Wednesday, November 24, 2010

இன்றைய செய்திகள்.

images.jpg


உலகச் செய்தி மலர் :

காஷ்மீர் மக்களுக்கு விசா: சீன நிலையில் மாற்றம்

புது தில்லி, நவ.23: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகி தன்ய குப்தாவுக்கு பாஸ்போர்ட்டில் முத்திரையிட்ட விசாவை சீனா அளித்துள்ளது.

 சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார் பாடகி தன்ய குப்தா. அங்கு செல்லவுள்ள அவருக்கு பாஸ்போர்ட்டில் முத்திரையிட்ட விசாவை சீனா அளித்துள்ளது.
 ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஓராண்டுகாலமாக சீனா தனித்தாளில் முத்திரையிட்டுதான் விசாவை வழங்கி வந்தது. சீனாவின் இத்தகைய செயல்பாடு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஐக்கிய பகுதியல்ல என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது

 இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

 ஆனால் சீனா இதை ஏற்க மறுத்தது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தனித்தாளில் முத்திரையிட்டே தொடர்ந்து விசாவை வழங்கி வந்தது.

 இந்நிலையில் பாடகி தன்ய குப்தாவுக்கு பாஸ்போர்ட்டில் முத்திரையிட்டு விசா வழங்கியுள்ளது.
 சீனாவின் இந்த செயல், காஷ்மீர் மக்களுக்கு விசா வழங்குவதில் அந்நாடு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்

இந்தியா வரவேற்பு: சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு விசா வழங்குவதில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் பாராட்டுக்குரியது என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

cambodia.jpg


* கம்போடியாவில் நீர்த் திருவிழா: நெரிசலில் சிக்கி 378 பேர் பலி.

நாம்பென் (கம்போடியா), நவ.23: கம்போடிய தலைநகர் நாம்பென்னில் திங்கள்கிழமை நடைபெற்ற நீர்த்திருவிழா நெரிசலில் சிக்கி 378 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 240 பேர் பெண்கள். இச்சம்பவத்தில் 755 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான துயரச் சம்பவம் இதுவாகும்.
நாம்பென்னில் உள்ள ஆற்றில், மழை சீசன் முடிந்ததைக் கொண்டாட பெருவாரியான மக்கள் திரண்டனர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளு-வில் பலர் நீரில் மூழ்கியும், பெரும்பாலோர் நெரிசலில் சிக்கியும் இறந்தனர்.

மூன்று நாள் திருவிழாவின் இறுதி நாளான திங்களன்று இங்குள்ள டைமண்ட் தீவுக்குச் செல்ல மக்கள் முயன்றனர். அத்தீவில்தான் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீவிற்குச் செல்வதற்கான பாலத்தில் மக்கள் கூட்டமாக ஏறி கடக்க முற்பட்டனர்.  தீவில் கூட்டம் அதிகமானதால் அங்கிருந்து மறு பகுதிக்கு வர மக்கள் முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு மூன்று முறை தொலைக்காட்சியில் அந்நாட்டு பிரதமர் ஹூன் சென் உரை நிகழ்த்தியுள்ளார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வியாழக்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும். இது மிகப் பெரிய தேச துயரம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


தேசியச் செய்தி மலர் :

*எஸ்.எம்.கிருஷ்ணா நாளை இலங்கை பயணம்

புது தில்லி, நவ.23:  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 7-வது கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக இலங்கைக்கு வியாழக்கிழமை செல்கிறார்.

÷÷இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்தபோது இருநாடுகளும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

÷இலங்கையின் தெற்குப் பகுதியான அம்பன்தோட்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும், வடக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கும் கிருஷ்ணா செல்கிறார். இதேபோல் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் வசிக்கும் தேயிலை எஸ்டேட் பகுதிக்கும் அவர் செல்கிறார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக இந்தியாவின் பங்களிப்புடன் இலங்கையின் வடக்குப் பகுதியில் முதற்கட்டமாக 1000 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.

÷இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இலங்கை அரசுடன் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

* 2ஜி அலைக்கற்றை விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்.

புது தில்லி, நவ.23: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே இந்த நிலை நீடித்து வருவதால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன
.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் பிரணாப், அந்தோனியுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், இந்த ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவிக்க காங்கிரஸ் வட்டாரங்கள் மறுத்து விட்டன.

நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டாலும் அதன் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே நியக்கப்படுவார். இதனால் மத்திய அரசுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்ற கருத்தும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக உள்ளது.


* ராசாவின் தோளில் மன்மோகன் தட்டிக் கொடுத்ததால் சர்ச்சை.

புதுதில்லி, நவ. 23: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஆறுதல் சொல்வது போல் அவரது தோளில் தட்டிக் கொடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பிரதமரின் இச் செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு கைகொடுத்து வரவேற்றார் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அவரது வரவேற்பை பிரதமரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். அதுபோல் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது அங்கு நின்று கொண்டிருந்த ராசாவின் தோளில் தட்டிக் கொடுத்தார். இது பார்ப்பதற்கு, கவலைப்படாதே என்று ஏதோ ஆறுதல் கூறுவதுபோல் இருந்தது.

பிரதமரின் இந்தச் செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ராசா மீதான 2ஜி அலைக்கற்றை ஊழல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது பிரதமரின் இந்தச் செயல் தவறான சமிக்ஞையாக அமைந்துவிடும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஊழல் விசாரணை நிலுவையில் இருக்கும்போது பிரதமர் இதுபோன்று செய்வது மக்களிடையேயும் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனிப்பட்ட நட்பு, உறவு, விருப்பு,வெறுப்பு என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை திடீரென ஸ்விட்ச் ஆப் செய்துவிட முடியாது. பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ் ராசா 6 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். அவர் கூட்டணிக் கட்சியின் மூத்த எம்.பி. எனவே பிரதமர் செய்ததில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறினார்.

மாநிலச் செய்தி மலர் :

* தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் : பருவமழையால் இதுவரை 71 பலி.

சென்னை : "வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபரில் துவங்கிய பருவமழையால் தமிழகத்தில் இதுவரை 71 பேர் பலியாகியுள்ளனர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28ம் தேதி துவங்கியது. அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை கொட்டியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது.பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு, தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

விவசாயிகள் அச்சம்: டெல்டா மாவட்ட விவசாயிகள், பருவமழையை பொறுத்து, பயிர்சாகுபடி செய்வது வழக்கம். டெல்டா மாவட்டங்களில் பயிர் நடவு பணி துவங்கியுள்ளது. தற்போது எட்டு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் நடவு நட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அணைகள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன.

* மேட்டூர் நீர்மட்டம் 113 அடியாக உயர்வு

மேட்டூர்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 113  அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்ததால் அக்டோபர் 29 ம் தேதி 60 அடியாக இருந்த  நீர்மட்டம் நவம்பர் 12ம் தேதி 100 அடியாகவும், நேற்று 113.310 அடியாக உயர்ந்தது. கடந்த 25 நாளில் அணை நீர்மட்டம் 53 அடியும், நீர் இருப்பு 58 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரத்து 221 கனஅடி நீர்வந்தது. டெல்டா மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அணையில் இருந்து மேட்டூர் கால்வாய் பாசனத்திற்கான நீரும் நிறுத்தப்பட்டது.


large_132369.jpg


* பெற்றோர் உஷார் : 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்பு

பள்ளி நேரத்தில் சீருடையுடன் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாணவ, மாணவியரை பிடித்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கோவை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்கப்பட்டுள்ளனர்.

கோவை நகரில், துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், மற்ற பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடையே ஒருவிதமான பீதியும், அச்சமும் நிலவுகிறது. பள்ளிக்குச் செல்லும் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க துவங்கியுள்ளனர். பள்ளியில் இருந்து வீடு திரும்ப தாமதமானால் கூட, உடனடியாக வாடகை வாகன டிரைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி நேரத்தில் பார்க், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சீருடையுடன் சுற்றித்திரியும் மாணவ, மாணவியர் குறித்தும் போலீசாருக்கு உடனடியாக போனில் தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த வட - தென் கொரிய போர் பதற்றம்

மும்பை, நவ.23: வாரத்தின் முதல் நாளான திங்களன்று ஏற்றம் பெற்ற பங்குச் சந்தை அடுத்த நாளே சரிவைச் சந்தித்தது. வட கொரியா, தென் கொரியாவில் போர் பதற்ற சூழல் உருவானது மும்பை பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் பங்குகளின் விலைகள் மளமளவென சரியத் தொடங்கின. குறியீட்டெண் 615 புள்ளிகள் சரிந்தது. கடந்த 15 மாதங்களில் பங்குச் சந்தையில் புள்ளிகள் இந்த அளவுக்கு சரிந்தது கிடையாது. பின்னர் படிப்படியாக நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது 265 புள்ளிகள் சரிந்து 19,691 புள்ளிகளானது. இதே போல தேசிய பங்குச் சந்தையிலும் கடுமையான ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது 75 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,934 புள்ளிகளாக இருந்தது.

சர்வதேச அளவில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்துள்ளது. வட கொரியா, தென் கொரியா நாடுகளிடையிலான எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளதாக வெளியான தகவல்கள் பங்குச் சந்தையை கடுமையாக பாதித்தன

som.jpg


விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்தார் சோம்தேவ்.

குவாங்ஜெü, நவ.23: ஆசிய விளையாட்டுப் போட்டி டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் சோம்தேவ் தேவ் வர்மன். மேலும், இந்தப் போட்டியில் தனது 2-வது தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சோம்தேவ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தினார்.

டென்னிஸ் உலக தரவரிசையில் 44-வது இடத்திலுள்ள டெனிஸ் இஸ்டோமினை, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வீழ்த்தினார் சோம்தேவ்.

இதன் மூலம் தங்கத்தைக் கைப்பற்றினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சோம்தேவ், சனம் சிங் ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

முதல் வீரர்: ஆசிய விளையாட்டில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சோம்தேவ் படைத்துள்ளார்.

கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் சோம்தேவ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது.

நாகபுரி, நவ.23: நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது,  கடைசி கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 198 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

ஆமதாபாத், ஹைதராபாதில் நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன. நாகபுரியில் 3-வது டெஸ்ட் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 193 ரன்களுக்குச் சுருண்டது.
பின்னர் ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் நியூஸிலாந்தை விட இந்தியா முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்ûஸ துவங்கிய நியூஸிலாந்து 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 4-ம் நாள் ஆட்டத்தை மெக்கல்லமும், ஹாப்கின்ஸýம் துவக்கினர்.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஓஜா பந்தில் மெக்கல்லம் வீழ்ந்தார். அவர் 25 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஹாப்கின்ஸ் 8, டெய்லர் 29, ரைடர் 22, வில்லியம்ஸன் 8, வெட்டோரி 13, செüத்தி 31, மெக்கே 20 ரன்கள் சேர்த்தனர். குப்தில், மார்ட்டின் ஆகியோர் ரன் எடுக்காமலேயே வீழ்ந்தனர்.

இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஹர்பஜன், ஓஜா ஆகியோரது சுழற் பந்துவீச்சில் நியூஸிலாந்து நிலை குலைந்தது.

ஹர்பஜன் 3 விக்கெட்டுகளும், ஓஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு, கேப்டன் வெட்டோரியின் விக்கெட்டை சாய்த்தார். இறுதியில் 175 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து ஒரு இன்னிங்ஸ், 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை இந்தியா பெற்றது. இதன்மூலம் தொடரையும் 1-0 என கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரையடுத்து 5 ஒரு நாள் ஆட்டங்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர் இரு அணிகளிடையே நடைபெறவுள்ளது.

ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு வள்ளலார் திருக்கோயில்.

மூலவர் - வள்ளலார்
பழமை - 500 வருடங்கள் முன்பு
ஊர் - வடலூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு

தலபெருமை :- 142 வருடங்களாகஅணையாத அடுப்பு: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.  அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது.

தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.

திருக்காப்பிட்ட அறை : வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை

இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, "திருக்காப்பிட்ட அறை' எனப்படுகிறது.

தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர்.

மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்

வள்ளலாரின் கையெழுத்து: சத்திய தருமச்சாலையிலுள்ள வள்ளலார் சன்னதியில், அவரது விக்ரகம் இருக்கிறது. கடுக்காய் மையில் அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகம், அவர் ஏற்றிய ஜோதி மற்றும் ஞான சிம்மாசனம் ஆகியவை இங்கு உள்ளன.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பசித்தவர்க்கு உணவளியுங்கள் - வள்ளலார்.

* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார்.     தனிப்பெருங்
கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.

* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்
களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.

* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம் 
தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும் 
கடைபிடிக்க வேண்டும்.

வினாடி வினா :

* இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை பெற்ற ஒரே மாநிலம் எது ?

விடை :- ஹரியானா. இது இந்தியாவின் பால் சேமிப்புக் கிடங்காகவும் கருதப்படுகிறது.

thirukural.jpg 


இதையும் படிங்க:

சட்டம் பற்றி தெரிந்துகொள்ள திருக்குறளைப் படியுங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

சென்னை, நவ.23: சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் கூறினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய பாசறை விழாவும், மறைந்த வழக்கறிஞர்கள் சிவகுமார், மதிவாணன், காமேஸ்வரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா | 1 லட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் உயர் நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் பேசியது:

சட்டத்தின் வரையறை, குற்றத்துக்கான தண்டனை, அரசின் கடமை, எல்லா உயிர்களும் சமம் என சட்டங்களில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விஷயங்கள் திருக்குறளோடு ஒத்துப் போகின்றன.

திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் முப்பால்களிலும் சட்டம் பற்றிய கருத்துகள் உள்ளன. அறம் என்றால் நீதி என்ற ஒரு பொருள் உண்டு. அதை வியாபாரமாக்கக் கூடாது. பெண்களை ஏமாற்றக் கூடாது என்றும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.

பெண்களை காதலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெண்கள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள திருக்குறளைப் படிக்க வேண்டும். அதன்படி, வாழ்ந்தால் மனித வாழ்வு சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.






நன்றி - தின மணி, தின மலர்.
-- 



                                                        

2 comments:

எல் கே said...

படங்கள் வரவில்லை

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி எல்.கே. ஆமாம் ஏன் என்று தெரியவில்லை.

Post a Comment