் சர்வீசையும் இனி நிறுத்திவிட்டால், அது வளர்ச்சியின் அறிகுறியாக அமையாது என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. கால வளர்ச்சிக்கு ஏற்ப, நவீன உத்திகளும், வசதிகளையும் மக்களுக்கு தராமல் தடுப்பது, இப்பகுதியில் வேலைவாய்ப்பை குறைக்கும் செயலாகும். இந்த கப்பல் சர்வீசால் தூத்துக்குடிக்கு, அதிக பொருளாதார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது.

* மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச வழக்கு-கைதாகிறார்?

17-mayor-thenmozhi300.jpg

மதுரை: மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிமிரத்து கொள்ள உதவியதாக மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவருக்குத் துணை போனதாக மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக இலக்கிய அணிச் செயலாளரான சுந்தரராஜன் மதுரை மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இந்த இடத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேயரின் தலையீட்டால் சர்வேயர் குருசாமி லஞ்சம் வாங்கிக் கொண்டு இடத்தை சுந்தரராஜனுக்கு கிரையம் செய்ததாக மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயராமன் என்பவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட் கடந்த 14ம் பிறப்பித்த உத்தரவில், இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதால் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன், காண்ட்ராக்டர் மாணிக்கம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

லஞ்சம் வாங்குதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தேன்மொழி உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

* திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு


சென்னை, ஜூன் 17: திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதன்படி சென்னை மாவட்டத்தில் எல்.கே.ஜி.-யில் குழந்தையைச் சேர்க்க அதிபட்சமாக ரூ. 24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சீதாபதி நகரில் உள்ள சன்ஷைன் மான்டிசோரி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.

வகுப்புகளுக்கான கட்டணமாக ரூ. 24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ. 20,150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்-2 வகுப்புக்கு சென்னையிலேயே அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 15,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூளைமேட்டில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 17,150 கட்டணமும், பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,100 கட்டணமும் நிர்ணியக்கப்பட்டுள்ளது.

இதுபோல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரம் www.pallikalvi.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

பூண்டின் மகிமை

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக‌க்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, ‌சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு‌ம், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகு‌ம். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு‌ப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். பு‌ற்றுநோயா‌ல் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்க‌ள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
வர்த்த்கச் செய்தி மலர் :
* சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு
மும்பை, ஜூன்.17: இந்திய பங்குச்சந்தையில் இன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 115.35 புள்ளிகள் சரிந்து 17,870.53 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 30.35 புள்ளிகள் சரிந்து 5366.40 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, என்டிபிசி, டாடா பவர், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, இந்துஸ்தான் யூனிலீவர், டிஎல்எஃப், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் ஈட்டின.

டிசிஎஸ், ஆர்ஐஎல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, விப்ரோ, ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், சிப்லா, ஹீரோ ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல், பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

விளையாட்டுச் செய்தி மலர் :
* டென்னிஸ்

விம்பிள்டன்: சுலப சுற்றில் சானியா

sania-mirza-large_33.jpg

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று சானியா மிர்சா, சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களுக்கு எளிதானதாக அமைந்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் வரும் 20ம் தேதி துவங்குகிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு முதல் சுற்று எளிதானதாக அமைந்துள்ளது. டபிள்யு.டி.ஏ., ரேங்கிங் பட்டியலில் 60வது இடத்தில் உள்ள சானியா முதல் சுற்றில், 98வது இடத்தில் உள்ள பிரான்சின் விர்ஜினி ரசானோவை சந்திக்க உள்ளார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றில் உலகின் "நம்பர்-1' வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஏ.டி.பி., ரேங்கிங்கில் 68வது இடத்தில் உள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 110வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டெனிஸ் கிரிமெல்மேயரை சந்திக்க உள்ளார். இதில் வெற்றி பெறும்பட்சத்தில் இரண்டாவது சுற்றில் ஜுயன் மொனாகோ (அர்ஜென்டினா) அல்லது ரஷ்யாவின் மிக்கேல் யோஸ்னியை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா (இந்தியா)-குரேஷி (பாகிஸ்தான்) உள்ளிட்ட ஜோடிகளுக்கு முதல் சுற்று எளிதானதாக அமைந்துள்ளது. இதேபோல பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடிக்கு முதல் சுற்று சுலபமாக அமைந்துள்ளது.

* கிரிக்கெட்

கோப்பை வென்றது இளம் இந்தியா! * ஐந்தாவது போட்டியில் வெ.இண்டீஸ் வெற்றி
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இருப்பினும் தொடரை 3-2 என வென்ற இளம் இந்திய அணி, கோப்பையை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று முன்தினம், ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு, விராத் கோஹ்லி (94), ரோகித் சர்மா (57) கைகொடுத்தனர். 47.3 ஓவரில் இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

சற்று கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சர்வான் (75), டேரன் பிராவோ (86) ஸ்கோரை உயர்த்த உதவினர். பின் வந்த போலார்டு (24), சாமுவேல்ஸ் (28) இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்க, 48.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு, 255 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்திய அணி 3-2 என தொடரை வென்றது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரெய்னா கூறியது:
முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பேட் செய்தேன். ஆனால் கடந்த மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஐந்தாவது போட்டியில் குறைந்தது 10 முதல் 15 பந்துகளை சந்தித்தபின், அடித்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால், விரைவாக அவுட்டாகிவிட்டேன்.
பாடம் கற்றேன்:

கடந்த இரண்டு போட்டிகளில் மோசமான "ஷாட்' அடித்து அவுட்டானேன். அதாவது பவுலர்களின் தலைக்கு மேலாக பந்துகளை அனுப்ப நினைத்தது தவறாகி போனது. இந்த போட்டிகளில் இருந்து நல்ல பாடம் கற்றுள்ளேன், எனது செயலுக்கு மன்னிப்பே இல்லை. ஏனெனில் பின் வரிசையில் களமிறங்கும் போது, பொறுப்பான ஆட்டத்தை தர வேண்டும்.
தயாராக உள்ளேன்:

இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். "டுவென்டி-20', ஒருநாள் மற்றும் டெஸ்ட் என பலவித போட்டிகளுக்கு ஏற்ப தயாராகத்தான் உள்ளேன். இந்த போட்டிகள் முடிந்து தூங்கச் செல்லும் போது, எனது ஆட்டத்திறன் திருப்தியாக இருப்பதாக உணர்கிறேன். மற்றபடி அதிக போட்டிகளில் விளையாடுவதால், சரியான திறமை வெளிப்படுத்த முடியவில்லை என்ற கருத்தில் உடன் பாடில்லை.
ரோகித்துக்கு பாராட்டு:

இத்தொடரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன். தவிர, ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில் பொறுப்பாக செயல்பட்ட பவுலர்களுக்கு நன்றி.
டெஸ்ட் போட்டி துவங்கும் முன், பயிற்சியாளர் மற்றும் சீனியர்களுடன் ஆலோசித்து, பேட்டிங்கில் எனது தவறுகளை திருத்திக் கொண்டு, மீண்டு வருவேன்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்
    மூலவர்    :     ஆஞ்சநேயர்    -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு மு     -
      ஊர்    :     நாமக்கல்
      மாவட்டம்    :     நாமக்கல்
      மாநிலம்    :     தமிழ்நாடு


 தல சிறப்பு:

இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.

இச்சன்னதியின் பக்கவாட்டு சுவர்களிலுள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.

 தலபெருமை:


குடவறை நரசிம்மர்: இது ஒரு குடவறை சிற்பம். கூரிய நகங்களுடன் இருக்கும் இவர், இரணியனை சம்ஹாரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.

தாயார் சிறப்பு: நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்தால், "லட்சுமி நரசிம்மர்' என்றழைக்கப் படுவார். ஆனால், லட்சுமி இவரது மடியில் இல்லாமல், மார்பில் இருக்கிறாள். நாமகிரி தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவளை வணங்கிட, கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

பக்த ஆஞ்சநேயர்: சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோயில் எதிரே தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

  தல வரலாறு:


ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார்.

இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார்.

அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காண தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் "லட்சுமி நரசிம்மர்' எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

 திருவிழா:

பங்குனியில் 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர், தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே சுவாமி, தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கிறது.

பிரார்த்தனை


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

நமக்கு அடிகள் விழுவதற்குக் காரணம் - அன்னை

"என் மீது அன்பு கொண்ட பரமனே என்னை அடி. இப்பொழுது நீ என்னை அடிக்கவில்லையானால் உனக்கு என் மீது அன்பு இல்லை என்பதையே அது காட்டும்" - அரவிந்தர்

தெய்வீகப் பூரணத்தை அடைய விரும்பும் அனைவரும் இறைவன் தன்னுடைய எல்லையற்ற அன்பினாலும் அருளினாலும் நமக்குக் கொடுக்கும் அடிகளே நம்மை முன்னேறச் செய்வதற்கு மிக நிச்சயமான, மிக விரைவான வழி என்பதை அறிவார்கள்.

இதற்கு மாறாக சாதாரண மனிதர்கள் எப்பொழுதும் கஷ்டமில்லாத, சுகமான, வெற்றிகரமான வாழ்க்கையைக் கொடுக்கும்படியே இறைவனைக் கேட்பார்கள். தங்களுடைய சொந்த திருப்தி ஒவ்வொன்றிலும் அவர்கள் தெய்வ அருளைக் காண்பார்கள். மாறாக வாழ்க்கையில் துக்கமும் துரதிருஷ்டமும் ஏற்பட்டால் அவர்கள் குறைபட்டுக்கொள்வார்கள். "இறைவா, உனக்கு என் மீது அன்பு இல்லை" என்று சொல்வார்கள்.

இந்த முதிர்ச்சியடையாத, அறிவற்ற மனப்பான்மைக்கு எதிர்மறையாக ஸ்ரீ அரவிந்தர் தெய்வக் காதலனிடம் "அடி, பலமாக அடி, உனக்கு என் மீது எவ்வளவு தீவிரவமான அன்பு உள்ளது என்பதை நான் உணரட்டும்" என்கிறார்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் டெட்ராய்ட் என எனப்படும் இந்திய மாநிலம் எது ?

விடை - மத்தியப் பிரதேசம்.

இதையும் படிங்க :

வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் ரோபோ: புதுச்சேரி கல்லூரி மாணவர்கள் சாதனை

large_259503.jpg

புதுச்சேரி: புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் "பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்ய சாதாரண வழிமுறையே பின்பற்றப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு விடுகிறது. வெடிகுண்டுகளை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை, புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியுள்ளனர். ரோபோ செயல்பாடு குறித்து நேற்று லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி துணை சேர்மன் ஜான்குமார் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பாம் டிடெக்டிவ் ரோபோ ஆர்.எப்., ட்ரான்ஸ்மீட்டர், ஆர்.எப்., ரிசீவர் என இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் ரிமோட் கன்ட்ரோலாகவும், ஆ.எப். ரிசீவர் ரோபோவாகவும் இயங்குகின்றன. ஆர் .எப். ரிசீவர் இரண்டு பேட்டரி, ஒரு ஆர்.எப். கன்ட்ரோல், மனிதர்கள் நடமாட்டத்தை கண்டறியும் யூமன் சென்சார், ஒயர்லெஸ் காமிரா, நிறங்களை கண்டறியும் கலர் சென்சார், வெடிகுண்டுகளை அலாக்காக தூக்கும் ஹேண்டல் கொக்கிகள் என நவீன கருவிகள் தேவைக்கேற்ப இருப்பு பலகையில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுழலும் மூன்று சக்கரங்கள் உதவியுடன் தேவைக்கேற்ப நகர்த்த முடியும் என்பது இதன் சிறம்பம்சம். ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் எழுப்பும் சமிக்கைகள் ஆர்.எப். ரிசீவரை அடைந்து பாம் டிடெக்டிவ் ரோபோவை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவை ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் அதிகபட்சமாக 25 மீட்டர் தொலைவு வரை நகர்த்த முடியும். இதன் மூலம் 25 மீட்டர் தொலைவில் இருந்தபடி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து பாதுகாப்பாக வெளியேற்றி அழிக்க முடியும்.

இது குறித்து குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில்; பாம் டிடெக்டிங் ரோபோவில் மேலும் சில நவீன கருவிகளை புகுத்தினால் மழை துளிகள், அதிர்வுகளை உணரும் வகையில் கூட தயாரிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள ஒயர்லெஸ் காமிரா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கூட துல்லியமாக காட்டி கொடுத்து விடும். இதனை தேவைக்கேற்ப வீடியோவில் பதிவு செய்து கொள்ளலாம். கலர் சென்சார் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறங்களை கண்டறிந்து சமிக்கை கொடுக்கும். இதற்காக மைக்ரோ கன்ட்ரோல் ஐ.சி., இணைத்து புரோகிராம் செய்துள்ளோம். இதனை சோதனை ஓட்டமாகவும், மாணவர்களுக்கு ரோபோ குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிமுகப் படுத்தியுள்ளோம்.இது செயல்பாட்டிற்கு வந்தால் மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் என்றார்.

* "ஆத்ம திருப்தி ஏற்படுகிறது!'

large_259390.jpg

அரை கோடி புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ள பாண்டியன்: என் சொந்த ஊர் தேவகோட்டை. படிப்பு முழுவதும் சென்னையில் தான். என் உறவினர்கள் பலரும் பதிப்பகம் நடத்தி வருவதால், எனக்கும் நூலின் மீது தீரா காதல். எனவே, பழைய நூல்களை சேகரித்து வந்தேன். ஆரம்ப காலத்தில், வீடு வீடாக பேப்பர் போட்டு வந்தேன். அதன்பின், பேப்பர் ஏஜன்சி நடத்தினேன். என் கவனம் முழுவதும், நூலின் மீதே இருந்தது. இதனால், என் தந்தை, நூலகத்திலேயே எனக்கு வேலை வாங்கித் தந்தார். ஆனால், அங்கும் வேலை ஓடவில்லை. காரணம், அங்கு புதிய புத்தகங்கள் இருந்தன. என் சேகரிப்பில் இருந்த புத்தங்களை வைத்து, புத்தகக் கடை ஆரம்பித்தேன். 30 வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது, சென்னையில் உள்ள கல்வியாளர்கள், சினிமா இயக்குனர்கள், புத்தக பிரியர்கள் என பலருக்கும் என்னைத் தெரியும். தற்போது, அரை கோடி நூல்கள் வரை வைத்துள்ளேன். இவ்வளவு நூல்களை, நான் ஒருவனே சேகரித்தேன். எனக்கென எந்த பக்கபலமும் இல்லை. பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், புத்தகம் தேவை என்றால் என்னை அணுகுவர். இந்த தொழிலில் வருமானம் பெரிதாக எதுவும் கிடைப்பதில்லை. ஆனால், என்னிடம் புத்தகம் வாங்கி படித்து, போட்டி தேர்வில் வென்று வேலைக்கு சேர்ந்தவர்கள் யாரும் என்னை மறப்பதில்லை. இந்த ஆத்ம திருப்திக்காக தான், இன்றளவும் இப்பணியை செய்கிறேன். ஆனால், எனக்கு ஒரு மனக்குறை உண்டு. இப்போதெல்லாம், வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. "டிவி'யையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதனால், எந்த பயனும் ஏற்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.





நன்றி - வெப்துனியா, சமாச்சார், தின மணி.

1 comment:

மதுரை சரவணன் said...

NALLA SEITHI THOKKUPPU.. VAALTHTHUKKAL

Post a Comment